செவ்வாய், 22 ஏப்ரல், 2014

நான்கு கடவுள் - பகுதி 6 ( இந்தியா - திராவிடம் - தமிழ் )

முன்னுரை:

நான்கு கடவுள் ஐந்தாம் பகுதியின் தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியிடப்படுகிறது. நான்கு கடவுள் மூன்றாம் பகுதியில் தொல்தமிழகமானது இன்றைய இந்தியாவின் எப்பகுதியில் அமைந்திருந்தது என்பதை ஆதாரங்களுடன் கண்டோம். நான்காம் பகுதியில் மகாபாரதப்போரானது தமிழ் மன்னர் ஐவருக்கும் வேற்றினத்தவர் நூற்றுவருக்கும் இடையில் நடந்த போரே என்பதைக் கண்டோம். ஐந்தாம் பகுதியில் சிலப்பதிகாரத்தில் விரிவாகப் பாடப்பட்ட இந்திரவிழாவே இன்றைய தைப்பொங்கல் விழாவின் முன்னோடி என்பதைக் கண்டோம். இந்த ஆறாம் பகுதியில் இந்தியா, திராவிடம், தமிழ் ஆகிய பெயர்கள் எவ்வாறு தோன்றின என்பதைப் பற்றி ஆதாரங்களுடன் காண இருக்கின்றோம். இதற்கு முதலில் இப் பெயர்களுடன் தொடர்புடைய பிற பெயர்களைப் பற்றியும் அவற்றின் தோற்றம் குறித்த இன்றைய கருத்துக்கள் என்னென்ன என்பதைப் பற்றியும் காணலாம்.

இந்தியா :

நாம் வாழ்ந்து வரும் இந்தியத் திருநாட்டிற்குப் பழங்காலத்தில் பல பெயர்கள் உண்டு. இந்துஸ்தான், பாரதம், ஜம்புதுவீபம், நபிவருஷம், பாரதவருஷம் போன்றவை அவற்றுள் சில. அதுமட்டுமின்றி, பல மொழிகளில் இந்தியாவிற்குப் பல பெயர்களும் உண்டு. சான்றாக, ஜப்பான் மொழியில் இந்தியாவானது 'தெஞ்சிகு' என்றும், சீன மொழியில் 'யிந்து' என்றும், ஹிப்ரு மொழியில் 'ஹொது' என்றும், செங்கிருதத்தில் 'ஆர்யவர்தம்' என்றும் அழைக்கப்படுகிறது. இதைப் பற்றிய மேலதிக செய்திகளை விக்கிப்பீடியாவில் 'இந்தியாவின் பெயர்கள்' என்ற ஆங்கிலத்தலைப்பிலும் 'ஆர்யவர்த்தா' என்ற ஆங்கிலத்தலைப்பிலும் காணலாம்.

இனி இந்தியாவின் பெயர்கள் எவ்வாறு தோன்றின என்பதைப் பற்றித் தற்போதைய கருத்துக்கள் என்னென்ன என்று காணலாம். 

1) சிந்து நதிக்கரையில் அமைந்திருந்தபடியால் இந்தியா என்று அழைக்கப்படலாயிற்று.
2) பரதன் என்ற மன்னனால் ஆளப்பட்டமையால் பாரதம் / பாரதவருஷம் என்று அழைக்கப்படலாயிற்று.
3) நபிராஜா என்ற மன்னனால் ஆளப்பட்டமையால் நபிவருஷம் என்று அழைக்கப்படலாயிற்று.
4) நாவல் மரங்கள் நிறைந்த நாடாக அறியப்பட்டமையால் ஜம்புதுவீபம் என்று அழைக்கப்படலாயிற்று.

திராவிடம் / திராவிடர் :

பல்லாண்டு காலமாக வரலாற்று அறிஞர்கள் மற்றும் மொழியியல் அறிஞர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டும் தொடர்ந்து பேசப்பட்டும் வருகின்ற பெயர்ச்சொல் இதுவேயாகும். திராவிடர் என்ற சொல் தமிழர்களை மட்டுமின்றி தெலுங்கர், கன்னடியர், மலையாளிகளையும் சேர்த்துக் குறிப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த திராவிடர் என்ற சொல்லின் மூலம் திராவிடம் என்பதாகும். திராவிட நாட்டில் வசிக்கும் மக்கள் அனைவரும் திராவிடர் என்று குறிப்பிடப்பட்டனர். இந்தியாவின் தென்பகுதியில் வாழ்ந்த மக்கள் அனைவரும் திராவிடர் என்று பொதுவாக அறியப்பட்டதால், திராவிடர் என்ற இப் பெயரானது உறுதியாக தமிழர், தெலுங்கர், கன்னடியர் மற்றும் மலையாளிகளால் உருவாக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. 

ஆம், இந்தியாவின் வடபகுதியில் வாழ்ந்துவந்த வேற்றினத்து மக்களால் வழங்கப்பட்ட பெயரே திராவிடம் / திராவிடர் என்பதாகும். இப் பெயர் எவ்வாறு தோன்றியது என்பதைப் பற்றிக் காணும்முன்னர், அது குறித்து தற்போதிய கருத்துக்கள் என்னென்ன என்பதைக் காணலாம்.

1) த்ரமிள என்ற சொல்லே திரிபுற்று திரவிட என்று வழங்கலாயிற்று என்பது பெரும்பான்மை அறிஞர்களின் கருத்தாகும்.
2) திராவிடம் என்ற சொல் செங்கிருதத்தில் இருந்து வந்தது என்றும் இதை 'த்ர+விட்' என்று பிரித்து, இதற்கு 'தோல்வியுற்று ஓடி ஒளிந்த இடம்' என்று பொருள்கொண்டு, திராவிடர் என்றால் ஆரியப் படையிடம் தோற்று ஓடி ஒளிந்தவர்கள் என்று பொருள் கொள்கின்றனர் சிலர்.


தமிழ்:

அமிழ்தினும் இனிய மொழியாம் தமிழுக்கு அதன் பெயர் (தமிழ்) எவ்வாறு வந்தது என்பதைப் பற்றியும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

1) தமிழானது 'தமி' என்ற சொல்லின் அடிப்படையில் பிறந்த பெயரென்றும் இதற்கு 'தனித்துவமானது' 'தனியாக இயங்க வல்லது' என்ற பொருள் கொள்வார் சிலர்.
2) தம்+மொழி என்பதே திரிபுற்று தமிழ் என்றானது என்பது இன்னொரு சாராரின் கருத்தாகும்.
3) த்ரமிள என்ற சொல்லே திரிபுற்று தமிழ் என்றானது என்பது பெரும்பான்மையோர் கருத்தாகும்.

புதிய கருத்து:

இதுகாறும் இந்தியா, திராவிடம், தமிழ் ஆகிய பெயர்கள் தொடர்பாக பலரது கருத்துக்களைக் கண்டோம். இனி, இப் பெயர்களின் தோற்றம் குறித்த புதியதோர் கருத்தினைக் கீழே காணலாம்.

இந்தியா, திராவிடம், தமிழ் என்ற மூன்று பெயர்களுமே இந்திரவிழா என்ற பெயரில் இருந்தே உருவாகி இருக்கக் கூடும்  என்பதே அப் புதிய கருத்தாகும்.

இந்திரவிழா என்ற சொல் இரண்டாக பிரிந்து இந்து, த்ரவிழா என்று வழங்கப்பட்டது. இதில்,

இந்து என்பதுடன் ஸ்தான் என்ற சொல்லை சேர்த்து இந்துஸ்தான் என்று இந்தியாவின் வடபகுதியினைக் குறித்தனர்.

வடபகுதியில் இருந்து தெற்குநோக்கி வந்தவர்கள் தங்கிய இடம் த்ரவிட என்று அழைக்கப்பட்டது. இது த்ரவிழ என்பதன் திரிபாகும்.

த்ரவிழ என்பது மேலும் திரிந்து த்ரமிழ என்றாகி தமிழ என்றானது.

ஆக, இந்தியா, திராவிடம், தமிழ் ஆகிய மூன்று பெயர்களின் தோற்றத்திற்கும் அடிப்படையாய் அமைந்தது இந்திரவிழா என்னும் ஒரு பெயரே என்பது இங்கு அறியப்பட்டது. இதனை சில ஆதாரங்களுடன் இங்கே நிறுவலாம்.

நிறுவுதல்:

நான்கு கடவுள் மூன்று மற்றும் நான்காம் பகுதிக் கட்டுரைகளில் தொல்தமிழகமானது இந்தியாவின் வடக்குப் பகுதியில் அமைந்திருந்தது என்றும் இதில் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்ற ஐவகை நிலங்கள் தனித்தனியே அமைந்திருந்தது என்றும் கண்டோம். இந்த ஐவகை நிலங்கள் தனித்தனியே இருந்தாலும் இவற்றை ஒருங்கிணைக்கும் நிலமாகவும் மையநிலமாகவும் பெரிய நிலமாகவும் மருதமே விளங்கிற்று எனலாம். இந்த மருதநிலத்து மக்களால் முதன்முதலில் துவக்கப்பட்டு பின்னர் ஆண்டுதோறும் அம் மக்களால் கதிரவனுக்கு எடுக்கப்பட்டு வந்த விழாவே இந்திரவிழாவாகும். நாளடைவில் இந்த இந்திரவிழாவில் மருதநில மக்கள் மட்டுமின்றி ஏனையோரும் கலந்துகொள்ள, அது ஒரு பெரும் விழாவாக, தமிழர் விழாவாக மாறியது. இந்த விழாவின் மூலம் தமிழரின் ஒற்றுமை வலுப்பட்டதால் தான் மகாபாரதப் போரில் தமிழர்களால் வேற்றினத்தவர் நூற்றுவரை தோற்கடிக்க முடிந்தது என்றால் அது மிகையில்லை.

இப்படி தமிழ்மக்கள் அனைவராலும் பெரும்விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்த இந்திரவிழாவின் பெருமையினை அறிந்த பிற தேசத்தவர் தொல்தமிழகத்தினை 'இந்திரவிழா' நாடு என்றே அழைக்கலாயினர். நாளடைவில், தமிழ் மன்னர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குலைய, படையெடுத்துவந்த வேற்றினத்தவரிடம் தோற்று வடபுலம் நீங்கி தென்புலம் பெயரலாயினர்.

இப்படி இந்தியாவின் வடபுலத்தை வெற்றிகண்ட வேற்றினத்தவருக்கு இந்திரவிழா என்ற நீண்ட பெயர் பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் அப் பெயரை இந்து , த்ரவிழ என்று இரண்டாகப் பிரித்தனர். தாம் வெற்றி கொண்ட வடபுலத்திற்கு இந்து என்ற சொல்லுடன் ஸ்தான் என்ற தம் மொழிச்சொல்லைச் சேர்த்து இந்துஸ்தான் என்று அழைக்கலாயினர். தம்மிடம் தோற்றோடிய மன்னர்கள் சென்று தங்கிய தென்பகுதியினை த்ரவிழ என்று அழைக்கலாயினர். நாளடைவில் அதுவே த்ரமிழ, த்ரவிட என்று மருவ இவற்றிலிருந்து தமிழ், திரவிடம் என்ற பெயர்கள் தோன்றலாயின.

இந்துஸ்தான் என்ற பெயரில் இருந்தே இந்தியா என்ற பெயர் தோன்றியது. இருந்தாலும், இந்துஸ்தான் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

முடிவுரை:

இந்தியா, தமிழ், திராவிடம் போன்ற பெயர்களின் தோற்றம் குறித்து மேலே கூறப்பட்ட கருத்துக்கள் யாவும் ஒரு கோணமே ஆகும். இந்தியாவில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இனத்தவரின் படையெடுப்பு நடந்தது என்பதையும் அதிலும் குறிப்பாக வளம் நிறைந்த வடபுலமே அதிகமாக படையெடுக்கப்பட்டது என்பதையும் நாமறிவோம். இதனால் தென்புலம் நோக்கி  நிரந்தரமாகப் புலம் பெயர்ந்த தமிழர்கள் அவரவர் விருப்பத்திற்கேற்ப பிரிந்து வாழத்துவங்க, இதுவே தமிழில் இருந்து பல கிளை மொழிகள் தோன்றக் காரணமாயிற்று எனலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.