சனி, 10 செப்டம்பர், 2016

திருக்குறளில் நிணமும் புலால் மறுப்பும்

முன்னுரை:

திருவள்ளுவர் என்னதான் பாவம் செய்தாரோ தெரியவில்லை, எல்லோரும் அவரைத் தம் விருப்பம் போல் வம்புக்கிழுக்கத் துவங்கிவிட்டனர். தமிழராய்ப் பிறந்ததொன்று தான் அவர் செய்த மிகப்பெரிய பாவம். அவர் மட்டும் இந்திக்காரராகவோ மலையாளியாகவோ தெலுங்கராகவோ கன்னடராகவோ இன்னபிற மொழியினராகவோ பிறந்திருந்தால் அவருக்கு இந்தநிலை வந்திருக்காது என்பது மட்டும் உறுதி. கொல்லாமையைப் போற்றும் கொள்கையினராகிய வள்ளுவரை சமணர் என்று தம் பக்கம் இழுப்போர் சிலர்; சைவர் என்று இழுப்போர் சிலர்; வைணவர் என்று இழுப்போர் ஒருசாரர். இப்படி திருவள்ளுவர் எல்லோராலும் கொண்டாடப்பட்டு வந்தாலும் விலங்குகளின் ஊன் உண்ணும் அசைவர்களும் தற்போது தம் பக்கமாக அவரை இழுக்கத் துவங்கி விட்டார்கள். திருவள்ளுவர் ஊன் உண்ணுவதை ஆதரித்தார் என்று ஒரு முட்டாள்தனமான கேவலமான கருத்தைக் கூறி அவரைத் தம் பக்கம் இழுக்கப் பார்க்கின்றனர். இதற்கு ஆதாரமாக அவர்கள் கீழ்க்காணும் குறளைக் காட்டுகின்றனர்.

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல் - 1260

இக் குறளில் கூறப்பட்டிருக்கும் உண்மையான கருத்தை அறிந்துகொள்ள முற்படாமல் தான்தோன்றித் தனமாக அவர்கள் பொருள்கொண்டு வள்ளுவரின் மாட்சியினைச் சிதைக்கவும் தயாராகிவிட்டனர். அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தான் இக் கட்டுரை எழுதப்படுகிறது. முதலில், இக் குறளுக்குத் தற்போதைய உரை ஆசிரியர்கள் என்ன பொருள் கூறியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.

தற்போதைய பொருள் விளக்கங்கள்:

கலைஞர் உரை: நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?.

மு.வ உரை: கொழுப்பைத் தீயில் இட்டால் போன்ற உருகும் நெஞ்சுடைய என்னைப் போன்றவர்க்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும் தன்மை உண்டோ?.

சாலமன் பாப்பையா உரை: கொழுப்பைத் தீயிலே போட்டால் அது உருகுவது போலத் தம் காதலரைக் கண்டால் மன அடக்கம் இன்றி உருகும் நெஞ்சினையுடைய பெண்களுக்கு, அவர் கூடவும், நாம் ஊடவும் பின்பு ஏதும் தெரியாத நிலையிலேயே நிற்போம் என்ற நிலை உண்டாகுமோ?.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு - நிணத்தைத் தீயின்கண்ணே யிட்டால் அஃது உருகுமாறு போலத் தம் காதலரைக் கண்டால் நிறையழிந்து உருகும் நெஞ்சினையுடைய மகளிர்க்கு; புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் உண்டோ - அவர் புணர யாம் ஊடிப் பின்பு உணராது அந்நிலையே நிற்கக்கடவேம் என்று கருதுதல் உண்டாகுமோ? ஆகாது. (புணர்தல் - ஈண்டு மிக நணுகுதல்; எதிர்ப்படுதலுமாம். 'புணர' என்பது 'புணர்ந்து' எனத் திரிந்து நின்றது. 'யான் அத்தன்மையேன் ஆகலின் எனக்கு அஃது இல்லையாயிற்று', என்பதாம்.).

மணக்குடவர் உரை: தீயின்கண்ணே நிணத்தையிட்டாற்போல, உருகும் நெஞ்சினை யுடையார்க்குக் காதலரை யெதிர்ப்பட்டு வந்து ஊடி நிற்போமென்று நினைத்தல் உளதாகுமோ?.

உரைத்தவறுகள்:

மேற்கண்ட உரைகள் அனைத்திலும் நிணம் என்பதற்கு மாமிசத்தில் இருக்கும் கொழுப்பு என்றே பொருள்கொண்டு உரை கூறி இருக்கின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டே மாமிச உணவுண்போர் வள்ளுவரைத் தம் பக்கம் இழுக்கப் பார்க்கின்றனர். ஆனால் இது மிக மிகத் தவறான கருத்தாகும். காரணம், நிணம் என்பதற்கு இப்பாடலில் கொழுப்பு என்ற பொருள் பொருந்தவே பொருந்தாது. இதைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

இப் பாடலில் நிணம், தீ, புணர்ச்சி, ஊடல் ஆகியவை பேசப்படுகின்றன. இவற்றில் தீயானது புணர்ச்சியுடனும், நிணமானது ஊடலுடனும் உவமையாகக் கூறப்பட்டுள்ளது. நிணமானது தீ தீண்டும்வரையில்தான் கெட்டியாய் இருக்கும். அதைப்போல, தலைவியின் ஊடலும் தலைவன் அவளைத் தீண்டும்வரையில்தான் உறுதியுடன் இருக்கும். தலைவன்  தீண்டியதும் தலைவியும் தன் ஊடலின் உறுதிகுலைந்து உருகி முழுவதுமாய்க் கரைந்து கொண்டவனின் விருப்பத்திற்கொப்ப தன்னை மாற்றிக்கொள்வாள். இப் பாடலில் தலைவியின் ஊடலை நிணத்துடன் உவமையாக்கிக் கூறி இருப்பதில் இருந்து, நிணமும் ஊடலைப் போலவே முதலில் உறுதியுடன் இருந்து பின்னர் தீ தீண்டியதும் உருகி முழுதுமாய்க் கரைந்து கொள்கலத்தின் வடிவத்திற்கொப்ப தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பது விளங்கக் கூடிய ஒன்றேயாகும். ஊடலுக்கும் நிணத்துக்கும் இத்தகைய ஒத்த தன்மைகள் இருப்பதால்தான் வள்ளுவர் இப் பாடலில் இரண்டையும் ஒப்பிட்டுக் கூறி இருக்கிறார்.

இந்நிலையில், நிணம் என்னும் சொல்லுக்கு இப்பாடலில் மாமிசக் கொழுப்பு என்ற பொருள் பொருந்துமா என்றால் பொருந்தாது. காரணம், மாமிசக் கொழுப்பானது முதலில் கெட்டியாய் இருந்தாலும் அதை உருக்க அதிக வெப்பம் வேண்டும். கொழுப்பை நீரிலிட்டு நெடுநேரம் அதிக வெப்பத்தில் வைத்தால் அது உருகிக் கரைந்து எண்ணை போல நீரின்மேல் மிதக்கும். இப்பாடலில் கூறப்பட்டுள்ள உவமையின் சிறப்புப் பண்பே உருகும் காலம் தான். அதாவது, காதலன் தொட்டவுடன் காதலியின் ஊடல் கரைந்துபோவதைப் போல தீ தொட்டவுடன் நிணம் கரையும் தன்மையது என்னும் நிலையில் ஊடலுக்கு உவமையாக, கரைவதற்கு மிகமிக அதிக நேரம் எடுக்கின்ற மாமிசக் கொழுப்பினைக் கூறுவது சற்றும் பொருத்தமானதல்ல என்பதைத் தெள்ளிதின் விளங்கிக் கொள்ளலாம். 

இதிலிருந்து, இப் பாடலில் வரும் நிணம் என்பதற்கு மாமிசக் கொழுப்பு என்பது பொருளாக வராது என்பது உறுதியாகிறது. என்றால், இச் சொல்லின் புதிய பொருள் என்னவென்று கீழே காணலாம்.

நிணம் - புதிய பொருள் என்ன?

நிணம் என்னும் சொல் இப்பாடலில் குறிக்கும் புதிய பொருள்கள் ' வெண்ணெய் ' மற்றும் ' நெய் ' ஆகும்.

பல இடங்களில் வெண்ணெய் என்ற பொருளிலும் சில இடங்களில் நெய் என்ற பொருளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது.

நிறுவுதல்:

நிணம் என்பது எவ்வாறு வெண்ணையைக் குறிக்கும் என்று இங்கே ஆதாரங்களுடன் காணலாம்.

நிணம் என்பதற்கு தற்கால அகராதிகளும் வெண்ணெய் என்ற பொருளைக் கூறுகின்றன. ஆனால் நேரடியாகக் கூறாமல் மறைமுகமாகக் கூறுகின்றன. இது எவ்வாறெனின்,

இழுது என்பதற்கு நிணம் என்ற பொருளையும் வெண்ணெய், நெய் போன்ற பொருட்களையும் அகராதி காட்டுகிறது.

 இழுது iḻutu , n. [M. viḻutu.] 1. Butter; வெண்ணெய். இழுதார்மென் பள்ளிமேல் (சீவக. 1576). 2. Ghee; நெய். இழுதமை யெரிசுடர் விளக்கு (சீவக. 2630). 3. Fat, grease; நிணம். இழுதுடை யினமீன் (கம்பரா. வருண. 29). 4. Honey; தேன். இழுதார் . . . பூ (சீவக. 3137). 5. Thick semi-liquid substance; குழம்பு. சேறிழுது செய்யினுள் (பெரியபு. திருநாட். 12).

மேலே கண்ட அகராதியின்படி,

இழுது = நிணம்.
இழுது = வெண்ணெய், நெய்.

எனவே நிணம் = வெண்ணெய், நெய் என்றும் பொருள் கொள்ளலாம் அன்றோ?

அப்படியென்றால், ஒரு சொல் குறிக்கும் பல பொருட்களுக்கிடையிலும் இப்படி ஒரு சமன்பாட்டினை உருவாக்கலாமா என்று சிலர் கேட்கலாம். இல்லை. அவ்வாறு செய்யக் கூடாது. நிணம் என்பது வெண்ணெய் / நெய்யைக் குறிக்கவும் செய்யும் என்பதை நிறுவுவதற்கு வேறு சில ஆதாரங்களும் கீழே தரப்படுகின்றன.

அன்னாய் வாழி .........................
........................................உவக்காண்
நிணம் பொதி வழுக்கில் தோன்றும்
மழை தலைவைத்து அவர் மணி நெடும் குன்றே - ஐங்கு. 207

பொருள்: அன்னையே வாழ்க!.......அங்கே பார். அவரது கரிய மலையின் உச்சியில் படிந்திருக்கும் வெண்ணிற மேகங்கள் வெண்ணெயால் செய்த பெரிய பெரிய உருண்டைகளைப்போலத் தோன்றுவதைக் காணாய்.

இப்பாடலில் வரும் வழுக்கு என்பது உருண்டையினைக் குறிக்கும். இது வழுக்கட்டை என்று தற்போது பயன்படுத்தப் படுகிறது. இப் பாடலில் நிணம் என்பதற்கு மாமிசக் கொழுப்பு என்ற பொருள் பொருந்துமா என்றால் பொருந்தாது. காரணம், மாமிசத்தின் கொழுப்புப் பகுதிகளை வெட்டியெடுத்து ஒன்றுசேர்த்துப் பெரிய பெரிய உருண்டைகளாகச் செய்ய முடியாது. 

........வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு
புகர் அரை தேக்கின் அகல் இலை மாந்தும் - அகம். 107

பொருள்: வெண்ணெயை உருக்கிச் சேர்த்த வெண்ணிற சோற்றினை தேக்குமரத்தின் அகன்ற இலைகளில் வைத்து உண்கின்ற....

இப்பாடலில் வரும் நிணம் என்பதற்கு மாமிசக் கொழுப்பு என்ற பொருள் பொருந்துமா என்றால் பொருந்தாது. காரணம், மாமிசக் கொழுப்பினை உருக்கி யாரும் சோற்றில் பிசைந்து சாப்பிட மாட்டார்கள். ஆனால், வெண்ணையை உருக்கி நெய்யாக்கி சோற்றில் பிசைந்து உண்பார்கள். காரணம், அது உணவுக்கு நல்ல வாசனையைத் தருவதுடன் சுவையும் தரும். மேலும், வெண்ணையை உருக்கிச் சோற்றுடன் சேர்ப்பது எளிதான செயலுமாகும். சிலநேரங்களில் வெண்ணையை சூடான சோற்றில் போட்டு பிசைந்தாலே போதும். அந்தச் சூட்டிலேயே வெண்ணெய் உருகி நன்கு கலந்துவிடும். வெண்ணையை உருக்கிச் சோற்றில் பிசைந்து சாப்பிடுவது பற்றிக் கூறும் இன்னொரு பாடல் கீழே:

.....மலர திறந்த வாயில் பலர் உண
பைம் நிணம் ஒழுகிய நெய் மலி அடிசில்     - குறி. 204

இப்பாடலில் நிணமானது நெய்யுடன் நேரடியாகத் தொடர்புறுத்திப் பேசப்படுகிறது. அதாவது, பசிய நிணமாகிய வெண்ணெயினை உருக்கி நெய்யாக்கித் தாராளமாகக் கலந்து செய்யப்பட்ட உணவு என்பது இப் பாடலின் இறுதிவரியின் பொருளாகும்.

.........நிணம் தின்று செருக்கிய
நெருப்பு தலை நெடு வேல் - புறம். 200

பொருள்: நெய் பூசி செருக்குடன் திகழ்கின்ற தீப்போலும் கூர்மையுடைய நீண்ட வேல்.........

வேல்கள் துருப்பிடித்தலைத் தவிர்க்க, அவற்றின்மேல் நெய் முதலானவற்றைப் பூசுவது வழக்கம். இப்பாடலில், நிணம் என்பது நெய் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இப்படி நெய் பூசப்பட்டு பளபளப்புடன் திகழ்கின்ற கூரிய வேலுடன் பெண்ணின் மையுண்ட இமைகளையும் கூரிய கடைக்கண்ணையும் ஒப்பிட்டுக் கூறும் சிந்தாமணிப் பாடலொன்று கீழே தரப்பட்டுள்ளது.

நிணம் கொள் வை நுதி வேல் நெடும் கண்ணினாள் - சிந்தா.344


மேலே கண்ட சான்றுகளில் இருந்து நிணம் என்பதற்கு அகராதிப் பொருட்களான கொழுப்பு, மாமிசம், ஊன்நீர் நீங்கலாக வெண்ணெய், நெய் போன்ற பொருட்களும் உண்டென்று அறியலாம்.

குறளுக்கான புதிய விளக்கம்:

இனி, இப் புதிய பொருட்களின்படி, இக் குறளுக்கான புதிய விளக்கம் என்னவென்று காணலாம்.

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல் - 1260

திருந்திய விளக்கம்: தீயில் இட்ட வெண்ணெய் போன்ற உள்ளம் கொண்டவர்க்கு (தம் காதலனைப்) புணர்ந்தவிடத்து ஊடிநிற்க முடிவதுமுண்டோ?. (முடியாது).

வெண்ணெயானது தீ தீண்டும்வரையில் உறுதியாக இருக்கும். எடுத்துவைத்த பாத்திரத்தின் வடிவத்துடன் அதற்கு ஒரு தொடர்புமிராது. ஆனால், தீ தீண்டியதும் அது தன் உறுதியை இழந்து உருகி முற்றிலும் நீராகி கொண்ட பாத்திரத்தின் வடிவத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். அதைப்போல, காதலியும் தனது காதலனுடன் ஊடல்கொண்டு மனதைக் கல்லாக்கிக் கொண்டு பேசாதிருக்கிறாள். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக காதலன் காதலியைத் தழுவவும், அப் புணர்ச்சி உண்டாக்கிய தீயில் அவளது கல்லாகிய மனம் உறுதியை இழந்து உருகி அவளது ஊடல் முற்றிலும் நீர்த்துப் போக, காதலனின் விருப்பத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறாள். இவ் இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒப்பிட்டு இக் குறளில் பாடுகிறார் வள்ளுவர்.

முடிவுரை:

நிணம் என்பதற்கு அகராதிகள் காட்டுகின்ற கொழுப்பு, மாமிசம் போன்ற பொருட்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உரை எழுதியதால் ஏற்பட்ட விளைவே ' திருவள்ளுவர் புலால் உண்பதை மறுக்கவில்லை; மாறாக புலாலை நெருப்பில் வாட்டி உண்பதை சான்றாகக் காட்டி அதை உண்ணவும் ஆதரித்திருக்கிறார் ' என்பது போன்ற பல தவறான கற்பிதங்களுக்கு வழிவகுத்துவிட்டது.

வள்ளுவர் புலால் உண்பதை ஆதரித்து இந்தக் குறளில் மட்டுமல்ல எந்தக் குறளிலும் கூறவில்லை. இனியேனும் வள்ளுவர் மீது இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுகளை அடுக்காதிருப்பார்களாக !!!.
===================== தமிழ் வாழ்க!============

7 கருத்துகள்:

  1. விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி உள்ளது சரவணன்.

    நன்றி!

    இரா.பா

    பதிலளிநீக்கு
  2. அருமையான விளக்கம். நான் படித்த உங்களது ஒரு சில ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் மிகவும் விரிவான வகையில் அலசப்பட்டு ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கங்களுடன் இருக்கிறது. மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டியது மிகவும் அவசியம். என்றும் தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. பழசாய் இருந்தால் என்ன...தெளிவை கொடுக்கும் இனிய விளக்கம்....ஏனோ தானோவென்று மற்றையோரைக்கொண்டு எழுதியோ; அல்லது தெளிவுற அறிந்துகொள்ளாமல் விளக்கம் அளிக்க முற்பட்டோ எதையோ எழுதியும் பேசியும் தமிழைக் கேலிக் குறியாதாய் ஆக்கும் சூழ்நிலையில் கசடற கற்ற, உரைக்கும் பாங்கே அழகு.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.