வெள்ளி, 26 ஜனவரி, 2018

ஆண்டாளின் பாடல்கள் மரபு மீறலா?



ஆண்டாளின் பாடல்கள் மரபு மீறலா?

ஆண்டாள் தமிழத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடல் தொகுதிகளை ஆண்டாள் இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும். ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்பட்டு பல்லோரால் பூசித்துத் தொழப்படுபவர்.

ஆண்டாள் தனது பாடல்களில் பல இடங்களில் முலை, கொங்கை ஆகிய சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார். இதில், சில இடங்களில் மட்டுமே இச்சொற்களை மார்பகம் என்ற பொருளில் பாடியுள்ளார். ஏனை இடங்களில் வரும் முலை, கொங்கை ஆகிய சொற்களுக்கு மார்பகம் என்ற பொருள் பொருந்தாது. அந்தப் பொருளில் ஆண்டாளும் பாடவில்லை. ஆனால், நமது உரையாசிரியர்கள் முலை, கொங்கை என்ற சொற்கள் வருகின்ற அனைத்து இடங்களிலும் மார்பகம் என்ற ஒரே பொருளைக் கொண்டதனால் ஆண்டாள் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டுள்ளார்.

அதாவது, ஆண்டாள் காமஇச்சை மிகுந்த நிலையில் தனது உள்ளுறுப்புக்களைப் பற்றி மரபினை மீறிப் பாடியிருப்பதாகவே பெரும்பாலோர் நம்புகின்றனர். ஆண்டாள் பக்திநிலையில் பாடிய இப்பாடல்வரிகளை ஆன்மீக ரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். எது எவ்வாறாயினும், ஆண்டாள் பாடிய முலையும் கொங்கையும் ஆண்டாளை ஒரு புரியாத புதிராக மக்களிடையே தோற்றுவித்து விட்டதனை யாரும் மறுக்க இயலாது.

உண்மையில் பார்த்தால், ஆண்டாள் எதையும் தவறாகப் பாடவில்லை. பெண்களின் முலை, கொங்கை பற்றிப் பாடல் இயற்றுவது இலக்கிய மரபுதான். சொல்லப்போனால், முலையும் கொங்கையும் சங்க இலக்கியங்களில் இருந்தே பாடப்பட்டு வருவதுதான். சங்க இலக்கியங்கள் மட்டுமின்றி, கம்பராமாயணத்தில் கூட சீதையின் முலை, கொங்கை பற்றி ஏராளமான இடங்களில் கம்பர் பாடியிருக்கிறார்.(4). இவர்களது பாடல்களைப் படிக்கும்போது அவற்றில் வரும் முலை, கொங்கை ஆகிய சொற்களுக்குப் பொருள் கொள்ளும்போதுதான் தவறு நேர்ந்துவிட்டது.

ஒரு சொல்லுக்கு ஒரு பொருள்தான் என்ற நிலை தமிழ் இலக்கியத்தில் ஒருபோதும் இல்லை என்று நாம் அனைவரும் நன்கு அறிவோம். சான்றாக, அரி என்ற ஒரேயொரு பெயர்ச்சொல்லுக்கு மட்டும் 67 விதமான பொருட்கள் இருப்பதனைச் சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி காட்டுகிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்னால், இச்சொல்லுக்கு இத்தனை விதமான பொருட்கள் கண்டறியப்பட்டிருக்குமா என்றால் இல்லை. காலப்போக்கில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் மூலமே புதிய பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவற்றை அகராதிகளில் சேர்த்திருக்க வேண்டும். இதைப்போன்ற ஒரு நிலையே முலை, கொங்கை, அல்குல் ஆகிய சொற்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. 

முலை, கொங்கை ஆகிய சொற்களுக்குப் பெண்களின் மார்பகம் மட்டுமே அகராதிகளில் பொருளாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இச்சொற்களுக்கு கண், கண்ணிமை ஆகிய பொருட்களும் உண்டு. இதைப்பற்றிப் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டன. அவற்றில் சில கட்டுரைகள் ஆதாரங்களாகக் காட்டப்பட்டுள்ளன. ஆனால், இப்புதிய பொருட்கள் தமிழ் அகராதிகளில் சேர்க்கப்பட்டிராத காரணத்தினால், பல இடங்களில் பொருள்மயக்கம் ஏற்பட்டுத் தவறான உரை விளக்கங்கள் எழுதப்பட்டு விட்டன. விளைவு?. கம்பனும் இராமனும் ஆண்டாளும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுப் பெருமை இழந்து நிற்கின்றனர். இது யார்செய்த தவறு? பாடல்களைப் பாடிய கம்பன் மற்றும் ஆண்டாளின் தவறா? இல்லை அவர்களது சொற்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் தவறாகப் புரிந்துகொண்ட நமது தவறா?. தவறு யார்மீது என்று சிந்திக்கவேண்டும்.

சங்ககாலத்துக்கு முன்னால் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. அதனால் சங்க இலக்கியங்களை அடியொற்றியே பின்னால் வந்த இலக்கியங்கள் பலவும் எழுதப்பெற்றன. ஆண்டாளின் பாடல்களும் சங்க இலக்கிய மரபுகளை மீறாமல் அப்படியே எழுதப் பெற்றவைதான். முலையும் கொங்கையும் சங்க இலக்கியங்களில் என்ன பொருட்களில் பயன்படுத்தப் பட்டனவோ அதே பொருட்களில் தான் ஆண்டாளும் அவற்றைப் பயன்படுத்தி இருக்கிறார். அதுமட்டுமல்ல, சங்க இலக்கியங்களின் பல மரபுக் கூறுகளையும் அப்படியே தனது பாடல்களில் எடுத்தாண்டுள்ளார். இதற்குப் பல சான்றுகளை இங்கே நாம் காணப்போகிறோம்.

செவ்வண்ண மை பூசப்பட்ட பெண்களின் திரண்ட கண் இமைகளைக் குங்குமச் சிமிழுடன் ஒப்பிடுவதும் புள்ளிகளால் வரையப்பட்டு அழகுசெய்யப்பட்ட பெண்களின் நெற்றிப் பகுதியினைப் பொறிகளை உடைய நல்ல பாம்புடன் ஒப்பிடுவதும் ஏராளமான சங்கப் பாடல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.(1) ஆண்டாளும் அந்த மரபின்படியே கீழ்க்காணும் பாடல்களில் அந்த உவமைகளைப் பாடுகிறாள்.

புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய் - திரு.484

புற்றில் வாழும் பாம்பினைப் போல புள்ளிகளால் அழகுசெய்யப்பட்ட நெற்றியினை உடையவளே புனமயிலே என்று அழைக்கிறாள் ஆண்டாள். இதில் வரும் அல்குல் என்பது நெற்றியினைக் குறிப்பதாகும். (2)

செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்  - திரு. 493

குங்குமச்சிமிழ் போல செவ்வண்ண மை பூசிய மென்மையான சிறிய இமைகளையும் சிவந்த கடைக்கண் ஈற்றினையும் உடைய நப்பின்னையே துயில் எழுவாய் என்கிறாள் ஆண்டாள். இப்பாடலில் வரும் முலையும் மருங்குலும் சங்க இலக்கியங்களைப் போலவே கண் இமைகளைக் குறித்து வந்துள்ளன. (3)

ஒரு குழந்தை தனது தாயின் முலையில் பால்குடிக்கும்போது இடையிடையே தனது பிஞ்சு விரல்களால் அன்னையின் முகத்தினை கண்களைத் தடவி வருடிக் கொடுக்கும். இடையிடையே தாயின் முகம் பார்த்துச் சிரிக்கும். குழந்தையின் இக்குறும்புகள் அனைத்தும் அன்னைக்குப் பேரின்பம் தரும். தன்னைத் தாயாகவும் கண்ணனைக் குழந்தையாகவும் கருதிய ஆண்டாள் கண்ணனிடம் இவ்வாறு கூறுகிறாள்: " குழகனே ! கோவிந்தா ! உன் வாயிலே என் மார்பகம் இருக்க, நீ உனது இளந்தளிர் போன்ற கையினால் எனது கண்ணை வருடிக்கொண்டே நடுநடுவே சிரித்துக்கொண்டே என்னைப் பார்க்க நான் என்னையே இழந்தேன். " என்று கூறுகிறாள் கீழ்க்காணும் பாடலில்.

குழகனே என்றன் கோமளப் பிள்ளாய்
கோவிந்தா என் குடங்கையில் மன்னி
ஒழுகு பேரெழில் இளஞ்சிறு தளிர்போல்
ஒருகையால் ஒரு முலைமுகம் நெருடா
மழலை மென்னகை இடையிடை அருளா
வாயிலே முலை இருக்க என் முகத்தே
எழில்கொள் நின்திருக் கண்ணிணை நோக்கத்
தன்னையும் இழந்தேன் இழந்தேனே - நாச். 714

மேற்காணும் பாடலில் முதலில் வரும் முலை என்னும் சொல் கண்ணையும் இரண்டாவதாக வரும் முலை என்னும் சொல் மார்பகத்தையும் குறிக்கும். மேலே கண்டதைப் போன்ற ஒரு அழகான ஓவியக் காட்சி சங்க இலக்கியத்திலும் உண்டு.(5). ஆக, மேற்காணும் பாடலிலும் சங்க இலக்கிய மரபினை மீறாத ஒரு சூழலே இருப்பதனை அறியலாம்.

குத்து விளக்கெரிய, கட்டில்மேல் மெத்தென்ற பஞ்சின்மேல் கண்ணனும் நப்பின்னையும் சேர்ந்து படுத்திருக்கிறார்கள். நப்பின்னையின் கொங்கை ஆகிய கண்களுக்கு மேலாக நெற்றிப் பகுதியில் கொத்தாக அலர்ந்த பூமாலையினைச் சூட்டிய நிலையில் கண்ணன் கண்ணயர்ந்திருக்கிறான். இவ்வாறு மாலை அணிவது தமிழரின் மரபுதான். பெண்கள் தமது நெற்றிப் பகுதியில் பூமாலைகளைச் சூடிக் கொள்வதைச் சங்க இலக்கியத்திலும் பல இடங்களில் காணலாம்.(2) சிறிதும் விரசமில்லாத அருமையான மரபுவழியான பொருளிலே இப்பாடலை ஆண்டாள் பாடியிருக்கிறாள். அந்தப் பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய் .... - திரு. 492.

இப்பாடலில் வரும் கொங்கை என்பது கண்களைக் குறித்து வந்துள்ளது. (4) ஆனால் அதற்கு மார்பகம் என்று பொருள்கொண்டு மிக அசிங்கமாக உரை எழுதி இருக்கின்றனர். இது யாருடைய தவறு?.

அடுத்து நாச்சியார் திருமொழியில் காமதேவனைப் பார்த்து ஆண்டாள் வேண்டுகிறாள்: " காமதேவா ! திரிவிக்கிரமன் ஆகிய கண்ணனே தனது திருக்கரங்களால் எனது திரண்ட கண்களையும் இமைகளையும் தீண்டவேண்டும். " இப்பாடலில் வரும் வயிறும் முலையும் கண்களைக் குறித்து வருபவை. சொல்லப்போனால் இந்தப் பாடலையும் ஆண்டாள் மரபுசார்ந்தே பாடியிருக்கிறாள். காதலியின் கண்களைத் தொட்டு அவளது இமைகளின்மேல் வண்ண வண்ண மையிட்டுக் காதலன் அழகு செய்து பார்ப்பது சங்க இலக்கியங்களில் பல பாடல்களில் காணப்படுகிறது. சங்கத் தமிழரின் மரபுப் படியே, தனது காதலன் ஆகிய கண்ணனே தனது கண்களைத் தீண்டி அழகுசெய்ய வேண்டும் என்று ஆண்டாள் விரும்புகிறாள். சிறிதும் விரசமில்லாத இந்தப் பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னைத் தீண்டும்வண்ணம்,
சாயுடை வயிறும் என் தடமுலையும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே. - நாச். 510

ஆனால், இப்பாடலில் வரும் வயிறு, முலை ஆகிய சொற்களுக்குத் தவறான பொருள்கொண்டு அசிங்கமாக விளக்கம் எழுதியுள்ளனர். இது யாருடைய தவறு?.

அதுமட்டுமல்ல, தனது கண்களைச் சிவப்புத் துணியால் கட்டிக்கொண்டு, கோவிந்தனுக்கு அல்லாமல் எனது கொங்கை ஆகிய கண்கள் வேறு யாருக்கும் வாயில் போகாது அதாவது திறக்காது என்ற பொருளில் கீழ்க்காணும் பாடலில் பாடுகிறாள் ஆண்டாள்.

அங்கைத் தலத்திடை ஆழிகொண்டான்
அவன் முகத்தன்றி விழியேனென்று,
செங்கச்சுக் கொண்டு கண் ஆடை ஆர்த்துச்
சிறுமானிடவரைக் காணில் நாணும்,
கொங்கைத் தலம் இவை நோக்கிக் காணீர்
கோவிந்தனுக்கு அல்லால் வாயில்போகா ..... - நாச். 620

ஆண்டாளின் இந்தப் பாடலும் மரபு சார்ந்ததுதான். பின்னாலிருந்துகொண்டு கண்களைக் கைகளால் பொத்திக்கொண்டு விளையாடுவதும் துணியால் கண்களைக் கட்டிக்கொண்டு விளையாடுவதும் சங்கத் தமிழர் மரபுதான். ஆனால் வழக்கம்போல, இந்தப் பாடலில் வரும் கொங்கையும் தவறாகவே புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இது யாருடைய தவறு?

கண்ணனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள் ஆண்டாள். அப்போது வானத்தில் கருமேகங்கள் கூடிக் குழுமுகின்றன. அந்த மேகங்களைக் கண்டதும் ஆண்டாளுக்குள் ஓர் எண்ணம் தோன்றுகிறது. கண்ணனும் கார்மேகங்களும் வேறல்லவே. எனது விருப்பங்களை இந்த மேகங்களிடம் கூறினால் அது கண்ணனிடம் கூறியதைப் போலத்தான். இதைக்கேட்டு கண்ணன் விரைந்தோடி வருவான் என்று எண்ணியவள் மேகங்களைப் பார்த்து இவ்வாறு கூறுவாள்: " ஓ மேகங்களே ! வேங்கடவனின் திருமார்பில் பொருந்துவதற்கு எனது கொங்கை ஆகிய கண்கள் பெரு விருப்பம் கொண்டுள்ளன. எனது இந்த விருப்பத்தை அந்தக் கண்ணனிடம் சென்று உரையுங்களேன் " என்று மேகங்களைத் தூது விடுகிறாள் ஆண்டாள் கீழ்க்காணும் பாடலில்.

மின்னாகத்து எழுகின்ற மேகங்காள்
........... என் ஆகத்து இளங்கொங்கை
விரும்பித்தாம் நாடோறும்,
பொன் ஆகம் புல்குதற்கு என்
புரிவுடைமை செப்புமினே. - நாச். 580

கண்ணனோ இன்னும் வந்தபாடில்லை. கண்ணனை எண்ணி எண்ணி ஆண்டாளின் முலை ஆகிய கண்களின் முகடுகளில் நீர் திரள்கிறது. திரண்ட நீர்த்துளிகள் அப்படியே துளித்துளியாய் வழியத் துவங்குகின்றன. வருத்தம் தாளாமல் மேகங்களிடம் முறையிடுகிறாள். என்னை அழவைப்பது கண்ணனுக்குப் பெருமை சேர்க்குமா? என்று மேகங்களைப் பார்த்துக் கேட்கிறாள் கீழ்க்காணும் பாடலில்.

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்,
......... கண்ணீர்கள் முலைக்குவட்டில்
துளிசோரச் சோர்வேனை,
பெண்ணீர்மை ஈடழிக்கும்
இதுதமக்கோர் பெருமையே? - நாச். 577

" கண்ணன் வரட்டும். அவனை அப்படியே ஆரத் தழுவிக் கொள்வேன். அப்போது எனது கொங்கை ஆகிய கண்ணிமைகளின்மேல் நான் பூசியிருக்கும் குங்குமப் பூச்சு அழிந்து அவன் மார்பில் ஒட்டிக்கொள்ளும். ஒரேயொரு நாள் என் கண்ணன் என்னுடன் தங்கியிருந்தால் போதும்; நான் உயிர்வாழ்வேன். இல்லாவிட்டால் நான் இறப்பது உறுதி." என்று தனது அளப்பரிய காதலைப் பாடலாக வடிக்கிறாள் ஆண்டாள் கீழ்க்காணும் பாடலில்.

சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள்
......... கொங்கைமேல் குங்குமத்தின்
குழம்பழியப் புகுந்து,ஒருநாள்
தங்குமேல் என் ஆவி
தங்கும் என்று உரையீரே. - நாச். 583

ஆண்டாளின் மேற்காணும் பாடல்களும் தமிழர் மரபு சார்ந்ததுதான். பெண்கள் தமது கொங்கை ஆகிய கண்களின்மேல் இமைப்பரப்பில் குங்குமத்தால் கொடிபோல எழுதி அழகுசெய்து கொள்வது சங்ககாலம் தொட்டே நடந்துவருவதுதான். பல சங்க இலக்கியப் பாடல்களில் இது பதிவுசெய்யப்பட்டுள்ளது. பொதுவாக, ஒரு ஆணின் தோள் உயரமே ஒரு பெண் இருப்பாள் ஆதலால் காதலனைக் கட்டி அணைக்கும்போது காதலியின் இமைகளின்மேல் பூசியிருக்கும் பூச்சுக்கள் காதலனின் மார்பில் பட்டு அழிவதுடன் காதலனின் மார்பில் கறையினை உண்டாக்கும். இதுவும் சங்க இலக்கியப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது. சங்ககாலத் தமிழரின் மரபினை மீறாமலே ஆண்டாளும் இந்தப் பாடலில் அச்செய்தியைக் கூறியிருக்கிறாள். ஆனால், கொங்கை என்பதற்கு மார்பகம் என்ற பொருளைக் கொண்டு தவறான உரையினை எழுதி இருக்கின்றனர். இது ஆண்டாளின் தவறா?.

கண்ணனை எதிர்நோக்கி ஆண்டாள் உள்ளம் உருகிக் காத்திருக்கிறாள். அப்போது அவளது கண்கள் அவளைப் படுத்தும்பாடு பெரும்பாடு. கண்ணன் அதோ வந்துவிடுவான், இதோ வந்துவிடுவான் என்று அவனைக் காணப்போகும் ஆசையினால் அவளது கொங்கை ஆகிய கண்கள் அடிக்கடி கிளர்ந்து குழைவதும் பின்னர் குதூகலிப்பதுமாக அவளது உயிரை ஆர்ப்பரிக்கச் செய்கிறது. கண்களின் ஆர்ப்பாட்டத்தினைத் தாங்கமுடியாதவளாய்க் கண்ணனைச் சீக்கிரம் வரச்சொல்லிக் கூவுமாறு குயிலை வேண்டுகிறாள். அதை அப்படியே கீழ்க்காணும் பாடலாக வடிக்கிறாள் ஆண்டாள்.

பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து
ஆவியை ஆகுலஞ் செய்யும் .... - நாச். 551

கண்ணனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில், ஒருவேளை கண்ணன் வந்தவுடன் என்னைப் பிரிந்து சென்றுவிட்டால்?. என்று ஐயமுறுகிறது ஆண்டாளின் பேதை நெஞ்சம். என்ன செய்யலாம்?. என்று அச்சமுற்றுக் கலங்கியவள், தனது தோழிகளை நோக்கி இவ்வாறு கூறுகிறாள்: " கோபாலன் வந்துவிட்டால் அவனது திரண்ட தோள்களுடன் இதுநாள்வரையில் சேர்ந்திராத என் குற்றம் தீருமாறு எனது முலை ஆகிய கண்கள் அவனது மார்புகளைவிட்டுப் பிரியாவண்ணம் எங்கள் இருவரையும் அமுக்கிக் கட்டுங்கள். ". என்று ஆவலுடன் தன்னைத் தயார்செய்து கொள்கிறாள் ஆண்டாள் கீழ்க்காணும் பாடலில்.

குற்றமற்ற முலைதன்னைக்
குமரன் கோலப் பணைத்தோளோடு,
அற்ற குற்றம் அவைதீர
அணைய அமுக்கிக் கட்டீரே. - நாச். 633

கண்ணன் வருவதற்கு இன்னும் தாமதமாகிறது. காத்திருந்து பொறுமையிழந்த ஆண்டாளின் உள்ளம் பொங்குகிறது. அவள் அமைதியாய் இருந்தாலும் அவளது கண்கள் அமைதியாய் இருக்கவில்லை. அவளது பேச்சைக் கேட்காமலேயே கண்ணனுக்காக அவளது கண்களில் கண்ணீர் பெருகி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கண்ணனாலும் பெருந்தொல்லை
இந்தக் கண்களாலும் பெருந்தொல்லை
இரண்டுமே என்பேச்சைக் கேட்பதில்லை
கண்ணன் வரட்டும்
இந்தக் கண்களை
வேரோடு பிடுங்கி
அவன் மார்பின்மீதே
விட்டெறிந்து விடுகிறேன்.

என்று குமுறுகிறாள் ஆண்டாள் கீழ்க்காணும் பாடலில்.

உள்ளே உருகி நைவேனை
உளளோ இலளோ என்னாத,
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த்தனனைக் கண்டக்கால்,
கொள்ளும் பயனொன்று இல்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில்
எறிந்து என் அழலை தீர்வேனே. - நாச். 634

கண்ணகியின் கதை நாடறியும். பாண்டிய மன்னனின் தவறான தீர்ப்பினால் கோவலன் கொல்லப்படுகிறான். மைதீட்டி அழகுபார்க்கத் தனது கணவனே உயிருடன் இல்லாதநிலையில் மனம் வெறுத்துக் கதறி அழுகின்ற கண்ணகி, தனது இடது முலை ஆகிய இடது கண்ணினைப் பெயர்த்து மதுரைமீது விட்டெறிகிறாள். (1). கண்ணகியைப் போலவே ஆண்டாளுக்கும் அப்படிப்பட்ட ஒரு நிலைதான் இங்கே வருகிறது. கண்ணகியைப் போலவே தானும் தனது கொங்கை ஆகிய கண்களைப் பிடுங்கி எறிந்து விடுகிறேன் என்கிறாள். ஆண்டாளின் இந்தப் பாடலும் மரபு சார்ந்து எழுதப்பட்டதே என்பதற்குக் கண்ணகியின் கதை ஒரு சான்றாகும்.

இன்றைய தமிழ் அகராதிகளை அடிப்படையாகக் கொண்டு, முலையும் கொங்கையும் மார்பகத்தினை மட்டுமே குறிப்பதாகப் புரிந்து கொண்டதால் ஆண்டாளின் பாடல்கள் எப்படியெல்லாம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டன என்பதைப் பல சான்றுகளுடன் மேலே கண்டோம். சங்கத் தமிழரின் மரபுகளை மீறாமல்தான் ஆண்டாள் பாடல்களை இயற்றியுள்ளார் என்பதனையும் அறிந்தோம்.

ஆண்டாளின் மீதான தவறான பார்வை
இனியேனும் மாறட்டும் !
ஆண்டாளின் பெருமையினை நன்கு உணர்ந்து
அகிலமே கூறட்டும். !!

ஆதாரங்கள்:


(1). கண்ணகி மதுரையை எரித்தது எப்படி?

(2) அழகின் மறுபெயர் அல்குல்

(3) மருங்குல் என்றால் என்ன?

(4) கொங்கை என்பது மார்பகமா?

(5) சிறுபுறம் என்பது ....

2 கருத்துகள்:

  1. அருமை ஐயா ! தெளிவான விளக்கங்கள் !

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வாதப்படியே கொண்டாலும், அந்த வார்த்தைகளுக்கு மாற்று வார்த்தைகள் விழி, கண்கள் என்றிருக்கும்போது, இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியது ஏன்?

    எனவே தங்கள் விளக்கம் ஏற்கத்தக்கது அல்ல.

    அக்காலத்தில் மேலாடை அணியும் பழக்கம் இல்லை என்பதை பல கற்சிலைகள் காட்டுகின்றன.

    இதனை அன்று எழுதிய காலத்தோடு நோக்கின் பொருட்பிழை தோன்றியிருக்காது.

    இன்றைய காலத்தோடு அதனை ஒட்டவைக்கும் முயற்சியில் தாங்கள் ஈடுபடுகிறீர்கள்.

    வியாசர் ஒரு முனிவர் என்பது அவர் இராமாயணம் எழுதிய நேரம். அதற்கு முன்பு அவர் ஒரு திருடன்.

    இதை ஏற்றுக்கொள்ளவேண்டும். திருடன் என்றால் மனத்தைக் கவர்ந்தவன் என்று அவ்விடத்தே பொருள் கூறுவது ஆகாது.

    நீங்கள் சொல்லும் சொல்லுக்கு கண்கள் என்று எந்த அகராதியிலும் இல்லை. உங்கள் கூற்றுப்படியே அது கண்கள் எனக்கொண்டால், இது போன்று அகராதியில் இல்லாத எத்தனை சொற்களுக்கு புதிய பொருள் கண்டறிந்துள்ளீர்கள்?

    உள்ளதை உள்ளபடியே ஏற்பதுதான் அறிவுடைமை!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.