திங்கள், 8 ஜூன், 2015

அழகின் மறுபெயர் அல்குல் !!!

முன்னுரை:

சங்கப் புலவன் வடித்த பல சொற்களிலே அதி அற்புதமான ஒரு சொல் தான் ' அல்குல் ' என்பதாகும். பெண்களின் உறுப்புநலன் குறித்த பாடல்களில் எல்லாம் தவறாமல் இடம்பிடிக்கின்ற இச் சொல் மிக அழகான பொருளுடையது. அதாவது இச் சொல் குறிக்கும் பொருள் அழகு மிக்கதாய், காதலரால் பெரிதும் விரும்பிப் பாராட்டப்படுவதாய், காதலர்கள் எப்போதும் காண்பதற்கு ஏங்குகின்ற அழகுப் பொருளாய், காதலர் அல்லாதோர் காண்பதற்கு மறைக்கப்பட்ட ஒரு மரபுப் பொருளாய், சுருக்கமாகச் சொன்னால், அழகின் மறுபெயராய் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த அல்குல் எனும் சொல்லினை இற்றைத் தமிழன் புரிந்துகொண்ட விதம்............. மிகவும் வருத்தத்திற்குரியது.

பண்பாடற்ற சொற்கள் அல்லது பொருட்கள் எதையும் பலர்முன்னால் நேரடியாகக் கூறலாகாது என்று கருதி, இடக்கரடக்கல் என்ற இலக்கணத்தை உருவாக்கியவர்கள் தமிழ்ப் புலவர்கள். இத்தகைய புலவர்களின் உயர்ந்த நாகரிகம் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் அவர் படைத்த அல்குல் என்னும் சொல்லுக்கு இற்றை உரையாசிரியர்கள் கூறிஇருக்கின்ற விளக்கம் சொல்லவும் நினைக்கவும் கூசுவதானதொன்று. நடந்து முடிந்த இத் தவறுகளைப் பற்றிப் பேசிப் பயனில்லை என்பதால் இனி இக் கட்டுரையில் அல்குல் என்பதன் உண்மையான விளக்கத்தினை பல அழகான சான்றுகளுடன் காணலாம்.

அல்குல் - பொருளும் பெயர்க்காரணமும்:
அல்குல் என்னும் சொல் குறிக்கும் உண்மையான பொருள் ' கண்புருவத்தை ஒட்டியிருக்கும் நெற்றிப் பகுதி ' ஆகும்.

இதைச் சுருக்கமாக ' நெற்றி ' என்று சொல்லலாம்.

இனி, அல்குல் என்ற சொல்லுக்கு அதன் பெயர்க்காரணம் பற்றிக் காணலாம்.

அல்குதல் என்ற வினைச்சொல்லுக்கு ' தங்குதல் ' என்ற அகராதிப் பொருள் உண்டு.

பெண்கள் தமது தலையில் அணிகின்ற மேகலை முதலான அணிகளும் மாலைகளும் தங்கும் / பொருந்தும் இடம் என்பதால் தான் நெற்றியினை ' அல்குல் ' அதாவது தங்கும் / பொருந்தும் இடம் என்ற பொருளிலே குறித்தனர் முன்னோர்.

அல்குல் என்னும் பாடுபொருள்:

அல்குலாகிய நெற்றியினைப் பாடுபொருளாகக் கொண்டு பல பாடல்களை புலவர்கள் இயற்றி இருக்கின்றனர். காரணம், இந்த அல்குல் என்னும் பகுதியில் அணியப்படும் பலவிதமான அணிகலன்கள் மற்றும் வரையப்படும் ஓவியங்கள் தாம். அல்குலில் அணியப்பட்ட அணிகலன்கள் மற்றும் ஓவியங்களைப் பற்றி விரிவாகப் பேசும் முன்னர், சுருக்கமாக அவற்றைப் பற்றி இங்கே பார்த்துவிடலாம்.

ஓவியங்கள்:
அல்குலில் வரையப்பட்ட பலவகையான ஓவியங்களில் முக்கியமானவை வரிகளும் புள்ளிகளும் தான்.

வரி ஓவியங்களில் நேர்கோட்டு வரிகளும் வளைவான வரிகளும் அடங்கும். இவற்றில் மெல்லிய மற்றும் தடித்த வரிகளும் உண்டு.

புள்ளி ஓவியங்களில் நுட்பமான சிறுபுள்ளிகளும், பெரிய வட்டமான பொட்டுக்களும் அடங்கும்.

அணிகலன்கள்:
அல்குலில் அணியப்பட்ட பல்வேறு அணிகலன்களை இயற்கை அணி, செயற்கை அணி என்று இருவகையாகப் பிரிக்கலாம்.

இயற்கை அணியில் மலர் மாலைகள், இலைச் சுருள்கள், உருண்டுதிரண்ட கொட்டைமாலைகள் போன்றவை அடங்கும்.

செயற்கை அணியில் பொன், முத்து, மரகதம், பவளம் முதலானவற்றால் தனித்தனியாகவோ கலந்தோ செய்யப்பட்ட மாலைகளும், காசு போன்ற மெல்லிய தகடுகள் மற்றும் திரண்ட மணிகளைக் கோர்த்து செய்யப்பட்ட மாலைகளும், ஒலிக்கும் சிறுமணிகளால் கோர்க்கப்பட்ட மேகலை முதலான அணிகளும், ஆலவட்டம் எனப்படுவதாகிய நெற்றிப்பட்டம் போன்றவைகளும் அடங்கும்

அல்குலுக்குக் காட்டப்படும் உவமைகள்:

அல்குல் என்பதன் சரியான பொருளினை விளங்கிக் கொள்ளுமாறு அதனை அழகான மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டுப் பாடியுள்ளனர் புலவர்கள். இவற்றின் விளக்கங்களைப் பின்னால் வரும் பல பாடல்களில் கண்டு மகிழலாம். இங்கே அவற்றின் சுருக்கத்தைக் காணலாம்.

நல்லபாம்பின் படப்பொறி போல தலையின் நடுவில் அகற்சியைக் கொண்டதும் புள்ளிகளையுடையதும் அல்குல்.
தேரின் நெற்றியாகிய தேர்த்தட்டு போல நடுவே அகற்சியுடையதும் பல அணிகலன்களைக் கட்டித் தொங்கவிடப்படுவதும் அல்குல்.
கடலின் அலைகளைப் போல பல வளைவான வண்ண ஓவியங்களைத் தாங்கி இருப்பது அல்குல்.
ஆற்றின் கரையினைப் போல அழகான பல பொருட்களைத் தாங்கி நிற்பது அல்குல்.
கரும்புவேலி சூழ்ந்த செந்நெல் விளையும் தீவு போன்றது அல்குல்.
பூக்களை உடைய செம்பொன்னால் ஆன பூக்கூடை போன்றது அல்குல்.
பொன்னால் செய்த ஆலவட்டம் போன்றது அல்குல்.
புகை / பூவிதழ் போன்ற மெல்லிய முகத்திரையினால் மறைக்கப்படுவது அல்குல்.
அல்குலும் ஓவியங்களும்:

இனி அல்குலில் வரையப்பட்ட ஓவியங்களைப் பற்றி இங்கே பல எடுத்துக்காட்டுக்களுடன் விரிவாகக் காணலாம்.

வரி ஓவியங்கள்:


இவற்றை வரி என்றும் கோடு என்றும் இலக்கியம் குறிப்பிடுகிறது. சில சான்றுகள் கீழே விளக்கத்துடன் தரப்பட்டுள்ளன.

பூ துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல் - நெடு - 145
( பூப்போன்ற மெல்லிய ஆடைக்குள் தோன்றுகின்ற வரி தாங்கிய நெற்றி......... )

நுண் பல்கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை - நற் - 198
( நுட்பமான பல வரிகளைத் தாங்கிய நெற்றியில் தோன்றிய புள்ளிகள்...)

தட அரவு அல்குல் நுண் வரி வாட - கலி - 125
( நல்லபாம்பின் படப்பொறி போன்ற நெற்றியில் வரைந்திருந்த நுட்பமான வரிகள் அழிய.........)

கடலலைகள் போல பல வளைவான வரி ஓவியங்கள் தாங்கிய நெற்றியினை,  ' பரவை அல்குல் ' அதாவது ' கடல் போன்ற நெற்றி ' என்று சீவக சிந்தாமணியின் பல பாடல்கள் கூறுகின்றன. அவற்றில் சில மட்டும் கீழே.

பட்டவர் தப்பலின் பரவை ஏந்து அல்குல் - சிந்தா:1 98/1
தூசு சூழ் பரவை அல்குல் சுமக்கலாது என்ன வீழ்த்த - சிந்தா:1 109/1
பவழ வாய் பரவை அல்குல் என்று இவை பருகும் வேலான் - சிந்தா:1 191/1
பாடகம் சுமந்த செம்பொன் சீறடி பரவை அல்குல் - சிந்தா:2 479/1
பாசிழை பரவை அல்குல் பசும் கதிர் கலாபம் வீங்க - சிந்தா:3 586/1
தூசு அணி பரவை அல்குல் துளங்கும் நுண் நுசுப்பின் பாவை - சிந்தா:3 586/3
வெம் முலை பரவை அல்குல் மிடை மணி கலாபம் வேய் தோள் - சிந்தா:3 606/3

கம்பனும் ராமாயணத்தில் நெற்றியினை கடலுக்கு உவமையாக்கிக் கூறும் பாடல் கீழே:

தார் ஆழி கலை சார் அல்குல் தடம் கடற்கு உவமை தக்கோய் - கம்பரா: கிட்கி.
( வண்ணப்பட்டைகளை வளைத்துசுழித்து எழுதிய நெற்றிப் பரப்பானது ஒரு கடலைப் போன்று தோற்றமளிக்க... ).
இதில் வரும் தார் என்பது கிளியின் கழுத்தில் இருப்பதுபோல பட்டையான வரிகளைக் குறிக்கும்.
புள்ளி ஓவியங்கள்:

அல்குலில் வரையப்பட்ட புள்ளி ஓவியங்களைப் பற்றிய விளக்கங்களுடன் சில பாடல்களை இங்கே காணலாம்.

அல்குலில் வரையப்பட்ட புள்ளி ஓவியங்களைத் தித்தி, திதலை, காழ் என்று பல சொற்களால் இலக்கியம் குறிப்பிடுகிறது. இவற்றில் தித்தி, திதலை ஆகியவை சிறிய புள்ளிகளையும் காழ் என்பது பெரிய பொட்டுக்களையும் குறிக்கப் பயன்பட்டுள்ளது.

கொன்றை மெல் சினை பனி தவழ்பவை போல்
பைம் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க - பெரும் - 328
( கொன்றை மரத்தின் மெல்லிய இலைகளின் மேல் தவழும் பனியினைப் போல பச்சைநிறப் புள்ளிகள் எழுதப்பட்ட நெற்றியின் மேலாக மெல்லிய வெண்ணிற ஆடை அசைய..........)

திதலை அல்குல் பெரும் தோள் குறு_மகட்கு - நற் - 6
( புள்ளிகளை உடைய நெற்றியையும் திரண்ட கண்களையும் உடைய பெண்ணுக்கு.......)

திதலை சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல் - நற் - 133
( திதலை ஆகிய சில புள்ளிகளையும் காழ் ஆகிய பல பொட்டுக்களையும் அணிந்த நெற்றி.........)

அரவு கிளர்ந்து அன்ன விரவு_உறு பல் காழ்

வீடு உறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்து_இழை அல்குல் ................... - நற் - 366
( நல்லபாம்பு படமெடுத்தாற் போல நெற்றியில் வரையப்பட்டிருந்த பல வண்ணப் புள்ளிகள், முகத்தை மூடியிருந்த மெல்லிய ஆடைக்குள்ளிருந்து ஒளிர்கின்ற ..)

பூ துகில் இமைக்கும் பொலன் காழ் அல்குல் அம் வரி - அகம் - 387
( பூப்போன்ற மெல்லிய ஆடைக்குள் ஒளிர்கின்ற பொன்போன்ற புள்ளிகளை அழகிய வரிகளாய் அணிந்த நெற்றி.........)

அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து
ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை
நீர் பெயர் சுழியின் நிறைந்த கொப்பூழ்
உண்டு என உணரா உயவும் நடுவின்
வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல் - பொரு: 35

( இதன் பொருள்:
மோகினியோ என மருளச்செய்யும் வண்ணம் பூந்தாதுக்களை அணிந்ததும்,
மை எழுதப்படாத அழகுடையதும்,
நீரின் மேல் தோன்றுகின்ற காற்றுநிறைந்த நீர்க்குமிழி போல் மெல்லியதும்,
இருக்கிறது என்று உணரமுடியாத வண்ணம் நுணுகி இருப்பதுவுமான கண்ணிமைகளையும்,
வண்டுகள் வரிசையாக அமர்ந்திருப்பது போன்ற பல பெரிய பொட்டுக்களை அணிந்த நெற்றியும்......)

அல்குலும் அணிகளும்:
அல்குலில் அணியப்பட்ட பல்வேறு அணிகளைப் பற்றிய விளக்கங்களுடன் சில பாடல்களை இங்கே காணலாம்.

இயற்கை அணிகள்:

இவற்றை, தழை, மாலை, நெறி, பிணையல், கண்ணி என்று இலக்கியம் குறிப்பிடுகிறது.  சான்றுக்கு சில பாடல்கள் மட்டும் கீழே:

பை விரி அல்குல் கொய் தழை தைஇ - குறி -102
( நல்லபாம்பின் படம்போல் விரிந்த நெற்றியில் கொய்த மலர்களின் மாலையினை அணிந்து......)

.பல் பூ பகை தழை நுடங்கும் அல்குல் - நற் - 8
( பல வண்ணப் பூக்களினால் ஆன மாலையானது அசைகின்ற நெற்றி.........)

வயல் வெள் ஆம்பல் உருவ நெறி தழை
ஐது அகல் அல்குல் அணி பெற தைஇ - நற் - 390
( வயலில் பூத்த வெள்ஆம்பல் மலர்களின் மாலையினை அகன்ற நெற்றியில் அழகுற அணிந்து..........)

தழை அணி அல்குல் தாங்கல் செல்லா
நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக - குறு - 159
( மலர்மாலை அணிந்த நெற்றியும் தாங்கமாட்டாது நுண்ணிய இமைகளுக்கும் துன்பமாக.........).

வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழை
திதலை அல்குல் துயல்வரும் கூந்தல் - ஐங்கு - 72
( வயலில் பூத்த ஆம்பல் மலர்களால் ஆன மாலையானது புள்ளிகள் கொண்ட நெற்றியில் இருந்தவாறு கண்ணிமையின் மேலாக அசைய........)

கரும் கால் வேங்கை செம் பூ பிணையல்
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் - அகம் - 345
( கருங்கால் வேங்கைமரத்து செந்நிறப் பூக்களின் மாலையினை நெற்றியில் யாம் அணிந்து மகிழும்..........)

தீம் நீர் பெரும் குண்டு சுனை பூத்த குவளை
கூம்பு அவிழ் முழு_நெறி புரள்வரும் அல்குல் - புறம் - 116
( இனிய நீருடைய சுனையில் பூத்த குவளை மலரின் மாலை அசைகின்ற நெற்றி......)

கரும் குரல் நொச்சி கண் ஆர் குரூஉ தழை
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல்
தொடலை ஆகவும் கண்டனம் இனியே - புறம் - 271
( நொச்சியின் நீலமலர்களால் தொடுத்த மாலையினைப் பெண்கள் தமது அகன்ற நெற்றியில் அணிந்திருக்கக் கண்டோம்.....)

சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ - திரு : 203
( வண்டுகள் மொய்க்கின்ற மாம்பூக்களால் ஆன மாலையினை புள்ளிகள் வரைந்த நெற்றியில் அணிந்து........)

செயற்கை அணிகள்:
அல்குலில் அணியப்பட்ட செயற்கை அணிகளில் முதன்மையானது மேகலை என்னும் அணி. இதனை மணிமேகலை, மேகலை, கலை, கலாபம், கோடு என்று இலக்கியம் குறிப்பிடுகிறது. இது முழுமையான வட்டமாக இல்லாமல் ஒரு வில்லைப் போல பாதி வளைவுடைய அணியாகும். பவளக் கொடி போன்ற வடத்தில் பொன் போல ஒளிரும் காசுகளை வரிசையாகக் கோர்த்துத் தொங்குமாறு செய்யப்படும் இதில் சில நேரங்களில் மணிகளையும் கோர்ப்பதுண்டு. மணிகளைக் காழ் என்றும் மணி என்றும் இலக்கியம் குறிப்பிடுகிறது. இது பற்றிய சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

பல் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் - அகம் - 75
( பல காசுகளைக் கோர்த்த மேகலையைத் தாங்கிய நெற்றி.....)

பொலம் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் - அகம் - 269
( பொற்காசுகளைக் கோர்த்த மேகலையினைத் தாங்கிய நெற்றி....)

ஆசு இல் கம்மியன் மாசு அற புனைந்த
பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல் - புறம் - 353
( ஐயமில்லாத பொற்கொல்லன் குற்றமின்றி செய்த பொன்னாலான பல காசுகளைக் கோர்த்து அணிந்த நெற்றி....)

கோபத்து அன்ன தோயா பூ துகில் பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் - திரு: 15
( சிவந்த பட்டுப்பூச்சி போல மென்மையும் வண்ணமும் கொண்ட முகத்திரைக்குள்ளே, பல காசுகளையும் சில மணிகளையும் கோர்த்து அணிந்த நெற்றி....)

விரி மணி மேகலை விரவி ஆர்க்கில
தெரிவையர் அல்குல் தார் ஒலி இல் தேர் என
பரிபுரம் ஆர்க்கில பவள சீறடி
அரி இனம் ஆர்க்கிலா கமலம் என்னவே - கம்பரா: அயோத்
( மேகலையின் விரிந்த மணிகள் ஒலியெழுப்பாததால் நெற்றியானது ஒலிக்காத தேரினைப் போலாக, காலில் அணிந்த சிலம்பும் ஒலிக்காததால், பாதமானது வண்டுகள் ஊதாத தாமரை மலராக ....)

தூசு சூழ் பரவை அல்குல் சுமக்கலாது என்ன வீழ்த்த காசு சூழ் கோவை - சிந்தா: 109
( மெல்லிய ஆடையால் மறைத்த, கடலலைகள் போல் வரையப்பட்ட நெற்றியும் சுமக்கலாகாது என்பதுபோல் தாழ்ந்திருந்த காசு நிறைந்த மாலை....)

நாக பாம்பு பைத்து அனைய அல்குல் பல் கலை மிழற்ற - சிந்தா - 561
( நல்லபாம்பின் படப்பொறியினைப் போன்ற நெற்றியில் அணிந்திருந்த மேகலை அணி ஒலிக்க....)

பாசிழை பரவை அல்குல் பசும் கதிர் கலாபம் வீங்க - சிந்தா - 586
( ஒளிரும் வரிகளால் கடலலைகளைப் போலெழுதிய நெற்றியில் மேகலையும் செறிய...)

மிடைந்த மா மணி மேகலை ஏந்து அல்குல் - சிந்தா - 950
( செறிந்த மணிகளை உடைய மேகலையினை தாங்கிய நெற்றி......)

நிழல் அவிர் அல்குல் காசு சிலம்பொடு சிலம்ப நீள் தோள்
அழகி கூத்து ஆடுகின்றாள் அரங்கின் மேல் அரம்பை அன்னாள் - சிந்தா - 1254
( நெற்றியில் அணிந்த ஒளிவீசுகின்ற பொன்னிற மேகலையின் காசானது காற்சிலம்புடன் இயைந்து ஒலிக்க, தேவமாதர் போல் நீண்ட கண்களை உடைய அந்த அழகி அரங்கத்தின் மீது தேவமகளிர் போல நடனமாடுகின்றாள்...)

பண் உலாம் கிளவி-தன் பரவை ஏந்து அல்குல்
வண்ண மேகலை இவை வாய்ந்த பூம் துகில்
உள் நிலாய் பசும் கதிர் உமிழ்வ பாவியேன்
கண்ணையும் மனத்தையும் களம் கொண்டிட்டவே - சிந்தா - 1481
( இசைபோலும் மொழிகொண்ட அவள்-தன் கடலலை போன்ற வரிகள்கொண்ட நெற்றியில் அணிந்திருந்த வண்ண மேகலையானது, பூப்போன்ற மேலாடைக்குள் இருந்தவாறு ஒளிவீச, அது என் கண்ணையும் மனதையும் கவர்ந்துகொண்டது....)

பஞ்சு இறைகொண்ட பைம்பொன் கலை புறம் சூழ்ந்து வைத்து
நஞ்சு இறைகொண்ட நாக படம் பழித்து அகன்ற அல்குல் - சிந்தா - 1538
( நஞ்சுடைய நல்லபாம்பின் படப்பொறியினைப் போல அகன்ற நெற்றியில் பசும்பொன்னாலான மேகலையை அணிந்து அதை மேலாடையால் மூடி....)

அரவு வெகுண்டு அன்ன அகல் அல்குல் நிலம் புல்லி
திருவில் வளைந்து அனைய திரு மேகலையின் நீங்கி
புருவ மதி முகமும் புகழ் தோளும் புணர் முலையும்
உருவம் அழிந்து .........................................- சிந்தா - 1878
( நல்லபாம்பு படமெடுத்தாற் போல அகன்ற நெற்றியிடத்தில் பொருந்தியிருந்த, பொன்னாலான வில்லைப் போல வளைந்திருக்கும் பொன்மேகலையின் நீங்கியவளாய், முகமும், கண்களும் அழகிழந்து .......)

பாடு வண்டு இருந்த அன்ன பல் கலை அகல் அல்குல் - சிந்தா - 1996
( பாடும் வண்டுகள் வரிசையாய் அமர்ந்திருப்பதைப் போல செம்பொன்னாலான பலமணிகளைக் கோர்த்து அணிந்த அகன்ற நெற்றி...)

பட்டு உலாய் கிடந்த செம்பொன் பவளமோடு இமைக்கும் அல்குல் - சிந்தா - 2047
( பட்டாடையால் மூடிய நெற்றியில் அணிந்திருந்த செம்பொன்னும் பவளமும் கோர்த்த மேகலையானது ஒளிர ........)

அல்குல் காசு ஒலிப்ப ஆயம் பாவை சென்று எய்தினாளே - சிந்தா - 2068
( நெற்றியில் அணிந்திருந்த மேகலையின் காசு ஒலிக்குமாறு நடந்து அப் பாவையானவள் தன் தோழிகளைச் சென்றடைந்தாள்....)
சிந்தாமணியும் அல்குலும்:
சீவக சிந்தாமணி மட்டும் இல்லாது போயிருந்தால், அல்குல் என்ற சொல்லின் மெய்யான பொருள் கிடைத்திருக்குமா என்பது ஐயத்திற்குரியதே. காரணம், அல்குலைப் பற்றி அதிகம் புகழ்ந்து பாடியிருக்கும் ஒரே தமிழ் இலக்கியம் சீவக சிந்தாமணி என்றே கூறலாம். ஏராளமான உவமைகளுடன் அல்குலைப் பற்றி விரிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் திருத்தக்கத் தேவர் பாடியிருப்பது தமிழுக்குக் கிடைத்த வரமாகும். அல்குல் என்ற சொல் மட்டுமின்றி வேறு பல சங்கச் சொற்ககளைப் புரிந்து கொள்ளவும் சிந்தாமணி துணைபுரிகிறதென்றால் அது மிகையில்லை. சிந்தாமணிக் கடலில் மூழ்கி எடுத்த அல்குல் குறித்த சில உவமை முத்துக்கள் மட்டும் இங்கே புரிதலுக்காகவும் படித்து இன்புறுதற்காகவும் பரப்பி வைக்கப்பட்டுள்ளன.

வெள் எயிற்று அரவு மேய்ந்த மிச்சிலின் மெலிந்து மேக
புள் வயின் பிறந்த புள் போல் ஒன்று அலாது உரைத்தல் தேற்றார்
கள் வயிற்று அலர்ந்த கோதை கலாப வில் உமிழும் அல்குல்
ஒள் எயிற்றவர்கள் பொன் பூத்து ஒளி மணி உருவம் நீத்தார் - சிந்தா - 2897


 ( கள் வடியும் பூமாலையையும் வில் போல வளைந்து ஒளிவிடுகின்ற மேகலையையும் நெற்றியில் அணிந்திருந்த அப் பெண்கள், வெண்மையான கூரிய பற்களை உடைய பாம்பினால் விழுங்கப்பட்ட ஓர் உயிரைப் போல உடல் இளைத்து, மேகமாகிய பறவையினிடத்தே பிறக்கின்ற ஓசையாகிய இடியினைக் கேட்டவர் போல் நடுக்குற்று யாதொன்றும் பேசத் தோன்றாதவர்களாய், ஒள்ளிய தம் கடைக்கண் ஈற்றில் கண்ணீர்த் துளிகள் பூக்க, மணி போன்ற தமது அழகு கெடுமாறு நின்றிருந்தனர். )

மட்டு ஒளித்து உண்ணும் மாந்தர் மாண்பு போல் மறைந்து வண்ண
பட்டு ஒளித்து ஒழிய அல்குல் பசும் கதிர் கலாபம் தோன்ற
குட்ட நீர் குவளை கண்கள் விருந்து உண விரும்பி நின்றார்
அட்டும் தேன் அணிந்த மாலை பவள கொம்பு அணிந்தது ஒத்தார் - சிந்தா - 2533

( முகபடாமாகிய வண்ணப் பட்டாடையினை சற்றே விலக்க, பவளக் கொம்பினை அலங்கரிக்கின்ற தேன் வடியும் மலர் மாலையினைப் போல, நெற்றியில் அணிந்திருந்த செம்பொன் மேகலை ஒளிவீச, கள்வடியும் குவளை மலர் போன்ற கண்களின் அழகினைப் பருக விரும்பிய பெண்கள், கள்ளினை மறைந்துண்ணும் ஆடவரைப் போல, ஒதுங்கிநின்று ரசித்தனர். )

பாடல் மகளிரும் பல் கலை ஏந்து அல்குல்
ஆடல் மகளிரும் ஆவண வீதி-தொறும்
ஓட உதிர்ந்த அணிகலம் உக்கவை
நீடு இருள் போழும் நிலைமத்து ஒருபால் - சிந்தா - 2118


( பாடும் பெண்டிரும் பலகாசுகள் கோர்த்த மேகலையினை நெற்றியில் அணிந்த ஆடும் பெண்டிரும் தெருக்களில் ஆடி ஓடியபோது கீழே விழுந்த பொற்காசுகள், இருளைக் கிழிப்பதுபோல ஒளிவீச.....)

ஆகம் தான் ஓர் மணி பலகையாக முலைகள் நாய் ஆக
போகக்கு ஏற்ற புனை பவழ அல்குல் கழகம் ஆக
ஏக இன்ப காம கவறாடல் இயைவது அன்றேல்
ஆக நோற்றிட்டு அடங்கல் ஆண்மைக்கு அழகு என்பவே - சிந்தா - 1657

( செம்பவள மாலை அணிந்த நெற்றியை சூதாடும் இடமாகக் கொண்டு அமர்ந்து, முன்னுள்ள கண்களை சூதாடும் மணிபலகையாகக் கொண்டு, கண்ணிமைகளை ஆட்டக்காய்களாகக் கொண்டு, காதலெனும் தாயக்கட்டையினை உருட்டி இன்பம் துய்க்க இயலாதபோழ்து அடங்கி இருப்பதே ஆண்மைக்கு அழகு என்க. )

மூசு தேன் வாரி அல்குல் பட்ட பின் முலைகள் என்னும்
மாசு அறு கந்தின் மென் தோள் மணி தொடர் கொளுத்தி வாள் கண்
ஆசு அறு வயிர தோட்டி நுதல் அணிந்து அமுத செ வாய்
காசு அறு கவளம் ஆக களிறு கோள் பட்டது அன்றே - சிந்தா - 1690

( தேனீக்கள் மொய்க்கும் மலர்மாலை அணிந்த நெற்றி என்னும் மதிலுக்குள் புகுந்தபின், கடைக்கண்ணின் பூசிய கூரிய செம்பாகம் ஓர் அங்குசமாக நின்று அச்சுறுத்த, ஒளிவீசும் கண்கள் கவளமாக மாறி உண்ணத்தூண்ட, கண்ணிமைகள் என்னும் கட்டுத்தறியில், கண்ணின் வட்டத் தோளணிகள் ஆகிய சங்கிலித்தொடரால், யானையாகிய தலைவன் பிணிக்கப்பட்டான். ) 

கண்ட பேய் நகரின் நீங்கி காவதம் கடந்து தோன்றும்
வெண் தலை புணரி வீசி கிடந்த பொன் தீவிற்று ஆகி
கொண்டு உலப்ப அரிய செந்நெல் கொடி கரும்பு உடுத்த வேலி
நுண் துகில் நுழைந்த அல்குல் பவளம் ஒத்து இனியது ஒன்றே - சிந்தா - 1184

( மருட்சியினை உடைய கண்கள் பேய்நகராகத் தோன்ற, வெண்ணிற வரிகொண்ட இமைகள் நுரைமிக்க அலைவீசும் கடலாகத் தோன்ற, இவற்றைக் கடந்துசென்றால் தோன்றும் அழகிய தீவு போன்ற நெற்றியை மெல்லிய ஆடை மூடியிருக்க, அந் நெற்றியில் அணிந்திருந்த செம்பவள மாலைகள் அத் தீவில் விளைந்த செந்நெல்லைப் போன்றிருக்க, வளைந்த புருவங்களோ அந் நெல்லுக்கு இடப்பட்ட கரும்பு வேலியாகத் தோன்றியது. )

கலந்து எழு திரை நுண் ஆடை கடி கய மடந்தை காமர்
இலங்கு பொன் கலாபத்து அல்குல் இரு கரை பரப்பும் ஆக
அலர்ந்த தண் கமலத்து அம் போது அணிதக்க முகத்திற்கு ஏற்ப
நலம் கெழு குவளை வாள் கண் நன்_நுதல் நலத்தை உண்டார் - சிந்தா - 964

( அலைநுரை போல் மெல்லிய முகபடாம் அணிந்த அப் பெண்ணின் அழகு பொய்கைநீராக, ஒளிரும் பொன்னாலான மேகலையினை உடைய நெற்றியானது பொய்கையின் கரை போலாகவும், அழகிய கண்ணிமைகள் பொய்கையில் பூத்த செந்தாமரை மலர்களாக, ஒளிமிக்க கண்கள் வெண்குவளை மலர்களாகவும் உடையாளின் அழகைப் பருகினார். )

ஆடும் பாம்பு என புடை அகன்ற அல்குல் மேல்
சூடிய கலை புறம் சூழ்ந்த பூம் துகில்
ஓடிய எரி வளைத்து உருவ வெண் புகை
கூடி மற்று அதன் புறம் குலாய கொள்கைத்தே - சிந்தா - 1007

( படமெடுத்து ஆடும் நல்லபாம்பினைப் போல் அகன்ற நெற்றியில் அணிந்த செம்பொன் மேகலை கீழிருக்க அதன் மேலிருந்த மெல்லிய வெண்ணிற முகபடாம் மேகலையின் மேல் பட்டும் உயர்ந்தும் அசைந்தாடிய காட்சியானது, எரியும் நெருப்பில் தோன்றும் வெண்புகையானது நெருப்பினைச் சுற்றியும் மேலெழும்பியும் ஆடுவதைப்போலத் தோன்றியது........).

நாகத்து படம் கொள் அல்குல் நலம் கிளர் செம்பொன் மாலை
மேகத்து பிறந்தது ஓர் மின்னு மணி வரை வீழ்ந்ததே போல்
ஆகத்து பூட்டி .....................................................- சிந்தா - 738

( நல்லபாம்பின் படப்பொறியைப் போன்ற நெற்றியில் அழகுமிக்க செம்பொன்னால் ஆன மாலையினை, மேகத்தில் தோன்றிய ஒரு மின்னல் கரியமலையின் மேல் விழுந்ததைப் போல, கரிய மையுண்ட கண்களின் மேலாகத் தொங்குமாறு அணிந்து.....)

சில் அரி சிலம்பின் வள் வார் சிறுபறை கறங்க செம்பொன்
அல்குல் தேர் அணிந்து கொம்மை முலை எனும் புரவி பூட்டி
நெல் எழில் நெடும் கண் அம்பு ஆ புருவ வில் உருவ கோலி
செல்வ போர் காமன் சேனை செம்மல் மேல் எழுந்தது அன்றே - சிந்தா - 458

( சில பரல்களை உடைய காற்சிலம்பினை போர்ப்பறையாக முழக்கி, செம்பொன் மாலை அணிந்த நெற்றியினைத் தேராகக் கொண்டு, அழகிய கண்ணிமையினை குதிரையாகப் பூட்டி, புருவத்தை வில்லாக வளைத்து, நெல்மணி போலும் அழகுடைய நீண்ட கண்ணை அம்பாகக் கொண்டு காமனின் படைகள் தலைவனின் மேல் போர் தொடுத்தன...)

காவி அன்ன கண்ணினார் கயம் தலை குடைதலின்
ஆவி அன்ன பூம் துகில் அணிந்த அல்குல் பல் கலை
கோவை அற்று உதிர்ந்தன கொள்ளும் நீரர் இன்மையின்
வாவி யாவும் பொன் அணிந்து வானம் பூத்தது ஒத்தவே - சிந்தா: 67

( குவளை மலர் போன்ற கண்ணுடைய பெண்டிர் குளத்தில் நீராடியதால், புகைபோன்ற மெல்லிய ஆடையால் மூடப்பட்டிருந்த நெற்றியில் அவர்கள் அணிந்திருந்த மேகலை அணியில் இருந்து பொன்னிறக் காசுகள் உதிர்ந்து நீரில் விழ, அதை யாரும் எடுக்காததால், பொற்காசுகள் பரவிக் காணப்பட்ட அந்த குளமானது, மீன்கள் மின்னும் நீலவானம் போல விளங்கியது. )

மேலே கண்ட பல உவமைகளுக்கான விளக்கங்களில் இருந்து அல்குல் என்னும் சொல்லின் அழகான பொருள் விளங்கி இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமிராது. இதே புரிதலுடன் கம்ப ராமாயணத்தையும் இங்கே கொஞ்சம் பார்க்கலாம்.

கம்பராமாயணம் காமாயணம் அல்ல:

கம்பராமாயணத்தில் வரும் அல்குல், கொங்கை, முலை போன்ற சொற்களை வழக்கம் போலத் தவறாகப் புரிந்துகொண்டு, அந்த அழகான ஓவியத்தை காமப்பார்வை கொண்டு நோக்கி, கம்பராமாயணம் ஓர் காமாயணம் என்று கூறி, அதனை சீரழித்தவர்கள் பலர். ஆழ்ந்த காம மயக்கத்தில் இருக்கும் இவர்களைத் தட்டி எழுப்பும் விதமாகவே கட்டுரையின் இப் பகுதி எழுதப்படுகிறது.

முலை, கொங்கை, ஆகம், மார்பு போன்ற பல சொற்கள் பெண்களைக் குறித்து வருமிடங்களில் எல்லாம் கண்ணையும் அது சார்ந்த பகுதிகளையுமே குறிக்கும் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். அதைப்போல, அல்குல் என்ற சொல் நெற்றியைக் குறிக்கும் என்று இக் கட்டுரையின் மேற்பகுதியில் கண்டோம். இனி, கம்பராமாயணம் ஓர் காமாயணம் என்று சிலர் தவறாகக் கூறுவதற்கு முதன்மைக் காரணமாகக் காட்டப்படுகின்ற பாடலை மட்டும் இங்கு காணலாம்.

இயல்வு உறு செலவின் நாவாய் இரு கையும் எயினர் தூண்ட
துயல்வன துடுப்பு வீசும் துவலைகள் மகளிர் மென் தூசு
உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு அற தளிப்ப உள்ளத்து
அயர்வு உறும் மதுகை மைந்தர்க்கு அயா_உயிர்ப்பு அளித்தது அம்மா - கம்பரா: அயோத்.

இப் பாடலில் வரும் அல்குல் என்ற சொல்லுக்குத் தவறான பொருளைக் கொண்டு, இப் பாடலுக்குத் தவறான விளக்கம் அளித்ததன் விளைவே, கம்பராமாயணத்தினை காமாயணமாகக் காட்டுவதற்கு அடிகோலி இருக்கிறது. இப் பாடலின் உண்மையான அழகான விளக்கத்தினை அறிந்தபின்னரேனும் கம்பராமாயணம் காமாயணம் அல்ல என்று அவர்கள் சித்தம் தெளியட்டும்.!. இதோ இப் பாடலின் பொருள் கீழே:

எயினர்கள் படகின் இருபுறங்களிலும் துடுப்புகளை முன்பின்னாகத் தூண்ட, அத் துடுப்புகளில் இருந்து வீசிய நீர்த்திவலைகளால் துணுக்குற்ற பெண்களின் மெல்லிய முகபடாம் விலக, கடலலைகள் போல வரையப்பட்டிருந்த அப் பெண்களின் நெற்றி அழகினைக் கண்ட எயினர்கள் தம் உள்ளச் சோர்வினையும் மறந்து ஊக்கமடைந்தனர்.

எவ்வளவு அழகான காட்சி!. என்னே கம்பனின் மாட்சி !. இதைப்போலவே கீழ்க்காணும் பாடலிலும் கம்பனின் கற்பனையையும் மாட்சியினையும் அறிந்து மகிழலாம்.

எற்று நீர் குடையும்தோறும் ஏந்து பேர் அல்குல்-நின்றும்
கற்றை மேகலைகள் நீங்கி சீறடி கவ்வ காலில்
சுற்றிய நாகம் என்று துணுக்கத்தால் துடிக்கின்றாரும் - கம்பரா: பால.

நீரில் மூழ்கி மூழ்கி எழுவதினால் அகன்ற நெற்றியில் அணிந்திருந்த மேகலை அணியின் வளைவான கற்றைகள் கழன்று விழுந்து நீரில் மூழ்கி பெண்களின் கால்களைக் கவ்வ, தம் கால்களைப் பாம்பு சுற்றியதாகக் கருதி அவர்கள் அஞ்சி நடுங்கிட.............

இதுபோல அல்குல் வருகின்ற அனைத்து இடங்களிலும் கம்பனின் நுண்மாண் நுழைபுலத்தை அறியலாம். கட்டுரையின் விரிவஞ்சி அவை இங்கே கொடுக்கப்படவில்லை.

அல்குலும் பிற விலங்குகளும்:

தமிழர்கள் தம்மை மட்டுமே அணிகள், ஓவியங்கள் முதலானவற்றால் அழகாக வைத்திருக்கவேண்டும் என்று நினைக்கவில்லை. தம்முடன் வாழ்கின்ற பிற உயிரினங்களையும் கூட அழகாக வைத்திருக்கவே விரும்பியிருக்கின்றனர். இதில் பசுக்களும், கன்றுகளும், யானைகளும் அடங்கும். இவ் விலங்குகளை எவ்வாறெல்லாம் அலங்கரித்து மகிழ்ந்திருக்கின்றனர் என்பதைக் கீழ்க்காணும் சில பாடல்களின் மூலமாகக் காணலாம்.

பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி
கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல் - பெரும்- 243
( பொலிவுகொண்ட பசுவானது ஈன்றெடுத்த நடைபயிலும் கன்றின் மணிகோர்த்த கயிறுடைய நெற்றி..........)

சிறிய கன்றின் நெற்றியினைக் கூட வெறுமையாகக் காணமுடியாமல், அதில் ஓர் மணியினைக் கட்டி அழகு பார்க்கும் அந்த உயர்ந்த உள்ளங்களை என்னென்பது. !
இல்லத்துப் பெண்கள், பசுக்களையும் கன்றுகளையும் அழகாக்கி மகிழ்ந்திருக்க, ஆண்களோ யானைகளை அழகாக்கி மகிழ்ந்திருக்கின்றனர். விழாக்காலங்களில் யானையின் நெற்றி அழகே தனிதான். நெற்றிப்பட்டங்களும் ஓவியங்களுமாய் யானையினைப் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். நாம் இந்த யானையாகப் பிறந்திருக்கக் கூடாதா என்று ஏங்க வைக்கும். சிந்தாமணி காட்டும் யானை அலங்காரப் பாடல்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மை அணி மத யானை மத்தக அகல் அல்குல் - சிந்தா - 2434
( மை அணிந்த மத யானையின் அழகிய நெற்றி போல் அகன்ற நெற்றி ........)

கதம் கனல் யானை நெற்றி கட்டிய பட்டமே போல்
மதம் கமழ் கோதை அல்குல் மனா கிடந்து இமைத்து - சிந்தா - 2584
( மத யானையின் நெற்றியில் கட்டிய பொன்னாலான பட்டத்தினைப் போல தேன் நிறைந்த பூமாலையானது நெற்றியில் இருந்துகொண்டு ஒளிர........)

யானையின் நெற்றியில் மையினால் வரைந்து அழகுபடுத்தி இருப்பதையும், வேலைப்பாடுடைய பொன்னாலான பட்டத்தினை அணிவித்து இருப்பதையும் மேற்காணும் பாடல்கள் கூறுகின்றன.

முடிவுரை:

இதகாறும் கண்டவற்றில் இருந்து, அக் காலத்துப் பெண்கள், தமது தலையின்மேல் நெற்றிவரையிலும் முகத்திரை போன்று மெல்லிய ஆடை கொண்டு மூடி இருந்துள்ளனர் என்ற செய்தி பெறப்பட்டுள்ளது. தமிழகப் பெண்கள் முகத்திரை அணிந்தனர் என்பதனை வள்ளுவரும் உறுதிசெய்துள்ளார்.

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்  - 1087

( பொருள்: மதங்கொண்ட யானையின் கண்களைக் கட்படாம் கொண்டு மூடுவதைப்போல, பெண்கள் தம் அழகிய கண்களை ஆடையால் மூடியிருப்பர். )

இன்றுவரை வடநாட்டுப் பெண்களிடையே பரவலாக இருந்துவரும் இப் பழக்கம், எப்போது, ஏன் தமிழகத்தில் இல்லாமல் போனது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இறுதியாக, அழகிற்கும் அல்குலுக்கும் எழுத்தளவில் மிகச்சிறிய வேறுபாடே இருப்பதை அறியலாம். ஒருவேளை அல்குல் என்ற சொல்லில் இருந்தே அழகு என்ற சொல் பிறந்திருக்குமோ..... எது எப்படியோ இக் கட்டுரையில் இருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால்,

அழகின் மறுபெயர் அல்குல் !.
=============================================================

12 கருத்துகள்:

  1. முற்றிலும் புதிய தகவல்கள். சிறப்பான பதிவு. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி திருமதி. கீதா.

      வலைப்பூவிற்கு நல்வரவு. :)))

      நீக்கு
    2. முன்னரும் வந்த நினைவு இருக்கிறது. கருத்தும் பகிர்ந்த நினைவு இருக்கிறது. உங்கள் ஆக்கங்களை விடாமல் படித்து வருகிறேன். மின் தமிழ் மூலமாகத் தான்! :)))) வரவேற்பிற்கு நன்றி.

      நீக்கு
  2. இது நாள் வரை இருந்த குழப்பத்திலிருந்து தெளிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவு, திரு. செல்வம். இக் கட்டுரை உங்களுக்குப் பயன்பட்டதில் மெத்த மகிழ்ச்சி. கூடியவரை இக் கட்டுரையினைப் பற்றி உங்கள் நண்பர்களுக்கும் சொல்லிப் படிக்கச் சொல்லுங்கள். நன்றி.

      அன்புடன்,
      தி.பொ.ச.

      நீக்கு
  3. ஹிஹி.. மிகவும் கடினமாக உழைத்து வசதிக்கேற்ப திரித்து கம்பனைக் காப்பாற்ற சமாளிப்பது நன்றாகவே தெரிகிறது...

    பதிலளிநீக்கு
  4. விளக்கத்திற்கு நன்றி ஐயா; நம்மாழ்வார் திருவாய்மொழி 5-5 `எங்கனையோ' தொடங்கும் பாடல்கள் தொகுப்பில்,கீழ்கண்ட பாடல் வரிகள் உங்கள் `அல்குல்' விளக்கத்திற்கு நன்கு பொருந்தி என்னை போன்ற சிற்றரிவினருக்கு செய்யுள் அரும்பொருள் விளக்கம் அளித்துள்ளது.
    3168.
    கையுள் நன்முகம் வைக்கும் நையுமென்று அன்னையரும் முனிதர்
    மை கொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
    செய்ய தாமரைக்கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
    மொய்யநீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்நிற்குமே

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.