ஞாயிறு, 21 மே, 2017

கண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 6 ( முறுவல் - முலை - மேனி - வயிறு )

முன்னுரை:

கண்ணும் கண்சார்ந்த இடமும் என்ற கட்டுரையின் ஆறாவது பகுதியான இதில் முறுவல், முலை, மேனி, வயிறு ஆகிய சொற்களைப் பற்றிச் சுருக்கமாகக் காணலாம்.


முறுவல்:

முறுவல் என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் கண் என்ற பொருளில் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்களின் வெள்ளொளி வீசும் அழகிய விழிகளை உருண்டு திரண்ட பெரிய வெண்ணிறக் கடல் முத்துடன் ஒப்பிட்டுக் கூறுவது புலவர்களின் வழக்கம். அதைப் பற்றிய சில பாடல்வரிகள் கீழே:

முத்து உறழ் முறுவல் - நெடு - 36
தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய் - கலி -131

பெண்களின் அழகிய விழிகளை மலர்களுடன் ஒப்பிட்டுப் பாடுவது இலக்கிய வழக்கம் என்று முன்னர் கண்டோம். அதைப்போலவே இங்கும் பெண்களின் முறுவல் ஆகிய விழிகளை முல்லை, ஆம்பல், குலிகம் (இலுப்பை) மலர்களுடன் ஒப்பிட்டுப் பல பாடல்களில் பாடியுள்ளனர் புலவர். ஒருசில பாடல் வரிகள் கீழே:

மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப - கலி -27
முருக்கு இதழ் குலிகம் ஊட்டிவைத்தன்ன முறுவல் - சிந்தா -1454

பெண்களின் உருண்டு திரண்ட விழிகளை மூங்கில் காய்களுடன் ஒப்பிடுவது பற்றி தோள் என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். அதைப்போலவே இங்கும் பெண்களின் முறுவல் ஆகிய விழிகளை மூங்கில் காய்களுடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற சில பாடல்வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

முளை நிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல் - ஐங் 369
முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த - கலி - 15

பெண்களின் கண்களை ஒளிவீசும் நிலவுடன் ஒப்பிடுவது பற்றி நுதல், கொங்கை ஆகிய கட்டுரைகளில் கண்டோம். அதைப்போலவே இங்கும் பெண்களின் முறுவல் ஆகிய விழிகளை நிலவுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்வரிகள் சில:

வாள் நிலா முறுவல் - கம்ப. பால -6
வாள் நிலா முறுவலன் வயங்கு சோதியை - கம்ப. ஆர- 13

நிலவு மட்டும் தான் ஒளிருமா?. மணிகளும் ஒளிருமல்லவா?. அதனால்தான் பெண்களின் ஒளிமிக்க விழிகளை ஒளிவீசும் மணிகளுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியுள்ளனர். சான்றுக்குச் சில பாடல்வரிகள் கீழே:

தீம்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் - சிலப்.புகார் 7
மணிமுறுவல் தோன்ற வந்தனை -சிந்தா - 1126

முறுவல் பற்றி அதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள முறுவல் என்றால் என்ன? என்ற கட்டுரையினைப் படிக்கலாம்.

முலை:

முலை என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் ஏராளமான இடங்களில் கண் மற்றும் கண்ணிமைகளைக் குறிக்கவும் மிகச்சில இடங்களில் மட்டுமே மார்பகம் என்ற பொருளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்களின் கண்களை மலர்களுடன் ஒப்பிடும் வழக்கத்தினை முன்னர் கண்டோம். அதைப்போல இங்கும் பெண்களின் முலை ஆகிய விழிகளை பல்வகை மலர்களுடன் ஒப்பிட்டுக் கூறும் சில பாடல்வரிகள்:

பொன் ஈன்ற கோங்கு அரும்பு அன்ன முலையாய் - நால -10
ஞாழல் பூவின் அன்ன சுணங்கு வளர் இள முலை - ஐங்கு -149
குளன் அணி தாமரை பாசரும்பு ஏய்க்கும் இள முலை - கலி -22

பெண்களின் விழிகள் உருண்டு திரண்டு வெண்ணிறத்தில் பளபளப்புடன் ஒளிர்வதால் அதனைப் பனைமரத்தின் நுங்குகளுடன் ஒப்பிட்டுக் கூறுவர் புலவர். இந்த நுங்கினைக் குரும்பை என்றும் இலக்கியங்கள் கூறும். சான்றுக்குச் சில பாடல்வரிகள் கீழே தரப்பட்டுள்ளன:

தீம் கண் நுங்கின் பணை கொள் வெம் முலை - நற் - 392
குரும்பை மென் முலை அரும்பிய சுணங்கின் - அகம் - 253

பெண்களின் அழகிய விழிகளை முத்துடன் ஒப்பிடுவது இலக்கிய வழக்கம் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். இங்கும் அதைப்போல பெண்களின் முலை ஆகிய விழிகளை முத்துடன் ஒப்பிடுகின்ற சில பாடல்வரிகள்:

பரு முத்து உறையும் பணை வெம் முலை - சிந்தா -1518
கடல் நித்திலம் வைத்த கதிர் முலையின் .. - சிந்தா -1515

பெண்களின் மெல்லிய கண்ணிமைகளை மழைநீரில் தோன்றும் நீர்க்குமிழிகளுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்வரிகள் கீழே:

பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை - கலி - 56
மழை மொக்குள் அன்ன வரு மென் முலை மாதர் நல்லார் - சிந்தா - 1064

பெண்களின் கண்ணிமைகளை செந்நிறத்தில் மைபூசி இருக்கும்போது அவை பார்ப்பதற்கு குங்குமம் வைக்கும் சிமிழ் போலத் தோன்றும். அதைப்பற்றிக் கூறும் பாடல்வரிகள் சில கீழே:

செப்பு இணை அனைய செம் கேழ் வன முலை - சிந்தா - 1691
குலிக செப்பு அன கொம்மை வரி முலை - சிந்தா - 641

குதிரைக்குக் கண்பட்டி கட்டுவதைப் போல மதம் பிடித்த யானை பிறரைத் தாக்காமல் இருக்க அதன் கண்களுக்கு மேலாக கட்படாம் என்ற துணிகொண்டு மறைப்பது வழக்கம். அதைப்போல பெண்களின் வேல்விழிகளால் ஆடவர்கள் தாக்குறாமல் இருக்க, அவர்களது கண்களையும் முகத்திரை என்ற ஆடைகொண்டு மறைப்பது வழக்கம். இவ் இரண்டையும் ஒப்பிட்டுக் கூறும் குறள் கீழே:

கடாஅ களிற்றின் மேல் கண் படாம் மாதர்
படாஅ முலை மேல் துகில் - குறள் - 1087

பெண்கள் தமது இமைகளின்மேல் அழகுசெய்யும்போது பூந்தாதுக்களையும் பயன்படுத்துவர் என்று முன்னர் கண்டோம். அதைப்போலவே இங்கும் பெண்கள் தமது முலை ஆகிய இமைகளின் மேல் சுணங்கு எனப்படும் பூந்தாதுக்களைப் பயன்படுத்தியதைக் கூறும் பாடல்வரிகள் கீழே:

எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை விதிர்த்து விட்டு அன்ன அம் நுண் சுணங்கின்    - நற் - 160
அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை - குறு - 71

பெண்கள் தமது முலை ஆகிய இமைகளின்மேல் குங்குமத்தாலும் சந்தனக் குழம்பினாலும் பல வரிகளை எழுதுவர். இதனைத் தொய்யில் என்று இலக்கியம் கூறும். இதைப் பற்றிய பாடல்வரிகள் சில கீழே:

உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய தொய்யில் - குறு - 276
குங்குமமும் சந்தனமும் கூட்டி இடு கொடியா வெம் கண் இள முலையின் மிசை எழுதி விளையாடி - சிந்தா - 850
சாந்து கொண்டு இள முலை எழுதி - சிந்தா -1992

பெண்கள் அழும்போது கண்களில் தோன்றி ஒழுகும் கண்ணீர் பற்றிக் கூறும் பாடல்வரிகள் சில கீழே:

செம் சுணங்கின் மென் முலையாய் சேர் பசலை தீர் இஃதோ - திணை . ஐம் - 24
இள முலை மேல் பொன் பசலை பூப்ப - சிந்தா -2051

சிலப்பதிகாரத்தில் கண்ணகி அறுத்து எறிந்து மதுரை நகரை எரித்ததாகக் கூறப்படுகின்ற முலை என்பது அவளது கண்ணையே குறிக்கும். இதைப் பற்றிய முழுமையான தகவல்களை அறிந்துகொள்ள கண்ணகி மதுரையை எரித்தது எப்படி?. என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

மேனி:

மேனி என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் கண், கண்ணிமை ஆகிய பொருட்களைக் குறிக்கவே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்கள் தமது கண்ணிமைகளைச் செந்நிறத்தில் மைபூசி அழகுசெய்திருக்கும்போது பார்ப்பதற்கு அவை மாமரத்தின் செந்நிறத்துத் தளிர் இலைகளைப் போலவே தோன்றும். இவை இரண்டையும் ஒப்பிட்டுக் கூறும் பாடல்வரிகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின் அவிர் தளிர் புரையும் மேனியர் - திரு - 143
மாவின் தளிர் ஏர் அன்ன மேனி - மது - 706

பெண்களின் விழிகளை ஒளிவீசும் மணியுடன் ஒப்பிடுவதைப் பற்றி முன்னர் கண்டோம். அதைப்போலவே இங்கும் பெண்களின் மேனியாகிய விழிகளை மணியுடன் ஒப்பிடும் பாடல் வரி கீழே:

திரு மணி புரையும் மேனி மடவோள் - நற் -8

பெண்களின் மைபூசிய கண்ணிமைகளை மலர்களின் இதழ்களுடன் ஒப்பிட்டுக் கூறும் இலக்கிய வழக்கத்தினை முன்னர் கண்டோம். அதைப்போலவே இங்கும் பெண்களின் மேனி ஆகிய இமைகளை மலர் இதழ்களுடன் ஒப்பிட்டுக் கூறும் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

குறிஞ்சி நாள்மலர் புரையும் மேனி - நற் - 301
வை விரி மலர் புரையும் மேனியை - பரி - 1

பெண்கள் துயரத்தில் அழும்போது கண்ணீர் பெருகி வழியும். இக் கண்ணீரை பசலை என்றும் பசப்பு என்றும் இலக்கியங்கள் கூறும். இதனைப் பற்றிக் கூறும் சில பாடல்வரிகள் கீழே:

மாஅத்து அம் தளிர் அன்ன நன் மா மேனி பசப்ப - குறு -331
மேனி மறைத்த பசலையள் ஆனாது - கலி -143
நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும் எழு நாளேம் மேனி பசந்து - குறள் -1288

பெண்களின் மையுண்ட கண்ணிமைகளை மின்னலுடன் ஒப்பிட்டுக் கூறுவதும் இலக்கிய வழக்கம் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். இதை உறுதிசெய்கின்ற இன்னொரு பாடல் வரி கீழே:

உருவு கொண்ட மின்னே போல திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள் - மணி -6

இப்படி மின்னலைப் போல மினுக்குவதால் அதாவது விட்டுவிட்டு ஒளிர்வதால் தான் பெண்களின் கண்ணிமைகளுக்கு மேனி என்ற பெயர் ஏற்பட்டது. மேனியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேனி என்றால் என்ன?. என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

வயிறு:

வயிறு என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டிலும் பல இடங்களில் கண், கண்ணிமை ஆகிய பொருட்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்கள் தமது நெற்றியில் பல பொட்டுக்களை வரிசையாக வரைந்து அழகுசெய்வர் என்று அல்குல் என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். நெற்றியில் மட்டுமின்றி இமைகளின் மேலும் பல பொட்டுக்களை வரைவது வழக்கமே. இப் பொட்டுக்களைத் திதலை என்றும் தித்தி என்றும் இலக்கியம் கூறுகிறது. இதைப் பற்றிய சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

புதல்வன் பயந்த திதலை அம் வயிற்று வால் இழை மகளிர் நால்வர் கூடி ... - அகம்.86
வரி கிளர் பணை தோள் வயிறு அணி திதலை அரியலாட்டியர் - அகம். 245

பெண்களின் கண்கள் உருண்டு திரண்டு மேல்புறம் குவிந்து தோன்றுவதால் அவற்றை மூங்கில்காய், பனைமரத்தின் நுங்கு, குங்குமச்சிமிழ், தென்னையின் இளநீர்க்காய், கலசம் போன்றவற்றுடன் ஒப்பிடுகின்ற வழக்கத்தினைப் பற்றி முன்னர் கண்டோம். அதைப்போல இங்கும் பெண்களின் வயிறு ஆகிய விழிகளை யாழ் எனும் இசைக்கருவியின் பத்தல் என்ற உருண்டு திரண்ட அடிப்பாகத்துடன் ஒப்பிட்டுக் கூறுகிறது கீழ்க்காணும் பாடல்.

செங்கோட்டு யாழின் பத்தர் அன்ன மெத்தென் அம் வயிற்று - பெருங்.உஞ்சை.40

பெண்களது கண்ணிமைகள் மிக மெல்லியவை என்பதால் அவற்றை நீர்க்குமிழி, பூ இதழ்கள், மாந்தளிர் போன்றவற்றுடன் இலக்கியங்கள் ஒப்பிட்டுக் கூறுவதைப் பற்றி முன்னர் கண்டோம். அதைப்போலவே இங்கு பெண்களின் வயிறு ஆகிய மெல்லிய இமைகளை ஆலமரத்தின் இலையுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது கீழ்க்காணும் பாடல்.

ஆல் இலை அன்ன வயிற்றினை .. - கம்ப.அயோத்.4

பெண்கள் துயரத்தினால் அழும்போது தமது கைகளால் இமைகளைக் கசக்கிப் பிசைந்து அழுவர். இவ்வாறு அழுவதனை வயிறு அதுக்குதல் என்றும் வயிறு அலைத்தல் என்றும் இலக்கியம் கூறுகிறது. இதைப் பற்றிக் கூறும் சில பாடல் வரிகள் கீழே:

வேல் நெடும் கண் நீர் மல்க ஆகுலத்து அரிவையர் அம் வயிறு அதுக்கினார் - சிந்தா: 1104
பூம் தெரிவையர் ஆ தகாது என கலங்கி அம் வயிறு அதுக்கினார் - சிந்தா: 1106
வந்தானை முகம் நோக்கி வயிறு அலைத்து மழை கண்ணீர் - கம்ப.ஆரண்.6
வான நாடியர் வயிறு அலைத்து அழுது கண் மழை நீர் - யுத்3:22 199/1

பெண்களின் வயிறு பற்றி மேலும் விரிவாகத் தெரிந்துகொள்ள வயிறு என்றால் என்ன? (யாழும் வயிறும்) என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

..... தொடரும் ............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.