செவ்வாய், 26 மே, 2009

பழம்நழுவிப் பாலில் விழுந்தால்?


பழமொழி:

பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல

தற்போதைய பொருள்:

உண்ணும்போது கையில் இருந்த பழம் நழுவிப் பாலில் விழுந்ததைப் போல மிக்க நன்மை விளைந்தது.

தவறு:

முதல் கேள்வி இதுதான். உண்மையிலேயே பழம் நழுவிப் பாலில் விழுந்தால் விளைவு என்ன ஆகும்?. அது பால் இருக்கும் பாத்திரத்தின் வாய் அளவினையும் பழத்தின் அளவினையும் பொறுத்தது. பாத்திரத்தின் வாய் பழத்தைவிட சிறியதாய் இருந்தால் அந்த பாத்திரம் பழத்தினால் தட்டிவிடப்பட்டு பால் முழுவதும் தரையில் கொட்டிவிடும். பாத்திரத்தின் வாய் பழத்தைவிட பெரியதாய் இருந்தால் பழமானது பாத்திரத்தின் உள்ளே விழுந்து பால் வெளியே தெறிக்கும். உள்ளே விழுகின்ற பழத்தின் அளவினைப் பொறுத்து வெளியே தெறிக்கும் பாலின் அளவு மாறுபடும். அதிலும் புளியம்பழமோ ஆரஞ்சுப் பழச் சுளையோ தவறுதலாகப் பாலில் விழுந்துவிட்டால் என்ன ஆகும்?. பால் முழுவதும் திரிந்து வீணாகி விடும். எப்படிப் பார்த்தாலும் பழம் நழுவிப் பாலில் விழுந்தால் பாலுக்குத் தான் பாதிப்பு; பழத்துக்கு இல்லை. இப்படி விழுந்த பழத்துக்குப் பாலினால் உடனே சுவை கூடுவதுமில்லை. ஏனென்றால் பால் இனிப்பாக இருந்து அதில் பழத்தை நன்கு ஊறவைத்தால் தான் பழத்துக்குச் சுவை கூடும். பாலில் நழுவி விழுவதால் மட்டும் பழத்துக்குச் சுவை கூடுவதில்லை என்பதால் மேற்காணும் பொருளில் இப் பழமொழியினைப் பயன்படுத்துவது தவறு என்பதை அறியலாம்.

இப்படி நன்மை எதையும் தராமல் நடக்கின்ற இந்த நிகழ்ச்சியினை மிக்க நன்மை தருகின்ற ஒரு நிகழ்வாகக் கருதி அதனை மக்கள் எப்படி உவமையாகப் பயன்படுத்துகின்றனர்?. இத் தொடர் எப்படி மக்களால் பழமொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது?. இதற்கான விடைகளை ஆய்வு செய்ததில் கீழ்க்காணும் கருத்துக்கள் கிடைத்தன. பழமொழியின் பொருள் சரியானது தான். அதில் எவ்விதத் தவறும் இல்லை. பழமொழியில் உள்ள 'பால்' என்ற சொல்லில் தான் ஒரே ஒரு எழுத்துப் பிழை உள்ளது. அதைத் திருத்தி எழுதினால் தான் நாம் இன்று மேற்கொண்டிருக்கும் பொருள் இப்பழமொழிக்குப் பொருத்தமாக அமையும். அதைப் பற்றிக் கீழே காணலாம்.

திருத்தம்:

பழமொழியில் வரும் 'பால்' என்ற சொல்லுக்குப் பதிலாக 'பாகு' என்ற சொல் வந்திருக்க வேண்டும். இதுவே திருத்தம் ஆகும். இங்கே பாகு என்பது வெல்லப்பாகினைக் குறிக்கும்.

நிறுவுதல்:

பழங்களில் பலவகைகள் இருந்தாலும் இனிப்புச் சுவை உடைய பழங்கள் தான் மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப் படுகின்றன. இத்தகைய பழங்களை உண்ணும்போது கைநழுவித் தவறுதலாகக் கீழே ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஆறவைத்திருக்கும் வெல்லப்பாகில் விழுந்துவிட்டால் என்ன ஆகும்?. வெல்லப்பாகானது பால்போல அதிக நீர்த்தன்மை உடையது அல்ல என்பதால் வெளியே தெறிக்காது. மாறாக விழுந்த பழம் வெல்லப்பாகிற்குள் மூழ்கிவிடும். இப்படி மூழ்கிய பழத்தை வெளியே எடுத்தால் அந்தப் பழத்தின் மேல்புறம் முழுவதும் வெல்லப்பாகு ஒட்டியிருக்கும். இப்போது இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் அதன் சுவையைச் சொல்லவும் வேண்டுமோ?. வெல்லப்பாகின் சுவையுடன் பழத்தின் சுவையும் சேர்ந்து நாக்கிற்கு ஒரு இனிய விருந்து அல்லவா கிடைக்கும்!. அத்துடன் வெல்லப்பாகில் புளியம்பழம் விழுந்தாலும் சரி ஆரஞ்சுப் பழச்சுளை விழுந்தாலும் சரி அது வெல்லப்பாகினை பாதிக்காது.

இந்த வெல்லப்பாகு நீண்ட நாள் வரையிலும் கெடாது என்பதால் இந்தப் பாகிற்குள் இனிப்பான பழங்களைப் பலநாட்கள் வரை ஊறவைத்தும் உண்ணலாம். அவ்வாறு உண்டால் பழங்கள் மிக்க இனிப்புச் சுவையுடன் இருக்கும். வெல்லப்பாகின் இத் தன்மையினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டதே இந்தப் பழமொழி. ஏற்கெனவே இனிப்பாக இருக்கும் பழத்தின் சுவையினை வெல்லப் பாகானது மேலும் கூட்டுவதால் அதிக மகிழ்ச்சியையும் மிக்க நன்மையையும் குறிப்பதற்கு இப் பழமொழி ஒரு உவமையாகப் பயன்படலாயிற்று.

சரியான பழமொழி:

பழம் நழுவிப் பாகில் விழுந்தது போல
....................................வாழ்க தமிழ்!...........................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.