வியாழன், 14 அக்டோபர், 2010

ஒன்பதாம் தொடை

முன்னுரை:

'அகர முதல எழுத்தெல்லாம்' என்பது ஐயன் வள்ளுவன் வாக்கு. இந்த 'அ'கரம் முதல் 'ன'கரம் ஈறாக உள்ள எழுத்துக்கள் தம்முள் பல்வகையானும் புணர்ந்து உருவாக்கும் சொற்களோ கணக்கில் அடங்காது. எழுத்துக்கள் புணர்ந்து சொற்களைப் பிறப்பிக்க சொற்கள் புணர்ந்து சொற்றொடர்கள் உருவாகின்றன. இத் தொடர்களை செய்யுளில் பயன்படுத்தும்போது ஓசை இனிமைக்காகவும் பொருள் நயத்திற்காகவும் வகுக்கப்பட்ட ஒரு இலக்கண வகையே தொடை ஆகும். சிறுசிறு பூக்களைக் கொண்டு அலங்காரமாக ஒரு மாலை தொடுத்தல் போல சொற்களை ஒரு முறைப்படி தொடுத்து பா இயற்றும்போது பாடலுக்கு அது மெருகூட்டுகிறது. இத் தொடைகள் எண்வகைப்படும் என்று இலக்கண விளக்கம் கூறுகிறது. ஆய்வு முயற்சியால் ஒன்பதாவதாக ஒரு தொடையும் இலக்கியங்களில் பரவலாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது தெரிய வந்தது. அது என்ன தொடை என்பதைப் பற்றி விளக்கமாகக் கூறுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

தொடை வகைகள்:

கீழ்க்காணும் நூற்பா தொடை வகைகளைப் பற்றிக் கூறுகிறது.

' அடிஇணை பொழிப்புஒரூஉக் கூழை மேல்கீழ்க்
கதுவாய் முற்றுஎன எட்டொடும் மோனை
இயைபே எதுகை முரணே அளபே
எனஐந்து உறழ எண்ணைந்து ஆகி
அடிஅந் தாதி இரட்டைச் செந்தொடை
எனஇம் மூன்றும் இயையத் தொடையும்
விகற்பமும் எண்ணைந்து ஒருமூன்று என்ப.'

- இலக்கண விளக்கம் -தொ.வி.218, வைத்தியநாத தேசிகர்.

மேற்காணும் நூற்பாவின்படி எண்வகைத் தொடைகள்: மோனை, இயைபு, எதுகை, முரண், அளபெடை (அளபு), அந்தாதி, இரட்டை மற்றும் செந்தொடை ஆகும். அடி, இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேல்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என்ற எட்டும் தொடை விகற்பங்கள் ஆகும். எண்வகைத் தொடைகளில் மோனை, இயைபு, எதுகை மற்றும் அளபெடைத் தொடைகள் சொல்லில் உள்ள எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்படுபவை. முரண் தொடை, அந்தாதித் தொடை மற்றும் இரட்டைத் தொடைகள் சொற்களை அடிப்படையாகக் கொண்டு இயற்றப் படுபவை. ஒன்பதாவதாக வருகின்ற இப் புதிய தொடையும் சொற்களின் அடிப்படையில் அமைக்கப் படுவதே ஆகும்.

சரவெண் தொடை:

ஒன்பதாவதாக வருகின்ற இப் புதிய தொடையின் பெயர் சரவெண் தொடை ஆகும். இதன் விளக்கத்தைக் கீழே காணலாம்.

சரவெண் = சரம் + எண்
                    = தொடுக்கப்படுவது + எண்
                    = தொடுக்கப்படும் எண்

ஒன்று, இரண்டு, மூன்று முதலான எண்ணுப் பெயர்களைக் கொண்டு அடிதோறும் விகற்பத்துடனோ விகற்பமின்றியோ அமைக்கப்படும் தொடை சரவெண் தொடை ஆகும். சான்றாக கீழ்க்காணும் பாடல் வரியைக் காணலாம்.

இருதலைப் புள்ளின் ஓருயிர் அம்மே - அகநா-13

இவ் வரியில் உள்ள 'இருதலை' என்ற சொல்லிலும் 'ஓருயிர்' என்ற சொல்லிலும் எண்ணுப் பெயர்கள் (இரண்டு, ஒன்று) பயின்று வந்துள்ளதால் இது சரவெண் தொடைக்குக் காட்டாயிற்று. இனி இத் தொடையின் இலக்கியப் பயன்பாடுகள் குறித்துக் காணலாம்.

சரவெண் தொடையின் பயன்பாடுகள்:

சரவெண் தொடையானது சங்க இலக்கியங்களிலும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும் பரவலாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. சான்றாக திருக்குறளில் இத் தொடை பயின்று வரும் பாடல்கள் சில கொடுக்கப் பட்டுள்ளன.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து - குறள் - 126

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. - குறள் - 337

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. - குறள் - 398

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. - குறள் - 932

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. - குறள் - 1091

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது. - குறள் -1196

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. - குறள் - 1269

சங்க இலக்கியங்களில் இத் தொடை பயிலும் சில இடங்களைக் கீழே காணலாம்.

இருதலைப் புள்ளின் ஓர்உயிரம்மே - அகநா-13 (ஒன்று, இரண்டு)

எழுவர் நல்வலம் அடங்க, ஒருபகல் - அகநா - 37

இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால் - அகநா- 53

ஒருநாள் ஒருபகற் பெறினும், வழிநாள் - அகநா -128

'இருபெரு வேந்தர் மாறுகொள் வியன்களத்து
ஒருபடை கொண்டு, வருபடை பெயர்க்கும் - அகநா -174

மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு - அகநா - 283

இருதலைக் கொள்ளி இடைநின்று வருந்தி
ஒருதலைப் படாஅ உறவி போன்றனம் - அகநா - 340

அறுசில் கால அஞ்சிறைத் தும்பி
நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும் - ஐங்கு - 20

ஒருநாள் நம்மில் வந்ததற்கு எழுநாள் - ஐங்கு - 32

ஒருபகல் எல்லாம் உருத்து எழுந்து ஆறி
'இருவர் கண் குற்றமும் இல்லையால் என்று - கலி - 39

குறுந்தொகையில் 24 ஆம் பாடலில் இத் தொடை பயின்று வந்துள்ளதை அறியாமல் வேறுவிதமான விளக்கம் கொடுத்துள்ளனர் உரையாசிரியர்கள்.

கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
என்னை யின்றியுங் கழிவது கொல்லோ
ஆற்றயல் எழுந்த வெண்கோட் டதவத்
தெழுகளிறு மிதித்த ஒருபழம் போலக்
குழையக் கொடியோர் நாவே
காதலர் அகலக் கல்லென் றவ்வே.  -குறு.- 24


மேற்பாடலில் நான்காவது வரியில் சரவெண் தொடை பயின்று வந்துள்ளது. இதன்படி இப் பாடலின் புதிய விளக்கமானது ' கருநிறக் காலுடைய வேப்ப மரம் பூக்கின்ற இந்த இளவேனில் காலம் என் தலைவன் இன்றியே கழியுமோ?. பாதையின் ஓரமாக வளர்ந்த வெண்ணிற கிளைகளுடைய அத்திமரத்தில் இருந்து உதிர்ந்த ஒரு அத்திப் பழத்தை ஏழு யானைகள் மிதித்தால் அப் பழத்தின் நிலை என்னவாகுமோ அது போலக் குழைந்து கெடுக அலர் தூற்றி என் காதலரை என்னிடமிருந்து பிரித்த கொடியவரின் நாக்குகள்.' 

காதலியின் சாபம் கடுமையாக உள்ளதல்லவா?. குறுந்தொகையில் இருந்து மேலும் சில சான்றுகள் கீழே தரப்பட்டுள்ளன.

இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே. - குறு.-57

ஏழூர்ப் பொதுவினைக் கோரூர் யாத்த - குறு- 172

திருமுருகாற்றுப்படையிலும் பரிபாடலிலும் இத் தொடை சிறப்பாக பயின்று வந்துள்ளது.

இருபே ருருவின் ஒருபே ரியாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி - திருமு.-57-58

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல,
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் - திருமு.-177-183

முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்!
எழு கையாள! எண் கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!
பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்!
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்! -              பரி.-3

இவை தவிர இன்னும் பல இலக்கியங்களில் இத் தொடை பயின்று வந்துள்ளது. கட்டுரையின் விரிவஞ்சி அவை இங்கே கூறப்படவில்லை.

முடிவுரை:

சரவெண் தொடையைச் சேர்த்து செய்யுள் தொடைகள் இப்போது ஒன்பதாகின்றன. இன்னும் இதுபோல அறியப்படாத செய்யுள் தொடைகள் இருக்கலாம். சரியான ஆய்வு மேற்கொண்டால் நம் முன்னோர்கள் பயன்படுத்திய புதிய யாப்பு முறைகளைக் கண்டறிந்து உலகிற்குத் தெரிவிக்கலாம்.

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

பந்திக்கு முந்து

முன்னுரை:

' பந்திக்கு முந்து படைக்குப் பிந்து ' என்றொரு பழமொழி தமிழ்நாட்டில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப் பழமொழிக்குத் தற்போது வழங்கப்படும் பல்வேறு விளக்கங்களைப் பற்றியும் அவ் விளக்கங்கள் எந்த அளவிற்குப் பொருத்தமாக உள்ளன என்பதைப் பற்றியும் இப் பழமொழிக்கு இன்னொரு கோணத்தில் ஒரு புதிய விளக்கத்தையும் இக் கட்டுரையில் காணலாம்.

தற்போதைய விளக்கங்கள்:

இப் பழமொழிக்கு மூன்று விதமான விளக்கங்கள் இதுவரை அறியப்பட்டுள்ளன. அவை அனைத்தும் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

விளக்கம் 1: 'பந்திக்கு முந்து' என்றால் உணவு இடப்படும் பந்தியில் முதல் ஆளாகச் சென்று உண்ண வேண்டும். இல்லையேல் உணவு முழுமையாகவும் சுவையுடனும் கிடைப்பது அரிது. 'படைக்குப் பிந்து' என்றால் போருக்குப் போகும்போது படையில் கடைசி ஆளாகச் சேர வேண்டும். இல்லையேல் போரில் இறந்துபடுவது உறுதி.

விளக்கம் 2: இப் பழமொழியை ' பந்திக்கு முந்தும் படைக்குப் பிந்தும்'  என்று சற்று மாற்றி இதனை விடுகதையாகக் கொள்கின்றனர். இவ் விடுகதையின் விடை 'வலது கை' ஆகும். இது எவ்வாறெனில், வலது கையானது உணவு உண்ணும்போது முன்னால் செல்லும்; வில் மற்றும் வாள் படையை இயக்கும்போது பின்னால் செல்லும்.

விளக்கம் 3: இப் பழமொழியை 'பந்திக்கு முன் தீ படைக்குப் பின் தீ' என சற்றே மாற்றிக் கொண்டு பின்வருமாறு விளக்கம் கூறுகின்றனர்: பந்தியில் உணவு இடுவதற்கு முன்னால் தீயிட்டு உணவு சமைப்பர். படைகொண்டு போரில் வென்ற பின்னர் எதிரியின் நாட்டை தீயிட்டு அழிப்பர்.

இப் பழமொழி விளக்கங்கள் சரியா?

மேலே நாம் கண்ட பழமொழி விளக்கங்கள் எந்த அளவிற்கு பொருந்தி வருகின்றன என்பதை இங்கே காணலாம்.

முதல் விளக்கத்தில் உணவு உண்பதற்கு 'முதலிடமும்' போருக்குச் செல்வதற்கு 'கடைசியிடமும்' தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இக் கருத்து சிறிதேனும் பொருந்துமா என்றால் பொருந்தாது. ஏனென்றால் பழமொழிகளின் நோக்கமே இளைய தலைமுறையினருக்கு நல்ல வாழ்வியல் கருத்துக்களைத் தெரிவித்து நல்வழிப் படுத்தவேண்டும் என்பது தான். ஆனால் இவ் விளக்கத்தில் கூறப்பட்டுள்ள கருத்தோ ஒருவனை சாப்பாட்டு ராமனாகவும் தொடை நடுங்கியாகவும் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துவதாக அமைகிறது. இப்படிப்பட்ட அறிவுரைகளை மக்கள் பின்பற்றினால் விளைவு என்னாகும்?. நாட்டுப்பற்று பின்தள்ளப்பட்டு சோற்றுப்பற்று முன்வந்து விடும். பழமொழியின் நோக்கத்திற்கு மாறாக இக் கருத்து அமைவதால் இக் கருத்து தள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

இரண்டாம் விளக்கத்தில் இது பழமொழியே இல்லை என்றும் இது ஒரு விடுகதை என்றும் கூறப்பட்டுள்ளது. இதை ஒரு விடுகதையாகவே கொண்டாலும் இதற்கான விடையாக 'வலது கை' யினைக் கொள்வது பொருத்தமாகத் தோன்றவில்லை. ஏனென்றால் இடதுகை வலதுகை என்பது அவரவர் பயன்பாட்டைப் பொறுத்தது. சிலர் வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள். சிலர் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள். இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் அனைத்து வேலைகளுக்கும் (உணவு உண்பது உள்பட) இடது கையினையே பயன்படுத்துகின்றனர்.  ஏன் வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள் கூட சில நேரங்களில் நீர், தேநீர், பால் போன்ற நீர்ம உணவுகள் பருகும்போதோ சிறுசிறு நொறுக்குத் தீனிகளை உண்ணும்போதோ இடதுகையினை பயன்படுத்துகின்றனர். பந்தியிலும் உணவு வகைகள் இரண்டு புறங்களிலும் பரிமாறப் பட்டிருக்கும். வாழைப்பழத்தை பெரும்பாலும் இடப்புறமாகவே வைப்பர். இப் பழத்தை இடதுகையால் எடுத்து வலது கையால் உரித்து உண்பதை நடைமுறையில் பார்க்கலாம். எனவே 'பந்திக்கு முந்துவது வலதுகையே' என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வது விடுகதைக்கு அழகல்ல என்றே தோன்றுகிறது.

மூன்றாவது விளக்கம் மிக மிக இட்டுக் கட்டுப்பட்ட ஒரு விளக்கமாக உள்ளது. பந்திக்கு முன்னால் தீ என்றால் அங்கே யாராவது உட்கார்ந்து சாப்பிடுவார்களா?. படைக்குப் பின்னால் தீ என்றால் படை பயந்தல்லவா ஓடும்?. நேரடியாகத் தோன்றும் இப் பொருள்களை விடுத்து பந்தியில் சோறு இடுவதற்கு முன்னால் தீயிட்டுச் சமைப்பர் என்பதும் படையில் வெற்றி பெற்ற பின்னர் எதிரி நாட்டைத் தீயிட்டுப் பொசுக்குவர் என்பதும் தேவையற்ற மிகையான கற்பனையாகத் தோன்றுகிறது. மேலும் 'முந்து' பிந்து' என்ற சொல் வடிவங்களே பழமொழி வழக்கில் உள்ளன. இவற்றை 'முன் தீ' என்றும் 'பின் தீ' என்றும் திரித்துக் கொண்டு பலவாறாகப் பொருள் கொள்வது வேடிக்கையாக இருப்பதுடன் பழமொழிகளுக்குரிய சீரிய நோக்கமின்றி இருப்பதால் இவ் விளக்கம் தள்ளப்பட வேண்டிய ஒன்றே ஆகும்.

இன்னொரு கோணம்:

இப் பழமொழியை இன்னொரு கோணத்தில் ஆராய்ந்த போது புதியதோர் விளக்கம் கிடைத்தது. இக் கோணத்தின்படி இப் பழமொழியின் வடிவம் கீழ்க்கண்டவாறு இருக்கவேண்டும்.

பந்திக்க முந்து படைக்கப் பிந்து

இங்கே பந்தித்தல் என்றால் திருமணம் செய்தலைக் குறிக்கும். படைத்தல் என்றால் குழந்தை பெற்றுக் கொள்ளுதலைக் குறிக்கும். ஆக இப் பழமொழியின் இன்னொரு கோண விளக்கமானது ' திருமணம் செய்துகொள்வதை தள்ளிப் போடக்கூடாது. ஆனால் குழந்தை பேற்றினை சற்று தள்ளிப் போடவேண்டும்.' என்பதாகும்.

இப் புதிய விளக்கம் சரியா?

மேலே கண்ட புதிய விளக்கமானது எந்த அளவிற்குப் பொருத்தமானது என்று இங்கே பார்க்கலாம்.

பந்தித்தல் என்ற சொல்லுக்கு 'கட்டுதல்', 'கூடுதல்' என்ற பொருட்களை சென்னைத் தமிழ் இணையப் பேரகராதி கூறுகிறது. கட்டுதல் என்ற பொதுவான பொருள் விரிவாக்கமாக இங்கே தாலி கட்டுதலைக் குறிப்பதாகவும் கூடுதல் என்பது மணவாழ்வில் கூடுதலைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். ஆக பந்தித்தல் என்ற சொல்லிற்கு பந்தத்தில் (உறவில்) ஈடுபடுதல் அதாவது திருமணம் செய்தல் என்ற பொருளைக் கொள்வது சாலவும் பொருந்தக் கூடிய ஒன்றே. அடுத்து, படைத்தல் என்பதற்கு 'உயிர்களைப் படைத்தல்' அதாவது 'குழந்தை பெற்றுக் கொள்ளுதலைப்' பொருளாகக் கொள்வதும் பொருந்தக் கூடிய ஒன்றேயாகும். இனி இப் பழமொழி உருவாக்கப் பட்டதன் நோக்கம் என்ன என்று காணலாம்.

இல்லற வாழ்க்கையின் இன்றியமையாமையையும் அதை எவ்வாறு முறையோடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் இளைய தலைமுறையினருக்கு பெரியவர்கள் சொல்லும் அறிவுரையாக இப் பழமொழி அமைந்துள்ள பாங்கு முதலில் கவனிக்கத் தக்கதாகும். இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்களும் இளைஞிகளும் காலாகாலத்தில் திருமணம் செய்துகொள்வதில்லை. மேற்படிப்பு, வேலை, குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் பருவ வயதுக்கு வந்த பின்னரும் திருமணம் செய்து கொள்ளாமல் (அ) கொள்ள முடியாமல் இருந்து விடுகின்றனர். இதன் பக்க விளைவாக சமுதாயத்தில் பாலியல் சிக்கல்கள் உள்பட பல தீய பழக்க வழக்கங்களுக்கு இவர்கள் ஆளாக நேரிடுவதை நாம் காண்கிறோம். மேலும் இளமையில் நுகர வேண்டிய இல்லற இன்பத்தையும் இவர்கள் இழந்து விடுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டே பெரியவர்கள் 'திருமணத்தைத் தள்ளிப் போடவேண்டாம்' என்று கூறியுள்ளனர்.

மேலும் திருமணம் செய்த அனைவரும் உடனுக்குடன் குழந்தை பெற்றுக் கொண்டால் மக்கள் தொகை மிகவும் பெருகி விடும். மக்கள்தொகை பெருக்கத்தினால் வரக்கூடிய சமுதாயச் சிக்கல்கள் பற்றி நாம் நன்கு அறிவோம். அதுமட்டுமின்றி குழந்தை பிறந்ததும் மனைவியின் கவனம் முழுவதும் குழந்தை வளர்ப்பில் திரும்பி விடுகிறது. குழந்தை பெற்ற தாயின் உடலில் பல மாற்றங்கள் உண்டாவதால் அவருக்கு இல்லற இன்பத்தில் நாட்டம் குறைகிறது. இதனால் கணவன்-மனைவியிடையே உள்ள நெருக்கமானது தளர ஆரம்பித்து அவர்களுக்கிடையேயான இல்லற இன்பத்திலும் குறுக்கீடு நேர்கிறது. இதனால் அவர்களுக்கிடையில் புரிதல் குறைய ஆரம்பித்து பிணக்குகள் தோன்றத் துவங்குகின்றன. இதுவே பின்னாளில் மணமுறிவு வரை கொண்டுசென்று விடுகிறது. இதை நாம் பல குடும்பங்களில் நடைமுறையில் காணலாம். குழந்தை பெற்றுக் கொள்வதை 2 லிருந்து 3 ஆண்டுகள் வரை தள்ளிப் போடுவதால் மக்கள்தொகையானது ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் வருவதுடன் கணவன்-மனைவியிடையே புரிதல் ஏற்பட்டு நல்ல இல்வாழ்க்கை அமைவது சாத்தியமாகிறது. இதைக் கருத்தில் கொண்டே பெரியவர்கள் 'குழந்தை பெற்றுக் கொள்வதை சற்று தள்ளிப் போடுங்கள்' என்று கூறியுள்ளனர்.

முடிவுரை:

பெருகி வரும் மக்கள்தொகை ஒவ்வொரு நாட்டிற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது. நம் நாட்டில் மகாராட்டிர மாநிலம் தற்போது ஒரு புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது. குழந்தை பிறப்பை 2 ஆண்டுகள் வரை தள்ளிப் போடுவோருக்கு ரூ.5000 பரிசளிப்பதாக அம் மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் நமது பெரியவர்கள் குழந்தை பெறுவதைத் தள்ளிப் போடுவதின் இன்றியமையாமையை உணர்ந்து அக் காலத்திலேயே இப் பழமொழியின் வாயிலாகக் கூறிச் சென்றுள்ளனர். இனியேனும் இப் பழமொழியை நம் மக்கள் பின்பற்றினால் நாடு வளம்பெறும்.
......................................................................................................