செவ்வாய், 27 செப்டம்பர், 2011

நான்கு கடவுள் - பகுதி 1 (நிலமும் தெய்வமும்)


முன்னுரை:

தொல்காப்பிய பொருளதிகாரத்தில் அகத்திணை இயலில் கூறப்படும் நால்வகைக் கடவுளரை பற்றிய விரிவான செய்திகளை ஆய்வுசெய்வதே இக் கட்டுரையின் நோக்கம் ஆகும். இருந்தாலும் அவற்றுடன் தொடர்புடைய பல வரலாற்று உண்மைகளையும் இங்கே காணப் போகிறோம். முதலில் நால்வகைக் கடவுளரைப் பற்றிக் கூறும் தொல்காப்பியப் பாடலைக் காணலாம்.

மாயோன் மேய கானுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமதில் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென
சொல்லிய முறையான்
சொல்லவும் படுமே.
- தொல்காப்பியம்-பொருளதிகாரம்-
அகத்திணை இயல்-பாடல் எண்:5

(பி.கு: இப்பாடலில் வரும் கானுறை, பெருமதில் என்ற சொற்கள் நமது 'மாயோன் மேய' என்ற ஆய்வுக் கட்டுரையின் படி திருத்தம் செய்யப்பட்டுள்ளது.)

இப் பாடலில் மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என்ற நால்வகைக் கடவுளரைக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். இந்த நால்வகைக் கடவுளரும் யார் யார்? என்பதை ஆராய்வதே இக் கட்டுரையின் முதல் நோக்கமாகும்.

தற்போதைய விளக்கம்:

மாயோன் என்றால் மாமை (இளங்கருப்பு) நிறமுள்ளவன் என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன. வண்ணத்தின் அடிப்படையில் இச்சொல் மாமை நிறங்கொண்ட கடவுளாகிய திருமாலைக் குறிக்கிறது. பலவகையான பூக்களின் கலவையான மணத்தை எப்போதும் உடையதாயிருக்கும் காடு மற்றும் காடு சேர்ந்த நிலங்களை ஆளும் தெய்வமாகத் திருமால் கூறப்படுகிறார்.

சேயோன் என்றால் செம்மை (இளஞ்சிவப்பு) நிறமுள்ளவன் என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன. வண்ணத்தின் அடிப்படையில் இச்சொல் செம்மை நிறங்கொண்ட கடவுளாகிய (செவ்வேள்) முருகவேளைக் குறிக்கிறது. மேகங்கள் படிந்திருக்கும் மலை மற்றும் மலை சார்ந்த இடங்களை ஆளும் தெய்வமாக முருகவேள் கூறப்படுகிறார்.

வேந்தன் என்றால் இந்திரன் (தேவர் கோமான்) என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன. இனிய சுவை உடைய ஆற்றுநீர், ஊற்றுநீர்  போன்ற நீர்வளங்கள் நிறைந்த வயல் மற்றும் வயல் சார்ந்த இடங்களை ஆளும் தெய்வமாக இந்திரன் கூறப்படுகிறார்.

வருணன் என்றால் மழைக்கடவுள் என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன. பெரிய மணற்பரப்பையும் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் அலைகளையும் உடைய கடல்  மற்றும் கடல் சார்ந்த நிலங்களை ஆளும் தெய்வமாக வருணன் கூறப்படுகிறார்.

இயற்கையே கடவுள்:

தொல்காப்பியத்தில் வரும் மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என்ற சொற்களில் ஆண்பாலுக்குரிய 'அன்' விகுதி சேர்ந்து வருவதால் அவை பொதுவாக ஆண்மக்களை அல்லது ஆண்பால் கடவுளரைக் குறிப்பது போல ஒரு தோற்றம் உருவாகிறது. இதுவே பின்னாளில் பலப்பல கற்பனைகளுக்கு இடமளித்து ஆண்மக்களின் உருவம் கொண்ட கடவுளாக எண்ணுவதற்கு அடிகோலி இருக்கிறது. உண்மையில் இந்த நான்கு சொற்களும் எதைக் குறிக்கிறது?

உண்மையில் இந்த நான்கு சொற்களும் ஆண்மக்களை அல்லாமல் இயற்கைப் பொருட்களையே குறிக்கிறது. ஆம் இயற்கை வழிபாடே பழந்தமிழர்களின் முதன்மை வழிபாடாகும். தன்னைச் சுற்றியுள்ள இயற்கையை உற்றுநோக்குவதும் அதன் சிறப்பைப் போற்றிப்பாடி மகிழ்வதுமே பழந்தமிழரின் வழிபாடாகும். தமக்கு உதவியாய் இருந்து தம்மைப் பாதுகாத்து வருகின்ற இயற்கையினை தமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவன் நினைவுகூற மறக்கவில்லை. மகிழ்ச்சி, வீரம், துயரம், அழுகை போன்ற எந்த உணர்ச்சி நிலையிலும் அவன் இயற்கையைப் பற்றி பாடுவதற்கு மறக்கவில்லை. நமது சங்க இலக்கியங்களே இதற்குச் சான்றாக இருக்கின்றன.

மழை:

இயற்கையின் பல்வேறு நிகழ்வுகளில் 'மழை' ஒரு மிகமிக இன்றியமையாத நிகழ்வாகும். நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப மழையே உலகின் தன்மையினை நிர்ணயிக்கிறது. மாந்தரின் பண்புகளையும் அரசனின் ஆட்சியினையும் மாற்றியமைக்க வல்லது இந்த மழை. பயிர்களின் பிறப்பிற்கு உறுதுணையாய் இருப்பது மட்டுமின்றி பல உயிர்களின் வாழ்விற்கும் ஆதாரமாய் அமைந்திருப்பது இம் மழையாகும்.

இம் மழையுடன் தொடர்புடையவை நான்கு. அவை கடல், கதிரவன், கார்மேகம் மற்றும்  குறிஞ்சி (மலை).

கதிரவனின் வெப்பத்தால் கடல் நீர் ஆவியாகி கார்மேகங்கள் உருவாகின்றன. விண்ணில் தவழும் இம் மேகங்கள் மலைகளின் மேல் தவழ்ந்து விளையாடும் அழகைப் பாடாத புலவர் இல்லை எனலாம். பின்னர் இம் மேகங்கள் மழையாய்ப் பொழிந்து மலைகளையும் மண்ணையும் குளிரச் செய்கின்றன.

நான்கு கடவுள்:

இந்த மழை நிகழ்ச்சியுடன் தொடர்புடைய நால்வகை இயற்கைப் பொருட்களையே பழந்தமிழர்கள் போற்றிப்பாடி மகிழ்ந்து வந்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்ததக்கது. ஆம், பழந்தமிழர்கள் வழிபட்டு வந்த இந்த நால்வகை இயற்கைப் பொருட்கள் இந்த கடல், கதிரவன், கார்மேகம் மற்றும் மலையே ஆகும்.

மழை தரும் மேகங்கள் கருநிறமுடையவை. இந்த மேகங்களையே மாயோன் என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.
மேகங்கள் உருவாகக் காரணமாய் இருப்பது கதிரவன். இக் கதிரவனையே வேந்தன் என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.
மேகங்களின் பிறப்பிற்கு அடிப்படையாய் இருப்பது கடல். இக் கடலையே வருணன் என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.
மழையின் பயனை நுகர்வது மலை அதாவது நிலம் ஆகும். இந்த நிலத்தையே சேயோன் என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.

முருகன் வள்ளித் திருமணம்:.

என்றால் இந்த மழை என்பது யாரைக் குறிக்கிறது?. அது தான் வள்ளி. பல்வேறு வளங்களைத் தருவதால் மழைக்கு வள்ளி (வள்ளன்மையுடையவள்) என்று பெயர். வாரி வழங்குவதில் மாரிக்கு நிகர் உண்டா?. கைம்மாறு கருதாமல் உலக உயிர்கள் அனைத்திற்கும் பயன் தருவது மழை. பாரிவள்ளலைப் போற்றும் ஒரு புலவர் அவனை மாரியுடன் (மழையுடன்) ஒப்பிட்டுக் கூறுகிறார்.

பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவர் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே.  - புறநானூறு:

இந்த மழைநீர் பூமியில் விழும் முதல் இடம் மலையே ஆகும். மலை என்பதும் ஒருவகை நிலமே. பொதுவாக மலைகளில் உள்ள மண் செம்மண்ணாகத் தான் இருக்கும். இந்த செம்மண் நிலமானது மழைநீருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையே முருகு புணர்ந்து இயன்ற வள்ளி (நற்றிணை: 82) என்னும் தொடரால் குறிப்பிடப்படுகிறது. மண்ணிற்கு பல நிறங்கள் உண்டென்றாலும் செந்நிறமே மண்ணுக்குரிய பொதுவான நிறம். இந்த செம்மண் நிலத்தைத்தான் செவ்வேள் என்று கூறுவர். வேள் என்றால் மண், நிலம் என்ற பொருளும் உண்டு. வேளாண்மை என்பது மண்ணை ஆளுதல் என்ற பொருளில் விவசாயத்தைக் குறிப்பதாகும்.  இனி,

மங்குல் (மேகம்) ஆகிய திருமால் மாமனாய் இருந்து
மழை ஆகிய வள்ளி மகளை
மலை ஆகிய முருகனுக்கு

மணம் செய்விப்பதே மழை நிகழ்வாகும் என்றால் அது சாலப் பொருத்தமாய் உள்ளது அல்லவா?

சரி, திருமணம் என்றால் சாட்சிகள் அதாவது பார்வையாளர்கள் இல்லாமலா?. குறைந்தது இருவராவது வேண்டுமே. அவ்வகையில் இத் திருமணத்திலும் இரண்டு சாட்சிகள் உண்டு. ஒருவர் சூரியன். இவர் பூமியாகிய முருகவேளைத் தோற்றுவித்த தந்தை. இன்னொருவர் சந்திரன். ஆகமொத்தம், சூரிய சந்திரர் சாட்சியாக இத் திருமணம் இனிதே நடைபெறுகிறது.

தொல்காப்பியத்தில் வள்ளி:

மழை என்ற பொருளில் வள்ளி என்ற சொல்லை தொல்காப்பியரும் பயன்படுத்தியுள்ளார்.

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. (தொல்.புற - 33)

இதில் வரும் வள்ளி என்பது மழையினைக் குறிக்கும். கந்தழி என்பது பற்றறுத்த தன்மையினைக் குறிக்கும். கொடிநிலை என்பது கொடிபோல உயர்ந்த நிலையில் பறந்தவாறு இறைவனின் புகழை பறைசாற்றிக் கொண்டிருக்கும் அறத்தைக் குறிக்கும்.

தொல்காப்பியர் கூற்றுப்படி, கடவுள் வாழ்த்தினை அடுத்து அறமும், அதனையடுத்து பற்றின்மையும், அதனையடுத்து மழையின் சிறப்பும் பாடப்பெற வேண்டும். ஏனென்றால் இறைவனுக்கு மிக அணுக்கமாக இருப்பது அறம் தானே. அதன்படி திருக்குறளில் கடவுள் வாழ்த்தை அடுத்து அறன் வலியுறுத்தலும், அதையடுத்து நீத்தார் பெருமையும் அதையடுத்து வான்சிறப்பும் வந்திருக்க வேண்டும். ஆனால் இன்று நாம் காணும் திருக்குறளில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார்பெருமை, அறன் வலியுறுத்தல் என்று முறை வைக்கப்பட்டுள்ளது. அதாவது கடவுளுக்கு அடுத்த படியாக மழை வைக்கப்பட்டுள்ளது. இம் முறைவைப்பினை வள்ளுவர் தான் செய்தாரா அல்லது பின்னால் வந்த உரையாசிரியர்கள் செய்தனரா எனத் தெரியவில்லை.

ஆனால் வள்ளுவரே இந்த முறை மாற்றத்தினை செய்திருக்கலாமோ என்று எண்ணும் வகையில் ஒரு குறள் இருக்கிறது.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.  - குறள்: 19.

அறச்செயல்களான தானமும் தவமும் மழை இல்லையேல் இவ் உலகில் நிலைபெறாது என்கிறார் வள்ளுவர். இது உண்மைதான். ஏனென்றால் மழை இல்லையேல் உலகில் உணவுவளம் இல்லை. உணவு இல்லையேல் மனிதப் பண்புகளே இல்லை. பசி வந்தால் பத்தும் பறந்து போவதைப்போல மனிதன் மனிதப்பண்பினையே மறந்து உணவுக்காக உயிர் வாழ்வதற்காக எதையும் செய்யத் துணிவான். இதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். ஆகவே அறத்தைவிட இன்றியமையாதது மழை என்றால் அது மிகையாகாது.

நிலமும் தெய்வமும்:

காடும் காடுசார்ந்த இடமுமாகிய முல்லைநிலத்திற்குத் தெய்வம் மாயோன் என்றார் தொல்காப்பியர். அதைப்போல மலையும் மலைசார்ந்த இடமாகிய குறிஞ்சி நிலத்திற்குத் தெய்வம் சேயோன் என்றார். இனிய நீர்வளங்களை உடைய வயலும் வயல் சார்ந்த மருத நிலத்திற்குத் தெய்வம் வேந்தன் என்றும் கடலும் கடல்சார்ந்த நெய்தல் நிலத்திற்குத் தெய்வம் வருணன் என்றும் கூறுகிறார். இந்த நிலங்களுக்கும் தெய்வங்களுக்கும் என்ன தொடர்பு? எதன் அடிப்படையில் இன்ன நிலத்திற்கு இன்ன தெய்வம் என்று வகுத்தனர் பெரியோர்?. இதைப் பற்றி இங்கே காணலாம்.

முல்லை நிலத்தின் மக்கள் இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் ஆகியோர். இவர்களின் முதன்மைத் தொழில் ஆடு, மாடுகளை மேய்த்தல் ஆகும். காலையில் மேய்ப்புக்குச் செல்லும் ஆண்மக்கள் மாலையில் வீடு திரும்பும் வரை அவர்களது வரவுக்காக இல்லத்தில் காத்திருப்பர் அவரது இல்லத்தரசிகள். இந்த இருத்தல் (காத்திருத்தல்) நிமித்தம் மாலைநேரத்தில் (பிற்பகல் 6 மணி முதல் பிற்பகல் 10 மணி வரை) நிகழ்வதால் மாலைப் பொழுதே முல்லைக்குரிய சிறுபொழுதாக வைக்கப்பட்டது. முல்லைநிலத்துக் கால்நடைகளின் முதன்மை உணவான பசும்புற்கள் நன்கு செழித்து வளர்வது கார்காலமே ஆகும். அதனால் தான் முல்லைநிலத்துக்குரிய பெரும்பொழுதாக கார்காலத்தை வைத்தனர். இந்த கார்காலத்தில் தான் கரியநிற மேகங்கள் கூட்டம் கூட்டமாகத் திரிந்து கொண்டிருக்கும். எனவே தான் மேகத்தினை (மாயோன்) முல்லைநிலத்தின் தெய்வமாகக் கொண்டனர் பெரியோர்.

குறிஞ்சி நிலத்தின் மக்கள் குறவர், குறத்தியர் ஆவர். இவர்களின் முதன்மைத் தொழில் செந்தினைப் பயிர்செய்தல் ஆகும். தினைகளை மலைச்சாரல்களில் பயிரிட்டு வளர்க்கும்பொழுது இப் பயிர்களுக்கு யானைகள் போன்ற விலங்குகளால் தொல்லை ஏற்படும். பகல் நேரத்தில் பெற்றோரும் சகோதரர்களும் தினைப்புனங்களில் வேலைசெய்த அலுப்பினால் இரவில் தினைப்புனங்களில் காவல் இருக்க தமது கன்னிப் பெண்களை அவளது தோழிமாருடன் காவலுக்கு வைப்பர். என்னதான் காவல் இருந்தாலும் நள்ளிரவு நேரத்தில் கண்ணயராமல் இருக்க முடியாதே! தோழிகள் கண்ணுறங்க நள்ளிரவாகிய சாமத்தில் காதல் கொண்ட தலைவனும் தலைவியும் சந்திப்பர். குறிஞ்சி நிலத்துக்குரிய கூடல் நிமித்தம் இந்த நேரத்தில் நிகழ்வதால் யாமப்பொழுதே (பிற்பகல் 10 மணி முதல் முற்பகல் 2 மணி வரை) குறிஞ்சிக்குரிய சிறுபொழுதாக வரையறுக்கப்பட்டது. மேலும் ஆண்டுமுழுவதும் மலைச்சரிவுகளில் பயிர் செய்யமுடியாது. மழைக்காலத்தில் மழைநீரானது சரிவான நிலங்களில் விளைந்துள்ள பயிர்களை எளிதாக அடித்துச்சென்று விடும். மழை குறைந்த குளிர் காலம் மற்றும் முன்பனிக் காலங்களில் தான் தினைப்பயிர் செய்ய முடியும். எனவே இந்த காலங்கள் தான் குறிஞ்சிக்குரிய பெரும்பொழுதாகக் கொள்ளப்பட்டன. குறிஞ்சி நில மக்களின் முதன்மை உணவு செந்தினை மாவும் செந்தேனும் ஆகும். இவற்றை விளைவித்துத் தருகின்ற மலைநிலமும் ஒரு செம்மண் பூமியாவதால் செம்மண் நிலமான மலையினை (சேயோன்) குறிஞ்சி நிலத்தின் தெய்வமாகக் கொண்டனர் முன்னோர்.

மருத நிலத்தின் மக்கள் உழவர், உழத்தியர் ஆவர். இவர்களின் முதன்மைத் தொழில் நெல் சாகுபடி ஆகும். பொன்னி, சம்பா போன்ற பலவகையான அரிசி வகைகளை வயல்நிலங்களில் பயிரிட்டு வளர்ப்பர். ஓர் ஆண்டுக்கு முப்போகம் நெல் சாகுபடி செய்வர். எனவே மருத நிலத்திற்கு (ஆண்டு முழுவதும்) ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகக் கொள்ளப்பட்டன. மருத நிலத்துக்குரிய நிமித்தம் ஊடல் ஆகும். தலைவியை விட்டு பரத்தையரிடம் சென்று இரவு முழுவதும் கழித்த தலைவன் அதிகாலையில் (வைகறையில்) தனது இல்லம் திரும்புவான். வாசல் கதவைத் திறக்காமல் தலைவனுடன் சண்டை இடுவாள் தலைவி. இந்த ஊடல் நடைபெறுவது வைகறை என்பதால் வைகறையே (முற்பகல் 2 மணி முதல் முற்பகல் 6 மணி வரை)  மருதநிலத்தின் சிறுபொழுதாகக் கொள்ளப்பட்டது. நெல் சாகுபடிக்கு மழை மட்டும் இருந்தால் போதாது. அதை அறுவடை செய்ய வெயிலும் வேண்டும். மழைமேகங்களைத் தோற்றுவித்து மழைக்குக் காரணமாய் இருப்பதுடன் பயிர்கள் வளரவும் அறுவடை செய்யவும் தேவையான வெயிலும் வெப்பமும் தருவதால் கதிரவனே (வேந்தன்) மருத நிலத்துக்குரிய தெய்வமாகக் கொள்ளப்பட்டான்.

நெய்தல் நிலத்தின் மக்கள் நுளையர், நுளைச்சியர் ஆவர். இவர்களின் முதன்மைத் தொழில் கடலில் மீன் பிடித்தல் ஆகும். மீன்பிடித் தொழில் ஆண்டுமுழுவதும் நடைபெறுவதால் நெய்தல் நிலத்திற்கு ஓராண்டின் ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகக் கொள்ளப்பட்டன. பெற்றோரும் சகோதரர்களும் மீன்பிடிக்கச் சென்றுவிட கடற்கரை மணல் மேடுகளில் மீன்களை காயவைக்கும் வேலையில் தம் வீட்டுக் கன்னிப்பெண்களை அமர்த்தியிருப்பர். இச்சமயத்தில் அங்குவரும் தலைவன் தலைவியை சந்திப்பான். காதலில் மகிழ்ந்திருக்கும் பொழுது நேரம் போவதே தெரியாதே!. திடீரென்று அந்திசாயத் துவங்கிவிடும். கடலில் மீன்பிடிக்கச் சென்ற பரதவ மக்கள் அந்திசாயும் பொழுதாகிய எற்பாட்டில் தான் கரைக்குத் திரும்புவார்கள். இதனால் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்று விடுவான். பிரிந்து சென்ற தலைவனை நினைத்து இரங்கி (வருந்தி) இருப்பாள் தலைவி. இப்படி இரங்கல் நிமித்தம் நிகழ்கின்ற இந்த எற்பாடே (பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 6 மணி வரை) நெய்தல் நிலத்தின் சிறுபொழுதாக வரையறுக்கப்பட்டது. கடலை நம்பியே வாழ்ந்து வந்த நெய்தல்நில மக்கள் கடலையே (வருணன்) தெய்வமாகக் கொண்டனர்.

நில வைப்பு முறை:

தலைப்பில் கண்ட நூற்பாவில் முல்லைநிலத்தை முதலிலும் அதற்கடுத்து குறிஞ்சியும் அதனையடுத்து மருதமும் இறுதியாக நெய்தலையும் வைத்துப் பாடியுள்ளார் தொல்காப்பியர். இது ஏன் என்று காண்போம்.

பழந்தமிழர் வாழ்க்கை நெறியினை கற்பு, களவு என்று இரண்டாக வகுத்திருந்தனர். இதில் கற்பு எனப்படுவது பல்லோரறிய திருமணம் புரிந்து இல்லறத்தில் ஈடுபடுவது. களவு என்பது யாரும் அறியாமல் காதல் செய்வது. நால்வகை நிலங்களில் முல்லை நிலத்தில் மட்டுமே கற்புநெறி வாழ்க்கையைக் காட்டியுள்ளனர் சான்றோர். முல்லையில் ஏன் களவு நடைபெறவில்லை? காரணம் முல்லைநில மக்களின் வாழ்க்கை முறைதான். ஏனை நிலங்களைப் போலன்றி முல்லைநிலத்தில் ஆண்மக்கள் மட்டுமே ஆடு, மாடுகளை மேய்ப்பிற்கு ஓட்டிச் செல்வர். அவரது பெண்டிரும் பிள்ளைகளும் வீட்டில் இருந்துகொண்டு கன்றுக்குட்டிகளையும் ஆட்டுக் குட்டிகளையும் பராமரிப்பர். கன்னிப் பெண்களுடன் அவரது தாயாரும் மற்றோரும் எப்போதும் உடன் இருப்பதால் இங்கு களவில் சந்திக்க வாய்ப்பு அமைவதில்லை. இருந்தாலும் பெண்கள் தமது விருப்பப்படி கணவரைத் தேர்ந்தெடுக்க ஒரு வழிமுறையும் அவர்களிடத்தில் இருந்திருக்கிறது. அதுதான் ஏறு தழுவுதல் விளையாட்டு. இவ் விளையாட்டில் வெற்றிபெறும் காளையரையே பலர் முன்னிலையில் பெண்கள் மணந்து கொள்வர். ஆக முல்லை நிலத்தின் காதல் மற்ற நிலங்களின் காதலைப் போலன்றி பல்லோரறிய நிகழ்வது. எனவே இது களவாகாது. களவினை விட கற்பு உயர்ந்தது என்பதால் கற்புநெறியை பின்பற்றும் முல்லை நிலத்தை முதலில் வைத்தார் தொல்காப்பியர்.

இந்த முல்லைநிலத்திற்கு உரிய சிறுபொழுது மாலைப் பொழுதாகும். இந்த மாலைப் பொழுதை அடுத்து யாமமும் அதனையடுத்து வைகறையும் அதனையடுத்து காலை, பகல், எற்பாடு என்று வரிசையாக வரும். இந்த ஆறு சிறுபொழுதுகளின் வரிசைக்கேற்பவே நிலங்களையும் அமைத்துப் பாடியுள்ளார் தொல்காப்பியர். கீழ்க்காணும் படம் இதனை விளக்கும்.

மாலை------> யாமம் -------> வைகறை -------> காலை -------> பகல் ----------> எற்பாடு
(6 -10)            (10 - 2)                        ( 2 - 6)                  (6 - 10)            (10 - 2)              ( 2 - 6)

முல்லை ------> குறிஞ்சி ------> மருதம் -------> திணை இல்லை ------------> நெய்தல்

சிறுபொழுதினைப் போலவே பெரும்பொழுதிலும் கார்காலத்தை அடுத்தே கூதிரும் முன்பனியும் வரும். அவ்வகையிலும் கார்காலத்துக்குரிய முல்லை முன்னதாகவும் கூதிர் மற்றும் முன்பனிக் காலங்களைக் கொண்ட குறிஞ்சி பின்னதாகவும் வைக்கப்பட்டது. ஆறு பருவங்களையும் பெரும்பொழுதுகளாகக் கொண்ட மருதமும் நெய்தலும் இவற்றின் பின்னால் வைக்கப்பட்டன. கீழ்க்காணும் படம் இதனை விளக்கும்.

கார்காலம் -------> கூதிர்,முன்பனி -------> ஆறு பருவங்கள்
முல்லை ---------> குறிஞ்சி -------------------> மருதம், நெய்தல்


                                                                             தொடரும்....

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

ஒட்டக்கூத்தனும் ஓட்டை வாயும்


முன்னுரை:

பழமொழிகள் மக்களின் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்தவை. அனுபவம் வாய்ந்த பெரியோர்களால் இளைய தலைமுறையினரின் நன்மை கருதி வாய்மொழியாகக் காலங்காலமாக கூறப்பட்டு வந்தவை. நகைச்சுவை, அறிவுக்கூர்மை கருதியும் பெரியோர்கள் பல பழமொழிகளைக் கூறியுள்ளனர். பழமொழிகள் மட்டுமின்றி விடுகதைகள் வாயிலாகவும் பல அரிய கருத்துக்களை பெரியவர்கள் கூறியுள்ளனர். இந்த பழமொழிகளுக்கும் விடுகதைகளுக்கும் இடைப்பட்டதாக ஒரு வகை உண்டு. அதுதான் 'விடுமொழி' என்பதாகும். இந்த விடுமொழி என்பது பழமொழி போலத் தோன்றும் ஒரு விடுகதை ஆகும்.

தமிழ் கூறும் நல்லுலகில் பல விடுமொழிகள் உண்டு. அவற்றில் சில கீழே காட்டப்பட்டுள்ளன.

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான்.
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
எடுக்கிறது பிச்சை ஏறுவது பல்லக்கு.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.

இக் கட்டுரையில் இன்னும் ஒரு விடுமொழி பழமொழியாகக் கருதப்பட்டு எப்படித் தவறுதலாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது என்பதைக் காணலாம்.

பழமொழி: ஒட்டக்கூத்தனுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்

இப் பழமொழிக்கு தற்போது கூறப்பட்டு வரும் பொருள் இதுதான்: ஒட்டக்கூத்தன் என்னும் புலவனுக்கு மட்டும் இரண்டு தாழ்ப்பாள் போட்டாளாம் அரசி. இக் கருத்தின் பின்னணியாக இணையத்தில் கூறப்பட்டு வரும் கதை என்னவெனில்:

கம்பனுக்கும் ஒட்டக்கூத்தனுக்கும் கட்டோட ஆகாது. மன்னன்கிட்ட ஒட்டக்கூத்தனுக்கு செல்வாக்கு. அரசிக்கோ கம்பன் கவிதையில் ஈடுபாடு. ஒரு நாள் அரசனிடம் அரசிக்கு ஊடல். ராணி உள்பக்கமா தாப்பா போட்டுகிட்டு தெறக்காமக் கோவமா இருக்கா. அரசன் ஒட்டக்கூத்தனக் கூப்பிட்டு எதாவது ஜல்சா கவிதை சொல்லி ராணிய சரிக்கட்ட சொல்றான். ஒட்ட்க்கூத்தனும் போய் கவி பாடறான். உள்ளேந்து தாப்பா போடற சத்தம் கேக்குது. பின்னாடியே ராணியோட குரலும் வருது. ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் அப்பிடின்னு.

இது கட்டுக்கதை என்பதைப் படித்தாலே புரிந்து கொள்ளலாம். பழமொழியைத் தவறாகப் புரிந்துகொண்டு பொருள் கூறியதால் அதை சரிக்கட்ட ஒரு கதை தேவைப்படுகிறது. இனி இப்பழமொழியின் உண்மையான நிலை என்ன என்று காணலாம்.

இப் பழமொழியின்  உண்மையான வடிவம் இதுதான்:

ஒத்தக் கூத்தனுக்கு இரட்டைத் தாழ்ப்பாள். அது என்ன?

விடை: இந்த விடுமொழியில் வரும் கூத்தன் என்பது கூத்தாடும் இயல்புடைய நாக்கினைக் குறிப்பதாகும். தாழ்ப்பாள் என்பது உதட்டினைக் குறிப்பதாகும். இரண்டு தாழ்ப்பாள் என்பது மேலுதடு, கீழுதடு ஆகிய இரண்டையும் குறிப்பதாகும். ஒத்தையா ரெட்டையா என்ற சொல் வழக்கினைப் போல இந்த விடுமொழியானது

ஒத்தக் கூத்தனுக்கு (ஒரு நாக்குக்கு) இரட்டைத் தாழ்ப்பாள் (இரண்டு உதடுகள்)

என்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

முடிவுரை:

இதே நாக்கையும் உதடுகளையும் விடைகளாகக் கொண்டு தான் 'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் ' என்ற விடுமொழியும் அமைந்துள்ளது என்பதை ஏற்கெனவே நாம் ஒரு ஆய்வுக் கட்டுரையில் கண்டுள்ளோம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

................................................. தமிழ் வாழ்க!......................................

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

இன்னொரு முகம்


முன்னுரை:

சங்க காலந்தொட்டு இன்று வரையிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பல தமிழ்ச் சொற்களுள் 'முகம்' என்ற சொல்லும் ஒன்றாகும்.  இச் சொல்லுக்குச் சில பொருட்களை தற்கால அகராதிகள் கூறி இருந்தாலும் அப் பொருட்கள் பல இடங்களில் பொருந்தாத நிலையே காணப்படுகிறது. இது இச் சொல்லுக்கு வேறு ஒரு பொருளும் உள்ள நிலையினையே எடுத்துக் காட்டுகிறது.  இக் கட்டுரையில் இச் சொல் குறிக்கும் வேறு ஒரு புதிய பொருளைப் பற்றியும் அப்பொருளில் இருந்து இதர பொருட்கள் எவ்வாறு தோன்றின என்பதைப் பற்றியும் காணலாம்.

தற்போதைய பொருட்கள்:

முகம் என்னும் சொல்லுக்குத் தற்கால அகராதிகள் கூறும் பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன.

சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி: 

முகம் mukam
, n. < mukha. 1. Face; தலையில் நெற்றிமுதல் மோவாய் வரையுள்ள முன் புறம். முகத்தா னமர்ந்தினிது நோக்கி (குறள், 93). 2. Mouth; வாய். மொழிகின்ற முகத்தான் (கம்பரா. வாலிவ. 74). 3. Entrance, as of a house; வாயில். (சங். அக.) 4. Backwater; கழி. (பிங்.) 5. Place; இடம். (திருக்கோ. 356, உரை.) 6. Head, top; மேலிடம். (W.) 7. Point; நுனி. அயின் முகக்கணை (கம்பரா. ஆற்றுப். 14). 8. Commencement; தொடக்கம். (W.) 9. Form, shape; வடிவு. கூன் முகமதி (பிரபுலிங். கைலாச. 3). 10. Look, sight; நோக்கு. புகுமுகம்புரிதல் (தொல். பொ. 261). 11. Meditation; தியானம். செல்வன் . . . இரண்டுருவ மோதி நேர்முக நோக்கினானே (சீவக. 1289). 12. Praise, flattery; முகத்துதி. முகம் பலபேசி யறி யேன் (தேவா. 742, 2). 13. Cause, reason; கார ணம். Colloq. 14. (Gram.) Ending of seventh case; ஏழாம் வேற்றுமையுருபு. இனிய செய்தி நின் னார்வலர் முகத்தே (புறநா. 12). 15. Front; முன்பு. ஈன்றாள் முகத்தேயு மின்னாதாம் (குறள், 923). 16. (Dram.) The first juncture or opening of a drama, one of five nāṭaka-c-canti, q.v.; நாடகச் சந்தி ஐந்தனுள் முதலிலுள்ள சந்தி. (சிலப். 3, 13, உரை.) 17. Opening dance before the appearance of the actors on the stage; நடிகர்கள் அரங்கத்திற்கு வருமுன் நிகழும் கூத்து. (சிலப். 3, 147, உரை.) 18. Character, nature; இயல்பு. களி முகச் சுரும்பு (சீவக. 298). 19. State, condition; நிலை. (W.) 20. Aspect, appearance; தோற்றம். சுளிமுகக் களிறன்னான் (சீவக. 298). 21. Head, as of a boil; கட்டி முதலியவற்றின் முனையிடம். 22. Chieftaincy; முதன்மை. (W.) 23. Full-growth; maturity; பக்குவம். பயம்பின்வீழ் முகக்கேழல் (மதுரைக். 295). 24. Side; பக்கம். Colloq. 25. Part, as of a town or village; கிராம முதலியவற் றின் பகுதி. Nāñ. 26. Particle of comparison; உவமவுருபு. கிளிமுகக் கிளவி (சீவக. 298). 27. Instrumentality; மூலம். 28. Sacrifice; யாகம். மறைவழி வளர் முகமது சிதைதர (தேவா. 573, 5). 29. Cochineal insect; இந்திரகோபம். (பரி. அக.)

வின்சுலோ இணையத் தமிழ் அகராதி:

முகம், (p. 872) [ *mukam, ] s. The mouth, வாய். 2. Face, countenance, visage, mien, வதனம். 3. Entrance to a house, a harbor or river, வாயில். 4. Commencement, தொடக்கம். 5. Aspect, look, appearance, தோற்றம். 6. Prospect--as the front of an army, படை முகம். 7. Head--as of a street, or point, முனை. 8. Design, object, purpose, நோக்கம். 9. Chief, முதன்மை. W. p. 663. MUK'HA. 1. Place, இடம். 11. State or condition, as காரியம்நல்லமுகத்தைக்கொள்ளுகிறது. (Beschi.) அபிமுகம். Presence. அதோமுகம். A down-cast look. அறிமுகம். Acquaintance. சிரீமுகம்--சீமுகம்--ஷ்ரீமுகம்--திருமுகம்..... A letter from a guru. புதுமுகம். An unknown person; (lit.) a new face. என்வீட்டுமுகமாய்த்திரும்பும். Please turn to wards my house. அவர்கள் ஒரு முகமாய்நிற்கிறார்கள். They are all on one side. காற்றுமுகத்திலேதூற்றிவிடு. Winnow [the corn] before the wind. கிழக்குமுகமாயிரு. Sit towards the east. முகத்துக்குமுகங்கண்ணாடி. Personal inquiry is as a perspective.

பொருள் பொருந்தாமை:

அகராதிகள் கூறியுள்ள மேற்காணும் பொருட்களில் உடல் உறுப்புக்களைக் குறிப்பவை வதனமும் வாயும் மட்டுமே. இவற்றில் வதனம் என்பதற்கு ' நெற்றி முதல் மோவாய் வரையுள்ள முன்புறம்' என்று சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது. இதே பொருளில் தான் நாமும் அன்றாட வாழ்வில் புழங்கிக் கொண்டு இருக்கிறோம். இனி, இப் பொருள் கீழ்க்காணும் இடங்களில் பொருந்துகின்றதா என்று பார்ப்போம்.

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியில் கலங்கிய மீன் - குறள்-1116
மதி மருள் வாள் முகம் - கலி: 126
பெயல் சேர் மதி போல வாள்முகம் தோன்ற - கலி: 145
அல்லது கெடுப்பவன் அருள்கொண்ட முகம் போல
மல்லல் நீர்த்திரை ஊர்பு மாலிருள் மதி சீப்ப - கலி: 148
தீங்கதிர் மதி ஏய்க்கும் திரு முகம் - கலி: 15
அணிமுகம் மதி ஏய்ப்ப - கலி: 64
அகல் மதி தீங்கதிர் விட்டதுபோல முகன் அமர்ந்து - கலி: 56
மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை - கலி: 62
திங்கள் அன்ன நின் திருமுகத்து - அக: 253
முகனும் விரிகதிர் முற்றா விரிசுடர் ஒத்தி - பரி: 19
நாடுதலை அளிக்கும் ஒண்முகம் போல
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும் - புற: 67

மேற்காணும் பாடல் வரிகளில் முகத்தை நிலவுக்கு உவமையாகக் கூறி இருக்கிறார்கள். இப்பாடல் வரிகளில் வரும் முகம் என்பதற்கு வதனம் அதாவது நெற்றி முதல் மோவாய் வரையுள்ள முன்புறம் என்று பொருள் கொண்டால் உவமையின் சிறப்பு குன்றி விடுவதை உணரலாம். ஏனென்றால் பூமியில் இருந்துகொண்டு நாம் காணும் நிலவானது இயற்கையாகவே பால்போன்ற வெண்மை நிறம்கொண்டது; ஒளிவீசும் தன்மை பெற்றது. ஆனால் வதனத்திற்கோ இயற்கையான பால்போன்ற வெண்மை நிறமும் இல்லை; ஒளிவீசும் தன்மையும் இல்லை. அன்றியும் நாம் காணும் நிலவானது ஒரே பொருளாகத் தோற்றமளிக்க, வதனமோ நெற்றி, கன்னம், கண், மூக்கு, வாய் என்று பல உறுப்புக்களின் தொகுதியாகக் காட்சியளிக்கிறது. இப்படி ஒத்த பண்புகளே இல்லாத நிலையில் வதனத்தையும் மதியினையும் ஒப்புமைப்படுத்திக் கூறுவது அணி இலக்கணத்திற்கு முரணானது மட்டுமின்றி அறிவுக்குப் புறம்பானதுமாகும்.

இப்படி வள்ளுவர் உள்பட எந்தப் புலவரும் தவறான உவமைகளைப் பயன்படுத்த மாட்டார்கள் என்பதால் மேற்காணும் பாடல் வரிகளில் வருகின்ற முகம் என்ற சொல் வதனத்தையோ வாயினையோ குறிக்கவில்லை என்பது தெளிவு. இது இச்சொல்லுக்கு வேறு ஒரு புதிய பொருள்  இருப்பதைக் காட்டுகிறது. இனி இச்சொல் குறிக்கும் புதிய பொருள் எதுவென்று ஆதாரங்களுடன் இங்கே காணலாம்.

புதிய பொருள்:

முகம் என்ற சொல் மேலே கண்ட பாடல்களில் குறிக்கின்ற புதிய பொருள் 'கண்' ஆகும். இதுவே இச்சொல்லுக்கான முதன்மைப் பொருள் ஆகும். வதனம் என்னும் பொருள் இடவாகு பெயராக வந்த பொருள் ஆகும்.

நிறுவுதல்:

முகம் என்ற சொல்லுக்கு கண் என்ற பொருள் எவ்வாறு பொருந்தி வருகின்றது என்பதைக் கீழே ஆதாரங்களுடன் காணலாம்.

அனிச்ச மலரைத் தொடவே வேண்டாம்; அருகில் சென்று மோந்து பார்த்தாலே வாடிவிடுகிற அளவுக்கு மென்மையானது அனிச்சப்பூ. அதுபோல விருந்தினர்களும் மென்மையானவர்களே. நமது கண்களில் சிறிது வெறுப்பைக் காட்டினாலும் அவர்கள் வாடிவிடுவார்கள் என்று கூறுகிறார் வள்ளுவர்.

மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. - குறள் -90

கற்றவர்களுக்கு மட்டுமே கண்கள் உண்டு. கல்லாதவர்களுக்கு கண்களுக்குப் பதிலாக அவ் இடங்களில் புண்களே உண்டு என்கிறார் வள்ளுவர்.

கண்ணுடையர் என்போர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர் - குறள்:  393

கண்ணாடியானது தனக்கு அடுத்திருப்பதை (உள் பக்கமாக இருப்பதை) புறத்தே காட்டும். அதுபோல உள்ளத்தின் குமுறலை கண்களே புறத்தில் காட்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். கண்ணாடியைப் போல பளபளப்பான உடல் உறுப்பு 'கண்' மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்    --குறள்  706

ஒளிவீசும் கண்களை ஒளிவீசும் நிலவுடன் ஒப்பிடுவது இலக்கிய வழக்கம். ஏற்கெனவே கண்ணைக் குறிக்கும் இன்னொரு சொல்லான 'நுதல்' என்பதை நிலவுடன் ஒப்பிட்டு 'பிறைநுதல்' என்று இலக்கியங்கள் கூறுவதைப் போல முகம் என்ற சொல்லையும் நிலவுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

மதி மருள் வாள் முகம் - கலி: 126
பெயல் சேர் மதி போல வாள்முகம் தோன்ற - கலி: 145
அல்லது கெடுப்பவன் அருள்கொண்ட முகம் போல
மல்லல் நீர்த்திரை ஊர்பு மாலிருள் மதி சீப்ப - கலி: 148
தீங்கதிர் மதி ஏய்க்கும் திரு முகம் - கலி: 15
அணிமுகம் மதி ஏய்ப்ப - கலி: 64
அகல் மதி தீங்கதிர் விட்டதுபோல முகன் அமர்ந்து - கலி: 56
மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை - கலி: 62
திங்கள் அன்ன நின் திருமுகத்து - அக: 253
முகனும் விரிகதிர் முற்றா விரிசுடர் ஒத்தி - பரி: 19
நாடுதலை அளிக்கும் ஒண்முகம் போல
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும் - புற: 67

மேற்காணும்  பாடல்களில் வரும் 'முகம்' என்ற சொல்லுக்கு 'கண்' என்ற பொருளே பொருந்தி வருவதை அறியலாம். ஏனென்றால் நமது உடல் உறுப்புக்களில் கண்களுக்கு மட்டுமே நிலவைப் போல ஒளிவீசும் தன்மை உண்டு; நிலவைப் போல இயற்கையான பால்போன்ற வெண்மை நிறமும் உண்டு. இவை மட்டுமின்றி, கீழ்க்காணும் பாடல்களிலும் முகம் என்ற சொல் கண் என்ற பொருளில் தான் வழங்கப்பட்டுள்ளது. கட்டுரையின் விரிவஞ்சி அனைத்துப் பாடல்களுக்கும் விளக்கம் கொடுக்கவில்லை.

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம்
இன்சொலினதே அறம். குறள் - 93
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின் - குறள் - 92
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு குறள் - 224
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான் முந்துறும். - குறள் - 707
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்றது உணர்வார்ப் பெறின் - குறள் - 708

தாய் முகம் நோக்கி வளர்ந்திசின் ஆங்கு - ஐங்கு: 44
பழி தபு வாள்முகம் பசப்பு ஊர - கலி: 100
முக்கண்ணான் மூவெயிலும் உடன்றக்கால்
முகம்போல ஒண்கதிர் தெறுதலின் - கலி: 2
மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே - கலி: 7
ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடு போல
பாழ்பட்ட முகத்தொடு பைதல் கொண்டு - கலி: 5
முகம் திரியாது கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி - குறு: 252
மாதர் வாள்முகம் மதைஇய நோக்கே - அக:130
ஒளிகெழு திருமுகம்- மதுரை:448
சினவிய முகத்து சினவாது சென்று - நற்:100

வள்ளுவர் ஒருபடி மேலே போய் வானத்து மீன்களெல்லாம் நிலவு எது காதலியின் கண் எது என்று தெரியாமல் திக்குமுக்காடித் திரிவதாகக் கற்பனை செய்கிறார்.

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியில் கலங்கிய மீன் - குறள்-1116

அதுமட்டுமின்றி நிலவானது தனது காதலியின் கண் போல அழகாக ஒளி வீசுவதால் அதில் மயக்கமுற்று அந்த நிலவையும் தனது காதலியாகக் கருதிய ஒரு காதலன் நிலவை நோக்கி ' இனி நீ அனைவரும் காணும் வண்ணம் வானத்தில் தோன்றாமல் என் காதலியைப் போல எனக்காக மட்டுமே தோன்றவேண்டும்' என்று கட்டளை இடுகிறான்.

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி - குறள்: 1119

நிலவுடன் மட்டுமின்றி மலர்ந்திருக்கும் புதிய மலருடனும் பெண்களின் கண்ணை ஒப்பிட்டுக் கூறுவது இலக்கிய வழக்கம். அவ்வகையில் முகம் என்ற சொல்லையும் மலருடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

பிரிந்தவர் நுதல் போல பீர் வீயக் காதலர்ப்
புணர்ந்தவர் முகம் போல பொய்கை பூ புதிது ஈன- கலி: 31
துகள் அறு வாள் முகம் ஒப்ப மலர்ந்த குவளை - கலி: 64
பொருத யானைப் புகர் முகம் கடுப்ப
மன்றத் துறுகல் மீமிசை பலவுடன்
ஒண் செங்காந்தள் அவிழும் - குறு: 284
தாதுபடு பெரும்போது புரையும் வாள்முகத்து - மதுரை: 711

முகம் என்ற சொல்லை யானையுடன் தொடர்புபடுத்தி பல சங்க இலக்கியப் பாடல்கள் கூறுகின்றன. அவற்றில் 'புகர் முகம்' என்ற சொல்லாடல் பரவலாக உள்ளது.

புகர் முக வேழம் - ஐங்கு: 239, அக: 12, நற்: 158
புகர் முகக் களிறு - கலி: 45
யானைப் புகர் முகம் - கலி: 46, குறு: 284

இதில் வரும் புகர் என்பது கடுஞ்சினத்தால் அல்லது அச்சத்தால் யானையின் கண்களில் உண்டாகும் நிற மாற்றத்தைக் குறிப்பதாகும். இதைக் கபில நிறமென்று சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது.

புகர்¹ pukar  , n. perh. புகு¹-. [T. pogaru, M. pukar.] 1. Tawny colour, brown; cloud colour; கபிலநிறம். (பிங்.)

யானையின் கண்களின் நிறத்தைக் கொண்டு அது சினத்தில் அல்லது அச்சத்தில் உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறியும் வழக்கம் அக் காலத்தில் இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

முடிவுரை:

நுதல், மேனி, முலை, தோள், கூந்தல், எயிறு ஆகிய சொற்கள் கண்ணைக் குறிக்கும் என்று முன்னர் பல ஆய்வுக் கட்டுரைகளில் கண்டுள்ளோம். இப் பட்டியலில் முகம் என்ற சொல்லும் இப்போது சேர்ந்துள்ளது.

முகம் என்ற சொல்லின் முதல்நிலைப் பொருள் கண் என்பதே ஆகும். இப் பொருளில் இருந்து பிற பொருட்கள் எவ்வாறு கிளைத்திருக்கக் கூடும் என்று கீழே காணலாம்.

முகம் = வதனம், கண்கள் அமைந்துள்ள தலையின் முன்புறப் பகுதி என்ற பொருளில் இடவாகுபெயராகத் தோன்றியுள்ளது.
முகம் = முகத்துதி = புகழ்ச்சி, பெண்களது கண்களின் அழகைப் பாராட்டுதல் என்ற பொருளில் இருந்து பொதுவாகப் புகழ்ச்சி என்ற பொருளுக்கு மாற்றமடைந்தது.
முகம் = நோக்கு, கண்பார்வை என்ற பொருளில் வழங்குகிறது.
முகம் = முன்பு, கண்களுக்கு முன்னால் உள்ளது என்ற பொருள்படுவது.
முகம் = தோற்றம், கண்களால் காணும் காட்சி என்ற பொருளில் வருவது.
.....................................................வாழ்க தமிழ்!..........................................