வியாழன், 11 டிசம்பர், 2014

அலங்கு என்பது என்ன?

முன்னுரை:

அலங்கு என்னும் வினைச்சொல்லானது அலங்குதல், அலங்கல் என்ற வடிவங்களில் இலக்கியங்களில் பயின்று வந்துள்ளது. இச் சொல்லுக்கு இக் கால இலக்கிய அகராதிகள் கூறும் பொருட்கள் பல பாடல்களில் பொருந்தாநிலை காணப்படுகிறது. இது இச் சொல்லுக்கு வேறு பொருள்/பொருட்கள் இருப்பதையே காட்டுகிறது. இக் கட்டுரையில் இச் சொல்லின் மூலப் பொருள் என்ன என்பதையும் அதிலிருந்து பிற பொருட்கள் எவ்வாறு கிளைத்தன என்பதையும் பல ஆதாரங்களுடன் விரிவாகக் காணலாம்.

அலங்கு - அகராதிகள் காட்டும் பொருட்கள்:

சென்னைத் தமிழ்ப் பேரகராதி:
 அலங்கு-தல் alaṅku-
, 5 v. intr. [T. K. alagu, M. alaṅṅu, Tu. alaṅgu.] 1. To move, shake, swing, dangle, to be in motion; அசைதல். அலங்குளைப் புரவி (புறநா. 2). 2. To be agitated in mind, troubled; மனந்தத்தளித்தல். (W.) 3. To pity, sympathise; இரங்குதல். (பிங்.) 4. To shine, glitter, flash; ஒளிசெய்தல். (பிங்.)

பேப்ரிசியஸ் அகராதி:
அலங்கு (p. 33) [ alangku ] III. v. i. move, shake, swing, அலை; 2. shine, flash. ஒளிசெய்.

வின்சுலோ அகராதி:
 அலங்கு, (p. 40) [ alngku, ] கிறேன், அலங்கினேன், வேன், அலங்க, v. n. To shine, glitter, flash, ஒளிசெய்ய. 2. To dangle as a garland or locks of hair, move, shake, swing as branches of trees, be in motion as waves, அசைய. 3. To be agitated in mind, be troubled, be in grief, தத்தளிக்க. 4. To pity, sympathize, yearn, grieve, be distressed, இரங்க. (p.)

மேற்கண்டவற்றைத் தொகுத்துப் பார்த்தால், அலங்கு எனும் வினைச்சொல்லுக்கு அசைதல், ஒளிசெய்தல், இரங்குதல், தத்தளித்தல் என்ற பொருட்களே கூறப்பட்டுள்ளதை அறியலாம்.

அலங்கு - சொல் பயிலும் இடங்கள்:

அலங்கு என்னும் வினைச்சொல் பயிலும் பாடல்கள் சிலவற்றை இங்கே காணலாம்.

பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு - திரு 298
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த - பெரும் 83
முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே - மலை 144
அலங்கு கழை நரலும் ஆரி படுகர் - மலை 161
அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலிய - நற் 118/1
அகல் இலை காந்தள் அலங்கு குலை பாய்ந்து - நற் 185/8
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்து - நற் 243/3
நெடும் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த - நற் 292/1
அலங்கு குலை காந்தள் தீண்டி தாது உக - நற் 359/2
பூ உடை அலங்கு சினை புலம்ப தாக்கி - குறு 134/4
சிலம்பு உடன் கமழும் அலங்கு குலை காந்தள் - குறு 239/3
அலங்கு சினை இருந்த அம் சிறை நாரை - குறு 296/2
அலங்கு வெயில் பொதிந்த தாமரை - குறு 376/5
அலங்கு சினை மாஅத்து அணி மயில் இருக்கும் - ஐங் 8/4
அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன்துறை - ஐங் 185/1
அலங்கு மழை பொழிந்த அகன் கண் அருவி - ஐங் 220/1
அலங்கு கதிர் திரு மணி பெறூஉம் - பதி 58/18
இவட்கே அலங்கு இதழ் கோடல் வீ உகுபவை போல் - கலி 7/15
அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின் - கலி 139/8
சுரம் புல்லென்ற ஆற்ற அலங்கு சினை - அகம் 1/15
அலங்கு கழை நரல தாக்கி விலங்கு எழுந்து - அகம் 47/4
அரிஞர் யாத்த அலங்கு தலை பெரும் சூடு - அகம் 84/12
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலை காந்தள் - அகம் 108/15
அலங்கு கதிர் வேய்ந்த அழல் திகழ் நனம் தலை - அகம் 169/2
அலங்கு குலை அலரி தீண்டி தாது உக - அகம் 178/10
அலங்கு கதிர் திகிரி ஆழி போழ - அகம் 224/14
கரும் கோட்டு மாஅத்து அலங்கு சினை புது பூ - அகம் 236/7
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்கு தலை - அகம் 241/11
அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூ - அகம் 245/15
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய - அகம் 272/17
அலங்கு சினை குருந்தின் அல்கு நிழல் வதிய - அகம் 304/10
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் - அகம் 381/5
அலங்கு உளை புரவி ஐவரோடு சினைஇ - புறம் 2/13
நீயே அலங்கு உளை பரீஇ இவுளி - புறம் 4/13
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த - புறம் 22/14
மிசை அலங்கு உளைய பனை போழ் செரீஇ - புறம் 22/21
அலங்கு கதிர் கனலி நால்_வயின் தோன்றினும் - புறம் 35/6
அலங்கு கதிர் சுமந்த கலங்கல் சூழி - புறம் 375/1
அலங்கு உளை அணி இவுளி - புறம் 382/4
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல் - புறம் 325/11
அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம் என - பதி 64/10
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய - பரி 15/21

(நன்றி. திரு. பாண்டியராஜா ஐயா, சங்கம்கன்கார்டன்ஸ். இன்)

அகராதிப் பொருள் பொருந்தா இடங்கள்:
இனி மேற்காணும் பாடல்களில் தற்போதைய அகராதிகள் கூறும் பொருட்கள் பொருந்தா இடங்களைக் காணலாம்.

மேலே கண்ட பாடல்களில், அலங்கு எனும் வினைச்சொல்லானது

சினை என்னும் பெயருடன் 14 இடங்களிலும்

கழை என்னும் பெயருடன் 2 இடங்களிலும் பயின்று வந்துள்ளது.

இதில் சினை என்பதற்கு மரக்கிளை என்ற பொருளில் அலங்கு சினை என்பதற்கு அசைகின்ற மரக்கிளை என்றும்

கழை என்பதற்கு மூங்கில் என்ற பொருளில் அலங்கு கழை என்பதற்கு அசைகின்ற மூங்கில் என்றும் உரை இயற்றியுள்ளனர். இவை இங்கு பொருந்துமா எனில் பொருந்தாது. காரணம்,

சாதாரணமாக சிறுகாற்று வீசும்போது மரத்தில் உள்ள இலைகளும், பூக்களும் அசையுமேயன்றி கிளைகள் அசையாது. அதைப்போல சிறுகாற்றில் மூங்கில் இலைகள் அசையுமே ஒழிய மரம் அசையாது. மேலும் இவற்றின் அசைவினைப் பற்றி இப் பாடல்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய தேவை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே அலங்கு சினை என்பதற்கு அசைகின்ற மரக்கிளை என்று பொருள் கொள்வதும் அலங்கு கழை என்பதற்கு அசைகின்ற மூங்கில் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாகத் தோன்றவில்லை. இச் சொல்லின் மூலம் சினை மற்றும் கழையுடன் தொடர்புடைய வேறு ஏதோ ஒன்றை உணர்த்த முனைந்துள்ளனர் என்பது தான் உண்மை. அதைப் பற்றிக் கீழே காணலாம். 

அலங்கு சினையும் அலங்கு கழையும்:

அலங்கு சினை மற்றும் அலங்கு கழையில் வருகின்ற அலங்குதல் என்னும் வினை குறிக்கும் பொருள் பூத்தல் என்பதாகும். அதாவது,

அலங்கு சினை என்பது பூத்த மரக்கிளை என்றும்
அலங்கு கழை என்பது பூத்த மூங்கில் என்றும் பொருள்படும்.

பூ என்பது எப்படி பூக்கும் செயலையும் (வினைச்சொல்) பூவையும் (பெயர்ச்சொல்) குறிக்கிறதோ அதைப்போல
அலங்கு என்பதும் பூக்கும் வினை மற்றும் பூப்பொருள் ஆகிய இரண்டையும் குறிக்கப் பயன்படுகிறது.

பொதுவாக மரங்கள் ஆண்டு முழுவதும் பூத்திருப்பதில்லை. மரங்களின் பூக்கும் பருவம் பல காரணங்களால் வேறுபடுகின்றது. மரங்கள் பூத்திருக்கும் சமயம் அது பார்ப்போரின் கண்களை ஈர்த்து சிந்தையைக் கவர்கிறது. இதனால் தான் மரங்கள் பூத்திருக்கும் நிலையினை பல பாடல்களில் புலவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளனர். மேலும் மரங்கள் பூக்கும் பருவம் சங்க காலத்தில் மிக இன்றியமையாத நிகழ்வாகக் கருதப்பட்டது. தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன் இன்னின்ன மரங்கள் பூக்கும் காலத்திற்கு முன் திரும்பிவிடுவதாகக் கூறிச் செல்வதைப் பல சங்கப் பாடல்களில் காணலாம். மரங்கள் பூக்கும் நிகழ்வினைக்  குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட பல சொற்களுள் ஒன்று தான் அலங்கு என்பதாகும். இதற்கான ஆதாரங்களைக் கீழே காணலாம்.

ஆதாரங்கள்:

அலங்கு என்பது பூத்தலைக் குறிக்கும் என்பதைக் கீழ்க்காணும் பாடல்கள் நேரடியாகவே உணர்த்துகின்றன.

பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு - திரு 298
பூ உடை அலங்கு சினை புலம்ப தாக்கி - குறு 134/4

பூ உடை அலங்கு சினை என்று கூறுவதில் இருந்து, அலங்கு சினை என்பது பூக்களை உடைய மரக்கிளையே என்பது தெளிவாகிறது. மேலும்,,

இவட்கே அலங்கு இதழ் கோடல் வீ உகுபவை போல் - கலி 7/15
அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின் - கலி 139/8
கரும் கோட்டு மாஅத்து அலங்கு சினை புது பூ - அகம் 236/7
அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூ - அகம் 245/15
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய - அகம் 272/17

என்ற பாடல்களில் மரங்கள் பூத்திருக்கும் நிலை நேரடியாகக் கூறப்பட்டுள்ளதுடன், அலங்கு எனும் சொல்லுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளதில் இருந்து அலங்கு என்னும் சொல் பூத்தலையே குறிப்பது தெளிவு. இவைதவிர இன்னொரு ஆதாரத்தையும் கீழே காணலாம்.

அலங்கல் என்னும் சொல்லுக்குப் பொருள் பூமாலை என்று அகராதிகள் கூறுகின்றன.

சென்னைத் தமிழ்ப் பேரகராதி:
 அலங்கல் alaṅkal , n. < அலங்கு-. 1. Wreath, garland; பூமாலை. (பிங்.) 2. Wreath for the hair; மயிர்ச்சூட்டுமாலை. (பிங்.) 3. Sprout; தளிர். (பிங்.) 4. Waving ear of corn; அசையுங் கதிர். (அகநா. 13, உரை.) 5. Regularity, arrangement, order; ஒழுங்கு. (குருபரம். ஆறா. 121.)

வின்சுலோ அகராதி:
அலங்கல், (p. 40) [ alngkl, ] s. A sprout, தளிர். 2. A garland, a wreath, பூமாலை.

இந்த அலங்கல் என்னும் சொல்லானது அலங்கு என்னும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். அலங்கல் என்பது அலங்கினால் அதாவது பூக்களால் ஆன மாலையைக் குறிப்பதில் இருந்து அலங்கு என்பது பூ / பூத்தலைக் குறிப்பது உறுதிப்படுத்தப் படுகிறது.

அலங்கு குறிக்கும் பிற பொருட்கள்:

அலங்கு என்னும் சொல், அகராதிகளில் இதுவரை கூறப்படாத புதிய பொருளாக, பூ / பூத்தல் என்ற பொருளை மட்டும் குறிக்காமல் சில இடங்களில் வேறு சில புதிய  பொருட்களைக் குறித்தும் வருகிறது. அவற்றையும் ஈண்டு காண்போம்.

அலங்கு என்பது கிளைத்தல் என்னும் பொருளில் கீழ்க்காணும் பாடலில் வருகின்றது.

மரா மலர்த்தாரின் மாண் வரத் தோன்றி,
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய - பரி 15/21

இதன் பொருளானது: மராமலர்களால் ஆன மாலைபோல, இரண்டாகக் கிளைக்கும் (அலங்கும்) அருவியானது பின்னர் ஓரிடத்தில் ஒன்றாகி (ஆர்த்து) பேரிரைச்சலுடன் ஒலித்து (இமிழ்பு) கீழே இறங்க (இழிய).

அலங்கு என்பது மின்னுதல் என்னும் பொருளில் கீழ்க்காணும் பாடலில் வருகின்றது.

அலங்கு மழை பொழிந்த அகன் கண் அருவி - ஐங் 220/1

மின்னிய மேகங்கள் பொழிந்ததால் அகன்ற இடத்தில் தோன்றிய அருவி என்பது இதன் பொருள்.

வேர்ச்சொல் ஆய்வு:

இனி, அலங்கு என்பது எவ்வாறு பூத்தல், கிளைத்தல், மின்னுதல் ஆகிய பொருட்களைக் குறிக்கும் என்பதை வேர்ச்சொல் ஆய்வின் மூலம் காணலாம்.

அலங்கு என்னும் வினையின் முதன்மைப் பொருளானது வெளிப்பட்டுத் தோன்றுதல் என்பதாகும். இதிலிருந்தே பிற பொருட்கள் தோன்றின. இது கீழே காட்டப்பட்டுள்ளது.

அலங்குதல் = பூத்தல் ---> கிளைகளில் இருந்து புதியதாக வெளிப்பட்டுத் தோன்றுதல் என்ற பொருளில்.
அலங்குதல் = கிளைத்தல் ----> மரத்தில் இருந்து புதியதாக வெளிப்பட்டுத் தோன்றுதல் என்ற பொருளில். 
அலங்குதல் = மின்னுதல் / ஒளிர்தல் -----> வானத்தில் புதியதாக வெளிப்பட்டுத் தோன்றுதல் என்ற பொருளில். (அலங்கல் = ஒளி. அகராதி காண்க.)

முடிவுரை:

சங்க காலத்தில் குதிரையின் தலைக்கு மேலே பூக்களால் ஆன அணியினைச் சூட்டியிருக்கிறார்கள். இதையே அலங்கு உளை என்று பாடல்கள் குறிப்பிடுகின்றன. குதிரை நடக்கும்போதோ ஓடும்போதோ இந்த அலங்கு உளை பக்கவாட்டில் அசைந்தாடும். இதில் இருந்தே அலங்கு என்னும் சொல்லுக்கு அசைதல் என்ற பொருள் பிற்பாடு தோன்றி இருக்கக் கூடும். மேலும் நாம் இக்காலத்தில் வடமொழியாகக் கருதி பயன்படுத்துகின்ற அலங்காரம் என்னும் சொல் உண்மையில் பூக்களால் ஆன மாலை அணியினையே ( அலங்கு + ஆரம் ) ஆதியில் குறித்துவந்தது. நாளடைவில் வேறு அணிகளையும் குறிக்கப் பயன்படலாயிற்று.
===================== தமிழ் வாழ்க! ===================