புறநானூறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புறநானூறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

திருக்குறளின் முன்னோடி நூல் எது?. (புறக்குறள் >>> திருக்குறள்)


முன்னுரை:

உலகப் பொதுமறை என்று பல சமயத்தாராலும் புகழப்பெற்று பரந்த இவ் உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்க்கெல்லாம் பெருமை தேடித் தந்திருப்பது திருக்குறள் ஆகும். இரண்டே இரண்டு வரிகளில் அருமையான கருத்துக்களைப் பொதித்து வைத்திருக்கும் பெரும் புதையல் திருக்குறள் என்றால் மிகையில்லை.

திருக்குறள் தோன்றிய காலத்திற்கு முற்பட்டு எழுதப்பட்ட சங்க இலக்கியப் பாடல்கள் யாவும் நான்கு அடிகள் முதல் வெவ்வேறு எண்ணிக்கையிலான அடிகள் வரையிலும் எழுதப்பட்டு உள்ளன. இந்நிலையில், திருவள்ளுவருக்கு மட்டும் இரண்டே இரண்டு அடிகளில் கருத்தைச் சொல்லவேண்டும் என்ற எண்ணம் எப்படி உண்டானது?. சங்க இலக்கியத்தின் எந்த நூலின் தாக்கத்தினால் இப்படி ஒரு கருத்து அவருக்குள் முகிழ்த்திருக்கக் கூடும்?. என்ற கேள்விகளுக்கான விடையைத் தேடும் நோக்கில் உருவாக்கப்பட்டதே இக் கட்டுரை ஆகும்.

புறநானூறும் திருக்குறளும்:

ஆராய்ந்து பார்த்ததில், சங்க இலக்கியத்தின் புறத்திணை நூல்களில் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களே திருவள்ளுவருக்கு ஒரு பெரும் உந்துதலாய் விளங்கி இருந்துள்ளது என்று உறுதியானது.

புறநானூற்றுப் பாடல்களில் வரும் போர் முறைகள், வீரர்களின் செயல்பாடுகள் போன்றவற்றை வள்ளுவரும் படைமாட்சி, படைச்செருக்கு போன்ற அதிகாரங்களில் எடுத்தாள்வதைப் பார்க்கலாம்.

அதுமட்டுமின்றி, புறநானூற்றுப் பாடல்களில் வரும் கருத்துக்களை எடுத்தாளும்போது, சில  பாடல்களின் ஈற்றில் இருந்த இரண்டு அடிகள் வள்ளுவரின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்திருக்க வேண்டும். அந்த இரண்டு அடிகளில் புலவர்கள் கூறியிருந்த கருத்துக்கள் பொதுவுடமை சார்ந்தவையாய் மக்களுக்கு அறிவூட்டுவதாய் இருப்பதை அறிந்தார். அதுமட்டுமின்றி, அந்த இரண்டு அடிகளில் இருந்த சொற்களை ஏழு சீர்களாய்ப் பிரிக்க முடிவதையும் கண்டறிந்தார். இவற்றின் அடிப்படையில், இரண்டு அடிகளில் ஏழு சீர்களை அமைத்துப் பொதுவுடைமைக் கருத்துக்களைக் கூற விரும்பினார். அப்படி அவர் முனைந்து இயற்றியதே இன்று நாம் அனைவரும் கொண்டாடும் திருக்குறள் ஆகும்.

புறக்குறள்:

புறநானூற்றுப் பாடல்களில் குறள் வடிவத்தில் காணப்படுவதால் இந்தப் பாடல்களைப் புறக்குறள் என்று அழைக்கலாம். திருவள்ளுவர் திருக்குறளை இயற்றுவதற்குப் புறநானூற்றின் சில பாடல்களில் கடைசி இரண்டு அடிகளில் இருந்த இந்த புறக்குறள்களே உந்துதலாய் இருந்தது என்று மேலே கண்டோம். பொதுவுடைமைக் கருத்துகளைக் கொண்ட அந்த புறக்குறள்கள் பெரும்பாலும் பாடலின் கடைசியில் இருந்தாலும் சில பாடல்களில் மட்டும் பாடலின் இடையிலும் இருக்கின்றன. புறநானூற்றில் இருந்து இதுவரை அறியப்பட்ட புறக்குறள்களும் அவற்றின் பொருளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தலோம் புமின் – புறம். 195

பொருள்: பிறருக்கு ஒருபோதும் நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை; தீமை செய்வதை எப்போதும் தவிர்த்து விடுங்கள்.

இன்னா தம்மவிவ் வுலகம் இனிய
காண்கவிதன் இயல்புணர்ந் தோரே – புறம். 194

பொருள்: இந்த உலகம் துன்பங்களால் நிறைந்தது தான்; இந்த உண்மையை உணர்ந்தவர்கள் மட்டுமே இதில் இன்பங்களையும் காண்கிறார்கள்.

பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல்
ஆருயிர் முறைவழிப் படூஉம் – புறம். 192

பொருள்: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் போக்கில் செல்லும் படகினைப் போல உயிர்கள் விதிவசப்பட்டு அதன் வழிதான் செல்லும்.

செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம்
எனினே தப்புந பலவே – புறம். 189

பொருள்: பிறர்க்குக் கொடுத்து உதவுவதே செல்வத்தால் விளையும் உண்மையான பயனாகும். முழுவதையும் தாமே அனுபவிப்போம் என்று முயன்றால் பலவற்றை இழக்க நேரிடும்.

எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி
நல்லை வாழிய நிலனே – புறம். 187

பொருள்: ஒரு நாட்டின் அரசன் நல்ல வழியைப் பின்பற்றினால் அந்த நாட்டு மக்களும் நல்லவர்களாய் வாழ்வார்கள். (ஆடு = வெற்றி. ஆடவர் = வெற்றியாளர் = அரசர்.)

யான்உயிர் என்பது அறிகை வேல்மிகு
தானை வேந்தற்கு கடனே – புறம். 186

பொருள்: குடிமக்களுக்குத் தானே உயிர் என்று அறிந்து அதன்படி ஒழுக வேண்டியது வெற்றியைத் தரும் படையினைக் கொண்ட அரசனது கடமையாகும். (வேல் = வெற்றி)

கீழ்ப்பால் ஒருவன்  கற்பின் மேல்பால்
ஒருவனும் அவன்கண் படுமே – புறம். 183

பொருள்: கீழ்நிலையில் உள்ள ஒருவன் கல்வி கற்கும் போது மேல்நிலையில் உள்ள ஒருவனும் அவனிடம் நட்பு கொள்வான். (கல்வி கற்பிக்கும் இடங்களில் கீழ் மேல் என்ற பாகுபாடு இருப்பதில்லை; இருக்கக்கூடாது என்பதை இது விளக்குகிறது.)

தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென
முயலுநர் உண்மை யானே – புறம். 182

பொருள்: தன்னலத்திற்காக இன்றிப் பிறர்நலத்திற்காக உழைப்பவர்கள் இவ் உலகில் இன்னும் இருப்பது உண்மைதான். (அதனால்தான் இவ் உலகமே நிலைபெற்று உள்ளது.)

தம்இசை நட்டு தீதுஇல் யாக்கை
யொடுமாய் தல்தவத் தலையே – புறம். 214

பொருள்: வாழும்போதே தம் புகழை நிறுவிப் பிறர்க்குத் தீங்குசெய்யாத யாக்கையராய் வாழ்ந்து மடிதலே தலைசிறந்த தவமாகும்.

ஈயெனவிரத் தலிழிந்தன் றதனெதிர் ஈயேன்
என்றலதனி னுமிழிந் தன்று – புறம். 204

பொருள்: தா என்று ஒருவரிடம் பிச்சை கேட்பது இழிவான செயலாகும். மாறாக, தரமாட்டேன் என்று சொல்வது அதைவிட இழிவான செயலாகும்.

கொள்ளெனக் கொடுத்தலுயர்ந் தன்றதனெதிர் கொள்ளேன்
என்றலதனி னுமுயர்ந் தன்று  - புறம். 204

பொருள்: வாங்கிக்கொள் என்று கூறி ஒருவருக்குக் கொடுப்பது உயர்வான செயலாகும். மாறாக, வாங்கமாட்டேன் என்று கூறி மறுப்பது அதைவிட உயர்வான செயலாகும்.

சான்றோர் சான்றோர் பாலராப சாலார்
சாலார் பாலரா குபவே – புறம். 218

பொருள்: நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களுடன் மட்டுமே பழகுவர். அதைப்போல, கெட்டவர்கள் எப்போதும் கெட்டவர்களுடன் தான் சேர்வர்.

வாழச்செய்த நல்வினை அல்லது ஆழுங்
காலைப் புணைபிறி தில்லை – புறம். 367

பொருள்: பிறர்க்கு நன்மை செய்து அவர்களை வாழச்செய்த புண்ணியமே துன்பக் கடலில் மூழ்கும் ஒருவருக்குக் கரையேற உதவும் தெப்பம் ஆகும்.   
முடிவுரை:

மேற்கண்ட புறக்குறள்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைக் கூட திருவள்ளுவரும் அப்படியே தனது திருக்குறள்களில் வேறு சொற்களால் எடுத்தாண்டிருப்பதை அறியலாம். பொதுவாக, முன்னோர்கள் இயற்றிய பாடல்களைக் கூர்ந்து ஆராய்ந்து அவற்றை அடிப்படையாகக் கொண்டே பின்வருவோர் பாடல்கள் இயற்றுவர். இதற்கொரு சான்றாகத் திருக்குறள் விளங்கும் நிலையில், அந்தாதித் தொடையையும் ஒன்பதாம் தொடையினையும் கூட சான்றுகளாகக் கூறலாம். 

ஐங்குறுநூற்றின் சில பாடல்களில் இருந்த அந்தாதி அமைப்பே பின்னாளில் தனியாக அந்தாதித் தொடையாக உருவெடுத்தது. அதைப்போல, பல சங்க இலக்கியப் பாடல்களில் எண் பெயர்களைக் கொண்டு பயின்றுவந்த தொடை அமைப்பே சரவெண் தொடை என்னும் ஒன்பதாம் தொடையாக உருவெடுத்தது. இத்தொடை பற்றிய விளக்கமான தகவல்களைக் கீழ்க்காணும் கொளுவியில் கண்டு படிக்கலாம்.



செவ்வாய், 8 நவம்பர், 2016

இமயமலையும் தமிழர்களும் - பகுதி 2

முன்னுரை:

இமயமலையும் தமிழர்களும் என்ற ஆய்வுக் கட்டுரையின் இரண்டாம் பகுதியான இக் கட்டுரையில் மேலும் சில சான்றுகளை விரிவாகக் காணலாம். 


சங்க இலக்கியமும் இமயமலையும்: சான்று: 2

சுடர் சினம் தணிந்து குன்றம் சேர
நிறை பறை குருகு இனம் விசும்பு உகந்து ஒழுக
எல்லை பைபய கழிப்பி முல்லை
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை
இன்றும் வருவது ஆயின் நன்றும்           
அறிவேன் வாழி தோழி அறியேன்
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவி
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும்
சிறை அடு கடும் புனல் அன்ன என்       
நிறை அடு காமம் நீந்தும் ஆறே - நற். 369

வரி விளக்கம்:

சுடர் சினம் தணிந்து குன்றம் சேர = கதிரவன் கடுமை குறைந்து மலைக்குப் பின்செல்ல
நிறை பறை குருகு இனம் = கூட்டமாகப் பறக்கும் நாரை இனமானது
விசும்பு உகந்து ஒழுக = வானில் மகிழ்ச்சியுடன் பறந்துசெல்ல
எல்லை பைபய கழிப்பி = பகலும் மென்மெலக் கழிந்து
முல்லை அரும்பு வாய் அவிழும் = முல்லை அரும்புகள் மலர்கின்ற
பெரும் புன் மாலை = பெரும் துன்பத்தைத் தருவதாகிய மாலைப்பொழுது
இன்றும் வருவது ஆயின் = இன்றும் வருவதே ஆயினும்         
நன்றும் அறிவேன் = அதனை நான் நன்கு அறிவேன்
வாழி தோழி அறியேன் = என் தோழியே நான் அறியேன்
ஞெமை ஓங்கு உயர் வரை = ஞெமை மரங்கள் உயர்ந்தோங்கி வளர்ந்திருக்கும்
இமையத்து உச்சி வயங்கு = இமயமலையினது உச்சியில் தோன்றி
வெள் அருவி இழிதரும் வாஅன் = வெண்ணிற அருவிபோல விழுகின்ற மழைநீரானது
கங்கை அம் பேர் யாற்று = கங்கை எனும் பெரிய ஆற்றின்
கரை இறந்து இழிதரும் = கரையினைக் கடந்து பாய்தலால் உண்டான
சிறை அடு கடும் புனல் அன்ன = அணை கடந்த பெருவெள்ளம் போல
என் நிறை அடு காமம் = எனது நிறையழித்துப் பெருகும் காதல்வெள்ளத்தை
நீந்தும் ஆறே - கடக்கும் வழியினையே.

பொருள் விளக்கம்:

என் தோழியே ! கதிரவன் தனது கடுமை தணிந்து மலைக்குப் பின்செல்லவும் கூட்டமாகப் பறக்கும் நாரை இனமானது மகிழ்ச்சியுடன் வானில் பறந்து செல்லவுமாக பகற்பொழுதானது மெல்லமெல்லக் கழிந்து முல்லை அரும்புகள் மலர்ந்து எனக்குப் பெரும் துன்பத்தைத் தருவதாகிய மாலைப்பொழுது இன்றும் வருமென்பதனை நான் நன்கு அறிவேன். ஆனால், ஞெமை மரங்கள் உயர்ந்தோங்கி வளர்ந்திருக்கும் இமயமலையினது உச்சியில் தோன்றி வெண்ணிற அருவிபோல விழுகின்ற மழைநீரானது கங்கை எனும் பெரிய ஆற்றின் கரையினைக் கடந்து பாய்தலால் உண்டான அணை கடந்த பெருவெள்ளம் போல எனது நிறையழித்துப் பெருகும் காதல்வெள்ளத்தைக் கடக்கும் வழியினை நான் அறியேன்.

மேல் விளக்கம்:

இப்பாடல் மாலைநேர இயற்கை நிகழ்வுகளை மிக அருமையாக விவரிக்கிறது. கதிரவன் மலைக்குப் பின்னால் சென்று மறைதலையும் பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்தவாறு தமது கூடுகளுக்குத் திரும்புவதையும் முல்லைக் கொடியின் மலர் அரும்புகள் மெதுவாக மலர்வதையும் மிக அழகாக நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார் புலவர். இந் நிகழ்வுகளை நாம் மனதிற்குள் நினைத்துப் பார்க்கும்போது இன்புற்று மகிழ்வோம் இல்லையா?. ஆனால் இப் பாடலில் வரும் தலைவிக்கோ இவை பெரும் துன்பத்தைத் தருகின்றனவாம். ஏன்?. தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்குத் தலைவனின் காதல் பார்வையே அன்றி வேறெதுவும் இன்பம் தராது இல்லையா?. " பறவைகள் தம் துணையுடன் கூடுகளுக்குத் திரும்பும் இந்த மாலைநேரத்தில் நான் மட்டும் எனது காதலர் இன்றி தனித்து இருக்கிறேனே; முல்லை அரும்புகள் மலர்ந்து ஒளிவீச எனது கண்கள் மட்டும் அழுகையினால் ஒளியிழந்து வாடி இருக்கின்றனவே " என்றெல்லாம் அவளை ஏங்க வைக்கிறது இந்த மாலைப்பொழுது. இந்த நிகழ்வுகள் யாவும் ஒவ்வொரு நாளும் மாலைப்பொழுது வந்துவிட்டால் இயற்கையாகவே நடைபெறுபவை தான். இதைக் காதலியும் நன்கு அறிவாள். ஆனால் அவளால் அறியமுடியாத ஒன்று உண்டென்றால் அது அவளது காதலன் திரும்பிவரும் பொழுதினைத் தான்.

இப் பாடலில் பல உவமை நயங்கள் உண்டு. ஒவ்வொரு நாளும் காதலனின் வரவுக்காக ஏங்கி ஏங்கி அவளது உள்ளத்தில் காதலனைக் காணும் ஆவல் பெருகுகிறது. இந்த ஆவல் பல்கிப்பெருகிக் கட்டற்ற ஒரு வெள்ளமாக மாறத் துவங்குகிறது. அது எப்படி இருக்கிறதென்றால், இமையமலையில் பெய்த மழைநீரானது அருவிபோல விழுந்து பல ஓடைகளாக மாறி அமைதியாக இருந்த கங்கை ஆற்றின் கரையினை உடைத்துக் கொண்டு பாய, அந் நீர்ப்பெருக்கினால் கங்கை ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் போல இருக்கிறதாம். காதலியின் மனமானது, காதலனுடன் சேர்ந்திருக்கும் பொழுது கங்கை ஆற்று ஒழுக்கம் போல அமைதியாக இருந்ததென்றும், காதலனின் பிரிவுக்குப் பின்னர், அது கங்கை ஆற்று வெள்ளம் போலக் கலக்கமுறத் துவங்கியது என்றும் கூறுகிறார் புலவர். காதலியின் கலக்கத்திற்குக் காரணம் காதலனின் மேல் அவள் வைத்திருக்கும் அன்பு தான். அவருக்கு என்ன ஆயிற்றோ?. ஏன் இன்னும் வரவில்லை? எப்போது வருவாரோ தெரியவில்லையே ! என்று கவலைகள் ஒவ்வொன்றாய் அவள் மனதில் தோன்றுகின்றன. இந்தக் கவலைகளை இமயமலையில் பெய்த மழைநீரால் தோன்றிய ஓடைகளுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார். மனதிலே ஒவ்வொரு கவலையாகக் கூடும்போது அது முடிவில் பெரும் மனக்கலக்கத்தை ஏற்படுத்தும் அல்லவா?. இதனை கங்கை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குடன் ஒப்பிட்டுக் கூறுகிறார்.

இப்பாடலில் வரும் தலைவியானவள், இமையமலையில் பெய்யும் மழையைப் பற்றியும் அதனால் கங்கை ஆற்றில் உண்டாகும் வெள்ளப்பெருக்கு பற்றியும் விரிவாகக் கூறுவதிலிருந்து இம் மக்கள் இமையமலைப் பகுதியில் தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவ்வகையில், இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்னும் கூற்றுக்கு அரணாக இப் பாடலையும் கொள்ளலாம்.

சங்க இலக்கியமும் இமயமலையும்: சான்று: 3

முன் உள்ளுவோனை பின் உள்ளினேனே
ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே
பாழ் ஊர் கிணற்றின் தூர்க என் செவியே
நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி
குவளை பைம் சுனை பருகி அயல
தகர தண் நிழல் பிணையொடு வதியும்
வட திசையதுவே வான் தோய் இமயம்
தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின்
பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே - புறம். 132

வரி விளக்கம்:

முன் உள்ளுவோனை = முதலில் நினைத்துப்பார்க்க வேண்டியவனை
பின் உள்ளினேனே = பின்னால் நினைத்துப்பார்த்தேனே
ஆழ்க என் உள்ளம் = எனது அறிவு மறைந்துபோகட்டும்
போழ்க என் நாவே = எனது நாக்கு பிளந்து போகட்டும்
பாழ் ஊர் கிணற்றின் = பாழடைந்த ஊரிலுள்ள கிணறு போல
தூர்க என் செவியே = எனது காதுகள் தூர்ந்து போகட்டும்
நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி = நரந்தைப் புல்லை மேய்ந்த கவரி மானானது
குவளை பைம் சுனை பருகி அயல = குவளை மலர் பூத்த சுனையில் நீரினைப் பருகி அருகிலுள்ள
தகர தண் நிழல் பிணையொடு வதியும் = தகர மரத்தின் குளிர்ந்த நிழலில் தனது துணையுடன் தங்குகின்ற
வட திசையதுவே வான் தோய் இமயம் = மேகங்கள் தவழும் இமயமலையானது வடதிசையில் இருக்க
தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின் = தென்திசையில் ஆய்குடி இல்லை என்றால்
பிறழ்வது மன்னோ இ மலர்தலை உலகே = பரந்த இவ் உலகத்தின் நிலைமாறுவது உண்மையே.

பொருள் விளக்கம்:

முதலில் நினைத்துப்பார்க்க வேண்டியவனைப் பின்னால் நினைத்துப்பார்த்தேனே. ஐயகோ ! எனது அறிவு மறைந்துபோகட்டும். எனது நாக்கு பிளந்து போகட்டும். பாழடைந்த ஊரிலுள்ள கிணறு போல எனது காதுகள் தூர்ந்து போகட்டும். நரந்தைப் புல்லை மேய்ந்த கவரி மானானது குவளை மலர் பூத்த சுனையில் நீரினைப் பருகி அருகிலுள்ள தகர மரத்தின் குளிர்ந்த நிழலில் தனது துணையுடன் தங்குகின்ற மேகங்கள் தவழும் இமயமலையானது வடதிசையில் இருக்க தென்திசையில் ஆய்குடி மட்டும் இல்லை என்றால் பரந்த இவ் உலகத்தின் நிலைமாறுவது உண்மையே.

மேல் விளக்கம்:

ஆய்க்குடியைச் சேர்ந்த மன்னன் ஆய் அண்டிரனைப் புகழ்வதாக இப் பாடலை இயற்றியுள்ளார் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். ' வடக்கு வளர்கிறது; தெற்கு தேய்கிறது ' என்று ஒரு சொலவடை உண்டு. இது புவியியலைப் பொறுத்தமட்டிலும் உண்மையே. இந்தியாவின் வடக்கில் உள்ள இமயமலையானது வளர்ந்து கொண்டே இருப்பதாகப் புவியியல் வல்லுநர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். தெற்கில் இருக்கும் பரந்த நிலப்பரப்பில் வாழும் மக்கள் நிலத்தினை வெட்டியும் தகர்த்தும் அதனைத் தேய்த்துக்கொண்டே செல்கின்றனர். இப்படி ஒருபுறம் வளர்ந்துகொண்டே இருக்க, இன்னொரு புறம் தேய்ந்துகொண்டே இருந்தால் இந்தியத் துணைக்கண்டத்தின் சமநிலை பாதிக்கப்படுமே என்ற அச்சம் ஏற்படுவது இயற்கைதான். ஆனால், இதுபோன்ற அச்சம் சங்ககாலத்திலேயே இப் புலவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதைத்தான் இப்பாட்டில் சொல்லி இருக்கிறார். எப்படி?.

வடக்கில் இருக்கும் இமயமலையானது வளம் மிக்கதாய் இருந்திருக்கிறது. அங்கே நீர் வளம், உணவு வளம், கனிம வளம் என்று அனைத்து வளங்களும் ஒருகாலத்திலே இருந்திருக்கிறது. அங்கே நரந்தைப் புற்கள் மிகுதியாக வளர்ந்திருக்கின்றன. நறுமணமும் சுவையும் மிக்க இப் புற்களை உண்ட மான் கூட்டமானது அங்கிருந்த சுனைகளிலே நீரினைப் பருகி அருகிலிருந்த தகர மரங்களின் நிழலில் தங்கி இளைப்பாறுகின்றன. இந்தத் தகர மரங்களும் நறுமணப் பொருள்களைத் தருபவையே. தகர மரங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட சாந்தினை பெண்கள் நறுமணத்திற்காகப் பயன்படுத்துவதனை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அதுமட்டுமின்றி, நறுமணம் வீசும் பன்மலர்ச் சோலைகளும் இமயமலையில் உண்டு என்று முன்னர் கட்டுரையில் கண்டோம். இப்படி நறுமணத்திற்குப் புகழ்பெற்ற இடமாக ஒருகாலத்தில் இமயமலை இருந்திருக்கிறது.

வடக்கில் இமயமலையானது பல வளங்களுக்கும் நறுமணத்திற்கும் புகழ்பெற்று விளங்கும்போது அதற்கு இணையாக தெற்கில் ஒரு இடம் இருந்தாக வேண்டுமே. அப்போதுதானே சமநிலை நிலவும். அந்த இடம் எது?. அதுதான் ஆய்க்குடி என்கிறார் புலவர். இமயமலையினைப் போலவே ஆய்க்குடியும் பல வளங்களை உடையதே. காரணம், நீர்வளமும் உணவு வளமும் மிக்க ஆய்க்குடியானது பழனிமலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. பொதியில் மலை என்றும் பொதிகை மலையென்றும் அழைக்கப்படுவதான பழனிமலையின் அடிவாரத்தில் கடம்ப மரங்கள் அதிகமாக உள்ளன. இம் மரங்களின் பூக்கள் இனிய நறுமணம் மிக்கவை. பலவிதமான நறுமணப் பொருட்கள் தயாரிக்க இவை பயன்படுத்தப்படுகின்றன. ஆக, வடக்கில் இமயமலையைப் போலவே தெற்கில் பழனிமலையும் வளம் மிக்கதாய் நறுமணத்திற்குப் புகழ் பெற்றதாய் அக் காலத்தில் விளங்கி இருக்கிறது. இதை இப்பாடலில் நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாக அறியவைக்கிறார் புலவர்.

வடக்கில் முப்பெரும் வேந்தர்கள் ஆட்சிபுரிய, தெற்கில் ஆய் போன்ற சிற்றரசர்கள் ஆட்சிபுரிந்திருக்க வேண்டும். பேரரசர்களிடம் பரிசில் பெறமுடியாமல் வருந்திய புலவர் ஆய் அண்டிரனைப் பற்றிப் பின்னரே அறிந்துகொள்கிறார். முதலிலேயே அவனை அறிந்துகொள்ளாமல் போனதற்காக தனது அறிவினை மறைந்துபோகட்டும் என்கிறார்; அவனைப் பாடாமல் போனதற்காக தனது நாக்கினைப் பிளந்துபோகட்டும் என்கிறார்; அவனது புகழைக் கேட்காமல் போனதற்காக தனது காதுகள் தூர்ந்து போகட்டும் என்கிறார். இந்தியாவில் உள்ள மற்ற மலைகளைக் காட்டிலும் உயரத்திலும் புகழிலும் இமயமலையே முதன்மை என்றாலும் அதற்கு ஒருசற்றும் குறையாத புகழுடையது ஆய் அண்டிரனின் பழனிமலை என்கிறார் புலவர். இல்லை என்று வந்தோருக்கு உணவினையும் பொருளையும் யானைகளையும் இன்முகத்துடன் வழங்கி இமயத்துக்கு நிகரான புகழ்பெற்றவன் ஆய் அண்டிரன் என்று இம் மன்னனைப் புகழ்ந்து பல பாடல்களைப் பாடியிருக்கிறார் இப்புலவர்.

புலவருடைய காலத்தில் தமிழ் மன்னர்களின் ஆட்சியானது வடக்கே இமயம் முதலாக தெற்கே பழனிமலை ஆய்க்குடி வரையிலும் பரவி இருந்தது என்ற கருத்து இப்பாட்டின் மூலம் தெரிய வருகிறது. அவ்வகையில் இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்ற கருத்துக்கு இப்பாடலையும் ஒரு சான்றாகக் கொள்ளலாம்.

.... தொடரும்.....

திங்கள், 14 அக்டோபர், 2013

தீதும் நன்றும் - பகுதி 2 - ( விதியை வெல்ல முடியும்! )

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாது என்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இறங்கும் மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பதை திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
                            - புறம்: 192

விளக்கமும் திருத்தமும்:

எல்லா ஊரும் எனது ஊரே; எல்லா மக்களும் எனது உறவினர்களே.

- இந்தப் பாடலின் நோக்கத்தை இந்த முதல்வரி தான் பறைசாற்றி நிற்கிறது. இந்த வரி எவ்வாறு சரி என்பதை விளக்கத்தான் இந்த முழுப்பாடலும் எழுதப்பட்டுள்ளது. எல்லா ஊரையும் ஏன் உங்கள் ஊர் என்று சொல்கிறீர்? எல்லா மக்களையும் ஏன் உங்கள் உறவினர் என்று சொல்கிறீர்கள்? வெறும் பேச்சுக்கு வேண்டுமானால் நீங்கள் இவ்வாறு கூறுவது நன்றாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் இதெல்லாம் சரிப்பட்டு வருமா? மற்ற ஊர் மக்கள் இதை ஒப்புக் கொள்வார்களா?. உங்கள் கூற்றை சரி என்று நீங்கள் உறுதிசெய்ய இயலுமா?. இதுபோன்ற கேள்விகள் இந்த முதல்வரியினைப் படிக்கின்ற அத்தனை பேருக்கும் எழும் என்பது புலவருக்குத் தெரியும். அதனால் தான் அடுத்தடுத்த வரிகளில் இக் கேள்விகளுக்கான விடையினை வைக்க முயல்கிறார் புலவர். ஆனால்.......

தீமையும் நன்மையும் பிறரால் விளைவதில்லை.

- முதல் வரியே மகா குழப்பம். இதில் இரண்டாம் வரியில் இன்னும் குழப்புகிறாரே. தீமையும் நன்மையும் பிறரால் வருவதில்லையாம். பின் யாரால் வருகிறதாம்?. நம்மாலா? அதாவது நாம் செய்யும் வினைகளால் தான் நமக்கு நன்மையும் தீமையும் வருகிறது என்று சொல்ல வருகின்றாரா?. ஆனால், உண்மை அப்படி இல்லையே. பிறருக்குத் தீமையே செய்யாத ஒருவருக்கு தீமை வரத்தான் செய்கிறது. பிறருக்கு நன்மையே செய்யாத ஒருவருக்கு நன்மையும் வரத்தான் செய்கிறது. இதை நாம் கண்கூடாக வாழ்க்கையில் பார்க்கிறோம். அப்படியென்றால் இதற்கு என்னதான் பொருள்?. சரி சரி பொறுமையாக மூன்றாம் வரியினைப் பார்ப்போம்.

வறுமைப்படுதலும் செல்வம் நிறைதலும் அவ்வாறே.

-  வறுமைப்படுதலை நோதலென்றார். ஆம், வறுமையினை விடக் கொடிய நோய் ஒன்று உண்டா?. அனைத்துத் துன்பங்களுக்கும் அடிப்படை ஆதாரமே இந்த வறுமை தானே. செல்வம் நிறைதலை தணிதலென்றார். ஆம், செல்வம் இருந்தால் தானே வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். இந்த வறுமையும் செல்வமும் கூட பிறரால் வருவதில்லையாம். அப்படியென்றால், ஒருவன் பிச்சைக்காரனாய் வாழ்வதற்கும், செல்வந்தராய் இருப்பதற்கும் காரணம் என்ன?. பொறுமையாக அடுத்த வரியில் அதற்கான விடையினைத் தேடுவோம். (நோதல் = வறுமைப்படுதல். தணிதல் = நிறைதல். அகராதி காண்க.)

சாவு என்பது புதுப்பிக்கத் தக்கதல்ல.

- ஆ, எவ்வளவு உண்மையான கருத்து !!!. நமது ஓட்டுநர் அடையாள அட்டையினை அதன் தேதி முடிந்ததும் புதுப்பிக்கிறோம். நமது வெளிநாட்டுக் கடவுச்சீட்டினையும்
அதன் தேதி முடிவடைந்தால் புதுப்பிக்க முடிகிறது. இதுபோல பலவற்றை ஏன் நமது இளமையைக் கூட புதுப்பிக்க முயல்கிறோம். ஆனால், இந்த சாவினை மட்டும் நம்மால் புதுப்பிக்க முடிவதில்லையே. ஏன் நம்மால் சாவினை தள்ளிப்போட முடியவில்லை?. வாழ்நாள் என்னும் சீட்டில் எழுதப்பட்டுள்ள கடைசி தேதியை முடிவு செய்தது யார்?. விடைதெரியாத இக் கேள்விகளுக்கு விடையைக் காண அடுத்த வரிக்குச் செல்வோம். (புதுவுதல் = புதுமையாக்குதல் / புதுப்பித்தல்)

இல்வாழ்க்கை இனிமையானது என்று நான் மகிழவும் இல்லை;

- இல்வாழ்க்கை என்பதே இன்பமும் துன்பமும் நிறைந்தது தான். நன்மை விளையும் போது மகிழ்வதும் தீமை விளையும் போது வருந்துவதும் மனித உயிரின் இயல்பு தான். ஆனால், இங்கு புலவர் தனது இல்வாழ்க்கையினை எண்ணிப் பார்த்து இவ்வாறு சொல்கிறார். இல்வாழ்வில் தனக்கு எல்லையற்ற இன்பங்கள் கிடைத்த போதும் கூட தனது மனம் மகிழவில்லை என்கிறார். சரி, அவரது குடும்ப விசயங்களை ஏன் அவர் நம்மிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்?. இதனால் யாருக்கு என்ன பயன்?. இன்னும் கீழே இறங்கி பார்ப்போம்.

துறவு துன்பமானது என்று நான் வருந்தவும் இல்லை.

- இம்மை எனப்படும் இல்லறத்தில் தனது 60 அகவை வரை மனைவியுடனும் மக்களுடனும் வாழ்ந்து முடித்துவிட்டு இப்போது மறுமை எனப்படும் துறவற வாழ்வில் ஈடுபட்டுள்ள புலவர் இவ்வாறு கூறுகிறார். உண்மையில் இல்லறத்தைக் காட்டிலும் துறவறத்தில் இடையூறுகள் பல உண்டு. முதல் இடையூறு தனிமை. இல்லறத்தில் பலருடன் அளவளாவி வாழ்ந்த ஒருவருக்கு இந்தத் தனிமையினை எதிர்கொண்டு வெல்வதென்பது மிகக் கடினமான செயல். இரண்டாவது இடையூறு உணவு. என்னதான் துறவியானாலும் உடல் இருக்கும் வரை பசிக்கு உணவு வேண்டுமே. காட்டிலும் மலையிலும் வாழும் துறவிகளுக்குத் தான் தெரியும் அங்கே உணவு பெறுவது எவ்வளவு கடினமானதென்று. இதுபோக பருவகால மாற்றங்கள், விலங்குகள் என்று பல்வேறு இடையூறுகள் உண்டு. இவற்றையெல்லாம் எதிர்கொண்டு சமாளித்து வாழ்வதற்குக் கலங்காத உள்ளம் வேண்டும். ஆனால் புலவர் தனது இல்வாழ்வில் இன்பத்தைக் கண்டு மயங்காததால் துறவறத்தின் துன்பங்கள் அவரைப் பாதிக்கவில்லை என்று தெரிகிறது. ம்ம்.. இப்போது தான் மெல்லப் புரியத் துவங்குகிறது. இன்னும் அடியில் செல்வோம்.

மின்னலுடன் மழையானது ஒருதுளியாகத் துவங்கி தொடர்ந்து பெய்ததால்

- அனைத்து உயிர்களின் தோற்றமும் ஒரு புள்ளியில் தான் என்பதைப் போல இந்த மழையும் ஒரு துளியில் தான் தோன்றுகிறது. பூமியில் இருக்கும் நீர் கதிரவனின் வெப்பத்தால் ஆவியாகி மேலே சென்று மேகங்களாகி மிதக்கிறது. இந்த மேகங்களில் மின்னல் ஏற்பட அவை மழைத்துளியாகி அவையெல்லாம் ஒன்று சேர்ந்து மழையாகி மீண்டும் பூமியை நோக்கி விழுகிறது. சரி சரி இதெல்லாம் தெரிந்தது தானே, இதை ஏன் இங்கே சொல்ல வேண்டும்?. அடுத்த வரிக்குச் செல்வோம்.

பாறைகளில் மோதிக் கீழிறங்கிய நீர் வலிமையானதோர் காட்டாறாய் மாற

- ஆ, இது தான் மிக இன்றியமையாத வரி. வலிமையே இல்லாமல் காற்றில் மிதக்கின்ற ஒரு மேகமானது மழைத்துளியாய் மாறியதும் அதற்கு லேசாக ஒரு ஆற்றல் உருவாகிறது. இத்துளிகள் எல்லாம் ஒன்று சேர்ந்ததும் அதன் ஆற்றல் பெருகுகிறது. இதனால் பூமியை நோக்கி அது இழுக்கப்படுகிறது. பூமியை வந்தடைந்த இவை சிறு ஓடைகளாய் உருவெடுத்து மீண்டும் பல்கிப் பெருகுவதால் வலிமையானதோர் ஆற்றல் பொருளாய் அதாவது ஒரு காட்டாறாய் மாறுகிறது. பெரிய பெரிய பாறைகளைக் கூட இடம்பெயரச் செய்யும் இந்த அளப்பரிய ஆற்றல் நீருக்குக் கிடைத்தது எவ்வாறு?. நீரானது பூமியின் மேல் பரப்பிலேயே இருந்திருந்தால் இந்த வலிமை அதற்குக் கிடைத்திருக்குமா? ஒருபோதும் இல்லை தானே. இந்த நீருக்கு ஒரு இயக்க ஆற்றலைக் கொடுத்தது எது?. பூமிதான்; பூமியின் ஈர்ப்பு விசைதான். சரி, அடுத்த வரியில் என்ன சொல்கிறார் பார்ப்போம்.

அந்நீரில் சிக்கிய படகின் போக்கினைப் போல

- அளப்பரிய ஆற்றல் கொண்ட ஒரு காட்டாற்றிலே ஒரு படகு சிக்கிக்கொண்டால் அதன் கதி என்னவாகும்?. படகோட்டியின் விருப்பத்திற்கேற்ப படகினை அப்போது ஓட்டிச் செல்ல முடியுமா?. முடியாது. காட்டாற்றின் போக்கில் தான் படகு பயணிக்க முடியும். அங்கே அப்போது படகோட்டியின் முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போகும். ஆனால் அதே ஆறு காட்டாறாக மாறுவதற்கு முன்புவரை அந்த ஆற்றில் தான் விரும்பிய வண்ணம் படகோட்டியானவன் படகினை ஓட்டிக்கொண்டு தானே இருந்தான். இப்போது ஏன் அவனால் முடியவில்லை?. ஏனென்றால் அப்போது அவனது முயற்சிகளை வெல்லும் ஆற்றல் ஒன்று இல்லை. இப்போது இருக்கிறது, காட்டாற்றின் வடிவாக. தனக்கு எதிராக தன்னை வெல்லும் பேராற்றல் ஒன்று மெல்லமெல்ல உருவாகி வருவதை அதுவரை அவனாலேயே அறிய முடியவில்லை பாருங்கள். இதை என்னவென்று சொல்வீர்கள்?. புலவர் இதை என்னவென்று சொல்கிறார்?. வாருங்கள் அடுத்த வரியில் பார்ப்போம்.

மன்னுயிர் விதியின் போக்கில்தான் இயங்கும் என்பதனை

- ஓ, இதைத்தான் புலவர் விதியென்று சொல்கிறாரா?. அதாவது உயிர்களின் இயக்கமானது பார்ப்பதற்குத் தன்னிச்சையாக நடப்பது போலத் தோன்றினாலும் உண்மையில் அவை விதியின் ஆளுமைக்குட்பட்டுத் தான் நடப்பதாகக் கூறுகிறார் புலவர். காட்டாறு உருவாகும் வரை அதுபற்றி அந்த படகோட்டி அறிந்திருக்காததைப் போல ஒரு செயல் நடவாத வரை விதியானது தன்னை மறைத்தே வைத்திருக்கும். செயல் நிகழும்போது தான் விதியின் வலிமையை நம்மால் உணரமுடிகிறது. விதியால் நிகழ்த்தப்படும் ஒரு செயல் சிலருக்கு நன்மையினையும் அதேசமயம் சிலருக்குத் தீமையினையும் தருகிறது. இங்கு தீமையோ நன்மையோ விதி ஒன்றுதான்; செயலும் ஒன்றுதான். ஆனால், விளைவுகள் இரண்டு. இடம், நேரம், சூழல் என்று அந்த செயலுடன் தொடர்புடையவை மூன்று. ஆக, ஒரு செயல் ஒரு சூழலில் நமக்கு நன்மை தருமா தீமை தருமா என்பதனை அந்த விதி தான் தீர்மானிக்கிறது என்கிறார். சரி, விதியின் இந்த அளப்பரிய ஆற்றலை அவர் எவ்வாறு அறிந்தார்?. அடுத்த வரியைப் பார்ப்போம். 

வெளியிடத்திலே (நிகழ்ந்த) ஓர் காட்சியின் மூலமாகக் கண்டு தெளிந்தோம் ஆகையால்
- திறந்த வெளியிடத்திலே நிகழ்ந்த ஓர் காட்சியினைக் கண்டு அதன்மூலமாக விதியின் வலிமை பற்றிய தெளிவினைத் தான் பெற்றதாகச் சொல்கிறார். அப்படி அவர் கண்ட காட்சி எது?. அது தான் கோடைமழைக் காட்சி. இக் கட்டுரையின் முதல் பகுதியில் விரிவாகக் கூறப்பட்ட மழை நிகழ்ச்சி. மலையில் நிகழ்ந்த மழை நிகழ்ச்சியும் அதனால் உண்டான விளைவுகளும் புலவருக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தன. யாரும் எதிர்பாராதவண்ணம், அதுவரை பழங்களை உண்டு மகிழ்ந்திருந்த குரங்குகளும், மீன்பிடித்து மகிழ்ந்திருந்த படகோட்டிகளும் திடீரெனத் தோன்றிய மழை வெள்ளத்தில் காணாமல் போனது அவரை சிந்திக்கத் தூண்டியது. இந்த மழை வெள்ளத்தின் அளப்பரிய ஆற்றலை இப்பாடலில் விதியின் ஆற்றலுடன் ஒப்பிடுகிறார்.  ( திறவோர் = திறவு + ஓர். திறவு = வெளியிடம். அகராதி காண்க.)

பெரியோரின் சிறப்பற்ற கீழ்ச்செயல் கண்டு வியப்பதும் இல்லை;

- மேன்மை மிக்க பெரியோர்கள் செய்யும் செயல்கள் யாவும் நற்செயல்கள் தான். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை தான். ஆனால் அத்தகைய மேன்மை தாங்கிய பெருமக்கள் ஒருநாள் தமது பெருமை குன்றுமாறு இழிசெயல் புரிந்தால் என்னவாகும்?. என்னது? அவரா? அவரா இந்த மாதிரிக் காரியம் செய்தார்? என்னால் நம்பவே முடியவில்லையே.!. என்று வியப்படைகிறோம் அல்லவா?. இவ்வாறு வியப்படைவது உலக இயல்பு தான். ஆனால் நம் புலவர் அவ்வாறு வியப்படைய மாட்டேன் என்கிறார். ஏன்? ஏனென்றால், பெரியோரின் இச் செயலுக்குக் காரணம் அவரல்லர். விதி, விதி தான் காரணம். ஆம், விதிவசத்தால் தன் மதியிழந்து அவர் செய்யும் செயலே இந்த இழிசெயல் என்கிறார். எவ்வளவு பெரிய மனிதரும் விதியின் கைப்பாவை ஆகிவிட்டால் அவர் கதி அதோ கதிதான் என்பதை நாமும் பல கதைகளில் படித்திருக்கிறோம். பெரியோரின் இழிசெயலுக்குப் பின்புலமாக விதி இருக்கும் காரணத்தினால் தான் புலவர் அச்செயல் கண்டு தான் வியப்படைவதில்லை என்கிறார். சரிதானே?. (மாட்சியில் = மாட்சி + இல் = மாட்சியற்ற )

சிறியோரின் நற்செயல் கண்டு இகழ்வதும் இல்லை.

- கீழ்க்குணம் மிக்க சிறியோரின் செயல்கள் அனைத்தும் தீய செயல்களாகத் தான் இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும். தனது வாழ்க்கை முழுவதும் பிறருக்குத் தீமையே செய்து வந்த ஒருவன் திடீரென்று நல்லவனாகி நன்மை செய்யத் துவங்கினால் என்னவாகும்?. என்னது? அவனா?. அவனாவது நல்லது செய்றதாவது!. என்று அவன் செய்த நல்ல காரியத்தையும் இகழ்ச்சியாகவே மக்கள் பேசுவர். இதுவும் உலக இயல்பு தான். ஆனால் நம் புலவர் இதிலும் மாறுபடுகிறார். தான் அவ்வாறு இகழமாட்டேன் என்கிறார். ஏன்?. ஏனென்றால் இதுவரை தீமையே செய்த வந்த ஒருவன் நல்லவனாய் நற்செயல்கள் புரிவதும் விதியினால் தான் என்கிறார். ஆம், நல்ல மதியினைக் கெடுக்க வல்லதும் கெட்ட மதியினை திருத்த வல்லதும் இந்த விதி என்கிறார் புலவர். ஒருவகையில் பார்த்தால் இந்த விதியானது வள்ளுவர் சொன்ன மழை போலத்தான் இருக்கிறது. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை என்று கூறிய வள்ளுவர் வாக்கு இங்கு பொருத்தமாய் அமைவதைப் பாருங்கள்.

பாடலின் சாரம்:

இனி, இப்பாடலின் மூலமாக புலவர் கணியன் பூங்குன்றனார் கூற வருகின்ற கருத்தின் சாரத்தினைக் கீழே காணலாம்.

ஒருவருக்கு வரும் நன்மையும் தீமையும் பிறரால் வருவதில்லை; மாறாக விதிவசத்தாலே வருகின்றது. ஒருவரின் வறுமை நிலையினையும் செல்வநிலையினையும் கூட இந்த விதிதான் முடிவு செய்கிறது. ஒருவரது வாழ்க்கை இனிமையானதாக இருப்பதும் துன்பம் நிறைந்ததாக இருப்பதும் அதே விதியினால் தான். சாவும் கூட முன்னரே விதியினால் நிச்சயிக்கப்பட்ட ஒன்றுதான். நல்லோரின் மதியினைக் கெடுத்து தீமை செய்ய வைக்கவும் தீயோரை நல்வழிப்படுத்தி நன்மை செய்ய வைக்கவும் இந்த விதியினால் முடியும். ஆம், இந்த விதியானது மிக மிக மிக வலியது. இதை வெல்லவே முடியாதா? முடியும்!

என்றால் விதியை வெல்லும் வழிதான் என்ன?. அது தான் ஒற்றுமை. ஆம், ஒற்றுமை ஒன்றே விதியின் வலிமையைக் குறைக்க வல்லது.

இது எப்படி சாத்தியமாகும்?. முதலில் விதி எவ்வாறு வலிமை பெறுகிறது என்று பாருங்கள். இதற்கு இப் பாடலில் வரும் காட்டாற்றினையே சான்றாக எடுத்துக் கொள்வோம். பூமியில் பொழியும் மழைநீர் முதலில் சிறு சிறு ஓடைகளாய்த் தான் உருவெடுக்கிறது. பின்னர் இவை ஒன்று சேர்ந்து ஒரு வலிமை மிக்க காட்டாறாய் மாறுகிறது. இந்த மாற்றத்திற்கு ஊன்றுகோலாய் இருப்பது புவி ஈர்ப்பு விசை தான். அதைப்போல மனிதர்கள் நிலத்தால் இனத்தால் மொழியால் பிரிந்திருந்தாலும் அன்பு என்னும் ஈர்ப்பு விசையினால் ஒன்றாக்கப் பட்டால் மனித ஆற்றல் வலிமை பெறும். ஒற்றுமையால் வலிமை பெற்ற மனித ஆற்றலை விதியினால் அசைக்க முடியாது. இது எப்படி?. மீண்டும் பாடலில் இருந்தே சான்று பார்ப்போம்.

பாறைகள் தனித்தனியாய் இருக்கும் போது அவற்றை மிக எளிதாக ஒரு காட்டாறு இடம்பெயர்த்து விடும். ஆனால் அதே பாறைகள் ஓரிடத்தில் குழுமி நெருக்கமாக இருந்தால் அவற்றில் ஒன்றைக் கூட காட்டாற்றினால் அசைக்க முடியாது. மாறாக, அது பாறைகளைச் சுற்றிச் செல்லும். காரணம், ஒற்றுமையினால் விளைந்த பேராற்றல். அதைப்போல மனிதர்கள் பிரிவுற்று இருக்கும் பொழுது வலிமை குறைந்தவர்களாகத் தான் இருப்பர். ஒன்றாகச் சேரும்பொழுது விதி கூட இந்த மனித ஆற்றலுக்கு முன் வளைந்து கொடுக்கும். இதைச் சில நடைமுறை எடுத்துக்காட்டுக்களுடன் காணலாம்.

ஒருவருக்கு வாழ்வில் நன்மையும் தீமையும் வறுமையும் செல்வமும் இன்பமும் துன்பமும் விதிவசத்தால் தான் வருகின்றது என்று முன்னர் கண்டோம். ஆனால் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் அன்பு பூண்டொழுகும் பொழுது அங்கு தீமையில்லை; வறுமையில்லை; துன்பமுமில்லை. ஏனென்றால் ஒருவருக்கொருவர் அன்பு பூண்டபின், பிறருக்குத் தீமை செய்யமாட்டார்; ஒருவருக்கு வறுமையோ துன்பமோ விளைந்தால் ஓடோடிச் சென்று அவர் வறுமையினைக் களைவார்; அவரது துன்பத்தினைத் துடைப்பார் அன்றோ!. இவ்வாறு மனிதரின் ஒற்றுமை என்னும் பேராற்றலுக்கு முன்னால் விதியின் வலிமை குன்றத் துவங்கி விடும். சுருங்கச் சொன்னால் மனிதருக்கிடையிலான இடைவெளி கூடக்கூட விதி வலிமை பெறும்; குறையக் குறைய விதி வலியிழக்கும். மனிதம் வெல்லும்.!. இதற்கான முதல் படி அனைத்து ஊர்களையும் தம் ஊராக நினைத்து வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதலும் அனைத்து மக்களையும் தமது உறவினராகப் பேணுதலுமே.

இதைக் கருத்தில் கொண்டே புலவர் கூறினார்: யாதும் ஊரே யாவரும் கேளிர். என்ன அவர் கூற்று சரிதானே?.

சனி, 12 அக்டோபர், 2013

தீதும் நன்றும் - பகுதி 1 ( யாதும் ஊரே ! )

அந்தக் கல்மண்டபத்தின் கருவறையினை பெரியது என்று சொல்ல முடியாது. நான்கு பேர் படுத்தால் புரண்டு படுக்க முடியாத அளவுக்கு சிறியது தான். அந்த உச்சி வெயில் வேளையில் அவர் கருவறையின் நடுவில் கண்மூடி அமர்ந்திருந்தார். கருவறையில் இருந்த ஒரு சிறிய சாளரத்தின் வழியாக உள்ளே நுழைந்த வெயில் கருவறையினை வெளிச்சம் போட்டுக் காட்டியது. கருவறையின் ஒரு மூலையில் ஒரு பாத்திரம் மட்டுமே கிடந்தது.

அவர் திடீரென்று கண் திறந்து பார்த்தார். பசி அவரது வயிற்றைப் பதம் பார்த்திருக்க வேண்டும். ஒட்டிப் போன வயிறுடன் அவர் இருந்தாலும் அவரது கண்களில் ஒரு ஒளி தெரிந்தது. அவரது உடல் அவருக்கு அகவை 60 க்கு மேலிருக்கலாம் என்று கூறினாலும் அவரது ஒளி வீசும் கண்கள் அவரை இளமையாகவே காட்டின. இடுப்புக்குக் கீழ் ஒரே ஒரு நூலாடை அணிந்திருந்தார். இன்னொரு நூலாடையின் மேல் அவர் அமர்ந்திருந்தார். அது அவரது மேலாடையாகவும் இருக்கலாம்.

இப்போது அவரது கண்கள் எதையோ தேடின.

இங்கே தானே வைத்திருந்தேன். எங்கே போயிருக்கும்?

பசிக்கும் வயிறுடன் மெல்ல எழுந்து கருவறையினை விட்டு வெளியில் முன் மண்டபத்திற்கு வந்தார். அங்கும் யாரையும் காணவில்லை.

அட, எங்கே போயிருக்கும் அவை? யார் எடுத்துச் சென்றிருப்பர்?.

முன் மண்டபத்தினையும் விட்டு நிலத்தில் கால் பதித்து மண்டபத்தின் அருகில் இருந்த அந்த அரச மரத்தடிக்கு வந்தார். அந்த அரச மரம் நல்ல உயரத்தில் நன்கு பரந்து விரிந்து வளர்ந்திருந்தது. தலையை மெல்ல உயர்த்தி மரத்தை நோக்கினார். மரக் கிளைகளில் ஒரு சில குரங்குகள் தென்பட்டன. அவற்றை உற்றுப் பார்த்தபோது ஒரு குரங்கின் கையில் கொய்யாக் கனிகளும் இன்னொன்றின் கையில் மாங்கனியும் இருப்பதைக் கண்டார்.

ஓ நீங்கள் தானா அப் பழங்களை எடுத்துச் சென்றது. பரவாயில்லை. உங்களுக்கும் பசிக்கும் தானே. சாப்பிடுங்கள். நான் கீழே இறங்கி சாரலில் இருந்து பழங்களைப் பறித்து வருகிறேன்.

எண்ணியவர் கீழே சாரலை நோக்கினார். அது மிக மிக ஆழத்தில் இருந்தது. ஆம், அவர் இருந்த கல் மண்டபம் அந்த மலையின் உச்சியில் இருந்தது. பூங்குன்றம் என்பது அம் மலையின் பெயர். பெயருக்கேற்றவாறே அம் மலையில் பல்வகையான பூக்களின் மணம் கமழ்ந்தவாறு இருக்கும். இப்போது கோடை காலமாதலால் பூக்கள் இன்றி சில மரங்கள் தங்கள் இலைகளையும் உதிர்த்துவிட்டு கூடாகக் காட்சியளித்தன.

அவர் கீழே இறங்கத் துவங்கிய நொடியில் திடீரென்று அவ்விடத்தை இருள் சூழ்வது போலத் தோன்றியது. ஆம், அங்கிருந்த மேகங்கள் எல்லாம் ஒன்று கூடி மலை உச்சிக்கு வந்து நின்றன.

ஓ மழை வரப் போகிறது போலும். இனி நாம் இப்போதைக்கு இறங்கிச் செல்ல முடியாது.

எண்ணியவர் அண்ணாந்து மேகங்களைப் பார்த்தார். நச்சென்று அவரது முகத்தில் விழுந்தது ஒரு மழைத் துளி.

கோடையின் வெப்பத்தால் வெப்புண்டு கிடந்த அவரது முகத்தில் மழைத்துளி விழுந்ததும் அவரது உடல் புல்லரித்தது. உடன் குளிர் காற்று வீசத் துவங்கியது. முன் மண்டபத்தின் மேல் ஏறி நின்று கொண்டு கீழே பார்த்தார்.

மலைச்சாரலின் முடிவில் ஒருபுறம் ஒரு சிறிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது. ஓடிக்கொண்டிருந்தது என்பதை விட தேங்கி இருந்தது என்று சொல்லலாம். சிறிதளவே நீர் இருந்த போதிலும் அதிலும் ஒரு சிலர் படகோட்டிக் கொண்டும் மீன் பிடித்துக் கொண்டும் இருந்தார்கள். ஆற்றுக்கு அந்தப் பக்கமாக இன்னொரு மலை இருந்தது. ஆனால் அதில் மரங்கள் மிகக் குறைவாகவும் கற்கள் நிறைந்தும் இருந்தன. பெரிய பெரிய பாறைகள் ஆங்காங்கே வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது போல் இருந்தன. இந்த இரண்டு மலைகளுக்கும் இடையில் தான் அந்த ஆறு மிக மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது.

திடீரென மின்னல் வெட்டியது. அவ்வளவு தான், வானமே பொத்துக் கொண்டதோ என்று நினைக்கும் அளவுக்கு பெரும் மழை பொழியத் துவங்கி விட்டது. இப்போது மண்டபத்தைச் சுற்றியிருந்த எதையும் அவரால் பார்க்க இயலவில்லை. ஏன் அந்த மரம் கூடத் தெரியாத அளவுக்கு வலுவான மழை பெய்து கொண்டிருந்தது. இடியும் மின்னலும் மாறிமாறி ஏற்பட்டு அந்த இடத்தின் அமைதியைக் குலைத்து ஒருவித அச்சத்தை உருவாக்கிக் கொண்டிருந்தன.

அவர் அமைதியாய் முன் மண்டபத்தில் அமர்ந்து கொண்டு சிந்திக்கலானார்.

பாவம், இந்த குரங்குகளின் நிலை என்ன ஆகுமோ தெரியவில்லையே! இந்த பயங்கரமான மழையில் சிக்கிக் கொண்ட இவை இனி உயிர் தப்புமா? கடவுளே.

அவரது உடல் பசிக்காக ஏங்கினாலும் மனம் குரங்குகளின் நிலைக்காக வருந்தியது. மனம் பின்னோக்கிச் சென்றது.

இளம் வயதில் இல்வாழ்க்கையில் இருந்தபோது மனைவி, அவருக்குப் பலவகையான பழங்களை அருகிலிருந்து ஊட்டிய பொழுதுகளை எண்ணிப் பார்த்தார். அப்போது என் மனம் களிப்புற்று இருந்ததா? எண்ணிப் பார்த்தார். ம்கூம். இல்லை. இப்போது துறவு வாழ்க்கையில் உண்ண உணவின்றி பசியால் உழலும் இக் கணத்தில் என் மனம் துன்புறுகிறதா? இல்லை. ஆனால், இதோ இந்த உடல் தான் எதையாவது உண்ணத் தா என்று கேட்கிறது. ஒருநாளைக்கு ஒருவேளை உணவு தானே. அதுவும் பழங்கள் மட்டும் தானே. அதையேனும் கொடுக்கக் கூடாதா என்று ஏங்குகிறது. அது பாட்டுக்குக் கேட்டுக் கொண்டிருக்கட்டும். நாம் நமது வேலையினைக் கவனிப்போம்.

இப்போது அவர் கண்களை மூடிக் கொண்டார். உடலின் தேவையைப் புறந்தள்ளி விட்டு சூழலை முற்றிலும் மறந்துவிட்டு ஓகநிலையில் ஆழ்ந்தார். எவ்வளவு நேரம் அவ்வாறு இருந்தாரோ அவருக்குத் தெரியாது. கண்களைத் திறந்து பார்த்தார். இப்போது மழை விட்டிருந்தது. வானம் தெளிந்திருந்தது.

அருகிலிருந்த மரத்தைப் பார்த்தவர் துணுக்குற்றார். மரத்தில் இருந்த பல கிளைகள் முறிந்து தொங்கிக் கொண்டிருந்தன. குரங்குகளைக் காணவில்லை. அடடா, என்ன ஆயிற்றோ அவைகளுக்கு? பாவம்!.

அருகில் இருந்த மலையைப் பார்த்தவர் இன்னும் ஆச்சர்யமடைந்தார். அங்கிருந்த பாறைகளில் பலவற்றைக் காணவில்லை. ஒருசில இடம் பெயர்ந்திருந்தன.

ஓ மிக வலுவான மழை பெய்துள்ளதோ?. இந்த மலையின் கோலத்தையே மாற்றி அமைத்து விட்டதே இந்த மழை.

எண்ணிக் கொண்டே கீழே இருந்த ஆற்றைப் பார்த்தவர் அரண்டு போனார். அமைதியாக இருந்த அந்த ஆறு இப்போது காட்டாறாக மாறி இருந்தது. பல மரக்கிளைகள் அந்த ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. அங்கிருந்த எந்த ஒரு படகினையும் இப்போது காணமுடியவில்லை. ஒருவேளை அப் படகுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்குமோ? என்று எண்ணிக் கொண்டிருந்த பொழுதே அவரது எண்ணம் சரிதான் என்று மெய்ப்பிப்பதைப் போல ஒரு படகு அந்த ஆற்றில் பயங்கரமாக புரண்டு புரண்டு வந்து கொண்டிருந்தது. ஆற்றின் வேகத்துடன் ஈடு கொடுக்க முடியாமல் மூழ்குவதும் எழும்புவதுமாய் இருந்த அதன் நிலை அவரது மனதினை என்னமோ செய்தது. அப்போது......

கதிரவன் மேற்கில் மறையத் துவங்கினான்.

அவரது மனதில் ஒரு பாடல் உதிக்கத் துவங்கியது.


                      ............................... தொடரும்.