ஞாயிறு, 26 ஜூன், 2022

தமிழரின் பாரம்பரிய உடை "வேட்டி" அல்ல !!!


தமிழரின் பாரம்பரிய உடை 

“வேட்டி” அல்ல !!!

 

முன்னுரை:

சமீப காலமாக தமிழரின் பாரம்பரிய உடை வேட்டி தான் என்று நிறுவுவதற்கு சங்க இலக்கியங்களில் இருந்து தொடர்பில்லாமல் எதை எதையோ சான்றாகக் காட்டி இணையங்களில் பலர் கட்டுரை எழுதி வருகின்றனர். போதாக்குறைக்கு “கட்டிக்கோ ஒட்டிக்கோ” போன்ற விளம்பரங்களுடன் வேட்டிகளின் விற்பனையைப் பெருக்குவதற்கான முயற்சிகளும் மிகுந்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளோ வெள்ளை வேட்டியைக் கட்டிக்கொண்டு “அதுதான் தமிழரின் பாரம்பரிய உடை” என்பதைப் போல பொதுக்கூட்டங்களில் பேசியும் வருகின்றனர். ஆனால் இவர்கள் எல்லோரும் இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கும்போது தங்களது கருத்து முற்றிலும் தவறானது என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆம், தமிழர்களது பாரம்பரிய உடை வேட்டியே அல்ல. இதைப் பற்றி விளக்கமாக இக் கட்டுரையில் காணலாம். 

வேட்டி – சொல்லும் ஆக்கமும்: 

வேட்டி என்ற சொல் தமிழ்ச்சொல்லே இல்லை என்றும் வேச்~டி என்னும் சமக்கிருதச் சொல்லில் இருந்தே அது தோன்றியது என்றும் விவாதம் உண்டு. உண்மையில் வேட்டி என்ற சொல் தமிழ்ச்சொல்லே ஆகும். வேடு என்ற சொல்லின் அடிப்படையில் உருவானதே வேட்டி என்பதாகும். 

வேடு என்ற தமிழ்ச்சொல்லுக்குப் பாத்திரத்தின் வாயைச் சுற்றிக் கட்டும் ஆடை என்ற பொருள் அகராதிகளில் உண்டு. பாத்திரத்தின் வட்டமான விளிம்பைச் சுற்றிலும் கட்டி மூடுவதற்கும் வடிகட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்ட துணியே வேட்டி ஆகும். அதாவது, 

வேடு + இ = வேட்டி (ஆடு + அம் = ஆட்டம் என்பதைப் போல) 

வேடுவதற்காக அதாவது சுற்றிக் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட துணியே வேட்டி என்றானது. கண்கள் மற்றும் மூக்கு மட்டும் வெளியில் தெரியுமாறு தலையைச் சுற்றிக் கட்டி மறைத்துக் கொள்வதை வேடம் என்றும் அவ்வாறு செய்பவரை வேடர் என்றும் அழைத்தனர். அதாவது,

வேடு + அம் = வேடம் = தலையைச் சுற்றிக் கட்டி முகத்தை மறைத்தல்

வேடு + அர் = வேடர் = தலையைச் சுற்றிக் கட்டி முகத்தை மறைத்தவர் 

வேட்டி என்ற சொல் தமிழே என்றாலும் அச்சொல் தமிழ் இலக்கியங்களில் ஆளப் பெறவில்லை. இதை ஒரு காரணமாக முன்வைத்து, வேச்~டி என்ற சமக்கிருதச் சொல்லில் இருந்துதான் வேட்டி வந்தது என்று கூறுவது பொருந்தாது. காரணம், சமக்கிருதத்தில் வேச்~டி என்ற சொல்லுக்கான விளக்கம் சிறிதும் பொருத்தமற்றது. 

வேட்டியும் பயன்பாடும்: 

நீளமாக நெய்யப்பட்ட துணியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் எதுவுமே வேட்டி தான். வேட்டிக்கும் துண்டுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. சிறிய விரிப்பாக இருந்தால் துண்டு. சற்று பெரிய விரிப்பாக இருந்தால் வேட்டி. அவ்வளவுதான். பழங்காலத்தில் வேட்டி என்பது பாத்திர வாயில் கட்டி மூடுதல், வடிகட்டுதல், முகத்தை மறைத்துக் கொள்ளுதல் போன்ற வேலைகளுக்குப் பயன்பட்டதை மேலே கண்டோம். 

ஆனால் தற்காலத்தில் வேட்டியை இரண்டு விதமாகக் கட்டுகின்றனர். இடுப்பில் இருந்து பாதம் வரையிலும் முழுமையாகத் தொங்கவிட்டுக் கட்டுவது ஒருவிதம். அதையே முழங்கால் தெரியுமாறு தூக்கி மடித்துக் கட்டுவது இன்னொரு விதமாகும். முதலாம் முறைப்படி கட்டுவதை மரியாதை முறை என்றும் இரண்டாம் விதத்தினை அவமரியாதை முறை என்றும் கூறுகின்றனர். காரணம், கோவிலுக்குள் செல்லும்போதோ பெரியவர்கள் யாரும் எதிரில் வரும்போதோ அலுவலகத்தில் அமரும்போதோ இரண்டாம் முறையில் இருந்து முதலாம் முறைக்கு மாறிவிடுகின்றனர். அதாவது தூக்கிக் கட்டிய மடிப்பினை கீழே இறக்கிவிட்டு முதலாம் முறைக்கு மாறி விடுகின்றனர். அப்படிச் செய்வதுதான் மரியாதை என்று கருதப்படுவதே இதற்குக் காரணம் ஆகும். எனவேதான் இரண்டாவது முறையானது அவமரியாதை முறை என்று அழைக்கப்படுகிறது. 

ஆனால் முதலாம் முறைப்படி வேட்டியை அணிந்துகொண்டு இயல்பான பல வேலைகளைச் செய்ய இயலாது. காரணம், வேட்டியை முழுமையாகத் தொங்கவிட்டு வேகமாக நடக்கும்போது அது கால்களைத் தடுக்கும். நமது அவசர நகர்வுகளுக்கு ஒத்துழைக்காமல் தடையாக இருக்கும். குறிப்பாக, வயல்வேலைகளை வேட்டி அணிந்து செய்வது மிகுந்த சிரமமாக இருக்கும். எனவே சிலர் இரண்டாம் முறைப்படி முழங்காலுக்கு மேல் தூக்கிக் கட்டிக்கொண்டு செய்கின்றனர். ஆனால் இந்த முறையானது அவமரியாதை முறை என்பதால் வயல்வேலை தவிர பல அலுவல்களை அவ்வாறு அணிந்துகொண்டு செய்வது பல நேரங்களில் தர்ம சங்கடத்தை உருவாக்குகிறது.  

எப்படிப் பார்த்தாலும் வேட்டியை அணிந்துகொண்டு வேலை செய்வது என்பது சிரமமாகக் கருதப்படுவதால் தான் இக் காலத்தில் கிராமத்து விவசாயிகள் கூட முழுக்கால்சட்டை அணிந்துகொண்டு வயல்வேலை செய்கின்றனர். 

வேட்டி – தமிழர்களின் பாரம்பரிய உடை அல்ல: 

சங்க இலக்கியம் உட்பட பல்வேறு தமிழ் இலக்கியங்களில் தமிழரின் உடையைக் குறிப்பிடுவதற்கு எழுபதுக்கும் மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்தி உள்ளனர். இவற்றில் வேட்டி என்ற சொல் தமிழாகவே இருந்தாலும் சங்க இலக்கியம் உட்பட எந்த இலக்கியத்திலும் இடம்பெறவில்லை. வேட்டி என்பது தமிழரின் பாரம்பரிய உடை அல்ல என்னும் கூற்றுக்கு இதுவொன்றே போதுமான சான்று ஆகும். இருந்தாலும் மேலும் பல சான்றுகளையும் இங்கே காணலாம். 

சங்ககாலத்தில் தமிழர்கள் உடை வடிவமைப்பில் பல நுட்பங்களை அறிந்தவராக இருந்துள்ளனர் என்பதை சங்கப் பாடல்களின் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது. பாம்பின் சட்டையைப் போலவும் (புறம்: 397) புகையினைப் போலவும் (பெரும்: 469) மிக மெலிதான அதேசமயம் பார்வை உட்புகாத விதமாக உடைகளை உருவாக்கியுள்ளனர். கொடிகளைப் போன்ற வளைவுகள், பூ வேலைப்பாடுகள், ஒளிரும் வண்ணங்கள் என்று பலவற்றையும் தமது உடைகளில் உருவாக்கி இருந்தனர் என்னும் செய்திகளை சங்கப் பாடல்கள் பறை சாற்றுகின்றன. 

சங்ககாலத் தமிழர்கள் தமது உடைகளின் வடிவமைப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்ததால்தான் அவர்கள் வேட்டியை அணியவில்லை. காரணம், வேட்டி என்பது மிகமிக எளிமையான ஒரு துண்டுத் துணி ஆகும். அதை அணிந்துகொண்டு வேலைசெய்வதும் சிரமமான ஒன்று என்பதால் சங்க காலத்திலும் சரி அதற்கு அப்புறமும் சரி வேட்டியை யாரும் விரும்பி உடையாக அணியவில்லை. இருந்தாலும், வேட்டியைப் போன்ற மிக எளிமையான துண்டுத் துணிகளை உடையாக உடுத்தாமல் மேலே போர்த்துவதற்கு மட்டுமே பயன்படுத்தி இருப்பதை சங்க இலக்கியத்தில் (புறம்: 286) காண முடிகிறது. 

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் காணப்படும் சிலைகள்  மற்றும் பிற சிற்பங்களில் கூட வேட்டியை உடுத்தியவாறான ஒரு சிற்பத்தையும் காண இயலவில்லை. இச் சான்றுகளில் இருந்து, வேட்டி என்பது தமிழர்களால் பாரம்பரியமாக உடுத்தப்பட்ட உடை அல்ல என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். 


தமிழரின் பாரம்பரிய உடை கலிங்கமே: 

தமிழர்களின் பாரம்பரிய உடை வேட்டி அல்ல என்றால் வேறு எது? என்ற கேள்வி எழுகிறது. இக் கேள்விக்கான விடை “கலிங்கம்” என்பதாகும். கலிங்கம் என்னும் சொல்லுக்கு உடை என்ற பொதுப்பொருள் மட்டுமே தமிழ் அகராதிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இச்சொல்லுக்கு இரண்டு விதமான சிறப்புப் பொருட்களும் உண்டு. 

சங்க இலக்கியத்தில் மட்டும் 28 பாடல்களில் கலிங்கம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அந்த அனைத்துப் பாடல்களின் குறிப்பிட்ட வரிகளையும் கீழே காணலாம். 

பல் கலை சில் பூ கலிங்கத்தள்  - கலி 56

நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை - திரு 109

காடி கொண்ட கழுவுறு கலிங்கத்து - நெடு 134

கொடும் புறம் வளைஇ கோடி கலிங்கத்து ஒடுங்கினள் கிடந்த - அகம் 86

காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய - கலி 69

கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கிய - சிறு 85

நீலம் நாகம் நல்கிய கலிங்கம் ஆலமர்செல்வற்கு - சிறு 96

ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம் இரும் பேர் ஒக்கலொடு - பெரும் 469

கண் பொருபு உகூஉம் ஒண் பூ கலிங்கம் பொன் புனை வாளொடு - மது 433

பொன் உரை காண்மரும் கலிங்கம் பகர்நரும் - மது 513

மெல் நூல் கலிங்கம் கமழ் புகை மடுப்ப - மது 554

சோறு அமைவுற்ற நீர் உடை கலிங்கம் உடை அணி பொலிய - மது 721

இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம்  - மலை 561

துளங்கு இயல் அசைவர கலிங்கம் துயல்வர - நற் 20

கழுவு-உறு கலிங்கம் கழாஅது உடீஇ - குறு 167

நூலா_கலிங்கம் வால் அரை கொளீஇ - பதி 12

கழுவு-உறு கலிங்கம் கடுப்ப சூடி - பதி 76

ஒருத்தி அடி தாழ் கலிங்கம் தழீஇ ஒரு கை - கலி 92

முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ - அகம் 136

ஒண் பூ கலிங்கம் உடீஇ நுண் பூண் - புறம் 383

நுண் நூல் கலிங்கம் உடீஇ உண்ம் என - புறம் 392

அகன்று மடி கலிங்கம் உடீஇ செல்வமும் - புறம் 393

புரையோன் மேனி பூ துகில் கலிங்கம் உரை செல அருளியோனே - புறம் 398

கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி - புறம் 400

மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும் - நற் 380

அம் மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு  - நெடு 146

புகா புகர் கொண்ட புன் பூ கலிங்கமொடு  - நற் 90

பாம்பு உரித்து அன்ன வான் பூ கலிங்கமொடு  - புறம் 397 

மேற்காணும் பாடல் வரிகளில் வரும் கலிங்கம் என்ற சொல்லானது இரண்டு விதமான சிறப்புப் பொருட்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. அவை பற்றிக் கீழே காணலாம். 

கலிங்கம் – சொல்லும் ஆக்கமும்: 

கலிங்கம் என்னும் சொல்லுக்கு இரண்டு விதமான சிறப்புப் பொருட்கள் தோன்றும் முறையினைக் கீழே காணலாம். 

(1)  சிறப்புப் பொருள்: முழுக்கால்சட்டை 

கால் + இங்கு (=அழுந்து, புகு) + அம் (=நீளம்) = கலிங்கம் = கால்களில் நீளமாகப் புகுத்தப்படுவது = முழுக்கால் சட்டை. 

(2)  சிறப்புப் பொருள்: முழுநீள புடவை 

கலை (=உடை, கலைவடிவம்) + இங்கு (=தங்கு, பொருந்து) + அம் (=நீளம்) = கலிங்கம் = கலைவடிவம் பொருந்திய நீண்ட உடை = முழுநீளப் புடவை 

கலிங்கமும் முழுக்கால் சட்டையும்: 

கலிங்கம் என்னும் சொல்லுக்கு முழுக்கால்சட்டை என்ற பொருளும் உண்டென்று மேலே கண்டோம். சங்க இலக்கியத்தில் எந்தெந்த பாடல்களில் இப் பொருள் வந்துள்ளது என்பதைக் கீழே சான்றுகளுடன் காணலாம்.  

முழுக்கால்சட்டை என்பது இடுப்பில் இருந்து இரண்டாகப் பிரிந்து இரண்டு கால்களிலும் தனித்தனியாகப் பொருந்தி மறைக்கின்ற நீண்ட உடையாகும். சங்ககாலத்தில் வாழ்ந்த புலவர் ஒருவர் காவி நிறத்தில் அணிந்திருந்த முழுக்கால் சட்டை நைந்துபோய் இருந்ததால் அது பார்ப்பதற்கு பாம்பின் பிளவுபட்ட சிவந்த நாக்கைப் போல தோன்றியதாகவும் அப்படிப்பட்ட தனது நைந்துபோன உடையை மாற்றி பகன்றை மலர்போல வெண்ணிறத்தில் முழுக்கால்சட்டை அளித்ததாகக் கீழ்க்காணும் பாடலில் கூறுகிறார். 

ஈன்ற அரவின் நா உரு கடுக்கும் என் தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கி

போது விரி பகன்றை புது மலர் அன்ன அகன்று மடி கலிங்கம் உடீஇ – புறம். 393 

அடுத்ததாக, சங்க காலத்தில் சில உழவர்கள் பகன்றையின் வெண்ணிற மலர்களைக் கொண்டு அகலமாகவும் நீளமாகவும் மாலைகளைக் கட்டிக் கழுத்தில் அணிந்து தொங்க விட்டிருந்தனர். அப்போது அது பார்ப்பதற்கு வெளுக்கப்பட்ட வெண்ணிற முழுக்கால்சட்டையைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் பாடல் கூறுவதைக் காணலாம். 

பல் விதை உழவின் சில் ஏராளர் பனி துறை பகன்றை

பாங்கு உடை தெரியல் கழுவுறு கலிங்கம் கடுப்ப சூடி – பதி. 76 

மேற்காணும் இரண்டு பாடல்களிலும் கலிங்கம் என்னும் ஆடையின் வடிவத்திற்கு உவமைகளாக, இரண்டு பிரிவுகளைக் கொண்ட பாம்பின் பிளந்த நாக்கு மற்றும் மாலையினைக் கூறி இருப்பதில் இருந்து கலிங்கம் என்பது இரண்டு பிரிவுகளைக் கொண்ட முழுக்கால்சட்டையைத் தான் குறிக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். 

கலிங்கமும் முழுநீள புடவையும்: 

சங்ககாலத்தில் ஆண்கள் அணிந்திருந்த கலிங்கம் என்பது முழுக்கால் சட்டையைக் குறிக்கும் என்று மேலே கண்டோம். அதேசமயம், பெண்கள் அணிந்திருந்த கலிங்கம் என்பது முழுநீளப் புடவையைக் குறிக்கும் என்பதனைக் கீழ்க்காணும் சான்றுகளின் வழியாக அறியலாம். 

சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் கலிங்கம் என்னும் உடையினை பாதம் வரையிலும் தாழ்வாக உடுத்தினர் என்பதைக் கீழ்க்காணும் கலித்தொகைப் பாடல் கூறுவதைக் காணலாம். 

ஒருத்தி அடி தாழ் கலிங்கம் தழீஇ ஒரு கை - கலி 92 

சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் உடுத்திய கலிங்கம் என்னும் உடையில் பல்வேறு கலை வடிவங்களும் பூ வேலைப்பாடுகளும் இருந்தன என்பதைக் கீழ்க்காணும் கலிப்பாடல் கூறுகிறது. 

பல் கலை சில் பூ கலிங்கத்தள்  - கலி 56 

கலிங்கம் என்னும் உடையானது தற்காலத்துத் தாவணி போன்ற கீழாடையாக மட்டுமே இருந்திருக்கலாமோ என்ற சந்தேக எண்ணம் இப்போது பலருக்கு எழலாம். ஆனால் அந்த எண்ணம் தவறு என்பதைக் கீழ்க்காணும் பாடல்களில் இருந்து புரிந்து கொள்ளலாம். 

கொடும் புறம் வளைஇ கோடி கலிங்கத்து ஒடுங்கினள் கிடந்த - அகம் 86

காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய - கலி 69 

மேற்காணும் இரண்டு பாடல்களுமே கலிங்கம் என்னும் உடைக்குள் அவள் ஒடுங்கி இருந்தாள் என்ற செய்தியைக் கூறுகின்றன. இவ்விரண்டு பாடல்களில், கலிங்கத்தை முதுகுப் பக்கமாக வளைத்து அதற்குள் அவள் ஒடுங்கி இருந்தாள் என்று முதல் பாடல் விளக்கமாகக் கூறுகிறது. இதிலிருந்து, சங்ககாலப் பெண்கள் அணிந்த கலிங்கம் என்பது கலைவடிவங்களும் பூ வேலைப்பாடுகளும் பொருந்திக் கீழாடையாகவும் மேலாடையாகவும் உடுத்தப்பட்ட முழுநீள புடவையே என்று அறியலாம். 

பிறமொழி ஆட்சியும் தமிழர் உடை மாற்றங்களும்: 

ஆங்கிலத்தில் டிரவுசர் அல்லது ஃபேன்ட் அல்லது ஃபேன்டலூன் என்று அழைக்கப்படும் முழுக்கால் சட்டையானது முதன்முதலில் மத்திய ஆசியாவில் தோன்றியதாக விக்கிபீடியா கூறுகிறது. உண்மையில், அது தமிழர்கள் இவ் உலகிற்கு அளித்த கொடையே ஆகும். காரணம், ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சங்க இலக்கியத்திலேயே முழுக்கால்சட்டை பற்றிக் கூறப்பட்டுள்ளது என்றால் அதற்கும் முன்னரே அந்த உடையினைத் தமிழர்கள் கண்டறிந்து இருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.  

கலிங்கம் என்னும் முழுக்கால் சட்டையானது தமிழர்களால் கண்டறியப்பட்டு அவரது பாரம்பரிய உடையாகத் தமிழகத்தில் பலகாலம் கோலோச்சி வந்தது. இதற்குச் சான்றாக தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில் சிற்பங்களில் இன்றளவும் காணப்படும் ஆண்களின் முழுக்கால்சட்டை உடை வடிவமைப்பைக் கூறலாம். இவ்வாறு கோலோச்சி வந்த கலிங்கமானது தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களால் மாறுதல்களுக்கு உள்ளானது. நாயக்கர், ஆங்கிலேயர் போன்ற பிறமொழிக் காரர்களின் ஆட்சியின்போது தமிழர்மீது கொண்ட வெறுப்பு மற்றும் அடிமைப்படுத்தும் நோக்கத்தினால் தமிழரது ஆடைச் சுதந்திரம் பறிக்கப்பட்டு வேட்டி, துண்டுகளே தமிழரது உடைகளாக ஒதுக்கப்பட்டன. இதனால் தமிழர்கள் பலரும் தமது பாரம்பரிய உடையான கலிங்கம் என்னும் முழுக்கால்சட்டையைத் தொலைத்து வேட்டிக்கும் துண்டுக்கும் மாறினர். 

முடிவுரை: 

இதுவரை கண்டவற்றில் இருந்து, தமிழர்களின் பாரம்பரிய உடையானது வேட்டி அல்ல முழுக்கால்சட்டை ஆகிய கலிங்கமே என்று பல சான்றுகளின் வழியாகத் தெரிந்து கொண்டோம். வேட்டி என்பது பிறமொழி ஆட்சியாளருக்குத் தமிழர்கள் அடிமையாக இருந்தபோது ஒதுக்கப்பட்ட அடிமை உடை என்றும் தெரிந்து கொண்டோம். எனவே இனிமேல் TROUSER / PANT / PANTALOON என்ற ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தாமலும் முழுக்கால்சட்டை என்று நீட்டி முழக்காமலும் கலிங்கம் என்ற நமது பாரம்பரியச் சொல்லையே பெருமையுடன் பயன்படுத்துவோமாக. அத்துடன், வேட்டி என்னும் அவமானச் சின்னத்தை உதறி கலிங்கம் என்னும் பாரம்பரிய உடையினையே மிடுக்குடன் அணிந்து மகிழ்வோமாக !!!