திங்கள், 25 நவம்பர், 2019

சங்க இலக்கியத்தில் சகரமுதல் சொற்கள் யாவும் தமிழா? - நிறைவுப் பகுதி


அத்துதல் என்ற வினைச்சொல்லுக்குப் பொருத்துதல், ஒட்டுதல், அப்புதல் என்று பல பொருட்களைத் தமிழ் அகராதிகளில் காணலாம். அத்து என்ற தமிழ்ச்சொல்லானது சகரமெய் ஏறி சத்து என்றும் மாறும். இவ்வாறு மாறுவதைச் சம்மோனைப் போலிகள் என்று இக் கட்டுரையின் முதலாம் பகுதியில் விரிவாகக் கண்டோம். சத்து என்ற தமிழ்ச் சொல்லில் இருந்தே சதுக்கம், சந்து, சந்தம், சந்தனம், சந்தி என்ற சொற்கள் அனைத்தும் தோன்றும். இச் சொற்களின் தோற்றம் பற்றிக் கீழே தனித்தனியாக விரிவாகக் காணலாம்.

சதுக்கம்:

ஒன்றுக்கு மேற்பட்ட திசைகளில் இருந்து வரும் வழிகள் ஒன்றாகப் பொருந்தும் இடமே சதுக்கம் என்று அழைக்கப்பட்டது. சதுக்கம் என்ற சொல் தோன்றிய முறை கீழே:

சத்து (=பொருந்து, கூடு) >>> சதுக்கம் (=கூடும் இடம்)

சந்தி:

சந்தி என்பதும் சதுக்கத்தைப் போல பல வழிகள் ஒன்றுகூடும் இடமே ஆகும். சந்தி என்ற சொல்லும் சத்து என்ற சொல்லில் இருந்தே கீழ்க்காணுமாறு தோன்றும்.

சத்து (=பொருந்து, கூடு) >>> சந்தி (=கூடும் இடம்).

சத்து என்பது சந்தி என்று வருவதை மெலித்தல் விகாரம் என்பர். ஒரு சொல்லில் வரும் வல்லின மெய் மெல்லின மெய்யாக மாறி அதே பொருளில் வருவதை மெலித்தல் விகாரம் என்பர். இதற்கான வேறு சில காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வெற்றி >>> வென்றி, கொத்து >>> கொந்து, சத்தம் >>> சந்தம்.

சந்து / சந்தம் / சந்தனம் :

சந்து, சந்தம் ஆகிய இரண்டும் சந்தனத்தைக் குறிக்கும் வேறு பெயர்களே ஆகும். சத்து என்ற தமிழ்ச் சொல்லுக்கு அப்புதல் என்ற பொருளுமுண்டு என்று மேலே கண்டோம். சத்து என்ற சொல்லில் இருந்து மேலே கண்ட மெலித்தல் விகாரப்படி சந்து, சந்தம், சந்தனம் ஆகிய சொற்கள் பிறக்கும்.

சத்து (=அப்பு, பூசு) >>> சந்து, சந்தம், சந்தனம் (=பூசப்படுவது)

அவைத்தல் என்ற தமிழ்ச்சொல்லுக்குப் பலவேறு பொருட்களைத் தமிழ் அகராதிகள் காட்டியுள்ளன. அவற்றில் குத்துதல், நசுக்குதல், அவித்தல் ஆகிய பொருட்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை. ஏனென்றால், இந்த பொருட்களின் அடிப்படையில் தான் அவைத்தல் என்ற சொல்லில் இருந்து போருடன் தொடர்புடைய சொற்கள் தோன்றியுள்ளன. அவைத்தல் என்னும் சொல்லானது சகரமெய் ஏறி சவைத்தல் என்று சம்மோனைப் போலியாகவும் மாறும் என்று இக் கட்டுரையின் முதல் பகுதியில் விரிவாகக் கண்டோம். இனி, சவைத்தல் என்ற சொல்லில் இருந்து பிற சொற்கள் தோன்றும் முறையினைக் கீழ விரிவாகக் காணலாம்.

சமம் :

சமம் என்பது போரைக் குறிப்பதான தமிழ்ச் சொல்லாகும். நாற்பதுக்கும் மேற்பட்ட சங்க இலக்கியப் பாடல்களில் இச்சொல் பயின்று வந்துள்ளது. எதிரி வீரர்களை வாள், வேல் போன்ற ஆயுதங்களால் தாக்கிக் குத்தியும் யானைகளால் நசுக்கியும் கொல்வதையே போர் என்று சொல்கிறோம். குத்துதல், நசுக்குதல் ஆகிய வினைகளே போரில் நடக்கும் முகன்மை வினைகள் என்ற அடிப்படையில் சமம் என்ற தமிழ்ச் சொல் கீழ்க்காணுமாறு தோன்றும்.

சவை (=குத்து, நசுக்கு) >>> சவம் (=பிணம்) >>> சமம் (=போர்)

போரின்போது ஆயுதங்களால் குத்தப்பட்டும் யானைகளால் நசுக்கப்பட்டும் உயிரிழந்து விழும் பிணங்களே சவம் என்று அழைக்கப்பட்டன. ஒரே நேரத்தில் கணக்கற்ற சவங்களை உருவாக்குவதால் போருக்குச் சமம் என்ற பெயர் ஏற்பட்டது எனலாம்.

சவட்டு:

சவைத்தல் வினையை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய இன்னொரு வினையே சவட்டுதல் ஆகும். சவட்டுதல் என்றால் மிதித்தல், நசுக்குதல் என்று பொருள். சவட்டு என்ற சொல் கீழ்க்காணுமாறு தோன்றும்.

சவை (= நெரி, நசுக்கு) >>> சவட்டு (மிதி, நசுக்கு)

சமைப்பு:

சமைப்பு என்ற தமிழ்ச்சொல்லானது உணவுப் பொருட்களை அவித்துத் தயார்செய்தலைக் குறிக்கும். அரிசி, நீர் போன்ற பல பொருட்களை ஒன்றாகச் சேர்த்து அவித்து உண்ணுவதற்கு ஏற்றவாறு தயார்செய்தலையே சமையல் என்று அழைக்கிறோம். சமைப்பு என்ற தமிழ்ச் சொல் தோன்றும் முறை கீழே:

சவை (= அவி)  >>> சமைப்பு (=சமையல்)

வகரமெய் மகரமெய்யாக மாறுவது தமிழ் மொழியில் வழக்கமே ஆகும்.  இவ்வாறு மாறுவதனை வகர-மகரப் போலி என்பர். இவ்வகைப் போலிகளுக்கு வேறு சில காட்டுகளும் கீழே கொடுக்கப்பட்டுளளன. .

அவ்வை >>> அம்மை,        புவி >>> பூமி,           சவி >>> சாமி. 

சமன்:

ஞமன் என்ற தமிழ்ச் சொல்லுக்குத் துலாக்கோல் என்ற பொருளுண்டு. ஒருபுறம் எடைக்கற்களையும் இன்னொரு புறம் பொருட்களையும் வைத்து ஒப்பிட்டு நிறுப்பதற்கு உதவுவதே ஞமன் என்ற துலாக்கோல் ஆகும். ஞமன் என்ற சொல்லில் இருந்தே சமன் என்ற தமிழ்ச்சொல் கீழ்க்காணுமாறு தோன்றும்.

ஞமன் (=துலாக்கோல்)  >>> சமன் (=ஒப்பு)

ஞகரமெய்யானது சகரமெய்யாக மாறுவதும் தமிழ் வழக்கில் உள்ளதே. கீழே சில சான்றுகள் தரப்பட்டுள்ளன.

அஞ்சு >>> அச்சம், .         நஞ்சு >>> நச்சு,        பூஞை >>> பூசை

பி.கு: ஞமன் என்ற சொல்லில் இருந்தே எமனைக் குறிப்பதான யமன் என்ற தமிழ்ச் சொல்லும் தோன்றும். உயிர்களைப் பறிப்பதில் அனைத்து உயிர்களுக்கும் பொதுவாக துலாக்கோல் போல நடுவுநிலைமையுடன் செயலாற்றுவதால் இப்பெயர் ஏற்பட்டது எனலாம்.

ஞமன் (=துலாக்கோல்) >>> யமன் (=நடுநிலையாளன்) >>> எமன்.

ஞகர மெய்யானது யகர மெய்யாக மாறுவதும் தமிழில் இயல்பே ஆகும். இம் மாற்றத்திற்கான வேறு சில காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அஞர் >>> அயர்,    ஞாய் (=அன்னை) >>> யாய்,      மஞ்ஞை >>> மயில்.

சமழ்ப்பு:

சமழ்த்தல் என்றால் நாணுதல், தாழ்த்துதல் என்று பொருளாகும்.  சமழ்ப்பு என்பது நாணத்தையும் தலைகுனிவையும் குறிக்கும். நாணத்தால் மட்டுமின்றி அவமானம், பழி, குற்றவுணர்வு போன்றவற்றாலும் தலைதாழ்த்துவது இயற்கையே. சமழ்ப்பு என்ற சொல்லானது அவலம் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து கீழ்க்காணுமாறு தோன்றும்.

அவலம் >>> சவலம் >>> சமழ்ப்பு

அவலம் என்னும் சொல்லானது சவலம் என்று மாறுவது சம்மோனைப் போலி என்னும் முறைப்படி ஆகும். அவலம் என்னும் சொல்லுக்கு அவமானம், பழி, குற்ற உணர்வு என்றெல்லாம் பொருட்கள் உண்டு. ஆனால் இப்பொருட்களைத் தமிழ் அகராதிகள் குறிப்பிட ஏனோ மறந்துவிட்டன. அவலம் என்பது அவமானம் / பழி / குற்ற உணர்வு என்ற பொருளில் வருகின்ற சங்க இலக்கியப் பாடல்களில் சில மட்டும் கீழே சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

அவல நெஞ்சமொடு செல்வல் நின் கறுத்தோர் - புறம் 210
யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு.. - நற் 348

அவலம் ஆகிய அவமானம் / பழி / குற்ற உணர்வினால் உண்டாகும் தலைகுனிவே சமழ்ப்பு எனப்பட்டது.

சண்பகம்:

மல்லிகை, முல்லை போல சண்பகமும் ஒரு நறுமண மலரே ஆகும். செம்பு நிறத்தில் இதன் பூக்கள் பூத்துக் குலுங்குவதால் இந்த மலருக்குச் செம்பகம் என்று பெயர் ஏற்பட்டது. இப்பெயரே மருவி செண்பகம் என்றும் சண்பகம் என்றும் வழங்கலாயிற்று.

செம்பு + அகம் = செம்பகம் >>> செண்பகம் >>> சண்பகம்

பி.கு: செம்பகம் என்ற தமிழ்ப்பெயரே சம்பக என்று மருவி தமிக்ருத மொழியில் இந்த மலரைக் குறிக்கப் பயன்படுகிறது.

செம்பகம் >>> சம்பக

முடிவுரை:

இதுவரை கண்டதில் இருந்து, சதுக்கம், சந்தி, சந்து, சந்தம், சந்தனம், சமம், சமன், சவட்டு, சமைப்பு, சமழ்ப்பு, சண்பகம் ஆகிய சகரமுதல் சொற்கள் யாவும் தமிழே என்று அறிந்தோம். அதைப்போல இக் கட்டுரையின் முதல்பகுதியில் கண்ட சங்கம், சலம், சருமம், சனம், சடை, சகடம், சரணம் ஆகிய சகரமுதல் சொற்களும் தமிழே என்று அறிந்தோம். இந்த இரண்டு ஆய்வுகளின் முடிவு இதுதான்:

சங்க இலக்கியத்தில் உள்ள
சகரமுதல் சொற்கள்
யாவும் தமிழே !!!

சனி, 23 நவம்பர், 2019

பழந்தமிழரின் காலப்பெயர் அமைப்புமுறை - பகுதி 2


ஞான்று:

ஞான்று என்னும் காலப்பெயரானது ஆனுதல் என்ற வினையை அடிப்படையாகக் கொண்டு பிறந்ததாகும். ஆனுதல் என்ற வினைச்சொல்லுக்கு நீங்குதல் என்ற பொருளை அகராதிகளில் காணலாம். ஞான்று என்னும் சொல்லின் தோற்றமுறை கீழே:

ஆன் (=நீங்கு) + து >>> ஆன்று >>> ஞான்று.

பி.கு: ஆனுதல் என்ற வினைச்சொல்லே ஞானம் என்ற பெயர்ச்சொல்லின் அடிப்படை ஆகும். நாம் என்று சொல்லும்போது அங்கே பிரிவு இல்லை. நான் என்று சொல்லும்போதே அங்கு பிரிவு உண்டாகிறது. மற்றவர்களில் இருந்து தன்னைப் பிரித்து உணர்த்தவே நான் என்ற சொல்லைக் கையாள்கிறோம். பிரிவினைக் குறிப்பதான ஆன் என்னும் வினையே நான் / ஞான் என்னும் பெயரின் அடிப்படையாக அமைகின்றது. நான் யார்? என்று தன்னைப் பற்றி முழுமையாக அறிதலே நானம் / ஞானம் ஆகும். ஞானம் என்ற தமிழ்ச் சொல்லின் தோற்றமுறை கீழே:

ஆன் (=நீங்கு, பிரி) >>> நான் / ஞான் >>> நானம் / ஞானம்.

ஆனியம்:

ஆனியம் என்பது நாளைக் குறிப்பதொரு தமிழ்ச் சொல்லே ஆகும். இச் சொல்லும் ஆனுதல் வினையின் அடிப்படையில் தோன்றியதே. இதன் தோற்றமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன் (=நீங்கு) + இயம் >>> ஆனியம்

பருவம்:

பருவம் என்பது காலத்தைக் குறிக்கின்ற தமிழ்ச் சொல்லே ஆகும். பருவுதல் என்ற வினையே பருவம் என்ற பெயரின் அடிப்படை ஆகும். பருவுதல் என்றால் நீக்குதல், களைதல் என்று பொருள்படும். பருவம் என்ற சொல்லின் தோற்றமுறை கீழே:

பருவு (=நீக்கு) >>> பருவம்.

கொன்:

கொன் என்பதும் காலத்தைக் குறிப்பதோர் தமிழ்ச் சொல் ஆகும். கொன்னுதல் என்ற வினையின் அடிப்படையில் எழுந்ததே இச்சொல் ஆகும். கொன்னுதல் என்றால் நீங்குதல் என்ற பொருளுண்டு. இச்சொல்லின் தோற்றமுறை கீழே:

கொன்னு (=நீங்கு) >>> கொன்

ஓரை:

காலத்தைக் குறிக்கும் பல தமிழ்ச் சொற்களில் ஒன்றே ஓரை ஆகும். ஒருவுதல் என்ற வினையின் அடிப்படையில் எழுந்ததே இச்சொல். ஒருவுதல் என்ற வினைச்சொல்லுக்குக் கடத்தல், கழித்தல் என்ற பொருட்களுண்டு. இச் சொல்லின் தோற்றமுறை கீழே:

ஒருவு (=கட,கழி) >>> ஓரை

கடிகை:

கடிகை என்பதும் காலத்தினைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லாகும். கடிதல் என்ற வினையே கடிகையின் அடிப்படை ஆகும். கடிதல் என்ற வினைக்கு நீக்குதல், விலக்குதல் என்றெல்லாம் பொருட்கள் உண்டு. கடிகை என்ற சொல்லின் தோற்றமுறை கீழே:

கடி (=நீக்கு, விலக்கு) >>> கடிகை

பகல்:

பகல் என்பது ஒருநாளில் கதிரவன் ஒளிவீசும் பொழுதினைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகின்ற சொல்லாகும். பகுத்தல் என்ற வினையே இதன் அடிப்படையாகும். இச்சொல்லின் தோற்றமுறை கீழே:

பகு (=பங்கிடு, பிரி) >>> பகல்

வைகறை:

ஒருநாளின் முதல் பொழுதாக அறியப்படுவதே வைகறைப் பொழுது ஆகும். வைகுதல் என்றால் தங்குதல் என்றும் அறுதல் என்றால் நீங்குதல் என்றும் பொருளுண்டு. இரவிலே தங்கியிருந்து விடிந்ததும் எழுந்து பயணம் செய்ய நீங்குகின்ற வழக்கத்தின் அடிப்படையில் இப்பெயர் உண்டானது. இச்சொல்லின் தோற்றமுறை கீழே:

வைகு + அறு (= தங்கி நீங்கு) >>> வைகறை.

புலரி:

புலரி என்பது காலைப் பொழுதைக் குறிக்கப் பயன்படுவதான தமிழ்ச் சொல் ஆகும். புலர்தல் என்ற வினையே இச்சொல்லின் அடிப்படை ஆகும். புலர்தல் என்ற வினைச்சொல்லுக்கு விலகுதல், நீங்குதல் என்ற பொருட்களுண்டு. இருள் நீங்கி வெளிச்சம் தோன்றும் இந்த புலரிக்குப் பெயர் உண்டான முறை இதோ கீழே:

புலர் (=விலகு, நீங்கு) >>> புலரி

நாள்:

தமிழில் உள்ள பல்வேறு காலப்பெயர்களில் முதன்மையானது நாள் என்ற பெயராகும். இதனை நாளை என்றும் வழங்குவர். நள்ளுதல் என்ற வினையே நாள் என்பதன் அடிப்படையாகும். நள்ளுதல் என்ற வினைச்சொல்லுக்கு வெட்டுதல், அறுத்தல் என்ற பொருட்களுண்டு. இப் பொருட்கள் தமிழ் அகராதிகளில் இல்லாமையைப் போகூழ் என்றே கூறவேண்டும். நாள், நாளை ஆகிய சொற்களின் தோற்றமுறை கீழே:

நள்ளு (=வெட்டு, அறு) >>> நாளை, நாள்,

பி.கு: நள்ளுதல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றிய பிற சொற்களாக நள்ளி, நண்டு ஆகியவற்றைச் சொல்லலாம். தனது முன்னங் கால்களையே இரண்டு கைகளாகப் பயன்படுத்தி இரையைப் பிடித்து இரண்டு துண்டாக வெட்டும் தன்மை பெற்றது இந்த நள்ளி எனப்படும் நண்டாகும்.

நள்ளு (=வெட்டு) >>> நள்ளி, நண்டு.

நாழிகை:

நள்ளுதல் வினையின் அடிப்படையில் தோன்றிய இன்னொரு காலப்பெயரே நாழிகை ஆகும். 24 நிமிடங்கள் கொண்ட கால அளவாகிய நாழிகை என்பதே தமிழரின் கால அளவாகும். நாளிகை என்பதன் (லகர – ழகரப்) போலியே நாழிகை ஆகும். நாழிகை என்னும் தமிழ்ச்சொல்லின் தோற்றமுறை கீழே:

நள்ளு (=வெட்டு, அறு) >>> நாளிகை >>> நாழிகை

இன்று / இற்றை:

இற்றை என்னும் காலப்பெயரானது இன்று என்று தற்காலத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இறுத்தல் வினையின் அடிப்படையில் பிறந்ததே இப்பெயராகும். இறுத்தல் என்ற வினைச் சொல்லுக்கு முறித்தல், நீக்குதல் என்றெல்லாம் பொருட்கள் உண்டு. இச்சொல்லின் தோற்றமுறை கீழே:

இறு (= முறி, நீக்கு) >>> இற்றை >>> இன்று

இறுது :

இறு என்ற வினைச் சொல்லில் இருந்து இற்றை, இன்று மட்டுமின்றி இறுது என்ற சொல்லும் கீழ்க்காணுமாறு தோன்றியுள்ளது.

இறு (= முறி, நீக்கு) + து >>> இறுது (=பருவம்)

இறுது என்ற தமிழ்ச்சொல்லே தமிக்ருத மொழியில் ருது என்று மாறியது.

அன்று / அற்றை:

அற்றை என்னும் காலப்பெயரானது அன்று என தற்காலத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அறுதல் வினையின் அடிப்படையில் பிறந்ததே இப்பெயராகும். அறுதல் என்ற வினைச் சொல்லுக்குப் பிரிதல், நீங்குதல் என்றெல்லாம் பொருட்கள் உண்டு. இச்சொல்லின் தோற்றமுறை கீழே:

அறு (= பிரி, நீங்கு) >>> அற்றை >>> அன்று

பி.கு: அறுதல் என்ற வினைச்சொல்லே அறிவு என்ற பெயர்ச்சொல்லின் அடிப்படை ஆகும். ஐயங்கள் அறுதலால் அதாவது நீங்குதலால் உண்டாகும் தெளிவே அறிவு எனப்படும். அதாவது,

அறு (= நீங்கு, தெளி) >>> அறிவு.

நொடி:

நொடி என்பது மிகச்சிறிய கால அளவினைக் குறிக்கப் பயன்படுகின்ற தமிழ்ச் சொல் ஆகும். நொடித்தல் என்ற வினையின் அடிப்படையாய்ப் பிறந்த இதனைக் கைந்நொடி என்றும் இமைப்பொழுது என்றும் கூறுவர். நொடித்தல் என்ற வினைக்கு முறித்தல், இடையறுத்தல் என்ற பொருட்களுண்டு. இச்சொல்லின் தோற்றமுறை கீழே:

நொடி (=முறி, இடையறு) >>> நொடி

நிமிடம்:

நொடிக்கு அடுத்தபடியான பெரிய காலஅளவினைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்ற தமிழ்ச் சொல்லே நிமிடம் ஆகும். நிமிட்டுதல் என்ற வினைக்குக் கிள்ளுதல், நீக்குதல் என்ற பொருட்களுண்டு. இதன் அடிப்படையில் நிமிடம் என்ற காலப்பெயர் கீழ்க்காணுமாறு தோன்றும்.

நிமிட்டு (=கிள்ளு, நீக்கு) >>> நிமிடம்

வேளை:

பொழுதைக் குறிக்கும் பல்வேறு தமிழ்ச் சொற்களில் வேளையும் ஒன்றாகும். ஒரு நாளினை மூன்று கூறாக்கினால் கிடைப்பதே வேளை எனப்படுகிறது. வெளுத்தல் என்ற வினையின் அடிப்படையில் பிறந்ததே வேளை ஆகும். வெளுத்தல் என்ற வினைக்கு நீக்குதல், கழித்தல் என்ற பொருட்களுண்டு. கறைகளை நீக்குவதையே ஆடை வெளுத்தல் என்று கூறுவது வழக்கம். வேளை என்னும் சொல்லின் தோற்றமுறை கீழே:

வெளு (=நீக்கு) >>> வேளை

நேரம்:

பொழுதைக் குறிக்கும் பல்வேறு பெயர்ச் சொற்களுள் ஒன்றே நேரம் ஆகும். நேர்தல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றியதே நேரம் ஆகும். நேர்தல் என்ற வினைச்சொல்லுக்குப் பல்வேறு அகராதிப் பொருட்கள் இருந்தாலும் அறுத்தல் என்ற பொருளும் உண்டு. நேரம் என்ற காலப்பெயரின் தோற்றமுறை கீழே:

நேர் (=அறு) >>> நேரம்

மணி:

மணி என்பது நிமிடத்திற்கு அடுத்தபடியான பெரிய கால அளவாகக் கருதப்படுகிறது. மண்ணுதல் வினையின் அடிப்படையில் தோன்றிய கால அளவே மணி ஆகும். மண்ணுதல் என்ற வினைச் சொல்லுக்குக் கழுவுதல், நீக்குதல் என்ற பொருட்களுண்டு. மணி என்ற காலப்பெயரின் தோற்றமுறை கீழே தரப்பட்டுள்ளது.

மண்ணு (=கழுவு, கழி) >>> மணி

பிராயம்:

பிராயம் என்பது வயதைக் குறிப்பதான தமிழ்ச் சொல்லே ஆகும். பிராயம் என்பது பிரிதல் என்ற வினையின் அடிப்படையில் பிறந்ததாகும். பிரிதல் என்றால் நீங்குதல், கழிதல் என்ற பொருட்கள் உண்டு. பிராயம் என்ற தமிழ்ச் சொல்லின் தோற்றமுறை கீழே:

பிரி (=நீங்கு, கழி) >>> பிராயம்


அகசு:

அகசு என்பது நாள் மற்றும் பொழுதைக் குறிப்பதான தமிழ்ச் சொல்லே ஆகும். அகசு என்பது அகைதல் என்ற வினையின் அடிப்படையில் பிறந்ததாகும். அகைதல் என்றால் கூறுபடுதல் என்ற பொருள் உண்டு. அகசு என்ற தமிழ்ச் சொல்லின் தோற்றமுறை கீழே:

அகை (=கூறுபடு) >>>அகசு

தினம்:

தினம் என்பது நாளினைக் குறிப்பதான தமிழ்ச் சொல்லே ஆகும். தினம் என்பது தின்னுதல் என்ற வினையின் அடிப்படையில் பிறந்ததாகும். தின்னுதல் என்ற சொல்லுக்கு அரித்தல், வெட்டுதல் என்று பல பொருட்கள் உண்டு. தினம் என்ற தமிழ்ச் சொல்லின் தோற்றமுறை கீழே:

தின் (=வெட்டு, அரி) >>> தினம்

முடிவுரை:

இதுவரை கண்டவற்றில் இருந்து, காலம் தொடர்பான பல்வேறு தமிழ்ச் சொற்களைப் பழந்தமிழர்கள் ஈரும்வாள் முறைப்படியே அமைத்திருப்பதை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு பெயர்களை அமைக்கக் காரணம், மக்களுக்கு நிலையாமையை உணர்த்தி நன்மை செய்தலை வலியுறுத்துவதே ஆகும். இக் கட்டுரையின் முடிவாக, நாம் அறிந்துகொள்ள வேண்டிய கருத்து:

காலத்தை நாம்வகுக்க வில்லை அறிவோம்
காலமே நம்மை வகும்.

பழந்தமிழரின் காலப்பெயர் அமைப்புமுறை - பகுதி 1


முன்னுரை:

காலம் என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கமானது தமிழில் கவிதை வடிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்றில் இருந்து
இன்று வழியாக
நாளையை நோக்கிப்
பயணிக்கும் நிகழ்வுகளின்
மீளாத் தொடர்ச்சியே
காலம் !!!

காலம் என்றால் என்ன?. என்று இணையத்தில் தமிழில் தேடியபோது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்றே விடை வந்தது. காலத்தைப் பற்றிய தற்காலத் தமிழரின் சிந்தனை இவ்வளவுதான் போலும் என்றெண்ணி பழந்தமிழரின் அறிவு எத்தகையது என்று ஆராய்ந்தபொழுது பெரும் வியப்பே மேலிட்டது. காரணம், காலம் தொடர்பான அத்தனைப் பெயர்களையும் பழந்தமிழர்கள் அமைத்துள்ள முறைதான். இதைப்பற்றி இக் கட்டுரையில் விளக்கமாகக் காணலாம்.

காலத்தைப் பற்றிய பழந்தமிழர் கருத்து:

காலத்தைப் பற்றி முதன்முதலில் குறிப்பிடும் தமிழ்நூல் தொல்காப்பியம் தான். அதைத் தொடர்ந்து சங்க இலக்கியங்களிலும் காலமானது பல பாடல்களில் பேசப்பட்டுள்ளது. காலம் என்ற சொல்லை மட்டுமின்றி, காலம் தொடர்பான பல்வேறு பெயர்களையும் சங்க இலக்கியத்தில் காண முடிகிறது. சங்க இலக்கியப் பாடல்களில் காலத்தைப் பற்றிப் பேசியுள்ளார்களே அன்றி தெளிவான விளக்கம் காணக் கிடைக்கவில்லை.

முதன்முதலில் காலம் பற்றிய தெளிவான விளக்கத்தினைத் திருவள்ளுவரே முன்வைக்கிறார். நிலையாமை அதிகாரத்தில் கீழ்க்காணும் குறளில் காலம் பற்றிய கருத்தைக் கூறுகிறார் வள்ளுவர்.

நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள்அது உணர்வார்ப் பெறின் – 334

மக்களின் பெரும்பாலான செயல்பாடுகள் நாள் சார்ந்தே இருப்பதால் நாள் என்ற சொல்லையே காலப்பெயராக இக்குறளில் பயன்படுத்துகிறார். இக் குறளுக்கான விளக்கம் கீழே:

நாளானது தன்னை ஒரேபொருளாகக் காட்டிக்கொண்டு மக்களின் உயிர்களை மெல்லமெல்ல அறுக்கும் எண்ணற்ற வாட்களாகத் தொடர்ந்து செயல்படுவதை அறிஞர்களே அறிவர்.

என்னவொரு தெளிவான விளக்கம் பாருங்கள். நாமெல்லாம் நாள் தானே என்று எளிதாக நினைத்துக் கொண்டிருப்பது உண்மையில் ஒரே பொருள் அல்ல; உடல்களில் இருந்து உயிரை மட்டும் தனியாக மெல்லமெல்ல அறுத்துக் கொண்டிருக்கின்ற கணக்கிலடங்காத வாள்களின் தொகுதி என்று கூறுகிறார். இதனைத் தாரண மக்களால் உணர்ந்துகொள்ள முடியாது என்றும் கூறுகிறார். எப்படி வள்ளுவருக்கு மட்டும் இப்படி ஒரு கருத்து தோன்றியது?. அவர் மாபெரும் அறிஞர் என்பதாலேயே எனலாம்.   

பழந்தமிழர்களின் காலப்பெயர் அமைப்புமுறை:

நிலையாமை அதிகாரத்தில் வருகின்ற 334 ஆம் குறளானது பழந்தமிழரின் காலம் பற்றிய அறிவினை மட்டும் வெளிப்படுத்தவில்லை. காலம் தொடர்பான பல்வேறு பெயர்களைப் பழந்தமிழர்கள் அமைத்திருக்கும் முறையினைப் பற்றியும் அது சுட்டிக் காட்டுகிறது.

நாள் என்பதை இடையறுத்துச் செல்லும் வாளாக இக் குறளில் கூறியிருப்பது வெறும் உவமைக்காக மட்டுமல்ல; காலம் எனப்படும் யாவும் இடையறுத்தல் வினையுடன் தொடர்புடையதே என்று வலியுறுத்தவும் தான். ஆராய்ந்து பார்க்கும்போது, காலம் தொடர்பான பெயர்கள் அனைத்துமே இடையறுத்தல் வினையுடன் தொடர்புடையனவாகவும் அதனுடன் ஒத்த பிற வினைகளின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டனவாகவும் இருப்பது தெரிய வந்தது.

ஈரும்வாள் முறை:

காலம் தொடர்பான பல்வேறு பெயர்களைச் சூட்டுவதற்குப் பழந்தமிழர்கள் பயன்படுத்திய இந்த முறைக்கு ஒரு பெயர் வைத்தாக வேண்டும்.  திருக்குறளில் 334 ஆம் குறளில் இருந்தே இந்த முறையானது கண்டறியப்பட்டதாலும் அக்குறளில் வரும் ஈரும்வாள் என்பதே இந்த முறைக்கான ஊற்றுக்கண்ணாக அமைவதாலும் காலப்பெயர் சூட்டும் இந்த முறையினை ஈரும்வாள் முறை என்று அழைக்கலாம்.

ஈரும்வாள் முறையில் இடையறுத்தல் வினையே முகன்மையான வினையாகும். இடையறுத்தல் வினையில் பிரிவே விளைவாக இருப்பதால், பிரிவை உண்டாக்கும் அனைத்து வினைகளும் இடையறுத்தல் வினையுடன் தொடர்புடைய வினைகளாக அறியப்பட்டன. பிரிவையே விளைவாக உண்டாக்குகின்ற வினைகளைக் குறிக்கின்ற சில சொற்கள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அறு, வெட்டு, பிள, பிரி, பங்கிடு, பகு, வகு, கிள்ளு, களை, நீங்கு, நீக்கு, ஒதுங்கு, ஒதுக்கு, விலகு, விலக்கு, இடைவிடு, கூறாகு, கூறாக்கு, துண்டாகு, துண்டாக்கு, கட, கழி, செல், செலுத்து, முறி, கழுவு, உதிர், செதுக்கு, கிண்டு.

தமிழில் காலப்பெயர்கள்:

தமிழ்மொழியில் உள்ள பல்வேறு காலப்பெயர்களைக் கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம்.

பெருங்கூறு: ஆண்டு, யாண்டு, வருடம், உகம், யுகம், ஊழி.

சிறுகூறு: நொடி, நிமிடம், நாழிகை, கடிகை, மணி, நாள், புலரி, வைகறை, காலை, பகல், அன்று, இன்று, நாளை, ஆனியம், ஓரை, திகதி, தியதி, தேதி, தியாலம், அகசு, தினம்.

பொதுக்கூறு: அகவை, வயது, ஆயுள், காலம், நேரம், பொழுது, ஞான்று, பருவம், கொன், பிராயம், வேளை, இறுது, தருணம், தறுவாய், தவணை, தாப்பு, தான்றி.

பழந்தமிழர்கள் மேற்காணும் காலப்பெயர்களை ஈரும்வாள் முறைப்படி மேலேகண்ட வினைச்சொற்களின் அடிப்படையில் தான் அமைத்துள்ளனர். இதைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.
 
ஆண்டு / யாண்டு :

12 மாதங்கள் அடங்கிய காலத்தைக் குறிக்கின்ற தமிழ்ப் பெயர்களில் ஆண்டு என்பதும் ஒன்றாகும். யாண்டு என்றும் குறிப்பிடப்படுவதான இது யாணுதல் என்ற வினையின் அடிப்படையாகப் பிறந்த பெயராகும். யாணுதல் என்னும் வினையானது செதுக்குதல், கழித்தல் பொருட்களில் பயன்பட்டுள்ளது. ஆண்டு என்ற காலப்பெயர் தோன்றிய முறை கீழே:

யாணு (= செதுக்கு, கழி) >>> யாண்டு >>> ஆண்டு

பி.கு: யாணுதல் என்ற சொல்லானது செதுக்குதல், கழித்தல் பொருட்களில் யாண்டு / ஆண்டைத் தவிர வேறு இரண்டு சொற்களையும் உருவாக்கியுள்ளது. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

யாணு (=செதுக்கு, கழி) >>> யாணர் = தச்சர், அழகு.

வருடம்:

12 திங்கள் அடங்கிய காலத்தைக் குறிக்கின்ற தமிழ்ப் பெயர்களில் வருடம் என்பதும் ஒன்றாகும். வருசம் என்றும் வழங்கப்படுவதான இச் சொல்லானது வருடுதல் வினையின் அடிப்படையில் பிறந்த சொல்லாகும். வருடுதல் என்ற சொல்லுக்குத் தடவுதல் என்று மட்டுமே தமிழ் அகராதிகள் பொருள் கூறியுள்ளன. ஆனால் வருடுதல் என்ற வினையானது வெட்டி நீக்குதல் என்ற பொருளிலும் பயன்பட்டுள்ளது. வருடம் என்ற காலப்பெயரின் தோற்றமுறை கீழே:

வருடு (=வெட்டிநீக்கு) >>> வருடம்.

பி.கு: வருடுதல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றிய இன்னொரு பெயர் வருடை ஆகும். உடல் முழுவதும் புசுபுசுவென்று மயிர்மூடிய செம்மறி ஆட்டின் பெயரே வருடை ஆகும். செம்மறி ஆடு என்றாலே அதன் அடர்த்தியான மயிர் தான் நினைவுக்கு வரும். இந்த ஆட்டின் உடலில் வளர்கின்ற மயிரானது அடிக்கடி வெட்டி நீக்கப்படுவதால் இந்த ஆட்டிற்கு வருடை என்ற பெயர் ஏற்பட்டது.

வருடு (=வெட்டி நீக்கு) >>> வருடை (வெட்டிநீக்கப்படும் மயிரை உடையது)

உகம் / யுகம் :

உகம் என்பது பெரியதொரு கால அளவாகப் பயன்படுத்தப் படுகின்ற ஒரு தமிழ்ச் சொல்லாகும். உகுதல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றிய உகமானது யுகம் என்றும் வழங்கப்படும். உகுதல் என்ற வினைச்சொல்லுக்கு உதிர்தல், கழிதல், நீங்குதல் என்ற பொருட்கள் உண்டு. உகம் என்ற சொல்லின் தோற்றமுறை கீழே:

உகு (=உதிர், நீங்கு) >>> உகம் >>> யுகம்

ஊழி:

காலப்பெயர்களில் மிகப் பெரிய அளவினதாகக் கருதப்படுபவற்றில் ஒன்றுதான் ஊழி என்ற தமிழ்ச் சொல்லாகும். உழுதல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றியதே ஊழி (1) என்ற பெயராகும். இப்பெயரின் தோற்றமுறை கீழே:

உழு (=கிண்டு, பிரி) >>> ஊழி (=வாழ்நாள், நெடுங்காலம்)

பி.கு: ஊழ்த்தல் என்ற வினையின் அடிப்படையில் ஊழி (2) என்ற பெயர் பிறக்கும். ஊழ்த்தல் என்பது முதிர்தல் / முடிவுறுதல் என்ற பொருளின் அடிப்படையில் ஊழி (2) என்பது முடிவுகாலம் / அழிவுகாலத்தைக் குறிக்கும்.

ஊழ் (=முதிர், முடிவுறு) >>> ஊழி ( =முடிவுகாலம், அழிவுகாலம்)

அகவை:

ஒருவரது வாழ்நாளைக் குறிக்கப் பயன்படும் தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் அகவை என்பதாகும். அகைத்தல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றியதே அகவை ஆகும். அகைத்தல் என்றால் அறுத்தல், இடையறுத்தல் என்றெல்லாம் அகராதிப் பொருட்கள் உண்டு. அகவை என்னும் தமிழ்ப் பெயரின் தோற்றமுறை கீழே:

அகை (=அறு, இடையறு) >>> அகவை

வயது / வயசு :

வாழ்நாளைக் குறிக்கும் பல தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் வயது என்பதாகும். வயசு என்றும் கூறப்படுவதான இது வைத்தல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றிய பெயராகும். வைத்தல் என்ற சொல்லுக்குக் காட்டப்படுகின்ற பல்வேறு அகராதிப் பொருட்களில் தனியாக ஒதுக்குதல் என்பது இங்கே குறிப்பிடத் தக்கதாகும். தனியாக ஒதுக்குதல் என்பது பல்வேறு பொருட்களின் தொகுதியில் இருந்து சிலவற்றை மட்டும் பிரித்துவைத்தல் ஆகும். இப் பொருளின் அடிப்படையில் தான் வயது என்ற சொல் தோன்றும்.

வய் (=ஒதுக்கு, பிரி) >>> வயது / வயசு.

பி.கு: ஒதுக்குதல் / பிரித்தல் பொருளில் வை (வய்) எனும் மூலத்தில் இருந்து வயது / வயசு மட்டுமின்றி வேறுபல தமிழ்ச் சொற்களும் தோன்றியுள்ளன.

வய் (=ஒதுக்கு, பிரி) >>> வை = வைக்கோல் ( பிரிக்கப்பட்டது )
வய் (=ஒதுக்கு, பிரி) >>> வயவை, வாய், வாசல் ( பிரிவுடையவை )

ஆயுள்:

ஆயுள் என்பது காலத்தைக் குறிப்பதான தமிழ்ச் சொல்லே ஆகும். ஆய் என்னும் வினையடியாய்ப் பிறந்த சொல்லாகும் இது. ஆய்தல் என்றால் பிரித்தெடுத்தல், களைதல் என்றெல்லாம் பொருட்கள் உண்டென்று தமிழ் அகராதிகள் காட்டுகின்றன. இச் சொல்லின் தோற்றமுறை கீழே:

ஆய் (= பிரித்தெடு, களை) >>> ஆயுள்

காலம்:

காலம் என்பதும் பொழுதைக் குறிப்பதான தமிழ்ச் சொல்லே ஆகும். கல்லுதல் என்ற வினையடியாய்ப் பிறக்கும் இச் சொல்லுக்குக் காலை, கால் என்பன வேறு வடிவங்கள் ஆகும். கல்லுதல் என்ற வினைச் சொல்லுக்கு வெட்டியெடுத்தல், துண்டாக்குதல் என்பன பொருட்களாகும். போகூழாய் இப் பொருள் தமிழ் அகராதிகளில் காட்டப்படவில்லை. இச்சொல்லின் தோற்றமுறை கீழே:

கல்லு (=வெட்டியெடு, துண்டாக்கு) >>> காலை, காலம், கால்.

பி.கு: கல்லுதல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றிய இன்னொரு சொல்லே கல் ஆகும். பெரிய பாறையின் ஒரு சிறிய துண்டே கல் என்று அழைக்கப்படுகிறது.

கல்லு (=வெட்டியெடு, துண்டாக்கு) >>> கல் (=பாறைத் துண்டு)

பொழுது:

பொழுது என்னும் தமிழ்ச் சொல்லானது போழ்தல் என்ற வினையை அடிப்படையாகக் கொண்டு பிறந்ததாகும். போழ்தல் என்பதற்குப் பிளத்தல், வெட்டுதல் என்ற பொருட்கள் உண்டு. பொழுது என்ற காலப்பெயரின் தோற்றமுறை கீழே:

போழ் (=பிள, வெட்டு) + து >>> போழ்து, பொழுது

தியாலம்:

தியாலம் என்னும் சொல்லானது தேய்தல் என்ற வினையை அடிப்படையாகக் கொண்டு பிறந்ததாகும். தேய்தல் என்பதற்குக் கழிதல், நீங்குதல் என்ற பொருட்கள் உண்டு. தியாலம் என்ற காலப்பெயரின் தோற்றமுறை கீழே:

தேய் (=கழி, நீங்கு) >>> தேயல் >>> தேயலம் >>> தியாலம்.


தருணம் & தறுவாய்:

தருணம், தறுவாய் என்ற தமிழ்ச் சொற்களும் தறித்தல் என்ற வினையை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததாகும். தறித்தல் என்றால் வெட்டுதல், பிளத்தல் என்ற பொருட்கள் உண்டு. இந்த இரண்டு காலப்பெயர்களின் தோற்றமுறை கீழே:

தறி (=வெட்டு) >>> தறிணம் >>> தருணம்  
தறி (=வெட்டு) >>> தறிவாய் >>> தறுவாய்

தவணை:

தவணை என்னும் தமிழ்ச் சொல்லானது தவத்தல் என்ற வினையை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதாகும்.  தவத்தல் என்ற வினைக்கு நீங்குதல் என்ற பொருளுண்டு. தவணை என்ற காலப்பெயரின் தோற்றமுறை கீழே:

தவ (=நீங்கு) >>> தவணை

தாப்பு:

தாப்பு என்னும் பெயர்ச் சொல்லானது தப்புதல் என்ற வினையின் அடிப்படையில் பிறந்த சொல்லாகும். தப்புதல் என்ற வினைக்கு நீங்குதல் என்ற பொருளுமுண்டு. இதனின்று, தாப்பு என்னும் காலப்பெயர் தோன்றும் முறை கீழே:

தப்பு (=நீங்கு) >>> தாப்பு

தான்றி:

தான்றி  என்னும் பெயர்ச் சொல்லானது தனித்தல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றிய சொல்லாகும். தனித்தல் என்றால் பிரிதல், நீங்குதல் என்ற பொருட்கள் உண்டு. இதிலிருந்து, தான்றி என்னும் காலப்பெயர் தோன்றும் முறை கீழே:

தனி (=பிரி, நீங்கு) >>> தான்றி


திகதி:


திகதி என்னும் பெயர்ச் சொல்லானது திகைத்தல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றிய சொல்லாகும். திகைத்தல் என்றால் துணிதல், முடிவுசெய்தல் என்ற பொருட்கள் உண்டு. இதிலிருந்து, திகதி என்னும் காலப்பெயர் தோன்றும் முறை கீழே:

  திகை (=துணி) >>>திகதி = துணியப்பட்டது = நாள்.

தியதி / தேதி:

தியதி, தேதி என்னும் பெயர்கள் தேய்தல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றியவை ஆகும். தேய்தல் என்றால் கழிதல், நீங்குதல் என்ற பொருட்கள் உண்டு. இதிலிருந்து, இக் காலப்பெயர்கள் தோன்றும் முறை கீழே:

  தேய் (=கழி, நீங்கு) >>>தேய்தி >>> தேதி
  தேய் (=கழி, நீங்கு) >>> தியதி

................ தொடரும் ................