சிலப்பதிகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிலப்பதிகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 நவம்பர், 2016

இமயமலையும் தமிழர்களும் - பகுதி 1

முன்னுரை:

இன்றைய இந்தியாவில் தொல்தமிழகமானது, இமயமலையினை வட எல்லையாகவும், மேற்கு வங்காளத்தினை கிழக்கு எல்லையாகவும் ராஜஸ்தானை மேற்கு எல்லையாகவும் கொண்டு தெற்கே பரந்து விரிந்த தேயமாக விளங்கியது என்று ' நான்கு கடவுள் - தொல்தமிழகம் ' என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். இக் கட்டுரையில், தொல்தமிழகமானது இமய மலைக்கு அருகில் தான் அமைந்திருந்தது என்னும் கருத்தினைப் போதுமான இலக்கிய ஆதாரங்களுடன் விரிவாகக் காணலாம். 

சிலப்பதிகாரமும் இமைய மலையும்:

தமிழினத்தைச் சேர்ந்த முப்பெரும் வேந்தர்களான பாண்டியர், சேரர், சோழர் ஆகிய மூவருமே இமையமலையில் தமது அரசுக்கான கொடியினை நட்டு தமது வெற்றியை உலகுக்குப் பறைசாற்றி உள்ளனர். இதைப்பற்றிய சிலப்பதிகாரப் பாடலைக் கீழே காணலாம்.

கயல் எழுதிய இமய நெற்றியின்
அயல் எழுதிய புலியும் வில்லும் - மதுரை.17

பாண்டியருக்கான மீன்கொடியும் சோழருக்கான புலிக்கொடியும் சேரருக்கான வில்கொடியும் இமைய மலையில் நட்டு வைக்கப் பட்டிருந்ததாக மேற்காணும் பாடல் குறிப்பிடுகிறது. இதுபோல சிலப்பதிகாரம் முழுவதிலுமே தமிழ் மன்னர்கள் தமது வெற்றிக்கொடியினை நாட்டி அரசாண்ட செய்திகள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் ஒருசில இடங்கள் மட்டுமே கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மின் தவழும் இமயநெற்றியில் விளங்கு
வில்-புலி-கயல் பொறித்த நாள் - வஞ்சி.29
பொன் இமய கோட்டு புலி பொறித்து மண் ஆண்டான் - மதுரை. 17
வில் எழுதிய இமயத்தொடு கொல்லி ஆண்ட குடவர் கோவே - வஞ்சி.24

இமயமலையில் தமிழ் மன்னர்கள் தமது கொடிகளை நட்டு ஆட்சிபுரிந்த செய்திகளை மேற்காணும் பாடல்கள் கூறுகின்றன. இதெல்லாம் அம் மன்னர்களுக்கு எப்படிச் சாத்தியமாயிற்று?. தற்போதைய தமிழ்நாட்டில் இருந்துகொண்டு இமயம் வரை சென்று போரிட்டு வெற்றிபெற்று கொடிநாட்டுவது என்பது இயலாத செயலாகும். காரணம், தற்போதைய தமிழ்நாட்டில் இருந்து இமயமலையானது ஏறத்தாழ 3000 கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து இமயமலைக்குச் செல்லும் வழியில் ஆறுகள், மலைகள், காடுகள் என்று பல தடைகள் எதிர்ப்படும். அவற்றைக் கடந்து முன்னேறும்போது வழியில் பிறநாட்டு மன்னர்களும் தடுப்பார்கள். அவர்களுடனும் போரிட்டு வெற்றிபெற்றால் தான் முன்னேறிச் செல்லமுடியும். இப்படிப் பல தடைகளையும் வென்று இவ்வளவு தூரத்தினைக் கடந்துசெல்வதற்குள் படைவீரர்கள், யானை, குதிரை போன்ற போர்விலங்குகளின் எண்ணிக்கை மற்றும் உடல்வலிமை ஆகிய ஒட்டுமொத்த வலிமையும் குன்றிவிடும். அப்புறம் போரில் வெற்றி பெறுவதென்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால், தமிழ் மன்னர்கள் இமயமலையை வெற்றிகொண்டு ஆட்சி புரிந்திருக்கிறார்கள் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. என்றால், அவர்கள் அப்போதிருந்த இடமானது உறுதியாக இமயமலைக்கு அருகில் தான் இருந்திருக்க வேண்டும். அப்போதுதான் இமயமலையின் வெற்றி அவர்களுக்குச் சாத்தியமாகும்.

" இல்லை இல்லை, சிலப்பதிகாரம் என்பது கற்பனை கலந்து எழுதப்பட்ட ஒரு காப்பிய நூல். அந்நூல் கூறும் வரலாற்றுச் செய்திகள் நம்பகமற்றவை. " என்று ஒருசிலர் மறுக்கலாம். இவர்களது வாதம் எவ்வளவு தவறானது என்பதைப் படிக்கப் படிக்கப் புரிந்துகொள்வார்கள். ஆம், சிலப்பதிகாரத்தைத் தான் கற்பனைக் காப்பியம் என்று இவர்கள் குறைகூறுகிறார்கள். சங்க இலக்கியங்களில் இமயமலை பற்றி ஏராளமான செய்திகள் காணப்படுகின்றனவே. அவையும் பொய்தானா இவர்களுக்கு?. இதோ சங்க இலக்கியங்களில் இமயமலை பற்றிக் காணக் கிடைக்கின்ற செய்திகள் பாடல் வரிகளுடன் விளக்கமாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் படித்துமுடித்துவிட்டு ஒரு முடிவுக்கு வரலாம். 

சங்க இலக்கியமும் இமயமலையும்: சான்று: 1
சிமைய குரல சாந்து அருந்தி இருளி
இமைய கானம் நாறும் கூந்தல்
நன் நுதல் அரிவை இன் உறல் ஆகம்
பருகு அன்ன காதல் உள்ளமொடு
திருகுபு முயங்கல் இன்றி அவண் நீடார்
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த
உடை_கண் நீடு அமை ஊறல் உண்ட
பாடு இன் தெண் மணி பயம் கெழு பெரு நிரை
வாடு புலம் புக்கு என கோடு துவைத்து அகற்றி
ஒல்கு நிலை கடுக்கை அல்கு நிழல் அசைஇ
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும்
சிறு வெதிர் தீம் குழல் புலம் கொள் தெள் விளி
மை இல் பளிங்கின் அன்ன தோற்ற
பல் கோள் நெல்லி பைம் காய் அருந்தி
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம்
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல்
வேய் கண் உடைந்த சிமைய
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே - அகம். 399

வரிவிளக்கம்:

சிமைய குரல = மலையுச்சியில் பூத்த பல மலர்களின்
சாந்து அருந்தி இருளி = சாந்தினைக் கருமையுடன் சேர்த்துப் பூசியதால்
இமைய கானம் = இமயத்து மலர்ச்சோலைகளைப் போல
நாறும் கூந்தல் = நறுமணம் வீசுகின்ற கண்ணிமைகளையும்
நன் நுதல் அரிவை = நல்ல ஒளிவீசும் கண்களையும் உடைய தலைவியே !
இன் உறல் ஆகம் = இன்பம் தரும் கண்களைப்
பருகு அன்ன காதல் உள்ளமொடு = பருகுவதைப் போலும் காதல் உள்ளத்துடன்
திருகுபு முயங்கல் இன்றி = பின்னியதைப் போலப் பார்ப்பதே அன்றி
அவண் நீடார் = அங்கே காலந்தாழ்த்த மாட்டார்
கடற்று அடை மருங்கின் = காட்டுவழியின் ஓரமாக
கணிச்சியின் குழித்த = மழுவினைக் கொண்டு செதுக்கிய
உடைக்கண் நீடு அமை = கணு உடைந்த நீண்ட மூங்கில் மரங்களின்
ஊறல் உண்ட = பச்சிலைகளை உண்ட
பாடு இன் தெண் மணி = ஒலிக்கின்ற மணிகள் கோர்த்த
பயம் கெழு பெரு நிரை = பால் நிறைந்த பசுக்கூட்டமானது
வாடு புலம் புக்கு என = வறண்ட நிலத்தில் புகுந்ததென
கோடு துவைத்து அகற்றி = ஊதுகொம்பினை ஒலித்து நீங்கச்செய்து
ஒல்கு நிலை கடுக்கை அல்கு நிழல் அசைஇ = குட்டையாக வளர்ந்த கொன்றைமர நிழலில் தங்கி
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும் = இடையர்கள் ஊதுகின்ற
சிறு வெதிர் தீம் குழல் = மூங்கிலால் செய்த சிறிய புல்லாங்குழலின்
புலம் கொள் தெள் விளி = இடம் முழுவதும் பரவிய தெளிவான ஓசையினை
மை இல் பளிங்கின் அன்ன தோற்ற = குற்றமில்லாத பளிங்கு போலத் தோன்றுகின்ற
பல் கோள் நெல்லி பைம் காய் அருந்தி = பல நெல்லிமரங்களின் பசுங்காய்களைத் தின்று
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம் = அசையிட்டவண்ணமாக மான்கூட்டம் கவனித்துக் கேட்கின்ற காட்டினையும்
காய் கதிர் கடுகிய = கதிரவன் மிகுதியாகக் காய்ந்ததால்
கவின் அழி பிறங்கல் = அழகு அழிந்த மலையினதாய்
வேய் கண் உடைந்த சிமைய = மூங்கில்களின் கணு உடைந்த மலையுச்சியின்
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே - விளிம்பருகே உள்ள வழியாக மலையைக் கடந்தவரே.

( பொருள்: மலையுச்சியில் பூத்த பல மலர்களின் சாந்தினைக் கருமையுடன் சேர்த்துப் பூசியதால் இமயத்து மலர்ச்சோலைகளைப் போல நறுமணம் வீசுகின்ற கண்ணிமைகளையும் நல்ல ஒளிவீசும் கண்களையும் உடைய தலைவியே ! காட்டுவழியின் ஓரமாக வளர்ந்திருந்த பிளவுபட்ட நீண்ட மூங்கில் மரங்களை மழுவினைக் கொண்டு செதுக்கியிட்ட பச்சிலைகளை உண்ட, ஓலிக்கும் மணிகள் கட்டப்பட்ட பசுக்கூட்டமானது வறண்டநிலத்தில் புகுந்ததால், ஊதுகொம்பினை ஒலிக்கச்செய்து அங்கிருந்து அவற்றை நீங்கச்செய்தபின்னர், குட்டையாக வளர்ந்திருந்த கொன்றைமர நிழலில் இளைப்பாறியவண்ணம் இடையர்கள் ஊதிய புல்லாங்குழலின் ஓசையினை, பளிங்குபோன்ற நெல்லிக்காய்களைத் தின்று அசைபோட்டவண்ணம் கவனித்துக் கேட்கின்ற மான் கூட்டம் மிக்கதும், வெயிலின் கடுமையால் வறண்டு அழகழிந்து பிளவுண்ட பல மூங்கில் மரங்களை உச்சியில் உடையதுமான அம் மலைக்காட்டினைக் கடந்துசென்ற உனது காதலர், உனது கண்கள் தரும் இன்பத்தினைப் பருகுவதற்கு காதல் மிக்க உள்ளத்துடன் உன்னைக் காண விரைந்து வருவாரேயன்றி அங்கே நீண்டகாலம் தங்கமாட்டார். )

இப் பாடலில் இமையமலையில் இருக்கும் மலர்ச்சோலைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறாள் தலைவி. இமயமலையில் பல சமவெளிகளும் மலையுச்சிகளும் உண்டென்று அனைவரும் அறிவோம். அப்படி ஒரு சமவெளியில் வாழுகின்ற தலைவியானவள் அருகிருக்கும் ஒரு மலையுச்சியில் இருந்து பறிக்கப்பட்ட பூக்களின் தாதுக்களை மைபோல அரைத்துக் கருமையுடன் சேர்த்து கண்ணிமைகளில் பூசியிருக்கிறாள். அது இமயமலையில் உள்ள பன்மலர்ச் சோலைகளைப் போல மணம்வீசுவதாகக், காதலரின் பிரிவால் வாடிக்கொண்டிருக்கும் தலைவியிடம் கூறி அவள் மனதை மாற்ற முயல்கிறாள் அவளது தோழி. தலைவி வாழும் சமவெளியில் இடையர்கள் மாடு மேய்த்தவாறு புல்லாங்குழலை ஊதி மகிழ்வது வழக்கம். அப்படி அவர்கள் ஊதும் புல்லாங்குழலின் ஓசையினை அருகிருக்கும் இன்னொரு மலையுச்சியில் வாழ்கின்ற மான் கூட்டமானது கூர்ந்து கேட்குமாம். பொருள் கருதித் தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன் அருகிருக்கும் அந்த மலையுச்சியினைக் கடந்துதான் செல்ல வேண்டும். மான்கள் தனது துணையுடன் சேர்ந்திருக்கும் அக் காட்சியைக் காணும் தலைவர் உன்னைக் காண விரைந்து வருவார் என்று அவளைத் தேற்றுவதாகப் பாடல் அமைந்துள்ளது.

அதுமட்டுமல்ல, இப் பாடலில் வேனில் பருவத்துக் கொடுமை விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இடையர்கள் மாடுமேய்த்துச் செல்லும் சமவெளியில் வெயிலின் தாக்கத்தினால் மூங்கில் மரங்கள் கணுக்கள் பிளந்தநிலையில் காணப்படுகின்றன. பசுக்கள் குடிப்பதற்குத் தண்ணீர் எங்கேயும் காணப்படாததால், லேசான ஈரப்பதத்துடன் இருக்கின்ற மூங்கிலின் இலைகளை மழுவினைக் கொண்டு செதுக்கி அவற்றைப் பசுக்களுக்கு உண்ணக் கொடுக்கிறார்கள் இடையர்கள். வெயிலில் அலைய முடியாமல் குட்டையாக வளர்ந்திருக்கும் கொன்றை மரங்களின் நிழலில் இளைப்பாறிய வண்ணம் பொழுதுபோக புல்லாங்குழல் வாசிக்கின்றனர். இதுபோல பல இடையர்கள் வாசித்ததால் எழுந்த பெரும் ஓசையினை அருகில் இருக்கும் மலையுச்சியில் வாழும் மான் கூட்டங்கள் கவனித்துக் கேட்ட வண்ணம், நெல்லி மரங்களின் காய்களைத் தின்றுகொண்டு நிற்கின்றன. மான்கள் வாழும் அந்த மலையின் நிலையோ சமவெளியைக் காட்டிலும் கொடியது. கொடிய வெப்பத்தால் மலையுச்சியிலிருந்த மூங்கில் மரங்களின் கணுக்கள் யாவும் வெடித்து முற்றிலும் பசுமை இழந்து வறண்ட நிலையில் அழகற்றுக் காணப்படுகின்றன. தாகத்தைத் தீர்க்க விரும்பிய மான் கூட்டமோ நீரின்மையால் நெல்லிக்காய்களைத் தின்று அதையே அசைபோட்டுக் கொண்டிருக்கின்றன. 

இப் பாடலில் கூறப்படும் செய்திகள் யாவும் இமயமலை பற்றியதாகத் தான் இருக்கமுடியும். இமயமலையின் மலர்ச்சோலைகளைப் போல மணம் பரப்புகின்ற கண்ணிமைகளை உடையவளே என்று தோழி கூறுவதிலிருந்து இதனை அறிந்துகொள்ளலாம். இன்றைய தமிழ்நாட்டில் இருந்துகொண்டு, எங்கோ இருக்கின்ற இமயமலையைப் பற்றி இவ்வளவு விரிவாக யாரும் கூறமாட்டார்கள். அவ்வகையில், சங்க காலத்தில் இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதற்கு இப்பாடலை ஒரு காட்டாகக் கொள்ளலாம் என்பது துணிபாகும். 

.......  தொடரும்.....

வெள்ளி, 24 ஜூன், 2016

வடிவேல் எறிந்த வான்பகை

முன்னுரை:

சிலப்பதிகாரத்தில் காடுகாண் காதையில் கீழ்க்காணும் வரிகள் உள்ளன.

.....வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள.....

இப் பாடல் வரிகளுக்குக் கீழ்க்காணுமாறு பொருள் கூறியுள்ளனர்.

' பாண்டிய மன்னனானவன் தனது வடிவேலைக் கடல்மீது எறிந்திட, அந்தப் பெரிய பகையினைப் பொறுக்கமாட்டாமல், கடலானது பொங்கி எழுந்து பஃறுளி ஆற்றுடன் குமரி மலை அடுக்குகளையும் தன்னுள் விழுங்கிக்கொள்ள......'

இவ்விளக்கம் சரியானதுதானா என்று இக் கட்டுரையில் விரிவாக அலசலாம்.

விளக்கத் தவறுகள்:

இவ் விளக்கத்தில் இரண்டு தவறுகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.

பாண்டிய மன்னனானவன் தனது வேலினை கடல்மீது எறிந்ததாகக் கூறுவது முதல் தவறு. இக் கூற்று சரியென்றால், இதனை எவ்வாறு எடுத்துக் கொள்வது?. உண்மை நிகழ்ச்சியாகவா?. புராணக் கதையாகவா?. இப் பாடலில் பாண்டியன் போற்றப்படுவதால், இது ஓர் உண்மை நிகழ்வாகத் தான் இருக்கவேண்டும்.

முதலில் இதை ஒரு உண்மை நிகழ்ச்சியாக எடுத்துக்கொண்டால், பாண்டியன் ஏன் தனது வேலினை கடல்மீது எறியவேண்டும்?. காரணம் எதுவானாலும், ஒரு மனிதன் தனது வேலை கடல்மீது எறிவதை முட்டாள்தனமான செயலாக அல்லாமல் எவ்வாறு எடுத்துக்கொள்வது?. ஆக, முதல்கூற்று உண்மை நிகழ்ச்சியென்றால், பாண்டியன் ஒரு முட்டாள் என்பது உறுதியாகிறது. பாண்டியனைப் புகழ்வதே இப் பாடலின் நோக்கமாக இருக்கும் பட்சத்தில், அவனை முட்டாளாகக் காட்ட புலவர் ஒருபோதும் விரும்பமாட்டார். இதிலிருந்து இப் பாடலில் ' பாண்டியன் தனது வேலினை கடல்மீது எறிந்தான்' என்ற கருத்தானது கூறப்படவில்லை என்பது தெளிவு.

அடுத்ததாக, பாண்டியன் வேலை எறிந்தது ஒரு பெரிய பகையைத் தோற்றுவித்ததாம். இதுவும் தவறான கூற்று. காரணம், கடல்மீது வேலை எறிந்தால் என்ன பகை உண்டாகும்? யாரோடு பகை உண்டாகும்?. ஒரு சிறிய வேலினை எறிந்ததற்கு எல்லாம் கடலானது பொங்கி எழுவதாக இருந்தால், நம்மில் பலர் எதைஎதையோ கடலில் வீசி அசுத்தப் படுத்துகின்றனரே !. இவற்றுக்கெல்லாம் கடல் பொங்குவதாக இருந்தால் நம் கதி அதோ கதிதான்!!!. எனவே இரண்டாவது கூற்றும் தவறு என்பது புலப்படும்.

இப் பாடலுக்கான தவறான விளக்கத்திற்குக் காரணம், வான்பகை என்ற சொல்லே. இதில் வரும் வான் என்பதற்கு ' பெருமை' எனப் பொருள்கொண்டு, வான்பகை என்பதற்கு பெரிய பகை என்று பொருள்கொள்கின்றனர். இதுவே இத் தவறான விளக்கங்களுக்கு அடிகோலி இருக்கிறது. வான்பகை என்ற சொல்லைப் பற்றிக் கீழே காணலாம்.

வான்பகை - பொருள் என்ன?

வான்பகை என்ற சொல்லின் உண்மையான பொருள் என்ன என்று இங்கே காணலாம்.

பொதுவாக, வான் என்ற சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருட்கள் இருப்பதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகின்றது.

 வான்¹ vāṉ , n. 1. [T. vāna, K. bāna, M. vānu.] Sky, the visible heavens; ஆகாயம். வானுயர் தோற்றம் (குறள், 272). 2. Primordial matter; மூலப்பிரகிருதி. வானின் றிழிந்து வரம்பிகந்த மாபூதத்தின் (கம்பரா. அயோத். மந்திர. 1). 3. Cloud; மேகம். ஏறொடு வான் ஞெமிர்ந்து (மதுரைக். 243). 4. Rain; மழை. வான்மடி பொழுதில் (பெரும் பாண். 107). 5. Celestial world; தேவருலகு. வான்பொரு நெடுவரை (சிறுபாண். 128). 6. Ambrosia; அமிர்தம். வான்சொட்டச் சொட்ட நின் றட்டும் வளர்மதி (தேவா. 586, 1). 7. Heaven; மோட்சலோகம். வானேற வழிதந்த (திவ். திருவாய். 10, 6, 5). 8. Goodness; நன்மை. வரியணி சுடர் வான் பொய்கை (பட்டினப். 38). 9. Greatness; largeness; பெருமை. (பிங்.) இருடூங்கு வான்முழை (காசிக. காசியின்சிறப். 13). 10. Beauty; அழகு. வான்பொறி பரந்த புள்ளி வெள்ளையும் (கலித். 103). 11. Strength; வலிமை. (பிங்.) 12. Regularity; நேர்மை. வானிரைவெண்பல் (கலித். 14). 13. A kind of tree; மரவகை. (பிங்.)

இப் பாடலில் வரும் வான் என்பது இங்கே மேகத்தைக் குறிப்பதாகும். பகை என்பது பகைமையினையோ பகைமையினை உடைய எதிரியையோ குறிக்கும் என்று அறிவோம். இதிலிருந்து,

வான்பகை என்பது மேகத்தின் எதிரி என்ற பொருளைத் தருவதாகும்.

என்றால் மேகத்தின் எதிரி யார்?. மலை தான். இது எப்படி என்று பார்ப்போம்.

பொதுவாக, மேகங்கள் ஓரிடத்தில் நில்லாமல் சுதந்திரமாகச் சுற்றித்திரியும் இயல்புடையவை. மேகங்களைக் குழந்தைகளாகக் கொண்டால், அக் குழந்தைகளைத் தாலாட்டுகின்ற அன்னை காற்றாகும். ஆனந்தமான தாலாட்டில் சுதந்திரமாக சுற்றித்திரிந்து கொண்டிருக்கும்போது திடீரென்று மலை உச்சியானது குறுக்கிட்டு மேகங்களைத் தடுத்து நிறுத்தும். இதனால் மேகங்களின் இயக்கம் தடையுறுவதால் அவை சினங்கொண்டு மலையுடன் பொருதுநிற்கும். இதை நாம் இயல்பாக பல மலைமுகடுகளில் காணலாம். இப்படி மேகங்களின் தங்குதடையில்லா இயக்கத்திற்கு எதிராக, இன்றைய ஸ்பீட்பிரேக்கர் போல மலைகள் செயல்படுவதால், மலைகளை வான்பகை என்று இப் பாடலில் குறிப்பிடுகிறார் புலவர்.

வடிவேல் எறிந்த வான்பகை

இப் பாடலில் வரும் வான்பகை என்ற சொல்லானது மலையினைக் குறிக்கும் என்று மேலே கண்டோம். என்றால், இது எந்த மலையினைக் குறிக்கும் என்று இங்கே காண்போம்.

புலவர் இப் பாடலில், வெறுமனே ' வான்பகை ' என்று கூறாமல் ' வடிவேல் எறிந்த வான்பகை ' என்று கூறி இருக்கிறார். இதற்கு ' வடிவேல் கொண்டு எறியப்பட்ட மலை ' என்று பொருளாகும்.

வடிவேல் கொண்டு எறியப்பட்ட மலை என்று இலக்கியங்களில் கூறப்படும் மலை எது என்று ஆய்ந்ததில், அது முருகப் பெருமானின் வடிவேலினால் கூறுசெய்யப்பட்ட கிரவுஞ்ச மலையினைக் குறிப்பதாகக் கந்த புராணம், கந்தர் அலங்காரம் போன்ற இலக்கியங்கள் கூறுகின்றன. இதைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

புராணங்களில் கிரவுஞ்ச மலை:

கந்த புராணம், கந்தர் அலங்காரம், திருப்புகழ் போன்ற இலக்கியங்களில் கிரவுஞ்ச மலையினை முருகன் தனது வேலினால் கூறுசெய்த நிகழ்வானது கூறப்பட்டுள்ளது.

தாரகன் என்னும் அசுரனானவன், முருகனுடன் போர்புரியும்போது, கிரவுஞ்ச மலைக்குள் புகுந்து ஒளிந்துகொண்டதாகவும், முருகனும் விடாமல், தனது வேலினை அம் மலைமீது பாய்ச்சி மலையைப் பிளக்கச் செய்து அசுரனைக் கொன்றார் என்று இலக்கியங்கள் முருகப் பெருமானின் புகழ் பாடுகின்றன.

இப்படி முருகப்பெருமானால் வேல்கொண்டு எறியப்பட்ட மலையான கிரவுஞ்ச மலையினை சிலப்பதிகாரத்தில் ஆசிரியர் ஏன் எடுத்தாள வேண்டும்? இதைப் பற்றிக் கீழே காணலாம்.

கிரவுஞ்ச மலை - அமைப்பும் பெயர்க் காரணமும்:

முதலில், கிரவுஞ்ச மலைக்கு ஏன் அப்பெயர் வந்தது என்று பார்க்கலாம். உண்மையில், கிரவுஞ்சம் என்பது ஒருவகை கொக்குப்பறவையின் பெயராகும். ஆங்கிலத்தில் sarus crane என்று அழைக்கப்படுகிறது.

கொக்கு இனங்களிலேயே இந்த கிரவுஞ்சப் பறவைதான் உயரமானது என்று விக்கிபீடியா கூறுகிறது. அதுமட்டுமின்றி, இந்தப் பறவையின் கூடு முற்றிலும் வினோதமான ஒன்றாகும். பொதுவாகப் பறவைகள் மரத்தில் கூடுகட்டி வாழும். ஆனால் இப் பறவையோ ஆழமற்ற நீர்நிலைகளில் மண், புல், குச்சி, செடிகொடிகளைக் கொண்டு நீரின் நடுவே ஒரு உயரமான தீவு போன்ற அமைப்பில் கூடுகட்டி வாழும். இக் கூடானது ஏறத்தாழ 6 அடி அகலத்தில் முட்டை வடிவத்தில் 3 அடி உயரமுடையதாய்க் கட்டப்பட்டிருக்கும். தொலைவில் இருந்து பார்க்கும்போது அது ஒரு சிறிய தீவு போல நீர் சூழ்ந்து காணப்படும்.

கிரவுஞ்ச மலைக்கு அப் பெயர் வந்த காரணம், கிரவுஞ்சப் பறவையின் கூடு போன்ற அமைப்பே. கிரவுஞ்சப் பறவையின் கூடானது எப்படி நீர் சூழ ஒரு உயரமான அகலமான தீவு போல இருக்கிறதோ, அதைப் போலவே கிரவுஞ்ச மலையானது கடல்நீர் சூழ்ந்த ஒரு தீவு போல மிக மிக அகலமாகவும் உயரமாகவும் இருந்தது. உண்மையில் கிரவுஞ்ச மலையானது ஒரு மடிப்பு மலையாகும். ஆங்கிலத்தில் இதனை fold mountain என்று கூறுவார்கள்.

பொதுவாக, பெரும்பாலான மடிப்பு மலைகள் கடற்கரைகளுக்கு அடுத்தாற்போலவே அமைந்திருக்கும். இதற்கு எடுத்துக்காட்டாக, நமது நாட்டில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளையும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளையும் கூறலாம். அமெரிக்காவின் ஆண்டிஸ் மலைத்தொடரும் ஒரு மடிப்பு மலையே ஆகும். இந்த மடிப்பு மலைகள் பெரும்பான்மையும் படிவுப்பாறைகளாலோ உருமாறிப் பாறைகளாலோ அமைந்திருக்கும். மடிப்பு மலைகள் கடற்கரைகளை ஒட்டித் தோன்றக் காரணம், உப்பாகும். உப்பு ஒரு நெகிழ்வுத்தன்மை கொண்ட பொருளாதலால், உப்புப் படிவங்கள் ஒன்றோடொன்று மோதி நெகிழும்போது அவற்றின் மேலுள்ள பாறைகளும் மண்ணும் உயர்ந்து மடிந்து மடிப்பு மலைகளாக மாறுகின்றன. இதுபற்றிய மேலதிக விவரங்களை விக்கிபீடியாவில் காணலாம்.

இப் பாடலில் வரும் கிரவுஞ்ச மலையானது கடல்நீர் சூழப்பட்ட ஒரு பெரிய மடிப்புமலை ஆகும். இது அகலமாகவும் உயரமாகவும் இருந்துவந்ததால், கடல் ஓதங்களில் இருந்து நிலத்தைக் காப்பாற்றி தென் இந்தியாவில் ஒரு இயற்கையான தடுப்பு அரணாக செயல்பட்டு வந்தது. இருந்தாலும், அது ஒரு வலிமையற்ற படிவுப்பாறை / உருமாறிப்பாறை மலையாதலால், நாளடைவில், அது கடல் அலைகளின் சீற்றத்தினைத் தாங்கமாட்டாமல், பிளவுற்றது. விளைவு?. கடல் அலைகள் சீற்றத்துடன் புகுந்து, கிரவுஞ்ச மலையினை அடுத்திருந்த பஃறுளி ஆற்றினையும் அதனை அடுத்திருந்த உயரம் குறைவான குமரி மலைத் தொடரையும் தனக்குள் விழுங்கி விட்டது.

முடிவுரை:

இதுகாறும் கண்டவற்றில் இருந்து, நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்,

இப்பாடலில் வரும், ' வடிவேல் எறிந்த வான்பகை ' என்பது கிரவுஞ்ச மலையினைக் குறிக்கும் என்பதும்
கிரவுஞ்ச மலையினைப் போல பல மடிப்பு மலைகள் தென்னிந்தியக் கடற்கரைகளை ஒட்டி அமைந்திருந்தன என்பதும்
கிரவுஞ்ச மலையே அவற்றில் மிகப் பெரியதாய் ஒரு தடுப்பு அரணாக செயல்பட்டு வந்தது என்பதும்
கிரவுஞ்ச மலை பிளவுற்றதால் கடல் ஓதம் நிலத்துக்குள் புகுந்து
பஃறுளி ஆற்றினையும் குமரி மலைத் தொடரினையும் தனக்குள் மூழ்கச்செய்து விட்டது என்றும்
கிரவுஞ்ச மலையின் பிளவினை முருகனுடன் தொடர்புறுத்தி புராணக் கதையாக்கியது பிற்காலத்தவர் செயலென்பதும் ஆகும்.
================================================

வியாழன், 8 டிசம்பர், 2011

நான்கு கடவுள் - பகுதி 5 (இந்திரவிழாவும் தைப்பொங்கலும்)


மருதநில மக்கள் சூரியனையே தெய்வமாக வணங்கினர் என்பதைப் பற்றி நான்கு கடவுள் - பகுதி 1 (நிலமும் தெய்வமும்) என்ற கட்டுரையில் கண்டோம். அவ் வரிசையில், சிலப்பதிகாரமும் மணிமேகலையும் குறிப்பிடுகின்ற இந்திரவிழாவே நாம் தற்போது கொண்டாடி வருகின்ற தைப்பொங்கல் விழாவின் முன்னோடி என்பதனை இக் கட்டுரையில் சான்றுகளுடன் காணலாம்.

தொல்காப்பிய இந்திரன்

மாயோன் மேய என்று தொடங்கும் தொல்காப்பியப் பொருளதிகாரப் பாடல் 'வேந்தன் மேய தீம்புனல் உலகம்' என்று மருதநிலத்தைக் குறிப்பிடுகிறது.

மாயோன் மேய கானுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமதில் உலகமும்'

இப்பாடலில் வரும் வேந்தன் என்னும் சொல் தேவர்களின் அரசனான ஐராவத யானையுடைய இந்திரனைக் குறிக்காமல் சூரியனையே குறிக்கும் என்று முன்னர் கட்டுரையில் (நான்கு கடவுள் - பகுதி 1) கண்டோம். தொல்காப்பியர் இப்பாடலில் சூரியனை 'வேந்தன்' என்று கூறியதன் காரணம், சூரியனும் ஒரு மன்னனைப் போல ஒரு குடைக் கீழ் பல உயிர்களைக் காப்பதாலும் வெம்மைத் தன்மை (வேது) உடையதாலும் தான்.

வேது ----------------------------> வேந்தன்
(வெம்மை)                (வெம்மை மிக்கவன்)

தீம்புனல் உலகமாகிய மருதநிலங்கள் நிறைந்த சோழநாட்டிலே வாழ்ந்த மக்கள் தங்களது வழிபடு தெய்வமான சூரியனுக்கு எடுத்த பெருவிழாவே இந்திர விழாவாகும். ஆம், தொல்காப்பியரால் வேந்தன் என்று குறிப்பிடப்பட்ட சூரியனே பிற்காலத்தில் இந்திரன் என்றும் அழைக்கப்பட்டான்.

இந்திரனும் சூரியனும்

இந்திர விழாவின் நாயகன் சூரியனே என்பதைப் பற்றிக் காணும் முன்னர் இந்திரன் என்னும் சொல் எவ்வாறு சூரியனைக் குறிக்கும் என்று காணலாம்.

இந்திரன் என்ற சொல் சூரியனைக் குறிக்கும் என்பதற்கு கீழ்க்காணும் ஆதாரங்கள் அளிக்கப்படுகின்றன.

ஆதாரம் - 1: கிழக்குத் திசைக்கு 'இந்திரி', 'ஐந்திரம்' என்ற பெயர்களும் உண்டென்று சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது.

இந்திரி¹ intiri
, n. < aindrī. The eastern cardinal direction, கிழக்கு. இந்திரி முதற்றிசை யெட்டுங் கேட்டன (கம்பரா. வாலி வதை.)
ஐந்திரம் aintiram
, n. < aindra. 1. See ஐந்திரவியாகரணம். ஐந்திர நிறைந்த தொல்காப்பியன் (தொல். பாயி.). 2. East, கிழக்கு. (பிங்.)

இந்த கிழக்குத் திசையில் இருந்து தோன்றுவதால் சூரியனுக்கு இந்திரன் என்ற பெயர் ஏற்பட்ட்து.

இந்திரி -----> இந்திரியன் -----> இந்திரன்
ஐந்திரம் ------> ஐந்திரன் -----> இந்திரன்

ஆதாரம் - 2:  திருக்குறளில் 25 ஆம் பாடலில் இந்திரன் என்று வள்ளுவர் குறிப்பிடுவதும் இந்த சூரியனையே ஆகும்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமன்
இந்திரனே சாலும் கரி.
                                                 
இதைப்பற்றி நாம் ஏற்கெனவே இந்திரனே சாலும் கரி என்ற கட்டுரையில் ஆதாரங்களுடன் கண்டுள்ளோம்.

ஆதாரம் - 3: வானவில்லுக்கு இந்திரவில் என்ற பெயரும் இருப்பதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது.

*இந்திரவில் intira-vil
, n. < id. +. Rainbow, வானவில். (திவா.)

மழை பெய்த பின்னர் காற்றில் கலந்துள்ள நீர்த்துளிகளில் பட்டுச் சிதறும் சூரிய ஒளிக் கதிர்களே வானவில் தோன்றக் காரணம் என்பதால் வானவில்லுக்கு இந்திரவில் அதாவது சூரியனுடைய வில் என்ற பெயர் ஏற்பட்டது.

ஆதாரம் - 4: இந்து என்ற சொல்லுக்கு கரடி,கரி என்ற பொருட்கள் இருப்பதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது.

இந்து, (p. 88) [ *intu, ] s. The moon, சந்திரன். 2. Crude camphor, பச்சைக்கர்ப்பூரம். Wils. p. 131. INDU. 3. A bear, கரடி. 4. A char coal, கரி. 5. A kind of prepared arsenic, கௌரிபாஷாணம். 6. The river Indus, சிந்து நதி.

உண்மையில் இந்து என்பதன் முதன்மைப் பொருள் 'கருமை / இருள்' என்பதாகும். இப்பொருளே விரிவாக்கமாக கருமை நிறக் கரடியையும் கருமை நிறக் கரியினையும் குறிக்கப் பயன்படலாயிற்று எனலாம்.

இந்துவாகிய இருளைத் தோற்றோடச் செய்வதால் சூரியனுக்கு இந்திரன் என்ற பெயர் ஏற்பட்டது.

இந்து + இரியன்                  = இந்திரியன் -----> இந்திரன்
(இருள்) + (அகற்றுபவன்)   = சூரியன்

இரித்தல் என்பதற்கு தோற்றோடச் செய்தல், ஓட்டுதல், அகலச் செய்தல் என்று பொருள்.
(சான்று: சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி.)

இரி, (p. 97) [ iri, ] கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To be destroyed, broken, கெட. 2. To be routed, defeated, discomfited. தோற்க. 3. To retreat, flee away--as defeated ar mies, to scamper away through fear, தோற் றோட. 4. To run, flow, recede--as waves --as darkness before the rising sun, &c., அகல. 5. To incline, சாய. 6. To fear, அஞ்ச. (p.)

பி.கு: இந்து + இரியம் = இந்திரியம் என்பது இருளை ஓட்டும் ஒளியைக் குறிப்பதாகும். மன இருளை அகற்றும் ஒளியே அறிவாதலால் அறியப்படும் எல்லா அறிவும் (இந்திரியங்களும்) ஒளியே ஆகும்.

மேற்கண்ட சான்றுகளில் இருந்து இந்திரன் என்ற சொல் சூரியனையும் குறிக்கும் என்பது நிறுவப்படுகிறது.

இந்திர விழா:

தமிழ் இலக்கியங்களில் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் தான் இந்திர விழாவினைப் பற்றிய தெளிவான விரிவான செய்திகள் கூறப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் இந்திர விழவூர் எடுத்த காதையும் கடலாடு காதையும் மணிமேகலையில் விழாவறை காதையும் இந்திர விழா பற்றிய செய்திகளை நமக்குக் கண்ணாடி போலக் காட்டுகின்றன.

சிலப்பதிகாரம் காட்டும் இந்த இந்திர விழா என்பது உறுதியாக சூரியனுக்கு எடுக்கப்பட்ட திருவிழாவே ஆகும். இவ் விழாவானது ஐராவத யானையினை உடையவனாகக் கூறப்படும் தேவேந்திரனுக்காக எடுக்கப் பட்டிருக்காது என்று ஆணித்தரமாக சொல்லலாம். ஏனென்றால், இந்த தேவேந்திரன் ஓர் காமுகன் என்பதனை நாம் அறிவோம். கவுதம முனியின் மனைவியான அகலிகையின் மேல் ஆசைப்பட்டவன் இவனே. தேவசர்மா முனிவரின் மனைவி ரிஷியின் மேல் காமம் கொண்டவனும் இவனே. காம ஆசையினால் உடம்பெல்லாம் பெண்குறியாகப் பெற்றவனும் இவனே. இதுபோலப் பல குற்றங்களை இவன்மீது அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வளவு காம ஆசைகள் நிறைந்த, புலனடக்கம் இல்லாத ஒருவனுக்கு ஒரு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மிகப்பெரிய திருவிழா எடுப்பார்களா?. ஒருபோதும் மாட்டார்கள் அல்லவா?.

அதேசமயம் இன்னொரு கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும். மருதநிலமான சோழநாட்டில் வாழும் மக்கள் தங்கள் நிலத்துத் தெய்வமான சூரியனுக்கே ஒரு புத்தாண்டின் துவக்கத்தில் விழா எடுப்பர். மேலும் இந்த இந்திர விழா கொண்டாடப்பட்டது சித்திரைத் திங்களில் தான். இந்த சித்திரைத் திங்களே ஆண்டின் முதல் திங்களாகும் என்பதுடன் இத் திங்களில் தான் சூரியன் மேஷ ராசியில் நுழைகிறான். இந்த மேஷ ராசியில் தான் சூரியன் உச்சமும் அடைகிறான். அதுமட்டுமின்றி, சித்திரைத் திங்களின் முதல் நாளில் துவங்கும் இத் திருவிழாவானது ஏறத்தாழ 28 நாட்கள் வரையிலும் தொடர்ந்து சித்ரா பவுர்ணமி அன்று நிறைவடைந்தது.  ஏனென்றால் சித்ரா பவுர்ணமி அன்று தான் சூரியனும் சந்திரனும் முழு பலத்துடன் இருப்பார்கள். சூரிய ஆற்றலும் சந்திர ஆற்றலும் நிறைந்த சித்ரா பவுர்ணமி அன்று இரவில் கடல்நீராடுவது உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி தருவது. இதை முன்னிட்டே இந்திரவிழாவின் இறுதிநாளன்று மக்கள் கடலாடியதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இனி, தற்போது நாம் கொண்டாடி வருகின்ற தைப் பொங்கல் திருவிழாவின் முன்னோடி இந்திரவிழாவே என்பதற்கான சான்றுகளைக் காணலாம்.

உழவர் திருநாள்:

தற்போது நாம் அனைவரும் தை மாதம் முதல் தேதியில் இருந்து மூன்றாம் தேதி வரையிலும் தைப்பொங்கல் திருவிழாவை  கொண்டாடி வருகின்றோம். மக்கள் அனைவரும் சாதி மத வேறுபாடின்றி ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி ஒற்றுமையாகக் கொண்டாடினாலும் இந்த தைப்பொங்கல் திருவிழாவானது உழவர் பெருமக்களின் போற்றத்தக்க பெருமுயற்சியான வேளாண்மையின் சிறப்பை உணர்த்தவே கொண்டாடப்படுகிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

இந்த உழவுத்தொழிலின் சிறப்பை அறிந்ததால் தான் உழவு என்னும் அதிகாரத்தில் உழவர்களின் சிறப்பினைக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார் வள்ளுவர்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து. - 1032

இதில் உழவர்களே ஏனைய உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர் என்று புகழ்கிறார்.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர். - 1034

இதில் உழவர்களுக்கு அரசர்கள் செய்யும் சிறப்பு (குடை) கூறப்படுகின்றது. இப்படி ஒரு சிறப்பினை சோழநாட்டு மன்னர்களும் உழவர் பெருமக்களுக்காக இந்திரவிழாவின் போது செய்ததாக சிலப்பதிகாரம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

ஆயிரத்து ஓர் எட்டு அரசு  தலைக்கொண்ட
தண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப்
புண்ணிய நல்நீர் பொன்குடத்து ஏந்தி
மண்ணகம் மருள வானகம் வியப்ப
விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி
                   - இந்திரவிழவூர் எடுத்த காதை - 164 - 168

இப் பாடலில் வரும் அரசு என்பது வேளாண் மக்களுக்கு சோழ அரசர்கள் அளிக்கும் பட்டப் பெயர் ஆகும். சான்று: சென்னை இணையத் தமிழ்ப்பேரகராதி.

அரசு² aracu
, < rājan. n. 1. Kingliness; அரசனது தன்மை. (குறள், 384, உரை.) 2. King; அரசன். (மதுரைக். 128.) 3. Kingdom, territory of a ruler; இராச்சியம். எனதுயி ரரசுவாழ் வென்ப யாவையும் (பாரத. குருகுல. 45). 4. Government; அரசாட்சி. அரசாக வெண்ணேன்மற் றரசுதானே (திவ். பெருமாள். 10, 7). 5. That which is pre-eminent; தலைமையானது. மின்னார் தமக்கோ ரரசே (கந்தபு. தெய்வ. 143). 6. An ancient title of Vēḷāḷa chieftains; பண்டை வேளாளர் பட்டப்பெயர். வேளெ னவும் அரசெனவு முரிமை யெய்தினோரும் (தொல். பொ. 30, உரை). 7. Tiru-nāvukkaracu Nayaṉār, the author of a part of the Tēvāram; அப்பர். (பெரி யபு. திருஞான. 494.)--int. An exclamation equivalent to `check', used in chess; சதுரங்கத்தில் அர சன் கட்டுப்படவிருத்தலைக் குறிக்கும் குறிப்புச்சொல்.

இப்படி 'அரசு ' பட்டப் பெயர் பெற்ற 1008 உழவர் பெருமக்கள், தங்கள் தலையில் பொற்குடத்தில் சுமந்து வந்த காவிரித் தண்ணீரால் தான் இந்திரனுக்கு முழுக்கு செய்யப்பட்டது என்று மேற்காணும் சிலப்பதிகாரப்பாடல் கூறுகிறது. இப்படி இந்திர விழாவின்போது உழவர் பெருமக்களை அரசர்கள் சிறப்பித்ததில் இருந்து  இந்திர விழாவானது தைப்பொங்கலைப் போல ஒரு உழவர் திருநாளாகத் தான் கொண்டாடப்பட்டது என்று கொள்ளலாம்.

பொங்கல் படைத்தல்:

இன்று நாம் கொண்டாடும் தைப்பொங்கல் திருவிழாவின்போது முதல்நாளன்று அதிகாலையில் கதிரவனின் உதயத்திற்கு முன்னரே ஒரு மண்பானையில் நீரும் அரிசியும் இட்டு அடுப்பில் வைத்து சூடேற்றுவர். அரிசி குழையும் பருவம் வந்ததும் பாலும் சிறிது சர்க்கரையும் கலப்பர். பாலினால் சோறு பொங்கி பானையை விட்டு வெளியே வரும் போது  'பொங்கலோ பொங்கல்' என்று அனைவரும் உரக்கக் கூறி மகிழ்வர். பின்னர் மிச்சமுள்ள சர்க்கரையினையும் முந்திரி, ஏலக்காய், கிஸ்மிஸ் போன்ற பொருட்களையும் போட்டு சிறிது நெய்யினையும் ஊற்றி நன்கு கிளறிய பின் பானையினை அடுப்பில் இருந்து இறக்கி வைப்பர். இதுதான் தைத்திருவிழாவின் முதன்மை உணவான சர்க்கரைப் பொங்கல் ஆகும். இந்தப் பானையில் இருந்து பொங்கலை எடுத்து கதிரவனுக்குப் படைத்துப் பூவும் புகையும் காட்டி வழிபடுவர். இதுதான் இன்றைய பொங்கல் திருவிழாவின் பொதுவான நடைமுறை ஆகும்.

தைத்திருநாளன்று கதிரவனுக்குப் பொங்கல் வைத்து இன்று நாம் வழிபடுவதைப் போலவே இந்திரவிழாவின் போதும் இந்திரனுக்குப் பொங்கலைப் படைத்து பூவும் புகையும் காட்டி வழிபட்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.

பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து

            - இந்திரவிழவூர் எடுத்த காதை: 69

அதுமட்டுமின்றி, பொங்கலின் போது 'பொங்கலோ பொங்கல்' என்று நாம் கூறி மகிழ்கிறோம். எதற்காக? இந்தப் பொங்கல் பொங்குவதைப் போல நம் வாழ்க்கையில் எல்லா நலங்களும் வளங்களும் பெருக வேண்டும் என்று வேண்டியே அன்றோ?. அதைப் போல, இந்திரவிழாவின் போதும் மக்கள் ' பசியும் நோயும் பகையும் நீங்கி, மழையும் வளமும் பெருகுக' என்று வாழ்த்தியதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.

பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி

                            - இந்திரவிழவூர் எடுத்த காதை : 72-73

இப்போது நாம் கொண்டாடும் பொங்கல் திருவிழாவானது தனித்தனிக் குடும்ப விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்திரவிழாவோ ஒரு நாட்டு மக்கள் அனைவராலும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடப்பட்ட ஒரு விழாவாகும். ஆகவே தான் வாழ்த்து முறையிலும் பிறவற்றிலும் சிறுசிறு மாற்றங்கள் இருக்கின்றன என்பது இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.

வழிபடு தெய்வம்:

நாம் இன்று கொண்டாடி வருகின்ற தைத்திருநாளின் வழிபடு தெய்வம் சூரியனே என்பது அனைவருக்கும் தெரியும். உழவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே தேவையான வெப்பத்தினையும் ஒளியினையும் தந்துதவும் அந்த கதிரவனின் கருணையைப் போற்றும் விதமாக அமைந்த நல்லதொரு நாளே தைத்திருநாளாகும்.

தைத்திருநாளன்று கீழ்வானில் மெல்லமெல்ல கதிரவனின் செம்மேனி வெளிப்பட அதைக் கண்டு மயங்கி மகிழ்ச்சியுறாத உள்ளமும் உண்டோ?. அந்தச் செம்மேனியின் வண்ணம் தான் என்னே!. மிகச் சிறிது நேரமே காணக் கிடைக்கும் அந்த அழகு மேனியைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!. அந்த செக்கர்மேனியனைக் காண பொங்கலைப் படைத்து வைத்துக் கொண்டு ஆவலாய்க் காத்திருக்கும் மக்கள் கூட்டம். இதோ மெல்லமெல்ல அந்தக் கதிரவனும் கண் திறந்து விட்டான். அதோ கீழ்வானில் கதிரவனின் அழகுமிக்க தேர் தோன்றிவிட்டது. மெய் சிலிர்க்கிறது. கைகள் தாமாகவே மேலே சென்று குவிந்து அவனை வணங்குகின்றன. கதிரே போற்றி! கடவுளே போற்றி! என்று உதடுகள் உரக்கக் கூவுகின்றன. அட, இந்த ஒரு நொடிக்காகத் தானே மக்கள் முதல் நாளில் ( தமிழர் கணக்குப் படி கதிரவன் தோன்றிய பின்னரே புதிய நாள் துவங்குவதால்) இருந்தே புனித நீராடி புத்தாடையும் அணிகலன்களும் அணிந்துத் தம்மை ஆயத்தமாக்கிக் காத்திருந்தனர்!.

ஆம், இதைப் போன்றதொரு ஆயத்தமும் கதிரவனுக்கான காத்திருப்பும் இந்திரவிழாவின் போதும் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. சித்திரைத் திங்கள் முதல் நாளில் துவங்கிய இந்த இந்திரவிழாவானது சித்திரை மீனொடு மதி சேரும் முழுமதி நன்னாளான சித்ரா பவுர்ணமி அன்று நிறைவுறுகிறது. அன்றைய நாள் தருநிலைக் கோட்டத்துள்ள கதிரவனுக்கு 1008 உழவர் பெருமக்கள் கொண்டுவந்த காவிரி நீரைக் கொண்டு திருமுழுக்கு செய்கின்றனர். பின்னர் பிற கடவுளர்க்கும் பூசைகள் செய்கின்றனர். அன்று இரவு முழுவதும் பலவிதமான ஆடல் பாடல்கள், கேளிக்கைகளில் ஈடுபடுவதும், பலவிதமான விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ள தம் ஊரினையும் சிறப்பங்காடிகளையும் சுற்றிப் பார்ப்பதும், பூங்காக்களுக்குச் சென்று விளையாடிப் பொழுதைக் கழிப்பதுமாக மக்கள் இரவுப்பொழுதைக் கழிக்கின்றனர். பின்னர் கடலுக்குச் சென்று குளித்துப் புத்தாடைகளும் புதிய அணிகலன்களும் அணிந்து கதிரவனின் செம்மேனியைக் காணக் கடற்கரையில் காத்துக் கிடக்கின்றனர். கதிரவனின் அழகிய தேர் கீழ்வானில் தோன்றுவதுடன் இந்த விழா நிறைவுறுவதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.

இந்திரவிழவூர் எடுத்த காதையின் துவக்கமே கதிரவனைப் பற்றியதாக இருப்பதைப் பாருங்கள்.

அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து
ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல்
கண்ணகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதையிருள் படாஅம் போக நீக்கி
உடைய மால்வரை உச்சித் தோன்றி
உலகுவிளங்கு அவிர் ஒளி மலர் கதிர் பரப்பி
 ...................................

இப்படி கதிரவனைப் போற்றுதலுடன் துவங்கும் இந்திரவிழாவானது சித்ரா பவுர்ணமி இரவு முடிந்து மறுநாள் காலை கதிரவன் தோன்றுவதுடன் முடிவடைகிறது.

வேலைமடல் தாழை உட்பொதிந்த வெண்தோட்டு
மாலைத் துயின்ற மணிவண்டு காலைக்
களிநறவம் தாதூத தோன்றிற்றே காமர்
தெளிநிற வெங்கதிரோன் தேர்.
                            - கடலாடு காதையை அடுத்த வெண்பா.

இப்படி இந்திரவிழாவின் துவக்கமும் முடிவும் கதிரவனைப் பற்றியே இருப்பதால் இந்திரவிழாவின் நாயகனும் வழிபடு தெய்வமும் கதிரவனே என்று உறுதி செய்யலாம். அதுமட்டுமின்றி, கீழ்க்காணும் சான்றுகளும் இதை உறுதிப்படுத்தும்.

தருநிலைக் கோட்டம்:

சிலப்பதிகாரம் பலவகையான கோட்டங்களைப் பற்றிக் கூறுகிறது. கோட்டம் என்பது கோயிலைக் குறிக்கும். இக் கோட்டங்களில் முதன்மையானது தருநிலைக் கோட்டமாகும். இதுதான் கதிரவனுக்குரிய கோட்டமாகும். இங்கு கொடிமரமும் பலிபீடமும் அமைக்கப் பட்டிருந்தது. இந்திர விழாவின் போது இக் கொடிமரத்தில் மங்கல நெடுங்கொடியை வானளாவப் பறக்க விட்டதாகக் கீழ்க்காணும் பாடல் வரிகள் கூறுகின்றன.

தங்கிய கொள்கை தருநிலைக் கோட்டத்து
மங்கல நெடுங்கொடி வானுற எடுத்து
மரகத மணியொடு வயிரம் குயிற்றி
பவளத் திரள்கால் பைம்பொன் வேதிகை

                 - இந்திரவிழவூர் எடுத்த காதை: 145-146

இங்கு தரு என்பது கொடிமரத்தைக் குறிப்பதாகும். வேதிகை என்பது பலிபீடத்தைக் குறிப்பதாகும். சோழ மன்னனால் அரசு பட்டம் பெற்ற 1008 உழவர் பெருமக்கள் தங்கள் தலையில் பொற்குடத்தில் சுமந்து வந்த காவிரி நீரைக்கொண்டு இக் கோட்டத்தில் இருந்த கதிரவனுக்கு திருமுழுக்காட்டினர்.

காமவேள் கோட்டம்:

கதிரவனுக்கு மட்டுமல்ல காமதேவனுக்கும் கோட்டம் இருந்தது. இதைக் காமவேள் கோட்டம் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இக் கோட்டத்தைப் பற்றியும் காமனைப் பற்றியும் பல அரிய செய்திகள் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றன.

தனது கரும்பு வில்லில் இருந்து மலர்க்கணைகளைத் தொடுத்து மாந்தர்க்கு காதல் நோயினை ஏற்படுத்துபவன் காமன். இவனது கொடி மகர மீன் அதாவது சுறவுக் கொடி ஆகும். இது நாமறிந்த செய்தி. ஆனால் இக் காமன் ஓர் காவல் தெய்வமும் ஆவான் என்பது நாம் அறிந்திராத செய்தி. இதோ இச் செய்தியைக் கூறும் சிலப்பதிகாரப்பாடல்.

பாண்வாய் வண்டு நோதிறம் பாட
காண்வரு குவளைக் கண்மலர் விழிப்ப
புள்வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து
முள்வாய்ச் சங்கம் முறைமுறை ஆர்ப்ப
உரவுநீர்ப் பரப்பின் ஊர்த்துயில் எடுப்பி
இரவுத்தலைப் பெயரும் வைகறைகாறும்
அரையிருள் யாமத்தும் பகலும் துஞ்சான்
விரைமலர் வாளியொடு கருப்புவில் ஏந்தி
மகரவெல்கொடி மைந்தன் திரிதர
நகரம் காவல் நனி சிறந்தது என
                             - அந்திமாலை சிறப்பு செய் காதை: 75-84

காமன் இரவு பகல் பாராமல் புகார் நகரத்தைக் காவல் செய்வதாக மேற்காணும் பாடல் கூறுகிறது. இப்படிக் காவல் தெய்வமாய் விளங்கிய காமவேளுக்கு ஓர் கோட்டம் எடுத்து இந்திரவிழாவின் போது கடைநாள் பூசையை காமவேளுக்குச் செய்ததாக கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

வால்வெண் களிற்று அரசு வயங்கிய கோட்டத்து
கால்கோள் விழவின் கடைநிலை சாற்றி
                              - இந்திரவிழவூர் எடுத்த காதை: 143-144

இதில் வரும் களிறு என்ற சொல் யானையினைக் குறிக்காமல் ஆண் சுறாவினைக் குறிப்பதாகும்.

அதுமட்டுமின்றி, காவிரி ஆறு கடலில் கலக்கும் பகுதியில் உள்ள சோமகுண்டம், சூரியகுண்டம் என்ற நீர்நிலைகளில் நீராடி இக் காமவேள் கோட்டம் வந்து காமவேளைக் கைதொழும் பெண்டிர் தமது கணவருடன் இன்புற்று வாழ்வர் என்று கூறுகிறது கீழ்க்காணும் பாடல்.

கடலொடு காவிரி அலைக்கும் முன்றில்
மடலவிழ் நெய்தலம் கானல் தடம் உள
சோமகுண்டம் சூரியகுண்டம் துறை மூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார்
                           - கனாத்திறம் உரைத்த காதை: 57-61

இக் கட்டுரையில் காமவேள் கோட்டத்தைப் பற்றி விரிவாகக் கூறியதன் நோக்கமானது 'வால்வெண் களிற்று அரசு' என்னும் தொடரானது வெள்ளை நிற ஐராவத யானையினை உடைய தேவேந்திரனைக் குறிக்காமல் வெண்ணிற சுறவுக் கொடி கொண்ட அரசனான காமவேளையே குறிக்கும் என்பதை உறுதிப்படுத்தவே ஆகும்.

விண்ணவர் கோமான்:

சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் பல இடங்களில் விண்ணவர் கோமான், தேவர் கோமான், ஆயிரம் கண்ணோன் என்ற சொல்லாடல்கள் வருகின்றன. இச் சொற்கள் எல்லா இடங்களிலும் யாரைக் குறிக்கின்றன? தேவேந்திரனையா? இல்லை. இச் சொற்கள் சில இடங்களில் சூரியனையும் சில இடங்களில் தேவேந்திரனையும் குறிக்கின்றன. இது எவ்வாறு என்று பார்க்கலாம்.

வானத்தில் உள்ள விண்மீன்கள் எல்லாவற்றையும் தேவர்களாகக் கொண்டால் சூரியனே நமக்குத் தெரிந்த மிகப்பெரிய தேவன் அல்லவா?. யார் பெரியவரோ அவரைத் தானே நாம் தலைவனாகக் கொள்வது வழக்கம். அவ்வகையில் தேவர்களில் பெரிய தேவனான சூரியனுக்கு விண்ணவர் கோமான், தேவர் கோமான் என்ற பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம்..

மாந்தர்களாகிய நமக்கு இரண்டு கண்கள் மட்டுமே உண்டு. இந்த இரண்டு கண்களால் ஒரு நேரத்தில் ஒரு பொருளை மட்டுமே பார்க்க முடிகிறது. ஆனால் சூரியனோ மேலிருந்து கொண்டு பூமியில் உள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரே நேரத்தில் பார்ப்பதாகவும் இப்படி பார்ப்பதற்கு அவனுக்கு ஆயிரக்கணக்கான கண்கள் இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் சூரியனுக்கு ஆயிரங்கண்ணோன் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். இந்திரவிழாவில் புகழ்ச்சியாக வருகின்ற இடங்களில் ஆயிரங்கண்ணோன் என்ற பெயர் உறுதியாக தேவேந்திரனைக் குறிக்காது. ஏனென்றால் இப் பெயர் தேவேந்திரன் சாபத்தால் பெற்ற கெட்ட பெயர். புகழாகக் குறிப்பிடும் அளவுக்கு அது ஒரு நல்ல பெயர் அல்ல. எனவே சாபத்தால் பெற்ற ஒரு அவப்பெயரைக் கொண்ட தேவேந்திரனை இச் சொல் இங்கு குறிக்கவில்லை என்பது தெளிவு.

ஆதியில் சூரியனையே குறித்து வந்த இப் பெயர்கள் பின்னாளில் 'இந்திரன்' என்ற பெயர்க் குழப்பத்தினால் தேவேந்திரனையே குறிப்பதாகக் கொள்ளப்படலாயிற்று. ஆம், எப்படி வேந்தன் என்ற சொல் சூரியனையும் தேவேந்திரனையும் குறிக்கிறதோ அதைப்போல சூரியனைக் குறித்துவந்த இந்திரன், தேவர் கோமான், விண்ணவர் கோமான், ஆயிரம் கண்ணோன் என்ற சொற்கள் சில இடங்களில் தேவேந்திரனையும் குறிக்கப் பயன்படலாயிற்று.

இந்திரவிழாவே தைப்பொங்கலின் முன்னோடி:

மேலே கண்ட பல சான்றுகளில் இருந்து இந்திரவிழாவானது, ஒரு உழவர் திருநாளைப் போல, உழவர்களைச் சிறப்பித்தும், பொங்கல் படையலிட்டும், சூரியனின் கோயிலில் கொடியேற்றியும்,  சூரியனுக்கு திருமுழுக்காட்டியும், சூரியனையே வழிபடு தெய்வமாகக் கொண்டும் அனைத்துப் பிரிவு மக்களாலும் கொண்டாடப்பட்டது என்னும் செய்தி பெறப்பட்டது.

இந்திரவிழாவின் போது நடந்த இந்த நிகழ்வுகள் அனைத்தும் நாம் இன்று கொண்டாடி வருகின்ற தைப்பொங்கல் திருவிழாவின் நிகழ்வுகளுடன் நெருங்கிய தொடர்புடைதாய் அமைந்திருப்பதை அறியலாம். கொண்டாடப்படும் மாதம் மட்டும் சித்திரை என்றில்லாமல் தை மாதமாக இருக்கிறது. இதைப்போல வேறு சில மாற்றங்கள் இருந்தாலும் பெரிய அளவில் எந்த மாற்றங்களும் இல்லை என்பது தெளிவு. அவ்வகையில் நாம் இன்று கொண்டாடி வருகின்ற தைப்பொங்கல் திருவிழாவிற்கு இந்திரவிழாவே முன்னோடியாக இருந்திருக்கிறது என்பதே இக் கட்டுரையின் முடிபாகும்.

பி.கு: இக் காலத்தில் பல இடங்களில் இந்திரன் சந்திரன் என்ற பெயர்கள் ஒரு இணையாகப் பயன்படுத்தப் படுகின்றன. சூரிய சந்திரராகிய இணையைத் தான் அப்படி குறிப்பிடுகின்றனர்.
...............................................................வாழ்க தமிழ்!................................

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

மதுரையை எரித்த கண்ணகி

முன்னுரை:

'கண்ணகி' - கணவன் மீது கொண்ட பேரன்பினால் தன் இளமை வாழ்க்கையை தொலைத்தவள். இருந்தாலும் இறுதியில் தன் கற்பை நிலைநாட்டி இலக்கிய வரலாற்றில் நீங்கா இடம்பெற்ற கற்புக்கரசி. இவளது கற்பிற்காகவே எழுதப்பட்டது அன்றோ சிலப்பதிகாரக் காவிய நூல்?. சிலப்பதிகார ஆசிரியரான இளங்கோவடிகள் மட்டுமின்றி பிற ஆசிரியர்களும் இவளைப் போற்ற மறக்கவில்லை. இவளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் எத்தனையோ கற்புக்கரசிகள் வாழ்ந்திருந்தாலும் 'கற்புக்கோர் கண்ணகி' என்று சான்று காட்டும் அளவுக்கு இவள் ஒரு தகைசால் பத்தினி ஆவாள். அவ் வகையில் இவளும் ஒரு சான்றோளே ஆவாள். இவள் தனது கற்பின் வலிமையால் தனக்கு அநீதி இழைத்த பாண்டியனின் மதுரை மாநகரை தனது ஒரு முலையினால் எரித்தாள் என்று கூறுகிறது சிலப்பதிகாரம். சிலப்பதிகாரத்திற்கு விளக்கம் எழுதிய பெரியோர்கள் கண்ணகி மதுரையினை தனது மார்பகத்தினால் எரித்தாள் என்று கூறி உள்ளனர். இந்த விளக்கம் எந்த அளவிற்கு உண்மை என்பதைப் பற்றிய ஆய்வே இந்த கட்டுரை ஆகும்.

கண்ணகி மதுரையை எரித்தல்:

சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையை எரித்த நிகழ்ச்சியானது மதுரைக் காண்டத்தில் வஞ்சின மாலையிலும் அழற்படு காதையிலும் கூறப்பட்டுள்ளது. இவற்றில் வஞ்சின மாலை கண்ணகியின் சீற்றத்தினை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றது. கணவனை இழந்த நிலையில் சொல்லொணாத் துயரமும் சீற்றமும் கொண்ட கண்ணகி மதுரையினை எவ்வாறு எரித்தாள் என்று கீழ்க்காணும் பாடல் வரிகள் கூறுகின்றன.

இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள் 
                                       - பா.எண்: 5

இதற்கு கொடுக்கப்பட்டுள்ள தற்போதைய விளக்கமானது ' இடது மார்பகத்தினை கையால் திருகி, மதுரை மாநகரினை மூன்றுமுறை வலமாகச் சுற்றிவந்து, மிகுந்த வருத்தத்துடன், தேன் நிறைந்த தெருவிலே, விளங்கிய அணியினள் ஆன கண்ணகி, அம் மார்பகத்தினை வட்டித்து விட்டெறிந்தாள்.' என்பது ஆகும்.  

கண்ணகி எறிந்தது மார்பகமா?

கண்ணகி தனது இடப்பக்க மார்பகத்தினை கையினால் அறுத்து  மதுரை மீது விட்டெறிந்தாள் என்று கூறுகின்றனர் தற்போதைய உரையாசிரியர்கள். மேற்காணும் பாடலில் வரும் முலை என்ற சொல்லுக்கு மார்பகம் என்ற பொருள் கொண்டு இவ்வாறு விளக்கம் கூறுகின்றனர். ஆனால் இது பொருந்துமா என்று இங்கே பார்ப்போம்.


பெண்களின் மார்பகம் என்பது அவர்களது உடலுடன் பல தசைநார்களால் பின்னிப் பிணைந்துள்ளதும் உடல் தோலால் மூடப்பட்டுள்ளதுமான ஒரு உறுப்பு ஆகும். இதனை ஆயுதங்கள் ஏதுமின்றி யாரும் உடலில் இருந்து அறுத்துவிட முடியாது. குறிப்பாக பெண்களால் வெறும் கைகளால் இதைச் செய்யவே இயலாது. இந்நிலையில் கண்ணகி தன் மார்பகத்தினை கையால் அறுத்து எறிந்தாள் என விளக்கம் கூறியிருப்பது தவறு என்பதை அறியலாம். 

சிலப்பதிகாரப் பதிகத்தின் முதல் பாடலில் கண்ணகியினைக் குறிப்பிடும் புலவர் இவ்வாறு கூறுகிறார்: ' ... பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல் ஒருமுலை இழந்தாள் திருமா பத்தினி...' இதன் பொருளானது: ' பொன்போன்ற பூக்களை உடைய வேங்கை மரத்தின் நல்ல நிழலில் ஒரு முலையினை இழந்த நிலையில் ஒரு திருமா பத்தினி நின்றிருந்தாள்' என்பது ஆகும். புலவர் இங்கே முலை என்பதனை மார்பகம் என்ற பொருளில் கூறி இருக்க முடியாது. ஏனென்றால் எந்தப் பெண்ணும் தனது மார்பகம் வெளியே தெரியும் வண்ணம் ஆடை உடுத்த மாட்டாள். அதிலும் கற்புக்கரசியாகிய கண்ணகி இவ்வாறு செய்திருப்பாளா?. ஒருபோதும் செய்திருக்க மாட்டாள். அன்றியும் கண்ணியம் மிக்க தமிழ்ப் புலவர் யாராகிலும் ஒரு பெண்ணைப் பார்க்கும்போது அவள் முகத்தைப் பார்ப்பார்களே ஒழிய அவளது மார்பகம் விலகி இருக்கிறதா இல்லையா என்று ஒருபோதும் பார்க்க மாட்டார். இத்தகைய எண்ணம் தமிழினத்திற்கே இழுக்கல்லவா?. எனவே இங்கும் முலை என்பது மார்பகத்தைக் குறித்து வந்திருக்காது என்று தெளியலாம்.

குன்றக்குரவையின் முதல் பாடலில் குறவர்கள் கண்ணகியை நோக்கிக் கேட்பதாக உள்ளது. அதில் " மலைவேங்கை நறுநிழலின் வள்ளி போல்வீர்! மனம் நடுங்க முலை இழந்து வந்து நின்றீர்! யாவிரோ?" என்னும் அடி உள்ளது. இதில் வரும் முலை என்னும் சொல்லுக்கு மார்பகம் எனப் பொருள் கொண்டால் கண்ணகி தன் மார்பகம் வெளியே தெரியுமாறு குறவர்களின் முன்னே தோன்றினாள் என்றல்லவா பொருள் வரும்?. கண்ணகி அவ்வாறு செய்ய மாட்டாள் என்பதால் இங்கும் முலை என்பது மார்பகத்தைக் குறிக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

இதுபோல பல சான்றுகளை சிலப்பதிகாரத்தில் இருந்தே காட்டலாம். ஆனால் கட்டுரையின் விரிவஞ்சி சில சான்றுகளே மேலே கூறப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து கண்ணகி மதுரையை எரிக்க அறுத்து எறிந்தது மார்பகம் அல்ல என்பதை அறியலாம்.

கண்ணகி எதை எறிந்தாள்?

கண்ணகி அறுத்து எறிந்தது அவளது மார்பகம் இல்லை என்றால் அவள் எதை எறிந்திருக்கக் கூடும்?. வெறும் கைகளால் எளிதில் அறுத்து எறியக்கூடிய அதே சமயம் வெம்மை மிக்க ஒரு சிறு உறுப்பினைத் தான் கண்ணகி அறுத்து எறிந்திருக்க வேண்டும் அல்லவா?. அவ்வாறெனில் அந்த உறுப்பு அதாவது முலை என்பது ஒரு கண்ணாகத் தான் இருக்கும். இது வெறும் ஊகமல்ல; நிறுவப்படப் போகின்ற ஓர் பேருண்மை. அதற்கு முன்னர் கண்ணைப் பற்றிய சில உண்மைகளைக் கீழே காணலாம்.

கண்ணானது ஒரு சிறிய அதேசமயம் மிகவும் இன்றியமையாத உறுப்பாகும். உறுப்புக்களில் அழகானதும் பெண்களால் மிகவும் அழகுபடுத்தப் படுவதும் கண்ணே. மனித உணர்வுகளைக் காட்டும் கண்ணாடியும் இதுவே. அதேசமயம் இந்த உணர்வுகளால் மிகவும் பாதிக்கப்படுவதும் கண் தான். துயர உணர்வு  மிகும்போது கண்களில் நீர் துளிர்ப்பதையும் எல்லையற்ற சினத்தின்போது கண்கள் கோவைப்பழமாகச் சிவப்பதையும் நாம் காண்கிறோம். குறிப்பாக ஒருவர் சினம்கொள்ளும்போது வெளிப்படுகிற வெப்ப ஆற்றல் கண்களைச் சிவப்பாக்குவதுடன் வெப்பப் படுத்தவும் செய்கிறது. இந் நிலையில் இந்தக் கண்களுக்கு எரிக்கும் ஆற்றல் உண்டாகிறது. இதைத்தான் 'கண்களால் சுட்டெரித்தல்' என்று கூறுவார்கள். இது சாத்தியமா இல்லையா என இங்கே நாம் நிறுவப்போவது இல்லை. ஆனால் கண்களால் சுட்டெரித்த பல நிகழ்வுகள் புராண இலக்கியங்களில்  இடம்பெற்றுள்ளன. சிவபெருமான் முப்புரம் எரித்தது, காமனை எரித்தது, நக்கீரரை எரித்தது என சிலவற்றை அதற்கு சான்றுகளாகக் கூறலாம்.

சினம் எல்லோருக்கும் வரும்; அந்த சினத்தினால் கண்களும் சிவக்கும். ஆனால் சிவனுடைய கண்களுக்கு மட்டுமே எரிக்கும் ஆற்றல் உண்டு. அதனால் தான் சிவனை 'கண்ணுதல் பெருமான்' என்று அழைப்பர். சிவனுக்கு மட்டுமின்றி சீவனுக்கும் (மாந்தருக்கும்) எரிக்கும் ஆற்றல் உண்டு என்பதற்கு ஓர் சான்றே கண்ணகி ஆவாள். நீதிமுறை தவறி  தன் கணவனை கொன்ற பாண்டிய மன்னனின் மீது பெரும்சினம் கொண்ட கண்ணகி ஓர் பத்தினி (கற்புக்கரசி) என்பதால் அவளது சினம் மதுரை நகரை எரித்தது எனலாம். பெருகிய சினத்தினால் சிவந்து வெம்மையுற்ற தனது கண்களில் இடது கண்ணைப் பறித்த கண்ணகி மதுரையினை மூன்றுமுறை சுற்றிவந்து எறிந்ததாகக் கீழ்வரும் சிலப்பதிகாரப் பாடல் கூறுகிறது.

இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள் 
                                       - பா.எண்: 5

கண்ணகி மதுரையை எரிக்க தனது இடது கண்ணைப் பறித்து நிற்கின்ற நிலையிலும் அவளது கண்ணின் அழகை புலவர் பாராட்டத் தவறவில்லை. மேற்காணும் பாடலில் 'கள் குடிக்கும் வண்டு போன்ற கண்மணியை உடைய கண்' என்று மூன்றாம் வரியில் பாடுகிறார் பாருங்கள். இதில்வரும் மறுகு என்னும் சொல் மறுகித் திரியும் இயல்புடைய வண்டினைக் குறிக்கும். மட்டு என்பது கள்ளினைக் குறிக்கும். கண்ணகி மதுரையை எரிக்க கண்ணைத் தேர்ந்தெடுத்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. கண் மட்டுமே எளிதில் பறித்துவிடக் கூடிய சிறிய உறுப்பாகும். இதில் இருந்து கண்ணகி மதுரையை எரிக்க அறுத்து எறிந்த முலை என்பது கண்ணாகத் தான் இருக்கும் என்ற எண்ணம் வலுவாகிறது.

முலை என்றால் என்ன?

முலை என்ற சொல்லுக்கு இன்றைய அகராதிகள் மார்பகம் என்ற பொருளை மட்டுமே கூறுகின்றன.  ஆனால் பல இடங்களில் இச்சொல் மார்பகத்தைக் குறிக்காததை மேற்கண்ட சான்றுகளால் அறிந்தோம். என்றால் இச்சொல் உணர்த்தும் வேறு சில பொருள்கள் என்ன என்று பார்க்கலாம்.

முலை என்னும் சொல் உணர்த்தும் வேறு பொருட்கள்
'கண் புருவம்' மற்றும் 'கண்' ஆகும்.


நிறுவுதல்:

கண்ணகி அறுத்து எறிந்ததாகக் கூறப்படும் முலை என்பது கண்ணையே குறிக்கும் என்பதை நிறுவுவதற்கு பல ஆதாரங்கள் உண்டெனினும் சில ஆதாரங்கள் மட்டுமே இங்கே காட்டப்படுகின்றன. முதலில் சிலப்பதிகாரத்தில் இருந்தே சில சான்றுகளைக் காணலாம்.

நிறைமதி வாள்முகத்து நேர்க்கயல்கண் செய்த உறைமலி உய்யாநோய்
ஊர்சுணங்கு மென்முலையே தீர்க்கும் போலும் - கானல்வரி - பா.எண்: 4
இதன் பொருளானது ' முழுநிலா போன்று ஒளிவீசும் முகத்தில் மீன் போலும் கண்கள் தோற்றுவித்த காதல்நோய்க்கு சுணங்கணிந்த கண்களே மருந்து போலும்.' என்பதாகும். ஆம், ஒரு பெண்ணின் கண்கள் ஓர் ஆடவனின் உள்ளத்தில் தோற்றுவிக்கின்ற காதல் நோய்க்கு அப் பெண்ணின் கண்களே அன்றி அவளது மார்பகங்கள் மருந்தாக முடியாது அல்லவா?. இதே கருத்தினை வள்ளுவரும் 'குறிப்பறிதல்' அதிகாரத்தில் கூறுகிறார்.

இருநோக்கு இவள் உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கு ஒன்று அந்நோய் மருந்து - குறள் : 1091

அடுத்து அதே கானல்வரியில் மேலும் ஒரு சான்று:
...முழுமதி புரைமுகமே! இளையவள் இணைமுலையே எனை இடர் செய்தவையே!' - பா.எண்: 7
'முழுநிலா போன்ற முகமும் அதில் இணையாக விளங்கும் கண்களும் என்னை இடர் செய்தன' என்பதே இதன் பொருளாகும். பெண்ணின் முகத்தினை முழுநிலா என்று முதலில் வருணிக்கும் காதலன் அம்முகத்தில் உள்ள கண்களைப் பற்றிக் கூறாமல் உடனே மார்பகத்தைப் பற்றிக் கூறுவானா? மாட்டான் அன்றோ?. எனவே இங்கும் முலை என்பது கண்களையே குறித்து வருவதை அறியலாம்.

'கதிர் இள வன முலை கரை நின்று உதிர்த்த கவிர் இதழ்ச் செவ்வாய்' - புறஞ்சேரி இறுத்த காதை - 163
'ஒளிவீசுகின்ற இளமை மிக்க அழகிய கண்களின் ஈற்றில் முருக்கமலர் போன்ற செம்மை பூசிய கடைக்கண் ' என்பது இதன் பொருளாகும். முலை என்பதற்கு மார்பகம் என்ற பொருள் கொண்டால் இவ் வரியின் விளக்கம் பொருந்தாது என்பதுடன் பண்பற்றதாகவும் இருக்கும்.

'மேகலை ஒலியாது மென்முலை அசையாது' - நடுகல்காதை -72
'(நாட்டியத்தின்போது ஒலிக்கும்) மேகலை ஒலிக்காமல் (நடனமாடும் பெண்ணின்) கண்கள் அசையாது' என்பதே இதன் பொருளாகும். பெண்ணின் மார்பகங்கள் அசையாது என்று கூறுவது பண்பற்றதாகும்.

சிலப்பதிகாரப் பதிகத்தில் இருந்து மேலும் ஒரு சான்றைப் பார்க்கலாம்.

'பத்தினி ஆதலின் பாண்டியன் கேடுற
முத்தார மார்பின் முலைமுகம் திருகி
நிலைகெழு கூடல் நீளெரி ஊட்டிய ' - 35

இதன் பொருளானது ' பத்தினி என்பதால் முத்துமாலை அணிந்த மார்பினனாகிய பாண்டிய மன்னன் கேடுற தனது கண்ணைத் திருகி எறிந்து கூடல் நகராகிய மதுரைக்கு தீ மூட்டிய' என்பதாகும். இங்கும் முலை என்பது கண்ணையே குறிப்பதை அறியலாம்.

முலை என்ற சொல் கண்புருவம் என்ற பொருளில் கீழ்க்காணும் பாடல்களில் ஆளப்பட்டுள்ளது.

'திருமுலைத் தடத்திடை தொய்யில் அன்றியும்' - மனையறம் படுத்த காதை -69
'மலையத்து ஆரமும் மணிமுத்து ஆரமும் அலர்முலை ஆகத்து' - அந்திமாலை சிறப்புசெய் காதை -63
'ஒருகாழ் முத்தமும் திருமுலைத் தடமும்' - வேனில் காதை -95
'சாந்தம் தோய்ந்த ஏந்திள வனமுலை' - அழல்படு காதை -119

பிற நூல்களில் முலை:

இதுவரை சிலப்பதிகாரத்தில் முலை என்ற சொல்லின் பயன்பாட்டினைக் கண்டோம். இனி பிற நூல்களில் முலை என்ற சொல் எவ்வாறு பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை சில ஆதாரங்களுடன் காணலாம்.

கண்புருவம் என்ற பொருளில்:

தும்பை மாலை இளமுலை - ஐங்கு-127
சுணங்கு வளர் இளமுலை - ஐங்கு-149
சுணங்கு அணி மென்முலை - கலி-111
தொய்யில் சூழ் இளமுலை - கலி- 125
கொம்மை வரிமுலை - குறு-159
வனமுலை ஒளிபெற எழுதிய - குறு-276
வனமுலை அரும்பிய சுணங்கின் - அக.-6
திதலை அணிந்த தேம்கொள் மென்முலை - அக.-26
ஒண்கேழ் வனமுலை பொலிந்த - அக.-61
தொய்யில் பொறித்த சுணங்கெதிர் இளமுலை - மதுரைக்காஞ்சி -416
சுணங்கு அணி வனமுலை - நற்.-9
தித்தி ஏர் இள வனமுலை - நற்.-160
முகமும் வளர்முலைக் கண்ணும் - பரி.-10

கண் என்ற பொருளில்:

முலையகம் நனைப்ப விம்மி - புற.-143
கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை - புற.-345
எழில்தகை இளமுலை - ஐங்கு.-347
பெருங்குளம் ஆயிற்று எம் இடைமுலை நிறைந்தே - குறு.-325
அலர்முலை ஆகத்து இன்துயில் மறந்தே - அக.-69
இளமுலை நனைய - அக.-161
மென்முலை மேல் ஊர்ந்த பசலை - திணைமாலை ஐம்பது -22

நிறைவுரை:

முலை என்ற சொல் மார்பகம் என்ற பொருளிலும் சில இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதுவே பிற இடங்களிலும் இதே பொருளைக் கொள்வதற்கு வழிவகுத்து விட்டது. பொருள் மாறும்போது எழுத்து மாறவேண்டும் என்ற விதிப்படி மார்பகம் என்ற பொருளில் வரும்போது முளை என்று பயன்படுத்தி இருக்க வேண்டும். ஏனென்றால் பெண்களின் மார்பகம் ஆனது உரிய பருவத்தில் முளைத்து வளரும் இயல்புடையது. ஒருவேளை புலவர்கள் இதனை எதுகை அணிநயத்திற்காக எழுத்துப்போலியாக (லகர- ளகர கடைப்போலி) பயன்படுத்தி இருக்கலாம். எது எவ்வாறாயினும் இந்த எழுத்துப் போலியினால் ஒரு தவறான பொருள்கோள் இதுநாள்வரையிலும் தமிழகத்தில் காலூன்றி விட்டதே.

முலை என்ற சொல் மட்டுமின்றி முலையின் வேறு பெயர்களான கொங்கையும் மார்பும் கூட பல இடங்களில் கண் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளன. எனவே இடத்திற்கேற்ப அவற்றை மாற்றிப் பொருள்கொண்டால் பாடலின் உண்மையான பொருளை நாம் அறிந்துகொள்வதுடன் நம் தமிழும் களங்கமற்ற பெருமையுடன் தலைநிமிர்ந்து நிற்கும்.