சனி, 21 ஜனவரி, 2012

திருக்குறள் காட்டும் தேவர் யார்?


குறள்:

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான் - 1073

தற்போதைய விளக்கங்கள்:

கலைஞர் உரை: புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.
மு.வ உரை: கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.
சாலமன் பாப்பையா உரை: தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்.

உரைத்தவறுகள்:

மேற்காணும் மூன்று உரைகளிலுமே தேவர் என்ற சொல்லுக்கு வானுலகத்தவர்கள் என்ற பொருளைக் கொண்டுள்ளார்கள். மேலும் இத் தேவர்கள் தாம் நினைத்ததை உடனே செய்துவிடுவர் என்றும் இவர்களுக்கு நியமிப்பார் அல்லது கட்டுப்படுத்துவார் யாரும் இல்லை என்றும் மனம் போன போக்கில் நடப்பவர்கள் என்று கூறப்படுகின்றது. முதலில் தேவர்கள் அதாவது வானுலகத்தவர்கள் என்பதே  அறிவியலுக்குப் புறம்பான இதுவரை நிரூபிக்கப்படாத ஒரு கற்பனை என்பதை நாம் அறிவோம். அன்றியும், பல புராணங்களில் பேசப்படும் இத் தேவர்களுக்கு இந்திரன் என்ற தலைவன் உண்டென்றும் கூறப்படுகிறது. அங்ஙனம் இருக்க, இத் தேவர்கள் தம்மை நியமிப்பார் அல்லது கட்டுப்படுத்துவார் இன்றி தன்னிச்சையாய் செயல்படுவர் என்று இங்கே விளக்கம் கூறியிருப்பது தவறாகும். ஏனென்றால் புராணத்தின்படி, அனைத்து தேவர்களும் அவர்களின் தலைவனான இந்திரனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்களே ஆகும். இந்திரனுடைய சொல்லை மீறி அவர்கள் தன்னிச்சையாய செயல்பட முடியாது. ஆனால் கயவர்களால் தன்னிச்சையாய் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி மனம் போன போக்கில் செயல்பட முடியும். அவ்வகையில், தேவர் - கயவர் என்ற ஒப்புமை தவறாக இருப்பதால், அதன் அடிப்படையில் அமைந்த மேற்காணும் விளக்கங்களும் தவறென்றே கொள்ளப்படும்.

மேலும் 'திருவள்ளுவர் சமய சார்பற்றவர்' என்னும் கருத்தானது ஆதிபகவன், இந்திரனே சாலும் கரி, செய்யவள் தவ்வை, மாமுகடி, தாமரைக் கண்ணான் போன்ற பல ஆய்வுக் கட்டுரைகளில் சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது. இந் நிலையில், குறிப்பிட்ட சமய சார்புடையவரான தேவர்களைப் பற்றி இக்குறளில் மட்டும் திருவள்ளுவர் கூறியிருப்பாரா?. ஒருபோதும் மாட்டார். அன்றியும், ஒரு உவமையின் மூலம் ஒரு கருத்தைத் தெளிவாக்க விரும்பினால், மக்கள் நன்கு அறிந்த ஒரு பொருளை உவமையாகக் கூறினால் தான் விளக்கம் தெளிவாகப் புரியும். அதைவிடுத்து, 'வானுலகத்தில் வசிக்கும் தேவர்கள்' என்பது போன்ற இதுவரை யாரும் பார்த்திராத ஒரு கற்பனைப் படைப்பினை உவமையாகக் கூறினால் அவ் விளக்கமும் கற்பனையாக அமையுமே அன்றி தெளிவாக இராது. மேலும் இப்படி ஒரு கற்பனைப் படைப்பு வள்ளுவரின் நுண்மாண் நுழைபுலத்திற்கு பெருமை சேர்க்காது என்பதால் வள்ளுவர் இக் குறளில் கயவர்களுக்கு உவமையாக வானுலகத் தேவர்களைக் குறித்திருக்க மாட்டார் என்பது திண்ணம்.

இக் குறளில் நேர்ந்த பொருள் தவறுகளுக்குக் காரணம், தேவர் என்ற சொல்லுக்குக் கூறப்பட்ட பொருளே ஆகும். உண்மையில் இச் சொல்லுக்கு வள்ளுவர் மேற்கொண்ட பொருள் எதுவாக இருக்கும்  என்பதைப் பற்றிக் கீழே காணலாம்.

திருக்குறள் காட்டும் தேவர் யார்?:

வள்ளுவர் 'தேவர்' என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பதை 'கயமை' என்னும் அதிகாரத்தின் துணை கொண்டு அறிய முயலலாம்.

1. கயமை என்னும் அதிகாரத்தில் முதலாவதாக கீழ்க்காணும் குறள் வருகிறது.

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில். - 1071.

இதில், கயவர்களை 'மனிதப்போலிகள்' என்று கூறுகிறார். கயவர்கள் உருவத்தால் மனிதர்களைப் போன்று இருந்தாலும் பண்புகளால் அவர்கள் மனிதர்களை ஒப்பாரல்லர் என்கிறார்.

இப்படி முதல் குறளிலேயே கயவர்களை மனிதருக்கு ஒப்பானவராகக் கூறிவிட்டதால், இதனை அடுத்து வரும் 1073 ஆம் குறளில் தேவர் என்ற சொல்லின் மூலம் அவர் மறுபடியும் கயவர்களை மனிதர்களுக்கு உவமையாகக் கூறி இருக்க மாட்டார். அவ்வாறு கூறினால் அது கூறியது கூறல் குற்றமாகி விடும். வள்ளுவர் அத் தவறைச் செய்யமாட்டார் என்பதால் தேவர் என்ற சொல் இக்குறளில் மனிதர்களைக் குறிக்காது என்பது பெறப்படுகிறது.

2. என்றால் தேவர் என்ற சொல் ஏதேனும் விலங்கினையோ பறவையினையோ தான் குறித்து வந்திருக்க வேண்டும். இவ் இரண்டிலும், தேவர் என்பது பறவையினைக் குறித்து வந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகின்றது. ஏனென்றால், கயவர்கள் தம் மனம் விரும்பியபடி தன்னிச்சையாக செயல்பட்டு மனிதர்களுக்குத் துன்பம் தருபவர்கள். இத்தகைய பண்புகள் எந்த ஒரு பறவைக்கும் பொருந்தாது என்பதால் தேவர் என்பது ஏதேனும் ஒரு விலங்கினையே குறித்து வந்திருக்க வேண்டும் என்பது பெறப்படுகிறது.

3. மேலே கண்டபடி, தேவர் என்பது ஒரு விலங்கினைக் குறித்தாலும் அது ஒரு காட்டு விலங்காக இருக்க முடியுமா என்றால் முடியாது என்றே தோன்றுகிறது. ஏனென்றால் கயவர்கள் மனிதரோடு மனிதராக சமுதாயத்தில் வாழ்பவர்கள். ஆகவே தேவர் என்பது மனிதனால் வளர்க்கப்படும் ஒரு பண்ணை விலங்காகத் தான் இருக்க வேண்டும் என்னும் செய்தி பெறப்படுகிறது.

4. மனிதனால் பண்ணைகளில் வளர்க்கப்படும் விலங்குகளில் ஆடு, பசு, எருது, காளை, பன்றி, குதிரை போன்றவை அடங்கும். இவ் விலங்குகளுள் மனிதருக்குத் துன்பம் செய்பவை எவை என்று பார்த்தால் அவை காளைமாடுகள் மட்டுமே என்பது புலப்படும். ஆம், காளை மாடுகள் மட்டுமே யாருக்கும் அடங்காமல் தன்னுடைய முரட்டுத்தனமான செயல்களால் மனிதருக்கும் பிற உயிரினங்களுக்கும்  துன்பம் விளைவிப்பவை. மனம் போன போக்கில் திரிந்து அவ் வழியே செல்வோரையும் வருவோரையும் துரத்தித் தாக்கிக் காயப்படுத்தும். அதுமட்டுமின்றி, காளையானது தன் காலடியின் கீழ் அகப்பட்டவரை வெளியேறிச் செல்ல விடாமல் தடுத்து தனது கொம்புகளால் அவரைத் தாக்க முயன்று கொண்டே இருக்கும். இந்தக் காளைகளைப் போலவே கயவர்களும் தமக்குக் கீழே அகப்பட்டவரிடம் மிகவும் அகங்காரத்துடன் நடந்து அவர்களை மன்னித்து விடாமல் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டே இருப்பர் என்று குறள் 1074 ல் கூறுகிறார் வள்ளுவர்.

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

திருந்திய பொருள்:

மேலே கண்டவற்றில் இருந்து, வள்ளுவர் இக் குறளில் 'தேவர்' என்ற சொல்லை 'காளைமாடு' என்ற பொருளில் தான் பயன்படுத்தியுள்ளார் என்பதை அறிந்தோம். இனி இக் குறளின் திருந்திய பொருள்:

" தாம் விரும்பியவாறு (அகங்காரத்துடன்) செயல் புரிந்து திரிவதால் கயவர்கள், காளைமாடுகளைப் போன்றவராவர்."

நிறுவுதல்:

மேற்காணும் குறளில், 'தேவர்' என்ற சொல்லுக்கு 'காளைமாடு' என்ற பொருள் எவ்வாறு பொருந்தும் என்பதை இன்னும் சில ஆதாரங்களுடன் கீழே காணலாம்.

திருக்குறளில் 'தெய்வம்' என்னும் சொல்லை 'பசு' என்ற பொருளில் தான் வள்ளுவர் பயன்படுத்தி உள்ளார் என்பதை 'திருக்குறளில் தெய்வம் - பகுதி 2' என்ற கட்டுரையில் பல சான்றுகளுடன் கண்டோம். இந்த 'தெய்வம்' என்ற சொல் பெண்பால் பெயராகும். இதற்கு நேரான ஆண்பால் பெயர் 'தேவன்' என்பதாகும்.

தெய்வம்           ------------------------------->  தேவன்           --------------> தேவர்
(பெண்பால் ஒருமை)           ( ஆண்பால் ஒருமை)           (ஆண்பால் பன்மை)

காளைமாடுகளைக் குறித்து வந்த இந்த தேவன் என்ற பெயரானது பின்னர் அக் காளைகளை அடக்குகின்ற வீரர்களுக்கும் பெயராக விளங்கியது. வெள்ளைநிறக் காளையை அடக்கிய வீரனுக்கு வெள்ளையத் தேவன் என்ற பெயர் சூட்டப்பட்டது எனலாம். இதுவே பின்னாளில் ஒட்டுமொத்தமாக காளைகளை அடக்கும் வீரர்களைக் குறிக்கும் பெயராக மாறியிருக்கலாம்.

சல்லிக்கட்டு:

தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் முதன்மையானது ஏறு தழுவுதல் ஆகும். இக்காலத்தில் இதனை சல்லிக்கட்டு என்றும் கூறுகின்றனர். சல்லிக்கட்டு என்னும் சொல்லானது 'சல்லியைக் கட்டுப்படுத்துதல்'  என்று விரிந்து 'காளையினை அடக்குதல்' என்று பொருள்படும். இதிலிருந்து 'சல்லி' என்னும் சொல்லுக்குக் 'காளை' என்ற பொருளும் உண்டென்று அறியப்படுகிறது. சல்லிமாடு என்பது ஏறுதழுவத் தயார் செய்யப்பட்ட காளை மாட்டினைக் குறிக்கும்.

வின்சுலோ இணையப் பேரகராதி:

சல்லிமாடு--சல்லியெருது, s. A lusty bull decorated for fighting.

தன் மனம்போன போக்கில் யாருக்கும் அடங்காமல் திமிருடன் திரிந்து பிறருக்குத் துன்பம் தரும் இயல்புடையது காளை மாடாகும். எருதுகளையாவது உழவுக்குப் பயன்படுத்தலாம். ஆனால் இந்த காளைகள் மிக மோசமானவை. மூர்க்கத்தனம் நிறைந்தவை. ஒரு காளையினை அடக்குவதற்கு எத்தனை பேர் போராடுகின்றனர் என்பதை சல்லிக்கட்டு விளையாட்டில் பார்த்திருக்கலாம். இவற்றை அடக்கி உழவுக்குப் பயன்படுத்துவதென்பது மிகவும் கடினமான செயலாகும்.

காளையைக் குறிக்கின்ற 'சல்லி' என்ற சொல்லுக்கு 'போக்கிலி' என்ற பொருளும் இருப்பதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது.

சல்லி² calli
, n. [T. tjalli, K. Tu. jalli.] 1. [M. calli.] Small pieces of stone or glass, potsherd; கல்முதலியவற்றின் உடைந்த துண்டு. எறி சல்லி புதுமலர்க ளாக்கினான்காண் (தேவா. 596, 8). 2. Small chips, as of stone; rubble; சிறிய கல். 3. Small flat shells, used for lime; கிளிஞ்சல் முதலியவற்றின் சிற்றோடு. (W.) 4. [M. calli.] Small copper coin, fractional part of a larger coin, 1/12 anna; சிறுகாசு. Loc. 5. Short pendant in ornaments, hangings; ஆபரணத்தொங்கல். (சூடா.) முத்தாலாகிய சல்லியையும் (மணி. 18, 46, உரை). 6. A thin, emaciated person; மெலிந்த சரீரமுடையவன். அந்த ஆள் சல்லியாயிருப்பான். Loc. 7. Perforation, hole; துவாரம். Colloq. 8. Falsehood; பொய். (W.) 9. Villain, black-guard; போக்கிலி. Colloq.

இந்தப் போக்கிலிகளைத் தான் கயவர்கள் என்று கூறுகிறார் வள்ளுவர். இவர்களும் காளை மாடுகளைப் போல மூர்க்கத்தனம் நிறைந்தவர்களே. தாம் விரும்பியதை செய்து தமது அகங்காரத்தினால் பிறருக்குத் துன்பம் விளைவிப்பவர்கள். இவர்கள் யார் பேச்சையும் கேட்டு அதன்படி நடக்கவோ கட்டுப்படவோ மாட்டார்கள். இவர்கள் 'கொடிறு உடைக்கும் கூன் கையருக்கே கட்டுப்படுவர்' என்று குறள் 1077 ல் கூறுகிறார் வள்ளுவர்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.

கயவர்களைப் போலவே காளைகளும் லேசில் யாருக்கும் அடங்குவதில்லை. அவற்றின் மேலேறி அவற்றின் திமிலைப் பிடித்துத் திருக்கி கழுத்தைப் பிடித்து அடக்குபவருக்குத் தான் கட்டுப்படுகிறது. இப்படிப் பல பண்புகளால் காளைகளும் கயவர்களும் ஒத்திருப்பதால் தான் இருவரும் 'சல்லி' என்ற ஒரே சொல்லால் குறிக்கப் பெறுகின்றனர். வள்ளுவரும் இத்தகைய ஒப்புமைகளைக் கருதியே கயவர்களை 'காளைமாடுகளைப் போன்றவர்கள்' என்ற பொருளில் 'தேவர் அனையர்' என்று கூறுகிறார்.

முடிவுரை:

சிறுமைக்குணமே கயவர்களின் அடையாளம் என்பதால் கயவர்களைக் குறித்து வந்த சல்லி என்ற சொல் நாளடைவில் சிறுமைக் குணத்தையும் சிறுசிறு பொருட்களையும் குறிக்கப் பயன்படலாயிற்று.

சல்லி² calli
, n. [T. tjalli, K. Tu. jalli.] 1. [M. calli.] Small pieces of stone or glass, potsherd; கல்முதலியவற்றின் உடைந்த துண்டு. எறி சல்லி புதுமலர்க ளாக்கினான்காண் (தேவா. 596, 8). 2. Small chips, as of stone; rubble; சிறிய கல். 3. Small flat shells, used for lime; கிளிஞ்சல் முதலியவற்றின் சிற்றோடு. (W.) 4. [M. calli.] Small copper coin, fractional part of a larger coin, 1/12 anna; சிறுகாசு.

................................... தமிழ் வாழ்க!...................................

திங்கள், 16 ஜனவரி, 2012

திருக்குறளில் தெய்வம் - பகுதி 3 ( பசு வழிபாடு)


முன்னுரை:

திருக்குறளில் தெய்வம் என்று வள்ளுவர் குறிப்பிட்டது பசுவினைத் தான் என்பதை ' திருக்குறளில் தெய்வம் - பகுதி 2 'என்ற கட்டுரையில் பல ஆதாரங்களுடன் கண்டோம். இனி இக் கட்டுரையில், வள்ளுவர் பசுவினைப் போற்றி இருப்பதால் வள்ளுவர் காலத்தில் பசு வழிபாடு இருந்ததா?. பசு வழிபாடு பற்றிக் கூறுவதால் வள்ளுவர் சமயம் சார்ந்தவரா?. என்பதைக் காணலாம்.



பசு வழிபாடு என்பது என்ன?

பெண்கள் பசுவினைத் தொழுவதைப் பற்றிக் கீழ்க்காணும் குறளில் வள்ளுவர் கூறி இருக்கிறார்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. - 55.

இங்கே 'தெய்வமாகிய பசுவினைத் தொழுதல்' என்பது எதைக் குறிக்கிறது என்றால் அது 'பசுக்களைப் பேணிப் பாதுகாத்தலையே' குறிக்கிறது.  அதாவது, ஒரு தாய் தனது பிள்ளைகளை எவ்வாறு சீராட்டி பாராட்டி பக்குவமாக பாசத்துடன் வளர்ப்பாளோ அதைப்போலவே பசுக்களையும் அவற்றின் கன்றுகளையும் கவனித்து வளர்க்க வேண்டும். சரி, ஏன் பசுக்களை பாசத்துடன் கவனித்து வளர்க்க வேண்டும்?. ஏனென்றால் பசுவானது குறிப்பறியும் தன்மை கொண்டது. தன் மீதும் தனது கன்றுகள் மீதும் குடும்பத்தினர்கள் பாசமில்லாமல் நடந்து கொள்ளும்போது அதையறிந்த பசுக்கள் வேதனைப்படும். அதனால் அது அளிக்கும் பாலின் தன்மை மாறுபடுவதுடன் பால் சுரக்கும் அளவும் குறையும். ஆகவே பசு வளர்ப்பில் பாசம் மிக இன்றியமையாதது.

அத்துடன் ஒரு குடும்பத்தில் அதிகாலையிலேயே எழுந்து வேலைகளைச் செய்யத் துவங்குவது பெண்களே ஆவர். ஆனால் இப்பெண்களுக்கும் முன்னதாகவே எழுந்து அவர்களைக் காண்பதற்காக ஒரு குழந்தையைப் போல் வாஞ்சையுடன் காத்துக்கிடப்பது பசுக்களே ஆகும். அதனால் தான், காலையில் எழுந்ததுமே முதல் வேலையாக பசுக்களைச் சென்று கண்டு அவற்றைக் கவனிப்பது பெண்களின் அன்றாட கடமைகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. வள்ளுவர் மேற்காணும் குறளில் குறிப்பிடும் 'பசுவினைத் தொழுதல்' என்பது இதுதான். இதிலிருந்து வள்ளுவர் காலத்தில் பசு வழிபாடு இருந்திருக்கிறது என்பது உறுதியாகிறது.

மேலும் இக் குறளில் பசு வழிபாடானது இல்லறத்துப் பெண்களுக்கானது என்று பொதுவாகக் கூறியிருப்பதால் வள்ளுவர் காலத்தில் பசு வழிபாடானது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் பொதுவாக இருந்திருக்கிறது என்னும் கருத்து பெறப்படுகிறது.


சிறப்பும் பூசனையும்:

வள்ளுவர் காலத்தில் பசுக்கள் மிகவும் மதிக்கப்பட்டன  என்பதற்கு இன்னொரு ஆதாரத்தை வான் சிறப்பு என்ற் அதிகாரத்தில் காணலாம்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.- 18

இங்கே வானோர் என்பது பசுக்களையே குறிக்கும். இது எவ்வாறு என்று காணலாம்.

வான் என்பதற்கு அமிர்தம் என்ற பொருளை சென்னை இணையப் பேரகராதி கூறுகிறது. இந்த அமிர்தமாகிய பாலை வழங்குவதால் பசுக்களை வானோர் என்று கூறுகிறார் வள்ளுவர்.

இந்தப் பசுக்களை மகிழ்விக்க வேண்டி அவற்றுக்கு சிறப்பு செய்யும் விதமாக பல பூசனைகளை பசு வளர்ப்போர் நிகழ்த்திய செய்தியைத் தான் மேற்காணும் குறள் கூறுகிறது.
 

பசு பதி பாசம்:

சைவ சித்தாந்தத்தில் பசு-பதி-பாசம் என்ற முக்கோண உறவுத் தத்துவம் கூறப்படுகிறது. இங்கே பசு என்பது ஆன்மாவினைக் குறிக்கும்; பதி என்பது தலைவனாகிய இறைவனைக் குறிக்கும்; பாசம் என்பது மாயையினைக் குறிக்கும். பசுவாகிய ஆன்மாவானது பதியாகிய இறைவனைக் காணவிடாமல் பாசமாகிய மாயை மறைத்துக் கொண்டிருக்கின்றது என்பதே இத் தத்துவத்தின் விளக்கமாகும்.

திருவள்ளுவரும் இந்த பசு-பதி-பாசம் போன்றதொரு பாசத்தினைப் பற்றி மேற்காணும் குறளில் கூறியிருப்பதைக் கண்டோம். இக் கோணத்தில் இருந்து பார்த்தால் வள்ளுவரும் பசுவும் ஒரு குறிப்பிட்ட மதச் சார்புடையவர்களோ என்று எண்ணத் தோன்றும். ஆராய்ந்து பார்க்கின், அது இல்லை என்பது தெரியவரும்.

சைவசித்தாந்தத்தில் வருகின்ற பசு பதி பாசத்திற்கும் வள்ளுவர் கூறும் பசு பதி பாசத்திற்கும் பெருத்த வேறுபாடு உண்டு. சைவசித்தாந்த நெறிப்படி, பசு தான் பதியினை அடைய முயல்கிறது. ஆனால் வள்ளுவர் கூறும் இல்லற நெறிப்படி, பதி தான் பசுவினை அடைகிறார். மேலும் சைவ சித்தாந்தத்தில் பசுவுக்கும் பதிக்கும் இடையில் இருப்பதான பாசம் என்னும் மாயையானது இருவரையும் பிரித்து வைக்கின்றது. ஆனால், இல்லற நெறியிலோ பசுவுக்கும் பதிக்கும் இடையிலான பாசம் என்பது இருவரையும் இணைத்து வைக்கின்றது.

இப்படி இரண்டுமே பெரிய அளவில் முரண்படுவதால் வள்ளுவரும் சரி பசுவும் சரி சமயங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பது உறுதியாகிறது.

பசு பாதுகாப்பு:

இல்லறத்தில் வாழ்வோர் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டிய ஐவகையினரில் பசுவும் ஒன்றெனக் கீழ்க்காணும் குறள் கூறுகிறது.

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.  - 43

பசுக்களின் மேல் அக்காலத்து மக்கள் கொண்டிருந்த பேரன்பினையும் பெருமதிப்பினையும் இக் குறள் காட்டுகின்றது. பசு பாதுகாப்பு என்பது நாள்தோறும் தவறாமல் செய்யப்பட வேண்டிய பணிகளில் ஒன்றாக அக் காலத்தில் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

பசு பாதுகாப்பினை முன்னிறுத்தியே கீழ்க்காணும் முதுமொழி தோன்றியிருக்கக் கூடும்.

' ஆலயம் தொழுவது சாலவும் நன்று.'

இதில் வரும் ஆலயம் என்பது ஆக்கள் லயிக்கும் இடத்தைக் குறிக்கும். லயித்தல் என்றால் ஒடுங்குதல் என்று பொருள்படும். பசுக்கள் ஒடுங்கும் இடத்தையே ஆலயம் என்று குறிப்பிட்டனர் முன்னோர்.  இந்த ஆலயத்திற்கு நாள்தோறும் சென்று பசுக்களைத் தொழவேண்டும் அதாவது பேண வேண்டும் என்னும் கருத்தினை வலியுறுத்தியே இந்த முதுமொழி உருவானது.

தொழுதல் என்ற வினையின் அடிப்படையிலேயே தொழுவம் என்ற சொல் உருவானது. பசுக்கள் பேணப்படும் இடத்தையே பசுத்தொழுவம் என்று கூறினர்.

தொழுதல் ------> தொழுவம்

நன்மை தருவதான அறச் செயல்கள் பலவற்றுள்ளும் நாள்தோறும் பசுத் தொழுவம் சென்று பசுக்களைப் பேணிப் பாதுகாப்பது மிகவும் நல்ல செயலாகும் என்பதே இம் முதுமொழி உணர்த்தும் பொருளாகும். இதிலிருந்து அக் காலத்தில் ஊர்க்குப் பொதுவாக ஒரு பெரிய பசுத் தொழுவம் அமைக்கப்பட்டு அங்கிருக்கும் பசுக்களை பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் பேணலாம் என்ற நடைமுறை இருந்துள்ளது என்னும் செய்தி பெறப்படுகிறது.

முடிவுரை:

மேற்கண்ட சான்றுகளில் இருந்து பசு வழிபாடு என்பது வள்ளுவர் காலத்தில் பொதுவான ஒரு சமுதாய வழக்காகவே இருந்து வந்துள்ளது என்பது உறுதியாகிறது.  அதுமட்டுமின்றி அவரது காலத்தில் சிலை வழிபாடுகளோ மதம் சார்ந்த பிற வழக்குகளோ இருக்கவில்லை என்பதை முன்னர் பல ஆய்வுக் கட்டுரைகளில் கண்டுள்ளோம். இப்படி ஒரு சாதி மத பேதமற்ற சமுதாய நிலையினைக் கொண்டிருந்த வள்ளுவரது காலத்தினை "பழந்தமிழகத்தின் பொற்காலம்" என்று கொண்டாடினால் தவறில்லை.

மேலும் வள்ளுவர் காலத்தில் சமயத்துக்கு அப்பாற்பட்டதாக விளங்கிய பசுவிற்கு பின்னாளில் தான் சமய மூலம் பூசப்பட்டிருக்க வேண்டும். இதனுடைய தொடர்ச்சியாகத் தான் பசுவானது காமதேனுவாகவும் எருதானது சிவனுக்கு வாகனமாகவும் ஆகியது. மேலும் சிவபெருமான் நந்தியைத் தனது காவலாகக் கொண்டிருப்பதிலும் ஒரு காரணம் உண்டு. ஏனென்றால் பசுவைப் போலவே எருதிற்கும் குறிப்பறியும் திறன் உண்டு. தனது தலைவராகிய சிவபெருமானுடைய விருப்பத்தினை அவர் கூறாமலேயே அவரது முகக் குறிப்பால் அறிந்து செயல்படுத்துவார் நந்தி. சிவன் கோயில்களில் நந்தியானது சிவனை நோக்கியே அமைக்கப்பட்டிருக்கும் காரணமும் இதுவே ஆகும். இதனால் தான் நந்திக்கும் சிவனுக்கும் இடையில் புகுந்து செல்லக் கூடாது என்றும் கூறப்படுகிறது.

எது எப்படியோ பசுவானது அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது என்பதனை இனியேனும் அறிந்து அனைத்து மதத்தினரும் பசுக்களைப் பாதுகாக்க முற்பட்டால் அதுவே இக் கட்டுரையின் பயனாகும்.
......................................... வாழ்க தமிழ்!..........................

திங்கள், 2 ஜனவரி, 2012

திருக்குறளில் தெய்வம் - பகுதி 2


தெய்வம் என்பது என்ன?

திருக்குற்ளில் வரும் தெய்வம் என்பது கடவுளையோ, விதியையோ குறிக்காது என்று திருக்குறளில் தெய்வம் - பகுதி 1 என்ற கட்டுரையில் ஆதாரங்களுடன் கண்டோம். இனி இக்கட்டுரையில் வள்ளுவர் தெய்வம் என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்று பல சான்றுகளுடன் காண்போம்.

தெய்வத்தின் பண்புகள்:

தெய்வம் என்பதைப் பற்றிக் கூறுகையில் வள்ளுவர் அத் தெய்வத்தின் தன்மைகளாக சிலவற்றைக் கூறுகிறார். ஒவ்வொரு குறளிலும் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் படி தெய்வத்திற்கு கீழ்க் காணும் பண்புகள் இருந்தாக வேண்டும். அப் பண்புகளைக்கொண்டு தெய்வம் என்பது யாரைக் குறிக்கிறது என்பதை அறுதி செய்ய முயல்வோம்.

1. குறள் 43 ல் உள்ளபடி, தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்ற வரிசையில் தெய்வமும் வருகிறது. இவற்றில் தென்புலத்தாராகிய நீத்தாரும், விருந்தினரும், சுற்றமும், தனது குடும்பமும் ஆகிய அனைத்தும் இயக்கமும் உருவமும் உள்ளவையே என்பதால் இவற்றுடன் வரும் தெய்வமும் இயக்கமுடைய உயிருள்ள ஒரு உருவமே  என்பது பெறப்படுகிறது.

2. தெய்வமானது இல்வாழ்வில் உள்ளவர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. அவ்வகையில் இல்லறத்தவரால் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய நீத்தாரும், விருந்தினரும், சுற்றத்தாரும், தனது குடும்பத்தினரும் ஆகிய அனைத்து மாந்தரும் கூறப்பட்டு விட்டதால் இனி எஞ்சியிருக்கும் தெய்வம் என்பது மனிதரைக் குறிக்காமல் ஏதேனும் ஒரு விலங்கினையோ பறவையினையோ குறிக்கலாம் என்பது பெறப்படுகிறது.

3. குறள் 702 ல், தெய்வமானது, மனிதர்கள் வெளிப்படையாகக் கூறாவிடினும் சூழலை குறிப்பால் அறிய வல்லது என்று கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து தெய்வமானது மனிதருடன் நெருங்கிய தொடர்புடைய தோழமையுடைய ஒரு விலங்காகவோ பறவையாகவோத் தான் இருக்க முடியும் என்னும் கருத்து பெறப்படுகிறது.

4. குறள் 1023 ல், தெய்வமானது, தனது குடியை உயர்த்திட அயராது உழைப்பவரிடத்தில்  தானே முன்செல்லும் தன்மை உடையது என்று கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து தெய்வமானது ஒரு பறவையாக இருக்க முடியாது என்பது பெறப்படுகிறது. ஏனென்றால் பறவைகள் சர்வ சுதந்திரம் மிக்கவை. அவை மனிதர்களைத் தாமே நாடி வருவது என்பது அரிதான செயல். பறவைகளில் காகங்கள் வீட்டுக்கு வருவதாக இருந்தாலும் அவை பசிக்கு சோறுண்ணவே வரும். குடியை உயர்த்த உழைப்பவரின் தன்மை அறிந்து அவர்க்கு உதவ அவை தாமாகவே முன்வராது. அப்படியே வந்தாலும் அவற்றால் மனிதர்க்கு எவ்வித உதவியும் செய்ய இயலாது. ஆக, தெய்வம் என்பது ஒரு விலங்கு என்பதும் அதுவும் வீட்டிலேயே வசித்து மனிதர்க்கு உதவி செய்யும் ஒரு வீட்டு விலங்கு என்பதும் பெறப்படுகிறது. ஏனென்றால் வீட்டில் வசிப்பதாக இருந்தால் மட்டுமே அதனால் உதவி செய்ய எளிதில் முன்வர முடியும்.

5. குறள் 55 ல், தெய்வமானது, இல்லறத்தில் உள்ளவர்களால் குறிப்பாக மணமான பெண்களால் நாள்தோறும் தொழப்படுவது என்னும் கருத்து கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து தெய்வம் என்பது பசு மாட்டினைக் குறித்து வந்திருக்கலாம் என்ற கருத்து தோன்றுகிறது. ஏனென்றால் வீட்டில் ஆடு, எருமை, நாய், பூனை, பன்றி போன்றவைகளும் வளர்க்கப்பட்டாலும், பெண்களால் நாள்தோறும் தொழப்படும் சிறப்பு பசுவிற்கு ம்ட்டுமே இன்றுவரை இருந்து வருகிறது. தாய்க்கு இணையாக இன்னொரு தாயாக இருந்து மழலையர்க்கு பால் தந்து வளர்த்து வரும் ஒரே வீட்டு விலங்கு பசு மட்டுமே ஆகும்.

பிற ஆதாரங்கள்:

திருக்குறளில் வள்ளுவர் 'தெய்வம்' என்று குறிப்பிட்டுச் சொன்னது பசு மாட்டினையே என்னும் கருத்தினை மேலே கண்டோம். இக் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இன்னும் சில ஆதாரங்களையும் வள்ளுவர் கூறியுள்ளார். அவற்றையும் பார்ப்போம்.

அமிர்தம் தரும் பசு: 

குறள் 50 ல், இல்லற வாழ்வினை அறநெறிப் படி வழுவாமல் வாழ்ந்து பிறர்க்கு உதவியாக இருப்பவனை தெய்வத்திற்கு சமமானவன் என்று வள்ளுவர் கூறுகிறார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

வெறுமனே தெய்வம் என்று கூறாமல் 'வான் உறையும்' தெய்வம் என்று அடை கொடுத்துச் சிறப்பிக்கிறார் வள்ளுவர். இதில் வரும் 'வான்' என்பதன் பொருள் என்ன என்று பார்ப்போம்.

வான் என்ற சொல்லுக்கு சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கீழ்க்காணும் பொருட்களைக் கூறுகின்றது..

, n. 1. [T. vāna, K. bāna, M. vānu.] Sky, the visible heavens; ஆகாயம். வானுயர் தோற்றம் (குறள், 272). 2. Primordial matter; மூலப்பிரகிருதி. வானின் றிழிந்து வரம்பிகந்த மாபூதத்தின் (கம்பரா. அயோத். மந்திர. 1). 3. Cloud; மேகம். ஏறொடு வான் ஞெமிர்ந்து (மதுரைக். 243). 4. Rain; மழை. வான்மடி பொழுதில் (பெரும் பாண். 107). 5. Celestial world; தேவருலகு. வான்பொரு நெடுவரை (சிறுபாண். 128). 6. Ambrosia; அமிர்தம். வான்சொட்டச் சொட்ட நின் றட்டும் வளர்மதி (தேவா. 586, 1). 7. Heaven; மோட்சலோகம். வானேற வழிதந்த (திவ். திருவாய். 10, 6, 5). 8. Goodness; நன்மை. வரியணி சுடர் வான் பொய்கை (பட்டினப். 38). 9. Greatness; largeness; பெருமை. (பிங்.) இருடூங்கு வான்முழை (காசிக. காசியின்சிறப். 13). 10. Beauty; அழகு. வான்பொறி பரந்த புள்ளி வெள்ளையும் (கலித். 103). 11. Strength; வலிமை. (பிங்.) 12. Regularity; நேர்மை. வானிரைவெண்பல் (கலித். 14). 13. A kind of tree; மரவகை. (பிங்.)

மேற்காணும் பொருட்களுள், வான் என்பதனை அமிர்தம் என்ற பொருளில் வள்ளுவர் இக் குறளில் கையாண்டுள்ளார். இங்கு அமிர்தம் என்று வள்ளுவர் குறிப்பிடுவது பசும்பால் ஆகும். ஆம், அமிர்தம் என்பதற்கு பசும்பால் என்ற பொருள் இருப்பதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது.

*அமிர்தம் amirtam
, n. < a-mṛta. 1. Immortality; அழிவின்மை. 2. Ambrosia, nectar, as conferring immortality; தேவருணவு. தோ ளான் . . . அமிர்த மன்னாளை யெய்தி (சீவக. 268). 3. Pleasantness, agreeableness; இனிமை. அமிர் தங்கொள வுயிர்க்குங் கருங்கா ழகிலி னறும்புகை (சீவக. 349). 4. Food; உணவு. தந்தவ ளமிர்த மூட்ட வுண்டு (சீவக. 1178). 5. Water; நீர். (W.) 6. Cow's milk; பசுவின்பால். (தைலவ. தைல. 1.) 7. Unsolicited alms; யாசியாமற் கிடைக்கும் பிட்சை. ஒன் றிரவாமல் வருவதே அமிர்தம் (காஞ்சிப்பு. ஒழுக். 36). 8. Final liberation; மோக்ஷம்.

ஆக, வான் உறையும் தெய்வம் என்பது அமிர்தமாகிய பால் பொதிந்திருக்கும் பசு என்று விளக்கம் பெறும்.  அறநெறிப்படி இல்வாழ்க்கை வாழ்ந்து யாருக்கும் துன்பம் செய்யாமல் பிறருக்கு உதவிகள் செய்பவனை பசுவுக்குச் சமமாக வள்ளுவர் இக் குறளில் கூறுகிறார். இது ஏன் என்று பார்ப்போம்.

1. பசுவானது மிக அமைதியான விலங்கு; யாருக்கும் தீங்கிழைக்க நினைக்காதது. அதே போல அறநெறிப்படி வாழ்பவனும் பிறருக்குத் தீங்கிழைக்க மாட்டான்.

2.  பசுவானது எவ்வித எதிர்பார்ப்புமின்றி பிறருக்குப் பாலைத் தருகிறது. அதைப்போல அறநெறிப்படி வாழ்பவனும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி பிறருக்கு உதவிகள் செய்வான். மேலும் எப்படி பசுவிடத்தில் உள்ள அமிர்தம் அதற்கில்லாமல் பிறருக்கே பயன்படுகின்றதோ அதைப்போல வாழ்வாங்கு வாழும் அறநெறியாளனிடத்தில் உள்ள செல்வமும் அவனுக்கன்றி பிறருக்கே பயன்படுகிறது.

இப்படி பல நற்பண்புகளால் ஒத்திருப்பதால் தான் வையத்துள் அறநெறிப்படி வாழ்வாங்கு வாழும் இல்லறத்தானை பசுவுக்குச் சமமாகக் கூறுகிறார் வள்ளுவர்.

குறிப்பறியும் பசு:

பசுக்கள் குறிப்பறிந்து நடப்பதில் வல்லவை என்று குறள் 702 கூறுகிறது.  தன்னை வளர்ப்பவரின் குணநலன்களை நன்கு அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல செயல்பட வல்லது பசு. அதுமட்டுமின்றி, தன்னை வளர்ப்பவருக்கு துன்பம் நேர்ந்தாலோ, நேரப்போகிறது என்றாலோ, அதை அறிந்து அதற்காகக் கண்ணீர் விட்டு அழும் பண்புடையது பசு.

மனிதருக்காக பசுக்கள் கண்ணீர் விட்டு அழுகின்ற ஒரு காட்சியினை சிலப்பதிகாரத்தில் காட்டுகிறார் ஆசிரியர். கண்ணகி ஆயர்பாடியில் தங்கி இருந்த போது, அவளுக்கு உண்டாகப் போகும் பேரவலத்தை எண்ணி அங்கிருந்த பசுக்கள் எல்லாம் கண்ணீர் விட்டு நடுங்கிக் கொண்டிருந்தன என்று கூறுகிறார்.

' நான்முலை ஆயம் நடுங்குபு நின்றிரங்கும் ' - ஆய்ச்சியர் குரவை.

இதே போன்ற ஒரு செய்தி திருமூலர் வரலாற்றிலும் உண்டு. மூலன் என்னும் இடையன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த பொழுது திடீரென இறந்து விடுகிறான். அவன் இறந்து போனதை அறிந்த பசுக்கள் எல்லாம் கண்ணீர் வடித்து அழுது கொண்டிருந்தன. அதைக் கண்ணுற்ற சுந்தரநாதர் என்னும் முனிவர் பசுக்களின் கண்ணீரைத் துடைக்கக் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை மூலம் தனது ஆவியை மூலனின் உடலுக்குள் செலுத்தி அவனை உயிர்பெறச் செய்தார் என்பது வரலாறு.

இப்படி வெளிப்படுத்தப்படாத உண்மைகளையும் பசுக்கள் குறிப்பினால் அறிந்து கொள்வதால் தான், ஐயத்திற்கு இடமில்லாத வகையில் ஆசிரியரது அல்லது தலைவரது கருத்தினை முகம் அல்லது கண்களைக் கொண்டு குறிப்பால் அறிந்து கொள்ளும் திறமை உடையவனை பசுவுக்குச் சமமானவனாகக் கருத வேண்டும் என்று குறள் 702 ல் கூறுகிறார் வள்ளுவர்.

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.

தானே பால் சொரியும் பசு:

அதுமட்டுமின்றி, தன்னுடைய குடியினை மேம்படுத்த அயராது உழைக்கும் ஒருவனுக்கு, அவனது நல்லெண்ணத்தைக் குறிப்பால் அறிந்த பசுவானது தானே மனமுவந்து முன்வந்து பாலைச் சொரியும் என்று 1023 ம் குறளில் கூறுகிறார் வள்ளுவர்.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும். - 1023

இக் குறளில் வரும் 'மடிதற்று' என்பதற்கு 'ஆடையினை இறுகக் கட்டிக்கொண்டு' என்று பொருள் கூறியுள்ளனர் உரை ஆசிரியர்கள். இவ் உரை இக் குறளுக்குப்பொருந்தாது என்று முதலாம் பகுதியில் கண்டோம். மேலும் 'தறுதல்' என்ற வினைச்சொல் இருப்பதாகவோ 'தற்று' என்பதற்கு 'தரித்துக்கொண்டு' என்ற பொருள் இருப்பதாகவோ எந்த அகராதியும் கூறவில்லை. எனவே மடிதற்று என்பதில் பிழை இருப்பது தெரிகிறது. 'மடிதற்று' என்பதற்குப் பதிலாக 'மடிதுற்று' என்று வந்திருக்க வேண்டும். துறுதல் என்ற வினைச்சொல்லுக்கு நிறைதல் என்ற பொருள் இருப்பதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது.

துறு, (p. 611) [ tuṟu, ] கிறது, துற்றது, ம், துற, v. n. To be thick, crowded, full, நெருங்க. 2. To be closed, குவிய. (p.)

துறு என்ற வினைச்சொல்லில் இருந்து துற்று என்ற வினையெச்சம் பிறக்கிறது.

துறு --------------> துற்று
(நிறை)                ( நிறைந்து)

மடிதுற்று என்றால் மடிநிறைந்து என்று பொருள். 'மடிதுற்றுத் தான் முந்துறும்' என்றால் 'மடிநிறைந்து பாலைச்சொரிய தானே முன்வரும்' என்று பொருள். பொதுவாக பசுவிடம் பால் கறக்க வேண்டுமென்றால் நாம் தான் பசு இருக்கும் இடத்தைத் தேடிச்சென்று அதை ஒருவழியாக சம்மதிக்க வைத்துப் பால் கறக்க வேண்டும். ஆனால் நல்வழியில் குடியினை மேம்படுத்த முயல்பவருக்கு உதவி செய்யும் விதமாக பசுவே முன்வந்து பால் தரும் என்கிறார் வள்ளுவர். உண்மை தானே!.

பசுவும் எருதும்:

தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக அமிர்தம் போன்ற உணவான பாலைத் தருவதால் மக்களால் போற்றப்படும் பெருமை உடையது பசு. இதன் பாலை நாள்தோறும் உணவாக உட்கொள்ளுவதால் பசுவைத் தூயமையாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும். இதற்கென தனியாக தொழுவங்கள் அமைத்து அதை நல்ல முறையில் பேணிப் பாதுகாக்க வேண்டும். நமது உடல் நலத்தைப் பேணிக் காப்பதில் பசும்பாலுக்கு இன்றியமையாத இடம் இருப்பதால் அதைத் தரும் பசுவினை இன்னொரு தாயாகக் கருதி பெண்கள் தொழுகின்றனர். இதனால் தான் இல்லறத்தில் உள்ளோர் பசுக்களைக் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும் என்று குறள் 43 ல் கூறுகிறார் வள்ளுவர்.

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

ஒரே இனமாக இருந்தாலும் பசுவின் ஆண்பாலான எருதிற்கு இந்த சிறப்புக்கள் உண்டா எனில் இல்லை என்றே கூறலாம். ஆம், பசுவைப் போல பெருமை உடையதல்ல எருது; இருந்தாலும் எருதானது தனது முயற்சியால் மெய் வருத்தி உழைக்க வல்லது. வேளாண்மையில் வயல்களை உழுவதற்கும் வண்டியில் பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்வதற்கும் எருதே பயன்படுகிறது. பிறப்பினால் பசுவைப் போன்ற பெருமை தனக்கில்லை என்ற போதிலும் தனது முயற்சியினால் மெய் வருத்தி உழைத்து தனக்குப் பெருமை தேடிக்கொள்கிறது. இதனால் தான் உழவர் திருநாளாகிய தைப்பொங்கல் திருநாளில் எருதுகளுக்கு சிறப்பு மரியாதை செய்யப்படுகிறது. கீழ்க்காணும் குறளில் இதைத்தான் கூறுகிறார் வள்ளுவர்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். - குறள் 619:

இக் குறளின் பொருள் காண கீழ்க்காணும் வகையில் பிரித்துக் கொள்ள வேண்டும்.

தெய்வத்தான் ஆகாதெனினும் = தெய்வத்து + ஆன் + ஆகாது + எனினும்

இது ஒரு தொகைநிலைத் தொடராகும்.  அதாவது இத் தொடரில் 'தெய்வத்து' என்ற சொல்லை அடுத்து 'ஐ' என்ற இரண்டாம் வேற்றுமை உருபும், 'போல' என்ற உவம உருபும் வெளிப்படையாக வராமல் மறைந்து வந்துள்ளன. இதில் வரும் ஆன் என்பது எருதினைக் குறிப்பதாகும். சான்று: சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி.

, n. < ஆ&sup8;. [M. ān, T. āvu.] 1. Female of the buffalo, ox or deer; எருமை, பெற்றம், மரை இவற்றின் பெண். (திவா.) 2. Ox; இடபம். ஆன்முகத்த னடற்கண நாயகன் (கந்தபு. பானு கோ. 95).

எனவே,

தெய்வத்தான் ஆகாதெனினும் = தெய்வத்து + ஆன் + ஆகாது + எனினும்
                                                       = தெய்வத்தை (பசுவை) ப் போல எருது ஆகாது எனினும்

என்று பொருள்படும்.

இனி இக் குறள் மூலம் வள்ளுவர் கூற விழையும் கருத்து: ' (பிறப்பால்) பசுவினைப் போல எருதானது (சிறப்புடையது) ஆகாது என்றாலும் அது தன் முயற்சியால் மெய்வருத்தி உழைத்திட பெருமை பெறும். அதைப் போல பிறப்பினால் ஒருவருக்குப் பெருமை இல்லாமல் போனாலும் முயன்று செய்யும் வினையினால் அப் பெருமையினைப் பெறலாம். '

இக் குறளின் கருத்தை நோக்கும் பொழுது இதற்குத் துணையாக அமைவதைப் போல கீழ்க்காணும் குறளும் நினைவுக்கு வருகிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். - 972.

பசு வழிபாடு:

இதுவரை கண்ட பல சான்றுகளில் இருந்து திருக்குறளில் தெய்வம் என்று வள்ளுவர் குறிப்பிட்டது பசுவினைத் தான் என்பது உறுதி செய்யப்படுகிறது. வள்ளுவர் பசுவினைப் போற்றி இருப்பதால் வள்ளுவர் காலத்தில் பசு வழிபாடு இருந்ததா?. பசு வழிபாடு பற்றிக் கூறுவதால் வள்ளுவர் இந்து சமயத்தைச் சார்ந்தவரா?. என்றெல்லாம் கேள்விகள் எழலாம். இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் காணலாம்.

                                                                                    ............. தொடரும்.