வெள்ளி, 14 ஜூன், 2013

இறை என்றால் என்ன?

முன்னுரை:

சங்க காலந்தொட்டு இன்றுவரை மக்கள் பேச்சுவழக்கிலும் எழுத்து வழக்கிலும்  இருந்துவரும் பல தமிழ்ச் சொற்களுள் இறை என்ற சொல்லும் ஒன்றாகும். இச் சொல்லுக்குப் பலவிதமான பொருட்களை இன்றைய தமிழ் அகராதிகள் கூறுகின்றன. ஆயினும் பல பாடல்களில் இந்த அகராதிப் பொருட்களுள் ஒன்றுகூடப் பொருந்திவராத நிலையே காணப்படுகிறது. இது இச் சொல்லுக்கு வேறொரு புதிய பொருள் இருப்பதையே காட்டுகிறது. அந்த புதிய பொருள் எது என்பதைப் பற்றியும் இப் புதிய பொருளில் இருந்து பிற பொருட்கள் எவ்வாறு உருவாகியிருக்கக் கூடும் என்பதனையும் பல ஆதாரங்களுடன் விளக்கமாகக் காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

இறை - தற்போதைய பொருட்கள்:

இறை என்ற சொல்லுக்குத் தற்போதைய அகராதிகள் கூறும் பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளது.

சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி:

, n. < இற-. 1. Height; உயரம். ஏந்துகொடி யிறைப்புரிசை (புறநா. 17, 27). 2. Head; தலை. (சூடா.) 3. Supreme God; கடவுள். இறை நிலையுணர்வரிது (திவ். திருவாய். 1, 3, 6). 4. Šiva; சிவன். (பிங்.) 5. Brahmā; பிரமன். (பிங்.) 6. King, sovereign, monarch; அரசன். இறைகாக்கும் வையக மெல்லாம் (குறள், 547). 7. Eminence, greatness; தலைமை. (பிங்.) 8. Impartiality; justice; நடுவுநிலைமை. கண்ணோடா திறைபுரிந்து (குறள், 541). 9. [K. eṟe.] Any one who is great, as one's father or guru or any renowned and illustrious person; உயர்ந்தோன். (தொல். பொ. 256; திவா.) 10. Superior, master, chief; தலைவன். (திவா.) 11. Elder brother; தமையன். (பரிபா. 11, 8.) 12. Husband, as lord of his wife; கண வன். நப்பின்னைதக்கிறை (திவ். பெரியதி. 2, 3, 5). 13. [K. eṟake, M. iṟa.] Inside of a sloping roof, eaves of a house; வீட்டிறப்பு. குறியிறைக் குரம்பை (புறநா. 129). 14. Feather, quill; இறகு. (பிங்.) 15. Wing, plumage; சிறகு. 16. Death, dying, extinction; இறக்கை. (கலித். 18, உரை.) 17. Mango tree; மாமரம். (மலை.)

, n. < இறு²-. 1. Abiding, halting, tarrying; தங்கல். நெஞ்சிறை கொண்ட (மணி. 4, 69). 2. Seat; ஆசனம். இறையிடை வரன்முறை யேறி (கம்பரா. அயோத். மந்திர. 12). 3. Duty, obligation; கடமை. (திவ். திருவாய். 5, 2, 8.) 4. [M. iṟa.] Tax on land, duty, share of the produce accruing to the king as rent; அரசிறை. இறைவற் கிறையொ ருங்கு நேர்வது நாடு (குறள், 733). 5. Answer, reply; விடை. எண்ணிறையுள் (நன். 386). 6. Lines inside the finger joints; விரல்வரை. இறைக்கரஞ் சிவப் பெய்திட (இரகு. நாட்டுப். 34). 7. Measure of the first joint of the fore-finger being about 1 inch; விரலிறையளவு. 8. Very small particle, atom, minute quantity, short space of time; அற்பம். இறையு ஞானமி லாதவென் புன்கவி (கம்பரா. சிறப்பு. 10). 9. Wrist, fore-arm; முன்கை. எல்வளை யிறை யூரும்மே (கலித். 7). 10. Arm; கை. இறைவளை யாழ்தழீஇ யிருப்ப (சீவக. 656). 11. Joints of the body; உடலுறுப்பின் மூட்டுவாய். இறைகளவை நெறு நெறென (திவ். பெரியதி. 5, 10, 4). 12. Corner; மூலை. முடங்கிறை (முல்லை. 87).

பொருள் பொருந்தா இடங்கள்:

இறை என்பதற்கு அகராதிப்பொருட்கள் எவையும் பொருந்தாத பல பாடல்கள் உள்ளன. இருப்பினும் சான்றுக்கு இங்கே சில பாடல்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன.

கறையுங்கொப் பளித்த கண்டர் காமவேள் உருவம் மங்க
இறையுங்கொப் பளித்த கண்ணார் - தேவாரம்: 242

மேற்காணும் தேவாரப் பாடலில் இருந்து இறை என்பது கண்ணுடன் தொடர்புடைய உறுப்பு என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் கண்ணுடன் தொடர்புடைய உறுப்பு எதுவும் மேற்கண்ட அகராதிப் பொருட்களில் இல்லை.

நெய்தல் உண்கண் ஏர் இறைப் பணைத்தோள் - ஐங்கு - 181

நேர்இறை பணைத்தோட்கு ஆர்விருந் தாக - ஐங்கு - 468

சாய்இறைப் பணைத்தோள் அவ்வரி அல்குல் - ஐங்கு - 481

வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள், - புறநா.

சுணங்கு அணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை;
வீங்குஇறைப் பணைத்தோள், மடந்தை - புறநா.

நுணங்குஅமை புரையும் வணங்குஇறைப் பணைத் தோள், - அகம்.

மேலே காணும் பாடல்கள் யாவற்றிலும் 'இறை' என்பது தோளுடன் இணைத்தே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் தோள் என்பது கண்ணுடன் தொடர்புடைய உறுப்பு என்று ' தோள் என்றால் என்ன? ' என்ற ஆய்வுக் கட்டுரையில் நாம் முன்னரே பல ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். இதிலிருந்து இறை என்பதும் கண்ணுடன் தொடர்புடைய ஓர் உறுப்பே என்பது உறுதியாவதுடன் அகராதிகள் எவையும் இதுவரை இப் பொருளைக் கூறவில்லை என்பதும் தெளிவாகிறது.

இறை - புதிய பொருள் என்ன?

இறை என்பது கண்ணுடன் தொடர்புடைய ஓர் உறுப்பு என்று மேலே கண்டோம். என்றால் அது கண்ணின் எந்த உறுப்பினைக் குறிக்கிறது?. இதைப் பற்றி இங்கே காணலாம்.

கீழ்க்காணும் பாடல்களில் இறை என்பது பொழுதுடன் கூடி இறைப்போது என்றும் இறைப்பொழுது என்றும் வருகிறது.

குடமுடைந் தால் அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே.-  திருமந்திரம் - 16

நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் பல பாடல்களில் இறைப்போது வருகிறது. அவற்றில் சில பாடல்கள் மட்டும் கீழே.

விண்ணெல்லாம்கேட்கஅழுதிட்டாய்.
................................
பொறுத்து இறைப்போது இரு நம்பீ. - 144

திருமாலவன் திருநாமங்கள் எண்ணக் கண்ட விரல்களால்
இறைப்பொழுதும் எண்ணகிலாதுபோய் - 362

எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழுது அளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென்னும் கடிநகரே. - 395.

பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகள் நால்வரையும்
இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்த உறைப்பனூர் - 403

மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு வைத்த தத்தன்
இறைப் பொழுதின் கண் கூடி வாளினால் எறியல் உற்றான் - பெரியபுராணம்: 482


தேவாரத்தில் இந்த இறை என்னும் சொல்லானது மாத்திரை என்னும் சொல்லுடன் இணைந்து பொழுதைக் குறிக்கும் பொருளில் வருகிறது.

மறையன் மாமுனி வன்மரு வார்புரம்
இறையின் மாத்திரை யில்லெரி யூட்டினான் - தேவாரம்: 479.

மேலேகண்ட பாடல்களில் இருந்து இறை என்னும் உறுப்பானது பொழுதுடன் தொடர்புடைய ஒரு தொழிலைச் செய்வது என்னும் கருத்து பெறப்படுகிறது. மேலும் இவ் உறுப்பானது கண்ணுடன் தொடர்புடையது என்பதால் அவ் உறுப்பு 'கண்ணிமை' தான் என்பது பெறப்படுகிறது. ஏனென்றால் கண்ணின் பல்வேறு உறுப்புகளில் கண்ணிமை மட்டுமே பொழுதுடன் தொடர்புடைய தொழிலான இமைத்தல் என்ற பணியைச் செய்கிறது. இதிலிருந்து,

இறைப்போது, இறைப்பொழுது, இறைமாத்திரை என்பவை கண்ணிமைக்கும் கால அளவினைக் குறித்து வந்தவை என்பதை அறியலாம்.

நிறுவுதல்:

இறை என்பது கண்ணிமையைக் குறிக்கும் என்று மேலே கண்டோம். கண்ணிமையின் பண்புகளைக் குறிக்கும் சில பாடல்களை சான்றாகக் காட்டி மேலும் இதை உறுதிப்படுத்தலாம்.

(1) கண்ணிமையானது மென்மையானது.

சில்வளை சொரிந்த மெல்இறை - அகம்.

(2) காதலின்போது நாணத்தினால் தலைவி தலைவனை நேராகப் பார்க்காமல் தலைதாழ்த்தியே இருப்பாள். அப்போது அவளது கண்இமை தாழ்ந்தே இருக்கும். இதை சாய் இறை என்றும் வணங்கு இறை என்றும் இலக்கியம் கூறுகிறது.

சாய்இறைப் பணைத்தோள் அவ்வரி அல்குல் - ஐங்கு - 481
நுணங்குகட் சிறுகோல் வணங்குஇறை மகளிரொடு - அகம்.

(3) மணமான பின்னர் கணவனை மனைவி நோக்கும்போது அவளின் கண்ணிமை தாழ்ந்திராமல் நேராக இருக்கும். இதை நேர் இறை என்று குறிப்பிடுகிறது இலக்கியம்.

நேர்இறை பணைத்தோட்கு ஆர்விருந் தாக - ஐங்கு - 468

(4) பெண்கள் தங்கள் கண்ணிமையை  வண்ணம் பூசி அழகு செய்வர்.

வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள், - புறம்

(5) கடவுளைத் தொழும்போது நம் கண்களும் கைகளும் கூப்பியபடி அதாவது மூடியபடி இருக்கும். இதனைக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல் கூறுகிறது.

வல்லே வருக, வரைந்த நாள்; என,
நல்இறை மெல்விரல் கூப்பி,
இல்லுறை கடவுட்கு ஓக்குதும், பலியே!  - அகம்.

மேலே கண்ட சான்றுகளில் இருந்து இறை என்பது கண்ணிமை தான் என்பது உறுதியாகிறது.

இறையும் வளையும்:

இறை என்ற சொல் பயின்றுவரும் பல பாடல்களில் வளை என்ற சொல்லும் இணைந்தே வருகிறது. இந்த வளை என்பது என்ன?  என்பதைப் பற்றியும் இங்கே காண்லாம். இறையும் வளையும் சேர்ந்து வரும் பல பாடல்களில் சில மட்டும் கீழே தரப்பட்டுள்ளன.

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை. - குறள்: 1157

துறைநணி யூரனை உள்ளியென்
இறையேர் எல்வளை நெகிழ்பு ஓடும்மே.- ஐங்கு  -10

துறைவன் துறந்தெனத் துறந்துஎன்
இறையேர் முன்கை நீக்கிய வளையே. - ஐங்கு - 163

துறைவன் சொல்லிய சொல்என்
இறையேர் எல்வளை கொண்டு நின்றதுவே. - ஐங்கு - 165

வளர்பிறை போல வழிவழிப் பெருகி
இறைவளை நெகிழ்த்த எவ்வ நோயொடு - குறு -

மாஇதழ் புரையும் மலிர்கொள் ஈர்இமை,
............................
வெய்ய உகுதர, வெரீஇப், பையென,
சில்வளை சொரிந்த மெல்இறை முன்கை - அகம்-

செவ்வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி,
இறைவளை நெகிழ்ந்த நம்மொடு  - அகம்.

மேற்காணும் பாடல்களில் இறையானது வளை என்னும் அணியினை உடையது என்றும் இந்த வளையானது அழுகையினால்  நெகிழக் கூடியது என்றும் கூறப்பட்டுள்ளது. பெண்கள் மனம் வருந்தி அழும்போது உண்டாகும் கண்ணீரால் வளை எனப்படும் கண்ணின் அணி கெடுகிறது என்று கூறுவதில் இருந்து இந்த வளை என்பது கண்ணிமையில் பூசப்படும் ஓர் அழகுப் பொருள் தான் என்பது தெளிவாகிறது.

மேலும் காதலனின் பிரிவினால் கண்கள் கலங்கி அழுது அழுது காதலியின் இமைகளும் வெம்மையுற்றன. அவ் வெம்மை தாளாத காதலி ஒருத்தி தன்மீது மழைநீர் மொத்தமும் பொழிய மேகத்திடம் வேண்டுவதைப் பாருங்கள்.

கனைஇருள் வானம்! - கடல் முகந்து, என் மேல்
உறையொடு நின்றீயல் வேண்டும்; ஒருங்கே -
நிறைவளை கொட்பித்தான் செய்த துயரால்
இறைஇறை பொத்திற்றுத் தீ. - கலித்தொகை.

இந்த வளை என்னும் பெயர்ச்சொல்லானது வளைத்தல் என்ற வினையின் அடிப்படையில் பிறந்ததாகும். வளைத்தல் என்ற சொல்லுக்கு எழுதுதல், வரைதல் என்றும் பொருள் கூறுகிறது சென்னை இணையத் தமிழ்ப்பேரகராதி.

வளை²-த்தல் vaḷai-
, 11 v. tr. Caus. of வளை¹-. 1. To bend, inflect; வளையச்செய்தல். 2. To surround; சூழ்தல். இடுமுட் புரிசை யேமுற வளைஇ (முல்லைப். 27). 3. To hinder, obstruct; தடுத்தல். வள்ளனீங்கப் பெறாய் வளைத்தேனென (சீவக. 889). 4. To grasp, seize; பற்றுதல். 5. To carry off, sweep away; to steal; கவர்தல். திருடர் வந்து எல்லாவற்றையும் வளைத்துக்கொண்டு விட்டார் கள். 6. To reiterate, to revert again and again; பேச்சு முதலியவற்றைத் திருப்புதல். வளைத்து வளைத்துப் பேசுகிறான். 7. To paint, delineate; எழுதுதல். உருவப்பல்பூ வொருகொடி வளைஇ (நெடு நல். 113). 8. To wear, put on; அணிதல். சடை முடிமேல் முகிழ்வெண்டிங்கள் வளைத்தானை (தேவா. 871, 1).

இப்படி கண்ணிமையில் எழுதப்பட்ட அல்லது பூசப்பட்ட அணியின் பெயரே வளை என்றானது.

இறையும் இதர பொருட்களும்:

இறை என்ற சொல்லுக்கு கண்ணிமைதான் முதன்மைப்பொருளாக இருந்திருக்குமோ என்று எண்ணத்தக்க வகையில் பல சொற்களின் பொருட்கள் விளங்குகின்றன. இங்கே இந்த இதர சொற்கள் எவை என்பதையும் அவற்றின் பொருட்கள் இறை என்ற சொல்லில் இருந்து எவ்வாறு கிளைத்தன என்பதைப் பற்றியும் காணலாம்.

(1) இறையாகிய கண்ணிமையின் முதன்மைத் தொழில் கண்ணைப் பாதுகாப்பது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த கண்இமையைப் போலவே குடிமக்களைப் பாதுகாப்பதால் அரசனுக்கும் உலக உயிர்களைக் காப்பதால் கடவுளுக்கும் இறை என்ற பெயர் ஏற்பட்டது.

(2) கண்ணின் இமை போல பார்ப்பதற்கு தாழ்வாக இறங்கி இருப்பதால் வீட்டின் முகப்பில் உள்ள தாழ்வாரத்தையும் இறை என்றே அகராதிகள் குறிப்பிடுகின்றன.

(3) இறைக்குத்து: இதற்கு சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கீழ்க்காணும் பொருளைத் தருகிறது.

இறைக்குத்து iṟai-k-kuttu
, n. < இறை¹ +. Fixed gaze of the eyes at the approach of death; சாகுந் தருணத்திற் கண்விழி அசைவற்று நிற்கை. Loc.

சாகும் தருணத்தில் கண்ணிமை மேலே சென்று ஆடாமல் அசையாமல் கண்கள் ஒரே இடத்தில் வெறித்துப் பார்க்கும் நிலையினையே இறைக்குத்து என்று கூறுவர்.

(4) இறைகூர்தல்: இதன் பொருள் தங்குதல், தூங்குதல் என்பதாகும். கண்ணிமைகளை மூடி ஓய்வெடுக்கும் நிலையினை இது குறிக்கிறது.

(5) இறைத்தல் : கண்ணிமைத்தலின் போது இமையானது கீழும் மேலும் இயங்கும். கண்ணிமையினைப் போலவே கீழும் மேலுமாக இயக்குவதால் கிணறு போன்ற ஆழமான இடங்களில் இருந்து நீர் முதலியனவற்றை முகப்பதற்கும் இறைத்தல் என்ற பெயர் ஏற்பட்டது.

இறை ------> இறைத்தல் = இமையை மூடித் திறத்தல் -----> கீழும் மேலுமாக இயக்குதல் = நீர் இறைத்தல் போன்றவை.

நீர் இறைத்தலுடன் தொடர்புடைய பிற பொருட்கள் இறைகூடை (இறைவை), இறைப்பெட்டி மற்றும் இறைமரம் ஆகியவை.

(6) இறைஞ்சுதல்: பணிவாக நிற்கும்போதும் வணங்கும்போதும் கண்ணிமையானது தாழ்ந்தே இருக்கும். அடிக்கடி தாழ்ந்து எழும் இயல்புடைய கண்ணிமையினைக் குறிக்கும் இறை என்ற சொல்லில் இருந்து இறைஞ்சுதல் என்ற புதிய சொல் கீழ்க்கண்டவாறு பிறக்கிறது.

இறை ---- > இறைஞ்சுதல் = தாழ்தல், பணிதல், வணங்குதல்.

முடிவுரை:

இறை என்னும் சொல்லுடன் வளை என்ற சொல் இணைந்து வரும் பல பாடல்களை இக் கட்டுரையில் கண்டோம். இதைப் போலவே தோள் என்ற சொல்லுடன் தொடி என்ற சொல் பல பாடல்களில் இணைந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. எப்படி வளை என்ற சொல்லானது இறையின் மேல் பூசப்படும் அழகுப் பொருளைக் குறிக்கிறதோ அவ்வாறே இந்த தொடி என்பதும் தோளாகிய கண்ணின் வட்டப் பகுதியில்  பூசப்படும் அழகுப் பொருளாக இருப்பது எண்ணி வியக்கத்தக்கது. இதைப் பற்றி 'தோள் என்றால் என்ன?' என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
------------------------- வாழ்க தமிழ்!------------------------

திங்கள், 10 ஜூன், 2013

நாளும் வாளும்

முன்னுரை:

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். - 334.

தற்போதைய விளக்கங்கள்:

கலைஞர் உரை: வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்.

மு.வ உரை: வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.

சாலமன் பாப்பையா உரை: நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.

பரிமேலழகர் உரை: நாள் என ஒன்றுபோல் காட்டி ஈரும் வாளது உயிர் - நாள் என்று அறுக்கப்படுவதொரு காலவரையறைபோலத் தன்னைக் காட்டி ஈர்ந்து செல்கின்ற வாளினது வாயது உயிர், உணர்வார்ப் பெறின் - அஃது உணர்வாரைப் பெறின். (காலம் என்னும் அருவப்பொருள் உலகியல் நடத்தற் பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளால் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது, தானாகக் கூறுபடாமையின், நாள் என ஒன்றுபோல் என்றும் அது தன்னை வாள் என்று உணரமாட்டாதார் தமக்குப் பொழுது போகாநின்றது என்று இன்புறுமாறு நாளாய் மயக்கலின் 'காட்டி' என்றும் இடைவிடாது ஈர்தலான் 'வாளின் வாயது' என்றும், அஃது ஈர்கின்றமையை உணர்வார் அரியர் ஆகலின் உணர்வார்ப் பெறின் என்றும் கூறினார். உயிர் என்னும் சாதியொருமைப் பெயர் ஈண்டு உடம்பின்மேல் நின்றது. ஈரப்படுவது அதுவேயாகலின். வாள் என்பது ஆகுபெயர். இனி இதனை நாள் என்பதொரு பொருள்போலத் தோன்றி உயிரை ஈர்வதொருவாளாம் என்று உரைப்பாரும் உளர் :'என' என்பது பெயரன்றி இடைச் சொல்லாகலானும், 'ஒன்றுபோல் காட்டி' என்பதற்கு ஒரு பொருள் சிறப்பு இன்மையானும், 'அது' என்பது குற்றியலுகரம் அன்மையானும், அஃது உரையன்மை அறிக.).

மணக்குடவர் உரை: நாளென்பது இன்பந் தருவ தொன்று போலக் காட்டி, உயிரையீர்வதொரு வாளாம்: அதனை யறிவாரைப் பெறின். இஃது உயிரீரும் என்றமையால் இளமை நிலையாமை கூறிற்று.

உரைத்தவறுகள்:

மேற்காணும் உரைகளுள் முதல் நான்கு உரைகளில் 'நாள்' என்பதற்கு 'காலம்' என்று பொருள் கொண்டு விளக்கம் கூறியுள்ளனர். இது இங்கு பொருந்துமா என்றால் பொருந்தாது என்றே கூறலாம். ஏனென்றால் 'நாளென ஒன்றுபோல் காட்டி' என்று வள்ளுவர் கூறியுள்ளார். அதாவது இந்த 'நாள்' என்ற பொருளானது தன்னை வெளிப்படுத்திக் காட்டும் தன்மையது என்கிறார். ஆனால் காலத்திற்கோ தன்னை வெளிப்படுத்திக் காட்டும் ஆற்றலில்லை. அது ஒரு அருவப்பொருள். அதை யாரும் காணமுடியாது. எனவே வள்ளுவர் இக் குறளில் நாள் என்பதனை காலம் என்ற பொருளில் கையாளவில்லை என்பது தெளிவாகிறது.

மணக்குடவரோ நாள் என்பதற்கு இன்பம் என்ற பொருளைப் பயன்படுத்துகிறார். இப் பொருளும் இங்கே பொருந்தாது என்றே கூற்லாம். ஏனென்றால் நாளானது எல்லோருக்கும் இன்பம் தருவதில்லை. சிலருக்கு இன்பமும் சிலருக்கு துன்பமும் தருகிறது. இன்று ஒருவருக்கு இன்பமளித்த நாள் அவருக்கே அதே நாளில் துன்பம் தருகிறது. எனவே இங்கு நாள் என்ற சொல்லுக்கு இன்பம் என்று பொருள் கொள்வது பொருந்தவில்லை.

என்றால் இக் குறளில் வரும் நாள் என்ற சொல்லுக்கு வேறொரு புதிய பொருள் இருப்பது தெளிவாகிறது. அது என்னவென்று இங்கே காணாலாம்.

திருந்திய பொருள்:

இக் குறளில் வரும் நாள் என்ற சொல் ஒளி (பகல்) யினைக் குறிக்கும். இப் புதிய பொருளின்படி இக் குறளுக்கான திருந்திய புதிய விளக்கம் இதுதான்:

ஒரேபொருள்போல் தன்னை வெளிக்காட்டி நிற்கும் ஒளியே (பலவாகப் பிரிந்து ஒவ்வொரு உடலிலும் புகுந்து அவற்றின்) உயிரை வேரறுக்கும் வாளாக செயல்படுகின்றது என்ற உண்மையை அறிஞர்களே அறிவர். 

நிறுவுதல்:

நாள் என்ற சொல்லுக்கு தற்கால அகராதிகள் கீழ்க்காணும் பொருட்களைத் தருகின்றன.

சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி:

நாள் nāḷ
, n. 1. [T. nāḍu, M. nāḷ.] Day of 24 hours; தினம். சாதலொருநா ளொருபொழு தைத் துன்பம் (நாலடி, 295). 2. [T. nāḍu, M. nāḷ.] Time; காலம். பண்டைநாள் (கம்பரா. நட்பு. 43). 3. Lifetime, life; ஆயுள். நாளோடு வாள்கொடுத்த நம்பன் றன்னை (தேவா. 219, 10). 4. Auspicious day; நல்ல நாள். நாட்கேட்டுக் கல்யாணஞ் செய்து (நாலடி, 86). 5. Early dawn; காலை. நாண்மோர் மாறும் (பெரும்பாண். 160). 6. Forenoon; முற் பகல். நாணிழற்போல விளியுஞ் சிறியவர் கேண்மை (நாலடி, 166). 7. Lunar asterism; நட்சத்திரம். திங்களு நாளு முந்துகிளந் தன்ன (தொல். எழுத். 286). 8. Lunar day, period of the moon's passage through an asterism; திதி. (W.) 9. Freshness, newness; புதுமை. கோதையை நாணீராட்டி (சிலப். 16, 8). 10. Youth, juvenility, tenderness; இளமை. நௌவி நாண்மறி (குறுந். 282). 11. New-blown flower; அன்றலர்ந்த பூ. பொன்குறையுநாள் வேங்கை நீழலுள் (திணைமாலை. 31). 12. A symbolic expression of the last metrical foot of one syllable, in veṇpā.  n. Flower; புஷ்பம். (தக்கயாகப். 68, உரை.)

ஆனால் இக் குறளில் வரும் நாள் என்ற சொல்லுக்கு ஒளி என்ற புதிய பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இப் பொருள் எவ்வாறு பொருந்தும் என்று பார்ப்போம்.

நாள் என்ற சொல் ஒளி என்ற பொருளில் திங்களுடனும் மலருடனும் இணைத்து பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சில எடுத்துக்காட்டுக்கள் மட்டுமே கீழே தரப்பட்டுள்ளன.

மதி நாள் முற்றிய மங்கலத் திருநாள் - மணிமேகலை: 10-083
குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும்
குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும் - மணிமேகலை: 05-120
உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து, - புறநானூறு.
நாள்நிறை மதியத்து அனையை; - புறநானூறு.
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர் - பரிபாடல்.
நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல், - பரிபாடல்
நாள் மலர்க் கொன்றையும் பொலந் தார் போன்றன; - பரிபாடல்.
குவளைக் குறுந்தாள் நாள்மலர் நாறும் - குறுந்தொகை
பொன்குறையு நாள்வேங்கை நீழலுள் - திணைமாலை. 31

இவற்றில் நாள்மலர் என்பது ஒளிமிக்க புதிய மலரைக் குறிப்பதாகும்.

நாள் என்பது ஒளியை மட்டும் குறிக்காமல் ஒளிமிக்க நேரமான பகலையும் கீழ்க்காணும் பாடலில் குறிக்கிறது.

நாளங்காடியில் நடுக்கின்றி நிலைஇய -சிலப். 5, 62.

மேலே கண்டவற்றில் இருந்து நாள் என்பதற்கு ஒளி என்ற பொருளும் பொருத்தமாயுள்ளது என்பது அறியப்படுகிறது. இப் பொருளில் தான் வள்ளுவர் இக்குறளை இயற்றியுள்ளார் என்பதனை கீழ்க்காணும் கருத்தும் உறுதிசெய்கிறது.

கதிரவனின் ஒளிக்கதிர்கள் ஒன்றிணைந்து பார்ப்பதற்கு ஒருபொருளாய்த் தோன்றினாலும் உண்மையில் அது பல கோடிக் கதிர்களால் ஆனது என்பதனை யாவரும் அறிவோம். இந்த உண்மையைத் தான் ஒரு உவமையாக இக் குறளில் கையாண்டுள்ளார் வள்ளுவர். ஒருபொருளாய்த் தோன்றும் ஒளிக்கதிர்கள் உடலினுள் பாய்ந்து உயிரை அறுக்கும் வாள்களாக செயல்படுகின்றன என்று கூறுவதன் மூலம் ஒளிக்கதிர்களை வாட்களுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார். ஒளிக்கதிரும் வாளும் தம் கூர்மைப் பண்பினால் ஒப்புமையுடையவை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

முடிவுரை:

வாழ்க்கை நிலையாமை குறித்த உண்மையினை அழகான ஒப்புமை மூலம் இக் குறளில் கூறுகிறார் வள்ளுவர். நாள்தோறும் கதிரவன் தோன்றுகிறான். அதன் அழகினில் நாம் இன்புறுகிறோம். ஒளியும் வெப்பமும் பெற்று வளர்கிறோம். ஆனால் அதே கதிரவனின் கதிர்கள் தான் நம் உடலில் புகுந்து நம் உயிரை அறுக்கும் வாட்களாகவும் செயல்படுகின்றன என்பதை நாம் உணரத் தவறுகிறோம். நம் உடலானது கொஞ்சம் கொஞ்சமாக வளர்கின்ற அதேசமயத்தில் நம் உயிரானது கொஞ்சம் கொஞ்சமாக அறுபட்டுக் கொண்டிருக்கிறது என்ற முத்தான உண்மையை எல்லோராலும் அறிய முடியாது என்பதால் தான் அறிஞர்கள் மட்டுமே அறிவர் என்ற பொருளில் 'உணர்வார்ப் பெறின்' என்று கூறி முடிக்கிறார் வள்ளுவர்.
--------------------------------- வாழ்க தமிழ்!-------------------