வியாழன், 31 மே, 2018

இந்திய மொழிகளின் தாய் தமிழே ! - பகுதி 4


முன்னுரை:

இந்திய மொழிகளின் தாய் தமிழே என்ற தொடர் ஆய்வுக் கட்டுரையின் முதல் மூன்று பகுதிகளில் தலை முதல் மார்பு வரையிலான பல்வேறு உறுப்புக்களைக் குறிக்கின்ற தமிழ்ச்சொற்கள் பிற மாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து அந்த உறுப்புக்களையும் அதற்கடுத்த உறுப்புக்களையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப் படுகின்றன என்று பல சான்றுகளுடன் விரிவாகக் கண்டோம். இக் கட்டுரையின் நான்காம் பகுதியான இதில் வயிறு முதல் காலடி வரையிலான பல்வேறு உறுப்புக்களைப் பற்றியும் நகம், மயிர் ஆகியவற்றைப் பற்றியும் பல சான்றுகளுடன் விரிவாகக் காணலாம்.

வயிறும் இடுப்பும்:

வயிறும் இடுப்பும் அருகருகே இருப்பதால் ஒரே சொல்லைக் கொண்டு இரண்டு உறுப்புக்களையும் குறிக்கப் பயன்படுத்துவது பல மொழிகளிலும் வழக்கமாக இருக்கிறது. இத்தகைய பெயர்களை 'இடமாறு பெயர்கள்' என்று முன்னர் கட்டுரையில் கண்டிருக்கிறோம். இனி, தமிழில் வயிறையும் இடுப்பினையும் குறிக்கின்ற பெயர்ச்சொற்கள் பிற மாநில மொழிகளில் எவ்வாறு திரிந்து வயிற்றையோ இடுப்பினையோ குறிக்கப் பயன்படுகின்றன என்பதைப் பற்றிக் கீழே பார்க்கலாம்.

வயிறு >>> வயறு - மலையாளம்
அகடு >>> ஒட்டெ >>> கொ`ட்டெ - கன்னடம்
அகடு >>> ஒடீ - மராத்தி
அகடு >>> கோச்~ட - இந்தி, கு~ச்^ராத்தி

பொதுவாக வயிறு என்பது உண்ணும் உணவைச் சேமித்துவைத்துப் பின்னர் செரிமானம் செய்து அதனில் இருந்து உடலுக்குத் தேவையான சத்துக்களை எடுத்துக்கொண்டு எஞ்சியவற்றைக் கழிவுகளாகப் பிரிக்கின்ற பெரிய வேலையைச் செய்கின்ற ஓய்வில்லாத் தொழிற்சாலை ஆகும். உடலில் உயிர் தங்கி இருப்பதே உண்ணும் உணவை ஆதாரமாகக் கொண்டுதான் என்ற நிலையில், ஒருவன் தனது செல்வத்தை அழியாமல் பாதுகாத்து வைக்கும் இடம் பிறரது வயிறுதான் என்று கூறுகிறார் வள்ளுவர் கீழ்க்காணும் குறளில்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. - 226

அதாவது பசியென்று வருவோர்க்கு உண்ண உணவளித்துப் பசியாற்றுவதன் மூலம் தனது செல்வத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார். பொருள் வைப்புழி என்று வள்ளுவர் இக்குறளில் கூறுவது வயிற்றையே ஆகும். வயிற்றைப் பொருள் வைக்கும் இடமாக வள்ளுவர் உவமித்துக் கூறுவதைப் போல இக்காலத்திலும் நாம் கூறுவது வழக்கமாகவே இருக்கிறது. பெருத்திருக்கும் வயிற்றினைப் பார்த்துப் பானை போன்ற வயிறு என்று கூறுவது வழக்கம். பானையைப் போலப் பெருத்திருப்பதாலும் பானையில் பொருட்கள் வைப்பதைப் போல உணவுப் பொருட்களைப் போட்டு வைப்பதாலும் வயிற்றைப் பானையுடன் ஒப்பிடுகின்றனர். பானையைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களான  குழிசி, கடிஞை, பாண்டம் ஆகியவை பிற மாநில மொழிகளில் எவ்வாறு திரிந்து வயிறு / இடுப்பினைக் குறிக்கப் பயன்படுகின்றன என்பதைப் பற்றிக் கீழே காணலாம்.

குழிசி >>> குக்சி`
பாண்டம் >>> பண்ட` >>> பேட
கடிஞை >>> கடி, கடிக

சொல்வடிவம்      பேசப்படும் மொழிகள்

குக்சி` (வயிறு)     மலையாளம், இந்தி, செங்கிருதம், கு~ச்^ராத்தி, பஞ்சாபி`.
பண்ட` (வயிறு)    செங்கிருதம்
பேட (வயிறு)      இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி, ஒரியா.         
கடி, கடிக (இடுப்பு) மலையாளம், கன்னடம், இந்தி, செங்கிருதம், 
                  கு~ச்^ராத்தி, வங்காளம், ஒரியா.

பானையைக் குறிப்பதான மேற்கண்ட சொற்கள் மட்டுமின்றி, பானையைப் போலவே பொருட்களைச் சேமித்து வைக்க உதவுகின்ற பிற கலங்களான சாடி, தசும்பு, புட்டில், குதிர், பக்கு, துருத்தி போன்ற தமிழ்ச்சொற்களும் கீழ்க்காணும் பிற மாநில மொழிகளில் திரிபடைந்து வயிற்றையும் இடுப்பினையும் குறிக்கப் பயன்படுவது வியப்பினைத் தருகின்றது.

சாடி >>> ச^ட்டர
துருத்தி >>> துந்த >>> தோந்த >>> தொந்தி
குதிர் >>> உத`ர
பக்கு >>> பக்காச`ய, பூ^க்
புட்டில் >>> புட்ட >>> ப்ருச்~ட
புட்டில் >>> பொ`ட்டு^
தசும்பு >>> க்சு`தா^ (தலைகீழ்த் திரிபு) >>> சூதர்

சொல்வடிவம்       பேசப்படும் மொழிகள்

ச^ட்டர (வயிறு)     கன்னடம், இந்தி, செங்கிருதம், மராத்தி, 
                   கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`.
துந்த (வயிறு)       செங்கிருதம்
தோந்த (வயிறு)     இந்தி
தொந்தி (வயிறு)    கன்னடம், மலையாளம், இந்தி, செங்கிருதம், தெலுங்கு.
உத`ர (வயிறு)      மலையாளம், இந்தி, செங்கிருதம் மராத்தி, 
                   கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.
பக்காச`ய (வயிறு)  இந்தி, செங்கிருதம்
பூ^க் (வயிறு, பசி)  இந்தி, கு~ச்^ராத்தி
பொ`ட்டு^ (வயிறு)  தெலுங்கு
க்சு`தா^ (வயிறு)    இந்தி
புட்ட (இடுப்பு)      இந்தி
சூதர் (இடுப்பு)      இந்தி
ப்ருச்~ட (இடுப்பு)   செங்கிருதம், இந்தி.

சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்திய பல சொற்களில் கடும்பு என்ற சொல்லுமுண்டு. இச்சொல்லுக்குச் சுற்றம் என்ற பொருளையே தமிழ் அகராதிகள் கூறுகின்றன. ஆனால் இச்சொல்லுக்கு வயிறு என்ற பொருளுமுண்டு. உண்மையில் இச்சொல்லுக்குச் சுற்றம் என்ற பொருளைக் காட்டிலும் வயிறு என்ற பொருளே பல இடங்களில் மிகப் பொருத்தமாகவும் அமைகின்றது. கடும்பு என்னும் சொல்லுக்கு வயிறு என்னும் பொருள் மிகப் பொருத்தமாக அமைந்திருக்கும் சில சங்கப் பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

என்பு எழு மருங்கின் கடும்பின் கடும் பசி - புறம். 68
கடும்பின் கடும் பசி தீர - புறம் 163
பெரிதால் அத்தை என் கடும்பினது இடும்பை - புறம் 169
பாணர் காண்க இவன் கடும்பினது இடும்பை - புறம் 173

மேற்பாடல்களில் வரும் கடும்பின் பசி, இடும்பை என்பது வயிற்றுப் பசியாகிய துன்பத்தைக் குறிப்பதாகும். துன்பங்கள் அனைத்திலும் மிகப் பெரிய துன்பம் வயிற்றுப் பசியாகும். இதனால்தான், பசிவந்தால் பத்தும் பறந்துபோகும் என்பார்கள். பத்தும் பறக்கின்றதோ இல்லையோ பற்றும் அதாவது அன்பு, பாசம், நேசம் என்றெல்லாம் சொல்கிறோமே அந்தப் பற்று அனைத்தும் பறந்துவிடும் என்பது உண்மைதான். தமிழ் அகராதிகள் கடுப்பு என்னும் சொல்லுக்கு வயிறு என்ற பொருளைக் காட்ட மறந்துவிட்டாலும் பிறமாநில மொழிகள் அச்சொல்லைச் சற்றே திரித்து வயிற்றையும் இடுப்பையும் குறிக்கப் பயன்படுத்துவதனைக் கீழே பாருங்கள்.

கடும்பு >>> கடுப்பு
கடும்பு >>> கம்ப`ர >>> கமர

சொல்வடிவம்        பேசப்படும் மொழிகள்

கடுப்பு (வயிறு)       தெலுங்கு
கம்ப`ர (இடுப்பு)       மராத்தி
கமர (இடுப்பு)         இந்தி, மராத்தி, வங்காளம், பஞ்சாபி`.

தமிழ்மொழியில் இடுப்பினைக் குறிப்பதற்கு நடு, அரை போன்ற சொற்களையும் பயன்படுத்துகிறோம். இச்சொற்களும் பிற மாநில மொழிகளில் சற்றே திரிபடைந்து இடுப்பினைக் குறிக்கப் பயன்படுகின்றன. இதைப் பற்றியும் கீழே காணலாம்.

இடுப்பு >>> இடுப்பு - மலையாளம்
அரை >>> அர - மலையாளம்
நடு >>> நடு`, நெடு`வு - கன்னடம், நடு`மு - தெலுங்கு.

தொடையும் காலும்:

இடுப்புக்குக் கீழே இரண்டாகப் பிரிந்து செல்லும் கால்களின் மேல்பகுதியைத் தொடை என்று கூறுகிறோம். பல்வேறு பூக்களை இணைத்துச் செய்த மாலையினைத் தொடை என்று தமிழ் இலக்கியங்கள் கூறுவதைப் போல கால்களை இடுப்புடன் இணைக்கும் பகுதியாக விளங்குவதால் இவ் உறுப்புக்குத் தொடை என்ற பெயர் சாலப் பொருத்தமாகவே அமைந்துள்ளது. தொடை என்றும் துடை என்றும் தமிழில் அழைக்கப்படும் இவ் உறுப்பானது கீழ்க்காணுமாறு பிறமாநில மொழிகளில் குறிப்பிடப் படுகின்றது.

தொடை >>> தொடெ` - கன்னடம், தொட` - தெலுங்கு.
துடை >>> துட - மலையாளம்

பொதுவாக, ஆண்மக்களின் வலிமைக்குப் பேர்போன உடல் உறுப்புக்கள் இரண்டாகும். ஒன்று: உடலின் மேல்பகுதியில் அமைந்துள்ள தோள். இரண்டு: உடலின் கீழ்ப்பகுதியில் அமைந்திருக்கும் தொடை. ஒருவர் நடக்கும்போதோ ஓடும்போதோ அவரது உடலின் ஒட்டுமொத்த எடையைத் தாங்குவது தொடைப்பகுதி தான். தொடைகளில் வலிமை இல்லாதபோது ஒருவரால் கால்களை ஊன்றி நடக்கவோ ஓடவோ இயலாமல் போவதும் இதனால் தான். கால்களைத் தரையில் ஊன்றி நடக்க உதவும் இயற்கையான ஊன்று / ஊற்றுக்கோலாக விளங்கும் தொடைப் பகுதியினைக் குறிக்கப் பிறமாநில மொழிகள் ஊற்று என்னும் தமிழ்ச்சொல்லைச் சற்றே திரித்துப் பயன்படுத்துவதைப் பாருங்கள்.

ஊற்று >>> ஊறு - மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, 
           செங்கிருதம், கு~ச்^ராத்தி, வங்காளம்.

சங்கத் தமிழில் தொடை என்னும் உடல் உறுப்பினைக் குறங்கு என்ற சொல்லாலும் குறித்தனர். பெண்களைப் பொருத்தமட்டிலும் குறங்கு என்ற சொல் அவர்களது கண்ணிமையைக் குறித்திருக்க, ஆண்கள் மற்றும் விலங்குகளின் தொடையைக் குறிக்கவும் இச்சொல் பயன்பட்டிருக்கிறது. குறங்கு என்னும் தமிழ்ச்சொல்லானது பிறமாநில மொழிகளில் எப்படியெல்லாம் திரிந்து தொடை மற்றும் கால்பகுதியைக் குறிக்கப் பயன்படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.

குறங்கு >>> றாங்க~ >>> றான, சா^ங்க~, டாங்க~
குறங்கு >>> குற

சொல்வடிவம்       பேசப்படும் மொழிகள்

றாங்க~ (தொடை)   கு~ச்^ராத்தி
றான (தொடை)     இந்தி
சா^ங்க~ (தொடை)  இந்தி, கு~ச்^ராத்தி, ஒரியா
டாங்க~ (கால்)      இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி.
குற (கால்)         வங்காளம்  

காலும் காலடியும்:

சங்ககாலம் தொட்டு இன்றுவரையிலும் வழங்கப்பட்டு வரும் பல்வேறு தமிழ்ச் சொற்களில் கால் என்பதும் ஒன்றாகும். இச்சொல் பிற மாநில மொழிகளில் எப்படித் திரிந்து வழங்கப்படுகின்றது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கால் >>> கால் - மலையாளம், கன்னடம்,
கால் >>> காலு - தெலுங்கு

நடத்தல், நிற்றல், ஓடுதல், குதித்தல், தாவுதல், உதைத்தல் போன்ற பல்வேறு வினைகளைச் செய்வதற்குக் கால்கள் உதவி புரிந்தாலும் இவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க முதன்மைப் பணியாக நடத்தல் என்னும் இடப்பெயர்ச்சி வினையைச் சொல்லலாம். நடத்தல் என்னும் வினையைக் குறிப்பதான பெயர்தல் என்னும் வினைச்சொல்லானது .பிறமாநில மொழிகளில் எவ்வாறு மாற்றமடைந்து நடக்க உதவும் கால் மற்றும் காலடியைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப் படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.

பெயர் >>> கெ`ச்செ^ - கன்னடம். (பெயர் >>> கெ`ச`று என்று ஆவதைப் போல)
பெயர் >>> பைர் - இந்தி
பெயர் >>> பாய - இந்தி, மராத்தி, வங்காளம்.

தமிழில் கதி என்னும் பழஞ்சொல்லுண்டு. இச்சொல்லுக்குப் பல பொருட்கள் இருந்தாலும் நடை என்ற பொருளுமுண்டு. காற்றைப் போலப் பாய்ந்து செல்லும் வலிமையைக் கொண்ட குதிரையானது நடையேதும் இன்றித் தங்கியிருந்த நிலையைக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

கால் இயல் கலிமா கதி இன்றி வைகவும் - புறம் 229

சங்கத் தமிழில் நடையைக் குறிக்கப் பயன்பட்ட கதி என்னும் தமிழ்ச்சொல்லானது சற்றே திரிந்து நடக்க உதவும் காலினையும் காலடியினையும் குறிக்கக் கீழ்க்காணும் மொழிகளில் பயன்படுத்தப் படுகின்றது.

கதி >>> கத`ம் - இந்தி, செங்கிருதம், வங்காளம்.

கால் என்னும் சொல்லைப் போலவே அடி என்பதும் தமிழில் வழங்கப்பட்டு வரும் பழஞ்சொல்லாகும். தமிழ்மொழியில் காலடியைச் சுருக்கமாக அடி என்றே குறிப்பது வழக்கம். இச்சொல் பிறமாநில மொழிகளில் காலடியைக் குறிப்பதற்கு வழங்கப்படும் விதத்தைக் கீழே பார்க்கலாம்.

அடி >>> அடி` - மலையாளம், கன்னடம்
அடி >>> அடு`கு~ - தெலுங்கு

மனிதர்கள் உட்பட பலவகையான விலங்குகள் ஆகட்டும் பறவைகள் ஆகட்டும் அவை மண்ணில் நடக்கும்போது தமது கால்சுவடுகளை மண்ணில் விட்டுச் செல்வதைப் பார்த்திருக்கிறோம். மண்ணில் காணப்படும் கால்தடத்தினைக் கொண்டே என்னவகையான விலங்கு அங்கே நடந்து சென்றுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இப்படி ஒரு விலங்கின் அடையாளத்தினை மண்ணில் பதிவுசெய்ய உதவுவது அதன் காலடிகளே ஆகும் என்ற நிலையில், பதிதல் என்னும் சொல்லானது சற்றே திரிந்து பிற மாநில மொழிகளில் பதிதல் வினையைச் செய்யும் உறுப்பான காலடியைக் குறிக்கப் பயன்படுத்தப் படுவது வியப்பூட்டுவதாக உள்ளது.

பதி >>> பாத` - மலையாளம், செங்கிருதம், வங்காளம், தெலுங்கு, கன்னடம், இந்தி.

பதிதல் வினைக்குரிய காலடிகள் போற்றுதலுக்கு உரியனவாகவும் திகழ்கின்றன. தற்காலத்தில் சில மனிதர்களின் காலடிகளைத் தொட்டு வணங்கி வழிபடுகிறோம். ஆனால் சங்ககாலத்தில் கந்து எனப்படும் மரத்தின் கால்பகுதியில் கடவுள் உறைவதாக நம்பி அதனை வழிபட்டார்கள். அக் கந்தின் காலடியில் பூக்களை நீருடன் சொரிந்தும் சந்தனம் முதலான நறுமணப் பொருட்களைப் பூசியும் பணிந்து எழுந்தான் சங்கத் தமிழன். இப்படி இறையை வணங்கும் செயலினைப் பரவுதல் / பராவுதல், சார்த்துதல் ஆகிய சொற்களால் குறிப்பிடுகின்றன சங்ககால இலக்கியங்கள். ஒருசில பாடல்கள் கீழே சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

பராவு அரு மரபின் கடவுள் காணின் - மலை 230
வழிபட்ட தெய்வம் தான் வலி என சார்ந்தார்கண் - கலி 132

பரவுதலுக்கும் சார்த்துதலுக்கும் உரியதாகிப்போன காலடியைக் குறிக்க இத் தமிழ்ச்சொற்களைச் சற்றே திரித்துப் பிறமாநில மொழிகள் பயன்படுத்துவதைக் கீழே பார்க்கலாம்.

பரவு >>> பாவ்ம் - இந்தி
சார் >>> சரண் - செங்கிருதம், இந்தி, மலையாளம், வங்காளம், தெலுங்கு, கன்னடம்.

நகம்:

கைவிரல்கள் மற்றும் கால்விரல்களின் முடிவில் காணப்படும் மிகச்சிறிய புற உறுப்புக்களை நாம் நகம் என்ற சொல்லால் தற்காலத்தில் குறிப்பிட்டு வருகிறோம். பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் ஒன்றான கம்பராமாயணத்தில் தான் நகம் என்ற சொல்லின் பயன்பாடு முதன்முதலாகக் காணப்படுவதால் நகம் என்ற சொல் வடமொழியின் திரிபு என்று கூறுவார் உளர். இவ்வாறு கூறுவோர் இச்சொல் நுகம் என்ற தமிழ்ச்சொல்லின் திரிபுதான் என்பதை அறியாமல் கூறுகின்றனர். இதைப்பற்றி விளக்கமாக இங்கே காணலாம்.

சங்ககாலத் தமிழன் நகத்தைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்திய சொல் உகிர் என்பதாகும். இச்சொல் பிற மாநில மொழிகளில் கீழ்க்காணுமாறு திரிந்து நகத்தைக் குறிக்கப் பயன்படுகின்றது.

உகிர் >>> உகு~ரு >>> கோ~ரு

சொல்வடிவம்      பேசப்படும் மொழிகள்

உகு~ரு            கன்னடம்
கோ~ரு            தெலுங்கு

தமிழில் நுகம் என்ற பழஞ்சொல்லுண்டு. இச்சொல்லுக்கு மாடுகளின் கழுத்தின்மேல் இடப்படும் வளைந்த மரக்கழி என்று மட்டுமே இற்றைத் தமிழ் அகராதிகள் பொருள் உரைக்கின்றன. உண்மையில் இச்சொல் இக்கழியினை மட்டுமின்றி, இக்கழியின் நடுப்பகுதியில் இருந்து பின்னோக்கி நீண்டுசெல்லும் தடி (நுகத்தடி) யினையும் அத்தடியின் முடிவில் மண்ணை உழுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கூரிய முனை கொண்ட கலப்பையினையும் ஆகுபெயராய்க் குறிக்கும். நுகம் என்ற சொல்லானது கலப்பையின் கூர்முனையினைக் குறிக்கின்ற பொருளில் கீழ்க்காணும் பாடலில் பாடப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

கொடுமேழி நசை உழவர் நெடுநுகத்துப் பகல் போல
நடுவு நின்ற நல் நெஞ்சினோர் - பட். 206

' வளைந்த கலப்பையினைக் கொண்ட உழவர்கள் நீண்ட நுகத்தினைக் கொண்டு செய்த பகுத்தலைப் போல நடுநிலைமை கொண்ட நல்ல நெஞ்சத்தினை உடையவர்கள் ' என்பது இதன் பொருளாகும். கலப்பையின் கூர்முனை கொண்டு மண்ணில் கிழிக்கப்படும் கோடானது எப்பக்கமும் சாயாமலும் வளையாமலும் நேராக இருக்கும் தன்மையது ஆதலால் இதனை நேர்மை கொண்ட நெஞ்சத்துடன் ஒப்பிட்டு இப்பாடல் வரிகள் கூறுகின்றன. இப்பாடலில் வரும் உவமையின் விளக்கத்தில் இருந்து நுகம் என்ற சொல்லுக்குக் கலப்பையின் கூர்முனை என்ற பொருள் இருப்பது தெரியவருகிறது. அதுமட்டுமின்றி, கீழ்க்காணும் பாடல்களில் வரும் நுகம் என்ற சொல்லானது கூரியமுனை கொண்ட படைக்கருவியான வேல் என்னும் பொருளில் வந்துள்ளது.

நுகம் படக் கடந்து நூழிலாட்டி - மலை 87
நுகம் படக் கடக்கும் பல் வேல் எழினி - குறு 80
நீயும் நும் நுகம் கொண்டு இனும் வென்றோய் - பதி. 63

போரின்போது வீசப்பட்ட கூர்முனைகொண்ட பல வேல்களைக் கடந்துசென்று எதிரிகளைக் கொன்றுகுவித்த செய்திகளை மேற்பாடல் வரிகள் எடுத்து இயம்புகின்றன. மனிதர்கள் போரின்போது கூரிய வேல்கொண்டு தாக்குவதைப் போல விலங்குகளும் பறவைகளும் பிறவற்றுடன் சண்டையிடும்போது தமது கால் / கை விரல்களின் ஈற்றில் உள்ள கூரிய உகிர்கொண்டு தாக்கும். இவ்வாறு கூர்மைப் பண்பு மற்றும் பயன்பாடு போன்றவற்றில் கலப்பை , வேல் ஆகியவற்றுடன் இருக்கும் ஒப்புமையால் நுகம் என்ற தமிழ்ச்சொல்லே நகம் என்று மருவி விரல்களில் இருக்கும் கூரிய உகிரினைக் குறிக்கப் பயன்பட்டது என்று உறுதியாகக் கூறலாம். இனி, நகம் என்ற தமிழ்ச்சொல்லானது பிறமாநில மொழிகளில் எவ்வாறு திரிந்து உகிரினைக் குறிக்கப் பயன்படுகின்றது என்று கீழே காணலாம்.

நுகம் >>> நகம் >>> நக >>> நகு~ >>> நாக்குன்

சொல்வடிவம்       பேசப்படும் மொழிகள்

நகம்                மலையாளம்
நக                  தெலுங்கு, கன்னடம், இந்தி, செங்கிருதம், மராத்தி, 
                     கு~ச்^ராத்தி, வங்காளம், ஒரியா.
நகு~                 பஞ்சாபி`
நாக்குன்             இந்தி

மயிர்:

சங்ககாலம் தொட்டு இன்றுவரை பயன்பாட்டில் இருந்துவருகின்ற பல்வேறு தமிழ்ச்சொற்களில் ஒன்றாக மயிர் என்னும் சொல்லையும் கூறலாம். முடி, கூந்தல், அளகம் ஆகியவை மயிரைக் குறிக்கும் பிற சொற்களாகும். இச்சொற்கள் பிறமாநில மொழிகளில் வழங்கும் விதங்களைக் கீழே பார்க்கலாம்.

முடி >>> முடி - மலையாளம்
கூந்தல் >>> கூந்தல் - மலையாளம்
கூந்தல் >>> கூத`லு - கன்னடம்
அளகம் >>> அளக - கு~ச்^ராத்தி

பொதுவாக, மனிதர்களின் தலைமயிர் என்பது நிறம் சார்ந்த ஒன்றாகும். கருநிறம், வெண்ணிறம், செம்பட்டை நிறம் என்று பல நிறங்களில் தலைமயிர் காணப்படுவதுண்டு. மனிதர்களின் தலைமயிரின் நிறமானது இனம், வயது மற்றும் பராமரிப்பிற்கு ஏற்ப மாறுவதுண்டு. சரியாக எண்ணை பூசிப் பராமரிக்கப்படாத தலைமயிர் செம்பட்டை நிறம் கொள்வதும் வயது முதிரும்போது வெண்ணிறமாய் மாறுவதும் கண்கூடு. மயிர் என்னும் சொல்லில் வரும் மய் (மை) என்னும் வேர்ச்சொல் நிறம் சார்ந்த ஒன்றாக இருப்பது ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு மனிதர்களின் தலைமயிரானது நிறத்துடன் வெகுவாகத் தொடர்புடைய நிலையில், நிறத்தைக் குறிக்கும் பல்வேறு தமிழ்ச்சொற்கள் பிறமாநில மொழிகளில் சற்றே திரிபடைந்து மயிரைக் குறிக்கப் பயன்படுகின்றன என்பது வியப்பூட்டும் செய்தியாகும்.

கேழ் >>> கேச - மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி, செங்கிருதம், ஒரியா
நிறம் >>> ரோம, லோம - மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, செங்கிருதம், வங்காளம்
வண்ணம் >>> வேணி - மலையாளம், செங்கிருதம்
உருவம் >>> ரோவாம் - இந்தி

மண்ணில் விளையும் புற்களைப் போலத் தலையிலும் தாடைப்பகுதியிலும் மயிரானது பரவலாகவும் அடர்ந்தும் வளர்வதால், மயிரினைப் புல்லுடன் ஒப்பிட்டுக் கூறுவது தமிழ் இலக்கிய வழக்கம். கீழ்க்காணும் சங்கப் பாடல்கள் ஆண்மக்களின் தலைமயிரினைப் புல்லுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றன.

புல் உளை குடுமி புதல்வன் பயந்து - அகம் 176
புல் உளை குடுமி புதல்வன் பன் மாண் - புறம் 160
புல் உளை குடுமி புதல்வன் தந்த - புறம் 273

மேற்பாடல்களில் வரும் புல் உளைக் குடுமி என்பது புல்லைப் போலத் தொங்குகின்ற தலைமயிரினைக் குறிப்பதாகும். கீழ்க்காணும் சங்கப் பாடல்கள் ஆண்மக்களின் தாடைப்பகுதியில் வளர்ந்துள்ள ஒழுங்கற்ற மயிரினைப் புல்லுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றன.

புலம் புக்கனனே புல் அணல் காளை - புறம் 258
தோல் மிசை கிடந்த புல் அணலோனே - புறம் 310
புலி போத்து அன்ன புல் அணல் காளை - பெரும் 138

மேற்பாடல்களில் வரும் புல் அணல் என்பது புல்லைப் போன்று ஒழுங்கற்று வளர்ந்திருக்கும் தாடி மயிரைக் குறிப்பதாகும். இவ்வாறு மென்மை, பரவலாகத் தோன்றி வளர்தல் மற்றும் வளையும் தன்மை ஆகிய பண்புகளால் புல்லுடன் பெரிதும் ஒத்திருப்பதால், புல் என்ற தமிழ்ச்சொல்லையே சற்று திரித்து மயிரினைக் குறிக்கப் பிறமாநில மொழிகள் பயன்கொண்டன என்று கூறலாம்.

புல் >>> பா`ல - இந்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.
புல் >>> வால - பஞ்சாபி`.

முடிவுரை:

உடல் உறுப்புக்களைக் குறிப்பதான தமிழ்ச்சொற்கள் பலவும் இந்தியாவின் பிற மாநில மொழிகளில் திரிபுற்று வழங்கப்படுவதை மேலே விரிவாகக் கண்டோம். வடமொழி உட்பட பிற மாநில மொழிகளின் ஒவ்வொரு சொல்லுக்குமான வேர் தமிழில் இருப்பது பெருமையையும் அதேசமயம் பெரும்வியப்பையும் அளிப்பதாக உள்ளது. அதுமட்டுமின்றி, பல தமிழ்ச்சொற்களுக்கு இற்றைத் தமிழ் அகராதிகள் சுட்டிக்காட்டாத பல புதிய பொருட்கள் இருப்பதையும் இக்கட்டுரையில் கண்டோம். இப்புதிய பொருட்களைத் தமிழ் அகராதிகள் கூடிய விரைவில் சேர்த்துக்கொண்டு தமிழ்மொழிக்கு வளம்சேர்க்க வேண்டும் என்று இக்கட்டுரை முன்மொழிகிறது.


வியாழன், 24 மே, 2018

இந்திய மொழிகளின் தாய் தமிழே ! - பகுதி 3


முன்னுரை:

இந்திய மொழிகளின் தாய் தமிழே என்ற தொடர் ஆய்வுக் கட்டுரையின் முதல் இரண்டு பகுதிகளில் தலையில் அமைந்துள்ள பல்வேறு உறுப்புக்களைக் குறிக்கும் தமிழ்ப்பெயர்கள் இந்தியாவின் பிறமாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து அவ் உறுப்புக்களையும் அவற்றுக்கருகில் உள்ள உறுப்புக்களையும் குறிக்கப் பயன்படுகின்றது என்று கண்டோம். இக் கட்டுரையின் மூன்றாம் பகுதியான இதில் கழுத்து முதல் மார்பு வரையிலான பல்வேறு உறுப்புக்களின் தமிழ்ப்பெயர்கள் பிற மாநில மொழிகளில் எவ்வாறு திரித்து வழங்கப்படுகின்றன என்பதைப் பற்றி விரிவாகக் காணலாம்.

கழுத்து:

சங்ககாலம் தொட்டு இன்றுவரையிலும் தமிழக மக்களிடையே புழக்கத்தில் இருந்துவரும் பல உறுப்புச்சொற்களில் கழுத்தும் ஒன்றாகும். தலையினை உடலுடன் இணைக்கும் பகுதியாக விளங்கும் இதில்தான் குரலை உருவாக்கும் குரல்வளை இருக்கிறது. இதற்கு மிடறு, தொண்டை என்று பிற பெயர்களும் தமிழில் உண்டு. இத் தமிழ்ச்சொற்கள் பிற மாநில மொழிகளில் எவ்வாறு திரிபுற்று வழங்கப்படுகின்றன என்பதைக் கீழே காணலாம்.

கழுத்து >>> கழுத்து - மலையாளம்
கழுத்து >>> க~ர்த`ன் - இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, பஞ்சாபி`
குரல்வளை >>> கொருலு - கன்னடம்
குரல்வளை >>> க்~ரீவ - ஒரியா, செங்கிருதம், கு~ச்^ராத்தி
மிடறு >>> மெடா - தெலுங்கு
தொண்டை >>> தொண்ட - மலையாளம்
தொண்டை >>> தோடோ - கு~ச்^ராத்தி

கல்லுதல் என்னும் தமிழ்ச் சொல்லுக்குத் தமிழ் அகராதிகள் காட்டாமல் விடுத்த 'ஒலித்தல்' என்ற பொருளும் உண்டென்று 'திருக்குறள் கூறும் புலவர் தொழில் எது?.' என்ற ஆய்வுக்கட்டுரையில் பல சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது. கல்லுதல் என்னும் சொல்லை அடிப்படையாகக் கொண்டு எழுந்த களம் (லகர / ளகர மாறுபாடு) என்ற சொல்லானது ஒலி தோன்றும் இடங்களைக் குறிக்கப் பயன்பட்டது. களம் என்ற சொல்லானது போர்க்களம், ஏர்க்களம், ஆடுகளம், விழாக்களம் போன்று பேரொலி எழுகின்ற இடங்களைக் குறிக்கப் பயன்பட்டது இந்த அடிப்படையில் தான் எனலாம். அதுமட்டுமின்றி, களம் என்ற சொல்லானது ஒலிதோன்றும் இடமான தொண்டையைக் குறிக்கவும் பயன்பட்டுள்ளது. களம் என்னும் தொண்டைப்பகுதியில் ஒலியானது ஊற்றுபோலத் தோன்றிப் பெருகுவதால் அதனை ஊற்றுக்களம் என்று அடைகொடுத்துக் கீழ்க்காணும் கலித்தொகைப் பாடல் கூறுவதைப் பாருங்கள்.

காற்று போல வந்த கதழ்விடைக் காரியை
ஊற்றுக்களத்தே அடங்கக் கொண்டு அட்டு - கலி. 103

ஏறுகோள் விழாவின்போது காற்றைப் போலப் பாய்ந்துவந்த ஒரு காளைமாட்டின் கழுத்தை வீரனொருவன் வலுவாகக் கட்டிக்கொண்டு அதனை வென்ற செய்தியினை மேற்பாடல் வரிகள் கூறுகின்றன. ஊற்றுக்களம் என்ற தமிழ்ச்சொல்லானது பேச்சுவழக்கில் கீழ்க்கண்டவாறு திரிந்தும் குரல்வளையைக் குறிக்கப் பயன்படுகின்றது. கழற்று என்பது பேச்சுவழக்கில் கழட்டு என்றாவதைப் போல,

ஊற்றுக்களம் >>> ஊட்டுக்களம் >>> ஊட்டி என்றாகிறது.

தொண்டையைக் குறிக்கப் பயன்பட்டுவந்த களம் என்ற தமிழ்ச்சொல்லானது பிறமாநில மொழிகளில் எவ்வாறெல்லாம் திரிந்து கழுத்து / தொண்டையைக் குறிக்கப் பயன்படுகின்றது என்று கீழே பார்க்கலாம்.

களம் >>> க~ளா, க~லா - மலையாளம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.

தமிழில் கணம் என்ற சொல்லுண்டு. இச்சொல்லுக்கு ஒலி என்ற பொருளுமுண்டு. ஆனால், கணம் என்றால் கூட்டம் என்ற பொருளைக் கூறிய தமிழ் அகராதிகள், கூட்டம்கூடும்போது ஒலி உண்டாவது தவிர்க்க இயலாது என்பதை மறந்துவிட்டதால், கணம் என்ற சொல்லுக்கு ஒலி என்ற பொருளைக் கூறத் தவறிவிட்டன. கணம் என்ற சொல்லுக்கு ஒலி என்ற பொருளுண்டு என்பதைக் காட்டும் சில இலக்கியப் பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பொலம்தொடி போல மின்னி கணம்கொள் இன்னிசை முரசின் இரங்கி - நற் 197
கணம்கொள் அருவி கான்கெழு நாடன் - ஐங் 183, அகம் 22
கணம்கொள் வண்டின் அம்சிறைத் தொழுதி - அகம் 204

மேற்பாடல்களில் வரும் கணம்கொள் என்பது ஒலிக்கின்ற என்ற பொருளில் வந்துள்ளது. ஒலியைக் குறித்துவந்த கணம் என்ற தமிழ்ச்சொல்லானது பிறமாநில மொழிகளில் எப்படியெல்லாம் திரிந்து என்னென்ன பொருட்களையெல்லாம் குறிக்கப் பயன்படுகிறது என்று கீழே பார்க்கலாம்.

கணம் (ஒலி) >>> க்ச~ண = நொடிப்பொழுது. (கையின் பெருவிரல் நடுவிரல் கொண்டு ஓசை உண்டாக்கும் பொழுது.)
கணம் (ஒலி) >>> கண்ட, கண்ட`, கண்டு, க^ண்டுலு,  = ஒலியின் பிறப்பிடமாகிய குரல்வளை.
கணம் (ஒலி) >>> க^ண்ட, க^ண்டீ, கெ^ண்டெ = கணீர் கணீர் என்று ஒலியெழுப்பும் மணி.

சொல்வடிவம்        பேசப்படும் மொழிகள்

கண்ட, கண்ட`        இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், 
                     பஞ்சாபி`, ஒரியா.
கண்டு, கண்டமு      தெலுங்கு
க^ண்டுலு             கன்னடம்
கண்டம்              மலையாளம்
க^ண்ட, க^ண்டீ       தெலுங்கு, இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, 
                     வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.
கெ^ண்டெ            கன்னடம்

தோள்:

கழுத்தினையும் கையினையும் இணைக்கும் பகுதியாக விளங்கும் உறுப்பினைத் தோள் என்றும் தோள்பட்டை என்றும் கூறிவருகிறோம். சில சமயங்களில் தோள் என்பது கையின் மேல்பகுதியைக் குறிக்கவும் பயன்படுகின்றது. தோள் என்ற தமிழ்ச்சொல் எவ்வாறு திரிந்து பிற மொழிகளில் அவ் உறுப்பினைக் குறிக்கப் பயன்படுகின்றது என்று பார்க்கலாம்.

தோள் >>> தோள் - மலையாளம்

தோள் என்று சொன்னாலே அதன் வலிமை தான் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வரும். எடைமிகுந்த பொருட்களைச் சுமப்பதற்கும் பை முதலானவற்றை மாட்டிக் கொள்வதற்கும் மிகவும் உதவியாய் இருப்பது வலிமை மிக்க தோள்களே ஆகும். இந்த தோள்களைப் போலவே சங்ககாலத்தில் கந்து என்னும் பொருளை மக்கள் பயன்படுத்தி வந்தனர். மண்ணில் நன்கு ஆழமாக ஊன்றியிருக்கும் / ஊன்றப்பட்ட பெரிய அடிமரம் அல்லது கல்தூண் போன்ற கந்தானது மதங்கொண்ட யானையையே பிணித்து வைத்துக் கொள்ளும் வலிமை உடையது. யானையைக் கந்துடன் சேர்த்துப் பிணித்திருந்த செய்தியைக் கூறும் சில சங்கப்பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின் - பெரும் 396
கந்து பிணி யானை அயா உயிர்த்து அன்ன - நற் 62
மைந்து மலிந்த மழகளிறு கந்துசேர்பு நிலைஇ - புறம். 22

சில நேரங்களில் கடவுள் வாழும் இடமாகவும் விலங்குகள் போகிற போக்கில் தமது உடலை உரசிக்கொள்ளும் இடமாகவும் விளங்கிய இக் கந்தினை அதன் வலிமை மற்றும் பிணித்தல் பயன்பாட்டு ஒப்புமை கருதித் தோளுடன் ஒப்பிட்டுக் கூறுவது வழக்கம். கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடலில் தோளினைக் கந்துடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பதனைக் காணலாம்.

ஆரியர் பிடிபயின்று தரூஉம் பெரும்களிறு போல
தோள் கந்து ஆகக் கூந்தலின் பிணித்து அவன் - அகம். 276

ஆரியர்கள் பெண்யானையைக்கொண்டு அதனுடன் சேர்த்து ஆண்யானையைப் பிணித்துக் கொணர்தலைப் போல தலைவனின் தோள் கந்தாகவும் தனது கூந்தலை அதனுடன் பிணித்து அவனைக் கொணர்வேன் என்று மேற்பாடல் வரிகள் கூறுகின்றன. தோளுடன் ஒப்புமையாகக் கருதப்பட்ட கந்து என்ற தமிழ்ச்சொல்லானது இந்தியாவின் பிற மாநில மொழிகளில் திரிபடைந்து தோளைக் குறிக்கப் பயன்படுவதைப் பற்றிக் கீழே காணலாம்.

கந்து >>> ச்`கந்த`, கந்தா^, கந்த`ர

பேசப்படும் மொழிகள்: மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.

தமிழில் புயல் என்ற பழஞ்சொல்லுண்டு. இச்சொல்லுக்கு மேகம், நீர், கொடுங்காற்று ஆகிய பொருட்களைத் தமிழ் அகராதிகள் கூறுகின்றன. இவற்றில் கொடுங்காற்று என்பது வலிமை மிக்க காற்றினைக் குறிக்கும். பெரிய பெரிய மரங்களையே வேரோடு புய்க்கும் அதாவது பெயர்த்து எறியக் கூடிய வலிமை படைத்த காற்றாதலால் இதற்குப் புயல் என்ற பெயர் ஏற்பட்டது எனலாம்.

புய்                >>> புயல்
(பெயர்த்தல்)           (வலிய காற்று)

இந்தப் புயல் காற்றைப் போலவே ஒரு இடத்தில் இருப்பதைப் புய்த்து / பெயர்த்து எறியும் வேலையைச் செய்யக் கூடியது கைகள் ஆகும். பொதுவாக, ஒருவரது கைகளின் வலிமையினை அதன் தோள் பகுதி அதாவது மேல்பகுதியின் பெருத்த தன்மையே காட்டிக்கொடுத்து விடும். காற்றடைத்த பந்துபோலப் பெருத்திருக்கும் தோள்கள் மிக்க வலிமை கொண்டவை. புயல்காற்று சுழன்று சுழன்று வீசி அனைத்தையும் பெயர்த்து எறிவதைப் போல வலிமைமிக்க தோள்கள் போர்க்களத்தில் சுழன்று சுழன்று எதிரிகளைப் பெயர்த்தெறியும். வலிமையும் பெயர்த்தெறியும் தன்மையும் கொண்டதால் தோள்களுக்குப் புயம் என்ற பெயர் ஏற்பட்டது எனலாம்.

புய்                  >>> புயம்
(பெயர்த்தல்)             (வலிய தோள்)

சங்க இலக்கியங்களிலும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும் புயம் என்ற சொல் இல்லை என்றாலும் சிலப்பதிகாரத்தில் புயம் என்ற சொல் தோள் என்ற பொருளில் கீழ்க்காணும் பாடலில் வருகிறது.

அணிமணி புயத்துத் தாங்கினன் ஆகி தகைமையின் செல்வுழி - வஞ்சி 26.

வலிமை மற்றும் பெயர்த்தெறியக் கூடிய தன்மையின் ஒப்பீட்டால் வலிய தோள்களை புயல் காற்றுடன் ஒப்பிடுவது இலக்கிய வழக்கம். சினம் கொண்டு வீசிப் பெயர்க்கின்ற புயலைப் போலப் போர்க்களத்தில் எதிரிகளைப் பெயர்க்கின்ற வலிமை கொண்டவன் என்று மன்னனுடைய திரண்ட தோள்களின் வலிமையைப் பற்றிக் கீழ்க்காணும் பதிற்றுப்பத்தின் பாடல்வரி கூறுகிறது. 

பெரும் சினப் புயல் ஏறு அனையை - பதி. 51

இவ்வாறு புய் என்னும் தமிழ்ச்சொல்லை அடிப்படையாய்க் கொண்டு எழுந்ததும் புயலுடன் ஒப்புமை உடையதுமான புயம் என்ற தமிழ்ச் சொல்லானது இந்தியாவின் பிற மாநில மொழிகளில் எவ்வாறு திரிபடைந்து தோளைக் குறிக்கப் பயன்படுகிறது என்று கீழே காணலாம்.

புயம் >>> பு^ச^ம் >>> பு^ச்^

பேசப்படும் மொழிகள்: மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.

கை:

ஓரெழுத்து ஒருமொழியாகத் தமிழில் பன்னெடுங்காலமாகப் பயன்பாட்டில் இருந்துவரும் பல சொற்களில் கையும் ஒன்று. இச்சொல்லுக்கு உடல் உறுப்பு உட்பட செயல், உதவி போன்ற பொருட்களையும் தமிழ் அகராதிகள் கூறுகின்றன. காரணம், ஒரு செயலைச் செய்யவோ உதவி புரியவோ முதல் தேவை கை தான். கை என்னும் தமிழ்ச்சொல் பிற மாநில மொழிகளில் எவ்வாறு திரிந்து வழங்கப்படுகின்றது என்பதை முதலில் பார்க்கலாம்.

கை >>> கை - மலையாளம், கன்னடம்.
கை (கய்) >>> க`ச்`த >>> கா`த்

சொல்வடிவம்         பேசப்படும் மொழிகள்

க`ச்`த                 மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, செங்கிருதம், 
                      மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.
கா`த்                  இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, பஞ்சாபி, ஒரியா.

கை என்னும் சொல்லுக்குச் செயல் என்ற பொருளும் உண்டென்று மேலே கண்டோம். செயலைக் குறிப்பதான பல்வேறு தமிழ்ச்சொற்கள் பிற மாநில மொழிகளில் எவ்வாறு திரிந்து (செயலைச் செய்ய உதவும்) கையினைக் குறிக்கப் பயன்படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.

செயல் >>> செய்யி - தெலுங்கு
பணி >>> பாணி - மலையாளம், கன்னடம், செங்கிருதம், மராத்தி, வங்காளம்.
கருமம் >>> கர - மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, செங்கிருதம், மராத்தி, வங்காளம்.

விரல்:

சங்ககாலத் தமிழர்கள் முதல் இக்காலத் தமிழர்கள் வரையிலும் மிகப் பரவலாகப் பயன்படுத்திய பல தமிழ்ச்சொற்களுள் விரலும் ஒன்றாகும். உள்ளங்கையில் இருந்து ஐந்து பிரிவுகளாக நீண்டிருக்கும் இவ் உறுப்புக்களின் உதவியின்றி கையினால் ஒரு பயனும் இல்லை எனலாம். விரல் என்ற தமிழ்ச்சொல்லின் திரிபுகள் எந்தெந்த மொழிகளில் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்று கீழே காணலாம்.

விரல் >>> விரல் - மலையாளம்
விரல் >>> வேலு - தெலுங்கு
விரல் >>> பெ`ரலு >>> பெ`ட்டு >>> போ`ட

சொல்வடிவம்          பேசப்படும் மொழிகள்

பெ`ரலு, பெ`ட்டு        கன்னடம்
போ`ட                 மராத்தி

தமிழில் அங்கை என்னும் அழகிய பழஞ்சொல்லுண்டு. இச்சொல்லுக்கு உள்ளங்கை எனும் பொருளையே இற்றைத் தமிழகராதிகள் கூறியுள்ளன. ஆனால் இச்சொல்லுக்கு உள்ளங்கை என்பது மட்டுமே பொருளன்று; உள்ளங்கையில் இருந்து பிரிந்து செல்லும் விரல்களையும் இச்சொல் குறிக்கும். கீழ்க்காணும் சங்கப் பாடல்களில் வரும் அங்கை என்பது விரல்கள் என்ற பொருளில் வந்துள்ளது.

திரு முகம் அவிழ்ந்த தெய்வ தாமரை
ஆசு இல் அங்கை அரக்கு தோய்ந்து அன்ன
சே இதழ் பொதிந்த செம்பொன் கொட்டை - சிறு 74

அழகிய முகம் போல அவிழ்ந்த தாமரைமலரில் செந்நிறம் தோய்ந்த கைவிரல்களைப் போலச் சிவந்த இதழ்கள் சூழ்ந்திருக்க நடுவில் செம்பொன் நிறத்தில் கொட்டையானது பொதிந்து இருந்ததாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன. அவிழ்ந்த கோடல் மலரின் இதழ்களைக் கைவிரல்களாகக் கீழ்க்காணும் பாடலும் ஒப்பிடுவதைப் பார்க்கலாம்.

கோடல் குவி முகை அங்கை அவிழ - முல் 95

கைவிரல்களை மலரின் இதழ்களுடன் ஒப்பிடுவது தமிழ்மொழியின் வழக்கம் என்றால் செடியில் பூத்த இளம் தளிர் இலைகளுடன் ஒப்பிடுவது வடமொழியின் வழக்கம் போலும். கையில் பூத்த தளிர்கள் என்ற பொருளில் கரபல்லவ என்னும் பெயரால் விரல்களைக் குறிப்பிடுகிறது வடமொழி என்று அழைக்கப்படும் செங்கிருத மொழி.

மேற்கண்ட சான்றுகளின்படி, கைவிரல்களைக் குறிப்பதான அங்கை என்னும் தமிழ்ச்சொல்லானது பிற மாநில மொழிகளில் எப்படித் திரிந்து விரல்களைக் குறிக்கப் பயன்படுகின்றது என்பதைக் கீழே பார்க்கலாம்.

அங்கை >>> அங்கு~லி >>> உங்க~லி.

சொல்வடிவம்         பேசப்படும் மொழிகள்

அங்கு~லி             மலையாளம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம், மராத்தி, 
                      கு~ச்^ராத்தி, வங்காளம், ஒரியா.
உங்க~லி             இந்தி, பஞ்சாபி`.

மார்பு:

கழுத்தின் கீழ் இருப்பதான அகன்ற பகுதியை மார்பு என்று அழைக்கிறோம். இப்பகுதியானது ஏனை உடல் உறுப்புக்களைக் காட்டிலும் அகலமாக இருப்பதால் இதற்கு அகலம் என்றொரு பெயருண்டு. மார், மார்பு, மார்புக்கூடு, நெஞ்சு, நெஞ்சுக்கூடு, முலை ஆகியவை இப் பகுதியைக் குறிக்கும் பிற பெயர்களாகும். இத் தமிழ்ப்பெயர்கள் பிற மாநில மொழிகளில் எவ்வாறு திரிந்து இவ் உறுப்பினைக் குறிக்கப் பயன்படுகின்றன என்பதைக் கீழே காணலாம். 

மார்பு >>> மார் - மலையாளம்
நெஞ்சு >>> நெஞ்சு - மலையாளம்
முலை >>> முல - மலையாளம்; மொலெ - கன்னடம்
அகலம் >>> கொல - செங்கிருதம்

தமிழில் உறை என்ற பழஞ்சொல்லுண்டு. இச்சொல்லுக்குப் பல பொருட்களைத் தமிழ் அகராதிகள் கொடுத்தாலும் அவற்றில் கூடு, இருப்பிடம் ஆகிய பொருட்கள் குறிப்பிடத்தக்கவை. நம் உடலில் உயிர் உறைகின்ற இடமாகக் கருதப்படுவது இந்த மார்புப் பகுதியே ஆகும். இப் பகுதியில் தான் உயிர்த்துடிப்புக்குக் காரணமான இதயம் இருக்கின்றது. அதுமட்டுமின்றி, இந்த இதயமானது ஒரு கூட்டுக்குள் இருப்பதைப்போல மிகவும் பாதுகாப்பாக அமைந்துள்ளது. எனவேதான் உயிர் வாழும் கூடு அல்லது இருப்பிடமாகிய மார்புப் பகுதியினை உறை என்ற சொல்லால் குறித்தனர். உயிருக்குயிராகக் காதலிக்கும் காதலர்கள் உடலளவில் தமது வீடுகளில் தனித்தனியே வாழ்ந்தாலும் உயிரளவில் ஒன்றாக வாழ்வது இந்த நெஞ்சாங்கூடுகளில் தான். இப்படி பிறரது நெஞ்சங்களில் வாழும் காதலரை 'உறைநர்' என்ற சொல்லால் இலக்கியங்கள் பல பாடல்களில் குறிப்பிடுகின்றன. அவற்றில் சில பாடல்கள் மட்டும் கீழே சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும் - புறம் 163
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே - அகம் 67

தமிழில் மட்டுமின்றி, மார்பினைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான செச்`ட் என்பதற்குக் கூட பெட்டி, கூடு போன்ற பொருட்களும் உண்டு. இப்படியாகத், தமிழில் நெஞ்சுக்கூட்டினையும் குறிப்பதான உறை என்னும் சொல்லானது பிற மாநில மொழிகளில் எவ்வாறு திரிந்து வழங்கப்படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.

உறை (உறய்) >>> உறச்`, உற - இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம்.

உயிர் உறையும் இடம் மார்புப் பகுதி என்று மேலே கண்டோம். இந்த உயிர் இருந்தால்தான் வாழவே முடியும். ஆக, ஒருவரின் இருப்பு என்பதே உயிர் சார்ந்த ஒன்று என்ற நிலையில், உயிர் வாழ்தல் என்னும் பொருளைத் தருவதான பல்வேறு தமிழ்ச் சொற்கள் எப்படியெல்லாம் திரிந்து உயிர் வாழும் இடமான மார்பினைக் குறிப்பதற்குப் பிற மாநில மொழிகளில் பயன்படுகின்றன என்பதையும் கீழே பார்க்கலாம்.

உறைதல் >>> உறச்`, உற
இருத்தல் >>> இருத`ய் >>> இருத`யம் >>> இத`யம் >>> எதெ'
இருத்தல் >>> க்`ருத` >>> க்`ருத`ய >>> க்ரோத`
இருத்தல் >>> ரொம்மு
வதிதல் >>> வத்ச` >>> வக்ச`

சொல்வடிவம்         பேசப்படும் மொழிகள்

உறச்`, உற            இந்தி, செங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம்.
க்`ருத`ய               இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, செங்கிருதம், 
                      மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், ஒரியா.
இருத`யம்             மலையாளம், கன்னடம்
எதெ'                  கன்னடம்
ரொம்மு               தெலுங்கு
க்ரோத`               செங்கிருதம்
வத்ச`, வக்ச`          செங்கிருதம், இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி.                 

சங்கத் தமிழில் குய் என்ற சொல்லுண்டு. இச்சொல்லுக்குப் பல பொருட்களைக் கூறிய தமிழ் அகராதிகள் அடுப்பு என்னும் பொருளைக் கூறத் தவறிவிட்டன. குய் என்னும் சொல்லுக்கு அடுப்பு என்னும் பொருளுமுண்டு என்பதைக் கீழ்க்காணும் சங்கப் பாடல்வரிகளில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

குரூஉ குய்ப்புகை மழை மங்குலின் - மது 757
குவளை உண்கண் குய்ப்புகை கழும - குறு 167

மேற்பாடல்களில் வரும் குய் என்பது அடுப்பினையும் குய்ப்புகை என்பது சமைக்கும்போது அடுப்பிலிருந்து தோன்றுகின்ற புகையினையும் குறித்து வந்துள்ளது. பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மண்ணாலான அடுப்பின் மேல்பகுதியில் மூன்று கூடுகள் இருக்கும். அடுப்புக்கூடு என்று அழைக்கப்படும் இது உருண்டையாகக் குவிந்து இருக்கும். இப்பகுதியின்மேல் தான் பாத்திரங்களை வைத்துச் சமைப்பர். இந்த அடுப்புக்கூடு பகுதியானது பார்ப்பதற்குக் குவிந்த மார்புகளைப் போலவே தோன்றியதால் குவிந்த மார்புகளையும் குயம் என்ற சொல்லால் குறித்தனர். கீழ்க்காணும் அகப்பாடலில் வரும் குயம் என்பது ஆண்களின் குவிந்த மார்பினைக் குறித்து வந்துள்ளது.

குயம் மண்டு ஆகம் செம் சாந்து நீவி - அகம் 48.

குய், குயம் ஆகிய தமிழ்ச்சொற்கள் எப்படித் திரிந்து பிற மொழிகளில் மார்பினைக் குறிக்கப் பயன்படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.

குய் >>> குயம் >>> குச - இந்தி, செங்கிருதம்.

சங்ககாலத்தில் ஆண்கள் தமது திறந்த அகன்ற மார்புகளின்மேல் குளிர்ச்சிக்காகவும் நறுமணத்திற்காகவும் அழகுக்காகவும் சந்தனம் முதலான நறுமணப் பொருட்களைச் சாந்தாகக் குழைத்துப் பூசியிருப்பார்கள். ஆண்கள் தமது மார்புகளின்மேல் இவ்வாறு செய்வதைப் போலச் சங்ககாலப் பெண்கள் தமது கண்களின்மேல் இமைகளில் சந்தனம் முதலானவற்றைப் பூசி அழகுசெய்வர். சங்ககால ஆண்மக்கள் தம் மார்பில் சாந்து / சந்தனம் பூசியதைப்பற்றி ஏராளமான பாடல்களில் புலவர்கள் பதிவுசெய்து வைத்துள்ளனர். அவற்றில் சிலவற்றை மட்டும் கீழே காணலாம்.

மலை செம் சாந்தின் ஆர மார்பினன் - குறு 321
குயம் மண்டு ஆகம் செம் சாந்து நீவி - அகம் 48.
தேம் கமழ் அகலத்து புலர்ந்த சாந்தின் - அகம் 36

ஆண்கள் தம் மார்பில் சந்தனம் பூசிக்கொள்ளும் பழக்கம் இன்றும் கூட உண்டு. 'ஊர்ல கல்யாணம்; மார்ல சந்தனம்' என்ற சொல்வழக்கு இதன் அடிப்படையில் எழுந்ததே. ஆண்களின் திறந்த மார்பில் எப்போதும் சந்தனம் இருப்பதால், மார்புடன் நெருங்கிய தொடர்புடையது என்றாகிப்போன சந்தனம், சாந்து ஆகிய தமிழ்ச்சொற்கள் பிற மொழிகளில் சற்றே திரிந்து மார்பினைக் குறிக்கப் பயன்படுத்தப் படுவதைக் கீழே பார்க்கலாம்.

சாந்து >>> சாதி - தெலுங்கு, இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி, ஒரியா.
சந்தன >>> ச்`தன - மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, செங்கிருதம், வங்காளம், ஒரியா.

முடிவுரை:

3500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சங்கத் தமிழர்கள் பயன்படுத்திய பரந்துபட்ட சொல்வளமானது எப்படியெல்லாம் இந்தியாவின் பிற மாநில மக்கள் பேசும் மொழிகளில் புகுந்து திரிபுற்று அதே பொருளில் வழங்கப்படுகின்றது என்பதை அறியும்போதெல்லாம் பெரும்வியப்பு மேலிடாமல் இருப்பதில்லை. தமிழ் அகராதிகள் மட்டும் ஒவ்வொரு சங்கத் தமிழ்ச்சொல்லுக்கும் உண்டான அனைத்துப்பொருட்களையும் சரியாகக் காட்டியிருந்தன என்றால் தமிழுடன் பிறமொழிகள் கொண்ட தொடர்பினை முன்கூட்டியே அறிந்து உலகோர்க்கு அறிவித்திருக்க முடியும்; ஒவ்வொரு தமிழரும் 'தமிழன்டா' என்ற பெருமையுடன் தலைநிமிர்ந்து நடந்திருக்க முடியும். கவலற்க, அப்படி நடக்கக்கூடிய நாள் வெகுதொலைவில் இல்லை; விரைவில் வரும்.!

................. தொடரும் ............