திங்கள், 18 ஜூன், 2012

வாலெயிறு ஊறிய நீர்

குறள்:

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர். - 1121

தற்போதைய விளக்கங்கள்:

கலைஞர் உரை: இனியமொழி பேசுகினற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்.

மு.வ உரை: மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை: என்னிடம் மெல்லிதாகப் பேசும் என் மனைவியின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர், பாலோடு தேனைக் கலந்த கலவை போலும்!.

பரிமேலழகர் உரை: [அஃதாவது , தலைமகன் தன் காதல் மிகுதி கூறலும் , தலைமகள் தன் காதல் மிகுதி கூறலும் ஆம் . இது , புணர்ச்சியும் நலனும் பற்றி நிகழ்வதாகலின் , புணர்ச்சி மகிழ்தல் , நலம் புனைந்து உரைத்தல்களின் பின் வைக்கப்பட்டது.]    (இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் தலைமகன் தன் நயப்பு உணர்த்தியது.) பணிமொழி வால் எயிறு ஊறிய நீர் - இம்மெல்லிய மொழியினை யுடையாளது வாலிய எயிறூறிய நீர்; பாலொடு தேன் கலந்தற்று - பாலுடனே தேனைக் கலந்த கலவை போலும். ('கலந்தற்று' என்பது விகாரமாயிற்று; கலக்கப்பட்டது என்றவாறு. 'பாலொடு தேன்' என்ற அதனால் அதன் சுவை போலுஞ் சுவையினை உடைத்து என்பதாயிற்று. 'எயிறூறிய' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. வேறு வேறறியப்பட்ட சுவையவாய பாலும் தேனும் கலந்துழி அக்கலவை இன்னது என்று அறியலாகாத இன்சுவைத்தாம் ஆகலின், அது பொருளாகிய நீர்க்கும் எய்துவிக்க.).

மணக்குடவர் உரை: பாலொடுகூடத் தேனைக்கலந்தாற் போலும்: மிகவும் இனிமைதரும் புகழினையுடையாளது வெள்ளிய எயிற்றினின்று ஊறிய நீர். இது புணர்ச்சியுண்மையும் காதல் மிகுதியும் தோன்றத் தலைமகன் கூறியது.

உரைத் தவறுகள்:

மேற்காணும் உரைகள் யாவற்றிலுமே ஒரே கருத்து தான் கூறப்பட்டுள்ளது. அதாவது, காதலியின் பற்களின் இடையே ஊறிய எச்சிலை உண்ட காதலன் அதை பாலும் தேனும் கலந்த கலவையைப் போல இனிப்பாக இருந்ததாகக் கூறுகின்றானாம். இக் கருத்து அறிவியலுக்கு முற்றிலும் முரணானது மட்டுமின்றி வள்ளுவரின் மாண்புக்கு இழுக்கு சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது. பரிமேலழகர், மணக்குடவ்ர் போன்ற பேரறிஞர்களும் உரை எழுதுகையில் இப்படி ஓர் தவறான விளக்கத்தை எவ்வாறு கொடுத்தனர் என்பது வியப்பினை மட்டுமின்றி வருத்தத்தையும் ஒருசேரத் தருகின்றது. முதலில் இவ் விளக்கங்களில் உள்ள தவறுகளைக் காணலாம்.

அறிவியல் கூற்றுப்படி, பாலூட்டிகளுக்கு உமிழ்நீரானது, மூன்று வகையான சுரப்பிகளில் இருந்து சுரக்கிறது. இதில் குறிப்பாக மனிதருக்கு, சாதாரண மனநிலையில், முக்கால்வாசி (70-75%) உமிழ்நீர் சப்-மாண்டிபுலார் சுரப்பி (2) யில் இருந்தும் கால்வாசி (20-25%) பரோடிட் சுரப்பி (1) யில் இருந்தும் சிறிய அளவில் (5-10%) சப்-லிங்குவல் சுரப்பி (3) யில் இருந்தும் சுரக்கிறது. அதுவே உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பரோடிட் சுரப்பியே அதிகமான உமிழ்நீரைச் சுரக்கிறது. இதுபற்றிய மேலதிக தகவல்களை விக்கிபீடியாவில் காணலாம். அருகிலுள்ள படத்தில் இந்த மூன்று சுரப்பிகளும் மனிதரின் வாய்க்குள் அமைந்துள்ள இடங்கள் காட்டப்பட்டுள்ளது.

இப் படத்தில் இருந்து எவ்விதமான குறிப்பிடத்தக்க அளவுள்ள உமிழ்நீரைச் சுரக்கும் சுரப்பிகளும் பற்களுக்கிடையிலோ பற்களின் மேலேயோ கீழேயோ இல்லை என்பது தெளிவாகிறது. உமிழ்நீர் சுரப்பிகளே இல்லாத நிலையில் காதலியின் பற்களுக்கிடையில் சுரந்து வரும் உமிழ்நீரை காதலன் உண்டதாக வள்ளுவர் எவ்வாறு கூறியிருக்க முடியும்?. ஒருவேளை வள்ளுவர் அறிவியலை அறியாமல் தவறாக எழுதி விட்டாரா?. இப்படியும் சிலர் கூறுவர். ஆனால் வள்ளுவர் குறளைத் தான் எழுதி இருக்கிறாரே ஒழிய விளக்கத்தினை எழுதவில்லை. இது அப்பட்டமாக உரையாசிரியர்கள் உரை எழுதும்போது அறிவியல் உண்மையினை ஆராயாமல் செய்த தவறாகும். இதற்கு வள்ளுவர் பொறுப்பல்ல.

அதுமட்டுமல்ல, இவ் விளக்கங்களில் இன்னொரு தவறும் இருக்கிறது. இவ் விளக்கங்கள் மிகப் பச்சையாக ஒரு முத்த நிகழ்ச்சியினை விரிப்பதாக உள்ளது. பெரும்பாலான ஆங்கிலப் படங்களில் காட்டப்படுவதைப்போல ( இப்போது தமிழ்ப் படங்களிலும் இது பரவலாகத் தலைதூக்கி இருப்பது வேறு செய்தி) காதலன் காதலியின் உதடுகளுடன் தனது உதடுகளை வைத்து அவற்றைச் சுவைத்து அப்படியே அவளது வாயில் இருந்த உமிழ்நீரை  உறிஞ்சிக் குடித்து ஆகா, என்ன சுவை! என்ன சுவை! தேனும் பாலும் கலந்து குடித்ததைப் போலல்லவா இருக்கிறது.!  என்று இறுமாப்புடன் கூறுவதாக அல்லவா இவ் உரையாசிரியர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.?. எப்படி இவர்களால் இப்படி ஒரு கண்ணியமற்ற விளக்கத்தைக் கொடுக்க முடிந்தது? இதற்கு இயற்கைப் புணர்ச்சி என்று சப்பைக்கட்டு வேறு. இப்படி ஒரு முத்த நிகழ்ச்சியினை வள்ளுவர் இங்கே கூற வேண்டிய அவசியமேயில்லை. அதுவும் காதலின் சிறப்பினைக் கூறுகின்ற இந்த அதிகாரத்தின் முதல் பாடலிலேயே இப்படித்தான் காமரசம் சொட்டச்சொட்ட வள்ளுவர் கூறுவாரா?. ஒருபோதும் மாட்டார். என்ன இருந்தாலும் இப்படி ஒரு பண்பில்லாத கருத்தினைக் கூறி வள்ளுவரின் மாண்புக்கு இவ் உரையாசிரியர்கள் வேட்டு வைத்திருக்கக் கூடாது. :(((

இத்தகைய தவறான உரை விளக்கங்கள் உருவாகக் காரணம் நமது உரையாசிரியர்களிடையே ஒரு முறையான உரைக்கொள்கை இல்லாமல் போனது தான். முறையான உரைக்கொள்கை என்பது எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றிக் கீழே காணலாம்.

திருக்குறள் உரைக்கொள்கை:

எந்த ஒரு இலக்கியத்திற்கும் உரைசெய்யப் புகும்முன்னர் அந்த நூலுக்கு ஒரு உரைக்கொள்கை வகுத்தாக வேண்டும். இந்த உரைக்கொள்கையானது அந்த இலக்கியத்தை இயற்றிய நூலாசிரியரைப் பொருத்து அமைவதாகும். நூலாசிரியரின் கல்வி அறிவு, பரந்த அனுபவ அறிவு, .பொது நோக்கு, கண்ணியம், பொதுநலன் போன்ற பல பண்புகளின் அடிப்படையில் இந்த உரைக்கொள்கையானது வகுக்கப்படும். அவ்வகையில், திருக்குறளுக்கு உரைசெய்யும் முன்னர், வகுக்கப்பட வேண்டிய உரைக்கொள்கையானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருக்குறள் உலகப்பொதுமறை என்று சான்றோர்களால் போற்றப்பட்டுள்ளது. எனவே இந் நூலாசிரியரான திருவள்ளுவர் பொதுநோக்கு உடையவர்; ஒரு சான்றோரும் ஆவார்.
இவரது திருக்குறளில் சமய, இன, மத, சாதி வேறுபாடுகள் கொண்ட கருத்துக்கள் இருக்காது.
இவரது குறள்கள் பொதுநலம் விரும்புவதாக இருக்கும்.
இவரது பாடல்களில் கண்ணியக் குறைவு இருக்காது.
இவரது பாடல்களில் இவரது பரந்துபட்ட அனுபவ அறிவு மிளிருமே அல்லால் கற்பனைகளைக் காண முடியாது.
இவரது கல்விப் புலமைக்கு இவரது பாடல்களே நற்சான்றுகளாக அமையும்.
எந்த சூழ்நிலையிலும் இவரது சான்றாண்மைக்கு இழுக்கு ஏற்படும் வண்ணம் கருத்துக்கள் கூறப்பட்டிருக்காது.


இப்படி ஒரு உரைக்கொள்கையினை வகுத்த பின்னர் திருக்குறளுக்கு உரைசெய்ய முனைவதே சரியான விளக்கங்களைத் தருவதாக அமையும். சரி, குறளுக்கு உரை செய்யும்பொழுது, ஏதேனும் ஓர் இடத்தில், உரைக்கொள்கையுடன் ஒவ்வாத கருத்துக்கள் இருப்பதாகத் தெரிந்தால் என்ன செய்வது?.

மீண்டும் உரைக்கொள்கையின் கடைசி வரியை நோக்கவும். இதுவே உரைசெய்வோருக்கு வழிகாட்டியாகும். உரைக்கொள்கையுடன் ஒவ்வாத வகையில் கருத்துக்கள் தோன்றுமானால், குறளில் பிழைகள் இருக்கலாம் என்பது பெற்றியாம். அது எழுத்துப் பிழையாகவோ, சொற்பிழையாகவோ, பொருள் பிழையாகவோ இருக்கலாம். முறையான ஆய்வின் மூலம் அப்பிழையினைக் கண்டறிந்து அப் பிழைக்கேற்ற சரியான திருத்தத்தினைச் செய்யப் பரிந்துரைப்பதும் உரையாசிரியரின் கடமையாகும். திருத்தம் செய்த பின்னர் கிடைக்கின்ற புதிய உரையானது, உரைக்கொள்கைக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்க வேண்டும் என்பது இன்றியமையாத விதியாகும்.

இனி, மேலே கூறப்பட்டுள்ள உரைக்கொள்கையின் படி, இக்குறளுக்கான புதிய விளக்கம் அதாவது திருந்திய பொருள் என்னெவென்று காணலாம்.

திருந்திய பொருள்:

இக் குறளில் வரும் எயிறு என்னும் சொல்லுக்கு கடைக்கண் என்பது பொருளாகும். இதன் அடிப்படையில், இக் குறளுக்கான புதிய விளக்கம் இதுதான்:

குறைவாகவே பேசும் எனது காதலியின் வெண்ணிற கடைக்கண்ணில் ஊறிய கண்ணீர்த் துளியானது, பாலுடன் கலந்த தேன் போல எனக்குள் இனிமை பயவாநின்றது.

நிறுவுதல்:

எயிறு என்ற சொல்லானது கண் மற்றும் கடைக்கண்ணையும் குறிக்கும் என்று எயிறு என்றால் என்ன? என்ற ஆய்வுக் கட்டுரையில் முன்னரே ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். இக்குறளிலும் கடைக்கண் என்ற பொருளில் தான் வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார். இனி, இக் குறளுக்கான புதிய விளக்கத்தினைப் பற்றி விரிவாகக் காணலாம்.

காதற் சிறப்புரைத்தல் என்னும் இந்த அதிகாரத்தில் வரும் பத்து குறள்களில் முதல் ஐந்து குறள்கள் காதலனால் கூறப்படுவதாகவும் பின் ஐந்து குறள்கள் காதலியால் கூறப்படுவதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. காதலனும் காதலியும் ஏதோ காரணத்தால் சில நாட்கள் பிரிந்துள்ளனர். மீண்டும் இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும் போது அவர்களுக்கிடையிலான காதல் எவ்வாறு வெளிப்பட்டது என்பதை விளக்கும் விதமாக இந்த முதல் குறள் அமைந்துள்ளது.

பிரிந்திருந்த காதலனைக் கண்முன்னர் கண்டதும் காதலியின் மனம் மகிழ்ச்சி பொங்குகிறது. உள்ளத்தில் உண்டாகிய உணர்ச்சிகளை வெளியே காட்டாமல் மறைக்க முயல்கிறாள். ஆனால் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?. அவளால் தனது உணர்ச்சிகளை மறைக்க முடியவில்லை. ஆர்வலர் புன்கணீர் பூசல் தருவதன்றோ?. இறுதியில் அவளது கண்ணீர் அவளது காதலை வெளிப்படுத்தி விட்டது. எப்போதுமே நாணத்தால் மிகக் குறைவாகப் பேசுகின்ற தனது காதலியின் கடைக்கண்ணில் நீர் துளிர்ப்பதை காதலன் கண்ணுறுகிறான். அவள் தன்மேல் கொண்டுள்ள அளவில்லாத காதலை அறிந்து மகிழ்கிறான். அவளது காதலின் சிறப்பினைப் போற்றும் விதமாகவும் அவளைப் பிரிந்து சென்று துன்பத்துக்கு உள்ளாக்கியதற்காக அவளைச் சமாதானப் படுத்தும் விதமாகவும் அவளது கண் அழகினைப் புகழ்ந்து பாடுகிறான்.

மகிழ்ச்சியின் காரணமாய் காதலியின் கடைக்கண்ணில் ஊறிய கண்ணீர்த் துளியானது, பாலுடன் கலந்த தேன் துளியைப் போல காதலனுக்கு இனிமை தருகிறதாம். இதைப்பற்றி விரிவாக எயிறு என்றால் என்ன என்ற கட்டுரையில் சொல்லப்பட்டு இருந்தாலும் இங்கேயும் அதைப்பற்றிச் சுருக்கமாகக் காணலாம். பொதுவாக, மாந்தரின் கண்ணீர் லேசான உப்புச் சுவை உடையது என்பது உலகறிந்த உண்மை. ஆனால் காதலியின் கடைக்கண்ணீர் மட்டும் இனிய அமிர்தம் போன்ற சுவை உடையதாக இத் திருக்குறள் உட்பட பல இலக்கியப் பாடல்கள் கூறுகின்றன. இது எங்ஙனம் என்றால், துயர மிகுதியால் நாம் அழும்போது கண்ணீரானது கண்ணின் முன்பகுதியில் தோன்றுவதையும் அது உப்புக்கரிப்பதையும் மகிழ்ச்சியின் போதும் சிரிக்கும்போதும் கண்ணீரானது கடைக்கண்ணில் தோன்றுவதையும் அது உப்பின்றி இனிப்பதையும் அறிவோம். பிரிந்துசென்ற காதலரை மறுபடியும் கண்டு மகிழ்ச்சியடைந்த காதலியின் கடைக்கண்ணில் ஊறிய கண்ணீரானது பாலும் தேனும் கலந்த கலவையினைப் போலக் காதலனுக்கு மகிழ்ச்சியும் இன்பமும் தருவதாக வள்ளுவர் கூறுவதற்கு இதுவே அடிப்படையாகும்.

இக் குறளில் வரும் எயிறு என்பது காதலியின் கண்ணையே அன்றி அவளது பல்லைக் குறித்து வரவில்லை என்பதற்கு அந்த அதிகாரத்தில் வரும் ஏனைக் குறள்களே போதுமான சான்றாகும். காதல் சிறப்புரைத்தல் என்ற இந்த அதிகாரத்தில் மொத்தமுள்ள 10 குறள்களில் 1121, 1123, 1125, 1126, 1127, 1129 ஆகிய 6 குறள்களிலும் காதலியின் கண்ணைப் பற்றியே கூறியிருக்கிறார். மீதமுள்ள இரண்டு பாடல்களில் உயிர் பற்றியும் இரண்டில் உள்ளம் பற்றியும் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, காதலின் சிறப்பினைக் கூறுவதான இந்த அதிகாரத்தில் காதலியின் பல்லில் ஊறும் எச்சில் பற்றிக் குறிப்பிட வேண்டிய தேவை என்ன?. எயிறு என்ற சொல்லுக்குப் பல் என்ற பொருள் மட்டுமின்றி கண் என்ற பொருளுமுண்டு என்று தெரிந்திருந்தால், அகராதிகளோ நிகண்டுகளோ கூறியிருந்தால், எந்த உரையாசிரியரும் இதுபோல தவறான உரை விளக்கம் எழுதியிருக்க மாட்டார்கள் என்பது உறுதி.

சங்க இலக்கியத்தில் வாலெயிறு ஊறிய நீர்:

திருக்குறளில் 'வாலெயிறு ஊறிய நீர்' என்று வள்ளுவர் கூறுவதைப் போலவே சங்க இலக்கியத்திலும் 'வாலெயிறு ஊறிய நீர்' என்ற சொல்லாடல் வருகிறது. வாலெயிறு ஊறிய நீர் என்பது பற்களில் ஊறிய எச்சில் நீரைக் குறிக்காது என்பதற்குக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடலை ஒரு அருமையான சான்றாகக் கொள்ளலாம்.

புன்காற் பாதிரி அரிநிறத் திரள்வீ
நுண்கொடி அதிரலொடு நுணங்கறல் வரிப்ப,
அரவுஎயிற்று அன்ன அரும்புமுதிர் குரவின்
தேன்இமிர் நறுஞ்சினைத் தென்றல் போழக்,
குயில்குரல் கற்ற வேனிலும் துயில்துறந்து   
இன்னா கழியும் கங்குல்' என்றுநின்
நல்மா மேனி அணிநலம் புலம்ப,
இனைதல் ஆன்றிசின் ஆயிழை! கனைதிறல்
செந்தீ அணங்கிய செழுநிணக் கொழுங்குறை
மென்தினை புன்கம் உதிர்த்த மண்டையொடு,   
இருங்கதிர் அலமரும் கழனிக் கரும்பின்
விளைகழை பிழிந்த அம்தீஞ் சேற்றொடு,
பால்பெய் செந்நெற் பாசவல் பகுக்கும்
புனல்பொரு புதவின் உறந்தை எய்தினும்,
வினை பொருளாகத் தவிரலர் கடைசிவந்து   
ஐய அமர்த்த உண்கண்நின்
வைஏர் வால்எயிறு ஊறிய நீரே!     - அகம். 237.

இப்பாடலில் வரும் ' துயில் துறந்து இன்னா கழியும் கங்குல் என்று நின் நல்மா மேனி அணிநலம் புலம்ப, கடை சிவந்து ஐய அமர்த்த உண்கண் நின் வைஏர் வால்எயிறு ஊறிய நீரே! இனைதல் ஆன்றிசின் ஆயிழை ! ' என்ற வரிகள் தலைவியின் துயர நிலையினை அப்பட்டமாக விளக்கி நிற்கின்றன. தலைவன் வாராமையால் அவனை எதிர்பார்த்து இரவெல்லாம் உறக்கமின்றிக் கழிய, சோர்வடைந்த கண்ணிமைகளுடன் அழுகின்ற நிலையில் இருக்கின்ற தலைவியைப் பார்த்து அவளது தோழியானவள் ' கடைக்கண் ஈற்றில் பூசிய சிவந்த வரிகளுடன் அழகாகத் தோன்றுகின்ற மையுண்ட கண்களை உடையவளே ! உனது வெண்ணிற விழிகளில் நீர் பெருகுகிறது; அழவேண்டாம்; அவர் உடனே வந்துவிடுவார் ' என்று ஆறுதல் கூறுகிறாள்.

இப்பாடலில் வரும் ' வாலெயிறு ஊறிய நீர் ' என்பதற்கு ' வெண்ணிற விழிகளில் பெருகிய நீர் ' என்பதே மிகப் பொருத்தமான பொருளாகும். மாறாக, பற்களில் ஊறிய எச்சில் நீர் என்று பொருள் கொள்ளலாமா என்றால் கூடாது. காரணம், தலைவியின் துயரநிலை. ஆனால் இரண்டாவது பொருளில் தான் உரை விளக்கம் எழுதி உள்ளனர். அதாவது, அழுதுகொண்டிருக்கும் தலைவியைப் பார்த்து ' உனது பற்களில் ஊறுகின்ற எச்சிலைப் பருகுவதற்காகவேனும் உனது கணவன் ஓடோடி வந்துவிடுவான். நீ அழவேண்டாம். ' என்று உரை கூறியுள்ளனர். என்ன ஒரு விளக்கம் பாருங்கள்.! தலைவன் தலைவியின் வாயுடன் வாய்வைத்து அவளது எச்சிலை உண்கின்ற செய்தி அவளது தோழிக்கு எப்படித் தெரியுமோ புரியவில்லை.!! எந்தச் சூழலில் எப்படிப் பேசவேண்டும்?. எதைப் பற்றிப் பேசவேண்டும்? என்ற வரைமுறையே இல்லாமல் இப்படியெல்லாம் பேசியதாகக் கூறினால் பழந்தமிழரின் பண்பாடு நாறிப்போகுமே என்ற நினைப்பின்றி உரை எழுதி இருப்பதனை நினைத்து வருத்தமே மேலிடுகிறது.!!!

வாழ்க தமிழ்!                                                                        வளர்க குறள்!

புதன், 13 ஜூன், 2012

பெற்ற மனம் பித்து

பழமொழி:

பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு.

தற்போதைய கருத்து:

மேற்காணும் பழமொழிக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஒரே கருத்து இதுதான்:

பிள்ளைகளைப் பெற்றெடுத்து வளர்க்கும் பெற்றோரின் மனமோ பிள்ளைகளின் மேல் பாசப்பித்தாய் இருக்கிறது. ஆனால் பிள்ளைகளின் மனமோ பெற்றோரின் மேல் எள்ளளவும் பாசமின்றி கல்போல உள்ளது.

இன்னொரு கோணம்:

இப் பழமொழிக்குக் கூறப்பட்டு வரும் மேற்கண்ட கருத்தினை முழுதாக ஏற்க இயலவில்லை. அதற்கான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இப் பழமொழிக்கு இன்னொரு கோணம் இருக்குமா என்பதைப் பற்றிய ஆய்வும் இக் கட்டுரையில் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக திருமண உறவில் ஈடுபடும் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருப்பதில் வியப்பில்லை. ஏனென்றால் இது இயற்கையின் உந்துதல். பிள்ளைப் பேற்றின் சிறப்பினைப் பற்றித் திருக்குறளில் புதல்வரைப் பெறுதல் என்னும் அதிகாரத்தில் கீழ்க்காணுமாறு கூறுகிறார் வள்ளுவர்.

அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை. ( குறள் - 61)

தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும். ( குறள் - 64)

மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும். ( குறள் - 65)

பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர். ( குறள் - 66)

இப்படியெல்லாம் பெருமையாகப் பேசப்படும் பிள்ளைச் செல்வங்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆனதும் பெற்ற தாய் தந்தையரின் மேல் சிறிதும் அக்கறையின்றி கல்நெஞ்சத்துடன் நடந்து கொள்வதாக இப் பழமொழிக்குப் பொருள் கூறப்பட்டுள்ளது.

பிள்ளைகளின் மேல் இடப்படும் இந்தக் குற்றச்சாட்டு உண்மை தானா என்று பார்ப்பதைவிட இப்படி குற்றம் சாட்டுவது முறைதானா என்று முதலில் பார்க்க வேண்டும்.  ஆம், பிள்ளைகள் ஏன் பெற்றோரிடம் பாசமில்லாமல் நடந்து கொள்கின்றனர்?. அவர்கள் எந்த சூழ்நிலையில் அப்படி நடந்து கொள்கின்றனர்? என்பதையும் அலசிப் பார்க்க வேண்டும். தவறு யார் மீது இருக்கிறது என்று ஆராயாமலே பொத்தாம்பொதுவாக இப்படிப் பிள்ளைகளின் மேல் மட்டும் குற்றம் சுமத்துவது சரியல்ல.

பல குடும்பங்களில் பெற்றோர் பிள்ளைகளுக்கு அன்பை ஊட்டி வளர்ப்பதில்லை. பிள்ளைகள் கேட்கும் பணத்தைக் கொடுத்து விட்டால் மட்டும் அது அன்பாகி விடாது. அன்பு என்பது என்ன என்று சரியான முறையில் புரியுமாறு குழந்தைகள் வளர்க்கப் பட்டிருந்தால் எந்தப் பிள்ளையும் பாசமின்றி இருக்காது.

மேலும் திருமணத்திற்குப் பின்னர் சில பிள்ளைகள் குறிப்பாக ஆண் பிள்ளைகள், தமது மனைவியின் கட்டளைப்படியோ, இல்லற சுமையினைத் தாங்க முடியாமலோ பிற காரணங்களாலோ பெற்றோரைக் கவனிக்காமல் /கவனிக்க முடியாமல் இருந்து விடுகின்றனர். காரணம் எதுவாயினும் பெற்றோரைப் பிள்ளைகள் கவனிக்காமல் இருப்பது தவறுதான். ஆசையுடன் பெற்றுப் பாசத்துடன் வளர்த்து ஆளாக்கிய  பெற்றோரின் கடைசிக் காலத்தில் பிள்ளைகள் ஓர் ஆதரவாய் இல்லாவிட்டால் அந்தக் கொடுமையினை பெற்றோரால் தாங்க முடியாது. தன்னால் முடிந்த அளவுக்கேனும் பெற்றோருக்கு ஓர் உதவியாய் இருக்க வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும்.

பிள்ளையின் கடமைகள்:

புதல்வரைப் பெறுதல் எனும் அதிகாரத்தில் பிள்ளைகளின் குறிப்பாக ஆண் பிள்ளையின் கடமை பற்றிக் கீழ்க்காணும் குறளில் கூறுகிறார் வள்ளுவர்.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். - 70

அதாவது, மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க உதவி, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

இக் குறளில் வள்ளுவர் கடமை என்று கூறாமல் உதவி என்ற சொல்லைக் கையாண்டுள்ளதைக் கவனிக்கவும். உதவி என்பது கடமையைப்போல கட்டாயமானதல்ல. விருப்பப்பட்டால் செய்யலாம். இருந்தாலும் ஒரு மகன் தன் தந்தைக்குப் புகழ் தேடித் தருகிறானோ இல்லையோ அவரது நற்பெயருக்கு எவ்விதத்திலும் களங்கத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்னும் கருத்தினையே இக் குறள் இங்கே வலியுறுத்துவதாகக் கொள்ளலாம்.  அதேபோல ஒரு மகன் தனது தாய்க்குச் செய்கின்ற ஒரு கடமையாகக் கீழ்க் காணும் குறளைக் கூறுகிறார் வள்ளுவர்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். - 69

அதாவது, தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

இதிலிருந்து தனது தாய்க்கு இப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சியை அளிக்க வேண்டியதும் ஒரு மகனின் கடமை என்ற கருத்தினை மறைமுகமாக உணர வைக்கிறார் வள்ளுவர்.

பெற்றோரின் கடமை:

பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் குறிப்பாகத் தந்தைக்கும் கடமை ஒன்று இருப்பதாகக் கீழ்க்காணும் குறளில் கூறுகிறார் வள்ளுவர்.

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். - குறள் - 67.

அதாவது, தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க கடமை, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

இங்கே நன்றி என்ற சொல்லை கடமை என்ற பொருளில் கூறுகிறார் வள்ளுவர். பிள்ளைகளைப் பெற்று விட்டால் மட்டும் போதாது; அவர்களுக்கு நல்ல ஆசானாய் இருந்து கல்வியைத் தந்து நல்வழியைக் காட்டிநின்று அவர்களைக் கற்றவர்களின் அவையில் முதல்வனாக விளங்கச் செய்ய வேண்டியது தந்தையின் கடமை என்று கூறுகிறார் வள்ளுவர். ஆனால் இன்று எத்தனை தந்தையர் அவ்வாறு நடந்து கொள்கின்றனர்.?. குழந்தையின் பிறப்புக்குக் காரணமாய் இருப்பதோடு சரி, அதன்பின் அக் குழந்தையின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தைப் பற்றிச் சிறிதும் கவலையில்லாமல் திரிகின்ற தந்தையர் பலர் இச் சமுதாயத்தில் இருப்பதைப் பார்க்கிறோம். இப்படிப் பல குழந்தைகள் தந்தையின் கவனிப்பின்றியும் சரியான பாதை காட்டப்படாமலும் வளர்க்கப்படுவதால் தறுதலைகளாகச் சமுதாயத்தில் உருவெடுத்து வருவதை நாம் இன்றும் கண்கூடாகப் பார்க்கலாம்.

இப்படிப்பட்ட தந்தையின் நிலையையும் அவரது மனைவியின் நிலையையும் காணும் போது பசுவும் காளையும் தான் நினைவுக்கு வருகிறது. 

பசுவும் காளையும்:

பசுவின் குணம் பற்றியும் காளையின் குணம் பற்றியும் ஏற்கெனவே நமது திருக்குறளில் தெய்வம் மற்றும் திருக்குறள் காட்டும் தேவர் யார்? என்ற ஆய்வுக் கட்டுரைகளில் கண்டுள்ளோம்.

பொதுவாக, பசு, காளை மற்றும் கன்று அடங்கிய ஒரு பசுவின் குடும்பத்தில் பசு தாயாக இருந்து தனது கன்றின் மேல் பாசம் காட்டி பாலூட்டி வளர்க்கிறது. தனது கன்றுக்கொரு துன்பம் வந்தால் அத் துயரத்தினைத் தாங்க மாட்டாமல் கண்ணீர் வடித்து அழுகிறது; உதவிக்கு அழைத்துக் கதறுகிறது. ஆனால் அந்தக் கன்றின் மேல் எந்தவித அக்கறையுமின்றி காளைமாடு திரிகிறது. அந்தக் கன்றின் பிறப்புக்குத் தானே தந்தையாய் இருந்தும் அந்தக் கன்றின் மீது ஒரு பற்றுதலும் இல்லாமல் கல்நெஞ்சம் கொண்டவரைப் போல வாழ்கிறது காளைமாடு. இந்தப் பசுவின் மனநிலையையும் காளையின் மனநிலையையும் பற்றிக் கூறுவதாக அமைவதே நமது தலைப்புப் பழமொழியாகும். இது எவ்வாறு என்று கீழே காணலாம்.

பழமொழியின் வடிவமும் பொருளும்:

பழமொழிகள் வாய்மொழி வழியாக பல்லாண்டு காலம் வழங்கப்பட்டு பின்னர் எழுத்தில் இடம்பெற்றன. அப்படி எழுதப்பட்ட பொழுது பல எழுத்துப் பிழைகளால் பொருள் தவறுகள் நேர்ந்துள்ளதை நாம் இதற்கு முன்னர் பல பழமொழி ஆய்வுக் கட்டுரைகளில் கண்டுள்ளோம். அப்படி ஒரு எழுத்துப் பிழையே இப் பழமொழியிலும் பொருள் மாறுபாடு உண்டாகக் காரணமாகி விட்டது.

நமது தலைப்புப் பழமொழியின் உண்மையான வடிவம் கீழ்க்காணுமாறு இருப்பதாகும்.

பெற்ற மனம் பித்து; புல்ல மனம் கல்லு.

இதில் வரும் பெற்றம் என்பது பசுவையும் புல்லம் என்பது காளையையும் குறிக்கும் என்று அகராதிகள் கூறுகின்றன. அவ்வகையில்,

பெற்ற மனம் = பெற்றத்தின் மனம் அதாவது பசுவின் மனம் ஆகும்.

புல்ல மனம் = புல்லத்தின் மனம் அதாவது காளையின் மனம் ஆகும்.

புல்ல என்பது லகர ளகர குழப்பத்தால் புள்ள என்று  உருமாறி பின் தூய தமிழாக உருவெடுக்கும்போது பிள்ளை என்று மாறிவிட்டது. இதன் வரலாறு கீழே காட்டப்பட்டுள்ளது.

புல்ல ---> புள்ள -----> பிள்ளை

இனி, பழமொழியின் உண்மைப் பொருள் இதுதான்:  
பசுவின் மனம் (கன்றின் மேல்) பாசத்தால் பித்தாக இருக்கிறது; காளையின் மனமோ ( கன்றின் மேல்) பாசமின்றிக் கல்லாக இருக்கிறது.

பசுவுக்கும் காளைக்கும் இயற்கையாக அமைந்த இந்த இருவிதமான மனநிலைகளையே இப் பழமொழி வாயிலாக நம் முன்னோர்கள் கூறியுள்ளதாகத் தெரிகிறது. காளையின் இயற்கைக் குணத்தினை மாற்ற இயலாது. ஆனால் மனிதன் நினைத்தால் மாறலாம்; தன் கீழான குணத்தினை மாற்றிக் கொண்டு அன்பு காட்டலாம். அப்படி அன்பு காட்டாத கல்நெஞ்சம் கொண்ட தந்தையரை காளைக்கும் பாசத்தினால் பித்துகொண்டு அன்புகாட்டி உருகும் அன்னையரை பசுவிற்கும் உவமையாக கூறி, இந்தக் காளைகளைப் போல தந்தையர் இருக்கக் கூடாது என்ற நற்கருத்தினை வலியுறுத்துவதாக அமைகிறது இப்பழமொழி. இதுவே இப்பழமொழியின் இன்னொரு கோணம் ஆகும்.
====================== வாழ்க தமிழ்!==============