சொல்-பொருள் விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொல்-பொருள் விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

தமிழ் எண்களின் பெயர்ச் சொற்பிறப்பியல்

தமிழ் எண்களின் பெயர்ச் சொற்பிறப்பியல்

முன்னுரை:

தமிழர்கள் பழங்காலம் தொட்டே நிறுத்தல் அளவை, நீட்டல் அளவை, முகத்தல் அளவை போன்ற பலவகை அளவைகளில் எண்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்கள் பலவகைகளாக இருந்தாலும், நம் வசதிக்கேற்ப அவற்றை ஒன்றுக்கு மேற்பட்டவை என்றும் ஒன்றுக்குக் கீழ்ப்பட்டவை என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்டும் எண்ணற்ற எண்கள் இருப்பதால் ஒன்றாதிபதி (ஒன்று முதல் பத்து வரையிலானவை) எண்கள் மற்றும் நூறு, ஆயிரம், இலக்கம், கோடி என்ற எண்களுக்குமான தமிழ்ப் பெயர்கள் மட்டும் எவ்வாறு தோற்றம் பெற்றன என்பதை இக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒன்று:

ஒன்னுதல் என்றால் பொருந்துதல், தொடுதல் என்று பொருளுண்டு. ஒரு செயலைத் துவக்க வேண்டுமென்றால் முதலில் அதற்கான பொருளைத் தொட வேண்டும். இதனால் தான் துவக்கத்திற்குத் தொடக்கம் (தொடு + ஆக்கம்) என்ற பெயரும் உண்டானது. எண்களின் தொடக்கமாக இந்த எண் விளங்குவதால் இந்த எண்ணிற்கு ஒன்று என்ற பெயர் ஏற்பட்டது. ஒன்று என்ற பெயரின் தோற்றத்தைக் கீழே காணலாம்.

ஒன் (=பொருந்து, தொடு) + உ =  ஒன்னு >>> ஒன்று = தொடக்கம்.

பி.கு: ஒன்று என்னும் தமிழ்ச் சொல்லே ஒந்து என்று கன்னடத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

இரண்டு:

ஈர்தல் என்றால் கீறுதல், பிளத்தல் என்ற பொருளுண்டு. ஒருபொருளை ஒருமுறை கீறும்போது / பிளக்கும்போது கிடைப்பது இரண்டு பாகங்கள் என்பதால் ஈர்தல் வினையே  இந்த எண்ணிற்கு அடிப்படையானது. இரண்டு என்ற எண்ணின் பெயர்த் தோற்றத்தினைக் கீழே காணலாம்.

ஈர் (=கீறு, பிள) + அண்டு (=அடை) = இரண்டு = பிளப்பதால் அடைவது.

பி.கு: இரண்டு என்ற தமிழ்ச்சொல்லே ரெண்டு என்று தெலுங்கிலும் எரடு என்று கன்னடத்திலும் வழங்கப்பட்டு வருகிறது.

மூன்று:

பழந்தமிழர்கள் தமது வாழ்வில் இயற்கையுடன் இணைந்து அதனை உற்றுநோக்கி வாழ்ந்தனர் என்பதும் அந்த அடிப்படையிலேயே பல சொற்களின் பெயர்களை அமைத்தனர் என்பதும் மறுக்க இயலாத உண்மை ஆகும். அவ்வாறு இயற்கை நியதியை உற்று நோக்கித் தமிழர்கள் அமைத்த பல எண்ணுப் பெயர்களில் ஒன்றுதான் மூன்று என்பதாகும். இயற்கையை உற்றுநோக்கிய தமிழர்கள் அதன் நியதியில் பெரும்பாலும் மூன்று வகைகளே இருப்பதை அறிந்தனர். அவற்றில் சில சான்றுகளை மட்டும் கீழே காணலாம்.

வாழ்க்கை வகை         : பிறப்பு – வாழ்வு – இறப்பு

இருப்பிட வகை          : மேல் – இடை – கீழ்

இயல்பொருள் வகை      : திடம் – திரவம் – வாயு

பாலின வகை            : ஆண் – அலி – பெண்

வரிசை வகை           : முதல் – இடை – கடை

பொழுது வகை           : காலை – மதியம் – இரவு

இயற்கையின் நியதியில் இத்தகைய மூன்று வகைகளே பெரும்பான்மையாக அறியப்பட்டதால், இயற்கை நியதியைக் குறிக்கும் “முறை” என்ற சொல்லில் இருந்தே இந்த எண்ணுக்கான பெயரை அமைத்தனர். மூன்று என்ற பெயரின் தோற்றத்தைக் கீழே காணலாம்.

முறை (=இயற்கை நியதி, தடவை, எண்ணிக்கை) + உ = மூறு >>> மூன்று = இயற்கை நியதிகளின் எண்ணிக்கை.

பி.கு: மூறு என்ற தமிழ்ச்சொல்லே தெலுங்கில் மூடு என்றும் கன்னடத்தில் மூறு என்றும் இன்றளவும் வழங்கி வருகிறது.

நான்கு:

ஏனை உயிர்களின் வாழ்வைக் காட்டிலும் மனித உயிர்களின் வாழ்வு மகத்தானது என்று அறிவோம். இதைப் பற்றிப் புலவர்கள் பலர் தமது பாடல்களில் பாடியும் உள்ளனர். இந்த மனித வாழ்வின் மகத்துவத்திற்கான காரணம், மனிதர்களால் மட்டுமே நாற்பொருள் என்று அழைக்கப்படும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு நன்மைகளை அடைய முடியும் என்பதே. மனிதர்கள் தமது வாழ்வில் இந்த நான்கு நற்பொருட்களை அடையும் முறைகளைப் பற்றியே தமிழ் இலக்கியங்கள் பலவும் விரிவாகக் கூறியுள்ளன. இனி, நான்கு என்ற எண் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

நன்மை + கூழ் (=பொருள், எண்ணு) = நான்கூழ் >>> நான்கு = நன்மைப் பொருட்களின் எண்ணிக்கை.

நான்கு என்ற எண் பெயரானது நால்கு என்றும் இலக்கியங்களில் வழங்கப் பட்டுள்ளது. எனவே நால்கு என்ற பெயர் தோன்றிய முறையினையும் கீழே காணலாம்.

நல் (=நன்மை) + கூழ் (=பொருள், எண்ணு) = நால்கூழ் >>> நால்கு = நன்மைப் பொருட்களின் எண்ணிக்கை.

பி.கு: நால்கு என்ற தமிழ்ச்சொல்லே நாலகு என்று தெலுங்கிலும் கன்னடத்திலும் வழங்கப்பட்டு வருகிறது.

ஐந்து:

மனிதருடைய கையில் இயற்கையாக ஐந்து விரல்கள் தான் இருக்கும். அவ்வாறு இந்த கையை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதே ஐந்து என்னும் எண் பெயராகும். இப் பெயரின் தோற்றம் கீழே:

அத்தம் (=கை) + ஊழ் (=எண்ணு) = அத்தூழ்  >>> ஐந்து = கையில் எண்ணப்படுவது.

பி.கு: ஐந்து என்னும் தமிழ்ப் பெயரே ஐது என்று கன்னடத்திலும் தெலுங்கிலும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆறு:

கை விரல்களைக் கொண்டு ஐந்து என்ற எண்ணின் பெயரை அமைத்ததைப் போல, கால் விரல்களைக் கொண்டு ஆறாம் எண்ணிற்கான பெயரை அமைத்தனர். தேனீ, வண்டு முதலான பெரும்பாலான பூச்சிகளில் கால்களின் எண்ணிக்கை ஆறாக அமைந்துள்ளது. இந்த அடிப்படையில், தேனீ / வண்டைக் குறிக்கும் பெயரை அடிப்படையாகக் கொண்டே இந்த எண்ணிற்கான பெயரைக் கீழ்க்காணுமாறு சூட்டினர்.

அரி (=தேனீ, கால்) + ஊழ் (=எண்ணு) = ஆரூழ்  >>> ஆறு = தேனீயின் கால்களின் எண்ணிக்கை.

பி.கு: ஆறு என்னும் தமிழ்ச் சொல்லானது அப்படியே கன்னடத்திலும் தெலுங்கிலும் வழங்கப்பட்டு வருகிறது.

ஏழு:

இயற்கையில் தோன்றும் வண்ணங்களை எண்ணத் தொடங்கினால் அது கணக்கில் அடங்காது என்று அறிவோம். ஆனால் வானவில்லில் தோன்றும் வண்ணங்களின் எண்ணிக்கையோ ஏழாகவே எப்போதும் அமைந்து விடுகிறது. இந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட பெயரே ஏழு ஆகும். ஏழு எனும் எண்ணுப் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

ஏ (=மேல்நோக்குகை, அடுக்கு, வில்) + ஊழ் (=ஒளி, எண்ணு) + உ = எயூழு >>> ஏழு = மேல்நோக்கப்படும் ஒளிவில்லில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை.

பி.கு: ஏழு என்ற தமிழ்ச் சொல்லே ஏழு என்று கன்னடத்திலும் ஏடு என்று தெலுங்கிலும் வழங்கப்பட்டு வருகிறது.

எட்டு:

தமிழில் ஆறு என்றால் வழி, பக்கம் என்ற பொருட்களும் உண்டு. பக்கம், வழி என்பதற்கு மாற்றாகத் திசை என்று கூறுவதும் உண்டு. திசைகள் என்று எடுத்துக் கொண்டால் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்ற எட்டு மட்டுமே மக்களால் பயன் கொள்ளப் படுபவை ஆகும். இனி, எட்டு என்ற எண் பெயர் தோன்றிய முறையைக் கீழே காணலாம்.

ஆறு (=பயன், பக்கம், திசை) + ஊழ் (=எண்ணு, முற்று) = அற்றூழ் >>> எட்டு = பயன் கொள்ளும் திசைகளின் முற்றிய எண்ணிக்கை.

பி.கு: எட்டு என்ற தமிழ்ச் சொல்லே எண்ட்டு என்று கன்னடத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

ஒன்பது:

பத்தைக் காட்டிலும் குறைவானது என்ற பொருளில் உருவானதே ஒன்பது என்ற எண்ணின் பெயராகும். இப் பெயர் உருவான முறையைக் கீழே காணலாம்.

உண் (=குறை) + பத்து = உண்பத்து >>> ஒன்பது = பத்தின் குறை

பத்து:

இதுவரையிலும் கண்ட எண்ணுப் பெயர்கள் யாவும் ஒரு தனிப்பொருள் அல்லது தனிவினை சார்ந்ததாக அமைந்திருப்பதை அறிந்தோம். இனி, பத்து முதல் கோடி வரையிலான எண்ணுப் பெயர்கள் யாவும் தனிப்பொருள் / தனிவினை குறித்து அமையாமல் கூட்டப் பொருளில் அமைவதை அறியலாம். முதலில், பத்து என்ற எண்ணின் பெயர் தோன்றும் முறையைக் காணலாம்.

பற்று (=குலை, கூட்டம், எண்ணு) >>> பத்து = கூட்டத்தின் எண்ணிக்கை

பி.கு: பத்து என்னும் தமிழ்ச்சொல்லே பதி என்று தெலுங்கிலும் அத்து என்று கன்னடத்திலும் வழங்கப்பட்டு வருகிறது.

நூறு:

பத்து என்பது கூட்டப் பொருளில் அமைந்திருப்பதைப் போல நூறு என்பதும் கூட்டப் பொருளில் அமைந்த எண்ணுப் பெயரே ஆகும். நூறு என்னும் எண்ணுப் பெயர் தோன்றிய முறையைக் கீழே காணலாம்.

நிரை (=கூட்டம்) + ஊழ் (=எண்ணு) = நீரூழ் >>> நூறு = கூட்டத்தின் எண்ணிக்கை

ஆயிரம்:

பத்து, நூறு ஆகிய எண்களைப் போலவே ஆயிரம் என்ற எண்ணுப் பெயரும் கூட்டப் பொருளில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெருங்கூட்டம் என்பதன் அடிப்படையில் அமைந்திருப்பதைக் கீழே காணலாம்.

ஆயம் (=கூட்டம், எண்ணம்) + இருமை (=பெருமை) + அம் = ஆயிரம் = பெரிய கூட்டத்தின் எண்ணிக்கை. 

இலக்கம்:

இலக்கம் என்ற தமிழ்ச்சொல்லே இலட்சம் என்று மருவி வழங்கப் படுகிறது. இலக்கம் என்ற எண்ணுப் பெயர் தோன்றிய முறையைக் கீழே காணலாம்.

ஏல் (=மிகு, பெரு, எண்ணு) + ஆக்கம் (=கூட்டம்) = எலாக்கம் >>> இலக்கம் = மிகப் பெரிய கூட்டத்தின் எண்ணிக்கை

கோடி:

கூட்டப் பொருளில் அமைந்த இறுதியான எண்ணுப் பெயரே கோடி ஆகும். கோடி என்னும் எண்ணுப் பெயர் தோன்றும் முறையினைக் கீழே காணலாம்.

கோடு (=எண்ணு, குலை, கூட்டம், வரம்பு) + ஈ (=அறு) = கோடீ >>> கோடி = வரம்பற்ற கூட்டத்தின் எண்ணிக்கை.

எண்ணுப் பெயர் அட்டவணை:

இதுவரை கண்ட தமிழ் எண்ணுப் பெயர்களின் சொல்லாக்க முறையினைக் கீழே அட்டவணை வடிவில் காணலாம்.

 

எண்ணுப் பெயர்

எண்

உரு

தோன்றும் முறை

ஒன்று

1

ஒன் (=பொருந்து, தொடு) + உ =  ஒன்னு >>> ஒன்று = தொடக்கம்.

இரண்டு

2

ஈர் (=கீறு, பிள) + அண்டு (=அடை) = இரண்டு = பிளப்பதால் அடைவது

மூன்று

3

முறை (=இயற்கை நியதி, தடவை, எண்ணிக்கை) + உ = மூறு >>> மூன்று = இயற்கை நியதிகளின் எண்ணிக்கை.

நான்கு

4

(1) நன்மை + கூழ் (=பொருள், எண்ணு) = நான்கூழ் >>> நான்கு = நன்மைப் பொருட்களின் எண்ணிக்கை. (2) நல் (=நன்மை) + கூழ் (=பொருள், எண்ணு) = நால்கூழ் >>> நால்கு = நன்மைப் பொருட்களின் எண்ணிக்கை.

ஐந்து

5

அத்தம் (=கை) + ஊழ் (=எண்ணு) = அத்தூழ்  >>> ஐந்து = கையில் எண்ணப்படுவது

ஆறு

6

அரி (=தேனீ, கால்) + ஊழ் (=எண்ணு) = ஆரூழ்  >>> ஆறு = தேனீயின் கால்களின் எண்ணிக்கை.

ஏழு

7

ஏ (=மேல்நோக்குகை, அடுக்கு, வில்) + ஊழ் (=ஒளி, எண்ணு) + உ = எயூழு >>> ஏழு = மேல்நோக்கப்படும் ஒளிவில்லில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை

எட்டு

8

ஆறு (=பயன், பக்கம், திசை) + ஊழ் (=எண்ணு, முற்று) = அற்றூழ் >>> எட்டு = பயன் கொள்ளும் திசைகளின் முற்றிய எண்ணிக்கை

ஒன்பது

9

உண் (=குறை) + பத்து = உண்பத்து >>> ஒன்பது = பத்தின் குறை

பத்து

10

பற்று (=குலை, கூட்டம், எண்ணு) >>> பத்து = கூட்டத்தின் எண்ணிக்கை

நூறு

100

நிரை (=கூட்டம்) + ஊழ் (=எண்ணு) = நீரூழ் >>> நூறு = கூட்டத்தின் எண்ணிக்கை

ஆயிரம்

1000

ஆயம் (=கூட்டம், எண்ணம்) + இருமை (=பெருமை) + அம் = ஆயிரம் = பெரிய கூட்டத்தின் எண்ணிக்கை

இலக்கம்

100000

ஏல் (=மிகு, பெரு, எண்ணு) + ஆக்கம் (=கூட்டம்) = எலாக்கம் >>> இலக்கம் = மிகப் பெரிய கூட்டத்தின் எண்ணிக்கை

கோடி

10000000

கோடு (=எண்ணு, குலை, கூட்டம், வரம்பு) + ஈ (=அறு) = கோடீ >>> கோடி = வரம்பற்ற கூட்டத்தின் எண்ணிக்கை

 முடிவுரை:

இதுவரையிலும் தமிழர்கள் பயன்படுத்துகின்ற பல்வேறு எண்களுக்கான பெயர்கள் தோன்றிய விதங்களை விளக்கமாகக் கண்டோம்.  இவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்குமிடத்து, பழந்தமிழர்கள் எண்களுக்குப் பெயர் அமைக்கும்போது இடுகுறியாக அதாவது எதேச்சையாகச் செய்யாமல் பொருள் / வினைகளின் அடிப்படையில் காரணப் பெயர்களாகவே அமைத்துள்ளனர்  என்னும் செய்தியை அறியலாம். கோடிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையைக் குறிப்பதற்கு ஆம்பல், வெள்ளம், பதுமம், சங்கம் முதலான பல எண்ணுப் பெயர்களும் உண்டு.

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

பாசத்தின் பிறப்பிடமாகப் பெண்களே இருப்பது ஏன்?


முன்னுரை:

மாதராய்ப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டும்

என்று பாடிச் சென்றான் பாரதி. கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழும் இந்தப் பூமியில் மனிதராய்ப் பிறப்பதே அரிதான நிலையில் மனிதரிலும் பெண்களாய்ப் பிறப்பதற்கு எவ்வளவு பெரிய தவப்பயன் இருக்க வேண்டும் என்பதை உலகோர்க்கு உணர்த்தி விட்டான் அந்த முண்டாசுக் கவிஞன்.

இத்துணை சிறப்புக்கும் பெருமைக்கும் ஒரு பெண் எவ்வாறு தகுதியாகிறாள்?. குடும்பப் பொறுப்புக்களைச் சுமந்தவாறு பணம் சம்பாதிப்பதற்காக நாள் முழுவதும் அல்லல்பட்டு உழந்தும் ஏன் ஒரு ஆணுக்கு இவ்வளவு பெரிய பாராட்டு கிடைப்பதில்லை?. அன்பு என்பதே இக்கேள்விக்கான விடையாகும். ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக பாசம் காட்டுகிறார்கள். சரி, பெண்கள் மட்டும் ஏன் இவ்வளவு பாசத்துடன் இருக்கிறார்கள்? இக் கேள்விக்கான விடையினை ஒற்றைவரியில் சொல்வதைக் காட்டிலும் பல சான்றுகளுடன் விளக்கமாகக் கூறுவதே பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியதால் இக் கட்டுரை எழுதப்படுகிறது.
:
பெண் என்னும் பிறப்பு:

ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்தாலே அங்கே செல்வமும் மகிழ்ச்சியும் தோன்றிப் பெருகப் போகிறது என்று பொருள். அதுவரை வீட்டில் நிலவி வந்த துன்பங்கள் விலகி மகிழ்ச்சிக்கான வழி பிறக்கப் போகிறது என்று பொருள். இதன் அடிப்படையில் உருவானதே கீழ்க்காணும் பழமொழி.

தை பிறந்தால் வழி பிறக்கும்.

இதில் வரும் தை என்பது தையல் ஆகிய பெண்ணைக் குறிக்கும். தைத்தல் என்றால் உருவாக்குதல் என்ற அகராதிப் பொருள் உண்டு. உயிர்களை உருவாக்குபவள் பெண்ணே என்பதால் பெண்ணுக்குத் தை என்றும் தையல் என்றும் பெயர் உண்டானது.

பெண்ணும் தங்கமும்:

ஒரு தந்தை தனது மகளைச் செல்லமாகக் கொஞ்சும்போது தங்கமே என்று அழைப்பான். ஒரு கணவன் தனது மனைவியைச் செல்லமாகக் கொஞ்சும்போதும் தங்கமே என்று அழைப்பான். தந்தையும் சரி கணவனும் சரி பெண் என்றாலே பாசமாக இருப்பார்கள். ஆம், ஆண்களைப் பொறுத்தமட்டிலும் பெண்கள் எப்போதுமே தங்கம் தான். இந்த பாசமும் நேசமும் இப்போது மட்டுமில்லை; வள்ளுவர் காலத்திலும் இருந்திருக்கிறது.

ஒவ்வொரு இல்லத்தரசியையும் தங்கம் என்று கூறும் வள்ளுவர் அந்தத் தங்கத்தைக் கொண்டு செய்யப்படும் நல்ல நகைகளைப் போன்றவர்களே நல்ல குழந்தைகள் என்று கீழ்க்காணும் குறளில் கூறுவதைப் பாருங்கள்.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கள் பேறு – 60

மேற்காணும் குறளில் வரும் மங்கலம் என்பது தங்கத்தைக் குறிப்பதாகும். தமிழ் அகராதிகளில் இப்பொருள் இல்லாத காரணத்தினால் மங்கலம் என்ற சொல்லுக்கு ஒழுக்கம், நற்பண்பு என்றெல்லாம் பொருள்கொண்டு விளக்கம் கொடுத்துள்ளனர். இதன் காரணமாக, இல்லத்தரசிகள் தங்கத்தைப் போன்றவர்கள் என்று வள்ளுவர் பெண்ணியத்தைப் போற்றியிருப்பதை இதுவரையிலும் அறிய முடியாமல் போயிற்று. பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் தங்கமே என்று எப்போதும் செல்லமாக அழைத்துப் பாராட்டப்பட்டதாலோ என்னவோ பெண்களுக்குத் தங்கத்தின் மேல் அதிக ஆசை.

பெண்ணும் அன்பும்:

ஒரு பெண்ணின் அன்புக்கு மூன்று விதமான நிலைகள் உண்டென்று கூறலாம். இந்திய சமுதாயத்தில் ஒரு ஆண் வளர்ந்து ஆளாகும் முறையும் பெண் வளர்ந்து ஆளாகும் முறையும் பெருத்த மாறுபாடுகளைக் கொண்டது. பிறந்தது முதல் ஒரு பெண் குழந்தைத் தனது தாயிடமே அதிக ஒட்டுதலுடன் இருக்கும். தனது தாயினைப் பார்த்துப் பார்த்தே பலவற்றைக் கற்றுக் கொள்ளும். தாயிடம் இருந்து ஒரு பெண்குழந்தை கற்றுக் கொள்ளும் பலவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் அன்பு காட்டுதல் என்பது. தாய் தன்னிடம் காட்டும் அன்பினை என்றுமே மறவாமல் நினைவில் கொண்டு அதைப் போற்றி வைத்திருப்பாள் மகள். இதுதான் பெண்ணுடைய அன்பின் முதல்நிலை. இதனை மகடூஉ நிலை என்று அழைப்பர்.

வளர்ந்து ஆளாகிப் பருவமடைந்த பின்னர் ஒரு ஆணைத் திருமணம் செய்துகொண்டு இல்லத்தரசியாக மாறுவது பெண்ணின் இரண்டாவது பிறப்புநிலை. தனது அன்னையிடம் இருந்து கற்றுக் கொண்டு தேக்கி வைத்திருக்கும் அன்பு முழுவதையும் தனது கணவனிடம் காட்டத் தொடங்குவாள் மனைவி. இதுதான் பெண்ணுடைய அன்பின் இரண்டாவது நிலை. இந்த நிலையினை மனைமாட்சி என்று அழைப்பர்.

கணவனும் மனைவியும் செம்புலப் பெயர்நீர் போல நடத்திய இல்லறத்தின் நற்பயனாக நல்ல குழந்தைகளைப் பெறுவாள் மனைவி. மனைவி என்ற பதவியில் இருந்து அம்மா என்ற பதவி உயர்வினைப் பெறுகிறாள். இதுதான் பெண்ணின் மூன்றாவது பிறப்புநிலை. ஒரு பெண்ணுக்குரிய உச்சகட்ட மதிப்பாகக் கருதப்படுவது இந்த நிலையே ஆகும். தனது தாய் தனக்குக் கொடுத்த அன்பு என்னும் சோற்றினைத் தனது கணவன் தன்மேல் கொண்ட காதல் என்னும் பாலுடன் கலந்து குழைத்துத் தனது மகவுக்கு அமுதாக ஊட்டுவாள் தாய். இதுதான் பெண்ணுடைய அன்பின் மூன்றாவது நிலை. இதனைத் தாய்மை நிலை என்று கூறுவர்.

பெண்ணும் பெயர்களும்:

ஒரு பெண் மகளாக, மனைவியாக, தாயாக மூன்று விதமாக வாழ்வதனை மேலே கண்டோம். மகடூஉ, மனைமாட்சி, தாய்மை என்ற மூன்று நிலைகளிலும் அவள் காட்டும் அன்பின் அளவில் மாறுபாடு உண்டு என்றாலும் அன்பு மாறுவதில்லை. மகடூஉவில் அன்பினைப் பெறுபவளாக, மனைமாட்சியில் அன்பைப் பயில்பவளாக, தாய்மையில் அன்பில் முதிர்ந்தவளாக விளங்குகின்ற பெண்ணைக் குறிக்கும் பல்வேறு பெயர்களும் அன்பு சார்ந்ததாகவே அமைக்கப்பட்டுள்ளது என்பது வியப்பானதே.

தாய் மற்றும் மனைவியைக் குறிக்கும் பல்வேறு தமிழ்ப் பெயர்களையும் அவற்றில் இருந்து அன்பினைக் குறிக்கும் பல்வேறு தமிழ்ப் பெயர்கள் எவ்வாறு தோற்றம் பெற்றன என்பதைப் பற்றியும் கீழே விரிவாகக் காணலாம்.

அம்மா என்னும் தாய்மை:

அம்மா என்பதை ஒரு சொல் என்று கூறுவதைக் காட்டிலும் ஒருவரிக் கவிதை என்றே கூறலாம். மழலையின் முதல் சொல் அம்மா. எதையுமே அறியாத புதிய உலகில் யாருமே சொல்லித் தராமல் ஒரு மழலை தானே மிழற்றும் முதல் சொல் அம்மா. இப்படி எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அம்மாவுக்காகப் படைக்கலாம். அத்தனை படைத்த பின்னரும் இன்னும் படைக்க வேண்டும் என்ற ஆவலே மிஞ்சும். அதுதான் அம்மா. அன்பின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் அம்மாவைக் குறிக்கும் பல்வேறு பெயர்களையும் அவற்றில் இருந்து உருவான அன்பைக் குறிக்கும் சொற்களையும் கீழே காணலாம்.

அம்மா >>> அமர்
அன்னை >>> அன்பு
அவ்வை >>> அவா, ஆவல்
ஆச்சி >>> ஆசை, ஆசு
தாய் >>> தயை, தயவு
தாய் >>> தாயிகம் >>> த்யாக~ >>> தியாகம் = தன்னலமின்மை.
ஞாய் >>> நயம், நேயம், நேசம்
யாய் >>> யாப்பு
ஆத்தாள் >>> ஆத்தம், ஆதம்
ஈந்தாள் >>> இதம்
செவிலி >>> சேவை
பயந்தாள் >>> பாசம்
மாதிரு >>> மாதர்
மவ்வை >>> மேவல்
மோய் >>> மோகம்
வீரை >>> பிரியம்
தள்ளை >>> தளை

பி.கு: மேற்காணும் பெயர்கள் அனைத்தும் தமிழே. 

மனைவி என்னும் மனைமாட்சி:

இல்லறத்தைக் கற்பவளாக இருப்பதால் மனைவிக்குக் கற்பாள் என்ற பெயருண்டு. இல்லத்தை ஆள்பவளாக இருப்பதால் அவளுக்கு இல்லாள் என்ற பெயருமுண்டு. மனைவியைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களில் இருந்து தோன்றிய அன்பினைக் குறிக்கும் தமிழ்ப் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மனைவி >>> முன்னம்
கற்பாள் >>> கிருபை
இல்லாள் >>> ஈர், ஈரம்

மனைவியைக் குறிக்கும் பெயர்களில் இருந்து அன்பைக் குறிக்கும் பெயர்கள் தோன்றியதைக் காட்டிலும் அன்பைக் குறிக்கும் பெயர்களில் இருந்து மனைவியைக் குறிக்கத் தோன்றிய பெயர்களே மிக அதிகம். காரணம், திருமணத்திற்குப் பின்னர் அன்பைப் பயிலும் இடமாக மனைவி மாறிவிடுவதே. தாயிடம் பெற்ற அன்பினைக் கணவனின்மேல் காதலாகக் காட்ட, அதற்குக் கைம்மாறாக கணவன் பொழியும் அன்பு மழையில் குழைந்த செம்மண் நிலமாக மாறுவாள் மனைவி. இப்படியாக, கணவனின் மேல் மனைவி காட்டும் அன்பினைக் காதல் என்றும் நட்பு என்றும் கூறலாம். அன்பு / காதல் / நட்பினைக் குறிக்கும் பல்வேறு தமிழ்ச் சொற்களில் இருந்து மனைவியைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள் எவ்வாறு தோன்றின என்று கீழே விரிவாகக் காணலாம்.

கிழமை >>> கிழத்தி >>> களத்திரம்
கிழமை >>> கிழவி >>> களம்
பற்று >>> பத்து >>> பத்தினி
பரிவு >>> பாரி, பாரியை
நசை >>> நாச்சி
அருத்தி >>> அருந்ததி
தருமம் >>> தாரம்
காதல் >>> காந்தை
காமம் >>> காமினி
சால்பு >>> சாலி, சாலினி
தேம் >>> தேவி
நயம் >>> நாயகி
மதுகை >>> வதுகை, வது
வேட்கை >>> வேட்டாள்
சாயல் >>> சாயை
நார் >>> நாரி
கருணை >>> காரிகை
பெட்டு >>> பெண்டு, பெண்டாட்டி
விருப்பம் >>> வீரை

பி.கு: மேற்காணும் பெயர்கள் யாவும் தமிழ்ச் சொற்களே.

முடிவுரை:

இதுவரை கண்டவற்றில் இருந்து, பெண்ணைக் குறிப்பதற்கு எத்தனைப் பெயர்ச் சொற்கள் தமிழில் இருக்கின்றன என்று மேலே கண்டோம். அப் பெயர்ச் சொற்களுடன் அன்பினைக் குறிக்கும் தமிழ்ப் பெயர்களுக்கான உறவினையும் கண்டோம். இப்படி தனது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அன்பின் ஊற்றுக்கண்ணாக பெண் விளங்குவதால் தான் பெண்ணாகப் பிறப்பதற்கு மிகப்பெரிய தவம் செய்திருக்க வேண்டும் என்று சொன்னான் பாரதி. பாரதியின் வாக்கு எந்த அளவிற்கு உண்மை என்பதும் ஏன் பெண்கள் மட்டும் இவ்வளவு பாசத்துடன் இருக்கிறார்கள் என்பதும் விளங்கியிருக்கும். எனவே எந்தவொரு சூழலிலும் பெண்ணை நேசியுங்கள்; கொடுமைப் படுத்த வேண்டாம்; பாலியல் வன்கொடுமை அறவே வேண்டாம்.

மகளை நேசிப்போம் !
மனைவியை மதிப்போம் !!
மவ்வையைப் போற்றுவோம் !!!
அனைத்துப் பெண்களுக்கும்
அன்புடன் சமர்ப்பணம் !!!!