வியாழன், 11 டிசம்பர், 2014

அலங்கு என்பது என்ன?

முன்னுரை:

அலங்கு என்னும் வினைச்சொல்லானது அலங்குதல், அலங்கல் என்ற வடிவங்களில் இலக்கியங்களில் பயின்று வந்துள்ளது. இச் சொல்லுக்கு இக் கால இலக்கிய அகராதிகள் கூறும் பொருட்கள் பல பாடல்களில் பொருந்தாநிலை காணப்படுகிறது. இது இச் சொல்லுக்கு வேறு பொருள்/பொருட்கள் இருப்பதையே காட்டுகிறது. இக் கட்டுரையில் இச் சொல்லின் மூலப் பொருள் என்ன என்பதையும் அதிலிருந்து பிற பொருட்கள் எவ்வாறு கிளைத்தன என்பதையும் பல ஆதாரங்களுடன் விரிவாகக் காணலாம்.

அலங்கு - அகராதிகள் காட்டும் பொருட்கள்:

சென்னைத் தமிழ்ப் பேரகராதி:
 அலங்கு-தல் alaṅku-
, 5 v. intr. [T. K. alagu, M. alaṅṅu, Tu. alaṅgu.] 1. To move, shake, swing, dangle, to be in motion; அசைதல். அலங்குளைப் புரவி (புறநா. 2). 2. To be agitated in mind, troubled; மனந்தத்தளித்தல். (W.) 3. To pity, sympathise; இரங்குதல். (பிங்.) 4. To shine, glitter, flash; ஒளிசெய்தல். (பிங்.)

பேப்ரிசியஸ் அகராதி:
அலங்கு (p. 33) [ alangku ] III. v. i. move, shake, swing, அலை; 2. shine, flash. ஒளிசெய்.

வின்சுலோ அகராதி:
 அலங்கு, (p. 40) [ alngku, ] கிறேன், அலங்கினேன், வேன், அலங்க, v. n. To shine, glitter, flash, ஒளிசெய்ய. 2. To dangle as a garland or locks of hair, move, shake, swing as branches of trees, be in motion as waves, அசைய. 3. To be agitated in mind, be troubled, be in grief, தத்தளிக்க. 4. To pity, sympathize, yearn, grieve, be distressed, இரங்க. (p.)

மேற்கண்டவற்றைத் தொகுத்துப் பார்த்தால், அலங்கு எனும் வினைச்சொல்லுக்கு அசைதல், ஒளிசெய்தல், இரங்குதல், தத்தளித்தல் என்ற பொருட்களே கூறப்பட்டுள்ளதை அறியலாம்.

அலங்கு - சொல் பயிலும் இடங்கள்:

அலங்கு என்னும் வினைச்சொல் பயிலும் பாடல்கள் சிலவற்றை இங்கே காணலாம்.

பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு - திரு 298
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த - பெரும் 83
முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே - மலை 144
அலங்கு கழை நரலும் ஆரி படுகர் - மலை 161
அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலிய - நற் 118/1
அகல் இலை காந்தள் அலங்கு குலை பாய்ந்து - நற் 185/8
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்து - நற் 243/3
நெடும் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த - நற் 292/1
அலங்கு குலை காந்தள் தீண்டி தாது உக - நற் 359/2
பூ உடை அலங்கு சினை புலம்ப தாக்கி - குறு 134/4
சிலம்பு உடன் கமழும் அலங்கு குலை காந்தள் - குறு 239/3
அலங்கு சினை இருந்த அம் சிறை நாரை - குறு 296/2
அலங்கு வெயில் பொதிந்த தாமரை - குறு 376/5
அலங்கு சினை மாஅத்து அணி மயில் இருக்கும் - ஐங் 8/4
அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன்துறை - ஐங் 185/1
அலங்கு மழை பொழிந்த அகன் கண் அருவி - ஐங் 220/1
அலங்கு கதிர் திரு மணி பெறூஉம் - பதி 58/18
இவட்கே அலங்கு இதழ் கோடல் வீ உகுபவை போல் - கலி 7/15
அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின் - கலி 139/8
சுரம் புல்லென்ற ஆற்ற அலங்கு சினை - அகம் 1/15
அலங்கு கழை நரல தாக்கி விலங்கு எழுந்து - அகம் 47/4
அரிஞர் யாத்த அலங்கு தலை பெரும் சூடு - அகம் 84/12
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலை காந்தள் - அகம் 108/15
அலங்கு கதிர் வேய்ந்த அழல் திகழ் நனம் தலை - அகம் 169/2
அலங்கு குலை அலரி தீண்டி தாது உக - அகம் 178/10
அலங்கு கதிர் திகிரி ஆழி போழ - அகம் 224/14
கரும் கோட்டு மாஅத்து அலங்கு சினை புது பூ - அகம் 236/7
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்கு தலை - அகம் 241/11
அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூ - அகம் 245/15
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய - அகம் 272/17
அலங்கு சினை குருந்தின் அல்கு நிழல் வதிய - அகம் 304/10
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் - அகம் 381/5
அலங்கு உளை புரவி ஐவரோடு சினைஇ - புறம் 2/13
நீயே அலங்கு உளை பரீஇ இவுளி - புறம் 4/13
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த - புறம் 22/14
மிசை அலங்கு உளைய பனை போழ் செரீஇ - புறம் 22/21
அலங்கு கதிர் கனலி நால்_வயின் தோன்றினும் - புறம் 35/6
அலங்கு கதிர் சுமந்த கலங்கல் சூழி - புறம் 375/1
அலங்கு உளை அணி இவுளி - புறம் 382/4
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல் - புறம் 325/11
அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம் என - பதி 64/10
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய - பரி 15/21

(நன்றி. திரு. பாண்டியராஜா ஐயா, சங்கம்கன்கார்டன்ஸ். இன்)

அகராதிப் பொருள் பொருந்தா இடங்கள்:
இனி மேற்காணும் பாடல்களில் தற்போதைய அகராதிகள் கூறும் பொருட்கள் பொருந்தா இடங்களைக் காணலாம்.

மேலே கண்ட பாடல்களில், அலங்கு எனும் வினைச்சொல்லானது

சினை என்னும் பெயருடன் 14 இடங்களிலும்

கழை என்னும் பெயருடன் 2 இடங்களிலும் பயின்று வந்துள்ளது.

இதில் சினை என்பதற்கு மரக்கிளை என்ற பொருளில் அலங்கு சினை என்பதற்கு அசைகின்ற மரக்கிளை என்றும்

கழை என்பதற்கு மூங்கில் என்ற பொருளில் அலங்கு கழை என்பதற்கு அசைகின்ற மூங்கில் என்றும் உரை இயற்றியுள்ளனர். இவை இங்கு பொருந்துமா எனில் பொருந்தாது. காரணம்,

சாதாரணமாக சிறுகாற்று வீசும்போது மரத்தில் உள்ள இலைகளும், பூக்களும் அசையுமேயன்றி கிளைகள் அசையாது. அதைப்போல சிறுகாற்றில் மூங்கில் இலைகள் அசையுமே ஒழிய மரம் அசையாது. மேலும் இவற்றின் அசைவினைப் பற்றி இப் பாடல்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய தேவை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே அலங்கு சினை என்பதற்கு அசைகின்ற மரக்கிளை என்று பொருள் கொள்வதும் அலங்கு கழை என்பதற்கு அசைகின்ற மூங்கில் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாகத் தோன்றவில்லை. இச் சொல்லின் மூலம் சினை மற்றும் கழையுடன் தொடர்புடைய வேறு ஏதோ ஒன்றை உணர்த்த முனைந்துள்ளனர் என்பது தான் உண்மை. அதைப் பற்றிக் கீழே காணலாம். 

அலங்கு சினையும் அலங்கு கழையும்:

அலங்கு சினை மற்றும் அலங்கு கழையில் வருகின்ற அலங்குதல் என்னும் வினை குறிக்கும் பொருள் பூத்தல் என்பதாகும். அதாவது,

அலங்கு சினை என்பது பூத்த மரக்கிளை என்றும்
அலங்கு கழை என்பது பூத்த மூங்கில் என்றும் பொருள்படும்.

பூ என்பது எப்படி பூக்கும் செயலையும் (வினைச்சொல்) பூவையும் (பெயர்ச்சொல்) குறிக்கிறதோ அதைப்போல
அலங்கு என்பதும் பூக்கும் வினை மற்றும் பூப்பொருள் ஆகிய இரண்டையும் குறிக்கப் பயன்படுகிறது.

பொதுவாக மரங்கள் ஆண்டு முழுவதும் பூத்திருப்பதில்லை. மரங்களின் பூக்கும் பருவம் பல காரணங்களால் வேறுபடுகின்றது. மரங்கள் பூத்திருக்கும் சமயம் அது பார்ப்போரின் கண்களை ஈர்த்து சிந்தையைக் கவர்கிறது. இதனால் தான் மரங்கள் பூத்திருக்கும் நிலையினை பல பாடல்களில் புலவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளனர். மேலும் மரங்கள் பூக்கும் பருவம் சங்க காலத்தில் மிக இன்றியமையாத நிகழ்வாகக் கருதப்பட்டது. தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன் இன்னின்ன மரங்கள் பூக்கும் காலத்திற்கு முன் திரும்பிவிடுவதாகக் கூறிச் செல்வதைப் பல சங்கப் பாடல்களில் காணலாம். மரங்கள் பூக்கும் நிகழ்வினைக்  குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட பல சொற்களுள் ஒன்று தான் அலங்கு என்பதாகும். இதற்கான ஆதாரங்களைக் கீழே காணலாம்.

ஆதாரங்கள்:

அலங்கு என்பது பூத்தலைக் குறிக்கும் என்பதைக் கீழ்க்காணும் பாடல்கள் நேரடியாகவே உணர்த்துகின்றன.

பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு - திரு 298
பூ உடை அலங்கு சினை புலம்ப தாக்கி - குறு 134/4

பூ உடை அலங்கு சினை என்று கூறுவதில் இருந்து, அலங்கு சினை என்பது பூக்களை உடைய மரக்கிளையே என்பது தெளிவாகிறது. மேலும்,,

இவட்கே அலங்கு இதழ் கோடல் வீ உகுபவை போல் - கலி 7/15
அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின் - கலி 139/8
கரும் கோட்டு மாஅத்து அலங்கு சினை புது பூ - அகம் 236/7
அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூ - அகம் 245/15
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய - அகம் 272/17

என்ற பாடல்களில் மரங்கள் பூத்திருக்கும் நிலை நேரடியாகக் கூறப்பட்டுள்ளதுடன், அலங்கு எனும் சொல்லுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளதில் இருந்து அலங்கு என்னும் சொல் பூத்தலையே குறிப்பது தெளிவு. இவைதவிர இன்னொரு ஆதாரத்தையும் கீழே காணலாம்.

அலங்கல் என்னும் சொல்லுக்குப் பொருள் பூமாலை என்று அகராதிகள் கூறுகின்றன.

சென்னைத் தமிழ்ப் பேரகராதி:
 அலங்கல் alaṅkal , n. < அலங்கு-. 1. Wreath, garland; பூமாலை. (பிங்.) 2. Wreath for the hair; மயிர்ச்சூட்டுமாலை. (பிங்.) 3. Sprout; தளிர். (பிங்.) 4. Waving ear of corn; அசையுங் கதிர். (அகநா. 13, உரை.) 5. Regularity, arrangement, order; ஒழுங்கு. (குருபரம். ஆறா. 121.)

வின்சுலோ அகராதி:
அலங்கல், (p. 40) [ alngkl, ] s. A sprout, தளிர். 2. A garland, a wreath, பூமாலை.

இந்த அலங்கல் என்னும் சொல்லானது அலங்கு என்னும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். அலங்கல் என்பது அலங்கினால் அதாவது பூக்களால் ஆன மாலையைக் குறிப்பதில் இருந்து அலங்கு என்பது பூ / பூத்தலைக் குறிப்பது உறுதிப்படுத்தப் படுகிறது.

அலங்கு குறிக்கும் பிற பொருட்கள்:

அலங்கு என்னும் சொல், அகராதிகளில் இதுவரை கூறப்படாத புதிய பொருளாக, பூ / பூத்தல் என்ற பொருளை மட்டும் குறிக்காமல் சில இடங்களில் வேறு சில புதிய  பொருட்களைக் குறித்தும் வருகிறது. அவற்றையும் ஈண்டு காண்போம்.

அலங்கு என்பது கிளைத்தல் என்னும் பொருளில் கீழ்க்காணும் பாடலில் வருகின்றது.

மரா மலர்த்தாரின் மாண் வரத் தோன்றி,
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய - பரி 15/21

இதன் பொருளானது: மராமலர்களால் ஆன மாலைபோல, இரண்டாகக் கிளைக்கும் (அலங்கும்) அருவியானது பின்னர் ஓரிடத்தில் ஒன்றாகி (ஆர்த்து) பேரிரைச்சலுடன் ஒலித்து (இமிழ்பு) கீழே இறங்க (இழிய).

அலங்கு என்பது மின்னுதல் என்னும் பொருளில் கீழ்க்காணும் பாடலில் வருகின்றது.

அலங்கு மழை பொழிந்த அகன் கண் அருவி - ஐங் 220/1

மின்னிய மேகங்கள் பொழிந்ததால் அகன்ற இடத்தில் தோன்றிய அருவி என்பது இதன் பொருள்.

வேர்ச்சொல் ஆய்வு:

இனி, அலங்கு என்பது எவ்வாறு பூத்தல், கிளைத்தல், மின்னுதல் ஆகிய பொருட்களைக் குறிக்கும் என்பதை வேர்ச்சொல் ஆய்வின் மூலம் காணலாம்.

அலங்கு என்னும் வினையின் முதன்மைப் பொருளானது வெளிப்பட்டுத் தோன்றுதல் என்பதாகும். இதிலிருந்தே பிற பொருட்கள் தோன்றின. இது கீழே காட்டப்பட்டுள்ளது.

அலங்குதல் = பூத்தல் ---> கிளைகளில் இருந்து புதியதாக வெளிப்பட்டுத் தோன்றுதல் என்ற பொருளில்.
அலங்குதல் = கிளைத்தல் ----> மரத்தில் இருந்து புதியதாக வெளிப்பட்டுத் தோன்றுதல் என்ற பொருளில். 
அலங்குதல் = மின்னுதல் / ஒளிர்தல் -----> வானத்தில் புதியதாக வெளிப்பட்டுத் தோன்றுதல் என்ற பொருளில். (அலங்கல் = ஒளி. அகராதி காண்க.)

முடிவுரை:

சங்க காலத்தில் குதிரையின் தலைக்கு மேலே பூக்களால் ஆன அணியினைச் சூட்டியிருக்கிறார்கள். இதையே அலங்கு உளை என்று பாடல்கள் குறிப்பிடுகின்றன. குதிரை நடக்கும்போதோ ஓடும்போதோ இந்த அலங்கு உளை பக்கவாட்டில் அசைந்தாடும். இதில் இருந்தே அலங்கு என்னும் சொல்லுக்கு அசைதல் என்ற பொருள் பிற்பாடு தோன்றி இருக்கக் கூடும். மேலும் நாம் இக்காலத்தில் வடமொழியாகக் கருதி பயன்படுத்துகின்ற அலங்காரம் என்னும் சொல் உண்மையில் பூக்களால் ஆன மாலை அணியினையே ( அலங்கு + ஆரம் ) ஆதியில் குறித்துவந்தது. நாளடைவில் வேறு அணிகளையும் குறிக்கப் பயன்படலாயிற்று.
===================== தமிழ் வாழ்க! ===================

செவ்வாய், 18 நவம்பர், 2014

குயம் என்றால் என்ன?

முன்னுரை:

குயம் என்ற சொல்லுக்கு இன்றைய நிகண்டுகள் கீழ்க்காணும் பொருட்களைத் தருகின்றன.

திவாகர நிகண்டு        குயம் = 360 - கொங்கை சொர்க்கம் குயம் தனம் நகிலம் தங்கிய குரூஉகண் அம்மம் பயோதரம் இங்கிவை மாதர் முலை என இசைப்பர்.
                     1158 - குயமும் புள்ளமும் கொடுவாளாகும்.
                     1938  அரிவையர் முலையும் கொடுவாளும் இளமையும் கருதில் இம்மூன்றும் குயமெனக் கருதுவர்
பிங்கள நிகண்டு        குயம் =  3396 - கொங்கையும் அரிவாளும் குயம் எனப்படுமே
உரிச்சொல் நிகண்டு  குயம் = 228 இலையும் நிலனும் தலம் கொடுவாளும் குயம்
கயாதர நிகண்டு        குயம்   = 471 கோதையர் கொங்கை கொடுவாள் இளமை குயமது என்க
பாரதி தீப நிகண்டு  குயம்    = குயம் சொர்க்கம் கொங்கை தனம் நகிலமே குரூஉக்கண் அம்மம் பயோதரம் என் முலையே
ரேவண சித்தர் அகராதி நிகண்டு    குயம்    = குயமென்பதுவே இளமையும் அரிவாள் எனவும் ஆகும் முப்பேரே
சூடாமணிநிகண்டு குயம் = 158 தனம் இளமையோடு கூரரிவாளும் முப்பேர்
ஆசிரிய நிகண்டு      குயம்    = 87 பேசும் நகிலம் கொங்கை அம்மம் பயோதரம் பெருகிய தனம் குரூஉகண் பெருமை பெரு கொங்கை சுவர்க்கம் பறம்பு உடன் பெருத்த குயம் முலையின் பெயர். 
வட மலை நிகண்டு  குயம்    =  குயமெனும் பெயரே இளமையும் முலையும் கொடுவாளெனவும் கூறப்படுமே
அரும்பொருள் விளக்க நிகண்டு குயம்    =378 குயம் முலை   அரிவாளின்பேர் கொழுமை சேர் இளமையுமே
பொதிகை நிகண்டு குயம்  = 790 குயம் அரிவாளும் கொங்கையும் இளமையும்
நாமதீப நிகண்டு குயம் = 417 அரிவாள் புள்ளம் கொடுவாள் குயம்
                           582 கொம்மை குரூஉக்கண் சுவர்க்கம் கொங்கை நகில் செக்கை பறம்பு அம்மம் பயோதரம் குயம் தனம் முலை
நானார்த்த தீபிகை  குயம் 587 குயமே கொடுவாள் இளமை முலை
அபிதான மாலை  குயம் = 448  முலை அம்மம் உரோருகம் சொர்க்கம் குரூஉகண் செக்கை கொங்கை  தனம் நகிலம் பறம்பு மெய்க்கதிர் ஆமெனப் புகல்வர்
வேதகிரியார் சூடாமணி நிகண்டு குயம் 297 குயம் தனம் இளமையோடு கூரரிவாளும் முப்பேர்.
(நன்றி: திரு. நு. த. லோகசுந்தரம் ஐயா அவர்கள்)

இச் சொல்லுக்கு இணையத் தமிழ் அகராதிகள் கீழ்க்காணும் பொருட்களைத் தருகின்றன.

சென்னைத் தமிழ்ப் பேரகராதி:  குயம்¹ kuyam n. perh. கொய்-. 1. Sickle, reaping-hook, curved knife, அரிவாள். கொடுவாய்க் குயத்து (சிலப். 16, 30). 2. Razor; நாவிதன் கத்தி. அருங்குயந் தான்களைந்து (சீவக. 2500). 3. Potter caste; குயச்சாதி., n. prob. 4. குழ. Juvenility, youth; இளமை. (திவா.), 5. < kuca. Woman's breast; முலை. குச்சிலியமாதர் குயமும் (தனிப்பா. ii, 75, 190), 6. n. < kuša. Darbha grass. See தருப்பை.

பேப்ரிசியஸ் அகராதி: குயம் (p. 266) [ kuyam ] , s. juvenility, இளமை; 2. a sickle, அரிவாள்; 3. the potter caste. குயவன், (fem. குயத்தி) see குசவன் under குசம்., (p. 266) [ kuyam ] {*}, s. breast, முலை; 2. sacrificial grass, தருப்பை.

வின்சுலோ அகராதி: குயம், (p. 328) [ *kuyam, ] s. Female breast, முலை. Wils. p. 225. KUCHA. 2. Juvenility, youthful ness, இளமை. (Compare கயம்.) 3. A sickle, a reaping hook, a curved knife; wrought iron, கொடுவாள். 4. Sacrificial grass, தருப்பை Wils. p. 235. KUS'A.

மேலே கூறியவற்றைத் தொகுத்துக் காணுமிடத்து, குயம் என்பதற்கு கீழ்க்காணும் பொருட்கள் இருப்பதாகத் தெரிகிறது.

குயம் = அரிவாள், முலை, இளமை, தருப்பைப்புல், நிலம், இலை, ஒருவகை சாதி.

இப் பொருட்களைப் பார்த்தால், ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையாக இருப்பதை அறியலாம். ஆனாலும், இப் பொருட்களுக்கிடையே ஒரு தொடர்பு உண்டு. அது என்ன என்பதைப் பற்றியும் இப் பொருட்கள் எதிலிருந்து எவ்வாறு தோன்றின என்பதைப் பற்றியும் ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

குயம் - ஆணிவேரும் சல்லிவேர்களும்:

முதலில் குயம் என்ற சொல்லின் வேர்மூலம் அதாவது ஆணிவேர் என்ன என்று காணலாம்.

குயம் என்ற சொல்லில் இருந்து அம் என்ற விகுதியைக் களைந்தால் மிஞ்சுகின்ற குய் என்பதே இதன் மூல வேர்ச்சொல்லாகும். 

குய் என்ற வேர் குறிக்கும் முதன்மைப் பொருள் குழைதல் என்பதாகும். இறுகிய (அ) உறைந்த நிலையில் இருந்து ஒரு பொருள் இளகிய நிலையினை எய்துவதே குழைதல் என்று பொதுவாகக் குறிக்கப் பெறுகிறது.

குழைவான நிலையில் இருக்கும் பொருட்களுக்கு வளைந்து கொடுக்கும் பண்பும் மென்மைத் தன்மையும் உண்டு. ஆக,

குழைதல் என்ற முதன்மைப் பொருளில் இருந்து வளைதல் மற்றும் மென்மையாதல் ஆகிய இரண்டு விரிவாக்கப் பொருட்கள் பெறப்படுகின்றன. இனி,

குழைதல் பொருளைக் குறிக்க யகரத்தைக் கொண்டால், வளைதலைக் குறிக்க யகரத்தின் இன எழுத்தான சகரத்தையும், மென்மையாதலைக் குறிக்க இன்னொரு இன எழுத்தான ஞகரத்தையும் கொள்ளமுடியும். ஆனால், இப்படியானதோர் பகுப்புமுறையினை நடைமுறைப் படுத்தும்போது சிக்கல்கள் இருந்ததால், ய, ச, ஞ என்ற மூன்று எழுத்துக்களும் குழைதல், வளைதல், மென்மையாதல் ஆகிய பொருட்களில் எதைக் குறிக்க வேண்டுமானாலும் பயன்படுத்தப் பட்டன. அவ்வகையில்,

குய் என்ற ஆணிவேரில் இருந்து,

குச், குஞ் என்ற இரண்டு சல்லிவேர்கள் தோன்றின எனலாம்.


சொல் - பொருள் தொடர்பு:

இனி, குயம் என்ற சொல் குறிக்கும் மேலே கண்ட பல்வேறு பொருட்களுக்கிடையிலான தொடர்பு என்ன என்று காணலாம்.

குயம் = முலை - இது குழையும் பண்பினால் தோன்றிய பெயராகும்.
குயம் = அரிவாள் / கொடுவாள் - இது வளைந்த பண்பினால் தோன்றிய பெயராகும்.
குயம் = மட்பாண்டம் செய்யும் ஒருவகை சாதியினர். மண்ணைக் குழைத்து பாண்டங்கள் செய்வதால் இவர்கள் குயவர் எனப்பட்டனர். 
குயம் = தருப்பைப்புல் - இது நீண்டு வளைந்து தொங்குவதால் தோன்றிய பெயராகும்.
குயம் = நிலம் - இது குழைக்கப்பட்ட மண் என்ற பொருளில் ஆகுபெயராய் நிலத்தையும் குறித்தது.
குயம் = இளமை - இது குழைதல், வளைதல், மென்மையாதல் ஆகிய மூன்று பண்புகளையும் உடைய பெயராகும்.
குயம் = இலை - இதுவும் புல்லைப் போலவே வளைந்து தொங்குவதால் தோன்றிய பெயராம்.

விரிவாக்கப் பொருட்கள்:

குயம் என்ற சொல்லுக்கு எவ்வாறு இத்தனைப் பொருட்கள் தோன்றின என்பதை மேலே கண்டோம். இனி, இப் பொருட்களைத் தவிர, வேறு சில பொருட்கள் எவ்வாறு இந்த மூலவேர் மற்றும் சல்லிவேர்களில் இருந்து தோன்றின என்பதையும் இங்கே காணலாம்.

குய் = நெய் / எண்ணை - இது குழையும் பண்பினால் பிறந்த பெயர்.
குய்ப்புகை = நெய் / எண்ணையால் தாளிக்கும் புகை.
குயக்குண்டு = குயவர் மண்ணெடுத்த குழி.

குச்சு / குச்சம் = நாணல் புல்.
குச்சி = புல்லின் தண்டுப் பகுதி, இலைகள் தொங்குகின்ற மெலிந்த மரக்கிளை.
குச்சில் = புல்லால் வேய்ந்த வீடு.
குசம் = முலை.
குசமசக்கு = குழப்பம்.

குசினி = சமையல் அறை. சமைத்தல் என்பது அரிசி / பிற பொருட்களை குழையச்செய்யும் வினையே என்பதால், குசினி என்ற இந்த தமிழ்ச்சொல்லில் இருந்தே சமையலைக் குறிக்கும் cuisine என்ற சொல் பிறந்தது என்றால் மிகையாகாது.
குசினிக்காரன் = சமையல்காரன்.

குஞ்சம் = புல்லின் நுனியில் வளைந்து தொங்கும் நீண்ட மென்மையான பூ, மென்மையான பூங்கொத்து, மென்மையான துணி.
குஞ்சி = ஆண்குறி - வளைந்து தொங்குவது என்ற பொருளில்.
குஞ்சியப்பன் = சித்தப்பன் - அப்பாவுக்கு இளையவர் என்ற பொருளில்.
குஞ்சியாயி / குஞ்சியாய்ச்சி = சித்தி - அம்மாவுக்கு இளையவர் என்ற பொருளில்.
குஞ்சு = பறவைகளின் இளமைப் பெயர்.
குஞ்சிதம் = வளைந்தது.
குஞ்சரம் = துதிக்கை. நீண்டு வளைந்து தொங்கும் கை யானையின் சிறப்பாதலால், ஆகுபெயராய் யானைக்கு வழங்கியது.

குயம் மண்டு ஆகம் :

அகநானூற்றில் 48 ஆம் பாடலில் குயம் மண்டு ஆகம் என்ற சொல்லாட்சி வருகிறது. இதற்கு எப்படி பொருள் கொள்வது என்பதைப் பற்றி இங்கே காணலாம். அப் பாடலின் குறிப்பிட்ட வரிகள் கீழே தரப்பட்டுள்ளது.

"அன்னாய்! வாழி! வேண்டு அன்னை! நின்மகள்
.........................................................................................
ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆய்இதழ்
ஊசி போகிய சூழ்செய் மாலையன்,
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்,
குயம்மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி,
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு
..............................................................................
அதன்அளவு உண்டுகோள், மதிவல் லோர்க்கே.

மேற்காணும் பாடலில் குயம் என்பதற்கு முலை என்றோ அகராதிகள் குறிப்பிடும் ஏனைய பொருட்களையோ கொண்டால் பொருள் பொருந்தாததுடன், நகைப்புக்குரியதாகவும் ஆகிவிடும் என்பதால், இச் சொல்லுக்கு இங்கே புதிய பொருள் ஒன்று இருப்பது உறுதியாகிறது. அப் புதிய பொருள் என்ன என்று காணும் முன்னர் அத் தொடரின் உண்மையான வடிவத்தை நாம் அறிய வேண்டும். ஒலைச் சுவடிகளில் செய்யுள் எழுதும்போது சொற்களைத் தனித்தனியாக எழுதாமல் சேர்த்தே எழுதுவர். சான்றாக,

குயம் மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி என்பதற்குப் பதிலாக,
குயம் மண்டாகச் செஞ்சாந்து நீவி என்றே எழுதுவர்.

இதைச் சொற்களாகப் பிரித்து எழுதும்போதுதான் தவறு நேர்கிறது. அப்படியானதோர் தவறினால் தான் இத் தொடருக்குத் தவறான பொருளும் கொள்ள ஏதுவாகிவிட்டது. இனி இதைச் சரியாகப் பிரித்தோமென்றால்,

குயம் மண்டு ஆக செஞ்சாந்து நீவி என்று வரும்.

இதில் வரும் குயம் என்பதற்கான புதிய பொருள் எண்ணை / நெய் என்பதாகும். இதை நாம் முன்னரே குய்ப்புகையில் கண்டோம்.

மண்டு என்பதற்கு மிகுதி என்று பொருள். எனவே மண்டாக என்பது மிகுதியாக என்ற பொருளைத் தரும். இனி, இத் தொடரின் சரியான பொருள் இதுதான்:

நெய்ப்பு மிகுதியாக செஞ்சாந்தினைப் பூசி வரிகள் எழுதப்பட்ட வில்லினை உடையவன்.
அந்த ஆடவன் அணிந்திருந்த மாலை மற்றும் கண்ணியினைப் பற்றிச் சொன்னவள்,  அவன் கையில் பிடித்திருந்த வில்லினைப் பற்றிக் கூறுமிடத்து, அந்த வில்லானது நெய்ப்பு மிகுதியால் பளபளப்பாக இருந்ததுடன், அதில் சிகப்பு வண்ண வரிகள் எழுதப்பட்டு அழகுடன் இருந்ததாகக் கூறுகிறாள். பொதுவாக வில்லைப் பராமரிப்பதற்கு அதில் எண்ணை பூசுவது வழக்கம். இது சங்க காலத்திலும் இருந்திருக்கிறது என்பதற்கு இப்பாடல் ஒரு சான்று.

முடிவுரை:

மேலே கண்டவற்றில் இருந்து இதுவரை பிற மொழியாகக் கருதப்பட்டு வந்த குசினி, குஞ்சரம், குஞ்சித, குசம், குயம் போன்ற சொற்கள் யாவும் தமிழ்ச் சொற்களே என்பதை அறியலாம். இதேபோல விரிவான சொல் ஆய்வுகள் செய்வதன் மூலம் தமிழில் இருந்து பிற மொழிக்குச் சென்று இன்றைய நிலையில் பிறமொழிச் சொல்லாகவே அறியப்படும் பல சொற்களை தக்க ஆதாரங்களுடன் மீட்டெடுக்க முடியும்.
================= தமிழ் வாழ்க!====================

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

நான்கு கடவுள் - பகுதி 6 ( இந்தியா - திராவிடம் - தமிழ் )

முன்னுரை:

நான்கு கடவுள் ஐந்தாம் பகுதியின் தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியிடப்படுகிறது. நான்கு கடவுள் மூன்றாம் பகுதியில் தொல்தமிழகமானது இன்றைய இந்தியாவின் எப்பகுதியில் அமைந்திருந்தது என்பதை ஆதாரங்களுடன் கண்டோம். நான்காம் பகுதியில் மகாபாரதப்போரானது தமிழ் மன்னர் ஐவருக்கும் வேற்றினத்தவர் நூற்றுவருக்கும் இடையில் நடந்த போரே என்பதைக் கண்டோம். ஐந்தாம் பகுதியில் சிலப்பதிகாரத்தில் விரிவாகப் பாடப்பட்ட இந்திரவிழாவே இன்றைய தைப்பொங்கல் விழாவின் முன்னோடி என்பதைக் கண்டோம். இந்த ஆறாம் பகுதியில் இந்தியா, திராவிடம், தமிழ் ஆகிய பெயர்கள் எவ்வாறு தோன்றின என்பதைப் பற்றி ஆதாரங்களுடன் காண இருக்கின்றோம். இதற்கு முதலில் இப் பெயர்களுடன் தொடர்புடைய பிற பெயர்களைப் பற்றியும் அவற்றின் தோற்றம் குறித்த இன்றைய கருத்துக்கள் என்னென்ன என்பதைப் பற்றியும் காணலாம்.

இந்தியா :

நாம் வாழ்ந்து வரும் இந்தியத் திருநாட்டிற்குப் பழங்காலத்தில் பல பெயர்கள் உண்டு. இந்துஸ்தான், பாரதம், ஜம்புதுவீபம், நபிவருஷம், பாரதவருஷம் போன்றவை அவற்றுள் சில. அதுமட்டுமின்றி, பல மொழிகளில் இந்தியாவிற்குப் பல பெயர்களும் உண்டு. சான்றாக, ஜப்பான் மொழியில் இந்தியாவானது 'தெஞ்சிகு' என்றும், சீன மொழியில் 'யிந்து' என்றும், ஹிப்ரு மொழியில் 'ஹொது' என்றும், செங்கிருதத்தில் 'ஆர்யவர்தம்' என்றும் அழைக்கப்படுகிறது. இதைப் பற்றிய மேலதிக செய்திகளை விக்கிப்பீடியாவில் 'இந்தியாவின் பெயர்கள்' என்ற ஆங்கிலத்தலைப்பிலும் 'ஆர்யவர்த்தா' என்ற ஆங்கிலத்தலைப்பிலும் காணலாம்.

இனி இந்தியாவின் பெயர்கள் எவ்வாறு தோன்றின என்பதைப் பற்றித் தற்போதைய கருத்துக்கள் என்னென்ன என்று காணலாம். 

1) சிந்து நதிக்கரையில் அமைந்திருந்தபடியால் இந்தியா என்று அழைக்கப்படலாயிற்று.
2) பரதன் என்ற மன்னனால் ஆளப்பட்டமையால் பாரதம் / பாரதவருஷம் என்று அழைக்கப்படலாயிற்று.
3) நபிராஜா என்ற மன்னனால் ஆளப்பட்டமையால் நபிவருஷம் என்று அழைக்கப்படலாயிற்று.
4) நாவல் மரங்கள் நிறைந்த நாடாக அறியப்பட்டமையால் ஜம்புதுவீபம் என்று அழைக்கப்படலாயிற்று.

திராவிடம் / திராவிடர் :

பல்லாண்டு காலமாக வரலாற்று அறிஞர்கள் மற்றும் மொழியியல் அறிஞர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டும் தொடர்ந்து பேசப்பட்டும் வருகின்ற பெயர்ச்சொல் இதுவேயாகும். திராவிடர் என்ற சொல் தமிழர்களை மட்டுமின்றி தெலுங்கர், கன்னடியர், மலையாளிகளையும் சேர்த்துக் குறிப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த திராவிடர் என்ற சொல்லின் மூலம் திராவிடம் என்பதாகும். திராவிட நாட்டில் வசிக்கும் மக்கள் அனைவரும் திராவிடர் என்று குறிப்பிடப்பட்டனர். இந்தியாவின் தென்பகுதியில் வாழ்ந்த மக்கள் அனைவரும் திராவிடர் என்று பொதுவாக அறியப்பட்டதால், திராவிடர் என்ற இப் பெயரானது உறுதியாக தமிழர், தெலுங்கர், கன்னடியர் மற்றும் மலையாளிகளால் உருவாக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. 

ஆம், இந்தியாவின் வடபகுதியில் வாழ்ந்துவந்த வேற்றினத்து மக்களால் வழங்கப்பட்ட பெயரே திராவிடம் / திராவிடர் என்பதாகும். இப் பெயர் எவ்வாறு தோன்றியது என்பதைப் பற்றிக் காணும்முன்னர், அது குறித்து தற்போதிய கருத்துக்கள் என்னென்ன என்பதைக் காணலாம்.

1) த்ரமிள என்ற சொல்லே திரிபுற்று திரவிட என்று வழங்கலாயிற்று என்பது பெரும்பான்மை அறிஞர்களின் கருத்தாகும்.
2) திராவிடம் என்ற சொல் செங்கிருதத்தில் இருந்து வந்தது என்றும் இதை 'த்ர+விட்' என்று பிரித்து, இதற்கு 'தோல்வியுற்று ஓடி ஒளிந்த இடம்' என்று பொருள்கொண்டு, திராவிடர் என்றால் ஆரியப் படையிடம் தோற்று ஓடி ஒளிந்தவர்கள் என்று பொருள் கொள்கின்றனர் சிலர்.


தமிழ்:

அமிழ்தினும் இனிய மொழியாம் தமிழுக்கு அதன் பெயர் (தமிழ்) எவ்வாறு வந்தது என்பதைப் பற்றியும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

1) தமிழானது 'தமி' என்ற சொல்லின் அடிப்படையில் பிறந்த பெயரென்றும் இதற்கு 'தனித்துவமானது' 'தனியாக இயங்க வல்லது' என்ற பொருள் கொள்வார் சிலர்.
2) தம்+மொழி என்பதே திரிபுற்று தமிழ் என்றானது என்பது இன்னொரு சாராரின் கருத்தாகும்.
3) த்ரமிள என்ற சொல்லே திரிபுற்று தமிழ் என்றானது என்பது பெரும்பான்மையோர் கருத்தாகும்.

புதிய கருத்து:

இதுகாறும் இந்தியா, திராவிடம், தமிழ் ஆகிய பெயர்கள் தொடர்பாக பலரது கருத்துக்களைக் கண்டோம். இனி, இப் பெயர்களின் தோற்றம் குறித்த புதியதோர் கருத்தினைக் கீழே காணலாம்.

இந்தியா, திராவிடம், தமிழ் என்ற மூன்று பெயர்களுமே இந்திரவிழா என்ற பெயரில் இருந்தே உருவாகி இருக்கக் கூடும்  என்பதே அப் புதிய கருத்தாகும்.

இந்திரவிழா என்ற சொல் இரண்டாக பிரிந்து இந்து, த்ரவிழா என்று வழங்கப்பட்டது. இதில்,

இந்து என்பதுடன் ஸ்தான் என்ற சொல்லை சேர்த்து இந்துஸ்தான் என்று இந்தியாவின் வடபகுதியினைக் குறித்தனர்.

வடபகுதியில் இருந்து தெற்குநோக்கி வந்தவர்கள் தங்கிய இடம் த்ரவிட என்று அழைக்கப்பட்டது. இது த்ரவிழ என்பதன் திரிபாகும்.

த்ரவிழ என்பது மேலும் திரிந்து த்ரமிழ என்றாகி தமிழ என்றானது.

ஆக, இந்தியா, திராவிடம், தமிழ் ஆகிய மூன்று பெயர்களின் தோற்றத்திற்கும் அடிப்படையாய் அமைந்தது இந்திரவிழா என்னும் ஒரு பெயரே என்பது இங்கு அறியப்பட்டது. இதனை சில ஆதாரங்களுடன் இங்கே நிறுவலாம்.

நிறுவுதல்:

நான்கு கடவுள் மூன்று மற்றும் நான்காம் பகுதிக் கட்டுரைகளில் தொல்தமிழகமானது இந்தியாவின் வடக்குப் பகுதியில் அமைந்திருந்தது என்றும் இதில் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்ற ஐவகை நிலங்கள் தனித்தனியே அமைந்திருந்தது என்றும் கண்டோம். இந்த ஐவகை நிலங்கள் தனித்தனியே இருந்தாலும் இவற்றை ஒருங்கிணைக்கும் நிலமாகவும் மையநிலமாகவும் பெரிய நிலமாகவும் மருதமே விளங்கிற்று எனலாம். இந்த மருதநிலத்து மக்களால் முதன்முதலில் துவக்கப்பட்டு பின்னர் ஆண்டுதோறும் அம் மக்களால் கதிரவனுக்கு எடுக்கப்பட்டு வந்த விழாவே இந்திரவிழாவாகும். நாளடைவில் இந்த இந்திரவிழாவில் மருதநில மக்கள் மட்டுமின்றி ஏனையோரும் கலந்துகொள்ள, அது ஒரு பெரும் விழாவாக, தமிழர் விழாவாக மாறியது. இந்த விழாவின் மூலம் தமிழரின் ஒற்றுமை வலுப்பட்டதால் தான் மகாபாரதப் போரில் தமிழர்களால் வேற்றினத்தவர் நூற்றுவரை தோற்கடிக்க முடிந்தது என்றால் அது மிகையில்லை.

இப்படி தமிழ்மக்கள் அனைவராலும் பெரும்விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்த இந்திரவிழாவின் பெருமையினை அறிந்த பிற தேசத்தவர் தொல்தமிழகத்தினை 'இந்திரவிழா' நாடு என்றே அழைக்கலாயினர். நாளடைவில், தமிழ் மன்னர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குலைய, படையெடுத்துவந்த வேற்றினத்தவரிடம் தோற்று வடபுலம் நீங்கி தென்புலம் பெயரலாயினர்.

இப்படி இந்தியாவின் வடபுலத்தை வெற்றிகண்ட வேற்றினத்தவருக்கு இந்திரவிழா என்ற நீண்ட பெயர் பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் அப் பெயரை இந்து , த்ரவிழ என்று இரண்டாகப் பிரித்தனர். தாம் வெற்றி கொண்ட வடபுலத்திற்கு இந்து என்ற சொல்லுடன் ஸ்தான் என்ற தம் மொழிச்சொல்லைச் சேர்த்து இந்துஸ்தான் என்று அழைக்கலாயினர். தம்மிடம் தோற்றோடிய மன்னர்கள் சென்று தங்கிய தென்பகுதியினை த்ரவிழ என்று அழைக்கலாயினர். நாளடைவில் அதுவே த்ரமிழ, த்ரவிட என்று மருவ இவற்றிலிருந்து தமிழ், திரவிடம் என்ற பெயர்கள் தோன்றலாயின.

இந்துஸ்தான் என்ற பெயரில் இருந்தே இந்தியா என்ற பெயர் தோன்றியது. இருந்தாலும், இந்துஸ்தான் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

முடிவுரை:

இந்தியா, தமிழ், திராவிடம் போன்ற பெயர்களின் தோற்றம் குறித்து மேலே கூறப்பட்ட கருத்துக்கள் யாவும் ஒரு கோணமே ஆகும். இந்தியாவில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இனத்தவரின் படையெடுப்பு நடந்தது என்பதையும் அதிலும் குறிப்பாக வளம் நிறைந்த வடபுலமே அதிகமாக படையெடுக்கப்பட்டது என்பதையும் நாமறிவோம். இதனால் தென்புலம் நோக்கி  நிரந்தரமாகப் புலம் பெயர்ந்த தமிழர்கள் அவரவர் விருப்பத்திற்கேற்ப பிரிந்து வாழத்துவங்க, இதுவே தமிழில் இருந்து பல கிளை மொழிகள் தோன்றக் காரணமாயிற்று எனலாம்.

புதன், 9 ஏப்ரல், 2014

ஆதிபகவன் - உலகின் முதல் உழவன் !

முன்னுரை:

ஆதிபகவன் யார் என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகமாக இக் கட்டுரை வெளிவருகிறது. ஆதிபகவன் யார் என்ற கட்டுரையில், ஆதிபகவன் என்ற சொல்லுக்குப் பதிலாக ஆதியகவன் என்ற சொல்லை பாடபேதமாகக் கொண்டு அச் சொல்லுக்கு 'காரண அறிவானவன்' என்ற பொருள் கொண்டு, இறைவன் காரண அறிவின் வடிவினனாய் இருக்கிறான் என்று வள்ளுவர் கூறுவதாக உரை கூறப்பட்டது. இனி, இக் கட்டுரையில் இந்த ஆதிபகவன் என்ற சொல்லை வேறொரு புதிய கோணத்தில் இருந்து ஆய்வுசெய்து புதியதோர் உரைவிளக்கம் முன்வைக்கப்படுகிறது. அப்படியானால், முன்னர் கூறப்பட்ட விளக்க உரை தவறா? என்று நினைத்தல் வேண்டற்பாலது. ஏனெனில், வள்ளுவரால் எழுதப்பட்ட உண்மையான திருக்குறள் ஒலைச்சுவடிகளை யாரும் இதுவரை கண்டதில்லை. இந் நிலையில், தற்போது கிடைத்து இருக்கும் குறள்களில் பாடபேதங்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். ஆகவே, கூடியவரை மிகப் பொருத்தமாக உள்ள பாடபேதங்களைக் கண்டறிந்து அவற்றின் அடிப்படையில் குறளுக்குப் புதிய கருத்துக்களை முன்வைப்பதில் தவறில்லை. மேலும், ஏனைய கட்டுரைகளைப் போலவே, இக் கட்டுரையும் வள்ளுவரின் நுண்மாண் நுழைபுலத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் என்பதிலும் ஐயமில்லை.

ஆதிபகவன் - யார்?

திருக்குறளின் முதல் குறளில் வருகின்ற இந்த ஆதிபகவன் என்ற சொல்லைப் பற்றிப் பல ஆண்டுகளாக பல அறிஞர்கள் ஆய்வுமேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொருவரும் அவரவர் புலமைக்கு ஏற்றவாறு அவரவர் கருத்துக்களை முன்வைக்கின்றனர். இருப்பினும், இக் கருத்துக்களால் திருவள்ளுவரின் மாட்சி மேம்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதே கேள்வி. இதுகாறும் இக் குறளுக்கு உரைக்கப்பட்ட விளக்கங்கள் எவையும் வள்ளுவரின் மாண்புக்கு அணிசேர்க்கவில்லை. காரணம், இவ் விளக்கங்கள் அனைத்தும் திருவள்ளுவரை ஏதேனும் ஒரு சமயத்தை சார்ந்தவராகவே காட்ட முற்படுகின்றன. உலகப் பொதுமறை என்று போற்றப்படும் ஒரு நூலாகிய திருக்குறளில் குறிப்பிட்ட சமயம் சார்ந்த கருத்துக்கள் மலிந்து கிடக்குமானால், அது எங்ஙனம் உலகப் பொதுமறையாகத் திகழ முடியும்?. எனவே, இந்த ஆதிபகவன் என்ற சொல்லானது எந்த ஒரு குறிப்பிட்ட சமய சார்புமின்றி, அனைத்து சமய மக்களுக்குப் பொதுவானதாகவும், அனைவராலும் அறியப்பட்ட ஒரு பொதுப்பண்பினை குறிப்பிடுவதாயும் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. அப்படிப்பட்ட ஒரு பண்பான காரண அறிவு என்பதைப் பற்றித்தான் ஆதிபகவன் யார் என்ற கட்டுரையில் கண்டோம். இக் கட்டுரையிலும் அப்படியானதோர் பொதுப்பண்பினையே காண இருக்கிறோம்.

ஆதிபகவன் - திருத்தமும் புதிய விளக்கமும்:

இக் கட்டுரையில் ஆதிபகவன் என்ற சொல்லுக்குப் பாடபேதமாக 'ஆதிபகலன்' என்ற சொல் முன்வைக்கப்படுகிறது.

இதில் வரும் 'பகல்' என்பதற்கு 'ஏர்நுகம்' என்பது பொருள். 'பகலன்' என்பது ஏர்நுகத்தை உடையவன் அதாவது உழவன் என்று பொருள். மேலும்,

ஆதி என்பதற்கு முதல் என்பது பொருள். ஆக,

ஆதிபகலன் = முதல் உழவன்.

இதன்படி, இக் குறளுக்கான புதிய விளக்கமானது:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தையே முதல் எழுத்தாகக் கொண்டுள்ளன. அதைப்போல இவ் உலகமானது இறைவனையே முதல் உழவனாகக் கொண்டுள்ளது.


நிறுவுதல்:

மேற்காணும் புதிய கருத்தினை ஆதாரங்களுடன் இங்கே நிறுவலாம்.  நாம் ஏற்கெனவே கண்டதைப் போல, திருக்குறளானது முதன்முதலில் திருவள்ளுவரால் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டு பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் சிக்குண்டு சிதிலமடைந்து எழுத்துருக்கள் மாறுபட்டு பின்னர் அது பல படிகளாக ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு இப்போது ஒருவகையாக நமக்குக் கிடைத்துள்ளது. மேலும், எந்த ஒரு மிகப்பழைய ஓலைச்சுவடியையும் படிக்கும்போது 'ல' கர 'வ' கர வேறுபாடு காண்பது மிக நுட்பமான திறமை வாய்ந்த செயலாகும். வரிவடிவத்தில் மிகவும் ஒத்துப் போகின்ற இந்த இரண்டு எழுத்துருக்கள் படிப்போரின் கண்ணை மிக எளிதாக ஏமாற்றிவிடும். அவ் வகையில், ஆதிபகவன் என்பது ஆதிபகலனாக எழுதப்பட்டிருப்பதற்கு வாய்ப்புக்கள் மிக அதிகம்.

இனி, பகல் என்ற சொல் எவ்வாறு ஏர்நுகத்தைக் குறிக்கும் என்பதைக் காணலாம்.

பகல் - புதிய பொருள்:

பகுதல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றிய சொல்லே பகலாகும். பகுதல் என்பதற்கு கூராதல் என்ற பொருளுமுண்டு. சான்று: பகுவாய் நாரை = கூர்வாய் நாரை.

பகுதல் அதாவது கூராதல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றிய பிற சொற்கள் கீழே தரப்பட்டுள்ளன.

பகழி = கூர்மையான அம்பு.
பகர் / பகரம் / பகல் = கூர்மையான ஒளிக்கதிர்.
பகலாணி = நுகத்துக் கூராணி.
பகம் = கூரிய அலகுடைய கொக்கு.

இவற்றை சென்னைத் தமிழகராதியிலும் காணலாம்.

பகலாணி என்றும் பகல் என்றும் அறியப்படும் நுகத்தின் கூராணியே நுகத்தின் முதன்மைப் பொருளாகும். இதுவே நிலத்தைக் கிழித்து உழுவதற்கு உதவுவதாகும்.

முடிவுரை:

சுழன்றும் ஏர் பின்னது உலகம் என்று உழவுத்தொழிலின் இன்றியமையாமையை அறிந்த வள்ளுவர் உழவரின் சிறப்பை உலகோர்க்கு எடுத்துக்கூறவே உழவரின் பெருமையினை கடவுள் வாழ்த்தில் அதுவும் முதல் பாடலிலேயே பாடி இருக்கிறார் என்றால் மிகையாகாது. காரணம், உழவுத்தொழில் இன்றியமையாதது மட்டுமின்றி சமயம் சாராதது. உலகோர் அனைவருக்கும் பொதுவானது. முதல் பாடலில் இறைவனை உலகின் முதல் உழவன் என்று குறிப்பிட்ட வள்ளுவர் 8 ஆம் பாடலில் அறவாழி அந்தணன் அதாவது அறத்தையே கலப்பையாகக் கொண்ட உழவன் என்று இறைவனைப் பாடுகிறார். இதைப் பற்றி அறவாழி அந்தணன் என்ற கட்டுரையில் விரிவாகக் காணலாம். கூரிய எழுத்தாணியால் இயற்றப்படும் எழுத்துக்கள் அனைத்திற்கும் அகரமே தலைமையாகும்.  அதைப்போல உழவே தலையாகக் கொண்ட இவ் உலகிற்கு இறைவனே முதல் உழவனாவான் என்கிறார். இறைவனை உழவனாக உருவகித்ததில் இருந்து இறைவனின் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று வினைகளையும் முதல் பாட்டிலேயே உணர்த்திவிடுகிறார் வள்ளுவர். என்னே வள்ளுவரின் நுண்மாண் நுழைபுலம்!