செவ்வாய், 18 அக்டோபர், 2011

நான்கு கடவுள் - பகுதி 3 (தொல்தமிழகம்)

தொல் தமிழகம்:

தொல் தமிழகத்தில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகை நிலங்கள் இருந்ததாக தொல்காப்பியம் கூறியதை முன்னர் கண்டோம். என்றால் இந்த தொல் தமிழகம் இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தது? தற்போது இருக்கும் தமிழ்நாட்டிலா? லெமூரியா என்று கூறப்படும் கண்டத்திலா? வேறு எங்கு இந்த தொல்தமிழகம் அமைந்திருந்தது? இதைப் பற்றி ஆராய்வதே இப் பகுதியின் நோக்கமாகும்.

தமிழரும் காற்றும்:

காற்று இல்லையேல் பூமியில் உயிர்கள் இல்லை. நாம் உயிர் வாழத் தேவையான உயிர்வளியத்தையும் தாவரங்களுக்குத் தேவையான கரிவளியத்தையும் தந்து உதவுவதுடன் மழை பெய்விப்பதில் இன்றியமையாத பங்கினையும் இக் காற்றே வகிக்கிறது. மழையைப் போலவே காற்று ஆக்கவும் வல்லது; அழிக்கவும் வல்லது. தென்றலாய் தாலாட்டுவதும் காற்றே; புயலாய் மாறி பொருட்களை புடைபெயர்ப்பதும் இக் காற்றே.

அதுமட்டுமின்றி, புவி மண்டலத்தின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளப் பெரிதும் உதவுவது காற்று மண்டலமே ஆகும். விண்வெளியில் இருந்து வரும் எரிகற்கள் பூமியைத் தாக்காத வண்ணம் ஒரு கவசம் போல் இருந்து அந்தக் கற்களை வழியிலேயே எரித்துச் சாம்பலாக்கி விடுவதும் இந்த காற்று மண்டலமே ஆகும். இவ்வளவு சிறப்புக்களை அடக்கிய ஐந்து பூதங்களில் ஒன்றான காற்றுக்குத் தமிழர்களின் வாழ்வில் தனி இடம் உண்டு. காற்றின் தன்மைகளை அறிந்து அவற்றை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் தமிழர்கள் திறமையானவர்கள். மிகப் பழங்காலத்திலேயே காற்றின் இயல்பறிந்து கப்பல்களை ஓட்டி கடல் வாணிகம் செய்தவர்கள் தமிழர்கள்.

' திரைகடல் ஓடியும் திரவியம் தேடு '
' காற்றுள்ள போதே தூற்றிக் கொள் '

போன்ற பழமொழிகள் தமிழரின் காற்று பற்றிய அறிவினை நன்கு புலப்படுத்துவன.

காற்றின் வகைகள்:

காற்றுக்குப் பல தன்மைகள் உண்டு. மழைக் காற்று, வெப்பக் காற்று, ஊதைக் காற்று, தென்றல் காற்று என்று காற்று நால்வகைப் படும். இந்த நால்வகைக் காற்றுக்கும் தனித்தனியாக பெயரிட்டு அழைத்துள்ளனர் நம் முன்னோர். கோடை, கொண்டல், வாடை, தென்றல் என்பன காற்றுக்கு நம் முன்னோர் இட்ட பெயர்கள். காற்றின் வலிமைக்கேற்ப வரிசையாக
இவை நான்கையும் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

கோடை:

கோடை என்பது மேற்குத் திசையில் இருந்து வீசும் காற்றுக்குத் தமிழர்கள் இட்ட பெயராகும். மேற்குத் திசைக்கு குடக்கு என்ற பெயரும் உண்டு. குடக்குத் திசையில் இருந்து வீசுவதால் இக் காற்றுக்கு கோடை என்ற பெயர் ஏற்பட்டது.

குடக்கு ----> கோடை

இதை வெப்பக் காற்று என்றும் கூறுவர். பாலைவனப் பகுதிகள் மற்றும் மழையின்றி வறண்ட நிலங்கள் மிகவும் வெப்பமாக இருக்கும். இவற்றில் இருந்து வீசும் காற்றானது வெப்பமுடையதாய் இருப்பதால் இதனை வெப்பக் காற்று என்று கூறுகின்றனர்.

கோடை என்ற சொல் மேல்திசைக் காற்றினை மட்டுமின்றி வெயிலையும் வேனில் காலத்தையும் குறிப்பதாக சென்னை இணையத் தமிழ்ப்பேரகராதி கூறுகிறது.

கோடை¹ kōṭai
, n. < குடக்கு. [K. kōḍe.] 1. [M. kōṭa.] West wind; மேல்காற்று. கோடை தூற்றக் கூடிய வூழிலை (ஞானா. 28, 12). 2. Summer season, as the time of the west wind; வேனிற் காலம். (பிங்.) 3. Sunshine, intense heat of the summer season; வெயில். வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப (திருவாச. 3, 71).

கோடை என்ற சொல் மேல்திசைக் காற்றினை மட்டுமின்றி வெயிலையும் வேனில் காலத்தையும் குறிப்பதால் இச் சொல் பொதுவாக வீசும் வெப்பக் காற்றினைக் குறிக்காமல் கடும் வெயிலையும் வேனில் காலத்தையுமே பெரும் பொழுதாக உடைய பாலைநிலங்களில் வீசும் காற்றினையே துவக்கத்தில் குறித்திருப்பதாகக் கொள்ளலாம். ஏனென்றால் கோடைக் காற்று வீசிய பொழுது மணலையும் அள்ளிவீசி அதனால் மணற்குன்றுகள் தோன்றியதாக கீழ்க்காணும் குறுந்தொகைப் பாடல் கூறுகிறது.

கோடை இட்ட அடும்பு இவர் மணற்கோடு ஊர
நெடும்பனை குறியவாகும் - குறு : 248

பெரிய பனைமரங்களே சின்ன மரங்களாகத் தெரியும்படிக்கு கோடை காற்றினால் மணல்மேடுகள் உருவான நிலையினையே மேற்காணும் பாடல் காட்டுகிறது. ஆம், நால்வகைக் காற்றில் கோடைக் காற்றே மிக வலிமையானது ஆகும். இதுவே சூறாவளியாகவும் புயலாகவும் மாறுகிறது. கோடையின் தன்மை பற்றி எண்ணும் பொழுது கொடுமை என்ற சொல்லின் பயன்பாடு அத் தன்மையில் இருந்தே உருவாகி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

கொண்டல்:

கொண்டல் என்பது கிழக்குத் திசையில் இருந்து வீசும் காற்றினைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல் ஆகும். கிழக்குத் திசைக்கு குணக்கு என்ற பெயரும் உண்டு. குணக்கில் இருந்து வீசுவதால் இக் காற்றுக்கு கொண்டல் என்ற பெயர் ஏற்பட்டது.

குணக்கு ---> கொண்டல்

இதை மழைக் காற்று என்றும் கூறுவர். கடலுக்கு மேலே தோன்றி பஞ்சுப் பொதிகளாய் மிதந்த வெண்மேகங்கள் கருக்கொண்டதும் அவை சில்லென்ற காற்றை வீசுகின்றன. இதுவே கொண்டல் ஆகும். கொண்டல் வீசினால் மழை வரப்போகிறது என்று பொருள்.

கொண்டல் என்ற சொல்லுக்குக் கீழ்க்காணும் பல பொருட்கள் உள்ளதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது.

கொண்டல்¹ koṇṭal
, n. < கொள்-. 1. Receiving, taking; கொள்ளுகை. உணங்கற் றலையிற் பலிகொண்ட லென்னே (தேவா. 614, 5). 2. [M. koṇṭal.] Cloud; மேகம். கொண்டல் வண்ணா குடக்கூத்தா (திவ். திருவாய். 8, 5, 6). 3. Rain; மழை. (ஞானா. 43, 14, உரை.) 4. [prob. ஷை] Aries, a constellation of the zodiac; மேஷராசி. (சாதகசிந். காலநிக. 24.) 5. See கொண்டற்கல். (சங். அக.) 6. A girls' game; மகளிர் விளையாட்டுவகை. (W.), n. < குணக்கு. 1. East wind; கீழ்காற்று. கொண்டல் மாமழை பொழிந்த . . . துளி (புறநா. 34, 22). 2. Wind; காற்று. (பிங்.) 3. East; கிழக்கு. Naut.

மேற்காணும் பொருட்களே அன்றி கொண்டல் என்பதற்கு கடல் என்பதும் ஒரு பொருளாக இருந்திருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது. சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதியில் கீழ்க்காணும் சொல்லும் பொருளும் வருகிறது.

கொண்டலை koṇṭalai
, n. perh. கொண்டல்¹. Seaside Indian oak. See சமுத்திரக்கடம்பு. (L.)

மேற்காணும் சொல்-பொருள் தொடர்பில் இருந்து கொண்டல் என்பது சமுத்திரம் அதாவது கடலையும் குறிக்கும் என்பது தெளிவாகிறது. மேகங்கள் தோன்றுவது கடலில் இருந்தே என்பதால் மேகங்களைக் குறித்த கொண்டல் என்ற சொல் மேகங்கள் தோன்றும் கடலையும் குறிக்கப் பயன்படலாயிற்று எனலாம்.

வாடை:

வாடை என்பது வடக்குத் திசையில் இருந்து வீசும் காற்றினைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பெயராகும். வடக்குத் திசையில் இருந்து வீசுவதால் இதற்கு வாடை என்ற பெயர் ஏற்பட்டது.

வடக்கு -----> வாடை

இதை ஊதைக் காற்று என்றும் கூறுவர். இது மிகவும் குளிர்ச்சியான காற்றாகும்.  இது கொண்டல் காற்றில் இருந்து வேறானது. கொண்டல் காற்றிலும் குளிர்ச்சி இருக்கும். ஆனால் அது இன்பமாய் இருக்கும். வாடைக் காற்றோ துன்பம் தரும். ஆம், வாடைக் காற்று உடலை நடுநடுங்கச் செய்யும் பனிக்காற்றாகும். பனி மிகுந்த பகுதிகளில் இருந்து வீசும் காற்றில் பனித்துகள்கள் கலந்திருப்பதால் அவை உடலை நடுக்குறச் செய்கின்றன. வாடைக் காற்றில் பனி கலந்திருப்பதைக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

அரும்பனி கலந்த அருளில் வாடை - ஐங்குறுநூறு - 479

பொதுவாக வாடைக் காற்று வீசும் பொழுது மென்மையான மலர்களின் இதழ் ஓரங்கள் சுருண்டு கொள்ளும். அதுமட்டுமின்றி  விலங்குகளும் பறவைகளும் கூட குளிர் தாங்காமல் சுருண்டு படுக்கும். வாடுதல் / வாட்டுதல் என்ற சொல்லின் பயன்பாடு வாடைக் காற்றின் சுருண்டு கொள்ளச் செய்யும் இத் தன்மையில் இருந்தே தோன்றி இருக்கக் கூடும்.

தென்றல்:

தென்றல் என்பது தெற்குத் திசையில் இருந்து வீசும் காற்றுக்குத் தமிழர்கள் சூட்டிய பெயராகும். தெற்குத் திசையில் இருந்து வீசுவதால் இக் காற்றுக்குத் தென்றல் என்ற பெயர் ஏற்பட்டது.

தெற்கு ----> தென்றல்

நால்வகைக் காற்றிலும் இதமான காற்று தென்றலே ஆகும். மென்மையாக வருடிக் கொடுத்து அருமையான சுகத்தை அளிப்பது தென்றல் காற்றே ஆகும். நால்வகைக் காற்றில் தென்றலே மக்களால் மிகவும் விரும்பப்படுவது. மரம், செடி, கொடி, ஆறு, மலை, பள்ளத்தாக்கு எனப் பல்வேறு தடைகளையும் கடந்துவருவதால் தென்றலின் வேகம் மெதுவாகவே இருக்கும். அதுமட்டுமின்றி வரும் வழியில் பல மூலிகைகளையும் தடவிக் கொண்டு வருவதால் தென்றல் காற்று நோய் தீர்க்கும் மருத்துவக் காற்றாகவும் திகழ்கிறது.

பலவித மலர்களின் நறுமணத்தைத் தென்றலானது அள்ளி வரும் பொழுது கூடவே வண்டுகளையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டதாக இளங்கோ கூறுகிறார்.

வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் - சிலம்பு - 2, 24

ஆனால் தென்றலைப் பற்றிய கவியரசு கண்ணதாசரின் கற்பனை வேறுவிதமாக இருக்கிறது. திரைப்பாடல் ஒன்றில் தென்றலைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.

'நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே'

இப்படிப் புலவர்கள் நாவில் பொருந்திய தென்றல் காற்றே நால்வகைக் காற்றில் வலிமை குறைந்த ஒன்றாகும்.

தொல்தமிழக எல்லைகள்:

இன்றைய இந்தியாவில் தொல்தமிழகம் எங்கே அமைந்திருந்தது என்னும் கேள்விக்கான விடையினை மேலே கண்ட நான்கு வளிகளே தெள்ளத் தெளிவாகக் கூறி நிற்கின்றன. பொதுவாக மக்கள் தாம் வாழும் இருப்பிடத்தைப் பொருத்துத்தான் திசைச் சொற்களை உருவாக்குவார்கள். சான்றாக, தமது இருப்பிடத்திற்கு கீழ்த்திசையில் உள்ள நாட்டைத் தான் கீழை நாடு என்பார்கள். அதைப் போல தொல்தமிழரும்  தாம் வாழ்ந்த நாட்டிற்கு,

கிழக்குப் பகுதியில் இருந்து வீசிய காற்றைத் தான் கொண்டல் என்றார்கள்.
மேற்குப்பகுதியில் இருந்து வீசிய காற்றைத் தான் கோடை என்றார்கள்.
வடக்குப் பகுதியில் இருந்து வீசிய காற்றைத் தான் வாடை என்றார்கள்.
தெற்குப் பகுதியில் இருந்து வீசிய காற்றைத் தான் தென்றல் என்றார்கள்.

இப்படி அழைப்பது தான் இயல்பு வழக்காகும். அவ் வழக்கப்படியே தான் தொல்தமிழரும் அழைத்துள்ளனர். அதன்படி தொல்தமிழகத்தின்,

கிழக்குப் பகுதியில் கொண்டல் காற்றைத் தருகின்ற மேகங்களை உருவாக்கும் கடலும்
மேற்குப் பகுதியில் கோடைக் காற்றை உருவாக்கும் பாலை நிலமும்
வடக்குப் பகுதியில் வாடைக் காற்றை உருவாகும் பனிமலையும்
தெற்குப் பகுதியில் தென்றல் காற்றை உருவாக்கும் காடு, மலைகளை உடைய நீண்ட நிலப் பகுதியும்

இருந்திருக்க வேண்டும். இவ்வாறு கிழக்கில் கடலையும், மேற்கில் பாலைவனத்தையும், வடக்கில் பனிமலையையும், தெற்கில் நீண்ட நிலப்பகுதியையும் எல்லைகளாகக் கொண்ட நில அமைப்பு இன்றைய இந்தியாவில் எப் பகுதியில் அமைந்துள்ளது என்று காண்போம்.

இன்றைய இந்தியாவில் தொல்தமிழகம்:

இன்றைய இந்தியாவின் புவி அமைப்பினை நோக்கும் பொழுது வடக்கில் பனிமலையும் மேற்கில் பாலைவனமும் கிழக்கில் கடலும் தெற்கில் நீண்ட நிலப் பகுதியும் கொண்ட தொல்தமிழகமானது,

பனிமலையான இமயமலைக்குக் கீழேயும்
இராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்திற்கு வலது புறத்திலும்
வங்கக் கடலுக்கு இடது புறத்திலும்

இருந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. ஆனால் இந் நிலத்தின் தெற்கு எல்லையைத் தெளிவாகக் கூற இயலவில்லை. ஏனென்றால் தெற்கே நீண்ட நிலப் பகுதி இருப்பதால் தொல்தமிழகத்தின் தெற்கு எல்லை எதுவரை பரவி இருந்தது என்பதை அறுதியாகக் கூற இயலவில்லை. மேலதிக ஆய்வுகள் மூலமே அதனை உறுதி செய்ய வேண்டும்.

தற்போதிய ஆய்வு முடிவுகளின் படி, தொல்தமிழகமானது, தற்போதிய மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒரிசா, ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சில பகுதிகளின் தொகுப்பாக இருந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. கீழ்க்காணும் படத்தில் தொல்தமிழக நிலப்பகுதியானது சிவப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது.

கங்கை நதியை அடிப்படையாகக் கொண்டு எழுந்த இந்த தொல்தமிழரின் நாகரீகம், தொல்காப்பியர் குறிப்பிட்டது போல ஐவகை நிலங்களையும் உள்ளடக்கியதாகவே தெரிகிறது. படத்தில் காட்டியுள்ளபடி, தொல்தமிழகத்தின்

மத்தியில் மருத நிலமும்
மேற்கில் பாலை நிலமும்
கிழக்கில் நெய்தல் நிலமும்
வடக்கில் குறிஞ்சி நிலமும்
தெற்கில் முல்லை நிலமும்

இருந்திருக்க வேண்டும்.

                                                               .................. தொடரும்.

செவ்வாய், 4 அக்டோபர், 2011

நான்கு கடவுள் - பகுதி 2 (தெய்வப் பொருட்கள்)


தெய்வப் பொருட்கள்:

பழந்தமிழர்கள் மேகம் (மாயோன்), மலை (சேயோன்), சூரியன் (வேந்தன்) மற்றும் கடல் (வருணன்) ஆகிய நால்வகைப் இயற்கைப் பொருட்களையே தெய்வங்களாக எண்ணி வழிபட்டனர் என்று முன்னர் கண்டோம். இவற்றை மட்டுமின்றி அவர்கள் இவ் இடங்களில் விளைந்த சிறு பொருட்களையும் தெய்வம் சார்ந்த பொருட்களாகவே கருதினர். தெய்வம் சார்ந்த பொருட்கள் எவை எவை என்று இங்கே காணலாம்.




உப்பு:

கடல் தரும் அமிழ்தம் என்ற பெயருடன் நமது அன்றாட உணவில் இன்றியமையாத இடம் பிடித்துவிட்ட பொருள் தான் உப்பு. 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' , ' உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' போன்ற பழமொழிகள் உப்பின் சிறப்பினை உணர்த்தி நிற்பவை. உணவுக்குச் சுவை கூட்டி உணர்வுகளைப் பதப்படுத்தும் பொருளே உப்பு. உணவில் உப்பின் அளவு மிகுந்தாலும் அவ் உணவுப் பொருள் உண்ணப்படாமல் வீணாகிவிடும். வள்ளுவர் உப்பின் அளவு குறித்து இவ்வாறு கூறுகிறார்.

உப்பு அமைந்தற்றால் புலவி, அது சிறிது
மிக்கற்றால் நீள  விடல் - குறள் - 1302

நாம் நுகரும் உணவிற்குத் தேவையான அளவிற்கு உப்பைச் சேர்த்தால், அது உணவிற்குச் சுவை ஊட்டும். அதைப்போல், தலைவன், தலைவியிடையே நிகழும் ஊடலும் அளவோடு இருந்தால் இன்பம் தரும். மாறாக, உணவில் உப்பை அளவுக்கு மீறிச் சேர்த்தால் அதனால் அந்த உணவையே உண்ண முடியாமல் இருப்பதைப்போல, ஊடல் அளவுக்கு அதிகமாக நீடித்தால், துன்பம் தருவது மட்டுமல்ல, இருவர் உறவைக் கூட பாதிக்கும்படி செய்துவிடும். அன்றாடம் நாம் நம் நடைமுறை வாழ்க்கையில், உணவில் பயன்படுத்தும் உப்பை, காதலர்களுக்கிடையே நிகழும் ஊடலுக்கு ஒப்பிட்டுக் காட்டுகிறார் வள்ளுவர்.
நாவிற்குச் சுவை தந்து இன்பமளிப்பதால் உப்பு என்ற சொல் இனிமையைக் குறிக்கவும் பயன்படலாயிற்று.

கடலைத் தெய்வமாக வணங்கிய பழந்தமிழர்கள் அக் கடலில் இருந்து பிறக்கும் இந்த உப்பினையும் தெய்வமாகக் கருதி வழிபட்டனர். அந்தத் தெய்வம் தான் மகாலக்ஷ்மி. ஆம், கடல் தரும் அமிழ்தமாகிய உப்பு தான் மகாலக்ஷ்மி ஆகும். இது எவ்வாறு என்று காண்போம்.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது அமிழ்தத்துடன் மகாலக்ஷ்மி வெளிப்பட்டாள் என்று கூறுவர். அதைப்போல கடலில் இருந்து பெறப்படும் அமிழ்தமே உப்பு ஆகும். ஆம், கதிரவனின் வெப்பத்தால் கடல்நீர் ஆவியாகி மேலே சென்று மேகங்களாகிறது. அதே சமயம் உப்பு கீழே படிகிறது. உப்பு பிறக்கும் இந் நிகழ்ச்சியினைத் தான் பாற்கடலைக் கடைந்த போது அமிழ்தத்துடன் லக்ஷ்மி வெளிப்பட்டாள் என்று கூறுகின்றனர்.

கடல்நீர் ஆவியாகும் பொழுது பிரிந்து மேலே சென்ற மேகங்களை மாயோன் (திருமால்) என்று வழிபட்டனர். அதே சமயம் கீழே படிந்த உப்பினை மகாலக்ஷ்மி என்று வழிபட்டனர். இந்த மகாலக்ஷ்மியே பின்னாளில் திருமாலை மணம் புரிந்தவள். மாயோனின் மார்பில் இருந்துகொண்டு அவனைக் குளிர்விப்பவள் இந்த லக்ஷ்மி. அதைப்போலவே மேகங்கள் மழை பெய்யாமல் வானில் திரிந்து கொண்டிருந்தால் அவற்றைக் குளிர்வித்து செயற்கையாக மழை பெய்யச் செய்வதற்கு இந்த உப்பைத்தான் மேகங்களின் மேல் தூவுகிறார்கள். உப்புக்கும் மேகத்திற்கும் இடையே உள்ள இத் தெய்வீகத் தொடர்பு வியப்பாக உள்ளது அல்லவா?

இன்றைய நடைமுறையில் பல மங்கல நிகழ்வுகளில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது இந்த உப்பு ஆகும். குறிப்பாக புதுமனைப் புகும் பொழுது முதலில் வீட்டுக்குள் கொண்டு செல்லப்படுபவை உப்பும் மஞ்சளும் ஆகும். இதில் உப்பு என்பது மகாலக்ஷ்மி ஆகும். முதலில் உப்பைக் கொண்டு செல்வதன் காரணம் புது இல்லத்தில் மகாலக்ஷ்மியின் அருளால் பொருள் வளம் கொழிக்க வேண்டும் என்பதே.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவார்கள். இந்த அமிர்தம் என்பது உப்பே ஆகும். உணவில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்த்து உண்டால் அது உடலுக்குப் பல தீங்குகளை விளைவிக்கும். அதிக ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவற்றிற்கு எளிதாக வழிவகுக்கும். உணவில் உப்பு குறைவாக இருந்தாலும் குறைந்த ரத்த அழுத்தம், தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றிற்கு அடிகோலும். இதைத்தான் 'மிகினும் குறையினும் நோயே' என்றனர் பெரியோர். பொருள் செல்வமும் அவ்வாறே ஆகும். அளவுக்கு அதிகமாக பொருள் அல்லது சொத்து சேர்த்து வைத்தவர்களின் நிலை என்ன என்று நாம் இன்று கண்கூடாகக் காண்கிறோம். ஒரளவுப் பணம் நமக்குப் பாதுகாப்பைத் தரும். அதுவே அதிகமானால் பணத்தை நாம் பாதுகாக்க வேண்டி வரும். அதனால் மன நிம்மதியை இழந்து தவிக்க நேரிடும். அவ்வகையில்,

உணவில் உப்பும் 
உழைப்பில் பணமும் (உழைப்பு இல்லாத பணம். உழைத்தால் அதிக பணம் ஈட்ட முடியாதே!)
ஓரளவே சேர்க்க வேண்டும் 

என்னும் கருத்து உறுதியாகிறது. இங்கு உப்பு, பணம் என்ற இரண்டிற்கும் மகாலக்ஷ்மியே தெய்வமாக இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சள்:

உப்புக்கு அடுத்தபடியாக மங்களப் பொருளாகக் கருதப்படுவது மஞ்சள் கிழங்கு ஆகும். புதுமனைப் புகுவிழாவில் உப்புடன் இதையும் சேர்த்துத்தான் வீட்டிற்குள் முதலில் கொண்டு செல்வார்கள். பொருள் பெருக்கத்திற்கு உப்பு என்றால் மங்களத்திற்கு மஞ்சள் ஆகும். புது வீட்டில் தொடர்ந்து மங்கள நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்று விரும்பியே மஞ்சள் கிழங்குகளை ஒரு தனித்தட்டில் எடுத்துச் செல்கின்றனர்.

மஞ்சளைப் பயன்படுத்தாத பெண்கள் தமிழகத்தில் இல்லை என்று கூறலாம். பெண்களின் முகத்திற்குப் பொலிவினைத் தருவதுடன் நல்லதொரு கிருமிநாசினியாகவும் மஞ்சள் செயல்படுகிறது. வெளிப்புறத்தில் மஞ்சளாகவும் உட்புறத்தில் சிவப்பாகவும் உள்ள கிழங்கு மஞ்சளையே பெண்கள் பெரிதும் விரும்புவர். இந்த மஞ்சள் விளைவது செம்மண் பூமியில். செம்மண் பூமியை சேயோன் என்று வழிபட்ட மக்கள் அம் மண்ணில் விளையும் மஞ்சளையும் அத் தெய்வம் சார்ந்த பொருளாகவே கருதினர்.

இந்த மஞ்சள் என்ற சொல்லே மங்கள் என்று திரிந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் மஞ்சள் நிறத்தை மங்களகரம் என்று இன்றும் நாம் கூறுகிறோம். மங்களகரமான மஞ்சள் நிறத்தைத் தருகின்ற மஞ்சளை விளைவித்துத் தருகின்ற படியால் சேயோனுக்கு அதாவது முருகனுக்கு மங்களன் என்ற பெயரும் உண்டு. மங்களவாரம் என்று முருகனுக்குரிய செவ்வாய்க் கிழமையை நாம் கூறுவது இதன் அடிப்படையில் எழுந்ததே. கீழ்க்காணும் படம் இத் தொடர்பினை விளக்கும்.

மஞ்சள் ---> மங்களம் --> மங்களன் (முருகன்)

நெல்லும் கரும்பும்:

கடலில் விளைந்த உப்பையும் செம்மண்ணில் விளைந்த மஞ்சளையும் மட்டுமின்றி நெல்லையும் கரும்பினையும் கூட தெய்வம் சார்ந்த பொருட்களாகவே கருதினர் பழந்தமிழர். மருத நிலத்தின் வயல்களில் பயிர் செய்யப்பட்ட இவற்றைக் கொண்டு தான் மருத நிலத்தின் தெய்வமான சூரியனுக்கு பொங்கலைப் படையல் இடுகின்றனர். இதைத்தான் தைத்திங்கள் முதல் நாளன்று பொங்கல் திருவிழாவாக மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

உண்மையில் பொங்கல் திருவிழாவானது சூரியனுக்கு உழவர்கள் நன்றி செலுத்தும் விழாவாகும். வயல்களில் இருந்து புதிதாக அறுவடை செய்த முதல்நெல்லை அவித்து அரிசியாக்கி வைத்திருப்பர். புதிதாக அறுத்த கரும்புகளின் சாற்றில் இருந்து வெல்லம் தயாரித்து வைத்திருப்பர். இவ் இரண்டையும் கொண்டு பொங்கல் சமைத்து அதை சூரியனுக்குப் படைத்து வழிபடுவர். சூரியனைப் போலவே நெல்லுக்கும் கதிர் உண்டு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பாலை:

தலைப்பில் கூறப்பட்ட நூற்பாவில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று நால்வகை நிலங்களைக் கூறிய தொல்காப்பியர் அகத்திணை இயலின் 11 வது பாடலில் ஐந்தாவது நிலம் ஒன்றையும் குறிப்பிடுகிறார்.

நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே.

ஏனை நான்கு நிலங்களுக்கும் பெயர்களைக் கூறிய தொல்காப்பியர் ஐந்தாவது நிலத்திற்கு பெயரெதுவும் கூறாமல் நடுவுநிலைத் திணை என்று கூறுகிறார். ஆனாலும் இந் நிலத்தின் தன்மைகளைக் கூறிவிட்டுத் தான் சென்றுள்ளார். இந் நிலத்தின் சிறுபொழுது நண்பகல் ஆகும். பெரும்பொழுது வேனில் ( இளவேனில் மற்றும் முதுவேனில்) ஆகும். பின்பனிக் காலமும் உரியதே. இந் நிலத்தில் வாழும் மக்கள் கடைநிலை குலத்தவர் (முடிவுநிலை மருங்கு = கடைநிலைக் குலம்) ஆவர். 'முன்னிய நெறித்தே' என்பது கடைநிலைக் குலத்தவர் எதிர்ப்படும் பாதையைக் குறிப்பது. அதாவது பாதையில் செல்வோரை இடைமறித்துத் தாக்கி வழிப்பறி செய்வார்கள் என்பதனை குறிப்பாக உணர்த்துகிறார்.

(மருங்கு = குலம்; முன்னுதல் = எதிர்ப்படுதல் - சான்று: சென்னைத் தமிழ் இணையப் பேரகராதி)

சரி, தொல்காப்பியர் ஏன் இந் நிலத்தை நடுவுநிலைத் திணை என்று கூறுகிறார் என்பதைப் பற்றிக் காண்போம். இவ்வகை நிலங்கள் ஓர் இடத்தில் அல்லது ஓர் ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குச் செல்லும் வழியின் இடைப்பட்டதாய் (நடுவினதாய்) இருக்கும். அதனால் தான் இந் நிலத்தை நடுவுநிலைத் திணை அதாவது இடைப்பட்ட நிலம் என்று கூறுகிறார் தொல்காப்பியர். அதுமட்டுமின்றி இவ் வகை நிலங்கள் முல்லை, குறிஞ்சி, மருதம் போன்ற நிலங்களிலும் இடையிடையே இருக்கும். ஊர் விட்டு ஊர் செல்லும் மக்கள் இந்த இடைப்பட்ட நிலங்களைக் கடந்து செல்லும்போது தான் அங்குள்ள ஆறலைக் கள்வர்களால் (வழிப்பறித் திருடர்கள்) தாக்கப்படுவர்.

அகத்திணை இயலின் முதல் நூற்பாவில் இவ்வாறு கூறுகிறார்.

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப
அவற்றுள்
நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய
படுதிரை வையம் பாத்திய பண்பே.

மேற்காணும் பாடலிலும் ஐந்தாவது நிலத்தை 'நடுவணது' என்று தான் கூறுகிறாரே ஒழிய அதன் பெயர் இன்னதென்று கூறவில்லை. இப்படி அகத்திணை இயலில் எந்த ஒரு இடத்திலும் ஐந்தாவது நிலத்தின் பெயரைக் கூறாத தொல்காப்பியர் புறத்திணை இயலில் கீழ்க்காணும் பாடல் மூலமாகத் தான் அந்த ஐந்தாவது நிலம் 'பாலை' என்பதை 'உய்த்துணர' வைக்கிறார்.

வாகை தானே பாலையது புறனே - பா: 15

இந்த நடுவண் நிலமாகிய பாலைநிலத்தில் வாழும் ஆறலைக் கள்வர்கள் யாரைத் தெய்வமாக வணங்கினர் என்பதற்கான குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை.

                                                                                                          - தொடரும்.