வியாழன், 14 அக்டோபர், 2010

ஒன்பதாம் தொடை

முன்னுரை:

'அகர முதல எழுத்தெல்லாம்' என்பது ஐயன் வள்ளுவன் வாக்கு. இந்த 'அ'கரம் முதல் 'ன'கரம் ஈறாக உள்ள எழுத்துக்கள் தம்முள் பல்வகையானும் புணர்ந்து உருவாக்கும் சொற்களோ கணக்கில் அடங்காது. எழுத்துக்கள் புணர்ந்து சொற்களைப் பிறப்பிக்க சொற்கள் புணர்ந்து சொற்றொடர்கள் உருவாகின்றன. இத் தொடர்களை செய்யுளில் பயன்படுத்தும்போது ஓசை இனிமைக்காகவும் பொருள் நயத்திற்காகவும் வகுக்கப்பட்ட ஒரு இலக்கண வகையே தொடை ஆகும். சிறுசிறு பூக்களைக் கொண்டு அலங்காரமாக ஒரு மாலை தொடுத்தல் போல சொற்களை ஒரு முறைப்படி தொடுத்து பா இயற்றும்போது பாடலுக்கு அது மெருகூட்டுகிறது. இத் தொடைகள் எண்வகைப்படும் என்று இலக்கண விளக்கம் கூறுகிறது. ஆய்வு முயற்சியால் ஒன்பதாவதாக ஒரு தொடையும் இலக்கியங்களில் பரவலாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது தெரிய வந்தது. அது என்ன தொடை என்பதைப் பற்றி விளக்கமாகக் கூறுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

தொடை வகைகள்:

கீழ்க்காணும் நூற்பா தொடை வகைகளைப் பற்றிக் கூறுகிறது.

' அடிஇணை பொழிப்புஒரூஉக் கூழை மேல்கீழ்க்
கதுவாய் முற்றுஎன எட்டொடும் மோனை
இயைபே எதுகை முரணே அளபே
எனஐந்து உறழ எண்ணைந்து ஆகி
அடிஅந் தாதி இரட்டைச் செந்தொடை
எனஇம் மூன்றும் இயையத் தொடையும்
விகற்பமும் எண்ணைந்து ஒருமூன்று என்ப.'

- இலக்கண விளக்கம் -தொ.வி.218, வைத்தியநாத தேசிகர்.

மேற்காணும் நூற்பாவின்படி எண்வகைத் தொடைகள்: மோனை, இயைபு, எதுகை, முரண், அளபெடை (அளபு), அந்தாதி, இரட்டை மற்றும் செந்தொடை ஆகும். அடி, இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேல்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என்ற எட்டும் தொடை விகற்பங்கள் ஆகும். எண்வகைத் தொடைகளில் மோனை, இயைபு, எதுகை மற்றும் அளபெடைத் தொடைகள் சொல்லில் உள்ள எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்படுபவை. முரண் தொடை, அந்தாதித் தொடை மற்றும் இரட்டைத் தொடைகள் சொற்களை அடிப்படையாகக் கொண்டு இயற்றப் படுபவை. ஒன்பதாவதாக வருகின்ற இப் புதிய தொடையும் சொற்களின் அடிப்படையில் அமைக்கப் படுவதே ஆகும்.

சரவெண் தொடை:

ஒன்பதாவதாக வருகின்ற இப் புதிய தொடையின் பெயர் சரவெண் தொடை ஆகும். இதன் விளக்கத்தைக் கீழே காணலாம்.

சரவெண் = சரம் + எண்
                    = தொடுக்கப்படுவது + எண்
                    = தொடுக்கப்படும் எண்

ஒன்று, இரண்டு, மூன்று முதலான எண்ணுப் பெயர்களைக் கொண்டு அடிதோறும் விகற்பத்துடனோ விகற்பமின்றியோ அமைக்கப்படும் தொடை சரவெண் தொடை ஆகும். சான்றாக கீழ்க்காணும் பாடல் வரியைக் காணலாம்.

இருதலைப் புள்ளின் ஓருயிர் அம்மே - அகநா-13

இவ் வரியில் உள்ள 'இருதலை' என்ற சொல்லிலும் 'ஓருயிர்' என்ற சொல்லிலும் எண்ணுப் பெயர்கள் (இரண்டு, ஒன்று) பயின்று வந்துள்ளதால் இது சரவெண் தொடைக்குக் காட்டாயிற்று. இனி இத் தொடையின் இலக்கியப் பயன்பாடுகள் குறித்துக் காணலாம்.

சரவெண் தொடையின் பயன்பாடுகள்:

சரவெண் தொடையானது சங்க இலக்கியங்களிலும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும் பரவலாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. சான்றாக திருக்குறளில் இத் தொடை பயின்று வரும் பாடல்கள் சில கொடுக்கப் பட்டுள்ளன.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து - குறள் - 126

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. - குறள் - 337

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. - குறள் - 398

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. - குறள் - 932

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. - குறள் - 1091

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது. - குறள் -1196

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. - குறள் - 1269

சங்க இலக்கியங்களில் இத் தொடை பயிலும் சில இடங்களைக் கீழே காணலாம்.

இருதலைப் புள்ளின் ஓர்உயிரம்மே - அகநா-13 (ஒன்று, இரண்டு)

எழுவர் நல்வலம் அடங்க, ஒருபகல் - அகநா - 37

இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால் - அகநா- 53

ஒருநாள் ஒருபகற் பெறினும், வழிநாள் - அகநா -128

'இருபெரு வேந்தர் மாறுகொள் வியன்களத்து
ஒருபடை கொண்டு, வருபடை பெயர்க்கும் - அகநா -174

மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு - அகநா - 283

இருதலைக் கொள்ளி இடைநின்று வருந்தி
ஒருதலைப் படாஅ உறவி போன்றனம் - அகநா - 340

அறுசில் கால அஞ்சிறைத் தும்பி
நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும் - ஐங்கு - 20

ஒருநாள் நம்மில் வந்ததற்கு எழுநாள் - ஐங்கு - 32

ஒருபகல் எல்லாம் உருத்து எழுந்து ஆறி
'இருவர் கண் குற்றமும் இல்லையால் என்று - கலி - 39

குறுந்தொகையில் 24 ஆம் பாடலில் இத் தொடை பயின்று வந்துள்ளதை அறியாமல் வேறுவிதமான விளக்கம் கொடுத்துள்ளனர் உரையாசிரியர்கள்.

கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
என்னை யின்றியுங் கழிவது கொல்லோ
ஆற்றயல் எழுந்த வெண்கோட் டதவத்
தெழுகளிறு மிதித்த ஒருபழம் போலக்
குழையக் கொடியோர் நாவே
காதலர் அகலக் கல்லென் றவ்வே.  -குறு.- 24


மேற்பாடலில் நான்காவது வரியில் சரவெண் தொடை பயின்று வந்துள்ளது. இதன்படி இப் பாடலின் புதிய விளக்கமானது ' கருநிறக் காலுடைய வேப்ப மரம் பூக்கின்ற இந்த இளவேனில் காலம் என் தலைவன் இன்றியே கழியுமோ?. பாதையின் ஓரமாக வளர்ந்த வெண்ணிற கிளைகளுடைய அத்திமரத்தில் இருந்து உதிர்ந்த ஒரு அத்திப் பழத்தை ஏழு யானைகள் மிதித்தால் அப் பழத்தின் நிலை என்னவாகுமோ அது போலக் குழைந்து கெடுக அலர் தூற்றி என் காதலரை என்னிடமிருந்து பிரித்த கொடியவரின் நாக்குகள்.' 

காதலியின் சாபம் கடுமையாக உள்ளதல்லவா?. குறுந்தொகையில் இருந்து மேலும் சில சான்றுகள் கீழே தரப்பட்டுள்ளன.

இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே. - குறு.-57

ஏழூர்ப் பொதுவினைக் கோரூர் யாத்த - குறு- 172

திருமுருகாற்றுப்படையிலும் பரிபாடலிலும் இத் தொடை சிறப்பாக பயின்று வந்துள்ளது.

இருபே ருருவின் ஒருபே ரியாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி - திருமு.-57-58

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல,
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் - திருமு.-177-183

முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்!
எழு கையாள! எண் கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!
பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்!
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்! -              பரி.-3

இவை தவிர இன்னும் பல இலக்கியங்களில் இத் தொடை பயின்று வந்துள்ளது. கட்டுரையின் விரிவஞ்சி அவை இங்கே கூறப்படவில்லை.

முடிவுரை:

சரவெண் தொடையைச் சேர்த்து செய்யுள் தொடைகள் இப்போது ஒன்பதாகின்றன. இன்னும் இதுபோல அறியப்படாத செய்யுள் தொடைகள் இருக்கலாம். சரியான ஆய்வு மேற்கொண்டால் நம் முன்னோர்கள் பயன்படுத்திய புதிய யாப்பு முறைகளைக் கண்டறிந்து உலகிற்குத் தெரிவிக்கலாம்.

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

பந்திக்கு முந்து

முன்னுரை:

' பந்திக்கு முந்து படைக்குப் பிந்து ' என்றொரு பழமொழி தமிழ்நாட்டில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப் பழமொழிக்குத் தற்போது வழங்கப்படும் பல்வேறு விளக்கங்களைப் பற்றியும் அவ் விளக்கங்கள் எந்த அளவிற்குப் பொருத்தமாக உள்ளன என்பதைப் பற்றியும் இப் பழமொழிக்கு இன்னொரு கோணத்தில் ஒரு புதிய விளக்கத்தையும் இக் கட்டுரையில் காணலாம்.

தற்போதைய விளக்கங்கள்:

இப் பழமொழிக்கு மூன்று விதமான விளக்கங்கள் இதுவரை அறியப்பட்டுள்ளன. அவை அனைத்தும் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

விளக்கம் 1: 'பந்திக்கு முந்து' என்றால் உணவு இடப்படும் பந்தியில் முதல் ஆளாகச் சென்று உண்ண வேண்டும். இல்லையேல் உணவு முழுமையாகவும் சுவையுடனும் கிடைப்பது அரிது. 'படைக்குப் பிந்து' என்றால் போருக்குப் போகும்போது படையில் கடைசி ஆளாகச் சேர வேண்டும். இல்லையேல் போரில் இறந்துபடுவது உறுதி.

விளக்கம் 2: இப் பழமொழியை ' பந்திக்கு முந்தும் படைக்குப் பிந்தும்'  என்று சற்று மாற்றி இதனை விடுகதையாகக் கொள்கின்றனர். இவ் விடுகதையின் விடை 'வலது கை' ஆகும். இது எவ்வாறெனில், வலது கையானது உணவு உண்ணும்போது முன்னால் செல்லும்; வில் மற்றும் வாள் படையை இயக்கும்போது பின்னால் செல்லும்.

விளக்கம் 3: இப் பழமொழியை 'பந்திக்கு முன் தீ படைக்குப் பின் தீ' என சற்றே மாற்றிக் கொண்டு பின்வருமாறு விளக்கம் கூறுகின்றனர்: பந்தியில் உணவு இடுவதற்கு முன்னால் தீயிட்டு உணவு சமைப்பர். படைகொண்டு போரில் வென்ற பின்னர் எதிரியின் நாட்டை தீயிட்டு அழிப்பர்.

இப் பழமொழி விளக்கங்கள் சரியா?

மேலே நாம் கண்ட பழமொழி விளக்கங்கள் எந்த அளவிற்கு பொருந்தி வருகின்றன என்பதை இங்கே காணலாம்.

முதல் விளக்கத்தில் உணவு உண்பதற்கு 'முதலிடமும்' போருக்குச் செல்வதற்கு 'கடைசியிடமும்' தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இக் கருத்து சிறிதேனும் பொருந்துமா என்றால் பொருந்தாது. ஏனென்றால் பழமொழிகளின் நோக்கமே இளைய தலைமுறையினருக்கு நல்ல வாழ்வியல் கருத்துக்களைத் தெரிவித்து நல்வழிப் படுத்தவேண்டும் என்பது தான். ஆனால் இவ் விளக்கத்தில் கூறப்பட்டுள்ள கருத்தோ ஒருவனை சாப்பாட்டு ராமனாகவும் தொடை நடுங்கியாகவும் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துவதாக அமைகிறது. இப்படிப்பட்ட அறிவுரைகளை மக்கள் பின்பற்றினால் விளைவு என்னாகும்?. நாட்டுப்பற்று பின்தள்ளப்பட்டு சோற்றுப்பற்று முன்வந்து விடும். பழமொழியின் நோக்கத்திற்கு மாறாக இக் கருத்து அமைவதால் இக் கருத்து தள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

இரண்டாம் விளக்கத்தில் இது பழமொழியே இல்லை என்றும் இது ஒரு விடுகதை என்றும் கூறப்பட்டுள்ளது. இதை ஒரு விடுகதையாகவே கொண்டாலும் இதற்கான விடையாக 'வலது கை' யினைக் கொள்வது பொருத்தமாகத் தோன்றவில்லை. ஏனென்றால் இடதுகை வலதுகை என்பது அவரவர் பயன்பாட்டைப் பொறுத்தது. சிலர் வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள். சிலர் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள். இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் அனைத்து வேலைகளுக்கும் (உணவு உண்பது உள்பட) இடது கையினையே பயன்படுத்துகின்றனர்.  ஏன் வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள் கூட சில நேரங்களில் நீர், தேநீர், பால் போன்ற நீர்ம உணவுகள் பருகும்போதோ சிறுசிறு நொறுக்குத் தீனிகளை உண்ணும்போதோ இடதுகையினை பயன்படுத்துகின்றனர். பந்தியிலும் உணவு வகைகள் இரண்டு புறங்களிலும் பரிமாறப் பட்டிருக்கும். வாழைப்பழத்தை பெரும்பாலும் இடப்புறமாகவே வைப்பர். இப் பழத்தை இடதுகையால் எடுத்து வலது கையால் உரித்து உண்பதை நடைமுறையில் பார்க்கலாம். எனவே 'பந்திக்கு முந்துவது வலதுகையே' என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வது விடுகதைக்கு அழகல்ல என்றே தோன்றுகிறது.

மூன்றாவது விளக்கம் மிக மிக இட்டுக் கட்டுப்பட்ட ஒரு விளக்கமாக உள்ளது. பந்திக்கு முன்னால் தீ என்றால் அங்கே யாராவது உட்கார்ந்து சாப்பிடுவார்களா?. படைக்குப் பின்னால் தீ என்றால் படை பயந்தல்லவா ஓடும்?. நேரடியாகத் தோன்றும் இப் பொருள்களை விடுத்து பந்தியில் சோறு இடுவதற்கு முன்னால் தீயிட்டுச் சமைப்பர் என்பதும் படையில் வெற்றி பெற்ற பின்னர் எதிரி நாட்டைத் தீயிட்டுப் பொசுக்குவர் என்பதும் தேவையற்ற மிகையான கற்பனையாகத் தோன்றுகிறது. மேலும் 'முந்து' பிந்து' என்ற சொல் வடிவங்களே பழமொழி வழக்கில் உள்ளன. இவற்றை 'முன் தீ' என்றும் 'பின் தீ' என்றும் திரித்துக் கொண்டு பலவாறாகப் பொருள் கொள்வது வேடிக்கையாக இருப்பதுடன் பழமொழிகளுக்குரிய சீரிய நோக்கமின்றி இருப்பதால் இவ் விளக்கம் தள்ளப்பட வேண்டிய ஒன்றே ஆகும்.

இன்னொரு கோணம்:

இப் பழமொழியை இன்னொரு கோணத்தில் ஆராய்ந்த போது புதியதோர் விளக்கம் கிடைத்தது. இக் கோணத்தின்படி இப் பழமொழியின் வடிவம் கீழ்க்கண்டவாறு இருக்கவேண்டும்.

பந்திக்க முந்து படைக்கப் பிந்து

இங்கே பந்தித்தல் என்றால் திருமணம் செய்தலைக் குறிக்கும். படைத்தல் என்றால் குழந்தை பெற்றுக் கொள்ளுதலைக் குறிக்கும். ஆக இப் பழமொழியின் இன்னொரு கோண விளக்கமானது ' திருமணம் செய்துகொள்வதை தள்ளிப் போடக்கூடாது. ஆனால் குழந்தை பேற்றினை சற்று தள்ளிப் போடவேண்டும்.' என்பதாகும்.

இப் புதிய விளக்கம் சரியா?

மேலே கண்ட புதிய விளக்கமானது எந்த அளவிற்குப் பொருத்தமானது என்று இங்கே பார்க்கலாம்.

பந்தித்தல் என்ற சொல்லுக்கு 'கட்டுதல்', 'கூடுதல்' என்ற பொருட்களை சென்னைத் தமிழ் இணையப் பேரகராதி கூறுகிறது. கட்டுதல் என்ற பொதுவான பொருள் விரிவாக்கமாக இங்கே தாலி கட்டுதலைக் குறிப்பதாகவும் கூடுதல் என்பது மணவாழ்வில் கூடுதலைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். ஆக பந்தித்தல் என்ற சொல்லிற்கு பந்தத்தில் (உறவில்) ஈடுபடுதல் அதாவது திருமணம் செய்தல் என்ற பொருளைக் கொள்வது சாலவும் பொருந்தக் கூடிய ஒன்றே. அடுத்து, படைத்தல் என்பதற்கு 'உயிர்களைப் படைத்தல்' அதாவது 'குழந்தை பெற்றுக் கொள்ளுதலைப்' பொருளாகக் கொள்வதும் பொருந்தக் கூடிய ஒன்றேயாகும். இனி இப் பழமொழி உருவாக்கப் பட்டதன் நோக்கம் என்ன என்று காணலாம்.

இல்லற வாழ்க்கையின் இன்றியமையாமையையும் அதை எவ்வாறு முறையோடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் இளைய தலைமுறையினருக்கு பெரியவர்கள் சொல்லும் அறிவுரையாக இப் பழமொழி அமைந்துள்ள பாங்கு முதலில் கவனிக்கத் தக்கதாகும். இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்களும் இளைஞிகளும் காலாகாலத்தில் திருமணம் செய்துகொள்வதில்லை. மேற்படிப்பு, வேலை, குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் பருவ வயதுக்கு வந்த பின்னரும் திருமணம் செய்து கொள்ளாமல் (அ) கொள்ள முடியாமல் இருந்து விடுகின்றனர். இதன் பக்க விளைவாக சமுதாயத்தில் பாலியல் சிக்கல்கள் உள்பட பல தீய பழக்க வழக்கங்களுக்கு இவர்கள் ஆளாக நேரிடுவதை நாம் காண்கிறோம். மேலும் இளமையில் நுகர வேண்டிய இல்லற இன்பத்தையும் இவர்கள் இழந்து விடுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டே பெரியவர்கள் 'திருமணத்தைத் தள்ளிப் போடவேண்டாம்' என்று கூறியுள்ளனர்.

மேலும் திருமணம் செய்த அனைவரும் உடனுக்குடன் குழந்தை பெற்றுக் கொண்டால் மக்கள் தொகை மிகவும் பெருகி விடும். மக்கள்தொகை பெருக்கத்தினால் வரக்கூடிய சமுதாயச் சிக்கல்கள் பற்றி நாம் நன்கு அறிவோம். அதுமட்டுமின்றி குழந்தை பிறந்ததும் மனைவியின் கவனம் முழுவதும் குழந்தை வளர்ப்பில் திரும்பி விடுகிறது. குழந்தை பெற்ற தாயின் உடலில் பல மாற்றங்கள் உண்டாவதால் அவருக்கு இல்லற இன்பத்தில் நாட்டம் குறைகிறது. இதனால் கணவன்-மனைவியிடையே உள்ள நெருக்கமானது தளர ஆரம்பித்து அவர்களுக்கிடையேயான இல்லற இன்பத்திலும் குறுக்கீடு நேர்கிறது. இதனால் அவர்களுக்கிடையில் புரிதல் குறைய ஆரம்பித்து பிணக்குகள் தோன்றத் துவங்குகின்றன. இதுவே பின்னாளில் மணமுறிவு வரை கொண்டுசென்று விடுகிறது. இதை நாம் பல குடும்பங்களில் நடைமுறையில் காணலாம். குழந்தை பெற்றுக் கொள்வதை 2 லிருந்து 3 ஆண்டுகள் வரை தள்ளிப் போடுவதால் மக்கள்தொகையானது ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் வருவதுடன் கணவன்-மனைவியிடையே புரிதல் ஏற்பட்டு நல்ல இல்வாழ்க்கை அமைவது சாத்தியமாகிறது. இதைக் கருத்தில் கொண்டே பெரியவர்கள் 'குழந்தை பெற்றுக் கொள்வதை சற்று தள்ளிப் போடுங்கள்' என்று கூறியுள்ளனர்.

முடிவுரை:

பெருகி வரும் மக்கள்தொகை ஒவ்வொரு நாட்டிற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது. நம் நாட்டில் மகாராட்டிர மாநிலம் தற்போது ஒரு புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது. குழந்தை பிறப்பை 2 ஆண்டுகள் வரை தள்ளிப் போடுவோருக்கு ரூ.5000 பரிசளிப்பதாக அம் மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் நமது பெரியவர்கள் குழந்தை பெறுவதைத் தள்ளிப் போடுவதின் இன்றியமையாமையை உணர்ந்து அக் காலத்திலேயே இப் பழமொழியின் வாயிலாகக் கூறிச் சென்றுள்ளனர். இனியேனும் இப் பழமொழியை நம் மக்கள் பின்பற்றினால் நாடு வளம்பெறும்.
......................................................................................................

புதன், 22 செப்டம்பர், 2010

தாமரைக்கண்ணான் உலகு (50 ஆம் கட்டுரை)


குறள்:

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.  - எண்: 1103



தற்போதைய உரைகள்:

கலைஞர் மு.கருணாநிதி உரை: தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?.

மு.வரதராசனார் உரை: தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ?.

சாலமன் பாப்பையா உரை: தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?.

பரிமேலழகர் உரை: (நிரதிசய இன்பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கு இன்னையாதல் தகாது என்ற பாங்கற்குத் தலைவன் சொல்லியது.) தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் - ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில் போல வருந்தாமல் எய்தலாமோ; தாமரைக் கண்ணான் உலகு - அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம். (ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. 'இப்பெற்றித்தாய துயிலை விட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது' என்னும் கருத்தால், 'இனிதுகொல்' என்றான். இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மையறிக.).

மணக்குடவர் உரை: தம்மால் விரும்பப்படுவாரது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோ இந்திரனது சுவர்க்கம்.? இது சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தாம் விரும்பிய மகளிரது மெல்லிய தோள்களின் மீது துயிலும் துயில்போலத் தாமரைக் கண்ணான் உலகம் இனிமையுடையதோ?.

உரைத்தவறுகள்:

மேற்காணும் உரைவிளக்கங்களை நோக்கினால், தாமரைக்கண்ணான் என்பதற்குத் திருமால் என்று சிலரும் இந்திரன் என்று சிலரும் பொருள்கொண்டிருப்பது புரியும். நமக்கேன் வம்பு? என்று சிலர் எதையுமே விளக்காமல் தாமரைக்கண்ணான் என்றே கூறியிருப்பதையும் காணலாம். இந்த ஆய்வுக்கட்டுரையின் நோக்கமே வள்ளுவர் கூறும் தாமரைக்கண்ணான் யார் என்பதைப் பற்றியே என்பதால் தெளிவாக விளக்கம் கூறாத மற்ற உரைகளைப் புறந்தள்ளிவிட்டு, பரிமேலழகர் மற்றும் மணக்குடவர் உரைகளைப் பற்றி மட்டுமே காண்போம்.

இக்குறளில் வரும் தாமரைக்கண்ணான் என்ற சொல் திருமாலையோ இந்திரனையோ குறித்துவர வாய்ப்பில்லை என்பதற்குக் கீழ்க்காணும் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

1. கடவுள் வாழ்த்திலும் சரி பிற குறள்களிலும் சரி எந்தவொரு சமயம் சார்ந்த பெயர்களையும் வள்ளுவர் குறிப்பிடவில்லை என்று முன்னரே பல கட்டுரைகளில் கண்டுள்ளோம். இந்திரனே சாலும் கரி என்று முடிவதான குறளில்கூட இந்திரன் என்ற சொல்லினால் புராணங்களில் வரும் தேவேந்திரனையோ திருமாலையோ குறிக்காமல் இயற்கைப் பொருளான கதிரவனைத்தான் குறித்தார் என்று முன்னர் ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். அவ்வகையில், இக்குறளில் வரும் தாமரைக்கண்ணான் என்ற சொல்லுக்கும் புராணம் சார்ந்த எந்தவொரு கடவுள் பெயரையும் வள்ளுவர் குறிப்பிட்டிருக்க மாட்டார்.

2. 'தாமரை மலர் போன்ற கண்களை உடையவன்' என்ற பொருளில் இந்திரனையோ திருமாலையோ வள்ளுவர் குறிக்க விழைந்திருந்தால் 'தாமரைக் கண்ணன்' என்றே குறித்திருப்பார். காரணம், பண்புப்பெயராகவோ பண்பாகுபெயராகவோ பெயர்களை அமைக்கும்போது 'அன்' விகுதி சேர்ப்பதே பொதுவான வழக்கம். சான்றாக, இறைவன், அறிவன், அந்தணன், மன்னன், பொன்னன், நன்னன் போன்ற பெயர்களைக் காட்டலாம். ஆனால் குறளிலோ 'தாமரைக் கண்ணான்' என்று வருகின்றது. இதிலிருந்து வள்ளுவர் கூற வருவது 'தாமரை மலர் போன்ற கண்களை உடையவன்' என்ற கருத்தல்ல என்பது பெறப்படுகிறது.

3. தாமரைக்கண்ணான் உலகு என்பதற்குத் திருமால் உலகம் என்று வைத்துக்கொண்டால், அங்கே வாழ்வது துறந்த தவயோகிகள் என்று பரிமேலழகரே கூறுகிறார். திருமால் உலகம் இத்தன்மையானது என்று காதலன் அறிவானா? இல்லை அந்தக் காதலிதான் அறிவாளா?. இருவருமே அறியாத ஒன்றினைப் பற்றிக் காதலன் எப்படி உவமையாகக் கூறுவான்? ஒருவேளை காதலன் கேள்விப்பட்டிருந்தாலும் ஐம்புலன்களால் காதல்இன்பம் துய்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில் ஐம்புலன் அவித்த தவயோகிகள் வாழ்வதான திருமால் உலகம் தான் அவனுக்கு நினைவுக்கு வருமா?. என்னவொரு முரண்பட்ட சிந்தனை !. மேலும் ஒன்றுக்கொன்று தொடர்பேயில்லாத இரண்டு பொருட்களை ஒப்பீடு செய்யலாமா?. சான்றாக, கரும்பைக் காட்டிலும் தேன் இனிப்பானதா? என்று கேட்டால் அதிலொரு பொருளுண்டு. இரண்டுமே இனிப்புச்சுவை கொண்டவை. ஆனால், உப்பைக்காட்டிலும் தேன் இனிப்பானதா என்று கேட்டால் அக்கேள்வியில் ஏதேனும் பொருளுண்டா?. அப்படி யாரும் கேட்டால் மனநிலை சரியில்லையா? என்று எதிர்க்கேள்வியே கேட்பார்கள். காதலியின் தோள்தரும் ஐம்புலன் இன்பத்தை அவ்வின்பமே என்னவென்று அறியாத திருமால் உலகத்துடன் ஒப்பிடுவது தேனுடன் உப்பினை ஒப்பிடுவதைப் போன்றதுதான். ஒப்புமை பொருந்தாத நிலையில் தாமரைக்கண்ணான் என்பது திருமாலைக் குறித்துவர வாய்ப்பில்லை என்பது இதனானும் உறுதியாகிறது.

4. தாமரைக்கண்ணான் என்பதற்கு இந்திரன் என்ற தேவேந்திரன் என்று பொருள்கொண்டு உரைகூறுகிறார் மணக்குடவர். ஆனால், தாமரைக்கண்ணான் என்ற பெயர் எப்படி தேவேந்திரனைக் குறிக்கும் என்று அவர் விளக்கினாரில்லை. இவர்களைப் போலவே நாமும் புராண வழிமுறையில் சிந்திப்போமானால் தாமரைக்கண்ணான் என்பதற்குப் பிரம்மனையும் ஒருபொருளாகக் காட்டமுடியும். திருமாலின் உந்தியில் தோன்றிய தாமரைமலரின்கண் அமர்ந்திருப்பவன் என்று அதற்கொரு விளக்கமும் கொடுக்கமுடியும். இப்படி வள்ளுவரின் குறள்களுக்குப் புராணங்களின் அடிப்படையில் பொருள்தேட முனைந்தால் எந்தவொரு தெளிவும் கிடைக்காமல் முடிவில் குழப்பமே மிஞ்சும் என்பதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். 

திருந்திய திருக்குறள் விளக்கம்:

இக்குறளில் வரும் தோள் என்பது கண்ணையும் தாமரைக்கண்ணான் என்பது நிலவையும் குறிப்பதாகும். இப்புதிய பொருட்களின் அடிப்படையில் இக்குறளின் திருந்திய பொருள் இதுதான்:

தாம்விரும்பும் காதலியின் கண்களிலே பெறும் துயிலின்பத்தைக் காட்டிலும் நிலவுலகம் இன்பம் தருவதோ?.

தாமரைக்கண்ணான் என்பது சந்திரனா?

முதலில் தாமரைக்கண்ணான் என்ற சொல் எவ்வாறு சந்திரனைக் குறிக்கும் என்று காணலாம்.

தாமரைக்கண்ணான் = தாமரைக்கு + அண்ணான்
                    = தாமரைக்குப் பகைவன்
                    = சந்திரன் (நிலவு)

அண்ணார் என்பதற்குப் பகைவர் என்ற பொருளை சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி காட்டுகிறது.

அண்ணார்² aṇṇār , n. < அண்ணு- + ஆ neg. + ஆர். Enemies; பகைவர். அண்ணார் புரமவிய (உப தேசகா. திரிபுர. 112).

அண்ணுதல் என்றால் கிட்டுதல், பற்றுதல் என்று பொருள்கள் உண்டு. தம்முடன் அண்ணாதவர்கள் அதாவது பற்றுகொள்ளாதவர்கள் பகைவர்களே அல்லவா?. வள்ளுவர் இக்குறளில் ஒருமையைச் சுட்ட அண்ணான் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார். இனி நிலவு எவ்வாறு தாமரைக்குப் பகைவன் ஆகும் என்று பார்ப்போம்.

நீரில் பூக்கும் பல மலர்களில் தாமரை மலர் மிக அழகானது. நீரிலேயே இருந்தாலும் இம் மலர் வெப்பத்தை விரும்பும் ஒரு மலராகும்.  எனவே தான் கதிரவன் உலாவும் பகல் நேரத்தில் நீரினின்று உயர்ந்து முழுமையாக விரிந்து மலர்ந்திருக்கும். கதிரவன் மறையும் மாலை வேளையானதும் தனது இதழ்களை சுருட்டி மூடிக் கொள்ளும். இரவு நேரத்தில் வரும் நிலவின் ஒளியோ குளுமையானது. இக் குளுமை தாமரைக்குப் பிடிக்காது. எனவே நிலவின் ஒளியில் தாமரைமலரானது சிலநேரம் தண்ணீருக்குள் மூழ்கி தன்னை மறைத்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. தாமரைப் பூவின் இத்தன்மைகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஜெந்தமுனி என்ற இணையதளத்தைக் காணலாம்.

நிலவொளி வீசும் இரவு நேரத்தில் தாமரை நீருக்குள் மறைந்து கொள்வதால்தான் நிலவைத் தாமரையின் பகைவன் என்றனர். தியாகராஜ பாகவதர் நிலவினைத் தாமரைப் பகைவன் (தம்மி வைரி) என்றும் கமலப் பகைவன் (கமல வைரி) என்றும் தனது பாடல்களில் கூறியுள்ளார். கீழ்க்காணும் இணைய தளங்களில் அப்பாடல்களைக் காணலாம்.



மேற்காணும் இரண்டாவது பாடலில் 'கமலப் பகைவனின் பிறை அணிவோன் இல்லாளே' என்று அன்னை சக்தியை விளிக்கிறார் பாகவதர். 'நிலவின் பிறை அணிந்த சிவனின்  இல்லத்தரசியே' என்று கூறுவதில் இருந்து கமலப் பகைவன் என்ற சொல் நிலவைத் தான் குறிக்கிறது என்பது உறுதியாகிறது. கலித்தொகை 134 ஆம் பாடல் இரவு நேரத்தில் நிலவின் ஒளியில் தாமரைமலர்கள் கூம்பியுள்ள நிலையைக் கூறுகிறது.

மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன்
ஒல்லாதார் உடன்று ஓட, உருத்து, உடன் எறிதலின்,
கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல்,
கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின்,
இரும் கடல் ஒலித்து ஆங்கே இரவுக் காண்பது போலப்,
பெரும் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேரப்,
போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய்ப்
பாயல் கொள்பவை போலக் கயமலர் வாய் கூம்ப,
ஒரு நிலையே நடுக்குற்று இவ் உலகு எலாம் அச்சுற,
இரு நிலம் பெயர்ப்பு அன்ன, எவ்வம் கூர் மருள் மாலை;

மேற்காணும் பாடலில்வரும் கயமலர் என்பது தாமரையைக் குறிக்கும். தாமரை மலரானது மதியிடம் தோற்கும் என்ற கருத்து கீழ்க்காணும் தண்டியலங்காரப் பதிப்புப் ( திரு.கு.சுந்தரமூர்த்தி, திருப்பனந்தாள்) பாடலில் கூறப்பட்டுள்ளது.

மறுப்பயின்ற வாண்மதியும் அம்மதிக்குத் தோற்கும்

நிறத்தலரும் நேரொக்கு மேனும் - சிறப்புடைத்துத்
தில்லைப் பெருமா னருள்போல் திருமேனி
முல்லைப் பூங்கோதை முகம்'

இங்கே நிறத்தலர் என்பது தாமரைமலரைக் குறிக்கும். விவேக சிந்தாமணியின் கீழ்க்காணும் 19 ஆம் பாடலிலும் இதைப் பற்றிய குறிப்பு உள்ளதைக் காணலாம்.

தேனுகர் வண்டு மது தனை உண்டு தியங்கியே கிடந்ததைக் கண்டு தானதைச் சம்புவின் கனி என்று தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள் வானுறு மதியும் வந்தது என்றெண்ணி மலர்கரம் குவியும் என்று அஞ்சிப் போனது வண்டோ பறந்ததோ பழம் தான் புதுமையோ இது எனப் புகன்றாள். 19.

இங்கே மலர் எனக் கூறப்பட்டது தாமரை மலரே ஆகும். மலரிலே தேனுண்டு மயங்கிக்கிடந்த ஒரு கருவண்டினை நாவல்பழம் என்று கருதிய ஒருபெண் அதனையெடுத்துத் தனது உள்ளங்கைகளிலே வைத்துப் பார்க்கிறாள். அப்போது கண்விழித்த வண்டானது பெண்ணின் சிவந்த கைகளைத் தாமரை மலரென நினைத்து நிலவு வந்துவிட்டதால் தாமரை மலர் மூடிக் கொள்ளுமே என்று அஞ்சிப் பறந்து சென்றுவிட்டதாம். எவ்வளவு அழகிய கற்பனை இது!.

மேற்கண்ட சான்றுகளில் இருந்து இக்குறளில்வரும் தாமரைக்கண்ணான் என்பது சந்திரனையே குறிக்கும் என்பது உறுதியாகிறது.

தாமரைப்பகைவன் என்று கூறாதது ஏன்?

இக்குறளில் வரும் தாமரைக்கண்ணான் என்ற சொல் சந்திரனைக் குறிக்கும் என்று மேலே விரிவாகக் கண்டோம். ஆனால், சந்திரனைக் குறிக்கத் தாமரைப்பகைவன் என்ற சொல்லை வள்ளுவர் நேரடியாகப் பயன்படுத்தாமல் தாமரைக்கண்ணான் என்ற சொல்லால் ஏன் குறிக்கவேண்டும்?. என்ற கேள்வி எழுகிறது. இதற்கான விடையினை இங்கே காணலாம்.

திருக்குறள் முழுவதையும் தேடியதில், பகைவன் என்ற ஒருமையைக் குறிக்கும் சொல்லை வள்ளுவர் எந்தவொரு குறளிலும் பயன்படுத்தவில்லை என்று தெரியவந்தது. ஆனால், பகைவர் என்ற பன்மையைக் குறிக்கும் சொல்லையும் பகை/பகைமை என்ற பொதுமையைக் குறிக்கும் சொல்லையும் பல இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார். இந்த அனைத்து இடங்களிலும் பகை / பகைமை / பகைவர் என்பதனை பெருங்கேட்டினைத் தருகின்ற ஒன்றாகவோ அழிக்கப்படவேண்டிய ஒன்றாகவோத்தான் வள்ளுவர் பயன்படுத்தி இருக்கிறார். சான்றாக,

எள்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்
உள்பகை உள்ளதாம் கேடு. - 89:9

பகையானது எள்ளின் பாதியளவாக மிகச்சிறியதாகவே இருந்தாலும் உட்பகையாய் ஒளிந்திருக்கும் அது பெருங்கேட்டைத் தருவதாகும் என்கிறார். மனிதர்களுக்கு இடையில் மட்டுமின்றி விலங்குகளுக்கு இடையிலும் பகை உண்டு. எலிக்கும் பாம்புக்கும் இடையில் இருக்கும் பகையினைக் கீழ்க்காணும் குறளில் கூறுகிறார்.

ஒலித்தக்கால் என்ஆம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும் - குறள் 77:3

இப்படிப் பகை என்பது எப்போதும் அழிவினையே விளைவாகத் தருவதால் வள்ளுவரைப் பொருத்தமட்டிலும் பகை / பகைமை / பகைவர் என்பது கொடியதாகும். ஆனால், இக்குறளில் வரும் நிலவுக்கும் தாமரைக்கும் இடையில் இருப்பது அழிவினைத் தருவதும் கொடியதுமான பகை அல்ல.!. இதைப்பற்றிக் கீழே காணலாம்.

நிலவானது அனைவருக்கும் பொதுவாகத்தான் தண்ணிய ஒளியை வீசுகிறது. இவ்வொளியைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விரும்புவர். மேலும், நிலவொளியில் காதல் செய்வது காதலர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். ஆனால், தாமரைக்குத்தான் அந்த குளிர்ந்த ஒளி பிடிக்கவில்லை. காரணம், இயற்கையாகவே நிலவின் ஒளியானது தாமரைமலரின் இதழ்களுக்கு ஒத்துக்கொள்ளாததினால் தாமரைக்கு நிலவின்மேல் ஒரு வெறுப்பு மட்டுமே. இதனை 'ஒவ்வாமை' என்றுகூட ஒருவிதத்தில் கூறலாம். ஆனால், நிலவுக்குத் தாமரைமேல் எவ்வித வெறுப்புமில்லை. இந்நிலையில், தாமரைக்கும் நிலவுக்கும் இடையில் இருப்பதை, எலிக்கும் பாம்புக்கும் இடையில் இருப்பதைப்போன்ற  அழிவைத்தரவல்ல கொடியபகை என்று கூறலாமா?. கூடாது.

அப்படியென்றால், இதை எவ்வாறு குறிப்பிடுவது?. அதற்குத்தான் இங்கே அண்ணான் என்ற சொல்லைக் கையாள்கிறார். அண்ணுதல் என்ற சொல்லுக்குப் பற்றுதல் என்று அகராதிகள் பொருள் கூறுவதை மேலே கண்டோம். இதிலிருந்து, அண்ணான் என்ற சொல்லுக்குப் பற்றற்றவன் / விருப்பமற்றவன் என்றும் பொருள்கொள்ளலாம். தாமரைக்கு நிலவின்மேல் / நிலவொளியின்மேல் விருப்பமில்லை என்பதால், தாமரைக்கு விருப்பமற்றவன் என்ற பொருளைத் தரும்படியாக,

தாமரைக்கு + அண்ணான் = தாமரைக்கண்ணான்

என்ற சொல்லினால் நிலவினைக் குறிப்பிட்டார் என்க. ஆனால், தியாகராஜ பாகவதர் தாமரைப்பகைவன் என்று கூறுகிறாரே என்றால் அது அவர் விருப்பம். வள்ளுவரைப் பொருத்தமட்டிலும் நிலவானது தாமரைக்குப் பகைவன் அன்று; தாமரைக்கு விருப்பமில்லாதவனே ஆவான். அதனால்தான் இக்குறளில் நிலவினைக் குறிக்கத் தாமரைப்பகைவன் என்ற சொல்லை அவர் பயன்படுத்தவில்லை.

பெண்களின் தோளும் நிலவும்:

பெண்களின் 'தோள்' என்பது அவரது கண்களையே பெரும்பாலும் குறிக்கும் என்று 'தோள் என்றால் என்ன?' என்ற ஆய்வுக் கட்டுரையில் பல ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். இக்குறளிலும் தோள் என்பது காதலியின் கண்களையே குறித்து வந்துள்ளது. பெண்களின் தோள் ஆகிய கண்கள் வட்டவடிவினதாய் வெண்ணிற ஒளி வீசுவதால் அக்கண்களை நிலவுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடுவது வழக்கமே. இதைப்பற்றி ஏராளமான கட்டுரைகளில் முன்னரே கண்டுள்ளோம்.

முழுநிலா ஒளிவீசும் ஓர் இரவிலே காதலனும் காதலியும் ஒரு பொய்கையின் அருகே காதல்செய்து கொண்டிருக்கின்றனர். அப்பொய்கையில் பிற மலர்களுடன் தாமரைமலர்களும் பூத்திருக்கின்றன. ஆனால், தாமரைமலர்கள் மட்டும் வாடியவைபோல கூம்பியிருக்கின்றன. காதலன் தனது காதலியின் கண்கள் வீசும் காதல் பார்வையின் இன்பத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறான். அப்படியே மெய்ம்மறந்துபோய் உடல் அசைவின்றி உறங்குவதைப்போல இருவரும் காதல்வயப்பட்ட நிலையில் இருக்கின்றனர். இந்நிலையினையே 'துயில் கொள்ளுதல்' என்றும் 'முயங்குதல்' என்றும் இலக்கியங்கள் கூறும். இப்படியே வெகுநேரம் கழிந்தபின்னர், மேலே ஒளிவீசும் முழுநிலவையும் தாமரைமலர்களையும் காதலியின் கண்களையும் மாறிமாறிப் பார்க்கின்றான் காதலன். அப்போது வெண்ணிற ஒளிவீசும் காதலியின் கண்களையும் நிலவினையும் மனதிற்குள் ஒப்பிட்டுப் பார்க்கின்றான்.

இந்நிலவின் தண்ணொளியோ 
இராப்பொழுதே கிடைத்திருக்கும்.
என்னவளின் கண்ணொளியோ 
எப்பொழுதும் கிடைத்திருக்கும்.

வெண்ணிலவின் தண்ணொளியில் 
தாமரையும் கூம்பிவிடும்.
பெண்ணிவளின் கண்ணொளியில் 
ஐம்புலனும் அகமலரும்.

இப்படியெல்லாம் ஒப்பிட்டுப்பார்த்த அவன் ஒருமுடிவுக்கு வந்தவனாகக் கூறுகிறான்:

தாம்விரும்பும் காதலியின் கண்களிலே பெறும் துயிலின்பத்தைக் காட்டிலும் நிலவுலகம் இன்பம் தருவதோ?. ஒருபோதும் இல்லை.


முடிவுரை:

புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்தின் முதல் பாடலிலேயே காதலியின் கண்ணழகினைப் புகழ்கின்றான் காதலன்.

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள. - 1101.

காதலியின் கண்கள் தனது ஐம்புலன்களுக்கும் விருந்தளிப்பதாய் மேற்காணும் குறளில் கூறும் காதலன், அடுத்தடுத்த பாடல்களிலும் காதலியின் தோள் ஆகிய கண்களையே பலவாகப் புகழ்கின்றான்.

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள். - 1105.

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள். - 1106.

காதலியின் தோள் ஆகிய கண்கள் தரும் இன்பமே அனைத்து இன்பங்களிலும் மேலானது என்ற கருத்தை வலியுறுத்த நினைத்த வள்ளுவர் வேறெதனுடனும் ஒப்பிடாமல் அதனை நிலா தரும் இன்பத்துடன் இக்குறளில் ஒப்பிட்டுக் கூறினார். காரணம், நிலவொளி தரும் இன்பம் இயற்கையானது; இத்தன்மைத்து என்று அனைவருமே உய்த்து அறியத்தக்கது; குறிப்பாகக் காதலர்கள் அனைவரும் நன்கு அறிந்த ஒன்றாகும். ஆனால், இந்திர உலகம் அல்லது திருமால் உலகம் என்பதோ கற்பனையானது; இத்தன்மைத்து என்று யாருமே உய்த்து அறிந்திராதது. ஆகவே, இக்குறளில்வரும் தாமரைக்கண்ணான் உலகு என்பது நிலவையே அன்றி இந்திர உலகத்தையோ திருமால் உலகத்தையோ வேறெதையுமோ குறித்து வரவில்லை என்பது உறுதிசெய்யப்படுகிறது.

========== வாழ்க தமிழ் ! வளர்க வள்ளுவம் !! ===========

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

திருக்குறளில் மரம்

முன்னுரை:
வாயுறை வாழ்த்து எனப் போற்றப்படும் திருக்குறளில் பல இடங்களில் மரம் என்ற சொல் பயின்று வந்துள்ளது. நுண்மாண் நுழைபுலம் மிக்க தெய்வப் புலவராம் வள்ளுவர் மரத்தின் தன்மைகளைப் பற்றியோ நன்மைகளைப் பற்றியோ அறியாதவரல்லர். 'மருந்தாகித் தப்பா மரத்தற்றால்', 'உள்ளூர்ப் பயன் மரம் பழுத்தற்றால்' என்று மரத்தின் நன்மைகளைக் கூறி அவற்றைப் போற்றிய வள்ளுவர் 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்', 'மண்ணோடியைந்த மரத்தனையர்', ' மரமக்கள் ஆதலே வேறு' என சில இடங்களில் மரத்தின் சிறப்பைக் குறைத்துக் கூறியிருப்பதாக இன்றைய உரைநூல்கள் கூறுகின்றன. வள்ளுவர் உண்மையில் அவ்வாறு கூறியிருப்பாரா?. மரத்தைப் பொறுத்தமட்டில் வள்ளுவரின் உண்மையான நிலைப்பாடு என்ன? என்பதை ஆய்வின் மூலம் விளக்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

சில முரண்பாடான உரைவிளக்கங்கள்:

மண்ணோடியைந்த மரத்தனையர் கண்ணோடியைந்து கண்ணோடாதவர் - குறள் 576
கலைஞர் உரை: ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.
மு.வ உரை: கண்ணோட்டதிற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப் போன்றவர்.
சாலமன் பாப்பையா உரை: கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே.

உரம் ஒருவற்கு உள்ளவெறுக்கை அஃதில்லார் மரமக்கள் ஆதலே வேறு. - குறள் 600
கலைஞர் உரை: மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.
மு.வ உரை: ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.
சாலமன் பாப்பையா உரை: ஊக்க மிகுதியே ஒருவனுக்குத் திண்ணிய அறிவு. அவ்வூக்கம் இல்லாதவர் வடிவத்தால் மக்கள்; மனத்தாலோ வெறும் மரமே.

அரம்போலும் கூர்மையரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லாதவர்.-குறள் 997
கலைஞர் உரை: அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்.
மு.வ உரை: மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.
சாலமன் பாப்பையா உரை: மனிதப்பண்பு இல்லாதவர்கள் அரம் போல அறிவுக்கூர்மை படைத்தவர் என்றாலும் ஓர் அறிவு படைத்த மரத்தைப் போன்றோரே.

உரைத்தவறுகள்:

மேற்காணும் உரைகளை நோக்கினால் ஓர் உண்மை விளங்கும். அனைத்து விளக்கங்களிலும் மரத்தின் சிறப்பு குறைத்துக் கூறப்பட்டுள்ளதை அறியலாம். முதல் குறளில் கண்ணோட்டமில்லாதவருக்கும் இரண்டாம் குறளில் ஊக்கமில்லாதவருக்கும் மூன்றாம் குறளில் மக்கட் பண்பு இல்லாதவருக்கும் ஒப்பாக மரம் கூறப்பட்டுள்ளது. இது சரியாகுமா என்றால் சரியாகாது. ஏனென்றால் கண்ணோட்டம், ஊக்கம், மக்கட் பண்பு ஆகியவை மாந்தருக்குரிய பண்புகள். இவற்றை மரத்துடன் ஒப்பிடுவதோ மரத்திடம் எதிர்பார்ப்பதோ எவ்வகையிலும் முறையாகாது. மாந்தருக்கு ஆறறிவு இருக்கலாம்; மரத்துக்கு ஓரறிவு இருக்கலாம். ஆனால் மனிதனைவிட மரம் எவ்வகையிலும் தாழ்ந்ததில்லை. இலை, காய், கனி, பூ, பட்டை, வேர் என்று தனது அனைத்து உறுப்புக்களாலும் மாந்தருக்கும் பிற உயிரினங்களுக்கும் கைம்மாறு கருதாமல் உதவி செய்துவரும் மரம் உறுதியாக மனிதரைவிட உயர்ந்ததுதான். இதை வள்ளுவரே 216, 217 ஆம் குறள்களில் கூறுகிறார்.

எனவே தான் பண்பு கெட்ட மனிதர்களை மரத்துடன் ஒப்பிட்டுக் கூறுவது ஏற்புடைய செயலாகாது என்னும் கருத்து இங்கே வலியுறுத்தப் படுகிறது. இப்படி ஒரு தவறான கருத்தை வள்ளுவர் உறுதியாகக் கூறி இருக்க மாட்டார்.  இவை உரையாசிரியர்களின் சொந்த விளக்கங்கள். ஆகவே இந்த விளக்கங்கள் தவறாகவே கொள்ளப்படும். இதிலிருந்து இக் குறள்களில் வரும் மரம் என்ற சொல் உயிருள்ள மரத்தைக் குறிக்கவில்லை என்பது பெறப்படுகிறது. என்றால் வள்ளுவர் மரம் என்ற சொல்லை எப்பொருளில் பயன்படுத்தியுள்ளார்?.  இதைப் பற்றி முடிவு செய்ய மரம் என்ற சொல் பயிலும் அனைத்துக் குறள்களையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

மரம் பயிலும் குறள்கள்:

மரம் என்ற சொல் பயிலும் குறள்கள் யாவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று - குறள்: 78
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடையான் கண் படின் - குறள்: 216
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகையான் கண் படின் - குறள்: 217
இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து - குறள்: 879
நச்சப்படாதவன் செல்வம் நடுவூருள் நச்சுமரம் பழுத்தற்று - குறள்: 1008

மண்ணோடியைந்த மரத்தனையர் கண்ணோடியைந்து கண்ணோடாதவர் - குறள்: 576
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார் மரமக்கள் ஆதலே வேறு - குறள்: 600
அரம்போலும் கூர்மையரேனும் மரம்போல்வர் மக்கட் பண்பில்லாதவர் - குறள்: 997
நாண் அகத்தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர் மருட்டியற்று - குறள்: 1020
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண் மாஞாலம் மரப்பாவை சென்று வந்தற்று - குறள்: 1058

இனி இக்குறள்களுக்கான உண்மையான விளக்கங்கள் என்ன என்று காணலாம்.

குறள் விளக்கங்கள் -1 :

மேற்காணும் பத்து குறள்களில் முதல் ஐந்து குறள்களின் விளக்கங்களை முதலில் காணலாம்.

குறள் எண்: 78 - உள்ளத்தில் அன்பு எனும் ஈரம் இல்லாதவருடைய உயிர் வாழ்க்கையானது பாலை நிலத்தில் நீரின் ஈரம் இல்லாமல் வற்றிப் போன ஒரு மரம் மீண்டும் தளிர்ப்பதைப் போன்றதாகும். அதாவது பூமிக்குக் கீழே நீரின்றி வற்றிப்போன ஒரு மரம் பெய்த மழையால் சிறிது தளிர்த்தாலும் பாலைநிலத்தின் அகத்தே ஈரமின்மையால் விரைந்து உலர்ந்துவிடும். அதுபோல அகத்தில் சிறிதும் அன்பில்லாமல் புறத்தில் மட்டும் அன்புடையதுபோல நடப்பவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருப்பதுபோலத் தோன்றினாலும் வெகு விரைவில் அது இல்லாது அழியும். இக் குறள் மரத்தின் தன்மையைக் கூறுகிறது.

குறள் எண்: 216- மக்களுக்குப் பயன் தரக்கூடிய ஒரு பொது மரம் ஊருக்குள் வளர்ந்து பழுக்கும்போது அதனால் மக்கள் பலரும் பயன் பெறுவர். அதுபோல தன்னலம் கருதாத ஒரு தலைவனிடத்திலே செல்வம் சேருமானால் அதனால் மக்கள் அனைவரும் பயன் பெறுவர். இக் குறள் மரத்தின் நன்மையைக் கூறி அதைச் சிறப்பிக்கிறது.

குறள் எண்: 217 - ஒரு நல்ல மரமானது நன்கு வளர்ந்ததும் இலை, காய், பட்டை, வேர், பழம் எனப் பலவகையாலும் மக்களின் பிணிக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. அதைப் போல செல்வமானது ஒரு பெருந்தகையிடம் சேருமானால் அது மக்களின் பசிப்பிணியைப் போக்கப் பயன்படும். இந்தக் குறளும் மரத்தின் நன்மையைக் கூறி அதைச் சிறப்பிக்கிறது.

குறள் எண்: 879 - முள்மரம் இளையதாக இருக்கும்போது அதைக் கொய்து அழிக்க வேண்டும். முட்கள் முதிர்ந்து விட்டால் அவை கொய்வோரின் கைகளுக்குத் தீங்கு விளைவிக்கும். அதுபோல பகையினையும் ஆரம்பத்திலேயே அகற்றாமல் முற்றிய பின்னர் அகற்றும்போது பெரும் சேதம் ஏற்படும். இக் குறள் மரத்தின் தன்மையினைச் சொல்கிறது.

குறள் எண்: 1008 - மக்களால் விரும்பப் படாதவனிடத்திலே சேரும் செல்வமானது நச்சு மரத்தில் பழுத்திருக்கும் பழங்களைப் போல யாருக்கும் பயனற்றது ஆகும். இக் குறளும் மரத்தின் தன்மையினைச் சொல்கிறது.

மேற்காணும் ஐந்து குறள்களை நோக்கினால் ஓர் உண்மை புலப்படும். இக் குறள்களில் வெறுமனே 'மரம்' என்று வழங்காது, 'வற்றல் மரம்', ' பயன் மரம்', 'மருந்தாகித் தப்பா மரம்', 'முள்மரம்', ' நச்சு மரம்' என மரச் சொல்லுடன் முன்னொட்டுக்கள் பயன்படுத்தப் பட்டிருக்கும். இம் முன்னொட்டுக்கள் அடைமொழிகளாய் இருந்து மரத்தின் தன்மைகளையும் நன்மைகளையும் விளக்குவதற்காக வந்தவை. ஆனால் பின் ஐந்து குறள்களிலும் முன்னொட்டுக்கள் இல்லாததைக் காணலாம். சிலவற்றில் பின்னொட்டுக்களும் ('மக்கள்' மற்றும் 'பாவை') சிலவற்றில் எவ்வித ஒட்டும் இல்லாமலும் வந்திருப்பதைக் காணலாம். இதில் 'மண்ணோடியைந்த மரம்' என்ற குறளில் முன்னொட்டு இல்லை என்றே கொள்ள வேண்டும். இது ஏன் என்பதையும் பின் ஐந்து குறள்களுக்கான சரியான விளக்கங்களையும் கீழே காணலாம்.

குறள் விளக்கங்கள் - 2 :

குறள் எண்: 576 ல் 'மண்ணோடியைந்த மரம்' என்ற தொடரில் வரும் மரத்தை உயிருள்ள மரமாகக் கருத முடியாது. ஏனென்றால் உயிருள்ள மரம் என்றாலே அது மண்ணோடு அதாவது நிலத்தோடு பொருந்தியே இருக்கும். எனவே 'மண்ணோடியைந்த மரம்' என்று அடைகொடுக்க வேண்டிய தேவை இல்லை. ஒன்றின் சிறப்புப் பண்புகளைக் குறிக்கவே அடைமொழிகள் தேவை என்பதால் இங்கு 'மண்ணோடியைந்த' என்பது உயிருள்ள மரத்தைக் குறித்து வந்திருக்காது என்பது தெளிவு. என்றால் இங்கு மரம் என்பது எதைக் குறிக்கிறது?. இதற்கான விடையினை கடைசி இரண்டு குறள்களில் காணலாம். கடைசி இரண்டு குறள்களில் 'மரப்பாவை' என்ற சொல் பயின்று வந்துள்ளது. இதற்கு 'மரத்தாலான மனித வடிவம்' என்று பொருள் கொள்ளலாம். குறள் எண் 576 ல் வருகின்ற மண்ணோடியைந்த மரமும் இத்தகைய மரப்பாவை ஒன்றையே குறிக்கிறது. ஆனால் இதில் வரும் மரப்பாவையானது வண்ணக் கலவையால் பூசப்பட்டு அலங்கரிக்கப் பட்டுள்ளது. (மண் என்றால் அலங்காரம், ஒப்பனை என்ற பொருட்களும் உண்டு. சான்று: சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி). மண்ணோடியைந்த மரம் என்பது அலங்காரம் செய்யப்பட்ட மரப்பாவை என்ற பொருளில் கண்ணோட்டம் இல்லாதவர்களுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. உயிருள்ள கண்களில் கண்ணோட்டம் இல்லையென்றால் அவை அலங்காரம் செய்யப்பட்ட ஆனால் உயிரற்ற மரப்பாவையின் கண்களுக்கே ஒப்பாகும் அல்லவா, அதனால் தான்  கண்ணோட்டம் இல்லாத மனிதரை அலங்காரம் செய்யப்பட்ட மரப்பாவை என்கிறார் வள்ளுவர். ஆக இக் குறளில் வரும் மரம் என்னும் சொல் உயிருள்ள மரத்தைக் குறிக்காமல் ஆகுபெயராக மரத்தாலான பாவையைத் தான் குறிக்கிறது என்பது பெறப்படுகிறது.

குறள் எண்: 600 ல் ஒரு எழுத்துப் பிழை உள்ளது. 'மரமக்கள் ஆதலே பேறு' என வருவதே திருத்தமாகும். இக் குறளின் பொருளானது: ' ஒருவற்கு உள்ள வெறுக்கையானது ஊக்க மிகுதியே ஆகும். ஊக்கமுடையவர்கள் அடையக் கூடிய நற்பேறுகள் பலவாகும். ஆனால் ஊக்கம் இல்லாதார் உயிரோடிருந்தும் உயிரற்ற மரத்தாலான பாவைகளாக ஆவதே அவர்கள் அடையும்  பேறாகும்.' இங்கே மரமக்கள் என்பது மரத்தாலான மனித வடிவங்கள் (பாவைகள்) என்ற பொருளில் தான் வள்ளுவரால் பயன்படுத்தப் பட்டுள்ளது.

குறள் எண்: 997  ன் பொருள் விளக்கமானது: வாளரம் போல கூர்மையான அறிவுடையவரே ஆனாலும் மக்கள் பண்பு இல்லாவிட்டால் அவர்கள் உயிரோடிருந்தாலும் உயிரற்ற மரப்பாவை போன்றவரே ஆவார்கள். இக் குறளில் வரும் மரம் என்ற சொல் உயிருள்ள மரத்தைக் குறிக்காமல் எவ்வாறு மரப்பாவையைக் குறிக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம். மக்களால் அடைவதற்கு எளியவனாயும் மக்களிடத்தில் இனிமையாக பழகுபவனாயும் இருப்பவனே மக்கட் பண்புடையவன் என்று பண்புடைமை குறள்கள் 991, 992 கூறுகின்றன.  ஆனால் சிலரை இவ்வாறு பார்த்திருக்கலாம். நாம் அவரிடத்தில் சென்று ஏதாவது பேசினால் அவர் பதிலே பேசமாட்டார். இத்தனைக்கும் அவர் ஊமையோ செவிடோ அல்ல; சிறந்த அறிவாளி எனப் பெயர் பெற்றவர். பொதுமக்களிடத்தில் பேசவேமாட்டார். உயர்மட்ட அறிவாளிகளுடன் மட்டுமே பேசக் கூடியவர். பிறரை எள்ளளவும் மனிதராகக் கூட மதிக்கமாட்டார். இத்தகைய மனிதர்களைத் தான் மக்கட் பண்பில்லாதவர் எனக் கூறுகிறார் வள்ளுவர். இவர்களிடம் சென்று பேசுவதும் சரி ஒரு மரப்பாவையிடம் பேசுவதும் சரி இரண்டுமே ஒன்று தான். ஏனென்றால் இரண்டுமே பதில் பேசாது. அதனால் தான் மக்கட் பண்பில்லாதவர்களை மரப்பாவை என்கிறார் வள்ளுவர்.

குறள் எண்: 1020 ன் விளக்கமானது: நெஞ்சிலே வெட்கமின்றி தகாத செயல்களைச் செய்வது கயிற்றால் கட்டி இயக்கப்படும் மரப்பாவையின் செயலை ஒக்கும். இக் குறளில் வெட்கமில்லாதவரை உயிரற்ற மரப்பாவைக்கு ஒப்பிடுவதன் காரணம் மரப்பாவை உயிரற்றதெனினும் கயிற்றால் கட்டி அதை இயக்க முடியும். ஆனால் அதற்கு வினையின் நன்மை தீமைகள் தெரியாது; வெட்கப்படவும் தெரியாது. தவறு செய்துவிட்டோம் என்று அறிந்ததும் நெஞ்சில் ஒரு துணுக்குறுவோமே அது உயிருள்ளவைக்கு மட்டுமே பொருந்தும். இந்த துணுக்கு இல்லாதவர்கள் கயிற்றால் கட்டி இயக்கப்படும் உயிரற்ற மரப்பாவை என்கிறார் வள்ளுவர்.

குறள் எண் 1058 ல் வேற்றுமை உருபு மயக்கம் உள்ளது. இதை உணராமல் தற்கால உரையாசிரியர்கள் கீழ்க்காணுமாறு உரை விளக்கங்கள் கூறியுள்ளனர்.

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண் மாஞாலம் மரப்பாவை சென்று வந்தற்று.

கலைஞர் உரை: வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை.
மு.வ உரை: இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை: பிச்சை ஏற்பார் என்பவர் இல்லாது போய் விட்டால், குளி்ர்ந்த பெரிய இவ்வுலகத்தில் வாழ்பவரின் வாழ்க்கை, வெறும் மரப்பொம்மைகளின் போக்குவரத்தாகவே ஆகிவிடும்.

இங்கே இரப்பாரை என்னும் சொல்லிற்கு இரப்பவர்கள் என்று பொருள் கொண்டு உரை கூறியுள்ளனர். இவ்வாறு பொருள் கொண்டால், உலகில் பிச்சைக்காரர்கள் இருந்தால் தான் நல்லது என்று வள்ளுவர் வலியுறுத்திக் கூறுவதாக அல்லவா பொருள் தொனிக்கிறது.  இவ்வாறு வள்ளுவர் கூறி இருக்க முடியாது. ஏனென்றால் ஒரு நாடு செல்வச் செழிப்புடன் இருந்தால் அங்கே பிச்சைக் காரர்கள் இருக்க மாட்டார்கள் அல்லவா?. எனவே இரப்பாரை என்னும் சொல்லிற்கு இரப்பவர்கள் என்று பொருள் கொள்வது தவறு என்பது புலப்படும். என்றால் இச்சொல் உணர்த்தும் உண்மைப் பொருள் தான் என்ன?. இதைப் பற்றிக் காணலாம்.

இரப்பாரை என்னும் சொல்லில் உள்ள 'ஐ' என்னும் இரண்டாம் வேற்றுமை உருபிற்கு பதிலாக 'கு' என்னும் நான்காம் வேற்றுமை உருபு வந்திருக்க வேண்டும். அதாவது இரப்பார்க்கு என்று வந்திருக்க வேண்டும். இங்கே வேற்றுமை உருபு மயங்கி வந்திருப்பதால் இது உருபு மயக்கமாகும். திருக்குறளில் இதுபோல வேற்றுமை உருபு மயங்கும் இடங்கள் உண்டு. குணமும் சினமும் என்ற ஆய்வுக் கட்டுரையில் இது பற்றி நாம் ஏற்கெனவே கண்டிருக்கிறோம்.  'இரப்பார்க்கு இல்லாயின்' எனக் கொண்டால் இக் குறளின் உண்மையான பொருள் இது தான்:

'தம்மிடம் வந்து இரப்பவர்களுக்கு 'இல்லை' என்று கூறும் நிலை உண்டானால் பசுமை உடைய இந்தப் பெரிய உலகத்தில் வாழும் மக்களின் இயக்கம் மரப்பாவைகளின் இயக்கத்திற்கே ஒப்பாகும்.' அதாவது உயிர் கொண்டு இயங்கினாலும் உதவி செய்யும் குணம் இல்லாததால் அவர்கள் உயிரற்ற ஆனால் கயிற்றால் கட்டி இயக்கப்படும் மரப்பாவைகளையே ஒப்பர் என்கிறார் வள்ளுவர்.

வள்ளுவரின் நிலைப்பாடு:

மேற்கண்ட குறள்கள் அனைத்திலும் வள்ளுவர் மரம் என்ற சொல்லை தனியாகவோ பிற சொற்களுடன் சேர்த்தோ மரத்தாலான மனித வடிவங்கள் என்ற பொருளில் தான் பயன்படுத்தியுள்ளார் என்பதைக் கண்டோம். ஏன் வள்ளுவர் கற்சிலை அல்லது மண்சிலையை உவமையாகப் பயன்படுத்தவில்லை? என்ற கோணத்தில் ஆய்வு செய்தபோது சில கருத்துக்கள் முகிழ்த்தன.

1. மரப்பாவைக்கும் மனிதஉடலுக்கும் ஒரு அடிப்படை ஒற்றுமை உண்டு. இரண்டுமே கரிமப் பொருட்களால் ஆனவை. அதனால் இரண்டுமே தீப்பிடித்து எரியும்; நீரில் மிதக்கும். உயிர் பிரிந்தவுடன் மனித உடல் மரப்பாவை போல விறைத்துவிடும்.

2. மரப்பாவையினை கயிற்றால் கட்டி உயிருள்ளது போல இயக்க முடியும். ஆனால் கல்சிலைகளையோ மண்சிலைகளையோ அவ்வாறு இயக்குவது கடினமாகும்.

இக் காரணங்களால் வள்ளுவர் கற்சிலை மற்றும் மண்சிலையினைத் தவிர்த்து மரப்பாவையினை உவமையாகப் பயன்படுத்தி இருக்கலாம். அது மட்டுமின்றி திருக்குறளில் ஒரு இடத்தில் கூட கற்சிலை என்ற சொல்லோ அப்பொருளைத் தருவதாக வேறொரு சொல்லோ பயன்படுத்தப் படவில்லை. கல் என்ற சொல் சில இடங்களில் பயன்படுத்தப் பட்டிருந்தாலும் அவை கற்சிலை என்ற பொருளில் வழங்கப்படவில்லை. குறள் 407 ல் மண்மாண் புனைபாவை என்ற சொல்லாடல் வருகிறது. இதில் வரும் மண் என்பதற்கு மண்ணாலான என்று பொருள் கொள்வதைக் காட்டிலும் அலங்காரம் அல்லது ஒப்பனை என்ற பொருள் நன்கு பொருத்தமாக உள்ளது. காண்பதற்கு நல்ல அழகுடன் நல்ல உடையுடுத்தி இருக்கும் ஒருவன் நுட்பமான கல்வி அறிவு இல்லாவிட்டால் அலங்காரம் செய்யப்பட்டு (மண்மாண்) ஆடையணிந்த(புனை) ஒரு மரப்பாவைக்கு ஒப்பாவான் என்று பொருள் கொள்வது சாலப் பொருத்தமாக இருக்கிறது. இக் குறள் மட்டுமின்றி வேறெங்கும் மண்சிலை அல்லது அதைக் குறிப்பதான வேறொரு சொல் திருக்குறளில் பயின்று வரவில்லை. ஆக கற்சிலை அல்லது மண்சிலை பற்றி பிற குறள்களில் வராததாலும் மரப்பாவையே பயின்று வருவதாலும் 407 ஆம் குறளில் வரும் பாவையினை மரப்பாவை எனக் கொள்வதே சரியாகும்.

3. மரப்பாவைகளைப் பற்றிக் கூறிய வள்ளுவர் மண்சிலை மற்றும் கற்சிலைகளைப் பற்றிக் கூறாததில் இருந்து வள்ளுவர் காலத்தில் மரப்பாவைகள் மட்டுமே வழக்கில் இருந்திருக்கக்கூடும் என்ற ஒரு கருத்தும் முகிழ்க்கிறது.

முடிவுரை:

இதுகாறும் கண்டதில் இருந்து வள்ளுவர் மரத்தைப் போற்றியுள்ளாரே தவிர அதன் மதிப்பை ஒரு சிறிதும் குறைத்துக் கூறவில்லை என்ற முடிவுக்கு வருகிறோம். வள்ளுவரைப் புரிந்து கொள்ளாமல் அவர் எழுதிய குறள்களுக்கு விளக்கங்கள் அளிப்பது எவ்வளவு தவறு என்பதற்கு இக் கட்டுரை ஓர் சான்றாகும். இயற்கையோடு ஒட்டிய வாழ்வியல் கருத்துக்களை மிக நுட்பமாக விளக்கும் திறன் கொண்ட வள்ளுவனை இனியாவது மக்கள் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
....................................................................................................................