திங்கள், 21 செப்டம்பர், 2009

நிறைமொழி மாந்தர்


பாடல்:

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
              - குறள் எண்: 28

தற்போதைய பொருள்:

கலைஞர் உரை: சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.
மு.வ உரை: பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.
சாலமன் பாப்பையா உரை: நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.

தவறுகள்:

மேற்காணும் உரைகளில் முதல் இரண்டு உரைகளும் நிறைமொழி மாந்தர் என்னும் தொடருக்குச் சான்றோர் என்று பொருள் கூறுகின்றன. இப் பொருள் இதற்குப் பொருந்துமா என்றால் பொருந்தாது. ஏனென்றால் சான்றோர் வேறு; நிறைமொழி மாந்தர் வேறு. நல்ல பண்புகளுக்குச் சான்றாக விளங்கும் தன்மை உடையவரே சான்றோர் ஆவர். இக் குறளில் வரும் நிறைமொழி மாந்தர் என்பது சான்றோரைக் குறிக்காது என்பதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று: சான்றோர் என்ற சொல்லைத் திருக்குறளில் பல இடங்களில் பயன்படுத்தி இருக்கும் வள்ளுவர் இக் குறளில் அச் சொல்லைப் பயன்படுத்தாதது. இரண்டு: சான்றோரின் இயல்புகள் குறித்து சான்றாண்மை என்னும் தனி அதிகாரத்தில் கூறி இருப்பது. எனவே நீத்தார் பெருமையைக் கூறும் இக் குறளில் வரும் நிறைமொழி மாந்தர் என்பது ஐம்புலன் அவித்தோரையே குறிக்கும் என்பது தெளிவாகிறது. சா.பா.உரையில் வரும் 'நிறைவான வாக்குப் பெருமை' ஆகிய பண்பும் சான்றோர்க்கே உரியது என்பதால் அப் பொருளும் இங்கே பொருந்தாது என்பது பெறப்படுகிறது.

அடுத்து மறைமொழி என்னும் சொல்லுக்கு அறவழி நூல்கள் என்றும் மந்திரச்சொற்கள் என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது. இப் பொருள்களும் இங்கு பொருந்தாது. ஏனென்றால் நூலாகட்டும் சொற்களாகட்டும் இரண்டுமே உரைக்கும் தன்மை பெற்றவை. ஆனால் வள்ளுவரோ 'மறைமொழி காட்டிவிடும்' என்கிறார். இதிலிருந்து மறைமொழி என்பது காட்டும் தன்மை உடையதே அன்றி உரைக்கும் தன்மை உடையது அல்ல என்பதைப் பெறலாம். எனவே மேற்சொன்ன இரண்டு பொருட்களும் இக் குறளில் வரும் மறைமொழி என்பதற்குப் பொருந்தாது என்பது உறுதியாகிறது. இந்தப் பொருள் தவறுகளுக்குக் காரணம் ஒரே ஒரு எழுத்துப் பிழை என்பதே.

திருத்தம்:

முதலடியில் வரும் 'நிலம்' என்னும் சொல் 'நிறம்' என்று வரவேண்டும். நிறம் என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டென்றாலும் இங்கு அச் சொல் உடலைக் குறிக்கும்(ஆதாரம்: கழகத் தமிழ்க் கையகராதி).இக் குறளில் வரும் நிறைமொழி என்பது மௌனமொழி அதாவது பேசாமையினைக் குறிக்கும். மறைமொழி என்பது உரைக்கப் படாத குறிப்பு மொழியை அதாவது சின்முத்திரை போன்றவற்றைக் குறிக்கும். பெருமை என்பது இக் குறளில் பொருட்பெருமையைக் குறிக்காமல் அறிவுப் பெருமையைக் குறிக்கும். இனி இக்குறளின் சரியான பொருள் இதுதான்: மௌனத்தை மொழியாகக் கொண்ட ஐம்புலன் அவித்தோரின் அறிவுப்பெருமையினை அவரது உடல்குறிப்பு மொழிகள் காட்டி நிற்கும்.'

நிறுவுதல்:

நிறைதல் என்னும் சொல்லுக்கு முழுமையாதல் என்ற பொருள் உண்டு. நிறைமொழி என்பது முழுமையான மொழி என விரியும். இவ் உலகில் மௌனத்தைத் தவிர வேறெந்த மொழியும் முழுமையான மொழி ஆகாது. ஏனென்றால் மௌனமே அனைத்து உயிர்களுக்கும் பொதுவான மொழி ஆகும். எல்லா மொழிகளிலும் இது இருப்பதுடன் எல்லா மொழிகளையும் இது தனக்குள் அடக்கி நிற்கிறது. என்வே தான் இது அனைவராலும் பயன்படுத்தப் படுகிறது. அன்றியும் ஐம்புலன் அவித்தோருக்கு எஞ்ஞான்றும் மௌனமே மொழி ஆகும். ஏனென்றால் ஐம்புலன் அடக்கலின் முதல் நிலையே நாவை அடக்குதல் ஆகும். சுவை மற்றும் சொல் ஒழித்தலே நாவடக்கம் ஆகும். சொல்லும் சுவையும் ஒடுங்கத் துவங்கும்போது உடலிலும் மனதிலும் பல மாற்றங்கள் உண்டாகின்றன. நாவடக்கத்தினால் ஒருவர் மன அமைதியையும் உடல் நலத்தையும் ஒருங்கே பெறுவதுடன் ஏனைப் புலன்களின் அடக்கத்திற்கும் அதுவே அடிகோலுகிறது. எனில் ஐம்புலன் அவித்தோரின் எண்ணங்களைப் பிறர் அறிவது யாங்ஙனம்?. இதற்கான விடையினை இங்கே காணலாம்.

பொதுவாக மௌனத்தை மொழியாகக் கொண்டவர்கள் உடல்குறிப்பு மொழிகளால் தமது எண்ணங்களை வெளிப்படுத்துவர். இவற்றை 'முத்ரா' என்று வடமொழி கூறுகிறது. முத்திரைகள் எண்ணங்களை வெளிப்படுத்த உதவுவதுடன் உடலுக்குப் பல நன்மைகளையும் அளிக்கின்றன. இந்த முத்திரைகள் பலவகைப்படும். முத்திரைகளின் வகைகள் பற்றியும் நன்மைகள் பற்றியும் இந்தியாநெட்ஸோன் என்ற இணையதளத்தில் காணலாம். இந்த முத்திரை ஆனது உடலின் பல உறுப்புக்களால் உருவாக்கப் பட்டாலும் கைகளும் விரல்களுமே அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. அருகில் உள்ள படம் முத்திரைக்கு ஒரு சான்றாகும். ஐம்புலன் அவித்தோர் தமக்குள் பரிமாறிக் கொள்வது இந்த முத்திரைகளால் தான். ஐம்புலன் அவித்தலில் உள்ள பல்வேறு படிநிலைகளுக்கு ஏற்ப அவரது அறிவின் முதிர்ச்சி மாறுபடுகிறது. இந்த முதிர்ச்சியானது முத்திரைகளால் காட்டப் படுகிறது.


எண்ணமே மொழியாகிறது. வெளிப்படுத்தப் பட்ட ஒருவரது மொழியே அவரது அறிவுநிலையினை அதாவது பெருமையினைக் கூறாநிற்கின்றது. அவ்வகையில் மௌனத்தை மொழியாகக் கொண்ட ஐம்புலன் அவித்தோரின் உடல்குறிப்பு மொழிகளே அவருடைய அறிவுப் பெருமைகளைக் காட்டாநிற்கின்றன. இதுவே இக் குறள் உணர்த்தவரும் கருத்தாகும்.

சரியான பாடல்:

நிறைமொழி மாந்தர் பெருமை நித்து
மறைமொழி காட்டி விடும்.
.........................................................................................................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.