புதன், 18 அக்டோபர், 2017

கிழமைகளின் வரிசைமுறை சரியா?. ( 2017 தீபாவளி சரவெடிக் கட்டுரை )

முன்னுரை:

எண்ணும் எழுத்தும் என்ற தொடர் ஆய்வுக் கட்டுரையின் முதல் பகுதியில் தமிழ் எழுத்துக்களின் பிறப்பியல் பற்றி விரிவாகக் கண்டோம். இரண்டாம் பகுதியில் மெய்யெழுத்துக்களுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையிலான தொடர்புகளைப் பற்றி விரிவாகக் கண்டோம். மூன்றாம் பகுதியில் எண்களுக்கும் பொருளுண்டு என்பது தொடர்பான செய்திகளைக் கண்டோம். நான்காம் பகுதியில் உயிர் எழுத்துக்களுக்குள் ஒளிந்திருக்கும் பல உண்மைகளைப் பற்றி விளக்கமாகக் கண்டோம். ஐந்தாம் பகுதியில் ஒவ்வொரு தமிழ் எழுத்துக்குமான எண்மதிப்பினைப் பற்றி விரிவாகக் கண்டோம். ஆறாம் பகுதியில் கோள் / கிழமைப் பெயர்களுக்கு மதிப்பெண்களை அளிக்கும் முறை பற்றி விரிவாகக் கண்டோம். இனி, வாரம் என்று தமிழில் அழைக்கப்படுவதான ஏழு கிழமைப்பெயர்களின் வரிசைமுறை சரியா என்பதை இறுதிப் பகுதியான இதில் விளக்கமாகக் காணலாம்.

தமிழர்களின் காலக்கணக்கு:

தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு என்று பாடினார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம். அவர் வாக்கு பொய்யில்லை என்றே கூறலாம். காரணம், எப்போதுமே தனக்கென்று ஒரு தனித்த அடையாளமும் பாதையும் வகுத்து வாழ்ந்தவன் / வாழ்பவன் தமிழன். இதோ காலக்கணக்கில் கூட தனக்கென்று ஒரு முத்திரையாக ஒரு புதிய காலப்பகுப்பினை நிலைநாட்டிச் சென்றிருக்கின்றார் பழந்தமிழர். மேலைநாட்டாரின் காலக்கணக்கும் நமது காலக்கணக்கும் ஒரு ஒப்பீடாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாள் கணக்கு: ஒருநாள் = 60 நாழிகை (தமிழ்) , 24 மணி (ஆங்கிலம்)
வாரக்கணக்கு: ஒருவாரம் = 7 நாட்கள் (தமிழ் & ஆங்கிலம்)
திங்கள் கணக்கு: ஒரு திங்கள் = 29 - 32 நாட்கள் (தமிழ்), 28 - 31 நாட்கள் (ஆங்கிலம்)

கிழமைப்பெயர் வரிசைமுறை:

மேலே கண்டபடி, தமிழர்களும் மேலைநாட்டாரைப்போல, ஏழு நாட்கள் கொண்டதையே ஒரு வாரமாகக் கருதி தற்போது வரையிலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வாரக் கணக்கில் இடம்பெறுகின்ற கிழமைகளின் வரிசைமுறையானது கீழே காட்டப்பட்டுள்ளது.

ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி

அதாவது, ஞாயிற்றுக்கிழமையை அடுத்து திங்கட்கிழமையும் இதனையடுத்துச் செவ்வாய்க்கிழமையும் இதனையடுத்து புதன்கிழமையும் இதனையடுத்து வியாழக்கிழமையும் இதனையடுத்து வெள்ளிக்கிழமையும் இதனையடுத்து சனிக்கிழமையும் வரிசைமுறையில் வரும்.

வரிசைமுறையின் அடிப்படை என்ன?

ஒரு வாரத்துக்குரிய ஏழு கிழமைகளையும் மேற்காணும் வரிசைமுறைப்படி நாம் பின்பற்றி வருகிறோம். ஆனால் இந்த வரிசைமுறையின் அடிப்படை என்ன?. என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. புதன்கிழமையினை அடுத்து வியாழக்கிழமைதான் வரவேண்டுமா?. ஏன் சனிக்கிழமை வரக்கூடாது?. என்று நாம் எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?. கேள்வி கேட்டிருக்கிறோமா?. இல்லை.

உண்மையில் தற்போது நாம் பின்பற்றி வருகின்ற மேற்காணும் கிழமைப்பெயர் வரிசைமுறையானது ஆங்கில முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருநாளுக்கு 24 மணி நேரம் என்ற ஆங்கில காலக்கணக்கின்படி இந்தப் பெயர்வரிசை முறை அமைக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி விரிவாகக் கீழே காணலாம்.

ஆங்கிலக் காலக்கணக்கும் கிழமைகளின் வரிசைமுறையும்:

ஆங்கில முறைப்படி, நமது விண்வெளியின் பால்வீதி மண்டலத்தில் உள்ள முதல் ஏழு கோள்களும் ஒருநாளின் ஒவ்வொரு மணி நேரத்தினையும் மாறிமாறி ஆளுமை கொள்ளும். அதாவது, யுரேனஸ், புளூட்டோ, நெப்டியூன் நீங்கலாக உள்ள சூரியன், புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி முதலான ஏழு கோள்களும் மாறிமாறி ஒவ்வொரு மணி நேரம் வரையிலும் ஆட்சிசெய்யும். ஒருநாளின் முதல் மணியினை எந்தக் கோள் ஆட்சி செய்கிறதோ அந்தக் கோளின் பெயராலேயே அந்த நாள் அழைக்கப்படும். அதாவது,

ஞாயிற்றுக் கிழமையின் முதல் ஒருமணி நேரத்தினை ஞாயிற்றுக்கோள் ஆட்சி செய்யும்.
திங்கட் கிழமையின் முதல் ஒருமணி நேரத்தினை பூமி ( திங்கள் பூமியின் துணைக்கோள் என்பதால் ) ஆட்சி செய்யும்.
செவ்வாய்க் கிழமையின் முதல் ஒருமணி நேரத்தினை செவ்வாய்க்கோள் ஆட்சி செய்யும்.
புதன் கிழமையின் முதல் ஒருமணி நேரத்தினை புதன்கோள் ஆட்சி செய்யும்.
வியாழக் கிழமையின் முதல் ஒருமணி நேரத்தினை வியாழன் கோள் ஆட்சி செய்யும்.
வெள்ளிக் கிழமையின் முதல் ஒருமணி நேரத்தினை வெள்ளிக்கோள் ஆட்சி செய்யும்.
சனிக் கிழமையின் முதல் ஒருமணி நேரத்தினை சனிக்கோள் ஆட்சி செய்யும்.

இந்த ஏழு கோள்களும் ஒருநாளுக்குரிய 24 மணிநேரங்களை ஆட்சிசெய்யும் வரிசைமுறையானது பால்வீதி மண்டலத்தில் இக்கோள்கள் அமைந்துள்ள வரிசை முறையினை ஒத்து அமைந்திருக்கும். அதாவது,

சூரியன் >> புதன் >> வெள்ளி >> பூமி (சந்திரன்) >> செவ்வாய் >> வியாழன் >> சனி

என்ற பால்வீதி அமைப்புமுறைப்படி (படத்தில் உள்ளபடி ) ஆட்சிசெய்யும். இதனை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்கமாகக் காணலாம். சான்றாக, ஞாயிற்றுக்கிழமையின்

முதல் ஒருமணி நேரத்தினைச் சூரியனும்
இரண்டாவது ஒருமணி நேரத்தினைப் புதனும்
மூன்றாவது ஒருமணி நேரத்தினை வெள்ளியும்
நான்காவது ஒருமணி நேரத்தினைப் பூமியும் (திங்கள்)
ஐந்தாவது ஒருமணி நேரத்தினைச் செவ்வாயும்
ஆறாவது ஒருமணி நேரத்தினை வியாழனும்
ஏழாவது ஒருமணி நேரத்தினைச் சனியும்  ஆட்சி செய்யும்.

மறுபடி அந்த நாளின் எட்டாவது ஒருமணி நேரத்தினைச் சூரியன் ஆட்சி புரியும். அதற்கடுத்து புதன் என்று இச் சுழற்சி முறையானது ஒருநாளுக்கு 24 மணி நேரம் என்பதால் மூன்றுமுறை முழுமையாக (3x7 = 21 மணி நேரம்) முடிந்தபின்னர்,

22 ஆவது மணிநேரத்தினைச் சூரியனும்
23 ஆவது மணிநேரத்தினைப் புதனும்
24 ஆவது மணிநேரத்தினை வெள்ளியும் ஆளும்.

இப்படி ஞாயிற்றுக் கிழமைக்குரிய 24 மணிநேரம் முடிந்தபின்னர், மறுநாளுக்குரிய முதல் 1 மணி நேரத்தினை வெள்ளிக்கோளினை அடுத்துப் பால்வீதி மண்டலத்தில் அமைந்திருக்கின்ற பூமிக்கோள் ஆட்சி செய்யும். நாம் பூமியில் வசிப்பதாலும் பூமியின் மீது அதன் துணைக்கோளாகிய திங்கள் ஆளுமை உடையது என்பதாலும் ஞாயிற்றுக்கிழமையினை அடுத்து வரும் நாளினைத் திங்கள்கோளின் பெயரால் திங்கட்கிழமை என்று அழைத்தனர். இந்த அடிப்படையில் தொடர்ந்து கணக்கிட்டுப் பார்த்தால், கிழமைகளின் வரிசைமுறையானது கீழ்க்காண்டவாறு அமையும்.

ஞாயிறு >> திங்கள் >> செவ்வாய் >> புதன் >> வியாழன் >> வெள்ளி >> சனி .... (1)

மேற்காணும் கிழமைகளின் வரிசைமுறையினை 'ஆங்கில வாரமுறை' என்று அழைக்கலாம்.

தமிழரின் காலக்கணக்கும் கிழமைகளின் வரிசைமுறையும் :

இதுவரை நாம் மேலே கண்ட கிழமைகளின் வரிசைமுறையானது ஆங்கிலேயரின் காலக்கணக்கான 24 மணி நேர அடிப்படையிலானது. ஆனால், தமிழர்களின் காலக்கணக்கு முறையோ 60 நாழிகை அடிப்படையிலானது என்று மேலே கண்டோம். இனி, தமிழர்களின் காலக்கணக்கின் அடிப்படையில் கிழமைகளின் வரிசைமுறை எவ்வாறு வரும் என்பதனை ஒரு சான்றுடன் பார்க்கலாம். சான்றாக, ஞாயிற்றுக்கிழமையின்

முதல் நாழிகையினைச் சூரியனும்
இரண்டாவது நாழிகையினைப் புதனும்
மூன்றாவது நாழிகையினை வெள்ளியும்
நான்காவது நாழியினைப் பூமியும் (திங்கள்)
ஐந்தாவது நாழிகையினைச் செவ்வாயும்
ஆறாவது நாழிகையினை வியாழனும்
ஏழாவது நாழிகையினைச் சனியும்  ஆட்சி செய்யும்.

மறுபடி அந்த நாளின் எட்டாவது நாழிகை நேரத்தினைச் சூரியன் ஆட்சி புரியும். அதற்கடுத்து புதன் என்று இச் சுழற்சி முறையானது ஒருநாளுக்கு 60 நாழிகை நேரம் என்பதால் எட்டுமுறை முழுமையாக (8x7 = 56 நாழிகை) முடிந்தபின்னர்,

57 ஆவது நாழிகையினைச் சூரியனும்
58 ஆவது நாழிகையினைப் புதனும்
59 ஆவது நாழிகையினை வெள்ளியும்
60 ஆவது நாழிகையினைப் பூமியும் ஆளும்.

இப்படி ஞாயிற்றுக் கிழமைக்குரிய 60 நாழிகை நேரம் முடிந்தபின்னர், மறுநாளுக்குரிய முதல் நாழிகையினைப் பூமிக்கோளினை அடுத்துப் பால்வீதி மண்டலத்தில் அமைந்திருக்கின்ற செவ்வாய்க்கோள் ஆட்சி செய்யும். இந்தப் புதிய அடிப்படையில் தொடர்ந்து கணக்கிட்டுப் பார்த்தால், கிழமைகளின் வரிசைமுறையானது கீழ்க்காண்டவாறு அமையும்.

ஞாயிறு >> செவ்வாய் >> புதன் >> வியாழன் >> வெள்ளி >> சனி >> திங்கள். .... (2)

மேற்காணும் புதிய வரிசைமுறையானது நாழிகை அடிப்படையில் அமைவதால் இதற்கு 'நாழிகை வாரமுறை' என்று பெயர் வைக்கலாம்.

எது சரியான கிழமை வரிசைமுறை?

தமிழர்களின் காலக்கணக்கின்படி அமைகின்ற நாழிகை வாரமுறையும் ஆங்கிலேயரின் காலக்கணக்கின்படி அமைகின்ற ஆங்கில வாரமுறையும் சற்றே வேறுபட்டிருப்பதை மேலே காணலாம். குறிப்பாக, திங்கட்கிழமையின் வரிசை மட்டும் மாறியிருப்பதை அறியலாம். அதாவது,

நாழிகை வாரமுறைப்படி, சனிக்கிழமையினை அடுத்துத் திங்கட்கிழமை வருவதால்,

சனி >> திங்கள் >> ஞாயிறு >> செவ்வாய் >> புதன் >> வியாழன் >> வெள்ளி என்றும்

ஆங்கில வாரமுறைப்படி, ஞாயிற்றுக்கிழமையினை அடுத்துத் திங்கட்கிழமை வருவதால்,

சனி >> ஞாயிறு >> திங்கள் >> செவ்வாய் >> புதன் >> வியாழன் >> வெள்ளி என்றும் வரும்.

ஞாயிறும் திங்களும் மட்டுமே தங்களது வரிசைமுறையில் இடம் மாறியிருப்பதான இந்த இரண்டு வகையான வரிசைமுறைகளில் எது சரியானது? எதனை நாம் பின்பற்றுவது? என்னும் கேள்விகள் எழுகின்றன. நாம் தமிழர்கள் என்பதால் நாழிகை வாரமுறையினைப் பின்பற்றுவதே சரியானது என்ற போதிலும் ஆங்கில வாரமுறையினைக் காட்டிலும் நாழிகை வாரமுறைதான் சரியானது என்பதனை வேறொரு கோணத்தில் இருந்தும் நிறுவலாம்.

தமிழரின் நாழிகை வாரமுறையே சரியானது:


தமிழ்முறைப்படி கொடுக்கப்பட்ட ஒவ்வொரு கோளுக்குமான மதிப்பெண்ணைப் பற்றி இக் கட்டுரையின் ஆறாம் பகுதியில் விரிவாகக் கண்டோம். ஆறாம்பகுதியின் சுருக்கமாகக் கோளின் மதிப்பெண்ணும் அதன் கீழ் கோளின் பெயரும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1                 2                    3                     4                    5

புதன்  சந்திரன்    இல்லை    வியாழன்    இல்லை

  6                       7                8                9

வெள்ளி   ஞாயிறு    சனி     செவ்வாய்

இப்போது நாம் இதுவரை மேலே கண்ட இரண்டுவகையான வாரமுறைகளிலும் ( 1 & 2 ) மாறுபாடு இல்லாத பகுதியினை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். அதாவது,

செவ்வாய் >> புதன் >> வியாழன் >> வெள்ளி >> சனி

என்ற இந்த வரிசையானது இரண்டு வாரமுறைகளிலும் ஒரேமாதிரியாகவே அமைந்துள்ளது என்று மேலே கண்டோம். இதில், கோள்களின் பெயர்களுக்குப் பதிலாக அவற்றின் மதிப்பெண்ணை இட்டுப் பார்த்தால்,

9 >> 1 >> 4 >> 6 >> 8  என்று கிடைக்கும்.

இந்த எண்களின் வரிசைமுறையில் என்ன தொடர்பு இருக்கிறது?. என்று இவற்றை நன்கு ஆராய்ந்து பார்த்ததில் இவற்றில் கணிதவியலில் மிகவும் பயன்பாடுடைய பத்துக்குறைநிரப்பியும் ( 10's compliment ) ஐந்துக்குறைநிரப்பியும் ( 5's compliment ) மாறிமாறி வருவது கண்டறியப்பட்டது. அதாவது,

9 முதலிலும் அதனை அடுத்து
9 ன் பத்துக்குறைநிரப்பியாகிய 1 ம் ( 9+1 = 10 )
1 ன் ஐந்துக்குறைநிரப்பியாகிய 4 ம் ( 1+4 = 5 )
4 ன் பத்துக்குறைநிரப்பியாகிய 6 ம் ( 4+6 = 10 )
6 ன் ஐந்துக்குறைநிரப்பியாகிய 8 ம் ( 6+8 = 14 = 5 )

வருவதனை அறிந்துகொள்ளலாம். இதே முறையினைத் தொடர்ந்து பின்பற்றினால் என்ன கிடைக்கும் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது 8 ம் எண்ணினை அடுத்து,

8 ன் பத்துக்குறைநிரப்பியாகிய 2 ம் ( 8+2 = 10 )
2 ன் ஐந்துக்குறைநிரப்பியாகிய 3 ம் ( 2+3 = 5 )
3 ன் பத்துக்குறைநிரப்பியாகிய 7 ம் ( 3+7 = 10 )

வரவேண்டும். இதன்படி பெறப்படுவதான கோள்களுக்குரிய எண்மதிப்பு வரிசைமுறையானது,

9 >> 1 >> 4 >> 6 >> 8 >> 2 >> 3 >> 7 என்று கிடைக்கும்.

இதில் 3 ஆம் எண்மதிப்புக்குரிய கோள் இல்லை என்பதால் அதனை நீக்கிவிட்டு ஏனைய எண்மதிப்புக்களுக்குப் பதிலாக அவற்றுக்குரிய கோள்களின் பெயர்களை இட்டுப் பார்த்தோமானால்,

செவ்வாய் >> புதன் >> வியாழன் >> வெள்ளி >> சனி >> திங்கள் >> ஞாயிறு ..... (3) என்று வரும்.

மேற்காணும் வரிசைமுறை (3) ஆனது தமிழ்முறைப்படிப் பெறப்பட்ட நாழிகை வாரமுறை (2) யுடன் மிகச்சரியாகப் பொருந்தி வருவதை அறியலாம். எனவே தமிழரின் நாழிகை முறைப்படி பெறப்பட்ட நாழிகை வாரமுறையே மிகச் சரியானது என்பது இதன்மூலம் உறுதிசெய்யப்படுகிறது.

இப்பொருத்தம் எப்படிச் சாத்தியமானது?:

மேலே நாம் கண்ட பொருத்தம் ( 2 & 3 ) எதேச்சையாக நிகழ்ந்ததா?. இல்லை. திட்டமிடப்பட்டதா?. அதுவும் இல்லை. அப்படி என்றால்......? சற்றே பின்னோக்கிப் பார்ப்போம்.

இக் கட்டுரையின் முதல் பகுதியில் தமிழ் எழுத்துக்களின் பிறப்பியல் பற்றிக் கண்டோம். தொல்காப்பியர் கூற்றின்படி எழுத்துக்கள் பிறக்கும்போதுள்ள நாக்கின் நிலைகளுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையிலான தொடர்புகள் ஆராயப்பட்டுத் தமிழ் மெய்எழுத்துக்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. உயிர் எழுத்துக்களுக்கு மதிப்பெண்களை வழங்கியபோதும் சில விதிகள் பின்பற்றப்பட்டன. இதுதான் அடிப்படைநிலை அல்லது முதல்கட்டம்.

பின்னர் இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் ஒவ்வொரு கோளின் பெயருக்கும் உரிய மதிப்பெண் காணப்பட்டது. அப்போது சில கோள்களின் வடமொழிப் பெயர்களைத் தமிழாக்கம் செய்து தமிழ்ப் பெயருக்கேற்ப மதிப்பெண் கொடுக்கப்பட்டது. இது இரண்டாம் கட்டம்.

இந்த இரண்டு கட்டங்களில் ஏதேனும் ஒன்றில் சிறுதவறு நேர்ந்திருந்தாலும் இத்தகைய பொருத்தம் கிடைத்திருக்காது அல்லவா?. ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக, இவ்வளவு அருமையான பொருத்தம் கிடைக்கப்பெற்றுள்ளது என்றால், இதற்கு முந்தைய பகுதிகளில் நாம் கண்ட தமிழ் எழுத்துக்களின் மதிப்பெண்களும் சரி கோள்களின் மதிப்பெண்களும் சரி அனைத்தும் சரியான முறையில் பெறப்பட்டவையே என்பது உறுதியாகிறது.

முடிவுரை:

செவ்வாய் >> புதன் >> வியாழன் >> வெள்ளி >> சனி >> திங்கள் >> ஞாயிறு என்ற தமிழரின் நாழிகை வாரமுறையே ஆங்கில வாரமுறையைக் காட்டிலும் சரியானது என்றும் ஆய்வுநெறியின் அடிப்படையில் பொருத்தமானது என்றும் மேலே கண்டோம்.  எங்கோ வான்வெளியில் இருக்கும் கோள்கள் மாறிமாறி நம்மீது தாக்கம் செய்யும் என்னும் கருத்து அறிவியல் முறைப்படி நிரூபிக்கப்படவில்லை என்பதால் எந்தக் கிழமை முறையினையும் நம்பமாட்டோம் என்று கூறுவார் உளர். கடவுளையே அறிவியல் முறைப்படி ஆய்வுசெய்துகொண்டு இருக்கிறாரா இல்லையா என்று பன்னெடுங்காலமாக பலவிதமாகக் கலந்துரையாடிக்கொண்டு எந்தவொரு முடிவுக்கும் இன்னும் வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இக் கூட்டத்திடம் 'நம்புங்கள்' என்று கேட்டுக்கொள்வது வீண்தான்.

ஆனால், இன்று நம்மில் பலர், அதிலும் குறிப்பாகப் பெண்கள் நாள் கிழமை பார்த்துப் பலவகையான நோன்பு மற்றும் சடங்குகளில் ஈடுபடுவதும் பொதுமக்கள் கிழமைகளின் அடிப்படையில் விடுமுறைகள் மற்றும் விழாக்களைக் கொண்டாடுவதும் ஆண்டாண்டுதோறும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் வருகிறது. இந்த ஆய்வு இவர்களுக்காகத் தான். இவர்கள் பின்பற்றிவரும் கிழமைகளின் வரிசைமுறை சரிதானா? இந்த வாரமுறைக்கு அடிப்படை ஏதுமுண்டா? என்னும் கேள்வியே இந்த ஆய்வினை மேற்கொள்ளத் தூண்டியது.  உண்மையிலேயே விண்வெளியில் உள்ள கோள்கள் நம்மீது மாறிமாறி ஆளுமை செலுத்துகின்றனவா? என்ற அறிவியல் ஆய்வில் நாம் ஈடுபடப் போவதில்லை; அது நம்மால் ஆவதுமில்லை. மாறாக, தற்போது பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்ற ஒரு நடைமுறையில் ஏரணம் உள்ளதா (  QUESTIONING THE LOGIC OF THE SYSTEM. ) என்று இலக்கணம், வானியல், கணிதம் என்ற மூன்று துறைகளின் துணையுடன் ஆய்வுசெய்து தரவுகளின் அடிப்படையில் ஒரு பொருத்தமான முடிவினை இக் கட்டுரை முன்மொழிகிறது. நன்றி. முற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.