செவ்வாய், 25 ஏப்ரல், 2017

கண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 1

முன்னுரை:

மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சித்திணை என்றான் மறத்தமிழன். காடும் காடுசார்ந்த இடமும் முல்லைத்திணை என்றான் கொடுந்தமிழன். வயலும் வயல்சார்ந்த இடமும் மருதத்திணை என்றான் வண்டமிழன். கடலும் கடல்சார்ந்த இடமும் நெய்தல்திணை என்றான் காவியத்தமிழன். இதேவரிசையில், கண்ணும் கண்சார்ந்த இடமும் எப்படி அழைக்கப்பெறும்?. இதைப் பற்றிய விரிவான ஆய்வே இக்கட்டுரை ஆகும்.

திணையும் பூவும்:

பழந்தமிழர்கள் வாழ்ந்த இடத்தினை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகைத் திணைகளாகப் பிரித்து அவற்றுக்குத் துறை முதலானவற்றையும் வகுத்துச் சங்கப் புலவர்கள் பல பாடல்களை இயற்றினர் என்பதை நாம் அறிவோம். ஒவ்வொரு திணைக்கும் பெயர் வைக்கும்பொழுது அந்த நிலத்தில் மிகச் சிறப்பாக வளர்கின்ற ஒரு பூக்கும் தாவரத்தின் பெயரையே அந்தத் திணையின் பெயராகச் சூட்டினர் புலவர். அவ்வகையில், மலைநிலங்களில் சிறப்பாக வளர்ந்து பூக்கின்ற குறிஞ்சியையும், காடுகளில் சிறப்பாக வளர்ந்து பூக்கின்ற முல்லையினையும், நீர்சார்ந்த வயல் பகுதிகளில் சிறப்பாக வளர்கின்ற மருதத்தினையும், கடலோரப் பகுதிகளில் சிறப்பாக வளர்கின்ற நெய்தலையும் அந்தந்த நிலங்களின் திணைகளுக்குப் பெயராகச் சூட்டினர். சங்கப் புலவர்கள் கையாண்ட இந்த முறையினைப் பின்பற்றிக் கண்ணும் கண்சார்ந்த இடத்துக்குமுரிய பெயரை வைக்கலாம்.

கண்ணிமை என்னும் பூ:

கண் மற்றும் கண்சார்ந்த இடத்தில் பூக்கின்ற பூ எது? என்ற கேள்விக்கான பதில்: கண்ணிமை. காரணம், பெண்கள் தமது கண்ணிமையினைத் தான் பல வண்ண மைகொண்டு பூசியும் பூந்தாதுக்கள் உட்பட பலவிதமான பொருட்களைப் பயன்படுத்தியும் பார்ப்பதற்குப் பூவிதழ்களைப் போலத் தோன்றுமாறு அழகுசெய்வர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டிருக்கிறோம். வேங்கை, கோங்கு, முல்லை, முருக்கம், கொன்றை, குவளை, தாமரை, நெய்தல் போன்ற பல பூக்களின் இதழ்களைப் போல இமைகளை அழகுசெய்வது பெண்களின் வழக்கமே. பூக்களில் தேன் நுகரும் வண்டினங்களும் பூவிதழ் போன்று அழகுசெய்யப்பட்டப் பெண்களின் கண்ணிமைகளை மெய்யான பூக்களாகக் கருதி மயங்கி அவர்களையே சுற்றிச்சுற்றி வரும் என்றும் பல பாடல்களில் கண்டிருக்கிறோம். ஆக, கண்ணும் கண்சார்ந்த இடத்திலும் பூப்பது அதாவது பூப்போலத் தோன்றுவது கண்ணிமையே என்பதால் கண்ணிமையினை அடிப்படையாகக் கொண்டே பெயர் அமைக்கவேண்டும் என்பது தெளிவாகிறது.

இமையினைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள்:

தமிழில் ஒருபொருட் பன்மொழி என்ற பெயர்வகை உண்டு. அதாவது ஒரே பொருளைக் குறிப்பதற்குப் பல்வேறு பெயர்ச்சொற்களை இலக்கியங்களில் பயன்படுத்தி இருப்பர். அவ்வகையில், கண்ணிமையைக் குறிக்கும் பல்வேறு பெயர்களை முதலில் அறியவேண்டியது அவசியமாகிறது. இதுவரை ஆய்வுசெய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ளவற்றில் கண்ணிமைகளைக் குறிப்பனவாக அறியப்படும் பல்வேறு பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கூந்தல், மேனி, முலை, இறை, அளகம், நுசுப்பு, ஓதி, கதுப்பு, மருங்குல், ஆகம், குறங்கு, சிறுபுறம், நுதல், வயிறு, கொங்கை.

பெயரைத் தெரிவுசெய்யும் முறை:

மேற்கண்ட பல்வேறு பெயர்ச்சொற்களில் கண்ணும் கண்சார்ந்த இடத்திற்கும் எந்தப் பெயரை வைப்பது?. எந்த அடிப்படையில் எந்தப் பெயரைத் தெரிவு செய்வது?. குழப்பமான வேலை தான் இல்லையா?. எனவே முதலில் மேற்காணும் பட்டியலில் இருந்து இமைகளை மட்டுமே குறிக்கின்ற பெயர்களைத் தெரிவு செய்யலாம்.

மேற்கண்ட பல்வேறு பெயர்களில் மேனி, முலை, மருங்குல், ஆகம், சிறுபுறம், நுதல், வயிறு, கொங்கை ஆகியவை இமைகளைத் தவிர கண்விழிகளையும் குறிக்கப் பயன்படுகின்றன. எனவே அவற்றைப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் கூந்தல், இறை, அளகம், நுசுப்பு, ஓதி, கதுப்பு, குறங்கு ஆகிய ஏழு பெயர்களே எஞ்சும். இவற்றிலும் இறையும் குறங்கும் ரகர றகர வேறுபாட்டால் வேறுபொருட்களைக் குறிக்கும் தன்மை கொண்டனவால் அவையும் இப்பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன.

இனி எஞ்சியுள்ள ஐந்து பெயர்களில் இருந்து ஒரு பெயரைத் தெரிவுசெய்ய வேண்டும். அப்படித் தெரிவுசெய்த பின்னர், அப்பெயருடன் இடத்தினைக் குறிக்கின்ற ஒரு பெயர்ச்சொல்லினைப் பின்னொட்டாகச் சேர்க்கவேண்டும். அதாவது குறிஞ்சித்திணை என்பதில் குறிஞ்சியுடன் திணை என்னும் பின்னொட்டு இணைந்திருப்பதைப் போல.

இடத்தைக் குறிக்கும் பல்வேறு பெயர்களான திணை, ஊர், நகர், புரி, அகம் போன்றவற்றை ஆய்வுசெய்ததில் புரி என்பது சிறப்புடையதாக அறியப்பட்டது. காரணம் புரி என்பது பெயர்ச்சொல்லாக ஒரு இடத்தினைக் குறிப்பதுடன் வினைச்சொல்லாக விளங்குதல், ஒளிர்தல் ஆகிய வினையினையும் குறிக்கவல்லது. ஒளிர்தல், விளங்குதல் ஆகிய வினையானது இமையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால், புரி என்ற சொல்லே பின்னொட்டாக அமைக்கப்படும் சிறப்பினைப் பெறுகிறது. புரி என்னும் சொல்லினை எஞ்சியிருக்கின்ற ஐந்து இமைப்பெயர்களுடன் பின்னொட்டாக இணைப்பதன் மூலம் கீழ்க்காணும் சொற்களைப் பெறலாம்.

கூந்தல்புரி, அளகாபுரி, நுசுப்புபுரி, ஓதிபுரி, கதுப்புபுரி.

அளகாபுரி என்னும் அழகுபுரி:

மேற்கண்ட ஐந்து பெயர்களுள் அளகாபுரி என்னும் பெயர் மிகப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. காரணம், இப் பெயரானது குபேரனின் நகரத்தினைக் குறிப்பதாக அகராதிகள் கூறுகின்றன.

அளகாபுரி aḷakā-puri , n. < id. +. City of Kubēra; குபேரநகரம். (பாரத. மணிமான். 15.)

குபேரனைப் பல்வேறு செல்வங்களின் தலைவனாகப் புராணங்கள் கூறுகின்றன. அவ்வகையில், குபேரனுடைய அளகாபுரியில் செல்வங்கள் கொட்டிக் கிடக்கும் என்று சொல்லத் தேவையில்லை. செல்வங்கள் குவிந்து கிடக்கின்ற ஒரு ஊரில் அழகுக்கும் அலங்காரத்திற்கும் பஞ்சமிருக்காது. எனவே அளகாபுரியினை அழகுபுரி என்று கூறுவதிலும் தவறில்லை. அளகாபுரி என்றும் அழகாபுரி என்றும் தமிழ்நாட்டில் பல ஊர்கள் உண்டு. தஞ்சாவூருக்கு அளகாபுரி என்ற பெயரும் இருப்பதாக அகராதிகள் கூறுகின்றன.

கண்ணும் கண்சார்ந்த இடமும் அளகாபுரி:

அளகாபுரியில் ஏராளமான பொன்னும் முத்தும் வெள்ளியும் வைரவைடூரியங்களும் பல்வேறு நிதிகளும் கொட்டிக் கிடக்கும் என்று மேலே கண்டோம். இந்த நவமணி நிதியத்தினால் மஞ்சள், வெண்மை, செம்மை, பச்சை, நீலம் என்று பல வண்ணங்களில் ஒளிர்கின்ற அளகாபுரியினைப் போல பெண்களின் அழகுசெய்யப்பட்ட கண்ணிமைகள் ஒளிர்வதை முன்னர் கண்டோம்.

அழகிய வேலைப்பாடுகளால் பொலிவுபெற்ற பெண்களின் கண்ணிமைகள் பூவிதழ்களைப் போலத் தோன்றுதலாலும் குபேரனின் நகரத்துக்கு ஈடாக பல வண்ணங்களில் ஒளிர்ந்து விளங்குதலாலும் கண்ணும் கண்சார்ந்த இடத்தினையும் அளகாபுரி அல்லது அழகாபுரி என்ற பெயரால் அழைக்கலாம்.

அளகாபுரியின் அழகுச்செல்வங்கள்:

குபேரனின் அளகாபுரியில் பொருட்செல்வங்கள் கொட்டிக் கிடப்பதைப்போல பெண்களின் அளகாபுரியிலும் பல செல்வங்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆம், பெண்கள் தமது பெருஞ்செல்வங்களாகக் கருதுவது தமது கண்ணையும் கண்சார்ந்த இடங்களையும் தான். இதைப்பற்றி மருங்குல் என்றால் என்ன?. என்ற கட்டுரையிலும் கொங்கை என்றால் மார்பகமா?. என்ற கட்டுரையிலும் முன்னர் கண்டோம். அவ்வகையில், பெண்களின் அளகாபுரியில் காணப்படுகின்ற அழகுச்செல்வங்கள் எவை என்று கீழே வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

அல்குல்,
அளகம்,
ஆகம்,
இறை,
எயிறு,
ஓதி,
கதுப்பு,
குறங்கு,
கூந்தல்,
கொங்கை,
சிறுபுறம்,
தோள்,
நுசுப்பு,
நுதல்,
மருங்குல்,
முகம்,
முறுவல்,
முலை,
மேனி,
வயிறு,
புருவம்
.

இந்த அழகுச்செல்வங்களைப் பற்றித் தனித்தனியே காணலாம்.








........ தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.