வியாழன், 27 ஏப்ரல், 2017

கண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 2 ( அல்குல்-அளகம்-ஆகம்-இறை)

முன்னுரை:

கண்ணும் கண்சார்ந்த இடமும் என்ற கட்டுரையின் முதல் பகுதியில் பெண்களுடைய அளகாபுரியின் அழகுச் செல்வங்கள் எவை என்று கண்டோம். இந்த இரண்டாம் பகுதியில் அந்த அழகுச் செல்வங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாகச் சுருக்கமாகக் காணலாம்.

அல்குல்:

அல்குல் என்னும் சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் அவரது நெற்றிப் பகுதியினைக் குறிக்கும். அணிகலன்கள் அல்கும் அதாவது பொருந்தும் இடம் என்ற பொருளில் அல்குல் என்ற சொல் பெண்களின் நெற்றியினைக் குறித்துவந்தது. கண்புருவங்களுக்கு மேலாக இருக்கும் இப்பகுதியில் பெண்கள் பல ஓவியங்களை வரைந்து அழகுசெய்வர். இவ் ஓவியங்களில் வரி ஓவியங்களும் புள்ளி ஓவியங்களும் அடங்கும். வரி ஓவியங்களில் நேர்கோட்டு வரிகளும் வளைவான வரிகளும் உண்டு. இவ்வகை ஓவியங்களை வரி என்றும் கோடு என்றும் இலக்கியம் குறிப்பிடுகிறது.

தட அரவு அல்குல் நுண் வரி வாட ... - கலி. 125.

கடல்அலைகள் போல வளைவான வரிஓவியங்களைத் தாங்கிய நெற்றியினை ' பரவை அல்குல் ' என்று சீவக சிந்தாமணி பல இடங்களில் குறிப்பிடுகிறது.

பரவை அல்குல் .... பாடல் எண்கள் : 1/98, 1/109, 1/191, 2/479, 3/586, 3/606

புள்ளி ஓவியங்களில் நுட்பமான சிறுபுள்ளிகளும் பெரிய வட்டப் பொட்டுக்களும் அடங்கும். இவற்றைத் தித்தி, திதலை, காழ் ஆகிய பெயர்களால் இலக்கியம் குறிப்பிடுகிறது.

திதலை சில்பொறி அணிந்த பல்காழ் அல்குல் .. - நற். 133
பூந்துகில் இமைக்கும் பொலங்காழ் அல்குல் .. - அகம். 387

ஓவியங்கள் மட்டுமின்றி பலவிதமான அணிகலன்களைத் பெண்கள் தமது நெற்றிப் பகுதியில் அணிந்தனர். இந்த அணிகலன்களில் இயற்கை அணிகளாக தழை, மாலை, நெறி, பிணையல், கண்ணி ஆகியவற்றை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

பல்பூ பகைத்தழை நுடங்கும் அல்குல் ..- நற்.8
கருங்கால் வேங்கைச் செம்பூ பிணையல் ஐது ஏந்து அல்குல் .. - அகம்.345

இயற்கை அணிகள் மட்டுமின்றி செயற்கை அணிகளாக மேகலை முதலானவற்றை அணிவதும் உண்டு. இலக்கியத்தில் இது மணிமேகலை, மேகலை, கலை, கலாபம், கோடு போன்ற பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. இதில் மணிகளையும் காசுகளையும் கோர்த்து நெற்றியில் அணிவர்.

மிடைந்த மாமணி மேகலை ஏந்து அல்குல் - சிந்தா. 950
பல்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் - அகம். 75

பெண்கள் தமது நெற்றியில் அணிகின்ற மேகலையினைச் சிறுகுழந்தைகளுக்கு அணிவிக்கும்போது குழந்தைகளின் நெற்றியில் கட்டாமல் அவரது இடுப்பில் கட்டிவிட்டு அழகுபார்ப்பர். இதனையே இப்போது அரைஞாண் என்று அழைக்கிறோம். துவக்கத்தில் பெண்களின் நெற்றிப்பகுதியினை மட்டுமே குறித்துவந்த அல்குல் என்ற சொல்லானது நாளடைவில் இடுப்புப் பகுதியினைக் குறிக்கத் துவங்கியதன் காரணம் இதுவே ஆகும். ஆயினும் குழந்தைகள், குழந்தைத் தெய்வங்களுக்கு மட்டுமே இப்பொருள் பொருந்துவதாகும்.

குழந்தைகளுக்கு மட்டுமின்றி, பசுக்கள், கன்றுகள், யானைகள் போன்ற விலங்குகளின் நெற்றியிலும் ஓவியங்களை வரைந்தும் அணிகலன்களை கட்டியும் அழகுபார்ப்பது பழந்தமிழர் வழக்கம்.

பகட்டு ஆ ஈன்ற கொடுநடைக் குழவி
கவைதாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல் - பெரும். 243

நல்லபாம்பின் விரிந்த படப்பொறி, தேர்த்தட்டு, கடல் அலை, பொன் ஆலவட்டம், பூக்கூடை போன்றவை பெண்களின் அல்குலுக்கு அதாவது நெற்றிக்குக் காட்டப்படுகின்ற சில உவமைகள். அல்குல் பற்றி மேலும் விளக்கமாகத் தெரிந்துகொள்ள ' அழகின் மறுபெயர் அல்குல் ' என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

அளகம்:

அளகம் என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டிலும் அவரது கண்ணிமைகளைக் குறிப்பதாகும். அழகு மிக்கது என்ற பொருளில் பெண்களின் மையுண்ட கண் இமைகளைக் குறிக்க இச்சொல் பயன்படலாயிற்று. பொதுவாகப் பெண்களின் அளகத்தினை அதாவது மையுண்ட கண்ணிமையினைக் கார்மேகம், கருவண்டு, நிலவின் கறை, கரும்புவில் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடுவது வழக்கம்.

....அகல் இரு விசும்பின் அரவு குறைபடுத்த
பசும் கதிர் மதியத்து அகல் நிலா போல
அளகம் சேர்ந்த திருநுதல் .. - நற். 377
( பொருள்: விரிந்த வானில் கரிய மேகத்தினால் சிறிதே மறைக்கப்பட்ட ஒளிவீசும் முழுநிலவினைப் போல ஒளிவீசும் விழிகளை மறைத்தக் கருமை பூசிய இமைகள் ...)

....அறல் நறும் கூந்தலும் அளக வண்டு சூழ்
நிறை நறும் தாமரை முகமும் நித்தில முறுவலும் .... - கம்ப. கிட்.9.
( பொருள்: நத்தையின் மேலொடு போல் குவிந்து தோன்றும் இமைகளும் அந்த இமையாகிய வண்டுகள் ஊதுகின்ற நிறைந்த தாமரைமலர் போன்ற முகமும் முத்துப் போன்ற கண்களும் ...)

..... மதியினில் மறு துடைப்பாள் போல்
அளக வாள் நுதல் அரும்பெறல் திலகமும் அழித்தாள் - கம்ப. அயோ.3
(பொருள்: ...நிலாவில் தோன்றும் கறையினைத் துடைப்பவளைப் போல ஒளிரும் கண்ணுக்கு மேல் இமையில் எழுதப்பட்டிருந்த அருமையான மையணியினையும் அழித்தாள்...)

செந்தேன் மொழியாள் செறி அளக பந்தியின் கீழ்
இந்துமுறி என்று இயம்புவார் வந்து என்றும்
பூ வாளி வேந்தன் பொரு வெம் சிலை சார்த்தி
ஏ வாளி தீட்டும் இடம் - நள. 42
(பொருள்: செந்தேன் போலும் இனிய மொழியினைப் பேசுகின்ற இவளின் செறிந்த வரிவரியான மைபூச்சுக்களை உடைய இமைகளின் கீழ் இருப்பவைக் கண்கள் அல்ல பிறைச்சந்திரன் என்று கூறுவார். ஆனால் இதுதான் மலரம்புகளை உடைய மன்மதன் நாளும் வந்து தனது கரும்புவில்லைச் சார்த்திவைத்துத் தான் எய்கின்ற அம்புகளைக் கூர்செய்யும் இடமாகும்..)
      
பெண்கள் தமது கண்ணிமைகளுக்கு மையினைப் பூசி அழகுசெய்வதுடன் கொன்றை, நீலம், அடம்பு, அசோகம் உட்பட பல்வேறு பூக்களின் தாதுக்களைத் தமது இமைகளின்மேல் அப்பிக் கொள்வதும் வழக்கமே. 

சுள்ளி சுனை நீலம் சோபாலிகை செயலை
அள்ளி அளகத்தின் மேல் ஆய்ந்து தெள்ளி ... - திணை.150. - 1
( பொருள்: கொன்றை, நீலம், அடம்பு மற்றும் அசோக மலர்களின் தாதுக்களை ஆய்ந்து புடைத்தபின்னர் அவற்றைத் தமது இமைகளின் மேல் அப்பியிருக்கும் ... )

இப்படிப் பலவண்ணங்களால் பூசியும் நறுமணம் மிக்கப் பொருட்களைக் குழைத்துக்கூட்டியும் பூந்தாதுக்களையும் அப்பியிருத்தலால் பார்ப்பதற்குப் பூவிதழ்களைப் போலவே தோன்றும் கண்ணிமைகளை உண்மையான பூவிதழ்களே என்று மயங்கி வண்டினங்கள் அவற்றில் தேன் உண்ண விரும்பி அவர்களையே சுற்றிச்சுற்றி வருவதுமுண்டு.

..... சண்பகப் பொதும்பர் தாது தேர்ந்து உண்டு
மாதர் வாள் முகத்து புரி குழல் அளகத்து
புகல் ஏக்கற்று திரிதரு சுரும்பொடு.. - சிலப். புகார். 2

( பொருள்: ...சண்பகச் சோலையிலே பூந்தாதுக்களைத் தேர்ந்துண்ட பின்னர், அச் சோலையிலிருந்த பெண்களின் அழகிய முகத்தில் ஒளிரும் குழல்விளக்குப் போன்ற இமைகளுக்குள் புகுவதற்கு விரும்பி ஏக்கமுற்றுச் சுற்றிவருகின்ற வண்டினங்கள்...)

பெண்கள் தமது இமைகளுக்கு மேலாக பல வண்ணங்களில் பூசி அழகு செய்வது மட்டுமின்றி ஏற்கெனவே அழகுசெய்யப்பட்டுத் தயாராக இருக்கின்ற அணிகளை அப்படியே இமைகளின் மேல்பகுதியில் புருவங்களுக்குக் கீழாகப் பொருத்திப் பசைகொண்டு ஒட்டவைத்துக் கொள்வதும் உண்டு. இவ்வகை அணிகளைத் தான் பூண் என்றும் கச்சு என்றும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இலக்கியப் பாடல்களில் வருவதான முலைப்பூண், முலைக்கச்சு ஆகியவை இமைகளுக்கு மேலாக அணியப்படுகின்ற இந்த அணிகலன்களையே குறிக்கும். அளகம் ஆகிய இமைகளின் மேலாக ஏற்றப்படும் பாரம் என்பதால் இதனை அளகபாரம் என்றும் கூறலாயினர். அளகம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு ' அளகம் என்றால் என்ன?' என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

ஆகம்:

ஆகம் என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் சில இடங்களில் கண்ணையும் சில இடங்களில் கண்ணிமையினையும் குறிப்பதற்காகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்கள் அழத்துவங்கும்போது கண்களில் நீர் உறைத்து அதாவது திரண்டு முத்துமுத்தாய் நிற்கும். இக்கண்ணீரைப் பனி என்று இலக்கியம் கூறுகிறது.

ஆகத்து அரி பனி உறைப்ப நாளும் - குறி 249
கண் பனி ஆகத்து உறைப்ப கண் பசந்து - அகம் 146/11
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப - அகம் 299/15

பெண்கள் தமது கண்ணிமையின் மேல் சந்தனத்தைக் குழைத்துப் பூசுவது வழக்கம். பூசுவதுடன் கொடிபோல எழுதியும் இருப்பர் என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

ஆகம் சாந்தின் அணிபெற எழுதி - சிந்தா:9 2091/3
ஏந்து எழில் ஆகம் சாந்தின் இடு கொடி எழுதி - சிந்தா:10 2181/1
சாந்தம் ஆகம் எழுதி தகை மா மலர் - சிந்தா:12 2479/3

சந்தனம் மட்டுமின்றி, பெண்கள் தமது கண்ணிமைகளில் பூந்தாது (சுணங்கு)க்களைக் கொண்டும் அலங்காரம் செய்தனர் என்னும் செய்தியினைக் கீழ்க்காணும் பாடல்கள் பறைசாற்றுகின்றன.

நுண் எழில் மாமை சுணங்கு அணி ஆகம்  - கலி 4/17
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த - அகம் 161/12

பெண்களின் மையுண்ட கண்ணிமையினைப் பூவிதழ்களுடன் (முகை) ஒப்பிட்டுப் பாடுவது புலவர்களின் வழக்கமே. கீழே சில பாடல்வரிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து - திரு 139
தளிர் ஏர் ஆகம் தகைபெற முகைந்த - அகம் 177/18

ஆகம் என்ற சொல் முலை என்ற சொல்லுடன் இணைந்து ' முலை ஆகம் ' என்று பல இடங்களில் பயின்றுவந்துள்ளது. முலை என்ற சொல்லுக்கும் கண், கண்ணிமை ஆகிய பொருட்கள் உண்டு என்பதால், ' முலை ஆகம் ' என்பதற்கு முலை ஆகிய ஆகம் என்று விரித்து கண் என்றோ இமை என்றோ இடத்திற்கேற்றாற்போல் பொருள்கொள்ளலாம்.

ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து - நெடு 136, அகம் 206/9, அகம் 75/12
கோங்கு முகைத்து அன்ன குவி முலை ஆகத்து - அகம் 240/11
மென் முலை ஆகம் கவின் பெற - கலி 40/33

ஆகமும் முலையும் தூக்கத்துடன் (துயில்) தொடர்புடையதைக் கீழ்க்காணும் பாடல் தெளிவாக்குகிறது.

அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே - அகம் 69/20

ஆகம் பற்றிய மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள ' தொடி ஆகம் தொடர்பு என்ன? ' என்ற கட்டுரையினைப் படிக்கலாம்.

இறை:

இறை என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் கண்ணிமையினைக் குறிக்கவே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்களின் கண்ணிமையினைக் குறிக்குமிடத்து, அதன் மென்மைத் தன்மையினையும் தாழ்ந்து இருக்கும் நிலையினையும் இலக்கியம் பெரிதும் பேசுகிறது.

சில்வளை சொரிந்த மெல்இறை - அகம்.19

காதலின்போது நாணத்தினால் தலைவி தலைவனை நேராகப் பார்க்காமல் தலைதாழ்த்தியே இருப்பாள். அப்போது அவளது கண்இமை தாழ்ந்தே இருக்கும். இதை சாய் இறை என்றும் வணங்கு இறை என்றும் இலக்கியம் கூறுகிறது.

சாய்இறைப் பணைத்தோள் அவ்வரி அல்குல் - ஐங்கு.481
நுணங்குகண் சிறுகோல் வணங்குஇறை மகளிரொடு - அகம்.97

மணமான பின்னர் கணவனை மனைவி நோக்கும்போது அவளின் கண்ணிமை தாழ்ந்திராமல் நேராக இருக்கும். இதை நேர் இறை என்று குறிப்பிடுகிறது இலக்கியம்.

நேர்இறை பணைத்தோட்கு ஆர் விருந்தாக - ஐங்கு - 468

பெண்கள் தங்கள் கண்ணிமையைப் பல வண்ணங்களால் பூசி அழகு செய்யும் வழக்கத்தினைக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள் - புறம்.32

கடவுளைத் தொழும்போது நம் கண்களும் கைகளும் கூப்பியபடி அதாவது மூடியபடி இருக்கும். இதனைக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல் கூறுகிறது.

வல்லே வருக, வரைந்த நாள்; என,
நல்இறை மெல்விரல் கூப்பி,
இல்லுறை கடவுட்கு ஓக்குதும், பலியே!  - அகம். 282

கண்ணிமையின் முதன்மையான பணி இமைத்தல் ஆகும். கண் இமைக்கும் நேரத்தினை இறைப்பொழுது என்றும் இறைப்போது என்றும் இறைமாத்திரை என்றும் இலக்கியம் குறிப்பிடுகிறது.

உடல் உடைந்தால் இறைப்போதும் வையாரே.-  திருமந்திரம் - 16
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழுது அளவினில் எல்லாம் கழுவிடும் - நாலா.395.
தத்தன் இறைப்பொழுதின் கண்கூடி வாளினால் எறியலுற்றான் - பெரியபுராணம்: 482
மறையன் மாமுனிவன் மருவார்புரம் இறையின் மாத்திரையில் எரியூட்டினான் - தேவாரம்: 479.

இறை என்ற சொல்லானது வளை என்ற சொல்லுடன் இணைந்து இறைவளை என்று பல இடங்களில் பயின்று வந்துள்ளது. இந்த வளை என்பது இமைகளின்மேல் விளிம்பில் வளைத்து எழுதப்படும் வட்டமான மையணியினைக் குறிக்கும். பெண்கள் கண்கலங்கி அழும்போது இந்த வளையாகிய மையணியானது கண்ணீர் பட்டு நெகிழ்ந்து கண்ணீருடன் போகும். இதனை வளை நெகிழ்தல் என்று இலக்கியம் குறிப்பிடுகிறது.

துறைநணி ஊரனை உள்ளியென் இறையேர் எல்வளை நெகிழ்பு ஓடும்மே.- ஐங்கு  -10
வளர்பிறை போல வழிவழிப் பெருகி இறைவளை நெகிழ்த்த எவ்வ நோயொடு - குறு - 289
செவ்வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி இறைவளை நெகிழ்ந்த நம்மொடு  - அகம். 250

காதலனின் பிரிவினால் கண்கள் கலங்கி அழுது அழுது காதலியின் இமைகளும் வெம்மையுற்றன. அவ் வெம்மை தாளாத காதலி ஒருத்தி தன்மீது மழைநீர் மொத்தமும் பொழிய மேகத்திடம் வேண்டுவதைப் பாருங்கள்.

கனைஇருள் வானம்! - கடல் முகந்து, என் மேல்
உறையொடு நின்றீயல் வேண்டும்; ஒருங்கே -
நிறைவளை கொட்பித்தான் செய்த துயரால்
இறைஇறை பொத்திற்றுத் தீ. - கலி.145.

கண்ணின் இமைபோல மக்களை / உயிர்களைக் காப்பதால் அரசனுக்கும் கடவுளுக்கும் இறை என்ற பெயர் ஏற்பட்டது. கண்ணின் இமைபோல வீட்டின் முன்னால் தாழ்வாக அமைந்திருப்பதால் தாழ்வாரத்திற்கும் இறை என்ற பெயர். சாகும் தருணத்தில் இமைகள் திறந்தநிலையில் விழிகள் அசைவற்று நிற்பதனை இறைக்குத்து என்றும் கண்ணிமைகளை மூடி ஓய்வெடுப்பதனை இறைகூர்தல் என்றும் அகராதி கூறுகிறது. இறையினைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள இறை என்றால் என்ன?. என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

............ தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.