செவ்வாய், 4 ஜூன், 2019

சங்கத் தமிழும் சமற்கிருதமும் - 1


முன்னுரை:



இந்திய மொழிகளின் தாய் தமிழே என்ற தொடர் ஆய்வுக் கட்டுரையின் கீழ் ஒன்பது பகுதிகளைக் கண்டோம். சமற்கிருதம் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிறமொழிச் சொற்களின் ஊற்றுக்கண்ணாகச் சங்கத் தமிழ்ச் சொற்கள் விளங்குவதனைப் பல சான்றுகளுடன் விரிவாக இப் பகுதிகளில் கண்டோம். இனி, சங்கத் தமிழுக்கும் சமற்கிருதத்திற்கும் இடையிலான மொழியியல் உறவினைப் பற்றி இக் கட்டுரையில் விளக்கமாகக் காணலாம்.



சங்கத் தமிழும் சமற்கிருதமும்:



இந்தியாவில் பரவலாகப் பேசப்பட்டு வரும் பல மொழிகளில் சமற்கிருதம் இடம்பெறவில்லை. காரணம், மிகமிகக் குறைந்த எண்ணிக்கையினரே இம் மொழியைப் பேசி வருகின்றனர். சமற்கிருத மொழிக்கும் தமிழுக்கும் இடையிலான தொடர்பு இன்று நேற்றல்ல, பண்டுதொட்டு வருவது.. உண்மையில், சமற்கிருதம் என்பது தமிழ், கன்னடம், மலையாளம் போல பெருவாரி மக்களால் ஒருகாலத்தும் பேசப்படவில்லை. பிறர் புரிந்துகொள்ளாத வகையில் அது ஒரு குழூக்குறி மொழி போலக் குறிப்பிட்ட வேலைக்காகக் குறிப்பிட்ட மக்கள் மட்டுமே பயன்படுத்துவதற்காகச் சமைக்கப்பட்ட மொழியே சமற்கிருதம் ஆகும்.



மேகம் (மாயோன்), மலை (சேயோன்), கதிரவன் (வேந்தன்), கடல் (வருணன்) என்று இயற்கையினையே கடவுளராக வழிபட்டு வந்த சங்கத் தமிழர்களின் சமுதாயத்தில் இறை வழிபாட்டு முறைகளும் அரசியல் நெறிமுறைகளும் காலப்போக்கில் மாறத் துவங்கின, இதன் விளைவாக, இறைவழிபாடு மற்றும் அரசியலில் தலைதூக்கி இருந்த குறிப்பிட்ட மக்களின் பயன்பாட்டிற்குப் பிறரால் எளிதில் புரிந்துகொள்ளப் படாத வகையில் மறைமொழி ஒன்றின் தேவை ஏற்பட்டது. எனவே, அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்த சங்கத் தமிழ்ச் சொற்களைச் சங்கத் தமிழ்ப் புலவர்களின் உதவியுடன் சில இலக்கண விதிகளுக்கு உட்படுத்திப் புதிய மறைமொழியை உருவாக்கினர். அவ்வாறு உருவாக்கப்பட்ட மொழியே சமற்கிருத மொழியாகும்.



சமற்கிருத மொழியானது சங்கத் தமிழில் இருந்தே உருவாக்கப்பட்டு இருந்தாலும் சங்கத் தமிழ்ப் புலவர்கள் மொழித் தூய்மை பேணுதலில் இருந்து பின்வாங்க வில்லை. அதன் அடிப்படையில், தமிழ்மொழியில் சமற்கிருத மொழிச் சொற்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று வரையறையும் யாத்தனர். ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இயற்றப்பட்ட சமற்கிருத மொழியிலும் காலப் போக்கில் பல மாற்றங்கள் உண்டாகின. இறைமை மற்றும் அரசியல் தலையீடுகளால் சமற்கிருத மொழிச் சொற்கள் தமிழ் உட்பட பிற மொழிகளுக்குப் பரவலாயின.



சமற்கிருதச் சொல்லாக்க விதிகள்:


சங்ககாலத் தமிழ்ப் புலவர்கள் தமிழ்ச் சொற்களில் இருந்து சமற்கிருதத்தை இயற்றும்போது பல விதிமுறைகளைப் பின்பற்றினர் என்று மேலே கண்டோம். அந்த விதிமுறைகளைப் பற்றி விரிவாகப் பல சான்றுகளுடன் கீழே காணலாம்.



1. நீள்மோனை (அ) ஆதி நீடல் விதி:



தமிழ்ச் சொல்லில் மோனையாக அதாவது முதல் எழுத்தாக வரும் குறில் எழுத்தானது சமற்கிருதச் சொல்லில் நெடிலாக உருமாற்றம் பெறும். இதுவே நீள்மோனை அல்லது ஆதி நீடல் எனப்படும். இவ் விதிக்கு எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கீழே காணலாம்.



பத்தர் (=கொள்கலம்) >>> பாத்ர

சுரம் (=வெப்பம்) >>> சூ`ர்ய

விறல் (=உறுதி) >>> வீர்ய

அறம் >>> ஆர்ய

மறம் >>> மார

மத்தகம் (=நெற்றி) >>> மாதா

கவுள் (=கன்னம்) >>> கா~ல்

மிதி (=நட) >>> வீதி

பதம் (=வழி) >>> பாத

பணி (=செயல்) >>> பாணி (=கை)

தொழுதி (=கூட்டம்) >>> ச்`தோத்ர

தெய்வ >>> தேவ



2. குறுமோனை (அ) ஆதி குறுகல் விதி:



தமிழ்ச் சொல்லில் மோனையாக அதாவது முதல் எழுத்தாக வரும் நெடில் எழுத்தானது சமற்கிருதச் சொல்லில் குறிலாக உருமாற்றம் பெறும். இதுவே குறுமோனை அல்லது ஆதி குறுகல் எனப்படும். இவ் விதிக்கு எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கீழே காணலாம்.



ஆம் (=நீர்) >>> அப்

நாகம் (=மலை) >>> நக

பூவல் (=செம்மண்) >>> பு^வன

ஆகம் (=கண்) >>> அக்சி~

வாய் (=வழி) >>> வயுன



3. கேழ்மோனை (அ) எழுத்து முன்னொட்டு விதி:



தமிழ்ச்சொல்லின் முன்னால் ஒரு மெய்யெழுத்தோ இரண்டு மெய்யெழுத்துக்களோ உயிர்மெய் எழுத்தோ கெழுவி அதாவது புணர்ந்து சமற்கிருதச் சொல்லாக மாறுவதைக் கேழ்மோனை என்று கூறலாம். இவ் விதிக்கு எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கீழே காணலாம்.



தலை (=இடம்) >>> ச்`தல

முந்நீர் (=கடல்) >>> ச`முந்தர்

ஆகம் (=கண்) >>> சக்சு~

நேமி (=உருளை) >>> சு`நாப^

வாய் (=வழி) >>> உபாய்

குருதி (=இரத்தம்) >>> உக்^ரத (=கோபம்)

தொழுதி (=கூட்டம்) >>> ச்`தோத்ர

கந்து (=பற்றுக்கோடு) >>> ச்`கந்த` (=தோள்)



4. மெய்யெதுகை விதி:



தமிழ்ச்சொல்லில் உள்ள எதுகையாகிய இரண்டாம் எழுத்தானது சமற்கிருதச் சொல்லாக மாறும்போது உயிர்மெய்யாக இருப்பின் உயிர் கெட்டு மெய்யெழுத்தாக மாறும். இதனை மெய்யெதுகை என்று கூறுவர். இவ் விதிக்கு எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கீழே காணலாம்.



மறுகு (=வழி) >>> மார்க~

மாதர் (=பெண்) >>> மாத்ரு

தொறு (=மாடு) >>> தூ^ர்ய

வதி (=உயிர்வாழ்) >>> வத்ச` (இருதயம்)



5. நட்பெழுத்து விதி:



தமிழ்ச்சொல்லில் உள்ள சில எழுத்துக்கள் சமற்கிருதச் சொல்லாக மாறும்போது அதன் நட்பு எழுத்தாக மாறும். இதனை நட்பெழுத்து என்று கூறுவர். சான்றாக, ம,ப,வ ஆகிய மூன்றும் நட்பு எழுத்துக்கள் ஆகும். தகரமும் நகரமும் நட்பெழுத்து ஆகும். இவ் விதிக்கு எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கீழே காணலாம்.



ஆம் (=நீர்) >>> அப்

பொருப்பு (=மலை) >>> பர்வத

கவுள் (=கன்னம்) >>> கபோல

வாய் (=மொழி) >>> பா^ச்~

பகடு (=காளை) >>> வாக`

வாய் (=வழி) >>> மாச

நேமி (=உருளை) >>> நபி^
முந்நீர் (=கடல்) >>> ச`முந்தர் 
துருத்தி (=வயிறு) >>> தொந்தி, துந்த
நந்து (=சிரிப்பு) >>> த`ந்த



6. விகுதிமாற்று / விகுதிகெடல் விதி:



தமிழ்ச்சொல்லின் ஈற்றில் உள்ள விகுதியானது சமற்கிருதச் சொல்லாக மாறும்போது கெட்டோ கெடாமலோ புதிய விகுதி பெறும். ச, ய, நி, த, தி, ன, ர, ணி ஆகியவற்றைச் சில விகுதிகளாகக் காட்டலாம். இதனை விகுதிமாற்று என்று கூறுவர். இவ் விதிக்கு எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கீழே காணலாம்.



அகை (=தீ) >>> அக்~நி

குரு (=நிறம்) >>> க்~ருணி

கிளர் (=கோபம்) >>> க்லேச`

அரக்கு (=சிவப்பு) >>> ரக்த
காமம்  (=ஊர்) =)) க்ராம 



7. அயமாற்று விதி:



தமிழ்ச்சொல்லின் முதலில் உள்ள அகர எழுத்தானது சமற்கிருதச் சொல்லாக மாறும்போது யகர எழுத்தாக மாறும். இதனை அயமாற்று என்று கூறுவர். இவ் விதிக்கு எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கீழே காணலாம்.



அதர் (=வழி) >>> யாத்ர

அகை (=தீ) >>> யக்~ஞ

ஆன் (=காளை) >>> யான (=வண்டி)



8. மெய்யிடை விதி:



தமிழ்ச்சொல்லானது சமற்கிருதச் சொல்லாக மாறும்போது சொல்லின் இடையில் உள்ள சில எழுத்துக்கள் முன்னொட்டு பெறும். இதனை மெய்யிடை என்று கூறுவர். இதில் பலவகைகள் உண்டு. இவ் விதிக்கு எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கீழே காணலாம்.



சகர மெய்யிடை: மத்தகம் (=நெற்றி) >>> மச்`த்திச்`க், தாமரை >>> தாமிச்`ர


ஙகர மெய்யிடை : ஆகம் (=கண்) >>> ஆங்க், பகடு (=காளை) >>> ப^ங்கி~



9. கெடுமோனை (அ) ஆதி கெடல் விதி:



தமிழ்ச்சொல்லின் முதலில் வரும் எழுத்தானது சமற்கிருதச் சொல்லாக மாறும்போது முழுவதுமாய்க் கெடும். இதனைக் கெடுமோனை என்று கூறுவர். இவ் விதிக்கு எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கீழே காணலாம்.



குருதி (=இரத்தம்) >>> ருத்`ர (=சிவப்பு, சினம்)

எருது (=காளை) >>> ரத (=வண்டி)

ஒழுகை (=வண்டி) >>> யுக்~ய

கறங்கு (=ஒலி) >>> ராக~



10. உயிர்மாற்று விதி:



தமிழ்ச்சொல்லின் முதலிலோ இடையிலோ வரும் உயிர்மெய் எழுத்தானது சமற்கிருதச் சொல்லாக மாறும்போது நெடில் – குறில் மாற்றம் மட்டுமின்றி பிறிதோர் உயிரேற்று மாறுவதும் உண்டு. அத்துடன், சொல்லின் முதலில் வரும் ஒரு உயிர் எழுத்தானது பிறிதோர் உயிராக மாறுவதும் உண்டு. இதனை உயிர்மாற்று என்று கூறுவர். இவ் விதிக்கு எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கீழே காணலாம்.



நுதல் (=கண்) >>> நேத்ர (=கண்)

நெய்தல் (=கண்போன்ற மலர்) >>> நயன (=கண்)

சிலம்பு (=ஒலி) >>> ச^ல்ப

செறு (=வயல்) >>> சீ`ர (=உழவு)

சுவை >>> சீ^வ (=நாக்கு)

முறுவல் (=சிரிப்பு) >>> ச்`மேர

செல் (=மலை) >>> சை`ல
ஏனைய >>> அன்ய



11. சயழமாற்று விதி:



தமிழ்ச்சொல்லில் வரும் ழகர எழுத்தானது சமற்கிருதச் சொல்லாக மாறும்போது சகரமாகவோ யகரமாகவோ மாறும். அதைப்போல யகரம் சகரமாக மாறும். இதனை சயழமாற்று என்று கூறுவர். இவ் விதிக்கு எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கீழே காணலாம்.



நாழி (=குழல்) >>> நாசி`

வாய் (=மொழி) >>> பா^ச்~

பயம் (=பால்) >>> பசு`

காய் (=ஒளிர்) >>> காச`

ஒழுகை (=வண்டி) >>> யுக்~ய

கை (கய்) >>> க`ச்`த

கயம் (=யானை) >>> க^ச^

தெய்வ >>> தேச^ச்`



12. மெய்மாற்று விதி:



தமிழ்ச்சொல்லில் இரட்டித்து வரும் சில மெய்யெழுத்துக்களானவை சமற்கிருதச் சொல்லாக மாறும்போது, அவற்றில் ஏதேனும் ஒரு மெய்யெழுத்து மட்டும் பிறிதோர் மெய்யாக மாற்றம் பெறும். இதனை மெய்மாற்று என்று கூறுவர். இவ் விதிக்கு எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கீழே காணலாம்.



அச்சு >>> அக்ச~,                  பிச்சை >>> பி`க்சா~

பக்கம் >>> பக்ச~,                  ஊக்கம் >>> உக்சா~
வண்ணம் >>> வர்ண,              கன்னம் >>> கர்ண
பத்தி >>> ப`க்தி,                   உத்தி >>> யுக்தி



13. அடர்மாற்று விதி:



தமிழ்ச்சொல்லில் வரும் டகர ரகர எழுத்துக்கள் சமற்கிருதச் சொல்லாக மாறும்போது முறையே ரகர டகர எழுத்தாக மாறும். இதனை அடர்மாற்று என்று கூறுவர். இவ் விதிக்கு எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கீழே காணலாம்.



சகடு (=உருளை) >>> சக்ர

கடம் (=வழி) >>> க்ரம

கரகம் (=நீர்க்கலம்) >>> க^டக



14. வம்மோனை (அ) வகர மெய் ஏறல் விதி:



தமிழ்ச்சொல்லின் முதலில் வரும் உயிர் எழுத்தானது சமற்கிருதச் சொல்லாக மாறும்போது சில இடங்களில் வகர மெய் பெறுவதும் உண்டு. இதனை வம்மோனை என்று கூறுவர். இவ் விதிக்கு எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கீழே காணலாம்.



எருது (=காளை மாடு) >>> வ்ருச~

ஒழுகை (=வண்டி) >>> வாக`ன

எருது (=காளை) >>> வ்ருத்ர (=உருளை)



15. கிரந்தமாற்று விதி:



தமிழ்ச்சொல்லில் வரும் வல்லின எழுத்துக்கள் சமற்கிருதச் சொல்லாக மாறும்போது கிரந்த எழுத்தாக மாறும். அதாவது, ககர எழுத்தானது க`கரம், க~கரம், க^கரமாகவோ சகர எழுத்தானது ச`கரம், ச~கரம், ச^கரமாகவோ, டகர எழுத்தானது ட`கரம், ட^கரமாகவோ தகர எழுத்தானது த`கரம், த^கரமாகவோ பகர எழுத்தானது ப`கரம், ப^கரமாகவோ றகர எழுத்தானது ரகரமாகவோ மாறும். இதனைக் கிரந்தமாற்று என்று கூறுவர். இவ் விதிக்கு எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கீழே காணலாம்.



கன்னம் >>> க`னு

கலப்பை >>> க`ல்

சுரை (=பால்மடி) >>> சு`ரபி`

சேதா (=மாடு) >>> ச`தி^

கறுவு (=சினம்) >>> க~ர்மி

களம் (=தொண்டை) >>> க~ளா



………………………………………………… தொடரும் ……………………………….

4 கருத்துகள்:

  1. மறைமொழியாக என்ற சொல்லாடலை ரசித்தேன். இரு மொழிக்குமான தொடர்பினை விவாதிக்கும் விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வலைப்பதிவை தற்போதுதான் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. அனைத்து கட்டுரைகளுமே அருமையாக தெளிந்து ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.