சனி, 29 ஆகஸ்ட், 2009

தொல்காப்பிய உயிர்ப்பாகுபாடு - சரியா?


முன்னுரை:

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் மரபியலில் காணப்படும் பாடல்கள் இவை:

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே - பா.எண் - 27
புல்லும் மரனும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - பா.எண் -28
நந்தும் முரளும் ஈர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - பா.எண் -29
சிதலும் எறும்பும் மூ அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - பா.எண் -30
நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - பா.எண் - 31
மாவும் மாக்களும் ஐ அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - பா.எண்- 32
மக்கள்தாமே ஆறறிவு உயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - பா.எண் -33
ஒருசார் விலங்கும் உள என மொழிப - பா.எண் - 34

தற்போதைய பொருள்:

மேற்காணும் எட்டு பாடல்களின் தற்போதைய கருத்துக்கள் ஆவன: தொட்டு அறிவன ஓரறிவு உயிர்களாகும். சான்று: புல்,மரம் போன்றவை. தொடுதலுடன் நாவினால் சுவையும் அறிபவை ஈரறிவு உயிர்களாகும். சான்று: நத்தை, இப்பி போன்றவை. தொடுகை மற்றும் சுவையுடன் மூக்கினால் மணமும் அறிபவை மூன்று அறிவுடையவை ஆகும். சான்று: கறையான், எறும்பு போன்றவை. தொடுகை,சுவை,மணத்துடன் கண்களினால் காட்சியும் அறிபவை நான்கு அறிவுடைய உயிர்கள் ஆகும். சான்று: நண்டு, தும்பி (தேனீ) போன்றவை. தொடுகை,சுவை,மணம், காட்சியுடன் காதினால் ஒலியும் அறிபவை ஐந்து அறிவுடையவை ஆகும். சான்று: விலங்குகள், மாக்கள் போன்றவை. இந்த ஐந்து அறிவுகளுடன் மனதினால் சிந்திக்கும் அறிவினைப் பெற்றவர்கள் மக்களும் அவர் போன்றோரும் ஆவர். ஒருவகை விலங்குகளும் ஆறறிவுடையன என்று கூறுவார்கள்.

பொருட்பிழைகள்:

மேற்காணும் எட்டு பாடல்களில் பல பொருட்பிழைகள் காணப்படுகின்றன. அவற்றைக் கீழே காணலாம்.


தும்பியாகிய தேனீக்கு மெய்,வாய்,மூக்கு,கண் ஆகிய நான்கு அறிவுகள் உண்டென்று 31 ஆம் பாடல் கூறுகிறது. இக் கருத்து அறிவியல் உண்மைக்குப் புறம்பானது ஆகும். ஏனென்றால் தேனீக்குக் கண்கள் உண்டு; ஆனால் மூக்கு இல்லை. பூவிதழ்களின் ஒளியினால் கவரப்பட்டே இவை பூவில் அமர்ந்து தேன் உண்ணுகின்றனவே அன்றி பூக்களின் நறுமணத்தால் அல்ல. இது அறிவியல் உண்மை. இதனை மேட்சி என்ற இணையதளப் பக்கத்தில் காணலாம்.
அதேபோல் நண்டுகளுக்கும் மூக்கு என்பது இல்லை. நீர்வாழ் நண்டுகளானாலும் சரி நிலத்தில் வாழும் தென்னைமர நண்டுகளானாலும் சரி தனிப்பட்ட சுவாச உறுப்பான மூக்கு என்பதே இவற்றுக்குக் கிடையாது. இவை பற்றிய உண்மைகளை நீர்வாழ்நண்டுகள் மற்றும் தென்னைமர நண்டுகள் என்ற இணையதளப் பக்கங்களில் காணலாம். இதில் இருந்து தேனீ மற்றும் நண்டிற்கு நான்கறிவு என்னும் கருத்து தவறானது என்று அறியலாம்.

நத்தைக்கு மெய், வாய் என்ற இரண்டு அறிவுகள் மட்டுமே உண்டென்று 29 ஆம் பாடல் கூறுகிறது. இதுவும் தவறாகும். ஏனென்றால் நத்தைக்குக் கண்களும் உண்டு. இதை அனிமல்ஸ் என்ற இணையதளப் பக்கத்தில் காணலாம். எனவே நத்தைக்கு ஈரறிவு மட்டுமே என்று கூறுவது தவறு என்று தெளியலாம்.
எறும்பிற்கு மெய்,வாய்,மூக்கு என்று மூன்று அறிவுகள் உண்டு என்று 30 ஆம் பாடல் கூறுகிறது. இதுவும் அறிவியலுக்குப் புறம்பான கருத்தாகும். ஏனென்றால் எறும்பினங்களுக்கு மூக்கு இல்லை என்பதே அறிவியல் உண்மை. இந்த உண்மையினைப் பற்றி விளக்கமாக ஆன்ட்ஹில்வுட் என்ற இணையதளப் பக்கத்தில் காணலாம். இதில் இருந்து எறும்பிற்கு மூக்கு உண்டு என்று கூறுவது தவறு என்று அறியலாம்.

பரிணாம வளர்ச்சி ஆய்வுமுறைப்படி உயிர்களுக்கான மூன்றாவது அறிவு கண்ணே என்றும் மூக்கானது நான்காவது அறிவே என்றும் அறியலாம். இது எவ்வாறெனில் மணம் என்பது குறுகிய எல்லைக்குள் அறியப்படுவது. காட்சி என்பது நீண்ட எல்லையிலும் அறியப்படுவது. உணவைத் தேடுகின்ற உயிர்களுக்கு உணவுப் பொருளின் இருப்பிடம் அறிதலே முதல்நிலைத் தேவை ஆகும். உணவுப் பொருளின் மணம் அறிதல் என்பது இரண்டாம் நிலைத் தேவையே ஆகும். எனவே முதல்நிலைத் தேவையை நிறைவேற்றும் விதமாக கண்களை மூன்றாவது அறிவாக உயிர்களுக்கு அளித்தது இயற்கை. இரண்டாம்நிலைத் தேவையை நிறைவேற்றும் விதமாக மூக்கினை நான்காவது அறிவாக அளித்தது இயற்கை. ஆனால் 27 ஆம் பாடலோ மூன்றாவது அறிவு மூக்கு என்றும் நான்காவது அறிவு கண் என்றும் கூறுகிறது. இப் பாடலின்படி கண்கள் உடைய உயிர்களுக்கு எல்லாம் மூக்கு இருக்க வேண்டும். ஆனால் உண்மை அவ்வாறு இல்லை என்று மேலே நத்தை, எறும்பு, நண்டு போன்ற உயிர்களுக்குக் கண்டோம். மாறாக மூக்குடைய உயிர்களுக்கு எல்லாம் (சான்று: விலங்குகள், பறவைகள்) கண்களும் உண்டு என்ற உண்மையை நாம் அறிவோம். இதில் இருந்து கண்களுக்குப் பின்னரே மூக்கு பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது என அறியலாம். இயற்கையின் இந்த விதிக்கு மாறாக 27 ஆம் பாடலின் கருத்து அமைவதால் அக் கருத்து தவறு என்று தெள்ளிதின் அறியலாம்.

விலங்குகளும் மாக்களும் (விலங்கொத்த மனிதர்களும்) ஐந்து அறிவினர் என்று 32 ஆம் பாடல் கூறுகிறது. இந்த விலங்கொத்த மனிதர்கள் என்போர் யாவர் என்பதற்கு மனித உருவில் விலங்கின் குணமுடையோர் என்று பொருள் கொள்கின்றனர். இது அடிப்படையில் தவறாகும். ஏனென்றால் இங்கு உயிர்களின் புலன்களைப் பற்றித் தான் பேசப்படுகிறதே ஒழிய தீய அல்லது நல்ல குணங்கள் அன்று. அவ்வகையில் மனிதர்களுக்கு அவர்கள் (நல்லோராயினும் தீயோராயினும்) மெய்,வாய்,கண்.மூக்கு.காது,மனம் என்ற ஆறறிவு உண்டு தானே. எனவே ஆறறிவு உடைய மனிதர்களை (அவர் இழிகுணத்தோர் ஆயினும்) ஐயறிவில் சேர்த்துக் கூறுவது தவறாகும்.

மக்களுக்கு மட்டுமே மனம் இருப்பதாக 33 ஆம் பாடல் கூறுகிறது. ஒருவகை விலங்குகளுக்கும் மனம் இருப்பதாக 34 ஆம் பாடல் கூறுகிறது. இது அறிவியல் முறைப்படி தவறாகும். ஏனென்றால் மனம் இல்லாத உயிர்களே உலகில் இல்லை. மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பே ஆகும். ஒவ்வொரு உயிரும் அதனதன் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப சிந்திக்கிறது; அதற்கேற்ப செயல்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்துவது மூளை ஆகும். மூளை இல்லாத உயிர்கள் உண்டா?. இருக்க முடியாது. ஏனென்றால் மூளை இல்லாமல் உயிர்களால் வாழவே முடியாது. நமது மூளையைப் போல இல்லாவிட்டாலும் மூளையானது ஏதேனும் ஒரு வடிவத்தில் வண்ணத்தில் அனைத்து உயிர்களுக்கும் எங்காவது இருந்தே ஆகவேண்டும். மூளை இல்லையேல் சிந்தனையும் இல்லை; இயக்கமும் இல்லை. எங்குமே நகராமல் நின்று கொண்டே இருக்கும் மரம் செடி கொடிகளுக்கும் கூட மூளை உண்டு. அதனால் தான் அவற்றால் அவற்றின் சூழலுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. இவை அனைத்தும் அறிவியல் உண்மைகள். (அருகில் இருக்கும் மரங்களைப் பாருங்கள். தம் கரங்களை நீட்டி 'வருக வருக' என்று அவை நம்மை வரவேற்பது போலத் தோன்றவில்லை?.) அவ்வாறு இருக்க மனிதர்களுக்கும் ஒருவகை விலங்குகளுக்கு மட்டுமே மனம் அல்லது மூளை உண்டு என்று கூறி இருப்பது தவறாகும்.

பிற குற்றங்கள்:

மேற்காணும் எட்டு பாடல்களிலும் ஒரு பாடலில் கூட பறவை இனத்தைப் பற்றிக் கூறவே இல்லை. ஏன்? பறவை இனத்திற்கு ஒரு அறிவு கூட இல்லையா என்ன?. மரம்,செடி,கொடி,விலங்குகள் ஏன் சிறுசிறு உயிர்களுக்கும் கூட இத்தனை அறிவு என்று கூறிவிட்டு பறவைகள் என்ற ஒரு மிகப் பெரிய இனத்தைப் பற்றி நேரிடையாகவோ உய்த்துணரும் படியாகவோ கூட குறிப்பிடாதது இப் பாடல்களில் உள்ள மிகப் பெரிய குறைபாடு ஆகும். இது தெளிவின்மைக் குற்றமாகும்.

மேற்காணும் எட்டு பாடல்களும் மரபியலில் வைக்கப்பட்டுள்ளது. மரபியலின் முதல் 26 பாடல்கள் உயிர்களின் இளமைப் பெயர்கள் எவ்வாறு வழங்கப் படவேண்டும் என்று விரித்துக் கூறுகிறது. திடீரென 27 முதல் 34 வரையில் உள்ள பாடல்கள் அதாவது மேற்காணும் 8 பாடல்கள் உயிர்களின் அறிவுகளைப் பற்றிக் கூறுகிறது. மீண்டும் 35 ஆம பாடலில் இருந்து உயிர்களின் இளமைப் பெயர் வழங்கும் முறை தொடர்கிறது. உயிர்களின் இளமைப் பெயர் வழங்கும் முறை பற்றிக் கூறும்போது இடையில் தொடர்பே இல்லாமல் உயிர்களின் அறிவு பற்றிக் கூறவேண்டிய தேவை என்ன?. 24 ஆம் பாடலில் ஓர் அறிவு உயிர் என்ற தொடர் வருகிறது. அதனால் தான் உயிர்களின் அறிவுப் பாகுபாடு பற்றி இங்கே விளக்கப்பட்டுள்ளது என்று சிலர் கருதலாம். ஆனால் அது தவறாகும். ஏனென்றால் அத் தொடருக்கான விளக்கத்தை 25 ஆம் பாடலின் மூலமே உய்த்துணர வைத்துவிட்டார் தொல்காப்பியர். 'நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே' என்று 25 ஆம் பாடலில் கூறியதில் இருந்து ஓர் அறிவு உயிர் என்பது நெல்,புல் போன்ற அசைவற்ற தன்மை உடைய உயிர்கள் என்னும் கருத்து உய்த்துணரப் படுகிறது. எனவே உயிர்களின் அறிவுப் பாகுபாடு பற்றிய விளக்கம் இங்கே தேவையின்றியே வந்துள்ளது என்று தெளியலாம். ஆக பொருத்தமில்லாத இடத்தில் இந்த எட்டு பாடல்களும் அமைந்திருப்பது அமைப்புக் குற்றமாகும்.

துணிபு:

தொல்காப்பியரின் நுண்மாண் நுழைபுலம் பற்றி ஏற்கெனவே நாம் 'மாயோன் மேய' என்னும் கட்டுரையில் கண்டிருக்கிறோம். தெளிவான சிந்தனை, நுட்பமான அறிவு, எளிமையான நடை ஆகியவை இவரது சிறப்பு இயல்புகள் ஆகும். உண்மை இவ்வாறு இருக்க, மேற்காணும் எட்டு பாடல்களை இவ்வளவு பொருட்பிழைகளுடனும் தெளிவின்மை மற்றும் அமைப்புக் குற்றங்களுடனும் அவர் தொல்காப்பியத்தில் இயற்றி இருப்பாரா? என்பதே கேள்வி. ஒருபோதும் இருக்க முடியாது என்பதே அதற்கான விடை ஆகும். என்றால் இப் பாடல்களை யார் இயற்றி இருப்பர்? இக் கேள்விக்கான விடை:

உயிர்ப்பாகுபாடு குறித்த இப் பாடல்கள் எட்டும் இடைச்செருகல் (அ) பிற்சேர்க்கையே ஆகும். அதாவது தொல்காப்பியர் அல்லாத வேறொருவரால் தொல்காப்பியருக்குப் பின் இயற்றப்பட்டு தொல்காப்பியத்தில் வேண்டுமென்றே புகுத்தப்பட்டவை. இதுவே இக் கட்டுரையின் துணிந்த முடிபாகும்.

4 கருத்துகள்:

  1. நன்று, சரவணன் என்ற நாமத்தினால் அவ்வையாரை சுட்ட பழத்தால் திருத்தியவரே, இந்த தொல்காப்பிய ஐயம் எனக்கும் ஏற்பட்டது. விளக்கத்திற்கு நன்றி.
    பின்னோட்டத்தில் இவ்வாறு ஏற்படும் ஐயங்களை வினவலாமா? விளக்கம் தர இயலுமா?

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி திரு.வீரராகவன். உங்கள் ஐயங்களை தாராளமாகக் கேளுங்கள். என்னால் முடிந்தவரை அவற்றுக்கு விளக்கம் கூறுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. தொல்காப்பியர் மூக்கு என்று உறுப்பைக் குறிப்பிடவில்லை. முகரும் உணர்வைக் கூறுகிறார். அதாவது தும்பிகள் (தேனீக்கள் மட்டுமல்ல) தங்களுடைய உணர்கொம்புகளால் (அண்டனா) முகரும் திறன் கொண்டைவை. 31ஆம் நூற்பா தவறில்லை.

    பதிலளிநீக்கு
  4. நண்டுகளுக்கும் அண்டெனா உண்டு அவற்றின் மூலம் முகர்ந்துதான் இரை தேடுகின்றன

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.