வெள்ளி, 23 செப்டம்பர், 2011

ஒட்டக்கூத்தனும் ஓட்டை வாயும்


முன்னுரை:

பழமொழிகள் மக்களின் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்தவை. அனுபவம் வாய்ந்த பெரியோர்களால் இளைய தலைமுறையினரின் நன்மை கருதி வாய்மொழியாகக் காலங்காலமாக கூறப்பட்டு வந்தவை. நகைச்சுவை, அறிவுக்கூர்மை கருதியும் பெரியோர்கள் பல பழமொழிகளைக் கூறியுள்ளனர். பழமொழிகள் மட்டுமின்றி விடுகதைகள் வாயிலாகவும் பல அரிய கருத்துக்களை பெரியவர்கள் கூறியுள்ளனர். இந்த பழமொழிகளுக்கும் விடுகதைகளுக்கும் இடைப்பட்டதாக ஒரு வகை உண்டு. அதுதான் 'விடுமொழி' என்பதாகும். இந்த விடுமொழி என்பது பழமொழி போலத் தோன்றும் ஒரு விடுகதை ஆகும்.

தமிழ் கூறும் நல்லுலகில் பல விடுமொழிகள் உண்டு. அவற்றில் சில கீழே காட்டப்பட்டுள்ளன.

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான்.
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
எடுக்கிறது பிச்சை ஏறுவது பல்லக்கு.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.

இக் கட்டுரையில் இன்னும் ஒரு விடுமொழி பழமொழியாகக் கருதப்பட்டு எப்படித் தவறுதலாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது என்பதைக் காணலாம்.

பழமொழி: ஒட்டக்கூத்தனுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்

இப் பழமொழிக்கு தற்போது கூறப்பட்டு வரும் பொருள் இதுதான்: ஒட்டக்கூத்தன் என்னும் புலவனுக்கு மட்டும் இரண்டு தாழ்ப்பாள் போட்டாளாம் அரசி. இக் கருத்தின் பின்னணியாக இணையத்தில் கூறப்பட்டு வரும் கதை என்னவெனில்:

கம்பனுக்கும் ஒட்டக்கூத்தனுக்கும் கட்டோட ஆகாது. மன்னன்கிட்ட ஒட்டக்கூத்தனுக்கு செல்வாக்கு. அரசிக்கோ கம்பன் கவிதையில் ஈடுபாடு. ஒரு நாள் அரசனிடம் அரசிக்கு ஊடல். ராணி உள்பக்கமா தாப்பா போட்டுகிட்டு தெறக்காமக் கோவமா இருக்கா. அரசன் ஒட்டக்கூத்தனக் கூப்பிட்டு எதாவது ஜல்சா கவிதை சொல்லி ராணிய சரிக்கட்ட சொல்றான். ஒட்ட்க்கூத்தனும் போய் கவி பாடறான். உள்ளேந்து தாப்பா போடற சத்தம் கேக்குது. பின்னாடியே ராணியோட குரலும் வருது. ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் அப்பிடின்னு.

இது கட்டுக்கதை என்பதைப் படித்தாலே புரிந்து கொள்ளலாம். பழமொழியைத் தவறாகப் புரிந்துகொண்டு பொருள் கூறியதால் அதை சரிக்கட்ட ஒரு கதை தேவைப்படுகிறது. இனி இப்பழமொழியின் உண்மையான நிலை என்ன என்று காணலாம்.

இப் பழமொழியின்  உண்மையான வடிவம் இதுதான்:

ஒத்தக் கூத்தனுக்கு இரட்டைத் தாழ்ப்பாள். அது என்ன?

விடை: இந்த விடுமொழியில் வரும் கூத்தன் என்பது கூத்தாடும் இயல்புடைய நாக்கினைக் குறிப்பதாகும். தாழ்ப்பாள் என்பது உதட்டினைக் குறிப்பதாகும். இரண்டு தாழ்ப்பாள் என்பது மேலுதடு, கீழுதடு ஆகிய இரண்டையும் குறிப்பதாகும். ஒத்தையா ரெட்டையா என்ற சொல் வழக்கினைப் போல இந்த விடுமொழியானது

ஒத்தக் கூத்தனுக்கு (ஒரு நாக்குக்கு) இரட்டைத் தாழ்ப்பாள் (இரண்டு உதடுகள்)

என்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

முடிவுரை:

இதே நாக்கையும் உதடுகளையும் விடைகளாகக் கொண்டு தான் 'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் ' என்ற விடுமொழியும் அமைந்துள்ளது என்பதை ஏற்கெனவே நாம் ஒரு ஆய்வுக் கட்டுரையில் கண்டுள்ளோம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

................................................. தமிழ் வாழ்க!......................................

3 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.