வெள்ளி, 8 ஜூலை, 2016

திருக்குறளில் முயக்கம்

முன்னுரை:

சங்கப் புலவர்கள் தமிழுக்குக் கொடையாய் அளித்த பல அழகிய தமிழ்ச்சொற்களுள் முயங்கு, முயக்கு, முயக்கம் போன்றவையும் அடங்கும். எப்படி ' அல்குல் ' என்ற அழகிய தமிழ்ச் சொல்லுக்கு பண்பாட்டுக்கு ஒவ்வாத அசிங்கமான பொருளை இன்றைய அகராதிகள் அளித்து தமிழ்ப் புலவர்களின் மாண்பையும் ஒட்டுமொத்தத் தமிழரின் மானத்தையும் காற்றில் பறக்கவிட்டதோ அதைப்போலவே இந்த மூன்று சொற்களுக்கும் சரியான பொருட்களைக் கூறத் தவறிவிட்டது. விளைவு?. திருக்குறள் உட்பட பல தமிழ் இலக்கியங்களை ஆசிரியர்களும் மாணவர்களும் தவறாகப் புரிந்துகொண்டதுடன், தமிழ்ப் புலவர்கள் கண்ணியமற்றவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள்.

தமிழ்ப் புலவர்களின் உயர்ந்த நோக்கமானது மறக்கப்பட்டோ மறைக்கப்பட்டோ இருட்டடிப்புக்கு உள்ளாகிப் போனது. அவர்கள் சொல்லவந்த அழகிய பீடுடைய கருத்துக்கள் மக்களால் புகழப்படாமல் கவனிப்பாரற்று கலையிழந்து நிற்கின்றன. இதுகாறும் நிலவிவந்த இந்நிலையானது இனியேனும் மாறவேண்டும் என்ற நோக்குடன் இக் கட்டுரையானது எழுதப்படுகிறது. இந்த மூன்று சொற்களும் உண்மையிலேயே எவ்வளவு அழகிய பொருளுடையவை என்பதை இக் கட்டுரையில் பல ஆதாரங்களுடனும் விளக்கங்களுடனும் காணப் போகிறோம். இக் கட்டுரையின் முதல் பகுதியில் திருக்குறளில் இந்த சொற்கள் பயின்றுவரும் இடங்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும் காணலாம்.

முயக்கம் - தற்போதைய அகராதிப் பொருள்:

முயங்கு, முயக்கு, முயக்கம் ஆகிய சொற்களுக்கு தற்போதைய தமிழ் அகராதிகள் காட்டுகின்ற பொருட்கள் எவையெவை என்று கீழே தரப்பட்டுள்ளது.

முயக்கம் muyakkam , n. < முயங்கு-. 1. Embrace; தழுவுகை. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் (குறள், 913). 2. Copulation; புணர்ச்சி. முயக்கம் பெற்றவழி (ஐங்குறு. 93, உரை). 3. Connection; uniting, joining; சம்பந்தம். ஆணவத் தின் முயக்கமற்று (தணிகைப்பு. நந்தி. 110).

முயக்கு muyakku , n. See முயக்கம். வளியிடை போழப் படாஅ முயக்கு (குறள், 1108). முன்பு மாதவப்பயத்தினாலவண் முயக்கமர்வார் (தணி கைப்பு. நாட்டுப். 48).

முயங்கு-தல் muyaṅku- , 5 v. tr. 1. To embrace; தழுவுதல். முயங்கிய கைகளை யூக்க (குறள், 1238). 2. To copulate with; புணர்தல். அறனில்லான் பைய முயங்கியுழி (கலித். 144). 3. To join; to cling to; பொருந்துதல். முலையு மார்பு முயங்கணி மயங்க (பரிபா. 6, 20). 4. To do, perform; செய்தல். மணவினை முயங்கலில்லென்று (சூளா. தூது. 100).

அனைத்துத் தமிழ் அகராதிகளும் மறுக்காமல் கூறும் ஒரே பொருள் முயக்கம் / முயக்கு / முயங்கு என்றால் ' தழுவுகை / தழுவுதல் ' என்பதாகும். அதாவது ஒருவருக்கொருவர் உடலால் ஒன்றிணையும் செய்கை. ஆணும் பெண்ணுமாக உடலால் ஒன்றிணைவதான உடலுறவும் இதில் அடங்குவதாகக் கொண்டு உரையாசிரியர்கள் பொருள்கூறுகின்றனர்.

பொருள்தவறுகளும் உரைத்தவறுகளும்:

முயக்கம் / முயக்கு / முயங்குதல் என்பதற்கு தழுவுதல் அல்லது உடலுறவு என்ற பொருள் பொருந்தாது என்பதனைச் சில குறள்களின் மூலம் இங்கே காணலாம்.

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு - குறள் 111:8

திருக்குறளையும் திருவள்ளுவரையும் தவறாகப் புரிந்துகொள்ளக் காரணமான பல குறள்களில் தலையாய குறள் இதுதான். இக் குறளுக்குக் கூறப்பட்டிருக்கும் உரைவிளக்கங்களைப் படித்துப்பார்த்தால் அனைவருக்கும் அவ்வாறுதான் தோன்றும். இதோ இக் குறளுக்குத் தற்போதைய உரையாசிரியர்கள் கூறியிருக்கும் விளக்கங்களைக் கீழே காணலாம்.

மு.வ உரை: காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.

பரிமேலழகர் உரை: (ஒத்த அன்புடைய நுமக்கு ஒரு பொழுதும் விடாத முயக்கமே இனியது என வரைவுகடாய தோழிக்குச் சொல்லியது.) (நீ சொல்லுகின்ற தொக்கும்) வளி இடை போழப்படா முயக்கு - ஒரு பொழுதும் நெகிழாமையின் காற்றால் இடையறுக்கப்படாத முயக்கம்; வீழும் இருவர்க்கு இனிதே - ஒருவரையொருவர் விழைவார் இருவர்க்கும் இனிதே. (முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. 'ஈண்டு இருவர் இல்லை இன்மையான், இஃது ஒவ்வாது' என்பது கருத்து. களவிற்புணர்ச்சியை மகிழ்ந்து வரைவு உடன்படான் கூறியவாறு.).

மணக்குடவர் உரை: ஒத்த காதலுடையார் இருவர்க்கும் இனிதாம்; காற்றால் இடை யறுக்கப்படாத முயக்கம். இது புணர்ச்சி விருப்பினால் கூறினமையால் புணர்ச்சி மகிழ்தலாயிற்று. இது குறிப்பினால் புகழ்ந்தது.

அதாவது, காற்றுகூட இடையறுத்துச் செல்ல முடியாதபடிக்கு உடலால் இணைந்து தழுவிக்கிடப்பதே காதலர்க்கு என்றென்றும் சுகமாம். எப்படி இருக்கிறது விளக்கம்?. வள்ளுவர் என்ன காதலர்களுக்கு செக்ஸ் பாடமா நடத்துகிறார்?. வள்ளுவர் சொல்லாவிட்டால் காதலர்க்கு செக்ஸ் பற்றி தெரியாதா?. காதல் செய்யும் இருவர்க்கு காதலின் இலக்கணத்தைச் சொல்லித் தராமல் கலவியின் இலக்கணத்தையா வள்ளுவரைப் போன்ற ஆன்றோரும் சான்றோரும் கற்றுத் தருவார்கள்?. இக் காலத்தில் காதலர் பலர் காதலிக்கும்போதே உடலுறவு கொள்கின்றனர். அதைப்போலவே அக் காலத்திலும் காதலர்கள் செய்திருப்பார்கள் என்று நாமாக நினைத்துக்கொண்டு இப்படி ஒரு தவறான விளக்கம் கூறுவது முறையாகுமா?. இப்படிப்பட்ட விளக்கங்களைப் படிக்கின்ற நல்ல காதலர்கள் கூட, ' வள்ளுவரே சொல்லிவிட்டார், இனி நமக்கென்ன ' என்று தவறிழைக்கத் துவங்கி விடுவார்களே. உண்மையைச் சொன்னால், இக் காலத்தில் இதுபோன்ற தவறான உடலுறவுகள் பெருகிப் போனதன் காரணமும் இத்தகைய தவறான விளக்கமே.

தமிழ் சினிமா வந்த புதிதில் எடுக்கப்பட்ட படங்களில் காதலனும் காதலியும் தூரமாகத் தள்ளி இருந்தே காதலிப்பார்கள். ஒருவரையொருவர் கண்களால் பார்த்துப் பேசிக்கொள்வதும் காதலியைக் காதலன் பாராட்டுவதும் காட்டப்பட்டிருக்கும். திருமணமாகும்வரை, அவர்கள் ஒருவருக்கொருவர் விரல்நுனியால் தொட்டுக் கொள்வதைக் கூட காணமுடியாது. எம்.கே. தியாகராஜ பாகவதரின் ' வதனமே சந்த்ர பிம்பமோ' என்ற காதல் பாடலை இதற்கொரு காட்டாகக் கொள்ளலாம். இலக்கியங்களின் வழிவழியாக சொல்லப்பட்டு வந்த காதலின் இலக்கணத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டியிருப்பார்கள். ஆனால் இன்றைய திரைப்படங்களில் காதலின் நிலை என்ன என்று சொல்லத் தேவையில்லை. அனைவருக்கும் அப்பட்டமாகத் தெரிந்த ஒன்றுதான். 

அதுமட்டுமல்ல, இக் குறளானது புணர்ச்சிமகிழ்தல் என்ற அதிகாரத்தின் கீழ் காதலர்க்கு காதலின் சிறப்பை உணர்த்த வருவதாகும். பல கட்டுப்பாடுகளையும் தடங்கல்களையும் மீறி காதலர் இருவர் சந்தித்துக் கொள்கின்றனர். அப்போது ஒருவருக்கொருவர் ஆசைதீரக் கண்டு எப்படியெல்லாம் மனதுக்குள் மகிழ்கின்றனர் என்பதை அழகாக அவர்களது அக உணர்வுகளின் வழியாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் வள்ளுவர். ஆனால், முயக்கு என்ற ஒரே ஒரு சொல்லுக்குத் தவறான பொருளை அகராதிகள் கற்பித்ததன் விளைவாக, வள்ளுவர் வரைந்திருந்த அந்த அழகோவியம் அழிக்கப்பட்டு அலங்கோலம் ஆகிவிட்டிருக்கிறது. முயக்கு என்பதற்கு தழுவுதல் எனப் பொருள்கொண்டால், அது என்ன காற்று இடையறுத்துச் செல்ல முடியாத ஒரு தழுவல்?. இருவரும் கைகளை நெகிழ்த்தாமல் ஒருவருக்கொருவர் இறுக்கிக் கட்டிப் பிடித்திருப்பதா?. இறுக்கிக் கட்டிப்பிடித்தபடி எவ்வளவு நேரம்வரை இருக்கமுடியும்?. கொஞ்சநேரம் அப்படி இருந்தாலே இருவருக்கும் வேர்த்து விறுவிறுத்துவிடும்; மூச்சும் முட்டிவிடும். இதில் எங்கே இன்பம் காண்பது?. துன்பம் தான் !.

இதோ இதே மாதிரியான ஒரு விளக்கத்தினை கீழ்க்காணும் குறளுக்கும் கொடுத்திருக்கிறார்கள் உரையாசிரியர்கள்.

முயக்கிடை தண்வளி போழ பசப்புற்ற
பேதை பெருமழைக் கண் - குறள் 124:9

மு.வ உரை: தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) முயக்கிடைத் தண் வளி போழ - அங்ஙனம் கைகளை ஊக்குதலான் அம் முயக்கிடையே சிறுகாற்று நுழைந்ததாக; பேதை பெருமழைக்கண் பசப்புற்ற - அத்துணையிடையீடும் பொறாது, பேதையுடைய பெரிய மழைக் கண்கள் பசப்புற்றன; அத்தன்மையவான கண்கள், மலைகளும் காடும் நாடுமாய இவ்விடையீடுகளையெல்லாம் யாங்ஙனம் பொறுத்தன? (தண்மை - ஈண்டு மென்மைமேல் நின்றது. 'போழ' என்றது, உடம்பு இரண்டும் ஒன்றானது தோன்ற நின்றது. மழை - குளிர்ச்சி).

மணக்குடவர் உரை: யான் பிரிவதாக நினைத்து முயக்கத்தின்கண்ணே எனது உடம்பை அகற்ற, அம்முயக்கிடையே சிறு காற்று ஊடறுத்தலானே எனது நீக்கத்தைப் பொறாது பேதையுடைய பெருத்த குளிர்ந்த கண்கள் பசப்புற்றன. இது முதலாக மூன்று குறள் தலைமகன் கூறுவன.

அதாவது, தழுவிக் கிடந்த காதலர்க்கிடையில் குளிர்காற்று வீசியதும் காதலியின் கண்களின் நிறம் மாறியதாம். என்ன ஒரு விளக்கம்?!!!. பசப்பு என்பதற்கு நிறமாற்றம் எனப் பொருள்கொண்டு, காதலியின் கண்கள் உடனுக்குடன் நிறம் மாறுவதாகப் பொருள்கூறி இருப்பது இயல்புக்கு முரணான ஒரு கருத்தாகும். ஏனென்றால், பச்சோந்தி கூட தனது முழு உடலைத்தான் நிறம் மாற்றிக் கொள்ளும். ஆனால், இங்கே காதலியின் கண்கள் மட்டும் நொடிக்கொருமுறை நிறம் மாறுவதாகக் கூறுவது அறிவுக்கும் சரி அறிவியலுக்கும் சரி புறம்பான ஒன்றேயாகும். அடுத்து, இக் குறளுக்கான விளக்க உரையில் உள்ள முக்கியமான தவறைப் பார்க்கலாம்.

முயக்கு என்பதற்கு தழுவுதல் எனப் பொருள்கொண்டால், காதலனும் காதலியும் ஒருவரையொருவர் தமது கைகளால் மற்றவர் உடலை ஆரத் தழுவி இருக்கவேண்டும். இந்நிலையில், காதலனின் கைகள் சற்று நெகிழ்ந்தாலும், காதலியும் தனது கைகளை நெகிழ்த்தாலொழிய அங்கே குளிர்ந்துகாற்று இடைபுகுந்து செல்ல முடியாதல்லவா?. காதலன் தன்னைவிட்டுப் பிரிந்துசெல்வதை விரும்பாத எந்தக் காதலியும் தனது கைகளை மேலும் இறுக்கிக் கொள்வாளே ஒழிய நெகிழ்த்த விரும்பமாட்டாள். அப்படி அவள் விரும்பியே நெகிழ்த்தியிருக்கும் பட்சத்தில், ஏன் அவள் கண்கலங்கி வருந்தி அழவேண்டும்?. இது முன்னுக்குப் பின் முரணாக உள்ளதல்லவா?. இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய கருத்து யாதெனில், முயக்கு என்பது ஒருபோதும் தழுவுதலாக இருக்க வாய்ப்பில்லை என்பதுதான். இக் கருத்துக்கு அரணாக உள்ள வேறு சில குறள்களையும் கீழே காணலாம்.

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு - குறள் 119:6

மு.வ உரை: விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் ‌சோர்வைப் பார்த்து பசப்பு காத்திருக்கின்றது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் - விளக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இருளே போல்; கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - கொண்கன் முயக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இப்பசப்பு. ('பார்க்கும்' என்பன இலக்கணைச் சொல். 'முன் பிரியாதிருக்கவும் தனக்கு அவகாசம் பார்த்து வரும் பசப்பு, பிரிவு பெற்றால் என் செய்யாது'? என்பாம்.).

மணக்குடவர் உரை: விளக்கினது இறுதிபார்க்கும் இருளே போலக் கொண்கன் முயக்கினது இறுதிபார்த்து நின்றது பசப்பு. இஃது அவர் பிரிந்தது இப்பொழுது; இப்பசப்பு யாங்ஙன் வந்தது என்று தோழிக்குத் தலைமகள் கூறியது.

இக் குறளில் இருளை பசப்புடனும் விளக்கொளியினை முயக்குடனும் உவமைப்படுத்திக் கூறியிருக்கிறார் வள்ளுவர். இருளானது விளக்கொளியினை எப்படி மறைக்குமோ அதைப்போல பசப்பானது முயக்கினை மறைக்கும் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். இதில் முயக்கு என்பதற்கு அகராதிகள் கூறுகின்ற தழுவுதல் என்ற பொருளைக் கொண்டால், ' பசப்பானது தழுவுதலை மறைக்கும் ' என்று பொருள்படும். ஆனால், உண்மையில் அவ்வாறு நிகழாது என்பதால் இப் பாடலில் வரும் முயக்கு என்பதற்கும் தழுவுதல் என்ற பொருள் பொருந்தாது என்பதனை அறிந்துகொள்ளலாம். அத்துடன் மேலே நாம் கண்ட குறளைப் போலவே இக் குறளிலும் காதலனின் முயக்கு நீங்கியதும் காதலியின் கண்கள் கலங்குவதாகக் கூறப்படுவதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். 

அடுத்து, விளக்கொளி நீங்கியதும் இருள் சூழ்வதைப் போல, தலைவனின் தழுவல் நீங்கியதும் அவளது மேனியின் நிறம் மாறியதாம். எப்பேர்ப்பட்ட விளக்கம்?!!!. இதிலும் பாருங்கள், பசப்பு என்பதற்கு நிறமாற்றம் எனப் பொருள்கொண்டு, தலைவியின் உடல் நிறம் நொடிக்கொருமுறை மாறுவதாக உரை கூறி இருக்கிறார்கள். தலைவி என்ன மனிதப் பிறவியா இல்லை வேற்றுக் கிரகத்து வாசியா?. எப்படி இருந்தாலும், இப்படி அடிக்கடி நிறம் மாறுகின்ற உடலை உடையவர்கள் வேற்றுக் கிரகத்தில் இருப்பதாகக் கூட கேள்விப்பட்டதில்லை !!!. இதிலிருந்து, காதலியின் உடல் நிறம் மாறுவதாகக் கூறியிருப்பது இயல்புக்கு முரணான ஒன்றென்று அறியலாம். அடுத்து இன்னொரு குறள்:

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. - 1107.

மு.வ உரை: அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுந்து கொடுத்து உண்டாற் போன்றது.

பரிமேலழகர் உரை: (இவளை நீ வரைந்துகொண்டு உலகோர் தம் இல்லிருந்து தமது பாத்துண்ணும் இல்லறத்தோடு படல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது ) அம்மா அரிவை முயக்கம் - அழகிய மாமை நிறத்தையுடைய அரிவையது முயக்கம்; தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்று - இன்பம் பயத்தற்கண் தமக்குரிய இல்லின்கண் இருந்து உலகோர் தம்தாளான் வந்த பொருளைத் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்கட்குப் பகுத்துத் தம் கூற்றை உண்டாற் போலும். (தொழில் உவமம். 'இல்லறஞ்செய்தார் எய்தும் துறக்கத்து இன்பம் எனக்கு இப்புணர்ச்சியே தரும்' என வரைவு உடன்படான் கூறியவாறாயிற்று).

மணக்குடவர் உரை: தம்மிடத்திலேயிருந்து, தமது தாளாண்மையால் பெற்ற பொருளை இல்லாதார்க்குப் பகுத்து உண்டாற்போலும், அழகிய மாமை நிறத்தினையுடைய அரிவை முயக்கம்.

வள்ளுவரின் மாண்பினை இழிவுசெய்யும் விதமாகக் கூறப்பட்டிருக்கும் உரைவிளக்கங்களில் இதுவும் ஒன்றாகும். அதாவது, காதலன் தனது காதலியிடம் பெற்ற உடற்சுகத்தினைத் தனது தோழனிடம் கூறுவதாக உரையாசிரியர்கள் பொருள் உரைத்துள்ளனர். இது வள்ளுவரின் மாண்புக்கு ஒருபோதும் அரணாகாது; முரணே ஆகும். காதலிக்கும் இருவர் திருமணமாகும் வரையிலும், ஒருவரையொருவர் தொட்டுக் கொள்வதே தவறென்று கூறும் வள்ளுவம், இப்படி ஒரு கருத்தினை தமிழ்ச் சமுதாயத்திற்கு எடுத்துரைக்குமா?. வள்ளுவர் காலத்தில் இருந்த தமிழ்ச் சமுதாயத்தின் நிலை இதுதானென்றால், இன்று நமது சமுதாயம் இது போன்ற தவறான உடலுறவுக்கு ஏன் மறுப்பு சொல்லவேண்டும்?. நமது முன்னோர்கள் இயற்றிய பண்பாடே தவறானதென்றால், இன்றைய நமது நாகரிகமும் மேலைநாட்டாரது போன்று திருமணத்திற்கு முன்பான உடலுறவினை அனுமதித்து இருக்க வேண்டுமே. ஆனால், நமது சமுதாயம் அப்படிச் செய்யவில்லை என்பதிலிருந்தே வள்ளுவர் காலத்திலும் அத்தகைய உடலுறவுகள் நிகழ்ந்திருக்கவில்லை என்பதையும் வள்ளுவரும் அத்தகைய ஒரு தவறான பண்பாட்டினை தமது பாடல்களில் சுட்டிக் காட்டவில்லை என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

அதுமட்டுமின்றி, பலருடன் உணவினைப் பகிர்ந்துண்ணும் நிகழ்வினை காதலியுடன் கொண்ட உடலுறவுக்கு ஒப்பிட்டுக் கூறி இருக்கிறார்கள் உரையாசிரியர்கள். இது காதலிக்கோ காதலனுக்கோ எவ்விதத்திலாவது பெருமை சேர்க்குமா?. இல்லை இதை ஒரு பாடலாக வடித்தெழுதும் புலவருக்குத் தான் புகழ் சேர்க்குமா?. அதுமட்டுமின்றி, இக் கருத்தானது, காதலியை பலருடன் உறவுகொள்ளும் ஒரு விலைமாதுவாகக் கருதவும் இடமளித்து விடுகிறதே. இப்படி ஒரு இழிவான உரை எழுதும் முன்னர், ஏன் இவர்கள் சிந்திக்கவில்லை என்பது புரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் புரிகிறது. புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்தில் வரும் புணர்ச்சி என்பதற்கு உடலுறவு என்று தவறாகப் பொருள் கொண்டதே இதுபோன்ற இழிவான விளக்க உரைகளுக்கு அடிகோலி இருக்கிறது. இதுபோல இன்னும் பல தவறான விளக்கங்கள் இருக்கின்றன. அவற்றை நிறுவுதல் பகுதியில் விரிவாக, காணலாம். அதற்குமுன், முயங்கு, முயக்கு, முயக்கம் ஆகிய சொற்கள் குறிக்கும் புதிய பொருட்கள் எவையென்று கீழே காணலாம்.

முயக்கு / முயக்கம் / முயங்கு - புதிய பொருள் என்ன?

முயக்கம், முயக்கு, முயங்கு ஆகிய சொற்கள் குறிக்கும் புதிய பொருட்கள் எவை என்று இங்கே காணலாம்.

முயங்கு = பார்
முயக்கு / முயக்கம் = பார்வை

பார்வை என்று வெறுமனே சொன்னாலும் இது காதல் கலந்த பார்வையினையோ அன்பு கலந்த பார்வையினையோ தான் குறிக்கும். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்துக் கொள்ளும் காதல் பார்வையில் கட்டுண்டு காதலனும் காதலியும் மெய்ம்மறந்து நிற்பர். இதனையே முயக்கு என்றும் முயக்கம் என்றும் குறள் கூறுகிறது. காதலர்கள் தம் ஏக்கம் தீர ஒருவருக்கொருவர் ஆரக்கண்டு மகிழ்தல் என்றும் இதற்குப் பொருள்கொள்ளலாம். முயக்கிலும் உண்மை முயக்கம், பொய்ம்மை முயக்கம் என்று இருவகை உண்டு. பொருட்பெண்டிரான விலைமாதரின் கண்கள் வீசும் காதல் பார்வையானது பொய்ம்மை முயக்கமாகும். ஏனையவை உண்மை முயக்கமாகும். 

நிறுவுதல்:

முயங்கு, முயக்கு, முயக்கம் என்பனவற்றுக்கு புதிய பொருட்கள் எவ்வாறு பொருந்தும் என்று இங்கே காணலாம்.

முயங்கு, முயக்கு, முயக்கம் ஆகிய மூன்று சொற்களுக்குமான ஒரே வேர் ' முய் ' என்பதாகும். இவற்றுக்கு மட்டுமின்றி, முயல், முயற்சி போன்ற சொற்களுக்கும் முய் என்பதே வேராகும்.

இந்த முய் என்னும் வேர் குறிக்கும் பொருள் ' திறத்தல் ' ஆகும். இந்த வேரிலிருந்து பிற சொற்கள் எவ்வாறு தோன்றின என்பதையும் அவை எவ்வாறு அவற்றுக்கான பொருட்களைப் பெற்றன என்பதைப் பற்றியும் கீழே காணலாம்.

முய் ----> முயல் = கண் திறந்தவாறே பிறக்கின்ற விலங்கினம். இது ஆங்கிலத்தில் ஹேர் என்று அழைக்கப்படும்.

பாலூட்டிகள் இனத்தில் புதிதாகப் பிறக்கும் குட்டிகள் கண்ணை மூடிய நிலையில் பிறப்பதுதான் இயல்பான ஒன்றாகும். ஆனால், இந்த முயல் மட்டும் விதிவிலக்காகும். குட்டிகள் பிறக்கும்போதே கண் திறந்த நிலையில் இருக்கும். அதுமட்டுமின்றி, பிறந்த சில நிமிடங்களில் துள்ளிக் குதித்து ஓடத் துவங்கிவிடும். முயலின் இந்த சிறப்புப் பண்பே அதாவது பிறக்கும்போதே கண்திறந்து பார்த்துக்கொண்டே பிறக்கின்ற பண்பே அதற்கு முயல் என்ற பெயரைப் பெற்றுத்தந்தது எனலாம்.

முய் ----> முயங்கு = கண் திற அதாவது பார்.
முய் -----> முயக்கு / முயக்கம் = கண் திறந்து பார்த்தல் அதாவது பார்வை.
முய் -----> முயற்சி = செயலுக்கான முதல் திறப்பு.

இனி, முயக்கம், முயங்கு, முயக்கு ஆகிய சொற்கள் புதிய பொருட்களில் எவ்வாறு பொருத்தமாக அமைகின்றன என்பதைப் பாடல் விளக்கங்களுடன் காணலாம்.

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு - குறள் 111:7

தி.பொ.ச. உரை:: தனது இல்லத்திற்கு வந்த விருந்தினர்கள் தமது உணவுகளைத் தன்னுடன் பகிர்ந்து உண்டால் ஏற்படும் மகிழ்ச்சியினை, எனது அழகிய காதலியின் காதல் பார்வை எனக்குள் உண்டாக்கியது.

பொதுவாக, வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் வெறும் கையுடன் வந்து நமது வீட்டில் விருந்துண்டு செல்வது வழக்கம். ஆனால், இங்கே விருந்தினர்கள் அதுவும் நமக்கு மிகவும் பிடித்த விருந்தினர்கள் வீட்டுக்கு வரும்போதே சில உணவுகளைக் கொண்டுவருகின்றனர். அப்படிக் கொண்டுவந்த உணவுகளை வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்துண்கின்றனர். இது அவ் வீட்டில் உள்ளோருக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருமல்லவா?. அதைப்போல, காதலியானவள் தனது கண்களால் காதல் பார்வைவீசி காதலனின் கண்கள் வழியாக அவனது மனதுக்குள் விருந்தினராகப் புகுந்துவிடுகிறாள். புகுந்தவள் தனது காதல்மொழிகளை அவனுடனும் அவனது காதல்மொழிகளை தனக்குமாக பரிமாறிக்கொள்கிறாள். இதனால் களிபேருவகை கொள்ளும் காதலன் பின்னாளில் அதை நினைத்துப் பார்த்து அதனை தனது தோழனிடம் சொல்லி மகிழ்கிறான். காதலியின் காதல் பார்வை உண்டாக்கும் பேரின்பத்தை உணவினைப் பகிர்ந்துண்பதால் உண்டாகும் மகிழ்ச்சியுடன் ஒப்பிட்டதன் மூலம் வள்ளுவரின் நுண்மாண் நுழைபுலம் தெற்றென வெளிப்படுவதை அறியலாம்.

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பணம்தழீஇ அற்று - குறள் 92:3

தி.பொ.ச. உரை:: விலைமாதரின் பொய்யான காதல்பார்வையானது, இருட்டறையில் பிறரது பணத்தைத் திருடுவதற்கு ஒப்பானது.

ஒரு வீட்டில் திருடச் செல்லும் ஒருவன் அங்கே எரிந்துகொண்டிருந்த சிறுவிளக்கினை அணைத்து அறையினை இருட்டாக்கி விடுகிறான். காரணம், வீட்டில் உள்ளவர்கள் தன்னை பார்த்துவிடக் கூடாதென்று. பின்னர், பணம் இருக்கும் இடத்துக்குச் சென்று பணப்பெட்டியினைத் தழுவியவாறு வெளியேறிவிடுகிறான். இன்னொருவன் விலைமாதரிடம் இன்பம் துய்க்க வருகிறான். அங்கே விலைமாதுவானவள், தனது பொய்யான காதல் பார்வையினால் அவன் மனதுக்குள் புகுந்து அவனது அறிவு என்னும் விளக்கை அணைத்து அவனைச் சிந்திக்கவிடாமல் செய்துவிடுகிறாள் அதாவது அவனை வசியம் செய்துவிடுகிறாள். பின்னர் மிக எளிதாக அவனது பொருளைக் கொள்ளையடித்துச் சென்றுவிடுகிறாள். இந்த இருவரையும் இப் பாடலில் ஒப்புமைசெய்கிறார் வள்ளுவர். இங்கே வள்ளுவர் கூறும் உவமைநயங்கள் நினைந்து இன்புறத்தக்கவை.

திருடச்செல்பவன் எப்படி சிறுவிளக்கினை அணைத்து அறையினை இருட்டாக்குகிறானோ அதைப்போல விலைமாதரின் காதல் பார்வையானது தன்னை விரும்பியவரின் அறிவு விளக்கினை அணைத்து அறியாமை இருளை ஏற்றுகிறது.

பிறர்க்குரிய பணத்தினை திருடன் கைக்கொண்டு செல்வதைப் போல விலைமாதுவும் தன்னை விரும்பியவரின் பணத்தை விரும்பிக் கைப்பற்றிக் கொள்கிறாள். இக் குறட்பாவில் பிணம் என்று வருவது பாடவேறுபாடு. விலைமாதரின் காதல் பார்வை பற்றிக் கூறும் இன்னொரு குறளைக் கீழே பார்ப்போம். 

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு - குறள் 92:8

தி.பொ.ச. உரை: விலைமாதரின் காதல் பார்வையானது நீங்காத மையல்நோயாகும் என்னும் உண்மையினை ஆராயும் அறிவுடையோரன்றி பிறர் அறியமாட்டார்.

இதுவும் முன்னர் சொன்ன குறள் விளக்கத்துடன் தொடர்புடையதுதான். விலைமாதரின் காதல் பார்வையானது அறிவு விளக்கினை அணைத்து அறியாமை இருளை ஏற்றுமென்று முன்னர் கண்டோம். இதனால் தனது சிந்திக்கும் திறனை இழந்து விலைமாதரின் வசியத்திற்கு ஆளாக, அது ஒரு தீராத மையல்நோயாக மாறுகிறது. இதனையே அணங்கு என்று குறித்தார் வள்ளுவர். இந் நோயின் வாய்ப்பட்டோர் மீண்டும் மீண்டும் அவ் விலைமாதரையே நாடி அனைத்தையும் இழந்து இழிநிலை அடைவர். இதற்கு ஒரு காட்டாக, சிலப்பதிகார நாயகனாம் கோவலனைச் சொல்லலாம். மாதவி என்னும் கணிகையின் வசப்பட்டு தனது மதியழிந்து அனைத்தையும் இழந்த கதை நாடறியும். விலைமாதரின் காதல் பார்வையில் விழுந்தால் அதோ கதிதான் என்னும் உண்மையினை அறிந்துகொள்ள ஆராயும் அறிவு வேண்டும் என்று கூறுகிறார் வள்ளுவர். காரணம், அது இருந்தால்தான் அவரது பார்வையில் இருந்து தப்பிக்கவே முடியும் என்றும் அது இல்லாவிட்டால் அப் பார்வையினைச் சந்தித்துத் தன்னை இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கிறார்.

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு - குறள் 119:6

தி.பொ.ச. உரை: விளக்கின் ஒளி அணைவதனை எப்படி இருளானது எதிர்பார்த்துக் கொண்டுள்ளதோ அதைப்போல காதலனின் காதல்பார்வை ஒளி அணைவதை கண்ணீரானது எதிர்பார்த்துக் கொண்டுள்ளது.

காதலனும் காதலியும் காதல் பார்வையினால் கட்டுண்டு இருக்கின்றனர். இருவரும் கண்களாலேயே காதல்மொழி பேசிக்கொண்டு மகிழ்ந்தவாறு இருக்கின்றனர். திடீரென்று காதலனின் பார்வை அணைகிறது. அதாவது எதற்காகவோ காதலன் சிறிதுநேரம் தனது கண்ணை மூடுகிறான். ஒருசில இமைப்பொழுது நேரம் மூடியிருப்பான். கண் திறந்து பார்த்தால் காதலியின் கண்களில் கண்நீர் கோர்த்து முட்டிக்கொண்டு நிற்கின்றது. ' அட, என்ன பெண் இவள். ஒரு இமைப்பொழுது நேரம் கூட எனது பார்வை அவள் கண்ணைவிட்டு விலகுவதைத் தாங்க மாட்டாதவளாய் இருக்கிறாளே. விளக்கின் ஒளி எப்போது அணையும் என்று இருள் காத்துக்கிடப்பதைப் போல எனது காதல் பார்வை எப்போது அகலும் என்று இவளது கண்ணீர் இவள் கண்ணை மறைக்கக் காத்திருக்கிறதே.' என்று காதலியின் அன்பு குறித்துப் பெருமை கொள்கிறான் காதலன். இப் பாடலில் வள்ளுவர் காட்டும் உவமை நயங்கள் அருமையானவை.

விளக்கினை கண்ணுக்கும்
விளக்கின் ஒளியினை காதல் பார்வை ஒளிக்கும் (கண்ணொளிக்கும்)
இருளை கண்ணீருக்கும்

ஒப்புமை செய்கிறார் வள்ளுவர். பசப்பு என்பது கண்ணீரைக் குறிக்கும் என்று ' பசப்பு என்றால் என்ன? ' என்ற கட்டுரையில் முன்னரே கண்டுள்ளோம். இனி அடுத்த குறளைக் காணலாம்.

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு - குறள் 111:8

தி.பொ.ச. உரை: காற்று இடைபுகுந்து வீசினாலும் திசைமாறாத காதல்பார்வையே காதலர் இருவருக்கும் இனிமை பயப்பதாகும்.

காதல் வயப்பட்டு காதல் பார்வையில் கட்டுண்டு மெய்ம்மறந்து நிற்கும் காதலர்க்கு இனிமை தருவது எது என்று இப் பாடலில் கூறுகிறார் வள்ளுவர். காற்று எங்கும் எப்போதும் வீசிக் கொண்டிருப்பதுதான். காதல் பார்வையில் மெய்ம்மறந்து இருக்கும்போது காதலரின் கண்களுக்கு இடைப்பகுதியிலும் காற்று வீசும் தான். இக் காற்றானது திடீரென பெருங்காற்றாகவும் வீச வாய்ப்புண்டு. அப்படி பெருங்காற்றாக வீசினாலும் காதல் பார்வையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாதிருப்பதே காதலர்க்கு இனிமை பயப்பதாகும் என்கிறார் வள்ளுவர். காரணம், காதல் பார்வை என்பது சாதாரணமான வெளிப்பார்வை அன்று. காதலியின் கண்ணின் ஒளி காதலனுக்குள்ளும் காதலனின் கண்ணொளி காதலிக்குள்ளும் சென்று தமது காதல்மொழிகளை தத்தம் உள்ளங்களுக்கிடையே பரிமாறிக் கொள்கின்ற ஓர் அகப்பார்வை ஆகும். இப்படிப்பட்ட வலிமையான காதல்பார்வைக்கு அவர்களுடைய காதலும் உண்மையானதாய் வலிமைமிக்கதாய் இருக்கவேண்டும். 

முயக்கிடை தண்வளி போழ பசப்புற்ற
பேதை பெருமழைக் கண் - குறள் 124:9

தி.பொ.ச. உரை: காதல் பார்வைக்கிடையே குளிர்காற்று வீசி திசைமாற்றிடப் பொறுக்காத அவளது மையுண்ட கண்கள் நீரேந்தி நின்றன.

இதுவும் மேற்சொன்ன குறளுடன் தொடர்புடையதே. காதல் பார்வையில் கட்டுண்டு களித்துக் கிடக்கும்போது, திடீரென்று இவர்களது கண்களுக்கு இடையில் புகுந்து குளிர்காற்று வீசிட, குளிர்ச்சியினால் கண்கள் சில இமைப்பொழுது மூடித் திறக்கின்றன. இந்த கணநேரப் பிரிவைக் கூடத் தாங்கமாட்டாத காதலியின் கண்கள் கலங்கி நீர்கொண்டு நிற்கின்றனவாம். என்னே ஒரு காதல்!. என்ன ஒரு காதலி!!. இங்கும் பசப்பு என்பது கண்ணீரையே குறிக்கும்.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின் - குறள் 133:10

தி.பொ.ச. உரை: காதலர்கள் முகம்பார்த்துக் கொள்ளாமல் ஊடல்கொள்வது காதலர்க்கு இன்பம் சேர்ப்பதுதான். இருந்தாலும், காதலர்கள் ஒன்றுகூடி காதல்பார்வையில் ஒருவர்க்கொருவர் கட்டுண்டு இருப்பது ஊடலைவிட இன்பம் தருவதாகும்.

பொதுவாக, ஊடல் என்பது காதலர்கள் ஒருவருக்கொருவர் முகம்பார்த்துக் கொள்ளாமலும் பேசிக்கொள்ளாமலும் இருப்பதையே குறிக்கும். இது எப்படி காதலர்க்கு இன்பத்தைக் கொடுக்கும் என்றால் அவர் எப்போது என்னைப் பார்ப்பார் என்று காதலி ஏங்குவதும் அவள் எப்போது என்னைக் காண்பாள் என்று காதலன் ஏங்குவதுமாய் இருவருக்குள்ளும் ஒரு ஏக்கமும் எதிர்பார்ப்புடன் திரும்பிப் பார்ப்பதுமாய் ஒருவகையான இன்பத்தைத் தரும். ஆனால் இதைவிட இன்பம் தருவது காதலர் இருவரும் ஒருவருக்கொருவர் முயங்கிக் கொள்வதுதான். அதாவது காதலர் இருவரும் ஒருவருக்கொருவர் ஆசைதீரக் கண்களால் கண்டு காதல் பார்வையில் கட்டுண்டு மெய்ம்மறந்து நிற்றலே காதலர் இருவருக்கும் அதிக இன்பதைத் தரும் என்று கூறுகிறார் வள்ளுவர்.

முயங்கிய கைகளை ஊக்க பசந்தது
பைந்தொடி பேதை நுதல் - குறள் 124:8

தி.பொ.ச. உரை: காதல் பார்வையின் ஒளியினை சற்றே அசைக்கவும், அழகிய தொடியணிந்த என் காதலியின் கண்கள் கலங்கின.

இதுவும் முன்னர் கண்ட குறள்களுடன் தொடர்புடையதே. காதலர்கள் இருவரும் காதல் பார்வையில் கட்டுண்டு இருக்கும்போது, காதலன் தனது காதல் பார்வையினை அதாவது கண் ஒளியினை சற்றே அசைத்திட, அதைக்கண்ட காதலியின் கண்கள் காதலன் தன்னைப் பிரியப் போகிறானோ என்றெண்ணிக் கலங்கினவாம்.

முயக்கம் என்பது உடலைத் தழுவுதல் என்ற பொருளைத் தரும் என்று உரையாசிரியர்கள் முடிவு செய்யக் காரணம் இக் குறளில் வரும் கை என்ற சொல்லே. இப் பாடலில் வரும் கை என்ற சொல்லுக்கு கரம் (உடலுறுப்பு) என்ற பொருளைக் கொண்டதே முயக்கம் என்பதற்கு உடலைத் தழுவுதல் என்ற பொருளைக் கொள்ள ஏதுவாயிற்று எனலாம். ஆனால், இச் சொல்லுக்கு நாம் இக் குறளில் கொள்ளவேண்டியது ' ஒளிக்கதிர் (கிரணம்) ' என்ற அகராதிப் பொருளேயாகும். மேலும், இக் குறளில் வரும் நுதல் என்பது கண்ணையும், தொடி என்பது கண்விளிம்பில் பூசும் அணியினையும் குறிக்கும் என்று முன்னர் கட்டுரைகளில் ஏற்கெனவே கண்டுள்ளோம்.

முடிவுரை:

இதுகாறும் கண்டவற்றில் இருந்து திருக்குறளில் வரும் முயங்கு, முயக்கம், முயக்கு ஆகிய சொற்களுக்கு அகராதிகள் காட்டும் பொருட்கள் பொருந்தாது என்றும் புதிய பொருட்களே பொருந்தும் என்றும் பல ஆதாரங்களுடன் அறிந்துகொண்டோம். திருக்குறளில் மட்டுமின்றி, ஏனை இலக்கியங்களிலும் பல இடங்களில் அகராதிப் பொருட்கள் பொருந்தாத நிலையே காணப்படுகின்றது. இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் விளக்கமாகக் காணலாம்.

மேலும், பார்த்தல் என்ற வினை குறித்து பேச்சுவழக்கில் வழங்கப்படும் முழித்தல் என்ற சொல்லுக்கும் முய் என்ற வேருக்கும் தொடர்பிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

முய் ----> முயி ------> முழி = கண் திற, பார்.

8 கருத்துகள்:

  1. தங்களின் இந்த சீரிய பணியின் முடிவான இந்த தமிழ்பொருள்கள் தமிழ் அகராதியில் இணைக்க என்ன முயற்சிகள் மேற்கொண்டீர்கள்.அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என அறியலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடந்த 2 ஆண்டுகளாக முயன்றுகொண்டுதான் இருக்கிறேன். இன்னும் முடிந்த பாடில்லை. இருந்தாலும் எனது போராட்டம் தொடரும். :))

      நீக்கு
    2. போராட்டம் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்; வேறு ஏதேனும் புற உதவிகள் தேவைப்படுமா? தனித்து முடியுமேயானாலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

      நீக்கு
  2. முலை- துளைத்துக் கொண்டு வருவது.(உம்.)
    கண்,விதையிலிருந்து மண்ணை துளைத்து வரும் செடி.

    முளை- மூடிய பகுதியுடன் துரித்துக் கொண்டு இருப்பது.(உம்.)மார்பகம்,கையுறையில் உள்ள விரல்கள். என புரிந்து நான் கொள்கிறேன்.இந்த உதாரணம் சரிதானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முளை - 'முள்' வேர் - உரிய பருவத்தில் முந்திக்கொண்டு தோன்றி வளர்வது. சான்று: பயிரின் முளை, பெண்களின் மார்பகம்.

      முலை - முல் வேர் - ஒளிரும் தன்மை கொண்டது. சான்று: கண்கள், முல்லை மலர்.

      நீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.