வெள்ளி, 29 ஜூலை, 2016

முறுவல் என்றால் என்ன?


முன்னுரை:

சங்ககாலம் தொட்டு இன்றுவரையிலும் பயின்றுவரும் பல தமிழ்ச் சொற்களுள் ' முறுவல் ' என்ற சொல்லும் ஒன்றாகும். இச் சொல்லுக்குப் பல பொருட்களை இன்றைய தமிழ் அகராதிகள் வழங்கினாலும், அவற்றில் ஒன்றுகூட பொருந்தாத நிலை இலக்கியங்களில் பல இடங்களில் காணப்படுகிறது. இது இச்சொல்லுக்குப் புதியதோர் பொருள் இருப்பதையே காட்டுகிறது. இச் சொல்லுக்கான புதிய பொருள் என்ன என்பதைப் பற்றியும் அது எப்படி பொருந்துகிறது என்பதைப் பற்றியும் இக் கட்டுரையில் மிக விரிவாக ஆதாரங்களுடன் காணலாம்.

முறுவல் - அகராதிகள் காட்டும் பொருட்கள்:

முறுவல் என்ற சொல்லுக்கு இற்றைத் தமிழகராதிகள் காட்டும் பொருட்களைக் கீழே காணலாம்.

முறுவல் muṟuval, n. 1. Tooth; பல். முத்த முறுவல் (குறள், 1113). 2. Smile; புன்னகை. புதியதோர் முறுவல் பூத்தாள் (கம்பரா. சூர்ப்ப. 5). 3. Happiness; மகிழ்ச்சி. பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல் (தொல். பொ. 111). 4. An ancient treatise on dancing, not extant; இறந்துபட்டதொரு பழைய நாடகத்தமிழ் நூல். (சிலப். உரைப்பாயிரம், பக். 9.) n. Lettuce-tree, laughing tree; இலச்சைகெட்டமரம். (L.)

பொருள் பொருந்தா இடங்கள்:

முறுவல் என்னும் சொல்லுக்கு அகராதிகள் காட்டும் மேற்காணும் பொருட்களில் எதுவுமே பொருந்தாத பல இலக்கிய இடங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே ஆதாரங்களுடன் காணலாம்.

பெண்களின் முறுவலைக் கீழ்க்காணும் பொருட்களுடன் ஒப்பிட்டுப் பல பாடல்கள் உள்ளன.

கடல் முத்து - 18+ பாடல்கள்
முல்லைப்பூ மொக்கு - 7+ பாடல்கள்
நிலவு - 6+ பாடல்கள்
மணி (பளிங்கு) - 4+ பாடல்கள்
முளை (மூங்கில்) காய் - 3+ பாடல்கள்
வெள்ஆம்பல் மொக்கு -  2+ பாடல்கள்
குலிகம் (இலுப்பை)ப் பூமொக்கு - 1 பாடல்

மேற்காணும் பொருட்களை நோக்கினால், அவற்றில் பலவும் வெண்மை நிறத்தவை என்பதுடன் உருண்டு திரண்ட வடிவமும் ஒளிரும் தன்மையும் கொண்டவை என்பது புலப்படும். பெண்களின் முறுவலை மேற்காணும் பொருட்களுடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பதில் இருந்து, பெண்களின் முறுவலுக்கும் இத்தகைய பண்புகள் உண்டென்பது உறுதியாகிறது. இந்நிலையில்,

பெண்களின் முறுவலுக்கு, அகராதிகள் கூறுகின்ற பல் (மென்று தின்ன உதவும் ஓர் அக உறுப்பு) என்ற பொருளைக் கொள்ள முடியுமா என்றால் முடியாது. காரணம், பல்லுக்கும் மேற்காணும் பொருட்களுக்கும் ( மூங்கில் காய் நீங்கலாக ) இடையே ஒரே ஒரு பண்பு தான் ஒத்திருக்கிறது. அது ' வெண்மை நிறம் ' மட்டுமே. பொதுவாக, ஓரே ஒரு ஒத்த பண்பினைக் கொண்டு அமைக்கப்படும் உவமைகள் பாடலுக்கோ புலவருக்கோ சிறப்பு சேர்க்காது. குறைந்தபட்சம் இரண்டு ஒத்த பண்புகளைக் கொண்டு அமைத்தாலன்றி, உவமைகள் சிறக்காது என்பதுடன் புலவருக்கும் பெருமை சேர்க்காது.

மேலும், முறுவலின் வெண்மை நிறத்தைச் சுட்டுவது மட்டுமே புலவரின் நோக்கமென்றால், வெண்மை நிறம் கொண்ட இயற்கைப் பொருளான பசும்பாலை உவமையாகக் காட்டியிருக்கலாம். பசும்பாலானது இயற்கையிலேயே நல்ல வெண்ணிறம் கொண்டதுடன் நாள்தோறும் மக்கள் பயன்படுத்துகின்ற பொருளும் கூட. ஆனால் புலவர்கள், ஒரு பாடலில் கூட முறுவலைப் பசும்பாலுடன் ஒப்பிட்டுக் கூறவில்லை. இதிலிருந்து முறுவலானது, வெண்மை நிறம் மட்டுமே கொண்ட பல் என்னும் பொருளில் பயன்படுத்தப் படவில்லை என்பது தெளிவாகிறது.

அடுத்து, பெண்களின் முறுவலை முளையுடன் அதாவது மூங்கில் காயுடன் ஒப்பிட்டும் புலவர்கள் பாடியுள்ளனர். ஆனால், மூங்கில் காய்க்கும் பல்லுக்கும் எந்தவொரு ஒப்புமையும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதிலிருந்தும் முறுவல் என்பது பல்லைக் குறிக்காது என்று தெளியலாம்.

இறுதியாக, பல் என்பது வாய்க்குள் அமைந்திருக்கும் ஒரு அக உறுப்பாகும். ஆண்கள் மகிழ்ச்சியில் வாய்விட்டுச் சிரித்து விடுவார்கள். ஆனால், சங்ககாலப் பெண்கள் எவ்வளவுதான் மகிழ்ச்சியாக இருந்தாலும் தமது பற்களெல்லாம் வெளியில் தெரியும் வண்ணம் சிரிக்கமாட்டார்கள். தமது மகிழ்ச்சியினை கண்களாலும் முகத்தினாலுமே வெளிப்படுத்துவார்கள். இதைப்பற்றிய கலித்தொகைப் பாடல் இதோ கீழே.

ஒண்நுதல் ஆயத்தார் ஓராங்கு திளைப்பினும்
முள் நுனை தோன்றாமை முறுவல் கொண்டு அடக்கி தன்
கண்ணினும் முகத்தினும் நகுபவள் பெண் - கலி -142

இதிலிருந்து, பெண்களைப் பொருத்தமட்டிலும் முறுவல் என்பதற்குப் பல் என்னும் பொருள் பொருந்தாது என்பதனை உறுதியாகக் கூறலாம். என்றால், முறுவல் என்னும் சொல் குறிக்கும் புதிய பொருள் என்ன என்று கீழே காணலாம்.

முறுவல் - புதிய பொருள்:

முறுவல் என்னும் சொல் குறிக்கும் புதிய பொருளானது ' கண் ' ஆகும்.

கண் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும், பெரும்பாலும் கண்விழியினையே குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நிறுவுதல்:

முறுவல் என்பதற்குக் கண் / கண்விழி என்ற பொருள் எவ்வாறு பொருந்தும் என்பதனைக் கீழே பல ஆதாரங்களுடன் காணலாம்.

பொதுவாக ஒரு சொல் குறிக்கும் பொருளை நன்கு விளங்கிக்கொள்ள, அப் பொருளுக்கு உவமையாகக் கூறப்படும் பிற பொருட்களின் பண்புகளை விளங்கிக் கொள்வது இன்றியமையாதது. ' உன் நண்பனைப் பற்றிச் சொல்; உன்னைப் பற்றிக் கூறுகிறேன் ' என்ற சொல்லாடலுக்கேற்ப, உவமானங்களின் அதாவது உவமையாகக் கூறப்படும் பொருட்களின் பண்புகளைக் கொண்டு உவமேயத்தின் அதாவது உவமிக்கப்படும் பொருளின் தன்மையினை நன்கு அறிந்துகொள்ளலாம். இதனால் உவமேயம் எதைக் குறிக்கிறது என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். அவ்வகையில், முறுவல் என்னும் சொல் எதைக் குறிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, முதலில் முறுவலுக்கு உவமையாகக் கூறப்படும் பொருட்களைப் பற்றி விரிவாக அறிந்துகொள்வது நலம் பயக்கும். பொதுவாக, இலக்கியங்கள் முறுவலுக்கு உவமையாகக் கீழ்க்காணும் பொருட்களைக் கூறுகின்றன.

கடல் முத்து - 18+ பாடல்கள்
முல்லைப்பூ மொக்கு - 7+ பாடல்கள்
நிலவு - 6+ பாடல்கள்
மணி (பளிங்கு) - 4+ பாடல்கள்
முளை (மூங்கில்) காய் - 3+ பாடல்கள்
வெள்ஆம்பல் மொக்கு -  2+ பாடல்கள்
குலிகம் (இலுப்பை)ப் பூமொக்கு - 1 பாடல்

இப் பொருட்களைப் பற்றி விரிவாகக் கீழே காணலாம்.

முறுவலும் முத்தும்:

பெண்களின் விழியினை கடலில் விளையும் முத்துடன் உவமைப்படுத்துவது இலக்கிய வழக்கம் தான். இதைப்பற்றி ' கண்ணகி மதுரையை எரித்தது எப்படி? என்ற ஆய்வுக் கட்டுரையில் முன்னரே விரிவாகக் கண்டுள்ளோம். அக் கட்டுரையில், பெண்களின் கண்ணை 'முலை' என்ற சொல்லால் குறித்து, அதனைக் கடல்முத்துடன் உவமைப்படுத்திக் கூறி இருப்பார்கள். இக் கட்டுரையில், பெண்களின் கண்ணை 'முறுவல்' என்று குறிப்பிட்டுள்ளார்கள். அவ்வளவு தான் வேறுபாடு. 

பொதுவாக, சிப்பியில் விளையும் முத்துக்கள் சிறியதும் பெரியதுமாய் பல அளவுகளில் இருக்கும். இவற்றில் ஆணி முத்து எனப்படுவதானது பெரிய அளவில் உருண்டு திரண்டு நல்ல வெண் நிறத்தில்  ஒளிரும் தன்மையுடன் விளங்குவதாகும். பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும்போது, அவர்களது உருண்டு திரண்ட கண் விழிகள் நல்ல வெண்ணிறத்தில் ஒளிவீசி அழகுடன் காணப்படும். இப்படி மகிழ்ச்சியுடன் இருக்கும் பெண்களின் அழகிய கண்விழிகளைத்தான் புலவர்கள் முத்துடன் உவமைப்படுத்திக் கூறியிருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, கடலில் விளையும் இயற்கை முத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தினை நோக்கினால் ஒரு ஆச்சரியம் உண்டாகும். அருகில் இதற்கான படம் இணைக்கப்பட்டுள்ளது. இப் படத்தைப் பார்த்தால், முத்தின் நடுவில் சிறிய கருமையான பகுதி இருப்பதையும் அதைச்சுற்றிலும் சில வளையங்கள் இருப்பதையும் காணலாம். இவ் அமைப்பானது அப்படியே மாந்தரின் கண்விழியின் அமைப்பினை ( அதாவது நடுவில் கருமையும் அதைச்சுற்றி வளையங்களும் முடிவில் வெள்ளைநிறமும் ) ஒத்திருப்பதை அறியலாம். இக் காரணங்களால்தான் தமிழ்ப் புலவர்கள் பெண்களின் கண்விழியினை கடல் முத்துடன் ஒப்பிட்டுக் கூறியிருக்கின்றனர். இனி, பெண்களின் விழிகளை முத்துடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்களில் சிலவற்றை மட்டும் இங்கே விளக்கங்களுடன் காணலாம்.

வீங்கு இறை பணை தோள் மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல்
பூங்குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழை கண் - நெடு - 36

இப்பாடலில் வரும் இறை என்பது கண்ணிமையினையும், தோள் என்பது கண்ணின் திரண்ட புறவிளிம்பினையும் குறிக்கும் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டுள்ளோம். இந்நிலையில், கண்ணின் அழகினைப் பாராட்டுவதாக அமைந்திருக்கும் இப்பாடலில் வரும் முறுவல் என்பதும் கண்ணையே அன்றி பல்லைக் குறித்துவர இயலாது அன்றோ.?

இதோ கீழ்க்காணும் பாடலிலும் அத்தகையதோர் அழகியலைக் காணலாம்.

மாரி வீழ் இரும் கூந்தல் மதைஇய நோக்கு எழில் உண்கண்
தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய் - கலி -131

இப் பாடலில் வரும் கூந்தல் என்பது கண்ணிமையினைக் குறிக்கும் என்று முன்னர் கட்டுரையில் கண்டுள்ளோம். கண்ணழகினைப் பாராட்டும் இப் பாடலிலும் முறுவல் என்பது கண்ணையே அன்றி பல்லைக் குறிக்க வாய்ப்பில்லை. அடுத்து, வள்ளுவர் காட்டும் முறுவலைக் காண்போம்.

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு - குறள்:1113

பொருள் விளக்கம்: மாந்தளிர் போன்ற கண்ணிமைகளையும், முத்துப் போன்ற விழிகளையும், மயக்குகின்ற காட்சி (கண் பார்வை) யினையும், வேல்போல கூர்மையாக மைதீட்டிய கண்களையும், மூங்கில்காய் போலத் திரண்ட கண் விளிம்புகளையும் உடையவள் அவள்.

இப் பாடலில் வரும் மேனி என்பது கண்ணிமையினையும், தோள் என்பது கண்ணின் திரண்ட புறவிளிம்பினையும் குறிக்கும் என்று முன்னர் கண்டுள்ளோம். முழுக்க முழுக்க காதலியின் கண்ணழகினைப் பாராட்டும் இப் பாடலில் வரும் முறுவல் என்பதற்கு கண்விழியெனப் பொருள்கொள்ளாமல் பல் என்று பொருள் கொண்டால் அது பொருந்தாமல் போவதுடன் நகைப்புக்குரியதும் ஆகிறது.!. இப் பாடலில் வரும் நாற்றம் என்பதற்கு காட்சி அல்லது பார்வை எனப் பொருள்கொள்வதே சாலச் சிறந்தது. இது எவ்வாறு பொருந்துமெனின்,

நாற்றம் என்பதற்கு தோற்றம் என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன. இதிலிருந்து, தோற்றம் = காட்சி = காட்சிக்குரிய பார்வை எனக் கொள்ளலாம்.

அடுத்து, சிந்தாமணியில் இருந்து ஒரு பாடலைக் காணலாம்.

தத்தும் நீர் பவளத்து உறை நித்திலம்
வைத்த போல் முறுவல் துவர் வாயினீர் - சிந்தா - 895

பொருள்விளக்கம்: கடலில் விளையும் செம்பவளத்தின் நடுவில் பொதிந்துவைத்த வெண்முத்தினைப் போலச் செவ்வண்ணம் பூசிய புறவிதழ்களின் நடுவில் வெண்ணிற ஒளிவீசும் விழியுடையீர்....

மேற்காணும் உவமையைச் சரியாகப் புரிந்துகொள்ள அருகில் உள்ள பவளத்தின் படத்தைப் பாருங்கள். இதில் கண்போன்று தோன்றும் பகுதியின் நடுவில் உள்ள நீலநிற முத்துப்போன்ற பகுதிக்கு பதிலாக வெண்ணிறமுத்து இருப்பதாகக் கொண்டால், அதைச் சுற்றியும் சிவப்பு வண்ணப் பகுதியிருக்க, இது பார்ப்பதற்கு பெண்களின் ஒளிவீசும் வெண்ணிற விழியும் அதைச் சுற்றியும் செந்நிறம் தடவிய பகுதியும் போலத் தோன்றுமன்றோ !.

அடுத்து கம்பராமாயணத்தில் இருந்தும் ஒரு பாடலைக் காண்போம்.

மூடுண்ட முறுவல் முத்தும் முள்ளுண்ட முளரிச் செங்கண் - கம்ப. யுத் - 3/4

பொருள்விளக்கம்: சிப்பிக்குள் மூடிய முத்துப் போலும் (இமைகளுக்கிடையிலான) விழியும் கூரிய செந்தாமரை மொக்குப்போலும் (செவ்வரி தீட்டிய) கடைக்கண்ணும்......

முறுவலும் பூக்களும்:

பெண்களின் முறுவலை முல்லை, ஆம்பல், குலிகம் (இலுப்பை) மலர்களுடன் ஒப்பிட்டுப் பல பாடல்களில் பாடியுள்ளனர் புலவர். அவ்வாறு அவர்கள் உவமைப்படுத்தியதன் காரணம் யாதெனில்,

பொதுவாக மேற்காணும் மலர் மொக்குகள் தோன்றும்போது வெண்ணிறத்தில் நன்கு உருண்டு திரண்டு காணப்படும்; மேலும் அவற்றுக்கு மலர்ச்சியும் தளர்ச்சியும் உண்டு. பெண்களின் கண்விழிகளும் அவ்வாறே; வெண்ணிறத்தில் உருண்டு திரண்டு காணப்படும் விழிகளுக்கு மலர்ச்சியும் தளர்ச்சியும் உண்டு. ஆனால் பற்கள் யாருக்கும் உருண்டு திரண்டு அமைவதில்லை என்பதுடன் இவற்றுக்கு மலர்ச்சியோ தளர்ச்சியோ இல்லை. எனவே, பெண்களைப் பொருத்தமட்டில், முறுவல் என்பது ஒருபோதும் பல்லைக் குறித்துவராது என்பதை உறுதியாக அறிந்துகொள்ளலாம்.

மலர்களில் முதலில் முல்லை மலர்பற்றிக் காணலாம். பொதுவாக, முல்லை என்னும் பெயர் பலவகை மலர்களைக் குறிக்கப் பயன்படுகிறது. காட்டுமல்லிகை, கொடிமல்லிகை, ஊசிமல்லிகை உட்பட பல மல்லிகை மலர்களையும் முல்லை என்ற பெயராலேயே குறித்து வந்துள்ளனர். இதைப்பற்றிச் சென்னைத் தமிழ்ப் பேரகராதியே கூறுகிறது.

 முல்லை mullai , n. [T. molla, K. molle, M. mulla.] 1. Arabian jasmine, m. sh., Jasminum sambac; கொடிவகை. முல்லை வைந்நுனை தோன்ற (அகநா. 4). 2. Trichotomus-flowering smooth jasmine, m.cl., Jasminum trichotomum; கொடி வகை. (L.) 3. Wild jasmine. See காட்டுமல் லிகை. (L.) 4. Eared jasmine. See ஊசிமல் லிகை, 1. (L.) 5. Pointed leaved wild jasmine, m. cl., Jasminum malabaricum; கொடிவகை. (L.)

இவற்றில் முதல்வகையாகக் காட்டப்படுகின்ற ஜாஸ்மினம் சம்பக் என்ற மல்லிகைப் பூவே பெண்களின் வெண்ணிற விழிகளுக்கு உவமையாகக் கூறப்படுவதாகும். காரணம், இம் மலரின் மொக்குகளானவை பெரியதாய் நல்ல வெள்ளைநிறத்தில் உருண்டு திரண்டு காணப்படும். அருகில் உள்ள படம் இதனை விளக்கும். இப்படி நிறம் மற்றும் வடிவம் ஆகிய இரண்டு பண்புகளால் ஒத்திருப்பதால்தான் பெண்களின் விழிகளை முல்லை மலர் மொக்குகளுடன் ஒப்பிட்டுப் பாடியுள்ளனர் புலவர்.

மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப - கலி -27

இப்பாடலில் பெண்களின் வெண்ணிற விழிகளைப் போல மணமௌவல் அதாவது மல்லிகை மலர்மொக்குகள் தோன்றியிருப்பதாகக் கூறுகிறார் புலவர். மௌவல் என்பதற்கு மல்லிகை என்றும் முல்லை என்றும் பொருள் உரைக்கிறது சென்னைத் தமிழ்ப் பேரகராதி.

மௌவல் mauval , n. 1. Wild jasmine. See காட்டுமல்லிகை. ஞாழன் மௌவல் (குறிஞ்சிப். 81). 2. Arabian jasmine. See முல்லை, 1. (சூடா.) 3. Lotus; தாமரை. மௌவ னீண்மலர் மேலுறை வானொடு (தேவா. 1213, 13).

அடுத்து குலிக மலர் பற்றிக் காணலாம்.

முருக்கு இதழ் குலிகம் ஊட்டிவைத்தன்ன முறுவல் செவ்வாய் - சிந்தா -1454

விளக்கம்: சிவந்த முருக்கமலரின் இதழ்களுக்கிடையில் இலுப்பையின் வெண்ணிற மலர்மொக்கினை பொதிந்துவைத்தது போல செவ்வண்ணம் பூசிய இமைகளுக்கிடையில் ஒளிரும் வெண்விழி.....

இப் பாடலில் வரும் முருக்க மலரின் இதழ்கள் சிவந்த நிறமுடையவை. இவை படத்தில் இருப்பதுபோல் தனித்தனியாக தடித்தும் வளைந்தும் இருக்கும். குலிகம் என்பது மதுகா லாங்கிஃபோலியா என்று அழைக்கப்படும் இலுப்பை (இருப்பை) யைக் குறிக்கும். இதன் பூக்கள் உருண்டு திரண்டு வெள்ளை நிறத்தில் கண் போன்ற வடிவிலேயே இருக்கும். மேலே உள்ள படம் இதனை விளக்கும். இரண்டு முருக்கப் பூவிதழ்களின் நடுவில் ஒரு இலுப்பைப் பூமொக்கினைப் பொதிந்துவைத்தால் அது பார்ப்பதற்கு உண்மையாகவே செந்நிறம் பூசிய இமைகளுக்கிடையில் ஒளிரும் வெண்ணிறக் கண்விழி போலவே தோன்றும் அல்லவா?.

அடுத்து ஆம்பல் மலர் பற்றிக் காணலாம்.

முகம் தாமரை முறுவல் ஆம்பல் கண் நீலம் - திணை.நூற்.-72

முகமோ தாமரை மலர் போல மலர்ந்திருக்கிறதாம்; அதிலுள்ள கண்விழிகளோ வெள்ஆம்பல் மலர் போல வெண்ணிறத்தில் அழகாக ஒளிர்கிறதாம்; அவ் விழிகளின் மேலுள்ள மையுண்ட கண்ணிமைகளோ நீலமலர் போன்று தோன்றுகிறதாம். என்ன ஒரு கற்பனை பாருங்கள் புலவருக்கு.! 

முறுவலும் மூங்கிலும்:

பெண்களின் கண்ணை மூங்கில் காயுடன் ஒப்பிட்டுப் பாடுவது இலக்கிய வழக்கமே. இதைப்பற்றி தோள் என்றால் என்ன? என்ற கட்டுரையில் ஏற்கெனவே பல ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். அக் கட்டுரையில் பெண்களின் கண்ணை 'தோள்' என்ற சொல்லால் குறித்து, அதை மூங்கிலின் திரண்ட காய்களுடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பார்கள். இக் கட்டுரையில், பெண்களின் கண்ணை 'முறுவல்' என்ற சொல்லால் குறித்து, அதை மூங்கில் காய்களுடன் ஒப்பிட்டுப் பாடியுள்ளார்கள். அவ்வளவு தான் வேறுபாடு.

முளை நிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல் - ஐங் 369
முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த - கலி - 15
முளை நேர் முறுவலார்க்கு ஓர் நகை செய்து - கலி 98

இப் பாடல்களில் வரும் முளை என்பதற்கு மூங்கில் என்ற அகராதிப் பொருளைக் கொள்ளவேண்டும். நிரை என்பது இங்கே திரளுதல் என்ற அகராதிப் பொருளைக் குறிக்கும். ஆக, இப்பாடல்களில் பயின்றுவரும்

முளை நிரை முறுவல் = மூங்கில்(காய்) போலத் திரண்ட விழி

மூங்கில் காய்களின் படம் அருகில் இணைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்தால், பெண்களின் திரண்ட விழிகளைப் போலவே உருண்டு திரண்டு கூரிய முனையுடன் விளங்குவதைக் காணலாம். இதனால் தான் புலவர்கள் இவ் இரண்டையும் உவமைப்படுத்திக் கூறியுள்ளனர்.

முறுவலும் நிலவும்:

பெண்களின் கண்ணை நிலவுடன் உவமைப்படுத்திப் புலவர்கள் பாடுவதும் இலக்கிய வழக்கம் தான். இதைப் பற்றி ' நுதலும் நுதலப்படாத கருத்துக்களும் ' என்ற ஆய்வுக் கட்டுரையில் முன்னரே ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். அக் கட்டுரையில், பெண்களின் கண்ணை 'நுதல்' என்ற சொல்லால் குறிப்பிட்டு, அதனை நிலவுடன் குறிப்பாக பிறைநிலவுடன் ஒப்பிட்டுப் பாடியிருப்பார்கள். இக் கட்டுரையில், பெண்களின் கண்ணை 'முறுவல்' என்ற சொல்லால் குறிப்பிட்டு அதனை நிலவுடன் ஒப்பிட்டுப் பாடியுள்ளனர். அவ்வளவே வேறுபாடு.

வாள் நிலா முறுவல் - கம்ப. பால -6
வாள் நிலா முறுவலன் வயங்கு சோதியை - கம்ப. ஆர- 13

இப்பாடலில் வரும் ' வாள் நிலா முறுவல் ' என்பது ' ஒளிவீசும் நிலவு போன்ற கண்கள் ' என்று பொருள்படும். நிலவானது ஒரு கோள வடிவில் வெண்ணிற ஒளிவீசும் தன்மையது. அதுமட்டுமின்றி, அதற்கு வளர்ச்சியும் தேய்வும் உண்டு. அதனால் தான் அதனை பெண்களின் கண்களுக்கு உவமையாகப் பயன்படுத்தி உள்ளனர். ஆனால், யாருடைய பற்களும் கோளவடிவில் இருப்பதில்லை என்பதுடன் அவற்றுக்கு வளர்ச்சியும் தேய்வும் இல்லை. எனவே பெண்களின் முறுவல் என்பது அவரது கண்களையே அன்றி, பற்களைக் குறிக்க வாய்ப்பில்லை என்பதை இதிலிருந்தும் முடிவு செய்யலாம். இன்னும் சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

முத்தினும் நிலவினும் முறுவல் முற்றினாள் - கம்ப. சுந்தர. -98
துண்ட வெண் பிறை நிலவு என முறுவலும் தோன்ற - கம்ப. யுத் - 3/77

முறுவலும் பளிங்கும்:

பெண்களின் கண்விழிகளை ஒளிரும் பளிங்குடன் ஒப்பிட்டும் சில பாடல்களைப் பாடியுள்ளனர். அவற்றுள் சில கீழே:

துகிர் புரையும் செவ்வாய் மணிமுறுவல் - பழ. -226
தீம்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் - சிலப்.புகார் 7
மணிமுறுவல் தோன்ற வந்தனை -சிந்தா - 1126

இப் பாடல்களில் வரும் மணி என்பது பளிங்கு என்னும் அகராதிப் பொருளைக் குறிப்பதாகும். செவ்வாய் என்பதற்கு சிவந்த உதடுகளை உடைய வாய் என்று தவறாகப் பொருள்கொண்டுள்ளனர். உண்மையில் இது செந்நிறம் பூசிய விளிம்புகளைக் குறிப்பதாகும். இது எவ்வாறெனில்,

வாய் என்பதற்குப் பலவேறு பொருட்களை அகராதிகள் காட்டினாலும் விளிம்பு என்ற பொருளும் உண்டு.

வாய்³ vāy , cf. vāc. [T. vāyi, K. bāy, M. vāy.] n. 1. Mouth; beak of birds; உதடு அல்லது அலகு இவற்றினிடையிலுள்ள உறுப்பு. (பிங்.) கய வர்வா யின்னாச் சொல் (நாலடி, 66). 2. Mouth, as of cup, bag, ulcer, etc.; பாத்திரம் முதலியவற்றின் திறந்த மேற்பாகம். வாயில்லை நாமங்கள் செப்ப . . . முத்திபெற்ற தென்னோ தயிர்த்தாழியுமே (அஷ்டப். திருவரங். மாலை, 53). புண்வாய் கிழித்தன (பெருந் தொ. 701). 3. Mouthful; வாய்கொண்ட வளவு. நாலுவாய் உண்டான். 4. Lip; உதடு. வாய்மடித் துரறி (புறநா. 298). (நாமதீப. 587.) 5. Edge, rim; விளிம்பு. பொன்னலங்கல் . . . வாயருகு வந் தொசிந்து (சீவக. 595).

கண்ணின் விளிம்புகளில் அதாவது கண்ணைச் சுற்றிலும் செவ்வண்ணம் பூசியிருப்பதையே செவ்வாய் என்ற சொல்லாடல் குறிக்கிறது. ஆக,

துகிர் புரையும் செவ்வாய் மணிமுறுவல் என்பது செம்பவளம் போலத் தோன்றுமாறு செந்நிறம் கொண்டு பூசப்பட்ட விளிம்புகளையும் பளிங்கு போல ஒளிவீசும் விழிகளையும் குறிக்கும். அருகில் உள்ள பவளத்தின் படத்தைப் பாருங்கள். இதில் கண்போன்று தோன்றும் பகுதியின் நடுவில் உள்ள நீலநிற முத்துப்போன்ற பகுதிக்கு பதிலாக பளிங்கு இருப்பதாகக் கொண்டால், அதைச் சுற்றியும் சிவப்பு வண்ணப் பகுதியிருக்க, இது பார்ப்பதற்கு பெண்களின் ஒளிவீசும் விழியும் அதைச் சுற்றியும் செந்நிறம் தடவிய பகுதியும் போலத் தோன்றுமன்றோ !.

கம்பராமாயணத்தில் முறுவல்:

கம்பராமாயணத்தில் இருந்து முறுவல் குறித்த சில பாடல்களை நாம் ஏற்கெனவே மேலே கண்டிருந்தாலும், இங்கே இன்னும் சிலவற்றைக் காணலாம். ராமனின் கண் அழகினை கம்பன் வர்ணிக்கும் அழகினை இங்கே படித்து இன்புறலாம்.

ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செவ்வாய்
நாரம் உண்டு அலர்ந்த செம் கேழ் நளினம் என்று உரைக்க நாணும்
ஈரம் உண்டு அமுதம் ஊறும் இன் உரை இயம்பாதேனும்
மூரல் வெண் முறுவல் பூவா பவளமோ மொழியல்பாற்றே - கம்ப. சுந்தர. -52

அந்த இரண்டாம் வரியினைப் பாருங்கள். செவ்வாய் நாரம் அதாவது சிவந்த அலகுடைய நாரையினைப் போல  செவ்வரி பூசிய அலர்ந்த கண் என்று கூற நாணமாம். ஏன்?. அதில் ஈரம் இருக்கிறதே; அமுதம் போன்ற (ஆனந்தக் கண்) நீர் ஊறுகிறதே; செவியுறும் வண்ணம் இனிய உரையேதும் செய்யவில்லையே; அப்படியானால் அது கண்தானே?. இருக்கலாம். இருந்தாலும் அதை வெறுமனே கண் என்று கூறமுடியவில்லை. அத்தனை அழகு !!!. மலர்ச்சியுடன் வெண்நிறத்தில் திகழும் அதனை மலர் என்று கூறுவதா?. பவளம் என்று கூறுவதா?. எதையும் என்னால் சொல்ல முடியவில்லையே. !!!

இப் பாடலில் கம்பர் வர்ணனை செய்திருக்கும் முறையைப் பாருங்கள். ராமனின் கண் அழகினை இதைவிடப் புகழ முடியுமா ஒருவரால்.?. இதோ கம்பராமாயணத்தில் இருந்து இன்னொரு பாடல்.

இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரை தோளுமே அல
முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே - கம்ப. பால - 56

சீதை, தனது உயிரை உண்டதாக எதைக் கூறுகிறாள் பாருங்கள். ராமனின் கருநிறத் தலைமயிர் அல்ல; நிலவு போல ஒளிவீசும் முகமும் அல்ல; தாழ்ந்த கைகளும் அல்ல; மலைபோலத் திரண்டு உயர்ந்த தோளும் அல்ல; என் உயிரை முதலில் உண்டது அவனது கண்களே என்று கூறுகிறாள். இதைத்தான் அண்ணலும் நோக்கினாள்; அவளும் நோக்கினாள் என்றும் தோள் கண்டார் தோளே கண்டார் என்றும் பின்னர் விரித்துக் கூறுவார் கம்பர்.

முடிவுரை:

இதுகாறும் மேலே கண்டவற்றில் இருந்து, பெண்களைப் பொருத்தமட்டிலும் முறுவல் என்ற சொல்லுக்கு கண்விழி என்ற பொருளும் உண்டு என்பதனைப் பல ஆதாரங்களுடன் அறிந்தோம். இனி, முறுவல் என்பது ஆண்களுக்கும் சில இடங்களில் கண் என்ற பொருளில் பயன்பட்டு வந்துள்ளது என்பதனைச் சில சான்றுகளுடன் காணலாம்.

வீரர் வீரனும் முறுவலும் வெகுளியும் வீங்க - கம்ப. சுந்தர - 34
கேட்ட அண்ணலும் முறுவலும் சீற்றமும் கிளர - கம்ப. யுத் - 3/34

இப் பாடல்கள் முறுவல் ஆகிய கண்விழிகளில் சினம் தோன்றிப் பெருகுவதையே கூறுகின்றன.
=================  வாழ்க தமிழ் ! ==============

1 கருத்து:

  1. ஐயா,

    //வீரர் வீரனும் முறுவலும் வெகுளியும் வீங்க //

    என்னுமிடத்தில் 'முறுவலும் வெகுளியும்' என்றிருக்கிறதே இதற்கு பொருள்கூறும்போது, "முறுவல் ஆகிய கண்விழிகளில் சினம் தோன்றிப் பெருகுவதையே கூறுகின்றன" எனக்கூறுகிறீர்கள்.

    'முறுவலும் வெகுளியும்' என்பதில் 'முறுவல்' என்பது உம்மையேற்றிருப்பதாலும் அது தங்கள்கூற்றின்படி கண்ணென்னும்பொருளைக்கொண்டதென்பதாலும் இதற்கு "கண்ணும் வெகுளியும்" என்றுதான்கொள்ளவேண்டுமேயன்றி 'கண்ணில் சினம்" என ஏழாம்வேற்றுமைப்பொருளை கொள்ளமுடியாது!

    உம்மையிருக்குமிடத்தில் ஏழாம்வேற்றுமைப்பொருள் எப்படிவரும்?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.