வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

தாரமே தர்மம் (THAARAM IS THE ROOT FOR DHARMA)


தாரமே தர்மம் 
(THAARAM IS THE ROOT FOR DHARMA)

முன்னுரை:

சங்கத் தமிழ்ப் புலவர்களால் கிமு 800 – கிமு 700 வாக்கில் உருவாக்கப்பட்ட தமிக்ருதம் என்னும் மொழியே இன்றைய சமற்கிருத மொழியின் தாயாக விளங்கியது என்று தமிக்ருதம் – சமற்கிருத மொழியின் தாய் என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் கண்டோம். அக் கட்டுரையின் தொடர்ச்சியாக வரும் இக் கட்டுரையில், தற்போது சமற்கிருத மொழியைச் சேர்ந்தவையாக அறியப்படும் சில சொற்கள் தமிக்ருத மொழியை எப்படிச் சேரும் என்று விளக்கங்களுடன் விரிவாகக் காணலாம்.

தாரம் என்றால் என்ன?

உணவுப் பொருளைக் குறிப்பதற்குச் சங்கத் தமிழில் மிசை, புகவு, உண்டி, அடிசில் என்று ஏராளமான பெயர்கள் உண்டு. அவற்றுள் தாரம் என்ற பெயரும் உண்டு. தாரம் என்ற பெயர்ச்சொல், உணவு என்னும் பொருளில் பல சங்கப் பாடல்களில் பயின்றுவரும் நிலையில் கீழே சில பாடல்கள் மட்டும் சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

கீழ்ப்படு தாரம் உண்ணா மேல் சினை - அகம் 171
தீம் பல் தாரம் முனையின் சேம்பின் - பெரும் 361
வடி சேறு விளைந்த தீம் பழ தாரம் - மலை 513

மேற்பாடல்களில் வரும் தாரம் என்பது இயற்கையாகக் கிடைக்கும் பழங்கள், கிழங்குகள் முதலாவனவற்றைக் குறிக்கப் பயன்பட்டிருப்பதைக் காணலாம்.

தாரம் என்பது இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளை மட்டுமின்றி சமைக்கப்பட்ட உணவுகளைக் குறிக்கவும் பயன்பட்டிருப்பதைக் கீழ்க்காணும் பாடல்களின் வழியாக அறிந்து கொள்ளலாம்.

வரையா தாரம் வரு விருந்து அயரும் - நற் 135
வருநர் வரையா செழும் பல் தாரம் கொளக்கொள குறையாது - பதி 88
 
தாரமும் தருதலும்:

தாரம் என்னும் சமைக்கப்பட்ட உணவினைப் பசியுடன் வந்தவர்க்கு “இல்லை” என்னாமல் வழங்கி அவரது பசிப்பிணியைப் போக்கிய செய்தியினையும் மேற்பாடல்களின் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது. அப்பாடல்களில் வரும் தாரம் என்பது பழங்கள் உட்பட பல்வேறு உணவுகளைக் குறிப்பதையும் அவற்றைப் பிறர் பசிதீர்க்க பயன்படுத்திய செய்தியையும் அப் பாடல் வரிகளில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.

அறம் செய்வதன் அடிப்படை வினையே பிறர் பசி தீர்த்தல் என்ற நிலையில், தாரம் என்னும் சொல்லானது உணவு என்னும் பொருளை மட்டுமின்றிப் பிறருக்குத் தரப்படுவது என்னும் பொருளையும் உடன் உணர்த்தி நிற்பதனை மேற்பாடல் வரிகளில் இருந்து அறியலாம். அதாவது,

தா (கொடு) >>> தரு >>> தாரம் = கொடுக்கப்படுவது, உணவு.

தாரமும் தர்மமும்:

மேற்கண்டவாறு, பிறர் பசி தீர்க்கப் பயன்படும் / கொடுக்கப்படும் உணவே தாரம் என்ற நிலையில், தாரம் என்ற சொல்லே அறத்திற்கு அடிப்படையாய் அமைவதை அறியலாம். இச் சொல்லே இந்தாரிய மொழிகளில் கீழ்க்காணுமாறு திரிந்து அறத்தைக் குறிக்கலாயிற்று.

தாரம் >>> த^ர்ம் (சமற்கிருதம், இந்தி, வங்காளம், பஞ்சாபி, ஒரியா, கன்னடம், மலையாளம், தெலுங்கு, மராத்தி, குசராத்தி) (விதி எண். 2, 4)

வி.2: குறுமோனை விதி – தாகாரம் குறுகி தகரம் ஆகியது.
வி.4: மெய்யெதுகை விதி – ரகரத்தின் உயிர் கெட்டு மெய் ஆகியது

மேற்கண்ட விதிகளின் படி, தாரம் என்னும் தமிழ்ச்சொல் த^ர்ம் என்னும் தமிக்ருதச் சொல்லாக மாறுகிறது. அதேசொல், பாலி மொழியில் கீழ்க்கண்டவாறு மாறுகிறது.

தாரம் >>> த^ம்ம (பாலி)

மரங்களும் கொடையும்:

பசியோடிருக்கும் ஒருவருக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உணவளித்து அவரது பசியாற்றுவதே அறம் அல்லது தருமம் ஆகும். அவ்வகையில், எந்தவொரு விலங்கு அல்லது பறவையிடம் இருந்தும் எல்லா நேரங்களிலும் தருமத்தை நாம் எதிர்பார்க்க இயலாது. தனக்குப் போகவே தருமம் என்னும் கொள்கை உடையவை இவை.

ஆனால், பரந்து விரிந்த இவ் உலகில் பசித்திருக்கும் ஒருவருக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி உணவளித்துத் தருமம் செய்வதற்காகவே இயற்கையால் படைக்கப்பட்ட ஒரே உயிரினம் மரங்கள் மட்டுமே. காய்கள், கனிகள், இலைகள், தண்டுகள், பூக்கள், பட்டைகள், வேர்கள், கிழங்குகள் என்று தனது அனைத்து உறுப்புக்களையும் பிறர் பசி தீர்ப்பதற்கு அளித்து தருமம் செய்வதில் மரங்களுக்கு நிகர் மரங்களே அன்றி வேறு யாருமில்லை. இதைத்தான் வள்ளுவரும் கீழ்க்காணும் குறளில் இவ்வாறு கூறுவார்.

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின் – 217

இங்கே மருந்து என்பது உணவு என்ற பொருளில் வந்துள்ளது. எப்படி மரமானது தன்னிடம் உள்ள அனைத்தையும் பிறருக்கு உணவாகவே கொடுத்துவிடுகிறதோ, பெருந்தகையான் கண்ணுள்ள மொத்த செல்வமும் பிறருக்கே பயன்படுவதாகும். இப்படி இயற்கை தருமத்தின் முதல் சான்றுகளாய் மரங்கள் விளங்க, தரு என்னும் தமிழ்ச்சொல்லே தமிக்ருதத்தில் மரங்களைக் குறிக்கப் பயன்படுகிறது.

தரு (மரம்) >>> தாரம் (உணவு)

கொடுப்பதே இயல்பு:

தன்னிடத்து இருப்பதனைப் பிறருக்குக் கொடுப்பதே இயல்பு ஆகும் என்று பல ஊழிகளாய் மரங்கள் சான்றுகாட்டி நிற்க, கொடுப்பதே இயற்கை அல்லது இயல்பு என்றானது. கொடையைக் குறிக்கும் தாரம் என்ற தமிழ்ச் சொல்லே தமிக்ருத மொழியில் இயல்பு அல்லது இயற்கைப் பண்பினையும் குறிக்கப் பயன்படலாயிற்று.

தாரம் (கொடுப்பது) >>> த^ர்ம (இயல்பு)

கொடுப்பவனே சான்றோன்:

கொடுப்பவன் உயர்ந்தவன்; கொள்பவன் தாழ்ந்தவன் என்ற கருத்து பன்னெடுங் காலமாகவே இருந்து வருகிறது. காரணம், கொடுப்பவன் உயரமான இடத்தில் இருந்து கொடுப்பதும் அதைக் கொள்பவன் தாழ்வான இடத்தில் இருந்து பெறுவதனாலும் ஆகும்.

கொடுத்தலைக் குறிக்கும் தாரம் என்ற தமிழ்ச் சொல்லே ‘உ’ என்னும் முன்னொட்டு பெற்று, கொடையைக் குறிக்கும் சொல்லாகத் தமிக்ருத மொழியில் கீழ்க்கண்டவாறு மாறுகிறது.

தாரம் (கொடை) >>> உதா`ர (கொடை)

கொடையாளியிடம் இருந்து கொடையைப் பெற்றவர்கள், ஏனையோரும் அக் கொடையாளியைப் போல பொருள் / உணவு கொடுத்து உதவ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் நோக்கில், கொடையாளியை ஒரு சான்றோனாக, கொடைக்குச் சான்றாகத் திகழ்பவனாகப் பாராட்டுவது வழக்கமே. இதைச் சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றிலும் காணலாம். இந் நிலையில், கொடையைக் குறிக்கும் தாரம் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து சான்று என்ற பொருளைத் தரும் தமிக்ருத மொழிச் சொல் கீழ்க்கண்டவாறு பிறக்கும்.

தாரம் (கொடை) >>> உதா`ர >>> உதா`ரண (சான்று)

கொடுத்தலும் கொள்ளலும்:

தருமம் செய்பவர் பொருளைக் கொடுக்க, தருமம் பெறுபவர் அதைக் கொள்வார். அதாவது, தருமத்தின்போது கொடுத்தலும் பிடித்தலும் ஒன்றாய் நடக்கும். அதுமட்டுமின்றி, ஒருவருக்குத் தருமமாகப் பொருளை / உணவைக் கொடுக்கும்போது “ பிடி, கொள் “ என்று கூறியே கொடுக்கப்படும். அவ்வகையில், தரு என்னும் தமிழ்ச் சொல்லானது பிடி, கொள் என்னும் பொருளில் இந்தாரிய மொழிகளில் கீழ்க்காணும் வகையில் மாறுகிறது.

தரு (கொள்ளச்செய்) >>> த^ர்மன் (சம.), த^ரணே (மரா.), த^ரா (வங்.), த^ரவும் (குச.), தா^ரண் கரோ (இந்.), த^ரோ (ஒரி.) (=கொள்)

முடிவுரை:

சங்ககாலத் தமிழ்ச் சொல்லாகிய தாரம் என்ற சொல்லில் இருந்து த^ர்ம, தரு, உதா`ர, உதா`ரண, த^ர்மன் போன்ற பல சொற்கள் எவ்வாறெல்லாம் உருவாகின என்று விளக்கமாக மேலே கண்டோம். தாரமே தர்மத்தின் மூலம் என்று அறியாமல் தர்ம என்பதனைச் சமற்கிருத மொழியாகக் கருதி, அதனைத் தருமம் என்று தமிழ்ச் சொல்லாக மாற்றி இன்றுவரையிலும் தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இக் கட்டுரையின் மூலம் எது முந்தியது எது பிந்தியது என்ற தெளிவு உண்டாகட்டும்.

*************** தமிழ் வாழ்க ! **********************

4 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.