திங்கள், 5 அக்டோபர், 2009

மேனி என்றால் என்ன?

முன்னுரை:
மேனி என்ற சொல் சங்க காலத்தில் இருந்து இன்றுவரை பயன்படுத்தப் பட்டு வரும் பல சொற்களில் ஒன்று. ஆனால் இச் சொல்லுக்கு நாம் இன்று கொண்டிருக்கும் பொருளானது பல இலக்கியப் பாடல்களில் பொருந்தாத நிலை காணப்படுகின்றது. இது இச் சொல்லுக்கு புதிய பொருட்களும் இருக்கின்ற உண்மையினை நமக்குச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. இச் சொல் குறிக்கும் புதிய பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றி இக் கட்டுரையில் காணலாம்.

அகராதிப் பொருள்:

தமிழ் அகராதிகள் மேனி என்ற சொல்லுக்கு என்ன பொருள் கூறுகின்றன என்று கீழே காணலாம்.

சென்னை தமிழ்ப் பேரகராதி      : உடம்பு, வடிவம், நிறம்.
கழகத் தமிழ்க் கையகராதி        : உடம்பழகு, நிறம்.
சூடாமணி நிகண்டு              : வடிவம், நிறம்.

தற்போதைய பொருள்:

இக்காலத்தில் 'மேனி' என்ற சொல்லை உடல் என்னும் ஒரே ஒரு பொருளில் தான் பயன்படுத்துகின்றனர்.

சொல்பயன்பாடு:

மேனி என்ற சொல் எந்தெந்த மேல்கணக்கு மற்றும் கீழ்க்கணக்கு நூல்களில் பயின்று வந்துள்ளது என்பதைக் கீழே காணலாம்.

மேல்கணக்கு நூல்கள்:

அகநானூறு: பாடல்எண் - 42,75,98,156,161,206,217,222,229,237,270,278,333,337,398,169,174,381,69,95.
ஐங்குறுநூறு: பாடல்எண் - 38,41,65,158,174,176,217,221,388,471.
கலித்தொகை: பாடல்எண்- 102,108,13,131,143,35,40,91,58,42,35,117,124,121,41.
குறுந்தொகை: பாடல்எண்- 101,168,185,219,319,331,62,143,33.
நற்றிணை: பாடல்எண் - 8,10,128,134,141,166,251,301,320,324.
புறநானூறு: - 56,159,222,398. பரிபாடல்: பாடல் எண் - 1,4,7,8,12,13,15,20. திரட்டு: 2.
குறிஞ்சிப்பாட்டு: அடி எண் -2. மதுரைக்காஞ்சி - 707. நெடுநல்வாடை - 148.
பெரும்பாணாற்றுப்படை - 160. சிறுபாணாற்றுப்படை - 176. திருமுருகாற்றுப்படை - 19,144. பட்டினப்பாலை - 148.

கீழ்க்கணக்கு நூல்கள்:

திணைமாலை ஐம்பது: பாடல் எண் - 4,15,35,47. திணைமாலை நூற்றைம்பது: பாடல் எண் - 21.
கார் நாற்பது: பாடல் எண் - 10,16,18. கைந்நிலை: பாடல் எண் - 1,27.
நாலடியார்: பாடல் எண் - 317; ஐந்திணை ஐம்பது: பாடல் எண் - 8,15,30,45.
திருக்குறள்: பாடல் எண் - 1113,1182,1185,1189,1278. இன்னிலை: பாடல் எண் - 25. நான்மணிக்கடிகை: பாடல் எண் - 23.
களவழிநாற்பது: பாடல் எண் - 32. முதுமொழிக்காஞ்சி: பாடல் எண் - 86.
ஆசாரக்கோவை: பாடல் எண் - 77. பழமொழி நானூறு: பாடல் எண் - 137.

பொருள் பொருந்தாத இடங்கள்:

மேனி என்னும் சொல்லுக்குத் தற்கால அகராதிகள் காட்டுகின்ற பொருட்கள் எவையும் பொருந்தாத சில இலக்கியப் பாடல்களைக் கீழே காணலாம்.

நின் அம் கலுழ் மேனி பாஅய பசப்பே - குறு - 143
மாஅத்து அம் தளிர் அன்ன நன் மா மேனி பசப்ப - குறு -331
மேனி பசப்பது எவன்-கொல் அன்னாய் - ஐங்கு - 217
நன் மா மேனி பசப்ப - ஐங்கு -221
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என் ஆய் இழை மேனி பசப்பு - கலி -42
மேனி மறைத்த பசலையள் ஆனாது - கலி -143
பசலை பாய்ந்த மேனியள் நெடிது நினைந்து - அகம் - 169
பழங்கண் கொண்ட பசலை மேனியள் - அகம் - 174
கொன்றை ஊழ்_உறு மலரின் பாழ் பட முற்றிய பசலை மேனி நோக்கி - அகம் - 398
வான் உயர் வெற்பன் வருவான்கொல் என் தோழி மேனி பசப்பு கெட - திணைமொ -4
முறி எழில் மேனி பசப்ப அருள் ஒழிந்து - திணைமொ -15
மணி எழில் மேனி மலர் பசப்பு ஊர - திணைமொ -47
அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என் மேனி மேல் ஊரும் பசப்பு - குறள் -1192

மேற்காணும் பாடல்களை நோக்கினால் மேனியானது பசப்பு, பசலை என்ற சொற்களுடன் தொடர்புற்று வந்துள்ளதை அறியலாம். இந்த பசப்பு, பசலை ஆகிய இரண்டு சொற்களும் கண்ணீரையே குறிக்கும் என்று பசப்பு என்றால் என்ன என்ற கட்டுரையில் முன்னர் ஆதாரங்களுடன் கண்டோம். ஆனால், மேனி என்ற சொல்லுக்கு தற்கால அகராதிகள் காட்டும் பொருட்களான உடல், வடிவம், நிறம் ஆகியவற்றில் ஒன்றுக்கு கூட அழுகையுடன் தொடர்பில்லை என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இதிலிருந்து இப் பாடல்களில் வரும் மேனி என்ற சொல்லானது அகராதிகள் காட்டும் பொருட்களைக் குறித்து வரவில்லை என்பது தெளிவாகிறது. என்றால், மேனி என்ற சொல் காட்டும் புதிய பொருட்கள் என்ன என்று கீழே காணலாம்.

மேனி - புதிய பொருட்கள்:

மேனி என்ற சொல் குறிக்கின்ற புதிய பொருட்கள் இரண்டாகும். அவை:-
ண் மற்றும் கண்ணிமை ஆகும்.

நிறுவுதல்:

மேனி என்ற சொல் கண் மற்றும் கண்ணிமை ஆகிய புதிய பொருட்களை எவ்வாறு குறிக்கும் என்று இங்கே ஆதாரங்களுடன் காணலாம்.

பொதுவாக ஒரு மனிதனின் குணநலன்களைப் பற்றி அறிய வேண்டுமானால், அவனது நண்பர்களைப் பற்றி அறிந்தால் போதும். அதைப்போல, ஒரு சொல்லின் உண்மையான பொருளைக் கண்டறிய இலக்கியங்களில் அதற்கு உவமையாகக் கூறப்படும் பிற பொருட்களின் தன்மைகளை அறிந்தால் போதும். அவ்வகையில், இலக்கியங்களில் மேனிக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ள பிற பொருட்களைப் பற்றி அறிந்துகொள்வதில் இருந்து மேனி என்ற சொல்லின் புதிய பொருளினை எளிதாக அறிந்துகொள்ளலாம்.  .

மேனியும் மாந்தளிரும்:

மாமரத்தின் புதிய இலைக்கொழுந்தாகிய மாந்தளிரானது நல்ல செம்பு வண்ணத்தில் இருக்கும். பெண்களுக்கு இந்த வண்ணம் மிகவும் பிடிக்கும் என்பதால் அவர்கள் தமது கண்களின் இமையினை மாந்தளிர் வண்ணத்தில் அதாவது செம்பு நிறத்தில் பூசி மகிழ்வர். இதைப் பற்றி ஏராளமான பாடல்கள் இலக்கியத்தில் உள்ளன என்றாலும் சில பாடல்களை மட்டுமே இங்கே விளக்கத்துடன் காணலாம்.

நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின் அவிர் தளிர் புரையும் மேனியர் - திரு - 143
( நோயில்லாத உடலினராய் மாமரத்தின் இலைக்கொழுந்து போல் ஒளிரும் கண் இமை கொண்டவர்.......)

இப் பாடலில் வரும் மேனி என்பது உடலைக் குறிக்காது என்பது உறுதி. காரணம், யாக்கை என்ற சொல்லால் முன்னரே உடலைக் குறிப்பிட்டு விட்டதால், அடுத்து வரும் மேனி என்பது உடலைக் குறிக்காமல் இமையினையே குறித்தது என்க.

தேமா மேனி சில் வளை ஆயமொடு    - சிறு -176
( இனிக்கின்ற மாவின் தளிரன்ன இமையின் தோள்பகுதியில் சில வளைகள் அணிந்த தோழியருடன்.... )

மாவின் தளிர் ஏர் அன்ன மேனி - மது - 706
( மாவின் இலைக்கொழுந்து போல் அழகிய கண்ணிமை...)

தளிர் ஏர் மேனி தாய சுணங்கின் - நெடு -148
( மாந்தளிர் போன்ற அழகிய கண்ணிமையில் பூசப்பட்டிருந்த பூந்தாதுக்கள்......)

செம் தளிர் மேனியார் - பரி -8
( மாமரத்தின் சிவந்த இலைக்கொழுந்து போன்ற இமையுடையார்....)

மடி இலான் செல்வம் போல் மரன் நந்த அ செல்வம்
படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப
மாயவள் மேனி போல் தளிர் ஈன அ மேனி
தாய சுணங்கு போல் தளிர் மிசை தாது உக - கலி - 35

( பொருள்: சோம்பல் அற்றவனிடம் சேரும் செல்வம் போல மாமரமானது பூத்துக் குலுங்க, அவனிடத்தே பிச்சை எடுத்து உண்பவரைப் போல வண்டுகள் அம் மரத்தின் பூந்தேனைக் கிளைதோறும் சென்று உண்ண, அம் மரத்தின் சிவந்த இலைக் கொழுந்துகளின் மேல் பூந்தாதுக்கள் சிந்தியிருந்த தோற்றமானது, பேரழகி ஒருத்தியின் செவ்வண்ணக் கண்ணிமையில் பூசப்பட்டிருந்த பூந்தாதுக்களைப் போலத் தோன்றியது.....)

மேனியும் இதர பொருட்களும்:

மை எழுதப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பெண்களின் கண் இமையினை மாந்தளிருடன் மட்டுமின்றி, பவளம், மணி, பொன், கதிரவன், மின்னல், விளக்கு, குறிஞ்சிப்பூ, காயாம்பூ, ,அசோக மரத்தளிர், பாம்பின் சட்டை, நெய் போன்ற பலவற்றுடனும் ஒப்பிட்டுப் பாடியுள்ளனர் புலவர்கள். இதைப் பற்றிய பாடல்களை விளக்கங்களுடன் கீழே காணலாம்.

தூசு உடை துகிர் மேனி - பட்டி -148
( முகத்திரை கொண்டு மூடிய செம்பவளம் போன்ற கண்ணிமை..... )

திரு மணி புரையும் மேனி மடவோள் - நற் -8
( அழகிய செம்மணியினை ஒத்த இமைகளை உடைய பெண்.....)

பகல் எரி சுடரின் மேனி சாயவும் - நற் -128
( பகலில் காய்கின்ற கதிரவனைப் போல ஒளிர்ந்த கண்ணிமைகள் வாடவும்.......)

குறிஞ்சி நாள்_மலர் புரையும் மேனி - நற் - 301
( குறிஞ்சிப் பூவின் இதழ் போன்ற கண்ணிமை ......)

பொன் போல் மேனி - குறு - 101
( பொன் போன்ற கண்ணிமை .....)

பொன் ஏர் மேனி நன் நலம் சிதைத்தோர் - குறு -319
( பொன் ஒத்த கண்ணிமை கொண்டவளின் அழகினைக் கெடுத்தவர்.....)

மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇ பேணி துடைத்து அன்ன மேனியாய் - கலி -17
( பொன் உருண்டைகளை நன்றாக உருக்கி, ஓடாதவண்ணம் பாதுகாத்து, ஒளிருமாறு தீட்டியதைப் போல மை பூசப்பட்ட கண் இமைகளை உடையவளே. ..)

உண்ண உருக்கிய வான் நெய் போல் மேனியள் - சிந்தா - 480
( உண்ணுவதற்காக உருக்கிய நெய்போல மஞ்சள்நிறத்தில் ஒளிரும் இமையினை உடையவள்....)

வை விரி மலர் புரையும் மேனியை - பரி - 1
( காயா மலரின் இதழ் போன்ற கண்ணிமையாள் ....)

செயலை இளம் தளிர் அன்ன நின் மேனி - கார் -16
( அசோக மரத்தின் இலைக்கொழுந்தினைப் போன்ற உனது கண்ணிமையானது.........)

உருவு கொண்ட மின்னே போல திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள் - மணி -6
( அச்சந்தரும் மின்னலைப் போல ஒளிருமாறு கண்ணிமையில் அழகிய மை அணிந்து......)

பொன்னின் ஒளி பூவின் வெறி சாந்து பொதி சீதம்
மின்னின் எழில் அன்னவள்-தன் மேனி ஒளி மான - கம்ப பால - 28
( பொன்னின் நிறமும் பூவின் மணமும் சந்தனத்தின் குளிர்ச்சியும் கொண்ட அவளது கண்ணிமையின் ஒளியானது மின்னலின் ஒளியினை ஒப்ப......)

அணங்கு அரவு உரித்த தோல் அனைய மேனியன் - சிந்தா -2009
( துன்பந்தருகின்ற பாம்பு உரித்த தோல் போன்ற இமையினை உடையவன். )

முதுமையால் இமைகளில் சுருக்கங்கள் அதிகமாகியதால், அது பார்ப்பதற்குப் பாம்புத் தோல் போலத் தோன்றுவதாகக் கூறுகிறார். 

பொழுது உணர்வு அரிய அ பொரு_இல் மா நகர்
தொழு தகை மடந்தையர் சுடர் விளக்கு என பழுது_அறு மேனியை - கம்ப பால -49
( மாலைப்பொழுது ஆகிவிட்டதை அறியும்வகையில் பெண்கள் தமது இல்லத்தில் ஏற்றுகின்ற சுடர்விளக்கு போல் ஒளிரக் கூடிய கண்ணிமைகளை.... )

தணி மலர் திருமகள் தங்கு மாளிகை
இணர் ஒளி பரப்பி நின்று இருள் துரப்பன
திணி சுடர் நெய் உடை தீ விளக்கமோ
மணி விளக்கு அல்லன மகளிர் மேனியே - கம்ப பால- 50

( தாமரைமேல் அமர்ந்த திருமகள் தங்கியிருப்பது போன்ற அழகிய மாளிகையின் இருளை விரட்டுவது போல எங்கும் ஒளிபாய்ச்சுவது நெய்யால் எரிகின்ற தீ விளக்கோ மாளிகையில் அலங்காரமாக வைக்கப்பட்டுள்ள மணிகளின் விளக்கோ அன்றி மகளிரின் இமையாகிய விளக்கோ அறிய முடியவில்லையே......)

இப் பாடலிலும் மகளிரின் கண்ணிமையினை ஒளிரும் விளக்காக உவமைப்படுத்துவதைப் பாருங்கள்.

மேனியும் கண்ணீரும்:

பசப்பு, பசலை போன்ற சொற்கள் கண்ணீரையே குறிக்கும் என்று பசலை என்றால் என்ன? என்ற கட்டுரையில் பல ஆதாரங்களுடன் கண்டோம். இச் சொற்களுடன் தொடர்புற்று மேனி என்ற சொல் பல பாடல்களில் பயின்று வந்துள்ளது. இதிலிருந்து மேனி என்ற சொல்லானது கண்ணீருடன் தொடர்புடைய உறுப்பான கண்ணையே குறிக்கும் என்பதைத் தெளியலாம். மேனி என்னும் சொல் கண் என்ற பொருளில் பயின்றுவருகின்ற சில பாடல்களை மட்டும் கீழே காணலாம்.

நின் அம் கலுழ் மேனி பாஅய பசப்பே - குறு - 143
( உனது அழகிய கண்களில் வடிகின்ற கண்ணீர்.......)

பயப்பு என் மேனியதுவே - குறு - 219
( எனது கண்களில் தோன்றிய கண்ணீர் ......) இதில் வரும் பயப்பு என்ற சொல்லும் பசப்பு என்ற சொல் போலவே கண்ணீரைக் குறிக்கும்.

மாஅத்து அம் தளிர் அன்ன நன் மா மேனி பசப்ப - குறு -331
( மாந்தளிர் போன்ற இமை கொண்ட கண்கள் கலங்கவும் .....)

மேனி பசப்பது எவன்-கொல் அன்னாய் - ஐங்கு - 217
( அன்னையே உன் கண்கள் அழுவது எதனால்?.....)

நன் மா மேனி பசப்ப - ஐங்கு -221
( நல்ல மாந்தளிர் போன்ற இமை கொண்ட கண்கள் கலங்கி அழ,,,,,,,,)

ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என் ஆய் இழை மேனி பசப்பு - கலி -42
( கதிரவனைக் கண்டதும் இடம்தெரியாமல் மறைகின்ற இருளினைப் போல என் காதலரைக் கண்டதும் எனது கண்ணில் இருந்த கண்ணீர் இடம் தெரியாமல் மறைந்துபோனது. )

இப் பாடலில் கதிரவனைக் காதலனுக்கும், இருளைக் கண்ணீருக்கும் உவமையாக்கி இருக்கிறார் புலவர்.

மேனி மறைத்த பசலையள் ஆனாது - கலி -143
( கண்களை மறைத்த கண்ணீர் நிற்காமல் ....)

தணி மருங்கு அறியாள் யாய் அழ மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே - அகம் -156
( வருத்தம் தணிகின்ற வழியேதும் அறியாதவளாய் அவள் தொடர்ந்து அழவும், செம்மணி போன்ற அழகிய இமை உடையாளின் கண்கள் சிவந்து செம்பொன் நிறம் கொண்டன......)

பசலை பாய்ந்த மேனியள் நெடிது நினைந்து - அகம் - 169
( கண்ணீர் வடிகின்ற கண்ணினள் நினைத்து நினைத்து .....)

பழங்கண் கொண்ட பசலை மேனியள் - அகம் - 174
( துன்பத்தால் உண்டான கண்ணீரை உடைய கண்ணினள்......)

தேன் இமிர் நறும் தார் வானவன் உடற்றிய ஒன்னா தெவ்வர் மன் எயில் போல
பெரும் பாழ் கொண்ட மேனியள் - அகம் - 381
( தேனீக்கள் ஒலிக்கின்ற ஒளிவீசும் மாலை அணிந்த வானவனுடன் போரிட்ட பகைவர்களின் கோட்டையினைப் போல மையணி சிதைந்து பாழ்பட்ட கண்ணிமை உடையவள்....)

கொன்றை ஊழ்_உறு மலரின் பாழ் பட முற்றிய பசலை மேனி நோக்கி - அகம் - 398
( கொன்றை மரத்தின் முதிர்ந்து முற்றிய மலரினைப் போல கண்ணீரால் பாழ்பட்ட இமையினைக் கண்டு.....)

பொய் சிதைக்கும் பொன் போலும் மேனியை - நான் -21
( காதலர் கூறும் பொய்யானது பொன் போன்ற கண்ணிமையின் அழகினைக் கெடுக்கும்.......)

செயலை இளம் தளிர் அன்ன நின் மேனி பயலை பழங்கண் கொள - கார் -16
( அசோக மரத்தின் இலைக்கொழுந்தினைப் போன்ற உனது கண்ணிமையானது கண்ணீரால் துன்பமடைய.........)

இப்பாடலில் வரும் பயலை என்பதும் பசலை போலவே கண்ணீரைக் குறிப்பதாகும்.

பிரிந்தவர் மேனி போல் புல்லென்ற வள்ளி பொருந்தினர் மேனி போல் பொற்ப - ஐந்-8
( காதலரைப் பிரிந்தவரின் கண்ணிமையைப் போலப் பூவின்றி வாடியிருந்த வள்ளிக் கொடியானது, காதலரைச் சேர்ந்தவரின் கண்ணிமையினைப் போல பூத்துக் குலுங்க.......)

வான் உயர் வெற்பன் வருவான்கொல் என் தோழி மேனி பசப்பு கெட - திணைமொ -4
( எனது கண்ணின் கண்ணீர் ஒழியுமாறு விண்ணைத் தொடும் மலைநாட்டவன் என்னிடம் வருவானோ சொல் என் தோழி..)

முறி எழில் மேனி பசப்ப அருள் ஒழிந்து - திணைமொ -15
( மாந்தளிர் போன்ற இமைகொண்ட கண்கள் கலங்க அருள் இன்றி........)

மணி எழில் மேனி மலர் பசப்பு ஊர - திணைமொ -47
( செம்மணி போன்ற இமைகொண்ட கண்களில் கண்ணீர் அரும்பி பெருக......)

அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என் மேனி மேல் ஊரும் பசப்பு - குறள் -1192
( காதலர் தந்தார் எனும் பெருமையினால் எனது கண்ணில் கண்ணீர் பெருகி வழிகின்றது.......)

உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என் மேனி பசப்பு ஊர்வது - குறள் -1195
( என் காதலர் என்னைவிட்டு அதோ செல்கின்றார். எனது கண்ணில் கண்ணீர் இதோ பெருகுகின்றது..)

நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும் எழு நாளேம் மேனி பசந்து - குறள் -1288
( நேற்று ஒருநாள்தான் காதலர் என்னைவிட்டுப் பிரிந்துசென்றார். நானோ ஒவ்வொருநாளும் கண்கலங்கி வாடுகிறேன். )

ஊர் தரும் மேனி பசப்பு - கைந் -27
( கண்ணில் கண்ணீர் பெருகி வழியும் )

பசந்த மேனியள் படர் உறு மாலையின் - சிலம்பு-8
( அழுத கண்ணினளாய் துன்பமுற்ற மாலைப் பொழுதில்.)

பசந்த மேனியள் படர் நோய் உற்று - சிலம்பு -13
( அழுத கண்ணினள் துன்பமுற்று......)

தம் பொன் மேனி திமிர்ந்த தண் சாந்தமும் - சிந்தா -128
( பொன்போலத் தோன்றுமாறு கண்ணிமையில் பூசிய சந்தனக் குழம்பும்....)

நான நீரில் கலந்து நலம் கொள் பூம் பட்டு ஒளிப்ப
மேனி தோன்ற விளங்கி வெளிப்பட்டதற்கு நாணி
மான மகளிர் போல மணி மேகலைகள் பேசா
தானம் தழுவி கிடப்ப செல்வோள் தன்மை காண்-மின் - சிந்தா - 923

( பூப் போன்ற பட்டுத்துணியால் மூடப்பட்டிருந்த கண்ணிமையில் வாசனை கலந்த வண்ண மையினைப் பூசும்போது வெளிப்பட்டுத் தோன்றியதால், வெட்கப்படும் பெண் போல, நெற்றியில் அணிந்திருந்த மணிமேகலையானது அசையாமல் ஒலிக்காமல் இருக்கும்வண்ணம் நடந்து செல்வாளைப் பாருங்கள்.....)

முடிவுரை:

இதுவரை கண்டதில் இருந்து மேனி என்னும் சொல் கண் மற்றும் கண்ணிமை ஆகிய புதிய பொருட்களையும் என்பது உறுதியாகிறது. கண்ணும் கண்ணிமையும் ஒரே இடத்தில் இருப்பதால் மேனி என்ற சொல் கண்ணையும் இடவாகுபெயராகக் கண்ணிமையினையும் குறிக்கப் பயன்படலாயிற்று. பொதுவாக அலங்கரிக்கப்படாத கண்ணிமையின் வண்ணமும் உடலின் வண்ணமும் ஒன்றாக இருப்பது இயல்புதான். இப்படி இயல்பான உடல் வண்ணத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டி அழகு செய்யவே கண்ணிமையில் மை எழுதினர். அப்படி மை எழுதிய கண்ணிமைகளின் மேல் முகத்திரை கொண்டு மூடியவாறு இருப்பதே பெண்களின் பொதுவழக்காகும். ஆனால் பெண்களில் ஒரு பிரிவினரான 'மேனிமினுக்கி' என்பவர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காகும். இவர்களைப் பற்றிக் கீழே பார்ப்போம்.

பொதுவாக மினுக்குதல் என்பது மின்னல் போல ஒளிர்தல் என்ற பொருளைத் தருவது. பெண்கள் தமது மையுண்ட கண்ணிமைகளை மூடித் திறக்கும்போது மின்னல் வெட்டுவதைப் போல ஒளிர்ந்து மறையும். கண்ணிமைகளில் இருந்து தோன்றும் இந்த மின்னலின் ஒளியினை முகபடாம் கொண்டு மூடி மறைக்காவிட்டால் அது ஆடவர் கண்களில் பட்டு அவர்களது மனதைக் கொள்ளையடித்து விடும். இவ்வாறு ஆடவர்களின் மனதினைத் தனது கண்ணிமையின் ஒளியினால் கவர்ந்து அவர்களிடம் இருந்து பணத்தைப் பறிப்பவர்களே மேனிமினுக்கிகள் ஆவர். இவர்களையே பொருட்பெண்டிர் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

7 கருத்துகள்:

  1. அருமையான தகவல்....நீங்க தொடர்ந்து உங்களது ஆரய்ச்சி கட்டுரைகளை இடுங்கள்..என்னை போன்ற ஒத்த எண்ணமுள்ள மற்ற ஏனையவரின் சார்பாக வாழ்த்துகள்,நன்றி,பாராட்டுகள்....
    திருக்குறளில்,
    ------------
    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் "நூலோர்"
    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

    ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் "நூல்"மறப்பர்
    காவலன் காவான் எனின்

    என்கிற போது வள்ளுவர் மேற்கோளிடும் நூல் எது?

    --ஆமாச்சு

    இதையும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்யுங்கள்..

    பதிலளிநீக்கு
  2. அருமையான தகவல். நன்றியும் பாராட்டுக்களும்!

    பதிலளிநீக்கு
  3. அருமை.
    மேலும் எனது வலைப் பூவிலும் சில ஆய்வு கட்டுரைகளை வெளியிட எண்ணியுள்ளேன். எடுத்து காட்டாக,
    குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி

    கணமேயுங் காத்தல் அரிது.
    மு.வ : நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
    கருணாநிதி : குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.
    சாலமன் பாப்பையா : நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.
    இந்த கருத்துக்களில் உள்ள முரண்பாடுகளை பார்ப்போம்.
    மு.வ கூறுவதிலிருந்து நற்பண்புகளை உடைய பெரியோர் சினம் கொண்டால் அதிலிருந்து யாரும் தப்ப முடியாது என்கிறார்.
    முரண் - 1. நற்பண்புகளை உடையோர் மலை போன்ற அசையாத நிதானம் உடையவர்கள் சினங் கொள்வது எவ்வாறு?
    முரண் - 2. கணப் பொழுதில் நிகழ்வதுதான் சினம். அதை தவிர்க்கும் குணம் இல்லாதார் எவ்வாறு பெரியோர் ஆக முடியும்?
    சாலமன் பாப்பையா அவர்கள் கூறுவதில் உள்ள முரண்பாடு
    முரண் - 3. தமக்குள் கொண்டிருப்பதாக குறள் கூறுகிறது என்கிறார். அத்தகைய கருத்து உடைய சொல்/ சொற்றொடர் குறளில் இல்லை. கொண்டிருப்பது என்பது வேறு. காத்தல் என்பது வேறு.
    கலைஞர் கூறுவதில் உள்ள முரண்பாடு
    முரண் - 4 'நிலைத்து நிற்பது' என்பது வேறு. 'காத்தல்' என்பது வேறு.
    என் கருத்தை வெளியிடுமுன் சரவணன் அவர்களின் கருத்து என்ன?

    பதிலளிநீக்கு
  4. நன்றி திரு இராகவன் அவர்களே. கணினிச் சிக்கலால் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விடையிறுப்பதற்கு மன்னிக்கவும். நீங்கள் கூறிய குறளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரையினை ஞாயிறு அன்று வெளியிடுகிறேன். அன்புடன்,

    பதிலளிநீக்கு
  5. நன்றி திரு.பாலாஜி. நீங்கள் கேட்டிருப்பதற்கான விடையினைக் காண முயல்கிறேன். அன்புடன்,

    பதிலளிநீக்கு
  6. சிறந்த ஆய்வு.

    உங்கள் பணி தொடர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  7. மிகவும் பயனுள்ள தகவல்!
    உங்கள் ஆய்வு மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.