திங்கள், 2 டிசம்பர், 2019

பூமி, புவனம், பிருத்வி, சாமி, சாபம், சிரத்தை, சிரமம் - எது தமிழ்?. எது மூலம்?


பூமி & புவனம் :

பூமி என்பது புவி என்ற தமிழ்ச் சொல்லில் இருந்தும் புவனம் என்பது பூவல் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்தும் தோன்றிய தமிழ்ச் சொற்கள் ஆகும். சிவப்புநிறத்தைக் குறிப்பதான புவ்வம் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியவையே புவியும் பூவலும் ஆகும். புவ்வம் என்ற சொல்லானது சிவப்பு நிறப் பொருளில் கீழ்க்காணும் பரிபாடலில் பயின்று வந்துள்ளதைக் காணலாம்.

புவ்வத் தாமரை புரையும் கண்ணன் - பரி 15

மேற்காணும் பாடலில் வரும் புவ்வத் தாமரை என்பது செந்தாமரை மலரைக் குறிப்பதாகும். சிவப்பு நிறத்தைக் குறிக்கும் புவ்வம் என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு சிவப்புநிறப் பொருட்களைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் தோன்றின. அவை கீழே தரப்பட்டுள்ளன:

புவ்வம் >>> பூவல் (செம்மண்), பூவன் (செவ்வாழை), புவி (செந்நிலம்)

இவற்றில், பூவல் என்ற தமிழ்ச் சொல்லானது செம்மண் / செந்நிலம் என்ற பொருளில் கீழ்க்காணும் சங்கப் பாடல்களில் பயின்று வந்துள்ளன.

தரு மணல் தாழ பெய்து இல் பூவல் ஊட்டி - கலி 114
புனை மாண் இஞ்சிப் பூவல் ஊட்டி - அகம் 195
பூவல் படுவில் கூவல் தோண்டிய - புறம் 319
புறம் மாறுபெற்ற பூவல் ஈரத்து - அகம் 194

பூவல் என்ற சொல்லானது மேற்காணும் முதலிரண்டு பாடல்களில் செம்மண் என்ற பொருளிலும் கடைசி இரண்டு பாடல்களில் செந்நிலம் என்ற பொருளிலும் வந்துள்ளதை அறியலாம். பூவன் என்னும் சொல்லானது செவ்வாழைப் பழத்தைக் குறிக்க இன்றளவும் பயன்பட்டு வருகிறது. புவி என்ற தமிழ்ச் சொல்லானது சிந்தாமணியில் பயின்று வந்துள்ளது.

பூமகள் பொலிந்த மார்பன் புவி மிசைத் திலகம் ஒத்தான் - சிந்தா:1 370

புவி, பூவல் ஆகிய தமிழ்ச் சொற்களில் இருந்து நிலம் / உலகினைக் குறிப்பதற்காகக் கீழ்க்கண்ட புதிய தமிழ்ச் சொற்களும் காலப்போக்கில் உருப்பெற்றன.

புவி >>> பூமி,                                       பூவல் >>> புவனம்.

பூமி, புவனம் ஆகிய இரண்டு சொற்களும் புவ்வத்தை அதாவது நிலத்தின் செம்மைத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பிறந்தவை என்பதால் இவை அடிப்படையில் தமிழ்ச் சொற்களே என்பதைத் தெள்ளிதின் அறிந்து கொள்ளலாம்.

பிருத்வி:

பிருத்வி என்பது ஒரு தஞ்சந்தச் சொல்லாகும். அதாவது தமிழில் இருந்து சமக்கிருத மொழிக்குச் சென்று மீண்டும் தமிழுக்கே திரும்பிய சொல்லாகும். பருதி என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியதே பிருத்வி ஆகும்.

பருதி என்னும் தமிழ்ச் சொல்லுக்குப் பருத்திருப்பது என்று பொருள். இதிலிருந்தே பருத்தி என்ற சொல்லும் தோன்றியது. பருதி என்பது பரிதி என்றும் இலக்கியங்களில் வழங்கப்படுகிறது. பருதி என்பது பருத்திருப்பது என்ற பொருளில் பூமியைக் குறிப்பதைக் கீழ்க்காணும் பாடலில் இருந்து அறியலாம்.

அணங்கு உடை அவுணர் கணம்கொண்டு ஒளித்து என
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து - புறம். 174

மேற்காணும் பாடலில், இரண்டாவது வரியிலேயே ஞாயிறு என்ற சொல்லின் மூலம் சூரியன் குறிப்பிடப்படுவதால் மூன்றாவது வரியில் வரும் பருதி என்னும் சொல்லானது சூரியனைக் குறிக்காமல் பூமியைக் குறித்தே வந்திருப்பதனை அறிந்துகொள்ளலாம். பருதி ஞாலம் என்பது பருத்திருப்பது ஆகிய பூமி என்று பொருள்படும்.

ஆகுபெயராகப் பூமியைக் குறிப்பதான பருதி என்ற தமிழ்ச்சொல்லே கீழ்க்காணும் விதிகளின்படி சமக்கிருதமொழியில் ப்ருத்வி என்று மாறும்.

பருதி >>> ப்ருத்வி (வி.16,21)

வி.16: செகுமோனை விதி - இதன்படி, பகரத்தின் உயிர் நீங்கி ப் ஆனது.
வி.21: விரிமெய் விதி - இதன்படி, தி என்பது விரிந்து த்வி ஆனது.

பருதி என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றிய ப்ருத்வி என்ற தமிக்ருதச் சொல்லானது மீண்டும் தமிழுக்கே திரும்பும்போது பிருத்வி என்று மாறும். பிருத்வி என்ற சொல்லின் தோற்றமுறை கீழே:

பருதி (தமிழ்) >>> ப்ருத்வி (தமிக்ருதம்) >>> பிருத்வி (தஞ்சந்தம்)

பி.கு: பிருத்வி என்ற சொல்லுக்கு மாற்றாக அதன் தாய்ச்சொல்லான பருதி என்ற தமிழ்ச் சொல்லையே பயன்படுத்தலாம்.

சாமி & சாபம்:

சாமியும் சாபமும் அருமையான தமிழ்ச் சொற்களே ஆகும். இல்லறத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டு ஐம்புல ஆசைகளை அடக்கி வாழும் துறவிகளே சாமி என்று அழைக்கப்படும் உண்மையான தகுதி பெற்றவர் ஆவர். அவித்தல் என்ற தமிழ்ச் சொல்லை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததே சாமியும் சாபமும் ஆகும்.

அவி என்னும் வினைச் சொல்லானது சகரமெய் ஏற்று சவி என்றும் தமிழில் மாறும். இவ்வாறு மாறுவதைச் சம்மோனைப் போலிகள் என்பர். கீழே இவ்வகைப் போலிகளுக்கு வேறு சில காட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

அவி >>> சவி,          இறகு >>> சிறகு,                                இப்பி >>> சிப்பி,
அட்டை >>> சட்டை,       உணங்கு >>> சுணங்கு

அவித்தல் என்ற வினைச் சொல்லுக்கு அடக்குதல், அழித்தல் என்றெல்லாம் பொருட்கள் உண்டு. துறவறத்தை மேற்கொண்டு ஐம்புல ஆசைகளை எல்லாம் அடக்கி வாழ்வதால் துறவிகளுக்குச் சாமி என்ற பெயர் கீழ்க்காணும் முறைப்படி உண்டானது எனலாம்.

அவி (அடக்கு) >>> சவி >>> சாமி (அடக்கியவர்)

இது எப்படி என்றால், புவி என்ற சொல்லில் இருந்து பூமி என்னும் சொல் எப்படித் தோன்றியதோ அதைப்போலவே சவி என்ற சொல்லில் இருந்து சாமி என்ற சொல் தோன்றியது என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி, வகர மெய்யெழுத்திற்குப் பதிலாக மகரமெய் வருவதான போலிகளும் தமிழில் இயல்பாக இருப்பவை தான். சான்றுகள்: அவ்வை >>> அம்மை, செவ்வை >>> செம்மை

இந்நிலையில், ஆற்றல் வாய்ந்த பல சாமிகள், தன்னிடத்தே தவறாக நடந்து கொள்பவர்மீது சினங்கொண்டுஅழிந்து போஎன்று கூறுவதையும் பார்த்திருக்கிறோம். சாவம் என்ற சொல் இப்படித் தான் தோன்றியது.

அவி (அழி) >>> சவி >>> சாவு >>> சாவம் (அழிந்துபோ என்று கூறுதல்)

சாவம் என்னும் தமிழ்ச் சொல்லானது சாபம் என்றும் வழங்கப்பெறும். சாபம் என்பதும் தமிழே. அவித்தல் வினையை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதால் சாமி, சாவம், சாபம் ஆகியன தமிழ்ச் சொற்களே என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

சாமி, சாவம் ஆகிய தமிழ்ச் சொற்கள் தமிக்ருத மொழியாக மாறும்போது கீழ்க்காணும் விதிகளின்படி திரிபுகளை அடையும்.

சாமி >>> ச்`வாமி (வி.15,21),                                       சாவம் >>> சா~ (வி.15,5,6)

வி. 15 – கிரந்தமாற்று விதிஇதன்படி சகரம் `கர, ~கரமாக மாறின.
வி. 21 – விரிமோனை விதிஇதன்படி, சா` என்பது ச்`வா என்று விரிந்தது.
வி. 5 – நட்பெழுத்து விதிஇதன்படி, வகரம் பகரமாக மாறியது.
வி. 6 – விகுதிகெடல் விதிஇதன்படி, மகர விகுதி கெட்டது.

பி.கு: சவி, சாவம், சவித்தல் ஆகியவற்றைக் கீழ்க்காணும் ஆங்கிலச் சொற்களுக்கு நிகராகப் பயன்படுத்தலாம்.

CURSE ( VERB ) = சவி,                  CURSE (NOUN) = சாவம்.

சிரத்தை:

சிரத்தை என்பது தமிழ்ச் சொல்லே ஆகும். இரங்கு என்ற தமிழ்ச் சொல்லுக்கு அன்புசெய், கருணை காட்டு என்றெல்லாம் பொருட்கள் உண்டு. அன்பினைக் குறிக்கும் சிரத்தை என்னும் சொல்லுக்கு இரங்கு என்பதே மூலமாகும். இரங்கு என்னும் வினைச்சொல் பெயர்ச் சொல்லாகும் பொழுது கீழ்க்காண்டவாறு மாறி சிரத்தை என்றாகும்.

இரங்கு >>> இரந்தை (1) >>> சிரந்தை (2) >>> சிரத்தை (3)

(1) இரங்கு என்பது இரந்தை என்று ஆகுமா என்றால் ஆகும். இப்படி பல வினைச்சொற்கள் பெயர்ச்சொல்லாகும் போது மாற்றம் அடைந்துள்ளன. சிலவற்றை மட்டும் கீழே சான்றாகக் காணலாம்.

அரங்கு (வருந்து) >>> அரந்தை (வருத்தம்)
குடங்கு (வளை) >>> குடந்தை (வளைவு)
மடங்கு (நாணு) >>> மடந்தை (நாணம் கொள்பவர், பெண்)
முடங்கு (வளை) >>> முடந்தை (வளைவு)

(2) இரங்கு என்பது இரந்தை என்றாகும் என்று மேலே கண்டோம். இரந்தை என்பது சிரந்தை என்று ஆகுமா என்றால் ஆகும். இதற்கு எடுத்துக்காட்டாக பல சம்மோனைப் போலிகள் உண்டு. அதாவது சொல்லின் முதலில் வரும் உயிர் எழுத்தின்மீது சகரம் ஏறி வழங்குவதே சம்மோனைப் போலிகள் ஆகும். கீழே சில சம்மோனைப் போலிகள் சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

இறகு >>> சிறகு,              இப்பி >>> சிப்பி,                       அங்கண் >>> சங்கம்
அவை >>> சவை,          அவி >>> சவி,                            அட்டை >>> சட்டை

(3) இரங்கு என்பது இரந்தை ஆகி சிரந்தை என்று ஆகும் என்று மேலே கண்டோம். சிரந்தை என்பது சிரத்தை என்று ஆகுமா என்றால் ஆகும். இவ்வாறு ஆகுவதற்குப் பெயர் தான் வலித்தல் விகாரம். அதாவது, சொல்லின் இடையில் வரும் மெல்லின மெய் வல்லின மெய்யாக மாறி வருவதே வலித்தல் விகாரம் ஆகும். இதற்கான சில சான்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

குரங்கு >>> குரக்கு,           கன்று >>> கற்று,                பொந்து >>> பொத்து.

மேலே கண்டவாறு, இரங்குதல் என்ற தமிழ்ச் சொல்லை அடிப்படையாகக் கொண்டு பிறந்தமையால் சிரத்தை என்ற சொல் தமிழே என்று தெளியலாம். சிரத்தை என்ற தமிழ்ச் சொல்லில் இருந்தே கீழ்க்காணும் விதிகளுக்கு ஏற்ப சமக்கிருதச் சொல் பிறக்கும்.

சிரத்தை >>> ச்`ரத்தா^ (வி. 15,16,15,6)

வி. 15 – கிரந்தமாற்று விதிஇதன்படி சகரம் `கரமாகவும் தகரம் ^கரமாகவும் மாறின.
வி. 16 – செகுமோனை விதிஇதன்படி, முதல் எழுத்தில் இருந்து உயிர் நீங்கி ச்` ஆகியது.
வி. 6 – விகுதிமாற்று விதிஇதன்படி, ஐகார விகுதி ஆகாரமாக மாறியது.

சிரமம்:

சிரமம் என்பது தஞ்சந்தச் சொல்லாகும். அதாவது, தமிழில் இருந்து சமக்கிருதம் சென்று மீண்டும் தமிழுக்கே திரும்பி வந்தவொரு சொல்லாகும். அரவுதல் என்னும் தமிழ்ச் சொல்லே சிரமம் என்ற சொல்லின் மூலமாகும்.

அரவுதல் என்ற தமிழ்ச் சொல்லுக்கு வருத்துதல் என்ற அகராதிப் பொருள் உண்டு. இதுவே அராவுதல் என்று ஆகி தேய்த்தல், அழித்தல் என்ற பொருட்களில் வழங்கும். இதனின்று அரம்பு என்னும் பெயர்ச்சொல் கீழ்க்காணுமாறு தோன்றும்.

அரவு (வருத்து) >>> அரம்பு (வருத்தம், துன்பம்)

அரம்பு என்ற சொல்லுக்குக் குறும்பு என்ற பொருளையே அகராதிகள் காட்டுகின்றன. குறும்பு என்றாலும் தீங்கு, துன்பம் என்பதே பொருளாகும். பிறருக்குத் தீங்கு / துன்பம் செய்பவரையே குறும்பு என்று கீழ்க்காணும் குறளில் வள்ளுவரும் கூறுவதைப் பார்க்கலாம்.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு - குறள் 74:5

கொல்குறும்பு என்று குறள் கூறுவதில் இருந்து குறும்பு என்பது துன்பம் / வருத்தத்தைக் குறிப்பதே என்று புரிந்து கொள்ளலாம். துன்பம் / வருத்தத்தைக் குறிப்பதான அரம்பு என்ற சொல்லானது முன்னர் கண்டபடி சகரமெய் ஏற்று சரம்பு என்னும் வம்மோனைப் போலியாகிப் பின்னர் ச்`ரம என்னும் தமிக்ருத மொழியாகக் கீழ்க்காணும் முறைப்படி தோன்றும்.

அரம்பு >>> சரம்பு >>> ச்`ரம (வி. 15,16,6 )

வி. 15 – கிரந்தமாற்று விதிஇதன்படி சகரம் `கரமாக மாறியது.
வி. 16 – செகுமோனை விதிஇதன்படி, சகர முதலில் இருந்து உயிர்நீங்கி ச்` என்று ஆகியது.
வி. 6 – விகுதிகெடல் விதிஇதன்படி, பகர விகுதி கெட்டது.

சரம்பு என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றிய ச்`ரம என்னும் தமிக்ருதச் சொல்லானது மீண்டும் தமிழுக்கு வரும்போது அதன் இலக்கணத்திற்கு ஏற்பத் திரிந்து சிரமம் என்று ஆகும். சிரமம் என்ற சொல்லின் தோற்றமுறை கீழே:

சரம்பு (தமிழ்) >>> ச்`ரம (தமிக்ருதம்) >>> சிரமம் (தஞ்சந்தம்)

பி.கு: சிரமம் என்னும் சொல்லுக்குப் பதிலாக சரம்பு என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். மேலும், சரம்பு என்பது உடலுக்குச் செய்யும் வருத்தம் என்பதால் உடலை வருத்திச் செய்யும் அனைத்துவகை உடற்பயிற்சியைக் குறிக்க இச்சொல்லைக் கீழ்க்காணுமாறு பயன்படுத்தலாம்.

GYMNASTICS = சரம்பு (உடற்பயிற்சி)
GYMNASIUM = சரம்பகம் (உடற்பயிற்சிக் கூடம்)
GYMNAST = சரம்பி (உடற்பயிற்சி செய்பவர்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.